Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நபிமணியும் நகைச்சுவையும்...! 14

அதிரைநிருபர் பதிப்பகம் | December 06, 2012 | , ,

தொடர் - 13
ரோமாபுரியின் ரோஜா மலர்!

அவர் ஓடினார். தலை தெறிக்க ஓடினார். மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு ஓடினார். வெஞ்சினமும் வீராவேசமுமாக தன்னைக் குதிரைகளில் துரத்தி வருபவர்களிடம் சிக்கினால், உயிர் அவருடையதில்லை என்பதை முற்றிலும் உணர்ந்தே, அவர் காற்றைக் கிழித்துப் பறந்தோடினார்!

இதற்கு மேல் ஓட முடியாது என்ற நிலையில் ஒரு மலைக்குன்றின் மீது சடாரெனப் பாய்ந்து ஏறி நின்றுகொண்டு தன்னைத் துரத்தி வந்த மக்கத்து மடையர்களைப் பார்த்துக் கத்தினார்.

எவனாவது இதற்கு மேல் என்னை நெருங்கினால், அல்லாஹ்வின் மீது ஆணையாக, என் அம்புகளால் அவனைக் கொன்று போடுவேன். அதையும் மீறி வேறு யாரும் நெருங்கினால், இருக்கவே இருக்கிறது என் போர்வாள்! உயர்த்திக் காட்டி நின்றார் உருக்கு மனமும் உடையாத உறுதியுமாய்!

ஓரிறையை மறுத்து வந்தவர்கள், அவரைத் துரத்தி வந்தவர்கள் மலைத்து நின்றார்கள்!

ஒருவன் கூவினான். "எங்கள் ஊரில் நீ திரட்டிய பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு, நீ யத்ரிபுக்கு ஓடிவிட நாங்கள் அனுமதிக்க முடியாது"

"ப்பூ!இவ்வளவுதானா? நான் சேர்த்து வைத்த சொத்தை எல்லாம் தந்துவிட்டால்,  தடையில்லைதானே?"

"தடையில்லை!"

"அப்படியானால், இன்னின்ன இடத்தில், இவ்வளவு இவ்வளவு  வைத்திருக்கிறேன். அத்தனையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

என்னை என் வழியில் விட்டு விடுங்கள்."

உடன்படிக்கை இனிதே முடிந்தது!

ரோமிலிருந்து மக்கா வந்து சேர்ந்ததிலிருந்து அயராது உழைத்துத் திரட்டிய அத்தனை செல்வங்களையும் ஒரு நொடியில் உதறித் தள்ளிவிட்டு, அல்லாஹ்வின் பாதையில் மதீனாவை நோக்கி நேர்மையோடும் நெஞ்சுரத்தோடும் வீறு நடை போட்டவரைப் பற்றி, அங்கே மதீனாவில் அல்லாஹ்வின் தூதருக்கு அழகிய அத்தியாயம் அருளப்பட்டுக் கொண்டிருந்தது!

அவர்தான் பாரசீகத்தில் ராஜகுமாரனாகப் பிறந்து, ரோமாபுரியில் அடிமையாக வளர்ந்து, மக்காவில் மிகப்பெரும் வணிகராகி, தற்போது தன்  செல்வத்தையெல்லாம் அல்லாஹ்வுக்காக துச்சமெனத் தூக்கி எறிந்து விட்டு, மதீனா முனவ்வராவை நோக்கி வீசிய கையும் வெறும் கையுமாக ஆனால், இதயமெல்லாம் இறைநேசத்துடன் பயணித்துக் கொண்டிருக்கும் சுஹைப் பின் ஸினான் அர்-ரூமி (ரலி).

"அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி, தம்மையே விற்று விடுவோரும் மனிதர்களில் உள்ளனர். அல்லாஹ் (அத்தகைய) அடியார்களிடம் மிகப் பெரும் கருணை கொண்டவன்!" (*)

இதுதான் எல்லைகளை எல்லாம் கடந்த பாக்கியம்!

தன்னுயிர் பிரியும் 'சகராத்' உடைய பெரும் வேதனையிலிருந்து விலக்கப்படுவதை விட,

மண்ணறையின் கடுமையான நெருக்குதலிலிருந்து காக்கப்படுவதை விட,

எரிதழல் நரகின் கொடிய தண்டனையில் இருந்து விடுதலை பெறுவதை விட,

சுகந்தரும் சொர்ண பூமியாம் சுவர்க்கத்தின் சோலைகளில் மாளிகைகள் கிடைப்பதை விட,

ஆங்கே, கற்பனைக் கெட்டாத அத்தனை இன்பங்களையும் அனுபவித்து மகிழ்வதை விட,

மேலும் இவை அல்லாத எல்லாவற்றையும் விட,  தன்னை அணுவணுவாகப் படைத்தவனின் தன் நேசர்கள் மீது கொண்ட "திருப்தி" எனும் திருப் பொருத்தம் அருளப்படுவதே பாக்கியங்களில் எல்லாம் மிகப்பெரும் பாக்கியமாகும்!

அதுதான் அல்லாஹ்வின் 'ரிள்வான்!' அதுதான் பேறுகளில் எல்லாம் மிகப்பெரும் பேறாகும்!

அந்தப் பெறுதற்கரிய பெரும் பாக்கியத்தை, தம் தோழர்களுக்குப் பெற்றுத்தந்தவர் யார்?

எவர் வரவால் இந்த உலகம் எல்லாம் சிறந்ததோ,
எவர் வரவால் அந்த உள்ளம் எல்லாம் மகிழ்ந்ததோ,

அவர்தான்!

அவருக்கு எழுதவும் தெரியாது! படிக்கவும் தெரியாது!

எனினும், சூழலை சுவர்க்கமாக்க, ஏற்றமிகு நபி எழுந்து வந்தார்!

அவர் நின்று பேசினார். எல்லா இலக்கியங்களையும் அது விஞ்சி நின்றது!

அவருக்கு அருளப்பட்டதை ஓதிக்காட்டினார். அதுபோன்ற ஒருவரியை இதுவரை

எவனாலும் எழுத முடியவில்லை!

அவர் பேசிய மொழியெல்லாம் வழியாகவும்
அவர் காட்டிய வழியெல்லாம் வாழ்வாகவும் ஆகிப்போனது!

மொத்தத்தில்,

எவ்வழி எல்லாம் நல்வழியோ இவ்வுலகில்,
அவ்வழி எல்லாம் நபிவழியாய் நிலைத்து நின்றது!

இனிய தோழர்கள் கடந்து சென்ற பாதையெல்லாம் இறைவழியாய் எழுந்து நின்றது!

அது அறவழி! அதுதான் அல்லாஹ்வின் வழி !

அண்ணலாரின் பயிற்சிப் பாசறை ஒரு சாதாரணமான பள்ளிக்கூடமல்ல; அது ஒரு பல்கலைக்கழகம் என்று பார்த்தோம்.

அந்த இறையருள் மிகுந்த இனிய தூதரின் தூதுத்துவப் பயிற்சிக்கூடம், சாதாரண பல்கலைக் கழகமுமல்ல!

கண்ணியத்தூதர் போதிப்பதற்காக கம்பீரமாக நின்ற அது ஒரு "பன்னாட்டுப் பல்கலைக்கழகம்!"

அங்கே, அபூபக்கர், உமர், உதுமான், அலீய், தல்ஹா, ஜுபைர் போன்ற மக்காவின் மைந்தர்களும்

அபூதர், அனஸ் ஆகிய கிஃபாரி கோத்திரத்தாரும்

அபூஹுரைரா, அபூதுஃபைல் போன்ற அவ்ஸ் குலத்தவரும்

அபூமூஸா அஷ்அரீ, முஆத் பின் ஜபல் போன்ற யமன் நாட்டினரும்

தம்மாத் இப்னு தல்பா போன்ற அஸ்துக் குலத்தவரும்

கப்பாப் இப்னு அல்அரத் போன்ற பனூ தமீம் கோத்திரத்தாரும்

முன்கித் பின் ஹப்பான், முன்திர் இப்னு ஆயித் போன்ற பஹ்ரைன் தேசத்தவரும்

உபைத் மற்றும் ஜஃபர் போன்ற ஓமன் நாட்டவரும்

சல்மான் அல் ஃபார்ஸி போன்ற பாரசீக தேசத்தவரும்

பிலால் பின் ரபாஹ் போன்ற அபிசீனிய நாட்டினரும்

ஃபைரஜ் போன்ற தைலமா பகுதியினரும்

சன்ஜித் போன்ற ஈரானியரும்

ஃபர்வா இப்னு அம்ர் போன்ற சிரியா தேசத்தவரும்

மேலும், சுஹைப் பின் ஸினான் போன்ற ரோம் தேசத்தவரும்

இப்படிப் பலதரப்பட்ட குலத்தவரும் பலதரப்பட்ட இனத்தவரும் பலதரப்பட்ட நாட்டினரும் அல்லாஹ்வின் தூதரின் பன்னாட்டுப் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்து பயிற்சி பெற்றார்கள். பாடம் கற்றார்கள்!

இவர்களே, மார்க்கத்தை எத்திவைக்கும் மகிமையாளர்களாக, அநீதிகளை எதிர்த்துப் போராடும் அறப்போர் வீரர்களாக,ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் அறிஞர் பெருமக்களாக, சென்றவிடமெல்லாம் வாகை சூடும் வெற்றிப் படைத்தளபதிகளாக, அமைதிப் பணிபுரியும் அருங்குணம் கொண்டவர்களாக உருவெடுத்தார்கள். தங்கள் செயலின் அழகால் மிளிர்ந்தார்கள்!

இப்படி அறிவும் ஆற்றலும் அமைந்தவர்கள் மட்டுமல்ல! உண்மையும் விசுவாசமும் உடையவர்கள் மட்டுமல்ல! ஏற்றுகொண்ட கொள்கைக்காக தங்கள் இன்னுயிரையும் தயங்காது எடுத்து வீசிய தியாக சீலர்கள் அவர்கள்! இந்த உத்தம சீலர்களின் உன்னத வரிசையில் ஒருவர்தாம் நம் சுஹைப் பின் ஸினான் அர்-ரூமி (ரலி) அவர்கள்.

சுஹைப் பின் ஸினான்(ரலி) மெசபடோமியாவில் பிறந்தவர். பாரசீகப் பேரரசின் ஆளுநரான ஸினானின் செல்லப் பிள்ளை!

தந்தை ஸினான் 'நுமைர்' எனும் அரபுக் கோத்திரத்தைச் சேர்ந்தவர். சுஹைப் (ரலி) அரபித் தந்தைக்கு பாரசீகத்தில் பிறந்த ராஜகுமாரன்!

எனினும், ரோமர்களின் ஒரு படையெடுப்பில் கைது செய்யப்பட்டு விதிவசத்தால் அடிமையாக ரோமாபுரியில் வளர்ந்தவர்!

கிரேக்க மொழி பேசியதாலும் சிவந்த தலைமுடியும் வெளிர் நிறமும் அந்நியமான அரபி உச்சரிப்பும் அசல் வெள்ளைக்காரனாகவே, மக்காவின் மக்களுக்கு அவரை அடையாளம் காட்டியதால் "சுஹைப் அர்-ரூமி (ரோமாபுரிக்காரன்)" என்றே அந்த மக்களால் அவர் அழைக்கப்பட்டார்!

கிரேக்கர்களிலேயே முதன்முதலாக, இஸ்லாத்தை வாழ்வு நெறியாக வலிந்து ஏற்றிக் கொண்டதால், 'கிரேக்க நாட்டின் முதற்கனி' என்று இவரை வர்ணித்தார்கள் எல்லோரும் போற்றுகின்ற இனிய நபியவர்கள்!

ஒருவழியாகக் கொடுமையாளர்களிடமிருந்து தப்பித்து வந்து, புனித மதீனா நகருக்கு வெளியே குபா பள்ளியில் தங்கி இருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களை ஆரத்தழுவி, அவர் பேச வாய் திறக்குமுன் பெருமானார் (ஸல்)அவர்கள், 'நீர் நல்ல வெகுமதியான வாணிபம் செய்து வந்துள்ளீர் அபு எஹ்யாவே' என்று மூன்றுமுறை அழுத்தமாகச் சொன்னபிறகு,அவர் குறித்து அருளப்பட்ட அல்லாஹ்வின் பாக்கியமிகு வசனங்களை அவருக்கு ஓதிக் காட்டினார்கள். அவர் பொருட்டு அருள்மறையில் ஒரு வசனமே அருளப்பட்டது குறித்து அவர் மெய்சிலிர்த்து நின்றார்! அல்லாஹ்வுக்கு இனிது நன்றி கூறினார்!

தன்னந்தனியாகப் பாலைவெளியை நடந்தே கடந்து வந்ததில் மிகவும் களைத்துப் போயிருந்தார் சுஹைப் பின் ஸினான் (ரலி).

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், சுஹைப் பின் ஸினான் (ரலி) யை உணவுண்டு ஓய்வெடுக்கச் சொன்னதால், அவர் ரொட்டியும் பேரீத்தையும் வைத்து உணவுண்ணத் தொடங்கினார்.

வாழ்வின் சோதனைகள் கவலை எனும் இருளை அள்ளி வீசும்போது நமக்கு நகைச்சுவைதானே சற்றே ஒளியேற்றி வைக்கிறது! 

அதுவும், முத்திரைத் தூதர் முஹம்மது நபிக்கு முகத்தில் புன்னகையும் அகத்தில் நகைச்சுவை உணர்வும் மெல்லிய கீற்றாக எப்போதுமல்லவா இலங்கிக் கொண்டே இருக்கும்!

நண்பரைக் கண்ட மகிழ்ச்சியில் அவரிடம் நகைச்சுவையாக உரையாடத் தொடங்கினார்கள் நாயகம் (ஸல்) அவர்கள். சுஹைப் பின் ஸினான் (ரலி)யின் ஒரு கண் வெப்பத்தால் வீங்கி இருப்பதைக் கண்ட பெருமானார் (ஸல்)அவரிடம் சிரித்துக்கொண்டே "கண் வீங்கியிருக்கிறதே! எப்படி நீ சாப்பிடுகிறாய் சுஹைப்?" என்றார்கள் வேடிக்கையாக!

அல்லாஹ்வின் தூதர் தன்னிடம் வேடிக்கையாகப் பேசுகிறார்கள் என்பதை விளங்கிக் கொண்ட சுஹைப் பின் ஸினான் (ரலி)யும் "அதனால் என்ன! நன்றாக இருக்கும் மற்றொரு கண்ணின் உதவி கொண்டு, நான் வாயால்தானே உண்ணுகிறேன் அல்லாஹ்வின் தூதரே!" என்றார் அவரும் வேடிக்கையாக!

சுஹைபின் இந்த சாமர்த்தியமான பதில் கேட்டு மனமகிழ்ந்து சிரித்தார்கள் சிரிப்பழகர் நம் செம்மல் நபி நாயகம் அவர்கள். (**)

அங்கு நான்கு நாட்கள் தங்கியிருந்து, மஸ்ஜித் தக்வா (இறை அச்சத்தால் உருவாக்கப்பட்ட பள்ளி) என்று குர்ஆன் கூறும் குபா பள்ளியை நிர்மாணிப்பதில் அல்லாஹ்வின் தூதருடன் சேர்ந்து சுஹைப் (ரலி) யும் பெரும் பங்கு எடுத்துகொண்டார்.(***)

அரபிகளில் முதல் முஸ்லிம் நான்!

அபிசீனியர்களில் முதல் முஸ்லிம் பிலால் பின் ரபாஹ்!

பாரசீகர்களில் முதல் முஸ்லிம் சல்மான் அல் ஃபார்ஸி!

ரோமர்களில் முதல் முஸ்லிம் சுஹைப் பின் ஸினான்! என்று அருளினார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், சுஹைப் பின் ஸினான் (ரலி) அவர்கள் வள்ளலாகி, தன் செல்வமெல்லாம் வறியோர்க்கு வாரித்தருகிறார் என அறிந்து, சுஹைப் (ரலி) உடைய தாராளத் தன்மையை மிகவும் பாராட்டுபவராக இருந்தார்கள்.

அதுமட்டுமின்றி, இறக்கும் தருவாயில், அடுத்த கலீஃபா தேர்ந்தெடுக்கப்படும்வரை மஸ்ஜித் நபவீயின் இமாமாக சுஹைப் பின் ஸினான் (ரலி) தான் பணியாற்ற வேண்டும் என்றும் மட்டுமல்லாது, தன் ஜனாஸா தொழுகையையும் சுஹைப் பின் ஸினான் (ரலி) தான் முன்னின்று தொழவைக்க வேண்டும் என்றும் தன் இறுதி நேரமதில் உறுதியுடன் நியமித்தார்கள்! 

எத்தகைய  உன்னதமான உயர்ந்த தகுதி அது!

மரணம் தன் கொடுமையை இழந்து, மகிமை மிகும் நபித் தோழர்களின் மறுமை வெற்றிக்கான மகத்தான பாதையாக அதனை மாற்றிக் கொடுத்தது!

o o o 0 o o o

(*) அத்தியாயம்: அல் பகரா: 207

(**) ஆதாரம்:அல்-ஹாக்கிம். அறிவிப்பு: சுஹைப் பின் ஸினான் அர்-ரூமி (ரலி)

(***) அத்தியாயம்: அத் தவ்பா: 108
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
இக்பால் M.ஸாலிஹ்

14 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

எவ்வழி எல்லாம் நல்வழியோ இவ்வுலகில்,
அவ்வழி எல்லாம் நபிவழியாய் நிலைத்து நின்றது!
Allahu Akbar kabeera

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

நபித் தோழர்களின் உன்னதமான, உயர்வான பற்று சிலிர்க்க வைக்கிறத்.

மற்றுமொரு முத்தாய்ப்பான அத்தியாயம்.

ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//எவ்வழி எல்லாம் நல்வழியோ இவ்வுலகில்,
அவ்வழி எல்லாம் நபிவழியாய் நிலைத்து நின்றது!//

ஆம் அதுவே “பன்னாட்டு பல்கலைக் கழகம்” போற்றிய நேர்வழியாகும் !

இதுவே நம் வழியாக இறுதி மூச்சு இருக்கும்வரை நிலைக்கட்டும் இன்ஷா அல்லாஹ் !

வர்ணனையில் நம்மை வலைத்துப் போடும் தொடர் !

sabeer.abushahruk said...

ஒரே ஒரு நகைச்சுவைத் துணுக்கை வைத்து ஓர் அத்தியாயமே எழுதும் அளவிற்கு

மூட்டை மூட்டையாய்
உன்னிடம்
மொழி இருக்கிறது

விழியுள்ள எங்களுக்கு
வாசித்து ரசிக்க
வேட்டையோ வேட்டை

தொடரட்டும்
தமிழில் இஸ்லாத்தின்
ராஜபாட்டை!

Shameed said...

நகை சுவையை வைத்து இஸ்லாத்தையும் வீரத்தையும் சொல்லும் விதம் அருமை

Yasir said...

அந்த காலத்தில் நம் கண்ணிய நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்ததை சம்பவங்களை அழகு தமிழை கொண்டு அழகுபடுத்தி படிப்பவர் மனங்களிலெல்லாம் பரசவத்தை ஏற்படுத்துகின்றது..உங்கள் தொடர்

ZAKIR HUSSAIN said...

இத்தனை விசயத்தையும் எப்படி ஞாபகமா எழுதுறே...

Unknown said...

தொடர் வாசிக்க,,,,,,, வாசிக்க,,,, வசந்தமான நிகழ்வுகள். சஹாபாக்களின் சரித்திரம் சிந்தனைகளின் பாத்திரம்
எழுத்துகள் அணிவகுக்க
நகைசுவை மினுமினுக்க
தொடரட்டும் நபிமணியும் நகைசுவையும்
,,,,,,,,,,,,,,
இம்ரான்.M.யூஸுப்

KALAM SHAICK ABDUL KADER said...

வரலாறு என்றால் சிலருக்குக் கைப்பு; ஆனால், வரலாற்றின் ஓர் ஏட்டை வண்ணத் தமிழ்த் தேன் தடவி, வருடும் வர்ணனைகளால் குழைத்து எழுதும் உங்களின் திறமை எனக்கு வியப்பு!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பழமையை புதுமையாக்கிய அழகு தமிழ் வர்ணனை!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். இன்ப அமுதம் அள்ளித்தெளித்த அற்புத காவியம். அல்லாஹ் போதுமானவன்.

Ebrahim Ansari said...

இக்பால் அவர்களின் ஆக்கங்கள் கவிதையா? கட்டுரையா?
வரலாறு வாழ்த்துப்பாவாக வாசிக்கப்படுவது இங்கேதான்
நிகழ்ச்சிகள் நெஞ்சார்ந்த தமிழில் வர்ணிக்கப்படுவதும் இங்கேதான்
மார்க்க விஷயங்கள் தங்கச்சுரங்கமாக தென்படுவதும் இங்கேதான்.

அலாவுதீன்.S. said...

நபித்தோழர்களின்(ரலி) உன்னதமான, அழகான வாழ்க்கை நிகழ்வுகள்!
அழகிய எழுத்து நடையில்!

வாழ்த்துக்கள்! சகோ. இக்பால்!

Iqbal M. Salih said...

மரியாதைக்குரிய சகோதரி ஆமினா அவர்களுக்கும் மதிப்பிற்குரிய டாக்டர் இ.அ.காக்கா அவர்களுக்கும்

அன்பின் சகோதரர்கள்: அலாவுதீன், அப்துல்லத்தீஃப், அபுஇப்ராஹீம், இம்ரான், பிறவிக்கவிஞர் கலாம், தஸ்தகீர், சபீர், சாவண்ணா, யாசிர், ஜாகிர், ஜஃபர் ஸாதிக் ஆகியோருக்கும் நன்றிகள்.

ஜாகிர்: இத்தனை விசயத்தையும் எப்படி ஞாபகமா எழுதுறே...

ஏன்? நீ மட்டும் என்ன குறைச்சல்?
வகுப்பறையில் அமர்ந்துகொண்டே அத்தனைப் புதுப்பாடல்களையும் அட்சரம் பிசகாமல் பாடுவாயே!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு