Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கண்ட கனவும்; காணாத நிகழ்வுகளும். 13

அதிரைநிருபர் | May 05, 2011 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும்...

ஒரு வீட்டில் இருக்கும் வயதிற்கு வந்த பெண்ணுக்கு அவளை ஒரு நல்ல மாப்பிள்ளைக்கு திருமணம் முடித்து வைக்க அவளை ஈன்றெடுத்த பெற்றோர்களும், உற்றார் உறவினர்களும், உடன் பிறந்த சகோதரர்களும் எவ்வளவோ பல சிரமத்தையும், பல சிரத்தையையும் எடுத்து பல சங்கடங்களைப் பொறுத்தும், சகித்தும் வருகிறார்கள் என்பது ஊரறிந்த, உலகறிந்த விசயம். அதற்கு மேல் அவர்களின் கஸ்டங்களையும், இன்னல்களையும், அற்பணிப்புகளையும் அல்லாஹ்வே நன்கறியக்கூடியவன்.

காரணம் நம் வீட்டிற்கு வரும் மருமகன் (நம்மூரில் இன்னும் திருத்த முடியாமல் இருந்து வரும் சாபக்கேடான பழக்கவழக்கம்) நம் பிள்ளையை நல்ல விதமாக, சந்தோசமாக கடைசி வரை வாழ வைப்பான் அத்துடன் கூட இருந்து வரும் நமக்கும் தொந்தரவு இல்லாமல் இருப்பான் என்ற பேராவலில் மற்றும் எதிர்பார்ப்பிலும், நல்ல கனவுகளிலும் பெண் வீட்டினர் அனைவரும் இருந்து வருவது இயல்பு. இதில் தவறென்ன இருக்க முடியும்? குறை எங்கு காண முடியும்?

ஆயிரம் ஏற்பாட்டுடன் வீட்டு கலியாணமும் இனிதே நிறைவேறி சில மாதங்கள் சென்ற பின் தான் அவன் (வீட்டுக்கு வரும் மருமகன்) தன் சுயரூபத்தை காட்டுகிறான். சின்ன, சின்ன பிரச்சினைகளைக்கூட பூதாகரமாக்கி விடுகிறான். இதில் விட்டு கொடுக்கும் மனப்பான்மையை முற்றிலும் இழக்கிறான். நீ உன் சொந்த உழைப்பிலோ அல்லது உன் பெற்றோர்கள் கட்டித்தந்த வீட்டில் வைத்து இருக்கும் உன் மனைவி தவறுகள் செய்தால் கூட உனக்கு அவள் மேல் வரம்பு மீறுவதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை. நம்மூரில் தன் வீட்டில் மனைவியை வைத்திருப்பவன் நூற்றில் எத்தனை பேர்? வேதனையான கேள்வி தான்.

நீயே நேற்று வரை யாராகவோ இருந்தவன் இன்று திருமணம் முடித்து மனைவி வீட்டிற்குள் நுழைந்தவன். அங்கு இருக்கும் சில அசொளகரியங்களை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், பக்குவம், பகுத்தறிவு இல்லாமல் அதை பட்டியலிட்டு வெளியில் பிரசங்கம் செய்வதற்கும், பிதற்றுவதற்கும் உனக்கு என்ன தகுதி இருக்கிறது? இல்லை என்ன உரிமை இருக்கிறது? வெட்கித்தலைகுனிய வேண்டிய விசயமல்லவா?

நமதூரில், நமது தெருவில், நமது குடும்பத்தில் எத்தனையோ பேர் பள்ளிவாசலின் முன் வரிசையில் (சஃப்) நின்று ஒவ்வொரு வக்தையும் இமாம் ஜமாத்துடன் தொழுது வருகிறார்கள். தொழுகைக்குப்பின் குர்'ஆன் ஷரீஃப்பும் ஓதுகிறார்கள். நல்ல விசயம் மார்க்கம் போற்றும் விசயம். ஆனால் எப்படி மாற்று மதத்தினர் தான் கட்டிய புதிய கட்டிடம், நிறுவனத்தை அவர்களின் பெரியவர்களை வைத்து கத்தரிக்கோல் மூலம் ரிப்பனை வெட்டி திறந்து வைக்கிறார்களோ அது போல் தான் நம்மவர்களில் சிலர் தொழுகைக்குப்பின் பள்ளியை விட்டு வெளியேறும் பொழுது தன் அநியாய அட்டூழியங்களுக்கும், அக்கிரமங்களுக்கும், பல பித்தலாட்டங்களுக்கும் சைத்தான் கொடுக்கும் கத்தரிக்கோல் மூலம் ரிப்பன் வெட்டி ஆரம்பித்து வைத்து வெளியேறுகின்றனர் அல்லது அவர்கள் தவறான எதிலும் தலையிடாமல் இருந்தாலும் தன் வீட்டில் உள்ளவர்கள் பல தவறுகளை முன்னின்று செய்யும் பொழுது அதை தட்டிக்கேட்காமல் வாயிருந்தும் மொளனமாகி விடுகின்றனர். இந்த நேரத்தில் மொளனம் அவசியம் தானா? அல்லது அநியாய அட்டூழியங்கள் அரங்கேற அவர்கள் சம்மதிக்கிறார்களா?

நமதூரில் எவ்வளவோ இடங்களில் பல மார்க்க அறிஞர்களால் நல்ல பல சொற்பொழிவுகளும், ஆங்காங்கே பயான்களும், அன்றாடம் அனைத்து பள்ளிகளிலும் ஏதேனும் ஒரு நேரத்தில் குர்'ஆன் தர்ஜுமாக்களும், தஃலீம், வாராந்திர சொற்பொழிவுகளும், வெள்ளிக்கிழமை குத்பா சொற்பொழிவுகளும் இன்னும் பல வழிகளில் நமக்கு திருக்குர்'ஆனின் இறை வசனங்களும், நபி பெருமானாரின் வாழ்க்கை வழிமுறைகளை அழகிய முறையில் விளக்கும் ஹதீஸ்களும் அன்றாடம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என யாரும் எவ்விதத்திலும் தப்பிக்கா வண்ணம் தனித்தனியே ஆண்களுக்கும், பெண்களுக்கும் செவிக்குள் புகட்டப்பட்டுக்கொண்டு தான் வருகின்றன.

இதை எல்லாம் நன்கு கேட்ட பிறகும் தன் தீய குணத்தாலும், வறட்டுப்பிடிவாதத்தாலும், இரக்கமற்ற செயல்களாலும், சகோதர சகிப்புத்தன்மை இன்மையாலும், தான் தான் என்ற மமதையாலும், தன்னை கேள்வி கேட்க ஆளில்லை என்ற திமிராலும், பிறர் உடமைக்கும், பொருளுக்கும் ஆசை கொண்டு அப்பாவிகளின் உரிமைகளில் தலையிடுவதாலும் மேற்கண்ட திருக்குர்'ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் இவர்கள் பொய்யாக்கி விட்டார்களா? இல்லை அவற்றை எல்லாம் வென்று அரியணையில் ஏறி விட்டார்களா? நிச்சயமாக இவர்கள் நாசத்தின் வாசற்படியில் நின்று கொண்டு தெரிந்தோ அல்லது தெரியாமலோ அதன் கதவை தட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று தான் சொல்ல முடியுமே தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

நம்மூரில் பல வீடுகளில் (வீடு, பெண்ணிற்கு போடும் நகை, பண உதவி போன்று ஏதாவது ஒரு ரூபத்தில்) வரதட்சிணைக்கொடுமைகளும் , பெண் வீட்டாரின் இயலாமையையும், அவர்களின் சில குறைபாடுகளையும் தன் பக்கபலமாக கொண்டு அதையே ஆயுதமாக வைத்து அவர்களை மிரட்டுவதும், பயமுறுத்துவதும், வாட்டி வதக்கி, வறுத்தெடுப்பதும் ஆங்காங்கே இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. முற்றிலும் இல்லை ஒழிக்கப்பட்ட ஒன்று என்று யாரும் இதில் மார்தட்டிக்கொள்ள முடியாது. இவர்களின் இத்தீய செயல்களாலும், பிற்போக்கான மனோபாவத்தாலும் அவர்கள் வீடுகளிலேயே பல சங்கடங்களையும், பிரச்சினைகளையும், சோதனைகளையும், வேதனைகளையும் அன்றாடம் சந்தித்து அதை கண்கூடாக பார்த்தும் வருகிறார்கள். இருந்தும் அவர்கள் தன் செயல்களில் இறை அச்சம் கொண்டு சிறிதும் திருந்துவதும் இல்லை திருத்திக்கொள்ள விரும்புவதும் இல்லை.

நல்ல குடும்பப்பெயர்களெல்லாம் நாளை படைத்த இறைவன் முன் நமக்கு நற்சான்று அளித்து விடுமா? இல்லை கப்ருக்குழியைதான் விரிவாக்கி விடுமா? நாம் செய்த நல்ல அமல்களைத்தவிர வேறு என்ன உதவிட முடியும்?

சில குடும்பங்களில் சின்ன,சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் கணவன்,மனைவியர் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மீதி உள்ள வாழ்நாட்களை இனிதே தொடர இயலாமல் "தலாக்" மூலம் காரணங்கள் பல கூறி பல சான்றோர்கள் கூடும் சபையிலேயே அவர்களின் இல்லறம் முறிந்து முற்றுப்பெற்று விடுகிறது. ஆனால் சில குடும்பங்களில் எப்படி எனில் வீட்டுக்கு வரும் மருமகனாலோ அல்லது அவன் குடும்பத்தாலோ ஆட்சி அதிகாரம் செலுத்தப்பட்டு கேள்வி கேட்பார் யாருமின்றி அங்கு கொடுங்கோல் ஆட்சி அரியணையில் அமர்கிறது.

இங்கு மார்க்கத்தைப்பற்றி பேசும் மனிதர்கள் பேயனாகவும், பைத்தியக்காரனாகவும், பிழைக்கத்தெரியாத முட்டாளாகவும் ஆக்கப்பட்டு விடுகின்றனர். மார்க்கத்தை ஓதிப்படித்த ஆலிம்களே திருமணம் முடித்து பெண் வீட்டிற்குச்செல்கிறான். வந்து விட்டான் புதுக்கதை பேசுவதற்கு? என்று ஓரங்கட்டப்படுவதை நாம் காணுகிறோம். அல்லது ஏதோ பெரும் ஊழலில் சிக்குண்ட அரசியல்வாதிகள் தன் மேல் மக்கள் கோபம் கொண்டு வெகுண்டு எழாத வண்ணம் அவர்கள் மேல் உள்ள குற்றச்சாட்டை மூடி மறைக்க ஏதேனும் ஒரு புதிய குற்றச்சாட்டை குற்றம் சாட்டியவர் மீதே சுமத்துவது போல் நன்கு ஜோடித்து அவர் மேல் சுமத்தி திசை திருப்பி விடுகின்றனர். இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக நாளை மறுமையில் இவர்கள் முன் மார்க்கத்தை முறையே போதித்ததால் பேயன், பைத்தியாரன் என்று இகழப்பட்டு கேவலப்படுத்தப்பட்டவன் தலை நிமிர்ந்து படைத்த ரப்புல் ஆலமீன் முன் நிற்பான்.

மார்க்க/உலக விசயங்களில் உருப்படாதவன்/உருப்படாதவள் என ஊராரால் கெட்ட பெயர் பெற்ற ஆணோ அல்லது பெண்ணோ மருமகனாகவோ அல்லது மருமகளாகவோ ஒரு வீட்டிற்கு வந்து விட்டால் அவ்வீட்டினர் காலமெல்லாம் வேதனைப்படுவதை விட வேறென்ன அமைதியையும், சந்தோசத்தையுமா அவர்கள் அனுபவிக்க முடியும்?

மேற்கண்டவை ஏதோ இட்டுக்கட்டியோ அல்லது அவதூறாகவோ குறிப்பிட்ட யாரையும் தாக்கி கேவலப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலோ எழுதப்பட்டவை அல்ல. இதை உங்கள் முன் எடுத்து வைக்க எனக்கு அறுகதையும், தகுதியும் இருக்கிறதோ? இல்லையோ? இறைவன் அறிவான். ஆனால் சில குடும்பங்களில் இன்றும் நடந்து வரும் மனதிற்கு வேதனையான நிகழ்வுகளின் வெளிப்பாடே இங்கு திறந்த புத்தகமாய்.

நமக்கு நாமே திட்டம் போல நம் சமுதாயத்தை அழிக்க நமக்கு நாமே (வேட்டு வைக்க) திட்டமிடுவது போன்ற நம் அன்றாட செயல்களும், மனோபாவங்களும் இருந்து வந்தால் இதை சாபக்கேடு என்று சொல்லாமல் வேறென்ன சன்மார்க்க நெறி என்றா சொல்ல முடியும்?

சன்மார்கத்திற்கு எதிரான தீயசக்திகளைக்கண்டும், அதன் சதித்திட்டங்கள், சூழ்ச்சிகளைக் கண்டு வெகுண்டெழும் நாம் நம் மார்க்கத்திற்கே வேட்டு வைக்கும் நம் இரக்கமற்ற செயலை, துர்க்குணத்தை வேதனை என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும்?

சரியான மணமகன் தன் வீட்டுப்பிள்ளைக்கு அமையாததால் ஒட்டு மொத்த மணமகள் குடும்பமே வேதனைப்பட்டு வாடும் நிலையில் அவனைத்திருத்த திரானி இன்றி, தட்டிக்கேட்க தைரியமின்றி மாறாக அவனுக்கு சப்பைக்கட்டு கட்டி அவன் செய்வதை எல்லாம் நியாயப்படுத்தி தன் பெற்றோர், உற்றாருக்கே போர்கொடி தூக்கும் பெண்களை வேதனை என்னும் நாணயத்தின் மறுபக்கம் என்று தான் சொல்ல வேண்டுமே அன்றி வேறென்ன சொல்ல முடியும்?

பாதிக்கப்பட்டவர்களின் உள்ளக்குமுறலும், அதன் வெளிப்பாடான கண்ணீரும் தண்ணீருக்குள் அழும் மீன்களின் கண்ணீர் போல் இவ்வுலகுக்கு தெரியாமல் போகலாம். அதை உலகம் அறிந்தும் அறியாதது போல் இருக்கலாம். ஆனால் படைத்த இறைவனுக்கு தெரியாமல் போய் விடுமா?

திருமணம் என்பது நல்ல கணவன், மனைவியாக கடைசி வரை இடையில் வரும் பல இன்னல்கள், சோதனைகளை எல்லாம் எதிர்கொண்டு இன்ப, துன்பங்களை பகிர்ந்து கொண்டு ஈருலக வாழ்வில் ஏற்றம் பெறுவதற்கேயன்றி ஒருவருக்கொருவர் வேட்டு வைத்து அந்த வேதனையை வேடிக்கை பார்க்க அல்ல.

எத்தனையோ குடும்பங்கள் இல்லற வாழ்வில் இன்முகம் காண இயலாமல் பல சிக்கல்களும், தேவையற்ற பிரச்சினைகளும் விஸ்வரூபம் எடுத்து இன்று வேதனையின் விழிம்பில் நின்று கொண்டிருக்கின்றன. இறைவன் அன்றி இவர்களின் வேதனையை துடைக்க எவரால் முடியும்?

யா! அல்லாஹ் தெளிவான மார்க்க அறிவும், தெளிந்த இஸ்லாமிய நடையும் இல்லாமல் இத்தரணியை விட்டு எங்களை அப்புறப்படுத்தி விடாதே நாயனே....

நம்மைப்படைத்த அல்லாஹ் தான் நம்மை நல்வழியில் காத்து நல்லருள் புரிய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் நான் இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

-- மு.செ.மு. நெய்னா முஹம்மது.

13 Responses So Far:

Abdul Jabbar said...

தஞ்சை மாவட்டத்தில் மார்க்க நெறிகளுக்கு முன்மாதிரியாக இருந்து பல மார்க்க அறிஞர்கள் வாழ்ந்த மண் என்ற பெருமை அதிரைக்கு உண்டு.

அதிரையின் வழியில் எத்தனையோ முஸ்லிம் ஊர்களiல் ஒரு பெண் மகளை திருமண செய்து கொடுக்கும் போது தான் வாழ்ந்த வீட்டை சீதனமாக கொடுத்தார்கள். இரண்டு மகள்கள் உள்ளவர்கள் வீட்டில் பாதி என்று கொடுத்தார்கள். கடந்த 10, 15 ஆண்களiல் இந்த பழக்கம் மற்ற ஊர்களiல் பெண்பிள்ளைக்கு என்று தனியாக வீட்டு மனை மற்றும் விவசாய நிலம் என்று சீதனம் கொடுத்தார்கள். ஆனால் அதிரையில் மட்டும் இப்படி சீதனம் என்ற பெயரில் பெண் வீட்டிற்கு ஆண் மகன் குடியேறி போவது மாறவில்லை. இது கடையநல்லுர் பகுதியிலும் உள்ளது மற்ற தஞ்சை (ஒருங்கிணைந்த பழைய மாவட்டம்) பகுதியில் புதிய வீட்டு மனை வாங்கி கொடுப்பது அல்லது வாங்கி தருவதாக இன்றும் நடைமுறையில் உள்ளது. பெற்றோர்கள் உறவினர்களiன் பாரம் உணர வேண்டும். இறைவனுக்கு விரோதமாக செயல்படாமல் இருக்க முன் வரவேண்டும். தன் உழைப்பை கொண்டு தன் வாழ்க்கை துணையை வாழ்நாட்கள் முழுவதும் மகிழ்ச்சியுடன் குடும்பத்தை நடத்த வேண்டும். பெண்பிள்ளை வைத்து இருப்போர்களiன் அச்ச உணர்வை இfதுபோன்ற பெண் வீட்டில் குடிபோகாமல் இருக்கும் நல்ல வழிமுறையை விரைவில் நடைமுறை படுத்த வேண்டும். ஒரு சிலர் செய்வதை வரவேற்று ஊக்கம் கொடுத்து மற்றவர்களையும் தூண்ட வேண்டும்.

தமிழ் பேசும் மக்களுக்கு பல மார்க்க அறிஞர்களை கொடுத்த ஊர் அதிரை. மார்க்க விசயத்தில் சந்தேகத்திற்கு தௌiவு கொடுத்த ஊர் அதிரை. இன்று உலகில் பல்வேறு பகுதியில் இருக்கும் படித்த பன்பட்டவர்கள் ஒரு நிமிடம் சிந்தனை தட்டி கேட்டால் இதிலிருந்து விடுப்பட்டு விடலாம்.

சகோதரர் நெய்னா முகம்மது அவர்கள் பல்நோக்கு பார்வையில் தன் எழுத்துகளை எழுதி அதிரை மக்களை நல்வழிப்படுத்த முனைப்புடன் செயல்படுகிறார். அவரின் ஆசை நிறைவேற வாழ்த்துகள்.

இளைஞர் நினைத்தால் இனிமேல் பெண் வீட்டிற்கு குடிபோகுவதை நிறுத்தலாம். அதிரையில் இந்த புரட்சி விரைவில் வரும்.

முகம்மது நூர்தீன் அமெரிக்காவிலிருந்து.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அதிரையின் அப்பட்டமான அனாச்சாரங்களை அப்படியே அசலாக அச்செடுத்தவிதம் அருமை.

இஸ்லாமிய மார்க்க வழிமுறையோடு இரக்க உணர்வு சகிப்புகுணம்,விட்டுக்கொடுக்கும் பெருந்தன்மை, மூத்தவர்களின் நற்சொல்லை அங்கீகரித்தல் போன்றவையே தீர்வாக முடியும்.

Unknown said...

இந்த பாவங்கள் மிக அதிகமாக வளர எல்லா வகையிலும் நாமும் மிகப்பெரிய காரணம்
என்பதை மறுக்க முடியாது ............
அருமை நண்பா ! உன் ஆதங்கம் உண்மையில்
பல நிமிடம் யோசிக்க வைத்தது .........!
வரதட்சணை மேலும் மேலும் கேட்டு அட்டகாசம் செய்யும்
கோழையை மதிக்க மறப்போம் ..........
மீண்டும் மீண்டும் எல்லா வற்றிற்கும் காரணம்
குண்டு சட்டிக்குள்ளே குதிரை ஓட்டுவதுதான்......நாம் எல்லோரும் அப்படிதானே செய்கிறோம் ............

rasheed3m said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் நெய்னாவின் இந்த ஆக்கம் எனது ஹலாலான ஆசை ஷரீ அத்தின் பிறகாரம் எனது மக்களுக்கு இல்லற வாழ்வை அமைத்துக் கொடுக்க மன உறுதியையும் உள்ளத்திற்க்கு ஒரு உற்ச்சாகத்தையும் தந்துள்ளது. இதற்க்கு எனது ஆலோசனை எவரெல்லாம் பாராட்டு பதிகின்றனரோ அவர்கள் அனைவரும் முதலில் தனக்கு தானே சத்திய பிரமானம் எடுக்க வேண்டும். எனது பென்மகளுக்கு மஹர் கொடுத்து வீட்டோடு அழைத்து செல்லும் மணமகனையும், எனது மரு மகளுக்கு மஹர் கொடுத்து மருமகளை என் வீட்டோடு வருபவளையே தேர்ந்தெடுப்பேன் என்று. இன்ஷா அல்லாஹ் இதில் நான் இதுவரை அதே எண்ணத்தில் தான் இருக்கின்றேன்.

Yasir said...

சகோ.நெய்னா எங்களுடைய மனதில் பொதிந்துகிடக்கும் பொருமல்களை மிக விளக்கமாக அறிய தந்து இருக்கிறீகள்....
//அவனைத்திருத்த திரானி இன்றி, தட்டிக்கேட்க தைரியமின்றி மாறாக அவனுக்கு சப்பைக்கட்டு கட்டி அவன் செய்வதை எல்லாம் நியாயப்படுத்தி தன் பெற்றோர், உற்றாருக்கே போர்கொடி தூக்கும் பெண்களை வேதனை //
சரியாக சொல்லி இருக்கிறீர்கள் நிறைய குடும்பத்திலும் ஏன் எங்கள் குடும்பத்திலும் இந்த வேதனையான செயலை கண்டு வியந்து இருக்கிறேன்..இந்த லாஜிக் புரியாமல் வேதனையால் வெந்து இருக்கிறேன்...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அருமையான ஆதங்கம் வெளிப்படும் அலசல்...

MSM(n)ன் சமுதாயம் தெளிவுற காட்டிடும் அக்கரையின் வெளிப்பாடே இந்தப் பதிவு !

Shameed said...

நல்லா அலசல் கடுமையான விளாசல் சமகால சூழ்நிலைக்கு தேவையான ஒன்றுதான் .

harmys சொன்னது போல் குண்டு சட்டிக்குள்ளே குதிரை ஓட்டுவது முதலில் நிறுத்தப்படவேண்டும் இதனால் நிறைய குழந்தைகள் குறைப்பாட்டுடன் பிறக்கின்றன.

Meerashah Rafia said...

என் திருமணத்தில் வீடு வாங்குவது கூடாது என்பதை என் வாழ்நாள் லட்சியமாக நான் எடுத்துக்கொண்டிருக்கின்றேன் .நான் எந்த அமைப்பையும் சேர்ந்து எடுத்துக்கொண்ட உறுதிமொழி அல்ல இது.. இது இஸ்லாமிய கட்டமைப்பில் எல்லோராலும் எடுக்கப்படவேண்டியது. இன்ஷா அல்லாஹ் அதன்படியே நடக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

இதற்கிடையில்நான் நமக்கிடையில் ஒரு சில கேள்விகளை முன்வைக்க உள்ளேன்..

1)பெண்ணை மாமியார் வீட்டில் மாப்பிள்ளையோடு இருக்க ஆசைபடுகிறோம்,இஸ்லாமும் அதைதான் சொல்கிறது.

ஆனால் எத்தனை சதவிகித மக்கள் திருமணத்திற்கு பிறகு
பெண் ஆண் வீட்டில் இருக்கின்றாள் என்று கணக்கிடும் நாம், எத்துனை ஆண் மக்கள் திருமணத்திற்குப்பின் தாய் வீட்டிலும்/தாய் நாட்டிலும் இருக்கின்றார்கள்?


2)தன் அம்மாவிற்கும் மனைவிக்கும் பரஸ்பர உறவு ஏற்பட,விரிசல் ஏற்படும் போது ஸ்பரிசம் தொட்டு சமாதனம் படுத்த எத்தனை மகன்களும்/கணவன்மார்களும் வீட்டில் இருக்கின்றோம்?

3)நம்மை நாடி வந்தவளை விருந்தாளியைபோல் ஒரு மாதம் வைத்து கவனித்துவிட்டு/ வாழ்ந்துவிட்டு என் வீட்டுக்கு நீ காவலாளியாக இரு என்று கூறி மாசலாமாவென்று சொல்லிவிட்டு வருடக்கணக்கில் காத்திருக்கவைக்கும் நம் தவறில்லையா?

4)இஸ்லாம் கோட்பாட்டின்படி 'கணவன் வீட்டில் மனைவி இல்லாதது தவறு என்றால், கணவன் இல்லாத(வெளிநாட்டி இருந்துகொண்டு) கணவனின் தமையன் மட்டும் இருக்கும் வீட்டில் மனைவி வாழ்வதும் இஸ்லாத்தில் தவறுதானே?!.


பெண் பிள்ளைகள் பொறுப்பற்று, அடிபநியத்தெரியாதவாறு நடப்பதற்கு மாமியார் வீட்டில் வாழாததுதான் முக்கிய காரணம். காஃபிர்கள் பலபேரை நான் பார்த்திருக்கின்றேன் மாமியார் வீட்டிகுச்சென்றவுடன் அந்த பெண் தன்னை எப்படி மாற்றிக்கொல்கிறாள் என்று.

4)பிறந்த வீட்டையே புகுந்த வீடாக்கி கொடுத்து, அவ்வீட்டிலேயே மரணிக்கும் வழக்கத்தை நாம்தாம் முன்னின்று மாற்றமுடியும்.இவ்வசயத்தில் ஆண்களாகிய நம்மின் பங்கு மிக அதிகம்.

இப்பின்னூட்டம் யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை , என் என்ன அலைகளை எழுத்தாக்கியுல்லேன் அவ்வளவுதான்.

msm(mr)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(மீ) : கடுகின் காரம் வரிகளின் அழுத்தம் !

சில நாட்களுக்கு முன்னர் அபுஈசாவோடு நேரில் சந்திக்கும் போது பேச்சு வாக்கில் இதே போன்ற உரையாடலில் இருக்கும்போது அபுஈசா எடுத்து வைத்த கருத்துக்களும் ஏற்புடையதாகவும் சிந்திக்கவும் வைத்தது...

இங்கே அபுஈசாவே கருத்தையும் பதிந்தால் இன்னும் விளங்கலாம்.. இன்ஷா அல்லாஹ்..

sabeer.abushahruk said...

அர்த்தமுள்ள கவலை. நிறைய பேச வேண்டிய விஷயம். நேரமினமை காரணமாக எம் எஸ் எம்முக்கு வாழ்த்துகளும் நன்றியும் மட்டுமே தற்போது சொல்லிக் கொள்கிறேன்

ZAKIR HUSSAIN said...

மார்க்கம் / வேதம் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது, அதை பயன்படுத்தும் மனிதனைத்தவிர.

பெண்கள் தனக்கு நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்க தைரியமில்லாமல் போவதற்க்கு காரணம் தொடர்ந்து அந்த பெண்களுக்கு, " நீ சார்ந்துதான் வாழவேண்டும்" என்று போதிக்கப்படும் தவரான பாடம். [ சிலர் இதில் இஸ்லாத்தையும் / ஊர் நடைமுறையும் சொல்லியே பயம்காட்டுவார்கள்...இதில் கொடுமை என்னவென்றால் இஸ்லாத்தில் அடிமையாக இருக்க சொல்லவில்லை என்பது அந்த பெண்ணுக்கு கடைசிவரை தெரியாமல் ஒரு பொய்யை இவர்கள் கடைசிவரை மெயின்டைன் பன்னுவதுதான்.

ZAKIR HUSSAIN said...

GOOGLE MAP ல் செக்கடி குளம் , வெட்டிக்குளம் , காலேஜ் , ஸ்கூல் கிரவுன்ட் எல்லாம் தெளிவாக தெரிகிறது...

Thanx to Bro Shahul [ Dammam] for his email.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

மேலே எழுதப்பட்ட ஆதங்கம் எங்கோ, யாருக்கோ நடந்தது அல்லது நடந்து கொண்டிருப்பவை அல்ல. பரவலாக நம்மூரில் ஒவ்வொரு வீட்டிலும் இந்த சனியன் எதாவது ஒரு வழியில் நுழைந்து அதன் சங்கதியை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது.

ஒவ்வொருவரும் இதுபற்றி எழுத ஆரம்பித்தால் சகோ. அலாவுதீனின் அற்புத கட்டுரையாம் "கடன் வாங்கலாம் வாங்க" என்ற மெகா தொடர் போல் எழுதிக்கொண்டே இருக்கலாம்.

வல்ல அல்லாஹ் தான் முதலில் பாஸிச சிந்தனையுள்ள மாற்றுமதத்தினர்களால் ஏற்படும் தீங்கை விட நம் இனத்துக்குள்ளே இருந்து கொண்டு கொடுங்கோல் செய்யும் அந்த ஆண்களையும், பெண்களையும் திருத்தி நல்லருல் புரிவ வேண்டும். ஆமீன்...


மு.செ.மு. நெய்னா முஹம்மது

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு