Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

(we)சித்திரமான சிநேகிதிகள் 21

அதிரைநிருபர் பதிப்பகம் | July 14, 2012 | , , , ,

விழுது விட்டு விருட்சங்களென
எழுபத் தெட்டு பிராயங்களில்
பழுது பட்ட பார்வைகளோடு
தொழுதுவரும் மாமியும் உம்மாவும்

தத்தம் வீட்டு துணைகள்
தரணி விட்டு போனபின்னர்
தனிமைப் பேய் விரட்ட
தவிக்கின்ற தோழிமார்கள்

நீர்ச்சோறு காலையிலே
வடிச்சகஞ்சி மதியமுமாய்
சிறுபிராயக் காலங்களைச்
சிலாகித்துச் சொல்வதுண்டு

பின்னலிட்ட ஜடையும்
மின்னலொத்த நடையுமாய்
கல்விகற்க கைகோர்த்து
பள்ளி சென்ற தோழிகள்

ரெட்டைஜடை வயதினிலே
ஒற்றைஜதைத் தோழிகளாய்ச்
சுற்றித்திரிந்த நினைவுகளை
சொல்லச்சொல்லி கேட்பதுண்டு

மாமியைப் பார்த்தெழுதி
உம்மா தேர்ச்சிபெற்ற
ஐந்தாம் வகுப்புக்கதை
அழகாய்ச் சொல்லிவைப்பர்

சொல்லிச் சிரிக்கையிலே
சொக்கிப்போகும் என் மனசு
நெற்றிச் சுறுக்கங்களில்
நெகிழ்ந்துபோகும் என் உயிரு

உம்மாவின் அண்ணனைத்தான்
மாமி மணந்துகொண்டார்
நாத்தனார் தோழமையில்
நல்வாழ்க்கை மாமி கண்டார்

இருவரையும் பேசவிட்டு
இரசிப்பதில் இன்பமுண்டு
நானும் மச்சான்களும்
வளர்ந்தகதை கேட்பதுண்டு

பேரன் பேத்திகளுக்கு
பெரியோரிடம் ஆர்வமில்லை
பேச்சுத்துணைக் கின்று
பெருசுகள் தவிப்பதுண்டு

உணவுண்ண உயிருண்டு
உணர்வுகளுக்கு ஆறுதலுண்டா
நினைவுகள் நிறைய உண்டு
நிஜத்தில் துணை உண்டா

தள்ளாடும் முதுமைக்கும்
தகிக்கின்ற தனிமைக்கும்
அன்புதானே கைத்தடி
அதைக்கொடுப்போம் அடிக்கடி!

Sabeer AbuShahruk

21 Responses So Far:

Ebrahim Ansari said...

//தள்ளாடும் முதுமைக்கும்
தகிக்கின்ற தனிமைக்கும்
அன்புதானே கைத்தடி
அதைக்கொடுப்போம் அடிக்கடி!//

நமதூரில் பலவீடுகளில் இந்தக் கதை இருக்கும். இந்த கவிதை ஒரு உயிரின் ஓசை. உண்மையை பேசும் பாஷை.

இதற்கு விலை இரு சொட்டுக் கண்ணீர்.

இந்த கவிதையின் காட்சியை நோக்கி விரைவாக முன்னேறிக்கொண்டிருக்கும் எங்களின் வயதுடையோருக்கு ஒரு எச்சரிக்கை.

பாராட்ட வார்த்தை இல்லை என்று சொல்வது ஒரு பார்மாலிடி- யாகவே இருக்கும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

முதுமை முதுகைத் தட்டியே தீரும் ! (அதுவரைக்கும் நம் உயிரோட்டம் இருக்குமா !?)

//உணவுண்ண உயிருண்டு
உணர்வுகளுக்கு ஆறுதலுண்டா
நினைவுகள் நிறைய உண்டு
நிஜத்தில் துணை உண்டா//

அப்பட்டமான நிஜம் !

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

//நெற்றிச் சுறுக்கங்களில்
நெகிழ்ந்துபோகும் என் உயிரு// என் உயிரு என்ப‌தை என் உசுரு என்றிருந்தால் இன்னும் கூடுத‌ல் மெருகு பெரும் என்ப‌து என் க‌ருத்து.

ச‌பீர் காக்கா, வேதனையான வ‌யோதிக‌த்த‌னிமையை த‌ன‌க்கேயுரிய‌ பாணியில் சிற‌ப்புற‌ க‌விதையாய் இங்கு நீங்க‌ள் வ‌டித்திருந்தாலும் "ந‌ம்ம‌ ஊர்லெ நாத்த‌னாவும், த‌மைய‌ன் பொண்டாட்டியும் எந்த‌ ஊட்லெ ஒத்துமையா இப்ப‌டி ப‌ழைய‌ க‌தைக‌ளை பேசி மகிழ்கிறார்க‌ள்? சொல்லுங்க‌ள் பார்க்க‌லாம்? "என் த‌மைய‌னை ஒரே சுருட்டா சுருட்டிக்கிட்டா" என்ற‌ ஒரே போடு தான் எல்லாத்தையும் துண்டு துண்டாக‌ ஆக்கிக்கொள்கின்ற‌ன‌ரே காக்கா?

ஆனால் உங்க‌ள் வீட்டில் இதில் விதிவில‌க்கு இருப்ப‌தாக‌ ஒரு முறை உங்கள் நண்பனும் என் மச்சானுமான ம‌ஹ்ரூஃப் சொல்ல‌க்கேட்டிருக்கிறேன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அன்பான உம்மாவும் அவங்களுக்கு ஈடான மாமியும்.

நல்ல நாத்தனாக்கள் பற்றிய
நல்ல கவி மழை.

உங்க அன்பு மழை ஆழமாகட்டும், அவங்க ஆயுளும் நீளமாகட்டும்.

உணர்வுகளுக்கு ஆறுதலாகவும்
நிஜத்தில் துணைக்கு ஈடாகவும் இருப்போம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இவ‌ர்க‌ளுக்குள் மவுத், ஹயாத்து மூலம் ம‌த்துச‌ம் பேசி ஒருவ‌ருக்கொருவ‌ர் புரிய‌ வைப்ப‌த‌ற்குள் அந்த‌ ஐ.நா. ச‌பையே அச‌ந்து போய் விடும‌ல்ல‌வா?

Unknown said...

அன்புக்கவிஞர் சகோ சபீர்,

நல்ல பாடுபொருள். பலரும் தொடாத பாடுபொருளைத் தொடுவது சிறப்பு.

தள்ளாடும் முதுமைக்கும்
தகிக்கின்ற தனிமைக்கும்
அன்புதானே கைத்தடி
அதைக்கொடுப்போம் அடிக்கடி!

அருமை.

எப்போதும் அவர்களுடனேயே இருக்கிறோம், அவர்கள் சொல்வதைக் கேட்கிறோம், அவர்களை ஒரு பொருட்டாக நினைக்கிறோம் எனபதை அவர்களுக்கு அறியத் தருதலே அந்த அன்பு என்று நினைக்கிறேன்.

குழந்தைகளை அள்ளிக்கொஞ்சும்போது
அவர்கள் வயதுக்கு இறங்கி நாமும் குழந்தைகளாய் ஆகிறோம்

முதியவர்களைக் காணும்போது அவர்கள் வயதுக்கு நாம் ஏறவேண்டாம்
இங்கும் நாம் குழந்தைகளாய் ஆனால் போதும்
அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லை இருக்காது.

அன்புடன் புகாரி

crown said...

விழுது விட்டு விருட்சங்களென
எழுபத் தெட்டு பிராயங்களில்
பழுது பட்ட பார்வைகளோடு
தொழுதுவரும் மாமியும் உம்மாவும்.
----------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். ஒரு ஊர்ல இரு ராஜகுமாரிகள் இப்படி எழுதப்படும் கதைகேட்டிருக்கிறோம். ஆனால் இந்த கவிதை ஒரு உயிரின் ஓசை. உண்மையை பேசும் பாஷை. இதற்கு விலை நாம் சொட்டும் பாச மழை( நன்றி:இபுறாகிம் அன்சாரி காக்கா!)

crown said...

தத்தம் வீட்டு துணைகள்
தரணி விட்டு போனபின்னர்
தனிமைப் பேய் விரட்ட
தவிக்கின்ற தோழிமார்கள்.
--------------------------------------------------
ரத்தம் சுண்டும் வயதில், துணைகள் பிரிந்த துயரில் இனைந்த இரு தோழிகள்!தனிமை கொடுமை விரட்ட திரண்ட அன்பு புதையல்கள்.

crown said...

ரெட்டைஜடை வயதினிலே
ஒற்றைஜதைத் தோழிகளாய்ச்
சுற்றித்திரிந்த நினைவுகளை
சொல்லச்சொல்லி கேட்பதுண்டு
-------------------------------------------------------
இரு ஜடைகள் ஒன்றோடு மற்றொன்று பின்னி இருப்பதுபோல் ஈருடல் ஓர் உயிராய் பின்னி இருப்பதுபோல் கொண்ட உவமை! கவிஞரே பின்னிட்டிங்க வழக்கம் போல். மின்னலாய் உம் கவிதை மின்னி செல்லவில்லை அங்கேயே மிளிர்ந்து கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கள். அல்லாஹ் மிகப்பெரியவன்.

crown said...

சொல்லிச் சிரிக்கையிலே
சொக்கிப்போகும் என் மனசு
நெற்றிச் சுறுக்கங்களில்
நெகிழ்ந்துபோகும் என் உயிரு
-------------------------------------------------------
காதலிக்கு கவிஞர் எழுதினார் முத்தமிட்டு நெற்றியில் மார்புக்கு மத்தியில் செத்துவிட தோனுதடி எனக்கு!அது காதல் கலந்த காமம். ஆனால் இங்கே அன்பு கலந்த மரியாதை! அந்த அனுபவ சுருக்கங்களின் இடையில் தான் நம் அன்பு சுழல் மாட்டிகொண்டு தவிக்கிறது!அருமை! உண்மையான அன்பின் அடையாளம் இந்த வார்தை வடிவமைப்பு. இது சதாரணமாக வார்தையின்கோர்பல்ல! அன்பின் சேர்ப்பு!

crown said...

உம்மாவின் அண்ணனைத்தான்
மாமி மணந்துகொண்டார்
நாத்தனார் தோழமையில்
நல்வாழ்க்கை மாமி கண்டார்
----------------------------------------------------
கவி வேந்தே! உங்களிடம் தொலைபேசியில் சொல்லியது போல் ,இவர்கள் அன்பு நாரில் கோர்த இரு அன்பு பூக்கள். இது அரிது! நாத்னார் இருவரையும் கோத்த நார் அந்த உண்மை தோழமை!இது பெரிதெனும் பெரிது!

crown said...

உணவுண்ண உயிருண்டு
உணர்வுகளுக்கு ஆறுதலுண்டா
நினைவுகள் நிறைய உண்டு
நிஜத்தில் துணை உண்டா
-----------------------------------------------
உண்மையான எதார்த்தம்! பதார்தம் பல செய்து கொடுத்தாலும் பாசத்துடன் கொடுப்பதற்கு இங்கால இளையவர்கள் இருப்பதில்லை!உணர்வுக்கு மரியாதை இல்லாத நடைபினமாய் முதுயவர்கள் வாழ காண்கின்றோம்.அல்லாஹுக்கு அஞ்சிகொள்வோம்.

crown said...

தள்ளாடும் முதுமைக்கும்
தகிக்கின்ற தனிமைக்கும்
அன்புதானே கைத்தடி
அதைக்கொடுப்போம் அடிக்கடி!
---------------------------------------------
சரியா சொன்னீங்க அருமை! அருமை! இங்கே முதுமை எழுந்து நிற்க கைத்தடியாய் அன்பு செலுத்தனும் என்பதுபோல். உங்கள் வார்தையால் கவிதை எழுந்து நிற்கிறது! பாடு பொருள் என்னவோ முதுமையைத்தான் பாடல் வரிகள் என்னவோ இளைமை துள்ளல். வாழ்க வளமுடன் . அல்லாஹ் போதுமானவன்.

Ebrahim Ansari said...

தம்பி நெய்னா அவர்கள் கேட்டது

// "ந‌ம்ம‌ ஊர்லெ நாத்த‌னாவும், த‌மைய‌ன் பொண்டாட்டியும் எந்த‌ ஊட்லெ ஒத்துமையா இப்ப‌டி ப‌ழைய‌ க‌தைக‌ளை பேசி மகிழ்கிறார்க‌ள்? சொல்லுங்க‌ள் பார்க்க‌லாம்?//

தம்பி கிரவுன் சொல்வது

//இவர்கள் அன்பு நாரில் கோர்த இரு அன்பு பூக்கள். இது அரிது! நாத்னார் இருவரையும் கோத்த நார் அந்த உண்மை தோழமை!இது பெரிதெனும் பெரிது!//

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

Unknown said...

சொல்லிச் சிரிக்கையிலே
சொக்கிப்போகும் என் மனசு
நெற்றிச் சுறுக்கங்களில்
நெகிழ்ந்துபோகும் என் உயிரு
----------------------------
Very Nice

அதிரை சித்திக் said...

செல்வ சீமாட்டிகளின் வாழ்வின் நினைவலை ...

நல்ல கவிதை ..

சேக்கனா M. நிஜாம் said...

வாழ்த்துகள் கவிநேசருக்கு !

கவிதையை படித்தேன்....ரசித்தேன்....சிரித்து மகிழ்ந்தேன்....இறுதியில் நெகிழ்ந்தேன்....என்றென்றும் அவர்களை நினைவுற்றவனாக !

Yasir said...

உறவுகளின் நட்பு உள்ளத்தை உருக வைத்துவிட்டது...வித்தியாசமான கவிதை அழகாக நெய்யப்பட்டு இருக்கின்றது

//தள்ளாடும் முதுமைக்கும்
தகிக்கின்ற தனிமைக்கும்
அன்புதானே கைத்தடி
அதைக்கொடுப்போம் அடிக்கடி!// சவுக்கடி வரிகள்

sabeer.abushahruk said...

வாசித்து கருத்திட்ட சகோதரர்களுக்கு மிக்க நன்றி.

கிரவுனுரைக்கு பிரத்யேக நன்றியும் கடப்பாடும்.

முத்தாய்ப்பாக,

தனிமை என்பது ஒரு விலாசம்; அது முதுமையின் விலாசம். முதுமையை நிம்மதியாகக் கழிக்க விரும்பும் எந்த இளஞரும்/இளைஞியும் அவர்தம் தற்போதையை இளமையை நிரந்தரம் என்று இருமாந்து இருந்துவிடாமல் ஒரு சிறிய விசாரிப்போ, மெல்லிய கவனிப்போ என்று முதுமையைக் கண்டு கொள்ளல் வேண்டும்.

இல்லையேல். பிற்பகல் தானே வரும். (பிறற்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா)

நன்றியும் வாழ்த்துகளும்

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

சபீர் : சாச்சிகளின் உண்மையான சிநேகத பாசத்திற்கு உண்மையான உயிரோட்டமான கவிதை வடித்த உனக்கு வாழ்த்துக்கள்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு