Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உள்ளாட்சி மன்றத் தேர்தல் - 2011.. ! 24

அதிரைநிருபர் பதிப்பகம் | September 13, 2011 | , , , ,

"யாருஹாக்கா இந்த தடவை நம்ம ஊரு பிரஸிடெண்ட் போஸ்ட்க்கு வருவாங்க? முன்னேவெல்லாம் மர்ஹூம் M.M.S.(சாச்சா என்று மரியாதையுடன் அழைக்கப்பெற்ற) அவர்கள்தான் நிலைத்த நிர்வாகத்திற்கு வாழையடி வாழையா அதிரைப்பட்டினத்தின் பேரூராட்சி மன்றத் தலைவராக இருந்ததில் நாமும் எந்தவிதமான யோசனையும் செய்யாம அவுங்களையே பிரசிடெண்டா தொடர்ந்து தேர்ந்தெடுத்து வந்தோம். இப்போ எங்கே பார்த்தாலும் நீயா? நானா? போட்டிப் போட்டுக்குனுலே இருக்காவோ. ஊருலே பெருவாரியா இருக்குற நாமதானே முறையாக பேருராட்சியை ஆளனும்."

”சின்னப்பசங்க கிட்டே கொடுங்கப்பா... அவங்க எதாவது பண்ணுவாங்க..”

"இப்போ நிறைய படித்த இளைஞர்கள் இருக்காக, அவங்களிடம் பொறுப்பை கொடுத்த என்னவாம்!, அவங்களும் துடிப்பா செயல்பட வாய்ப்புகள் இருக்கு. ஆனா, எல்லா நிலமையிலும் திறமையா செயல்பட அவங்களுக்கு அனுபவம் பத்தாது, குறைந்தபட்சம் அவங்க வெளிநாட்டுக் கனவை தள்ளி வைப்பாங்களா! என்பதும் ஒரு கேள்விதான்".

”துடிப்பான இளைஞர்களே கிடையாதா..?”

”ஏன் கிடையாது, நிறைய இருக்காங்களே..! ஆனா நாம என்ன பண்ணுகிறோம் என்பதை விட அடுத்தவங்களை ஒண்ணும் பண்ண விடக்கூடாது என்பதில் தான் அவங்க துடிப்பை காட்டுறாங்க...”

இப்படி பரவலான பேச்சுக்களுடன், அதிரைப்பட்டினத்தின் தேர்வுநிலை பேருராட்சிக்கான உள்ளாட்சி மன்றத் தேர்தல் திருவிழா ஆரம்பித்துள்ளது.

வழக்கம்போலவே வெறும் பார்வையாளனாகவே இருந்து, ராவுத்தர் ஆண்டாலும் ரஹ்மான் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை... என்று தேர்தல் புறக்கணிப்பை ஃபேசனாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும், அதிரைவாசிகளான உங்களுடன், உருக்கமாக சில எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தின் தூண்டுகோள் தான் இந்த கட்டுரைக்குக் காரணம்!

தமிழகத்தின் ஆட்சி மாறுதலுக்கு எப்படி குடும்ப அரசியல் ஒரு பெரிய காரணமாக அமைந்ததோ, அதைப்போல அதிரையின் பேருராட்சியின் ஆட்சி மாற்றத்திற்கு குப்பை ஒரு பெரும் பங்காற்ற போகிறது என்பது மறுக்க இயலாத உண்மை. ஆனால் அதற்காக குப்பை மட்டுமே அதிரையின் பிரச்சனையா? என்றால் கண்டிப்பாக இல்லை..! முன்னிறுத்தப் பட்டிருக்கும் குப்பைக்குப் பின்னால் பல விசயங்கள் நமக்குத் தெரியாமலேயே போய் விட்டன.

அதற்காக அதிரைக்கு விமான நிலையத்தைக் கொண்டு வருவோம்... நம்மூர் கடற்கரையை சுற்றுலா தளமாக்குவோம்.. என்ற ஒரு நகராட்சித் தலைவரின் சக்திக்கு அப்பாற்பட்ட வாக்குறுதிகளை எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஒரு பேருராட்சியின் எல்லைக்குட்பட்டு காலகாலமாக செய்ய இயலாத / செய்யத் தவறிய, கண்டிப்பாக செய்ய இயன்ற நிறைய நல்ல விசயங்களை இங்கே அலசுவோம் !

தமிழகத்தின் மூன்றாம் நிலை நகராட்சியிலேயே அரசுக்கு அதிகமான வரிகட்டும் ஒரு தேர்வுநிலை பேரூராட்சியால் ஒரு சிறிய ஊரின் குடிநீர் பிரச்சனை, சுகாதாரப் பிரச்சனை, மின்சாரத் தட்டுப்பாடு, சாலை விளக்குகள், போன்ற அன்றாடப் பிரச்சனைகளைக் கூட தீர்க்க இயலாதிருப்பது ஆச்சரியமே..!

பாதாளச் சாக்கடைத் திட்டம், அகல ரயில் பாதை திட்டம் போன்றவை அதல பாதாளத்தில் தள்ளப் பட்டதிற்கு யார் காரணம்..? தமிழகக் குப்பைகளை ஒன்று சேர அள்ளியெடுத்து வந்து அதை ஒரே நாளில் சுத்தம் செய்யுமளவு, பணபலம் கொண்ட நமதூரின் உள்ளூர் குப்பைகளை அகற்றுவதற்கு முடியவில்லை என்பது வேடிக்கையாகவே இருக்கு !

அரசின் எண்ணற்ற திட்டங்கள், சலுகைகள், உதவித்தொகைகள், கடனுதவிகள் இப்படி எதையாவது நம்மூர் மக்கள் இதுவரை அனுபவித்ததுண்டா? அதைப் பற்றி ஒன்றுமறியாத இந்த மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக இந்த பேருராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆக்கபூர்வமாக செய்ததென்ன? செய்யப் போவதென்ன?

காலமெல்லாம் தம் குடும்ப நலனுக்காக வெளிநாடுகளில் மெழுகுவர்த்தியாக சுடர் விட்டு உருகி, வாழ வேண்டுமென்று நாடு திரும்பும் ஆயிரக்கணக்கானோருக்கு பயனளிக்கும் வகையில் உள்ள NRI சம்பந்தமான அரசு திட்டங்கள் பற்றி யாருக்காவது தெரியுமா? வெளிநாட்டு வாசிகள் என்றதும் அவரிடம் சிறப்பு ”பணப்பறிப்பு” மட்டும் தானே, அரசு பெயரால் நம்மால் செய்ய இயலும்?

சிறுதொழில் கடனுதவிகள், சிறு தொழில் செய்வதற்கான வழிமுறைகள், இப்படியான பல வாழ்வியல் மேம்பாட்டு திட்டங்கள் பற்றி எம்மக்களுக்கு என்ன வென்றே தெரியாமல் இருப்பதைப் பற்றி நமக்கென்ன கவலை..?

வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறது... அதன் மதிப்புத் தெரியாமல் தண்ணீராக செலவழிக்கும் உள்ளூர் சொந்தங்கள்... இப்படி அரசு சம்பந்தப்பட்ட எந்த விசயமாக இருந்தாலும் பணத்தால் மட்டுமே சாதிக்க இயலுமென்ற மனப்போக்கிற்கு இந்த மக்களை அரசியல் கட்சி ஆட்சியாளர்கள் மாற்றியதைத் தவிர வேறென்ன சாதனைகளை செய்து விட்டார்கள்..?

அவர்களைச் சொல்லி குற்றமில்லை, நமதூரின் பேரூராட்சித் தலைவரை நாம் தேர்வு செய்வதில்லையே..? பணம் தானே நிர்ணயிக்கிறது...! அரசியலில் இருந்து 5 வருடங்கள் சம்பாதிக்க வேண்டுமென்ற நோக்கில் ஒரு பெரும் தொகையை கொடுத்து வார்டு உறுப்பினர்களை விலைக்கு வாங்கி தலைமைப் பதவிக்கு வருபவர்களின் அடுத்த குறி போட்ட தொகையை லாபத்துடன் எடுக்க வேண்டுமென்பதைத் தவிர வேறென்னவாக இருக்கும்..? ஒரு தொழில் செய்ய வேண்டுமென்று ஒரு பெரும் தொகையை முதலீடு செய்பவர்கள் லாபம் சம்பாதிக்க நினைப்பது தப்பில்லையே...?

இதைப்பற்றி நமக்கென்ன கவலை? இதனால் நாம் பாதிக்கப் படுவதில்லையே? என்ற சுயநலப் போக்குடன் இருக்கும் நம் மக்கள் அவர்களுக்கென்று ஒரு பிரச்சனைவரும் போது அந்தப் பாதிப்பை உணர்ந்து கொதித்தெழுந்தாலும், கோலி சோடாவின் காட்டத்தைப் போல மறு நொடியே வலுவிழந்து, தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடுகிறார்கள்...!

இதற்குத் தீர்வே கிடையாதா? ஊரில் நல்லவர்களே இல்லையா..? என்றால் இருக்கிறார்கள்... எத்தனையோ சேவை மனப்பான்மையுள்ளோர் இனம் காணப்படாமலேயே இருக்கிறார்கள்.பணபலத்திற்கு முன்னால் தங்கள் தன்மானத்தை இழக்க வேண்டி வந்து விடுமோ என்ற பயத்தில் நல்ல உள்ளங்கள் முன் வரத் தயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஊரின் நலனுக்காக வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியா வண்ணம் பல உதவிகளை செய்து கொண்டிருக்கும் எத்தனையோ நல்லுள்ளம் கொண்Dஅ புரவலர்கள், நமக்கேன் வீண்வம்பு என்று முகம் காட்ட மறுப்பவர்கள் இருக்கிறார்கள், இன்னும் சில நல்லவர்கள் அரசியல் கட்சிகள், அல்லது அமைப்புகள், தெருக்கள், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பலதரப்பட்ட வட்டத்திற்குள் சிக்கி. நீ பெரியவானா..? நான் பெரியவனா? என்ற போட்டி மனப்பான்மைக்கு உட்பட்டு ஈகோவில் சிக்கி எதையும் செய்ய இயலாவண்ணம் உறைந்து போயிருக்கிறார்கள்.

இந்த நிலைமாற என்ன வழி...?

ஒற்றுமை ! என்ற நபிமொழியின் ஒற்றை வார்த்தையைப் பற்றிப் பிடிக்கும் வண்ணம் ”ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றி பிடிப்பதே” இவை அனைத்திற்கும் தீர்வாகும்.

பல வருடங்களுக்கு முன்னர் நம்மூரில் துவக்கப்பட்ட ஐக்கிய கமிட்டியை மீண்டும் தூசு தட்டி, தலைமுழுவாட்டி, புதுடிரெஸ் போட்டு மீண்டும் செயல்படுத்தவேண்டும். அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் அனைத்து வேட்பாளர்களும் தேர்வு செய்யப்பட வேண்டும். மற்றவர்களுக்கு முன்னரே நாம் தான் இப்படியான ஐக்கிய கமிட்டியை முதலில் அமைத்தோம் வழிகாட்டியாக, ஆனால் வலி மட்டும் நம்மிடம் இருந்துவிட்டது, வழியை மற்றவர்கள் நன்றாகவே கண்டு கொண்டார்கள். இது எந்த வகையில் சாத்தியம் என்போர் கீழே தரப்பட்டிருக்கு சுட்டியை தட்டிப் பாருங்கள் அவர்களும் நம்மவர்கள்தான் வேற்றார்கள் அல்ல. நன்மையை நாடி யார் நல்லதைச் சொன்னாலும் கேட்டுத்தான் உள்வாங்குவோமே!

நம் பூர்வகுடி உறவுகள் எடுத்த தீர்மானங்கள் இன்றைய சூழலில் ஏற்றுக் கொள்ளக்கூடியவையே, இருப்பினும் அல்லாஹ் நமக்கும் ஆராய்ந்து முடிவெடுக்கும் அறிவைத் தந்திருக்கிறான் அதனைக் கொண்டும் சிந்திப்போம்.

மேலும் பார்க்க : http://www.kayaltoday.com/show.aspx?tNewsId=1802

மாஷா அல்லாஹ் நம் சகோதரர்களின் செயல்பாடுகள் உண்மையில் பாராட்டத்தக்கது, நம் பூர்வகுடிச் சகோதரர்கள் இதை சாத்தியப் படுத்தும் போது நம்மால் ஏன் இதை நடைமுறைப்படுத்த முடியாது? இது என் எண்ணம் மட்டுமல்ல, ஊர் நலனில் அக்கரை கொண்ட எத்தனையோ மவுன ஜீவன்களின் பேராசை! நான் அவர்களால் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளின் மொழிபெயர்ப்ப்பு மட்டுமே இந்த ஆக்கம்.

இதெல்லாம் நடக்கக் கூடியதா? என்ற எதிர்மறை கேள்விகளை களைந்து, ஏன் நடக்கக் கூடாதென்ற எண்ணத்தை முன்னிருத்துங்கள் இன்ஷா அல்லாஹ் விரைவில் மாற்றம் வரும்....!

- அப்துல் மாலிக்

24 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அவசியமான, தருணமறிந்து எடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆக்கம் !

பூணையக்கு மணிகட்டுவது யார் என்று சொன்னதெல்லாம் அந்தக் காலம் !

களமிறங்க காத்த்திருப்பர்கள் சிந்திப்பார்களா !?

//ஏன் நடக்கக் கூடாதென்ற எண்ணத்தை முன்னிருத்துங்கள் இன்ஷா அல்லாஹ் விரைவில் மாற்றம் வரும்....!//

YES ஏன் ! நடக்கக்கூடாது !?

Yasir said...

ஒரு சீரியஸான விசயம் தக்க தருணத்தில் எடுத்து வைக்கபட்டு இருக்கிறது...அவர் பார்த்துக்கொள்வார் இவர் செய்து கொள்வார் என்று பொடுபோக்காக விடாமல்..சிந்தித்து செய்ல்பட்டு ஒற்றுமையுடன் உழைப்பது நம் கடமை..

நட்புடன் ஜமால் said...

Well said machaan ...

Yes! let's put into action ...

அப்துல்மாலிக் said...

என் எண்ணத்தை பிரதிபலித்ததுக்கு நன்றி காக்கா, இது எண்ணம் மட்டுமில்லை செய்லபடுத்தவேண்டும் என்ற உத்வேகம் இருக்கு, நாம சுனாமியிலேயே சும்மிங்க் போடுறவங்க இத சாதிக்க முடியாதா என்னா?

நமக்குள்ளே உள்ள ஈகோவை தூக்கியெறிந்துவிட்டு மறுமயில் பதில் சொல்லவேண்டுமே என்பதற்க்காகவாவது ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் ஒரு நல்ல முடிவு எடுப்போம், இதுக்கு மேலேயும் காலம் தள்ளிவைப்பது மடத்தனம்... இன்ஷா அல்லாஹ் விரைவில் நல்லதொரு நன்மையான செய்தி எதிர்ப்பார்த்தவனாக...

அப்துல்மாலிக் said...

//ஊருலே பெருவாரியா இருக்குற நாமதானே முறையாக பேருராட்சியை ஆளனும்."//

இந்த விசயத்துலே புடிவாதமா இருக்கனும்.. இன்ஷா அல்லாஹ்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

நண்பன் மாலிக்,

எம்மாம்பெரிய மேட்டரை இப்படி வாழப்பழத்துலெ ஊசி போடுற மாதிரி அழகா யாருக்கும் வலிக்காமல் சொல்லி இருக்கிறாய்.

பலபேருக்கு இது போன்ற நல்ல எண்ணங்கள் முன்பே தோன்றி செயல்படுத்த இயலாமல் எக்ஸ்பயரி ஆகி விட்டது. சிலருக்கு இன்றும் இருந்தும் புதுப்பிக்க வழி தெரியாமல் இருந்து வருகிறது. நீ எல்லோர் எண்ணத்தையும் பிரதிபலிக்கும் வண்ணமாக இக்கட்டுரை மூலம் புதுப்பித்துள்ளாய்.

"நம் சமுதாயத்தினர் என்று சொல்லி சும்மா செல்லாக்காசுகளையும், பேட்டரி எக்ஸ்பயரியானவங்களையும், ரப்பர் ஸ்டாம்புகளையும் தேர்ந்தெடுப்பதால் எவ்வித பலனும், பயனும் எவருக்கும் கிடைக்கப்போவதில்லை. நல்ல துடிப்புடன் பாரபட்சமின்றி படைத்த இறைவனுக்கு மட்டும் அஞ்சி செயல்படக்கூடிய ஒரு நல்ல ஆரோக்கியமான மனிதரை தேர்ந்தெடுத்தால் தான் நம் எண்ணங்கள் நிறைவேறும் ஊருக்கும் நல்லது பல நடக்கும்."

ந‌ம்ம‌ ஊர் ப்ராட் கேஜ்ஜும், கார்பேஜ்ஜும் வ‌ரும் உள்ளாட்சி தேர்த‌லில் ஒரு ந‌ல்ல‌ மாற்ற‌த்தை ஏற்ப‌டுத்தும் என்று சொல்லி இருப்ப‌து அருமை அதுதான் உண்மையும்....

வேக‌மாக‌ அடிக்க‌டி ஒலித்துக்கொண்டிருக்கும் ச‌ங்கின் ஒலி ஒரு நாள் செவிட‌ன் காதுத்திரைக‌ளையும் கிழித்துக்கொண்டு ஊடுருவாமலா போய்விடும்?

முய‌ற்சிப்போமா?

(ஆனா என்ன‌மோ தெரிய‌லடா இப்ப‌டி ஆக்ரோஷ‌மாக‌வும், ஆத‌ங்க‌த்துட‌னும், அறிவுப்பூர்வ‌மாக‌வும் அய‌ல்நாடுக‌ளில் இருந்து கொண்டு பேசும், எழுதும், சிந்திக்கும் நாம் ஊர் சென்று விட்டால் ந‌ம் வீரியம், வேகம் எல்லாம் குறைந்து, சுருங்கி க‌ழுதையோட‌ சேர்ந்து.... குட்டிச்சுவ‌ராகிவிடுவ‌து போல் ஆகிவிடுகிற‌து என்ன‌மோ தெரிய‌வில்லை. நா சொல்ற‌து நெச‌ந்தானே???)

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

Yasir said...

// நா சொல்ற‌து நெச‌ந்தானே??? /// 1000% நெசம்தான் சகோ.நெய்னா....சமீபத்தில் நான் ஊரில் இருக்கும் இதனை அனுபவித்தேன்....வசியம் எதுவும் பண்ணி வைத்து இருக்கிறார்களோ ???

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோ;அப்துல் மாலிக் தெருவுக்கு நாளு பேர் போட்டி போடக்கூடிய இச்சரியான தருணத்தில் .ஆக்கபூர்வமான சிந்தனையை கிளறும் சீரான பதிவு.உங்களுடைய என்னம் போல் தான்.அதிரையில் தலைவர் பதவிக்கு ஆசை படாதவர்களின். என்னமும்.ஆசை படுபவர்கள் உணருட்டும் .

// அரசின் எண்ணற்ற திட்டங்கள், சலுகைகள், உதவித்தொகைகள், கடனுதவிகள் இப்படி எதையாவது நம்மூர் மக்கள் இதுவரை அனுபவித்ததுண்டா? //

இத் திட்டங்களை நம் சமுதாயத்தவர்கள் மட்டும்தான் அனுபவிக்கவில்லை. மற்ற சமுதாயத்தவர்கள் தவற விடாமல் அனுபவிக்கிறார்கள் .

அப்படி நம்மவர்கள் ஓன்று,இரன்று பேர் அனுபவித்தாலும்.கவுன்சிலர்க்கு வேண்டியப்பட்டவர்களாக இருப்பார்கள் .

இப்படி பட்ட அநீதியும் அக்கிரமங்களும்.வேரோடு பிடுங்கி எடுப்பதற்கு கூர்மையான ஓட்டை கொண்டு பிடுங்கி எடுக்க கை கோர்ப்போமாக.

அதிரைக்கு நல்ல ஒரு விடியலை தருவதற்கு இறைவனிடம் இறைஞ்சுவோமாக.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// நா சொல்ற‌து நெச‌ந்தானே??? //

எல்லோருக்கும் அப்படியிருக்காது !

வீரீட்டெழ விதைகள் இப்படித்தானே விதைக்கப்பட வேண்டும், அங்கே வீசும் காற்றை தென்றலாகவும் மாற்றலாம் புயலாகவும் மாற்றலாம் !

ஒருவேளை நமதூரில் அதன் தாக்கம் குறைவாக இருப்பின் இனி அப்படியிருக்காது என்று நம்புவோமாக !

ZAKIR HUSSAIN said...

இந்த வலைத்தளங்களில் எழுதும் அப்துல் மாலிக் போன்ற சகோதரர்களிடம் நல்ல தூரநோக்கு சிந்தனை இருக்கிறது. ஆனால் இந்த நல்ல விசயங்களை நம் ஊரில் உள்ளவர்கள் படிக்கிறார்களா இல்லையா என்பதை ஒரு கருத்துக்கணிப்புக்குத்தான் விட வேண்டும்.
ஜனநாயக முறையில் தேர்தல் நடக்கும்போது அதை மத ரீதியாக அனுக முடியாது.

எதையும் ஒருமித்த கருத்தில் சாதிக்கலாம்....நமக்கு இருந்தால்.!!

sabeer.abushahruk said...

சிறப்பான சிந்தனை மிக்க ஆக்கம். சமூக நலம், சமுதாய அக்கறை, சாதிக்க நினைக்கும் எண்ணம் என எல்லாம் மிளிரும் கட்டுரை.

தூண்டி விட்டமைக்கு மிக்க நன்றி அ. மாலிக்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்ல தூண்டல்!
//எதிர்மறை கேள்விகளை களைந்து, ஏன் நடக்கக் கூடாதென்ற எண்ணத்தை முன்னிருத்துங்கள் இன்ஷா அல்லாஹ் விரைவில் மாற்றம் வரும்....!//
இப்படித்தான் எதற்கெடுத்தாலும் முயற்சியில் இறங்குபவர்களையும் முயற்சி செய்பவர்களின் பிண்ணனியையும் கிளரி குறைகூறி கூட்டத்தில் ஒருநிலை,பின்னாடி ஒருநிலை என்ற மனநிலை நம்மில் நீங்க வேண்டும்.
அப்படி குறை கூறுபவர்கள் ஆக்கப் பூர்வமான மாற்று முயற்சி செய்தார்களா என்றால் அதுவும் கிடையாது. இந்தப்போக்கும் மாறவேண்டும்.
சமுதாய நலனில் சாதிப்பதையே நோக்கமாக கருதி முயலுங்கள்.எதிர்ப்பை குறையுங்கள்.முயல்பவர்களை ஆதரியுங்கள்.ஒற்றுமையை ஒருசேர காட்டுங்கள்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
/// அரசின் எண்ணற்ற திட்டங்கள், சலுகைகள், உதவித்தொகைகள், கடனுதவிகள் இப்படி எதையாவது நம்மூர் மக்கள் இதுவரை அனுபவித்ததுண்டா? அதைப் பற்றி ஒன்றுமறியாத இந்த மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக இந்த பேருராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆக்கபூர்வமாக செய்ததென்ன? செய்யப் போவதென்ன?

NRI சம்பந்தமான அரசு திட்டங்கள் பற்றி யாருக்காவது தெரியுமா?

சிறுதொழில் கடனுதவிகள், சிறு தொழில் செய்வதற்கான வழிமுறைகள், இப்படியான பல வாழ்வியல் மேம்பாட்டு திட்டங்கள் பற்றி எம்மக்களுக்கு என்ன வென்றே தெரியாமல் இருப்பதைப் பற்றி நமக்கென்ன கவலை..? ///

சகோதரர் அப்துல் மாலிக்: தங்களின் ஆதங்கம் எல்லோருக்கும் இருக்கிறது.

எப்பொழுது இந்த நிலை மாறும்?

முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஊர்கள் அதிகமாக
புறக்கணிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது தமிழ்நாட்டில்.

வரிகள் அதிகமாக செலுத்தும் சமுதாயம் புறக்கணிக்கப்படுவது
நீதியா?

எப்பொழுது இந்த நிலை மாறும்?

அலாவுதீன்.S. said...

///( இப்ப‌டி ஆக்ரோஷ‌மாக‌வும், ஆத‌ங்க‌த்துட‌னும், அறிவுப்பூர்வ‌மாக‌வும் அய‌ல்நாடுக‌ளில் இருந்து கொண்டு பேசும், எழுதும், சிந்திக்கும் நாம் ஊர் சென்று விட்டால் ந‌ம் வீரியம், வேகம் எல்லாம் குறைந்து, சுருங்கி க‌ழுதையோட‌ சேர்ந்து.... குட்டிச்சுவ‌ராகிவிடுவ‌து போல் ஆகிவிடுகிற‌து என்ன‌மோ தெரிய‌வில்லை. நா சொல்ற‌து நெச‌ந்தானே???)///

சகோதரர் நெய்னா சொன்னதும் நெசந்தானா? என்று சிந்திக்க வைக்கிறது.
************************************************************************************************

1000% நெசம்தான் சகோ.நெய்னா....சமீபத்தில் நான் ஊரில் இருக்கும் இதனை அனுபவித்தேன்....வசியம் எதுவும் பண்ணி வைத்து இருக்கிறார்களோ ???

சகோதரர் யாசிர் சொன்னது: எப்படிப்பட்ட வசியம் என்று தெரியவில்லை?
*****************************************************************************************
ஒருமித்த கருத்தை எப்படி கொண்டு வருவது? எப்படி சாதிப்பது?

/// "நம் சமுதாயத்தினர் என்று சொல்லி சும்மா செல்லாக்காசுகளையும், பேட்டரி எக்ஸ்பயரியானவங்களையும், ரப்பர் ஸ்டாம்புகளையும் தேர்ந்தெடுப்பதால் எவ்வித பலனும், பயனும் எவருக்கும் கிடைக்கப்போவதில்லை. நல்ல துடிப்புடன் பாரபட்சமின்றி படைத்த இறைவனுக்கு மட்டும் அஞ்சி செயல்படக்கூடிய ஒரு நல்ல ஆரோக்கியமான மனிதரை தேர்ந்தெடுத்தால் தான் நம் எண்ணங்கள் நிறைவேறும் ஊருக்கும் நல்லது பல நடக்கும்." ////

வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.பெரும்பாலோனோரின் உள்ளத்தில் உள்ளதை எழுத எல்லாரலும் முடியாது. ஆனால் இந்த கட்டுரை சகோ. மாலிக்காள் நன்கு அலசி எழுதபட்ட சமூக கண்ணோட்டத்துடன் கூடிய ஆக்கம். இதை சரியான முறையில் கையாளவேண்டியது நம் கடமை. அதிரை நிருபர் ஆரம்பத்தில் நான் சில கருத்து பதிந்திருந்தேன். நாம் யாரை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி அது சட்ட சபைத்தேர்தல் . சபீர்காக்காகூட அதை ஆமோதித்து அபுஇபுறாகிம் காக்காவிடம் கலந்தார்கள் ஏதோ சுழல் ஒரு விழிப்புனறவு செய்ய ஊரில் சரியான ஆள் இல்லாததால் நடைமுறைபடுத்துவதில் சிக்கல் என்று அபுஇபுறாகிம் காக்கா சொன்னார்கள்.ஆனால் இப்பொழுது நமக்கு நம் ஊருக்கு நல்லது செய்பவர்களை தேர்ந்தெருக்க வேண்டியஹ்டு நம் கடமை மேலும் நம்மை போன்ற சமூக மீடியாவின் கடமை இதற்கு நல்லதொரு ஆலோசனை குழு அமைத்து நம் ஊர் நல அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றலாமே?

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
// ஆனால் அதற்காக குப்பை மட்டுமே அதிரையின் பிரச்சனையா? என்றால் கண்டிப்பாக இல்லை..! முன்னிறுத்தப் பட்டிருக்கும் குப்பைக்குப் பின்னால் பல விசயங்கள் நமக்குத் தெரியாமலேயே போய் விட்டன.//

உண்மைதான்.ஒவ்வொரு ஊருக்கு ஒவ்வொரு குணங்கள் இருக்கும் நம்மூரு குணம்தான் நமக்கு தெரியுமே! சங்ககூட்டங்களின் போது அவற்றுக்கு கட்டு படாமல் குப்பைகளை கொட்டும் விதமாக நடந்து கொள்ளும் இவர்களா குப்பைகளை அல்லபோகிறார்கள் ?

நபி( ஸல்) அவர்கள் கூறினார்கள் யார் பதவிக்கு ஆசைப்பட்டு விரும்பி அதை கேட்கிறானோ நாம் அவனுக்கு பதவியை தரமாட்டோம் .ஹதிஸின் கருத்தாகும் .

அப்துல்மாலிக் said...

//க்ரோஷ‌மாக‌வும், ஆத‌ங்க‌த்துட‌னும், அறிவுப்பூர்வ‌மாக‌வும் அய‌ல்நாடுக‌ளில் இருந்து கொண்டு பேசும், எழுதும், சிந்திக்கும் நாம் ஊர் சென்று விட்டால் ந‌ம் வீரியம், வேகம் எல்லாம் குறைந்து, சுருங்கி க‌ழுதையோட‌ சேர்ந்து.... //

நெய்னா நீ சொல்வது சரி, தூர இருந்தாதான் அதன் மதிப்பு தெரியும்னு சொல்லுவாங்க, அதைதான் நாமும் செய்கிறோம் வெளிநாட்டில் இருந்துக்கொண்டு. ஆனால் இங்கே சொன்ன விசயம் வேறு, எகிப்துலே இவ்வளவு புரட்சி ஏற்பட இணையட்துடன் தொடர்புள்ள face book தான் பிரதான பங்கு வகித்துள்ளது. நாமும் தம்மாள் இயன்றளவுக்கு அதிகமானோர் படிக்கக்கூடைய அ.நி. மூலம் பிளாக் வாயிலாக ஏதாவது புரட்சி செய்ய தூண்டுதலா இருக்கனும். வெறுமனே கவிதை, கதை படித்தது போக நம் சமுதாயத்துக்காக நம் எழுத்து மூலமா ஏதாவது செய்யலாமே, இதை நோட்டீஸாகவோ அல்லது இணையத்தொடர்பில் உள்ளவங்களுக்கு லின்கியோ இந்த விதையை பரப்புவோமே, எல்லோருக்கும் நல்லது நடக்கனும் என்ற ஆவல் இருக்கு அதை சரியா செயல்முறைபடுத்த தக்க தருணம், தக்க அமைப்பு வேண்டும் அதை ஏற்படுத்ததான் இங்கே விதை போடப்பட்டிருக்கு, இன்ஷா அல்லாஹ் ஆலமரமாக வளர்ந்து நமக்கு நிழல் தர இறைவன் துணை நிற்பான்...

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// ஆனா என்ன‌மோ தெரிய‌லடா இப்ப‌டி ஆக்ரோஷ‌மாக‌வும், ஆத‌ங்க‌த்துட‌னும், அறிவுப்பூர்வ‌மாக‌வும் அய‌ல்நாடுக‌ளில் இருந்து கொண்டு பேசும், எழுதும், சிந்திக்கும் நாம் ஊர் சென்று விட்டால் ந‌ம் வீரியம், வேகம் எல்லாம் குறைந்து, சுருங்கி க‌ழுதையோட‌ சேர்ந்து.... குட்டிச்சுவ‌ராகிவிடுவ‌து போல் ஆகிவிடுகிற‌து என்ன‌மோ தெரிய‌வில்லை. நா சொல்ற‌து நெச‌ந்தானே???) /

நெசந்தான் அயல் நா(கா)டுகளில் தனிமையாக இருந்து சிங்கம்போல் வீரியமெல்லாம் ஊருக்கு வந்தவுடன் மனைவி மக்கள் பாசமும் ,திரும்ப அயல் நா(கா)டுகளுக்கு போவணுமே என்ற வசியம்தான் நம்மை சுருங்கி க‌ழுதையோட‌ சேர்ந்து.... குட்டிச்சுவ‌ராகிவிடுகிறது .

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வெளிநாடுகளிருக்கும் ஆர்வமும் கர்ஜிப்பும் ஊருக்கு வந்ததும் இல்லை என்பதை முழுமையா ஏற்றுக்கு கொள்ள முடியாது !

அதற்கு பல காரணங்களைச் சொல்லலாம், இருப்பினும் இன்றளவும் உயிருடன் ஆக்கபூர்வமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நற்பணி அமைப்புகளும், சங்கங்களும் இயக்கங்களும் வெளிநாடுகளில் உருவெடுத்த கருத்தின் தாக்கமும் அவர்கள் வகுத்தெடுத்த செயல் திட்டங்களும்தான் இதில் யாருக்கும் மறுக்க இயலாது.

அவைகளின் பெயர்களைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பவில்லை! அவர்களும் இன்றளவும் சாதிக்கிறார்கள்.

சரி அதிருக்கட்டும், வெள்நாடுகளில் வாழும் சகோதரர்கள்தான் இப்படி தூர நோக்குப் பார்வையும் பேசுவார்கள் ஊரிலிருப்பவர்கள் அப்படிச் செய்வதில்லை என்றும் சொல்லவும் முடியாது, அவர்களுக்கு இப்படி வெளிக்காட்டிக் கொள்ள தளம் அமையாமல் இருக்கலாம்... அப்படியாக அன்றைய காலகட்டங்களிலும் ஏன் இன்றளவும் ஒவ்வொரு வேர்வைத்த்துளியையும் சிந்தியவர்கள் அவர்களின் குடும்பநிலை கருதி ஐரோப்பாவிலும், ஆஸ்திரேலியாவிலும், அரபு நாடுகளிலும் சிக்கியிருக்கிறார்கள் அவர்களின் ஆதங்கமும் இதுவே !

நமதூரில், பெரும்பாலனவர்கள் அரசியல் கட்சிகளை சுயலாபத்திற்கு பயன்படுத்தியது மிகக்குறைவே ஒரு சில சுயநலமிகளை தவிர...

ஆட்சி அதிகாரம் வேண்டும் அங்கே எங்களுக்கும் தனியிடம் வேண்டும் குரல் கொடுத்தாலும் அதனைச் செயப்லடுத்து இதுதானே முதல் படி உள்ளாட்சி ஆட்சி மன்றங்கள் ! (இதுதானே பள்ளிக்கூடம்) இங்கே நம்தூருக்கு செய்வோம் அதனைத் தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வைப்போம் !

வெளிநாட்டு வருமானம் வேண்டும் அதோடு ஊரோடு உமையாக ஒத்துப் போகவேண்டுமா ?

அப்படின்னா யார்தான் பேரூராட்சி மன்றத்தின் தலைவருக்கு தகுதியானவர் !?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//வெளிநாடுகளிருக்கும் ஆர்வமும் கர்ஜிப்பும் ஊருக்கு வந்ததும் இல்லை என்பதை முழுமையாக ஏற்றுக்கு கொள்ள முடியாது !//

சரியான வார்த்தை.
சிலருக்கு அப்படியில்லாவிட்டாலும் குறுகிய விடுமுறை நிமித்தமாக போனவர்களைத் தவிர பலர் பல நல் முயற்சிகளை செய்தும் செய்து கொண்டும் இருக்கார்களே.
இந்த ஆர்வமும் கர்ஜிப்பும் பல நல் விளைவுகளை படிப்படியாக ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது.

கருத்துச்சொல்லுங்கள்!
கரைகளை கரைவோம்!!
கருவை அடைவோம்!!!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

சரியான நேரத்தில் எழுத்தப்பட்ட ஆக்கம். அவசியம் ஒவ்வொரு அதிரைவாசிகளும் படிக்க வேண்டும். நண்பர் மாலிக் அவர்களுக்கு மிக்க நன்றி.

இதை நோட்டீஸாககூட அடித்து வெளியிடுவதைவிட அதிரையில் உள்ள அனைத்து தெரு ஜமாத்துக்கள் இயக்கங்களுக்கு பதிவு மற்றும் பின்னூட்டங்களை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொடுக்கலாம், தெரிவிக்கலாம்.

//வெளிநாடுகளிருக்கும் ஆர்வமும் கர்ஜிப்பும் ஊருக்கு வந்ததும் இல்லை என்பதை முழுமையாக ஏற்றுக்கு கொள்ள முடியாது !//

நிறைய சகோதரர்கள் வெளிநாடுகளிலிருந்து ஊருக்காக ஆவோசமாக குரல் கொடுத்தாலும், ஊருக்கு சென்றாலும் அதே உணர்விலும் செயல்பட்டு குறைந்த பட்சமாவது சமுதாய முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறார்கள். தேவைப்பட்டால் நிறைய எடுத்துக்காட்டுகள் சொல்லமுடியும்.

வெளிநாடுகளில் ஒற்றுமையாக அதிரைவாசிகள் ஒன்று கூடும் நிகழ்வுகள் நடைப்பெறுவது போல் அதிரையில் ஊர்நலன் என்ற ஒரே சிந்தனையுடன் பொதுநோக்கில் ஒன்றிணைந்து நடைப்பெறுவதில்லை என்பது வேதனையான எல்லோராலும் ஒத்துக்கொள்ளப்பட்டா உண்மை. ஒன்றிணைந்து ஊர் நலனை கருத்தி கொண்டு செயல்படுவதற்கு தொடர்ந்து ஆக்ரோசமாகவே அமைதியாகவோ குரல் கொடுத்து அனைத்து ஜமாத்துக்களும் ஒன்றிணைந்தால் ஊர் மக்களுக்கே நன்மை.

சகோதரர் ஜஃபர் சாதிக் சொன்னது போல்.

கருத்துச்சொல்லுங்கள்!
கரைகளை கரைவோம்!!
கருவை அடைவோம்!!!

அல்லாஹ் மிகப் பெரியவன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பான சகோதரர்களே,

நண்பன் அப்துல் மாலிக்கின் ஆக்கம் நம் (உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் தங்கியிருக்கும் அனைத்து அதிரைவாசிகள்) ஏக்கத்துடன் மற்றும் எதிர்பார்ப்புடன் கூடிய ஆதங்கத்தின் பிரதிபலிப்பு என்றால் அது மிகையில்லை. நிச்சயம் அனைத்தும் வரவேற்கப்பட வேண்டிய கருத்துக்களேயன்றி வேறெதுவும் இல்லை.

வெளிநாடுக‌ளில் ப‌ணிபுரிந்து விட்டு விடுமுறையில் ஊர் செல்லும் பொழுது பெரும்பாண்மையான‌ ம‌க்க‌ளுக்கு ஏற்ப‌டும் எதார்த்த‌ நிலையைத்தான் மேலே சொல்ல‌வ‌ந்தேனே த‌விர நம் ந‌ல்ல‌ முய‌ற்சிக‌ளுக்கு ஒரு போதும் முட்டுக்க‌ட்டை போட‌ அல்ல‌ என்ப‌தை நாம் சிந்திக்க‌ வேண்டும்.

இறைவன் கிருபையில் பல வளங்களைப்பெற்றிருந்தும் என்றோ சாதித்து ப‌ல‌ ச‌ங்க‌திக‌ளை நிறைவேற்றி இருக்க‌ வேண்டிய‌ நாம் ப‌ர‌ஸ்ப‌ர‌ம் ஒருவ‌ருக்கொருவ‌ர் புரிந்துண‌ர்வு ம‌ற்றும் ஒற்றுமையிண்மையால் எதையும் ச‌ரிவ‌ர‌ சாதிக்க‌ இய‌லாமல் இன்று ச‌ங்க‌ட‌ப்ப‌ட்டுக்கொண்டிருக்கிறோம்.

நாமாவ‌து சில‌ நேர‌ம் ஊரில் இல்லா விட்டாலும் ஊருக்கு ந‌ல்ல‌து செய்ய‌ வேண்டும் ம‌ற்றும் அங்குள்ள அரசின் நிர்வாக சீர்கேடுக‌ளுக்காக உள்ளத்தால்/உணர்வால் நாக‌ப்பாம்பாய் சீறுகிறோம். ஆனால் சில‌ர் வெளிநாடுக‌ளில் இருந்து கொண்டு நம் ஊர் ப‌ற்றி எவ்வித‌ சிந்த‌னையும், க‌வ‌லையும், அக்க‌றையும் இல்லாம‌ல் செத்த‌ த‌ண்ணீர்ப்பாம்பு போல் இருந்துவ‌ருவ‌து எண்ணி வேத‌னைப்ப‌டாம‌ல் வேறென்ன‌ செய்ய‌ முடியும்?

பாறைக்குள் இருக்கும் தேரையின் உள்ளத்தின் ஊச‌லாட்ட‌த்தை தெள்ள‌த்தெளிவாக‌ அறிய‌க்கூடிய‌வ‌ன் ந‌ம் உள்ள‌த்தில் உள்ள‌தை அறிய‌ சிர‌ம‌மேதும் உண்டோ அவ‌னுக்கு?

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து

அப்துல்மாலிக் said...

//சில‌ர் வெளிநாடுக‌ளில் இருந்து கொண்டு நம் ஊர் ப‌ற்றி எவ்வித‌ சிந்த‌னையும், க‌வ‌லையும், அக்க‌றையும் இல்லாம‌ல் செத்த‌ த‌ண்ணீர்ப்பாம்பு போல் இருந்துவ‌ருவ‌து எண்ணி வேத‌னைப்ப‌டாம‌ல் வேறென்ன‌ செய்ய‌ முடியும்?//

நெய்னா, இதுக்கு முழு முதற்கொண்ட காரணம் பிறவியிலேயே எது நடந்தா (தனக்கென்று ஏதும் நடைபெறாதவரை) எனக்கென்ன தானும் தனது குடும்பமும் நல்லாயிருந்தா போதும் என்ற மனப்பான்மையா? இல்லை இவன் எப்படிபட்டவன் என்று எனக்குத்தெரியும் இவன் சொல்லி அவன் பின்னால் செல்வதா என்ற காப்ளெக்ஸா இல்லை சமூகத்தில் அந்தஸ்து கிடைக்காமல் தனித்துவிடப்பட்டவரா இல்லை தொலைநோக்கு பார்வையின்றி தன் சமுதாயம் எப்படிப்போனால் என்ன என்று நினைப்பவரா? நிச்சயமா இது மாதிரி ஆளுங்களுக்கு சரியான முறையில் எடுத்துச்சொன்னால் எல்லாம் சிறப்பாகவே அமையும் என்பது என் கருத்து, யாரையும் விட்டுவிட வேண்டாம், ஒவ்வொரு செயலுக்கும் மறுமையில் நன்மை இருக்கு என்பதை நம்புவோம்...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் நோக்கில் கூட்டணி வைத்துக் கொள்ளாமல் திமுக தனித்துப் போட்டியிடும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். //

மு.க.(கையில்) உள்ள ஆட்சி போனது தன் மக்களால் என்று உணர்ந்ததும், இப்போது உள்ளாட்சி(யில்) பொது மக்களை நினைக்கிறார் அவர்களின் பிரச்சினையை தீர்க்க(தரிசி யல்லவா) !

பழுத்த அரசியல் வாதியாச்சே !

மாநில அரசியல், தேசிய அரசியல் நடத்தும் இவரே இன்று மக்கள் பிரச்சினைதான் பிரதானம் என்றும் சொல்லும் அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார் !

அப்படின்னா நம்ம நெலமை எப்படியிருக்கனும் யோசிக்க வேனாமா ??

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு