Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேற்று ! இன்று ! நாளை ! - தொடர் -17 22

அதிரைநிருபர் பதிப்பகம் | November 07, 2013 | , , , , , ,

வேறு வழியின்றி, இந்த அத்தியாயத்தை முக்கியத்துவம் கருதி, ஒரு பெரிய பீடிகையுடன் தொடங்க வேண்டி இருக்கிறது. 

உலகில் மனிதன் தோன்றிய போது அவன் கூட்டம் கூட்டமாக சேர்ந்து வாழ ஆரம்பித்தான். பின்னர் இந்தக் கூட்டத்துக்கு ஒரு தலைவன் தேவைப்பட்டான். அந்தத் தலைவன் பின்னர் அதிகாரங்களை குவித்துக் கொண்டு தன்னை மன்னராக மாற்றிக் கொண்டான். இதன் பரிணாம வளர்ச்சியாக அரசுகள் தோன்றின. அவ்வரசுகள் அன்போடும் நடத்தப் பட்டன சர்வாதிகார முறையிலும் கொடுங்கோல் முறையிலும்  நடத்தப் பட்டன. நாகரிகம் வளர்ந்து வளர்ந்து மெல்ல மெல்ல ஜனநாயக முறைகள் உருவாயின. மக்களை ஆள்வோரை மக்களே தேர்ந்தெடுத்து தங்களை ஆள வைத்தனர். 

உலகில் உள்ள ஜனநாயக நாடுகளில் முதன்மையான நாடாகக் கருதப் படுவது இந்திய ஜனநாயகம் ஆகும். வெள்ளையர்கள் வெளியேறிய பின் மக்களின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆளத் தலைப்பட்டனர். இதற்காக தேர்தல் முறை வந்தது.  இந்த தேர்தல் நடை முறை பல பரிணாம வளர்ச்சிகளைப் பெற்று – அதாவது ஒவ்வொரு கட்சிக்கும் வழங்கப் பட்ட சின்னங்கள் பொறித்த பெட்டிகளில் மக்கள் வாக்களிப்பதில் தொடங்கி தற்போதுள்ள மின்னணு முறை வரை வந்துவிட்டது. 

பிரிக்கப் படாத மொழிவாரி மாநிலங்கள் ஒன்றாக இருந்த பொது, அரசுக்கு வரிகட்டிய இரசீது வைத்து இருந்தவர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை இருந்ததாம். பின்னர்,  பதவிக்கு வர ஆசைப் படும் வேட்பாளரிடம்  அரிசி,  பருப்பு,  பணம் முதலியவற்றை வாங்கிக் கொண்டு வாக்குச் சீட்டுகளில் அவர்களின் சின்னத்தில்  முத்திரையிட்டு மொத்தமாக அவர்களிடமே கொடுத்த பின்னர் வேட்பாளர்கள் தங்களின் பெட்டியில் தாங்களே போட்டுக் கொண்ட காலமும் இருந்ததாம்.   எல்லாக்காலத்திலும்  வாக்குரிமையை விற்றவர்கள் இருந்தே இருக்கின்றனர். இன்றோ நாம் சொல்லவே வேண்டாம். 

சிறுகச் சிறுக பெருகிக் கொண்டே வந்த அரசியல் கட்சிகள் இன்று பழத்தட்டில் மொய்க்கும் ஈக்களின் கூட்டம் போல பெருகிவிட்டன. நினைத்தவர்கள் ஒரு கட்சியை ஆரம்பித்து விடலாம். தேவை ஒரு லெட்டர் பேடு மட்டுமே. நெல்லிக் காய் மூட்டையை அவிழ்த்து விட்டால் கூட அவற்றை எண்ணி விடலாம் ஆனால் இந்தியாவில் இன்று இருக்கும் அரசியல் கட்சிகளை மட்டும் எண்ணி விட முடியாது.  ஒவ்வொரு சாதிகளும் அந்த சாதிகளின் உட்பிரிவுகளும் கூட தங்களுக்கென்று அரசியல் கட்சிகளை உருவாக்கிக் கொண்டுள்ளன. தேர்தல்களிலும் நின்று பதினேழு வாக்குகள் வாங்குகின்றன. 

நீண்ட நாட்களாக பேச்சுத் துணைக்குக் கூட ஆள் இல்லாமல்  தான் ஒருவன் மட்டுமே இருந்து நடத்திக் கொண்டிருந்த சுப்ரமணியம் சுவாமி, கட்சியைக் கலைத்து விட்டு பாரதீய ஜனதாக் கட்சியில் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டார். பாரி வேந்தர் என்று ஒருவர் ஓர் கட்சியை வைத்துள்ளார். கொங்கு வேளாளர் என்று ஒரு கட்சி; சங்கு பொறுக்குபவர்களுக்கு என்று ஒரு கட்சி; பனைமரம் ஏறுவோருக்கும் ஒரு கட்சி; பங்கு வர்த்தகம் செய்வோருக்கும் ஒரு கட்சி.  சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் மட்டுமே இருபதுக்கும் மேலான கட்சிகளை வைத்து இருக்கிறார்கள். இவர்களில்  ஒரே கட்சியில் இருக்கும் இருவர் வெளியூருக்கு ஒன்று சேர்ந்து பஸ் பயணம் பண்ண நேர்ந்தால் தனக்கு ஜன்னல் ஓரம் அமரும் சீட் தரவில்லை என்று அடுத்தவர் மீது கோபித்துக் கொண்டு மற்றவர் இன்னொரு  கட்சியை ஆரம்பித்து விடுகிறார்.  

அது மட்டுமல்லாமல் ஜனநாயகம் என்கிற பெயரில் சட்டமன்ற பாராளுமன்றத்துக்கு செல்வதற்கு தகுதி இல்லாதவர்கள் எல்லோரும் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்று விடுகிறார்கள். திரைப்பட நடிகைகளான வைஜெயந்தி மாலா, ஜெயப்பிரதா, விஜயசாந்தி ஆகியோரும் எஸ் எஸ் சந்திரன், ஐசரி வேலன்  போன்ற காமெடியன்களும் இரா செழியன் , ஜார்ஜ் பெர்னாண்டஸ், குருதாஸ் குப்தா, சோமநாத் சட்டர்ஜி போன்ற அரசியல் மேதைகளுடன் ஒரே நிலையில் பாராளுமன்றத்தில் , சமமாக அதே அந்தஸ்துடன் அமர வைத்தது ஜனநாயகம். எஸ். வி.  சேகர் என்கிற காமெடி நடிகர் தற்போது ஏழாவது முறையாக கட்சி மாறியதை ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. யார் சொல்ல முடியும்? இடையைக் காட்டி இடைத் தேர்தலில் கவர்ச்சி நடிகைகள் போட்டியிட்டால் அவரை எதிர்த்து சொல்வேந்தர் சுகிசிவம்  நின்றிருந்தாலும் அவருக்கு ஜாமீன் தொகை கிடைக்காது. “கவர்”ச்சீ என்றா சொல்லப் போகிறார்கள்? அந்த நடிகையும் சட்டமன்றத்தில் அமர்வார். அவருக்கு முன்வரிசையில்  இருக்கை ஒதுக்கப்படலாம். இதுதான் ஜனநாயகம். 

ஊரிலேயே பெரிய அடியாள் , தாதா , பத்து கொலைகள் செய்தவர், முகத்திலே நாலு அரிவாள் வெட்டுத் தழும்பு உடையவர்  பல கிரிமினல்  வழக்குகளை தனக்குப் பின்னால் வைத்திருப்பவர் ஆகியோரால்  ,  தங்களின் பெயருக்குப் பின்னால்  பல்கலைக் கழகங்களில் பெற்ற  பட்டங்களை போட்டு வைத்திருப்பவர்கள் மண்ணைக்  கவ்வுகின்றனர்.  மக்கள் தொண்டர் காமராசர் ஒரு மாணவரால் தோற்கடிக்கப் பட்டார். பேரறிஞர் அண்ணா ஒரு பேருந்து முதலாளியால் தோற்கடிக்கப் பட்டார்.    பணநாயகத்தின் முன் ஜனநாயகம் படுத்து விடுகிறது. 

அது போகட்டும். தேர்ந்தெடுக்கப் பட்டு சட்ட மன்ற பாராளுமன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப் படுகிற எம்பிக்களும் எம் எல் ஏக்களும் தங்களுடைய கடமையை ஒழுங்காக செய்கிறார்களா? குறைந்த பட்சம் கூச்சல் போடாமல் இருக்கிறார்களா? அவை நடவடிக்கைகளின்போது  முஷ்டியை மடக்காமல் இருக்கிறார்களா? உதட்டைத் துருத்தாமல் இருக்கிறார்களா? பெண்களே தங்களின் தொடையைத்தட்டி சவால் விடுகிறார்கள். இந்தியப் பண்பாடு என்று நாம் பெருமைப் பட்டுக்கொள்ளும் முன்பு நமது பாராளுமன்றக் கூட்டத்தின் ஒரு பகுதியைப் பார்த்தால் இந்தியப் பண்பாடு தற்கொலை செய்து கொள்ளும். அடிக்கடி முடக்கிப் போடப்படும் இடம் பாராளுமன்றம் , அடிக்கடி எதிர்க் கட்சிகளை குண்டு கட்டாக கட்டி வெளியேற்றும்  இடம் சட்ட மன்றம் என்பதும்  அரசியலில் அன்றாட நிகழ்வாகிவிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட  பலர் இந்த அவைகளுக்கு வரவே அஞ்சுகிறார்கள். தனிநபர் தாக்குதலுக்கு அஞ்சி ,  தாழ்வாரம் வரை வந்து  கைஎழுத்துப் போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் தள்ளு வண்டியைத் தள்ளச் சொல்லி ஓடும் தானைத் தலைவர்கள் ஏராளம். கடந்த காலத்தில் புரட்சித்தலைவர் என்றும் புரட்சித் தலைவி என்றும்  புகழப் பட்டவர்களே  இப்படித் தான் செய்தார்கள். இன்றைய எதிர்க் கட்சித்தலைவர் அவைக்கு வந்து அநேக நாட்கள் ஆகிவிட்டன. 

இந்த அவைகள் கூட்டப் படுவதற்கு எவ்வளவு செலவுகள், எவ்வளவு சம்பளங்கள், செலவுகள் அலவன்சுகள்? எல்லாம் நாட்டு மக்களின் தலையில்.

பல நேரங்களில் தேர்தலின் போது, சாதி மத இனக் கலவரங்கள் தூண்டிவிடப் பட்டு பல அப்பாவிகளின் உயிர்கள் பலிகொள்ளப் படுகின்றன. இவற்றிற்குக் காரணமான அரசியல்வாதிகள் தங்களின் குடும்பத்துடன் மகிழ்வாக பத்திரமாக பாதுகாப்பாக வாழ்வார்களாம். ஆனால் தெருக்  கோடிகளிலே , சாக்கடை வாசத்திலே, அதில் மொய்க்கும் ஈக்களின் கூட்டத்திலே, உழைக்கும் வர்க்கம் உழன்று  வாழ்வார்களாம்; உயிரையும் விடுவார்களாம். தேர்தலுக்காக நடைபெறும் கலவரங்களில் தங்களின் கணவன்மார்களை இழந்த கைம்பெண்கள் ஒருபுறம்; அதற்குக் காரணமானவர்களோ  பஞ்சணை மெத்தையில் மறுபுறம். சமுதாயத்தில் கூட  ஒரே ஊரில் பிரிவினைகள், கசப்புணர்வுகள் தோன்றி விருட்சமாக வளர்கின்றன. இப்படிப் பல அவலங்களுக்கு வித்திடுகின்ற இன்றைய ஜனநாயக தேர்தல் அமைப்பில் ஒரு மாற்றம் வரவேண்டுமென்று ஒரு கருத்து நிலவுகிறது. ஜனநாயகம் என்கிற கட கட லொட  லொட என்றும் கப் கப்  குப்   குப் என்றும் புகைவிடும் வண்டியை மாற்றிவிட்டு புதிய ஒரு குளிர்சாதன வசதியுடன்  மெட்ரோ ரயில் ஓட வேண்டுமென்று ஒரு முறையை முன்னெடுக்கிறார்கள். அதுவே விகிதாச்சார முறை.

இந்த முறையின் முதலாவதும் அடிப்படையுமான வாதம் என்ன வென்றால் ஒரு தொகுதி மற்றும் ஊரின்  நலனை கவனிக்க பல்வேறு பெயர்களில் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். நகராட்சியின் வார்டு உறுப்பினர் தொடங்கி, ஒன்றியத்தலைவர் , நகராட்சித் தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர், பஞ்சாயத்துத் தலைவர், மாநகராட்சி கவுன்சிலர்கள், மாநகராட்சித் தலைவர் எம் . எல். ஏ, எம். பி ஆகிய பலர் இப்போதுள்ள அமைப்பு முறையில் இருக்கிறார்கள். இவ்வளவு பேருக்கும் அரசின் பணம்  கோடிக்கணக்கில் செலவாகிறது. ஒரு குறிப்பிட்ட தொகுதி அல்லது ஊரின் நலனை கவனிக்க இவ்வளவு ஆட்களும் பதவிகளும் தேவை இல்லை என்பது அடிப்படை. மேலும்  ஒரு பதவிக்காக போட்டி இடுவோரின் எண்ணிக்கையும் அவர்கள் செய்யும் செலவையும் கணக்கிட்டால் தலை சுற்றும். இதற்காக செலவிடும் பணம்தான் ஊழலின் ஊற்றுக் கண்ணைத் திறக்கிறது. 

எம் எல் ஏ  மற்றும் எம் பி ஆகியோரை இந்த உள்ளூர் நலப் பணிகளின் பொறுப்பில் இருந்து விடுபட வைக்கலாம். அந்தப் பணியை உள்ளூராட்சி மன்றங்கள் கவனிக்கச் செய்யலாம். காரணம் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் முக்கியப் பணியே  சட்டங்களை உருவாக்குவது, நிறைவேற்றுவது, திருத்துவது, மாற்றுவது ஆகியவைதான். இந்தப் பணி நாடு முழுதுக்குமாக தேவைப்படுவதால் ஒரு குறிப்பிட்ட தொகுதியின் உறுப்பினராக இருந்துகொண்டு இதைச் செய்ய வேண்டியதில்லை. சுருக்கமாக சொல்லப் போனால் இந்த சட்ட மன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கென்று இந்த விகிதாச்சார முறையில்  எந்த தொகுதியும் சொந்தம்  இல்லை. அவர்கள் ஒரு ஒட்டுமொத்த பாராளுமன்ற அல்லது சட்ட மன்ற உறுப்பினர்கள் அவ்வளவே.

இந்த முறையின் இதர அம்சங்கள்:-
  • வாக்களித்த எல்லோருடைய ஓட்டுக்கும் மதிப்பு உண்டாகும் .
  • குறைவாக வாக்குப் பெற்றவர் ஆட்சி செய்யும் முறை ஒழியும் .
  • வாக்களர்களுக்கு இலஞ்சம் கொடுக்கும் முறை ஒழியும்.
  • அரசியல் பிழைத்தோர்கள் அகற்றப் படுவார்கள் .
  • கட்சி மாறும் தன்மை அகற்றப் படும் ; ஒழிக்கப் படும் .
  • சபையில் முறை தவறும் உறுப்பினர் மற்றும் அவரது கட்சித்தலைமை கண்டிக்கப் படும் ; தண்டிக்கப் படும் .
  • தகுதியற்றவர்கள் பாராளுமன்றம் அல்லது சட்டமன்றம் செல்வது தடுக்கப் படும் 
  • தவறு செய்யும் உறுப்பினர்கள் திரும்பப் பெறப படுவார்கள் .
  • வருடக் கணக்கில் நடக்கும் தேர்தல் வழக்குகளுக்குத் தேவை இருக்காது.

மேற்கண்ட பட்டியலில் உள்ளவை எல்லாம் அரசியல் வாதிகளின் தேர்தல் கால வாக்குறுதிகள் போலத் தோன்றுகிறதா? இன்னும் தெளிவு பெற நாம் விவாதிக்கலாமே!

உதாரணமாக, ஒரு தொகுதியில்  A, B, C, D ஆகிய நால்வர் போட்டி இடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இவர்கள் அனைவருக்கும் பதிவான  மொத்த வாக்குகள் 70000 என்றும் வைத்துக் கொள்வோம். இப்படி பதிவான 70,000 வாக்குகளில் 

A  18000
B 16000
C 19000
D 17000

என்கிற அளவில் வாக்களிக்கப் பட்டால் இவர்களில் அதிகம் வாக்குகள் வாங்கிய C தேர்ந்தெடுக்கப் பட்டவராக அறிவிக்கப் படுகிறார்.  தேர்ந்தெடுக்கப் பட்ட C  அவர்களை வேண்டாம் என்று ஒதுக்கியவர்களின் மொத்த எண்ணிக்கை 51000  ஆகும். மைனாரிட்டியாக வாக்கு வாங்கியவர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார். அத்துடன் மற்ற மூன்று வேட்பாளர்களுக்கு அளிக்கப் பட்ட வாக்குகள் பயனற்றவையாக ஆகிவிடுகின்றன. 

நாடு முழுதும் மொத்த தொகுதிகள் 200 என்று வைத்துக் கொண்டால் இந்த 200 தொகுதிகளிலும் இதே நிலைமை இருந்தால் மக்கள் வேண்டாமென்று ஒதுக்கிய கட்சி நாடாளும் . இந்த முறையை மாற்றி , நான்கு கட்சிகளும் நாடு முழுதும் பெரும் வாக்குகளின் எண்ணிககையின் அடிப்படையில் கட்சிக்கு இத்தனை உறுப்பினர்கள் என்று விகிதாசார அடிப்படையில்  பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தால் மைனாரிட்டியாக வாக்கு வாங்கிய கட்சி நாட்டை ஆள முடியாது. 

இதை எப்படி நடைமுறைப் படுத்துவது?

தேர்தல்  ஆணையம் குறிப்பிட்ட ஒரு  தேதியில் நாடு முழுமைக்குமான தேர்தலை அறிவித்துவிட வேண்டும். தேர்தல் தொகுதிகளின் அடிப்படையில் நடைபெறாது. கட்சிகளின் அடிப்படையில் மட்டுமே நடைபெறும். மக்களிடம் தரப்படும் வாக்குச்சீட்டில் அல்லது மின்னணு இயந்திரத்தில் கட்சிகளின் பெயரும் சின்னமுமே இருக்கும். மக்கள் தங்களுக்குப் பிடித்த கட்சிக்கு வாக்கு அளிக்கலாம். மொத்த வாக்குகளில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு வாக்கு என்று கணக்கிடப்பட்டு அதற்கு ஏற்றபடி அந்தந்தக் கட்சிகளுக்கு சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற  சீட்டுகள் தேர்தல் ஆணையத்தால் வழங்கப் படும். ஒரு கட்சிக்கு மொத்தம் பதிவான வாக்குகளில் பத்து சதவீதம் கிடைத்து இருந்தால் மொத்த பாராளுமன்ற இருக்கைகள் இருநூறு என்று வைத்துக் கொண்டால் அதில் பத்து சதவீதமான இருபது இடங்களை அந்தக் கட்சிக்கு தேர்தல் ஆணையம் வழங்கும். 

இதே முறையில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் அவைபெற்ற வாக்குகளின் விகிதாச்சார அடிப்படையில் இருக்கைகள் ஒதுக்கப் படும். அதிக விகிதாச்சார வாக்குக்கள் வாங்கும் கட்சி ஆட்சி அமைக்கும். தேர்தலில் போட்டி இட்டு விகிதாச்சார அடிப்படையில் தாங்கள் கட்சிக்கு கிடைத்த இடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி அரசியல் கட்சிகள் தாங்கள் கட்சிகளின் உறுப்பினர்களாகப் பணியாற்ற வேண்டியவர்களின் பெயர்களை அறிவிக்கும். இப்படி பெயர்கள் அறிவிக்கப்பட குறைந்த பட்ச கல்வித்தகுதி நன்னடத்தைத் தகுதி ஆகியவற்றையும் கட்சிகள் சேர்த்துக் கொள்ளலாம் என்கிற கட்டுப் பாடுகளையும் தேர்தல் ஆணையம் விதிக்கலாம். பதவிக் காலத்தில், ஒழுக்கம் மீறும் உறுப்பினரை கட்சிகள் திரும்பப் பெற்றுக் கொண்டு பதிலாக வேறு உறுப்பினரை நியமிக்கலாம். ஓட்டுனர் உரிமம் வாங்குவதற்கே பத்தாம் வகுப்பு தேர்வு பெற்று இருக்க வேண்டும். ஆனால் இப்போதுள்ள ஜனநாயகத்தில் காதர் பாட்சா என்பவர் கதர் பட்சா என்று கையெழுத்துப் போடத் தெரிந்து இருந்தாலும் பரவா இல்லை. அவர் அமைச்சராகவும் வர இயலும். 

இந்த முறையைப் பின்பற்றும்போது இட ஒதுக்கீடு முறையில் ரிசர்வ் தொகுதி என்று அழைக்கப்படுகிற தலித்களுக்கோ பெண்களுக்கோ என்று தனித் தொகுதிகளை ஒதுக்கத்தேவை இல்லை. தேர்தலில் பங்கேற்று விகிதாச்சார அடிப்படையில் இடங்களைப் பெறும் தனிப்பட்ட கட்சிகள் தாங்களே தலித்துகளுக்கும் பெண்களுக்கும் இடங்களை ஒதுக்கிக் கொடுத்துக் கொள்ள வேண்டும். 

உலகநாடுகள் பல இந்த முறையைப் பின்பற்றுகின்றன. பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான், ரஷ்யா, இஸ்ரேல், ஸ்வீடன் ஆகிய நாடுகளில் இத்தகைய விகிதாச்சார முறைதான் பின்பற்றப்படுகிறது. 

இந்த விகிதாச்சார முறைக்கு இன்னும் ஆதரவாக எடுத்துவைக்கப் படும் கருத்துக்கள். 

1. தனிப்பட்ட அரசியல் கட்சிகளுக்காக மக்களால் போடப்படும் ஓட்டுக்கும் அவர்களுக்கு கிடைக்கும் இடங்களுக்கும் தொடர்பு இல்லை என்கிற தன்மை நீக்கப் படும். உதாரணமாக  1996 தேர்தலில் அ.தி. மு.க வுக்குக் கிடைத்த மொத்த ஓட்டுகளின் சதவீதம்  21.50  ஆகும். ஆனால் இடங்களோ வெறும் நான்குதான்.  இதே கட்சிக்கு 2001 –ல் கிடைத்த வாக்குகளின் சதவீதம்  29.92 ஆனால் இந்த முறை  132 இடங்கள். வெறும் எட்டு சதவீத வாக்குகள் எவ்வளவு வித்தியாசமான எண்ணிக்கை உடைய இடங்களை கொடுத்துள்ளது என்பதை இதை வைத்துப் புரிந்துகொள்ளலாம். அதைவிட ஒரு புள்ளிவிபரம் நம்மை ஆச்சரியப் படுத்தும்.  1967 தேர்தல் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.  இந்த தேர்தலில்  41.38 சதவீதம் வாக்குகள் பெற்ற காங்கிரஸ் கட்சி  50 இடங்கள் மட்டுமே பெற்று ஆட்சியை இழந்தது.  அதைவிடக் குறைவான 40.77 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம்  138 இடங்களைப் பெற்று  ஆட்சியைப்             பிடித்தது. 

2. இப்போதுள்ள தேர்தல் முறையில் ஒருவருக்கு 49 வாக்குகள் கிடக்கிறது என்று வைத்துக் கொண்டால் அவரை எதிர்த்து நின்றவர்  51 வாக்குகள் பெற்றால் பின்னவர் வெற்றி பெறுவார். அப்படியானால் 49 வாக்குகளை அளித்தவர்களுக்கு பிரதிநிதித்துவமே கிடையாது. அவர்களில் பலர் அதிருப்தி அடைந்து எதிர்காலத்தில் வரும் தேர்தலில் விரக்தியுடன் வாக்களிக்காமல் போகலாம். இதனால் ஜனநாயகத்தின் ஆணிவேர் ஆட்டப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலிலும்  இந்தியாவில் சராசரியாக 55 சதவீதம் வாக்குகளே பதிவாகின்றன. நாம் சொல்லும் விகிதாச்சார முறையில் தங்களின் வாக்குரிமைய செலுத்திய ஒவ்வொருவரின் வாக்குக்கும் மதிப்பும் பயனும் இருப்பதால் இன்னும் அதிக வாக்காளர்கள் வாக்களிக்க வரக்கூடும் . இதனால் ஜனநாயகம் வலுவடையும்.

3. தேர்தலில் போட்டியிடும் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்கப் பிடிக்காவிட்டால் 49 ‘O பிரிவின் கீழ் அதைப் பதிவு செய்ய இன்றைய தேதல் சட்டத்தில் இடம் ஏற்படுத்தப் பட்டு இருக்கிறது. இதற்காக ‘பிரிண்ட் அவுட்’ கூட பெற்றுக் கொள்ளும் வசதியை இரண்டு தினங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. விகிதாச்சார முறையுடன் ஓட்டளிக்க விரும்பாத விரும்பாதவர்களின் எண்ணிக்கையும் சேர்ந்தால் மக்கல் மீதான ஜனநாயகம்  மற்றும் அரசியல் கட்சிகளின் உண்மை தாக்கம் வெட்ட வெளிச்சமாகும். உண்மையான பிரதிபலிப்பை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.  

4. விகிதாச்சார முறையில் ஒவ்வொரு கட்சியின் உண்மைச் செல்வாக்கும் தெரிந்து போய்விடுமென்பதால் கூட்டணிகள் அமைப்பதும், பதவி பேரங்களும் நியாயமான முறையில் நடத்த முடியும்.

5. இந்த முறையில் பெறும் வாக்கின் அளவுக்கு பிரதிநிதிகள் அமைவதால் மாநிலங்கள் அவைகளைக் கூட தேவை இல்லை என்று விட்டுவிடலாம். இதனால் பெருமளவில் செலவுகள் குறைய வாய்ப்புண்டு. குறைந்த பட்சம் கூச்சல் குழப்பங்களின் இரண்டாம் எபிசோட் குறையும்.

6. இந்த முறையில் மக்கள் உடைய ஆதரவோ செல்வாக்கோ இல்லாமல் தனி நபர்களால் நடத்தப் படும் அரசியல் கட்சிகள் என்கிற அடையாளங்கள் ஒழிக்கப் பட வழியை ஏற்படுத்தலாம் தேர்தலில் போட்டி இட வேண்டுமானால் பத்து இருபது கோடி ரூபாய் ஜாமீன் தொகையாக கட்ட வேண்டுமென்றும் , தேர்தல் நடந்து முடிந்த த பிறகு இரண்டு மூன்று சதவீதம் வாக்குகள் கூட பெற முடியாத கட்சிகளின் ஜாமீன் தொகை பறிமுதல் செய்யப் படுமென்றும் ஒழுங்குபடுத்தினால்  சரத்குமார் கட்சி போன்ற பெட்டிக்கடை கட்சிகள்  துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று அரசியலில் இருந்து காணாமல் போய்விடும்.     

இவைகள் நமது சிந்தனைக்கே. இன்ஷா அல்லாஹ் சந்திப்போம்! சிந்திப்போம்! தொடரும்....

ஆக்கம்: P. முத்துப் பேட்டை  பகுருதீன் B.Sc.,
உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி

22 Responses So Far:

Unknown said...

என் அன்பு அருமை காககாமார்களே

நான் பெருமைக்காக சொல்லவில்லை . இந்த விகிதாசார சிந்தனை எப்பொழுதுமே என்மனதில் ஒவ்வொரு தேர்தலின்போதும் ஏற்படுவதுண்டு.

இந்த தொகுதி அடிப்படையில் செயல்படுவது ஒரு போலித்தனம் கலந்த முட்டாள்தனமான ஜனநாயகம் என்ற போர்வையில் மக்களின் உணர்வுபூர்வமான வாக்களிப்புக்கு மரியாதையோ மதிப்போ இல்லாத அரசியல் முறையாகும்.

தங்கள்களின் இந்த சிந்தனை ஓட்டம்,, தற்போதைய தேர்தல் ஆணையத்திற்கும், அரசியல் சட்டத்தை உருவாக்குபவர்களுக்கும் போய் சேரவேண்டிய ஒரு அருமையான அரசியல் வரைவாகும்.

போய் சேரவேண்டிய இடத்திற்கு போனால் இந்த சிந்தனை ஓட்டம்
ஒரு அருமையான, கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகாத உண்மையான அர்த்தமுள்ள ஒரு ஜனநாயக அரசியல் ஓட்டுரிமை சட்டத்தை ஏற்ப்படுத்தும்.

இத செவியேர்ப்போர் உண்டா?

அபு ஆசிப்.

Ebrahim Ansari said...

அன்பான தம்பி அபூ ஆசிப் அவர்களே!

இன்கு பதியப் பட்டு இருக்கும் விகிதாச்சாரம் பற்றிய மாற்று தேர்தல் முறை பற்றிய கட்டுரைகள் நானும் நண்பர் பகுருதீன் அவர்களும் கல்லூரி மாணவர்களாக இருந்த போது தினமணியில் அன்றைய ஆசிரியராக இருந்த ஏ. ஏன் சிவராமன் அவர்கள் எழுதினார்கள். அன்று நாங்கள் இதைப் படித்து விவாதித்து இருக்கிறோம்.

அந்த நினைவுகளின் விளைவே இந்தப் பதிவு.

நான் கூறுவது 1969 - 71 ஆம் வருடங்களில் . அன்று முதல் இந்த சிந்தனை விதைக்கப் பட்டு விட்டது.

பல அரசியல் மற்றும் வரலாற்று வல்லுனர்கள் இதைப் பற்றி விவாதமும் நடத்தி இருக்கிறார்கள். ஆனாலும் இதுபற்றிய தொடர்ந்த ஆய்வு மற்றும் நடை முறைகளை மேற்கொள்ள எந்த அரசியல் கட்சியும் முன் வரவில்லை.

காரணம்?

அவர்களுக்கு இன்றுள்ள முறையே வசதி. அதாவது உண்மத்தர்கள் , கிரிமினல்கள் , மொள்ள மாறிகள், முடிச்சவிக்கிகள் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம் செல்வதற்கு இன்றுள்ள முறையே அவர்களுக்கு இலகுவான வழி.

தங்களுக்கு வசதியான சட்டங்களை மட்டும் எல்லா கட்சிகளும் ஆதரிப்பார்கள். மாற்றுக் கருத்துக்களை கண்டுகொள்ள மாட்டார்கள். இது அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் எழுதப் படாத ஒப்பந்தம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அலசல் ! [அரசியல் சாக்கடைக்குள்]

என்ன வாஷிங் பவுடர் யூஸ் பன்றீங்க !?

இப்படி மின்னுறீங்களே இரண்டுபேரும் !?

Ebrahim Ansari said...

//என்ன வாஷிங் பவுடர் யூஸ் பன்றீங்க !?//

ஹஹஹஹஹா - இந்த சிரிப்பு பகுருதீன் உடையது

ஹிஹிஹிஹிஹி - இது என்னுடையது .

ஆனால் இரண்டுபேருமே இல்லத்தலைவிகளிடம் கேட்டே எதையும் சொல்லும் ஜாதி.

கேட்டதில் கிடைத்த பதில் : பொன்வண்டு
தேர்ந்தெடுக்கக் காரணம் : வாளி கொடுக்குறாங்களாம் .


Shameed said...

//A 18000
B 16000
C 19000
D 17000//

இந்த கணக்கு ஜனநாயகத்தின் ஆணி வேறை ஆட்டி அசைத்து பார்த்த கணக்கு

sabeer.abushahruk said...

யபா,

இவ்வளவு இவ்வளவு இவ்வளவு சிக்கலா அரசியல்.

வாசிச்சு முடிச்சு கருத்து போட்றதுக்குள்ள விடிஞ்சிடும்போல இருக்கே.

மாற்று அமைப்பு நல்லாத்தானே இருக்கு!

sabeer.abushahruk said...

//ஒவ்வொரு சாதிகளும் அந்த சாதிகளின் உட்பிரிவுகளும் கூட தங்களுக்கென்று அரசியல் கட்சிகளை உருவாக்கிக் கொண்டுள்ளன. தேர்தல்களிலும் நின்று பதினேழு வாக்குகள் வாங்குகின்றன. //

//பதினேழு வாக்குகள்//

//நீண்ட நாட்களாக பேச்சுத் துணைக்குக் கூட ஆள் இல்லாமல் தான் ஒருவன் மட்டுமே இருந்து நடத்திக் கொண்டிருந்த சுப்ரமணியம் சுவாமி, கட்சியைக் கலைத்து விட்டு பாரதீய ஜனதாக் கட்சியில் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டார். //

//பேச்சுத்துணைக்குக்கூட ஆளில்லாமல்//

//சரத்குமார் கட்சி போன்ற பெட்டிக்கடை கட்சிகள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று அரசியலில் இருந்து காணாமல் போய்விடும்.//

//பெட்டிக்கடை கட்சிகள்//

காக்கா மார்களே,

அஸ்ஸலாமு அலைக்கும்,

முத்துப்பேட்டை ப்ளஸ் அதிராம்பட்டினம் என்றால் நக்கலுக்குச் சொல்லவா வேண்டும்?

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா காக்காஸ்.

Ebrahim Ansari said...

தம்பி சபீர் அவர்களே!

வ அலைக்குமுஸ் சலாம்.

//இடையைக் காட்டி இடைத் தேர்தலில் கவர்ச்சி நடிகைகள் போட்டியிட்டால் அவரை எதிர்த்து சொல்வேந்தர் சுகிசிவம் நின்றிருந்தாலும் அவருக்கு ஜாமீன் தொகை கிடைக்காது. “கவர்”ச்சீ என்றா சொல்லப் போகிறார்கள்?//

இது உங்கள் கண்ணில் படவில்லையா? ஆனால் இது கலப்பற்ற அதிரையின் நக்கல் சரக்கு. சரக்கின் உரிமையாளன் நான் அல்ல. வேறு யார்? நெறியாளரைத்தான் கேட்கவேண்டும்.

இன்று என்ன பின்னூட்டத்தின் விகிதாச்சாரம் குறைவாக இருக்கு? டெஸ்ட் மேட்ச்?

sabeer.abushahruk said...

காக்கா,

வீட்லயும் "தாயுமானவன்". அதான் ட்டயர்ட்.
நான் டெஸ்ட் மாட்ச் ஹைலைட்ஸ் பார்க்கிற ஆளு.

எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு.

இந்த மாநிலங்களவைக்கு ஆக்கபூர்வமான பவர் ஏதும் இருக்கிறதா அல்லது நீங்கள் சொல்வதுபோல் ஜஸ்ட் ரெண்டாம் எப்பிசோட் தானா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இன்டியன் பொலிட்டிக்ஸ் பாடமாக இருப்பதால், வாத்தியாரு எந்திரிச்சு கேள்வி கேட்டுட்டா.. பதில் சொல்ல எல்லோருக்கும்...

பிரஸ் மீட் வைக்கனுமே !

நீங்க ரெடியா ?

அரசியல் எப்படி செய்றதுன்னு ஒருத்தர் கிட்டே கேட்டேன்.... என்னை முறைத்துப் பார்த்துட்டு... அட டா ! இவ்வ்வ்வ்வ்ளோ அப்பாவியே இருக்கியேன்னுட்டு... சொன்னாரூ....

ஒரு பேரு அதுக்கு பெயர் கட்சி, வாப்பிச்சாவோட பத்தாயக் கைலி அதுதான் கொடி, ஒரே தொண்டனாக இருந்த ஒரு தலைவன் (நீதான்), ஒரு மொபைல் கேமரா / வீடியோ கேமரா, நாலுக்குமே பிளாக்கர் ஐடி, இவைகள் இருந்தாலே... நீங்கதான் (அரசியல்) வித்தகர் !

ஊருக்குள்ள அரசியல் பன்னனும்னா இங்கே ஒரு கால் அங்கே ஒரு call போட்டாலே போதும்.. தூள் கிளப்பலாம்..!

ஃபேஸ்புக்கிலிருந்து பரிட்சைக்கு நிறைய கேள்விகள் வருதாம் அதான் எல்லோரும் தீவிரமா மேய்ஞ்சுகிட்டு இருக்காங்க ! :)

sabeer.abushahruk said...

//இடையைக் காட்டி இடைத் தேர்தலில் கவர்ச்சி நடிகைகள் போட்டியிட்டால் //

ரெண்டு ஓட்டு நிச்சயம் காக்கா,

ஒன்னு ஷார்ஜாவ்லேர்ந்தும் மற்றொன்னு கோலாலம்பூர்லேர்ந்தும்.

ஒரு கள்ள ஓட்டு தமாமிலேர்ந்தும் ஒரு ஒளிவு மறைவு ஓட்டு வியட்நாமிலிருந்தும் கேரண்டியா விழும்.

மேற்கொண்டு நெறியாளர் ஒரு செல்லாத ஓட்டு போட்டு தப்பிக்கலாம்.

சவுதி காதர் மட்டும் வீட்டம்மாட்ட பர்மிஷன் கேட்டு கிடைக்காம தேர்தலை புறக்கணிக்கலாம்.

எங்கிட்ட மட்டும் சொல்லுங்க காக்கா... உங்க ஓட்டு யாருக்கு?

(சுகி சிவம் ஒரு லிமிட்டுக்கு மேல போர் காக்கா)

KALAM SHAICK ABDUL KADER said...

அரசியல்வாதிகளுக்கு “போர்” அடிக்காமலும், வீணான வார்த்தைப் போர் செய்யாமால் கண்ணுக்கு விருந்தாக்கிக் கொள்ள “இடையில்” இந்த ”இடைச் செருகல்” என்பதால் யானும் ஓட்டுப் போட்டுவிட்டேன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நடைமுறையில் உள்ள அரசாண்மை சாக்கடை அரசியலை சுத்திகரிக்க அழகு யோசனகள்.
அதன் பின்ணணி கருத்தாடல்களும் அரசியலுக்கு அறுசுவையூட்டுகின்றன.

Unknown said...

//சவுதி காதர் மட்டும் வீட்டம்மாட்ட பர்மிஷன் கேட்டு கிடைக்காம தேர்தலை புறக்கணிக்கலாம்.//

பயந்ததெல்லாம் அந்தக்கால்லாம்

Unknown said...

//முத்துப்பேட்டை ப்ளஸ் அதிராம்பட்டினம் என்றால் நக்கலுக்குச் சொல்லவா வேணும் //

ஒரு மிருகத்தையே வேறொரு மிருகமாக மாற்றிய சாதனைக்கும் ( ஆட்டை கழுதையாக்கிய ) ,

இவ்வுலகில் இன்று சவுதி அரேபியாவில் உள்ளவன் கூட இன்று வரை பார்க்காத மலக்கு மார்களை ( முன்கர் நக்கீர்) பார்த்த வர்கள் உள்ள

ஊருக்கு சொந்தக்காரர்கள் ஆயிற்றே , இவர்களுக்கு சொல்லவா வேணும்.

அபு ஆசிப்.



sabeer.abushahruk said...

//பயந்ததெல்லாம் அந்தக்கால்லாம் //

மெல்ல மெல்ல.

சத்தமாச் சொல்லி மாட்டிக்காதடா

Ebrahim Ansari said...

//இந்த மாநிலங்களவைக்கு ஆக்கபூர்வமான பவர் ஏதும் இருக்கிறதா அல்லது நீங்கள் சொல்வதுபோல் ஜஸ்ட் ரெண்டாம் எப்பிசோட் தானா?//

அன்புள்ள தம்பி சபீர் அவர்கள் கேட்டிருக்கும் கேள்வி சிறந்த கேள்வியாகும்.

பதில்:

மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா இந்திய பாராளுமன்றத்தின் 250 உறுப்பினர்கள் கொண்ட மேலவை ஆகும். இவர்களில் 12 பேர் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, தொழில் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களை நியமிக்கப்படுகிறது. இந்த 12 பேரைத் தவிர்த்த மற்றவர்கள் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் அந்தக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும் ஆதரவளிக்கும் மற்ற கட்சிகளின் வாக்குகளைப் பெற்றும் தேர்ந்து எடுக்கப்படுவர். ( அண்மையில் கனிமொழி தேர்ந்தெடுக்கப் பட்டபடி)

இதன் அதிகாரங்கள் மக்களவைக்கு ஈடானதாகவும் மக்களவைக்கென வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை குறைக்காதனவாகவும் கருதப்படுகின்றது. இரு அவைகளினாலும் எதிரொலிக்கும் சர்ச்சைகளுக்கு இரு அவைகளின் கூட்டுக் கூட்ட அமர்வின் மூலம் தீர்வு காணப்படுகின்றது. இவ்வாறு நடைபெறும் கூட்டுக் கூட்டங்களில் மக்களவை மாநிலங்களைவையை விட இரு மடங்கு உறுப்பினர்களை கொண்டதாக இருப்பினும், மாநிலங்களவை உண்மையான நடப்பிலுள்ள (defacto) வீட்டோ அதிகாரங்களை கொண்டதாக கூட்டுக் கூட்டங்களில் கருதப்படுகின்றது.

மக்கள் அவையில் நிறைவேற்றப் படும் மசோதாக்கள் மாநிலங்கள் அவையிலும் வைத்து நிறைவேற்றப் பட்டு குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப் படும்.

மாநிலங்கள் அவை உருவாக்கப் பட்டதன் நோக்கம் அங்கு பொதுத்தேர்தலில் போட்டியிட முடியாத சிறந்த அறிஞர்கள் , வல்லுனர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோருடைய கருத்துக்களையும் கேட்டு முக்கிய விஷயங்களில் முடிவு எடுக்க வேண்டுமென்பதே.

மேலவை என்பது அறிவில் மேலோர் அவை. ஆற்றலில் மேம்பட்டோர் அவை.

ஆனால் இந்த மேலவை இன்று தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப் பட்டு தோற்கடிக்கப்பட்ட வர்கள் , கட்சியின் தலைமையின் குடும்ப உறுப்பினர்கள், கட்சியின் தலைமைக்கு விசுவாசமாக இருப்பவர்கள் , கட்சித்தலைமையை மிரட்டுபவர்கள், கட்சித் தலைமைக்கு உதவும் அடியாட்கள் ஆகியோர் நிரம்பிய இடமாக ஆகிவிட்டது.

இதனால் மேலவை என்கிற அமைப்பின் முக்கிய நோக்கம் பாழ்பட்டுப் போய் இருக்கிறது.
அறிஞர்கள் அமர வேண்டிய அவையில் அடியாட்களே அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இதனால் இரண்டாம் எபிசொட் என்பது சரிதானே!

இதனால் இன்றைய தலைவர் ஹமீது அன்சாரி படும்பாட்டை ஒருமுறை ராஜ்ய சபா நேரடி ஒளிபரப்பை டிடி யில் திறந்து பாருங்கள்.

தமிழ் நாட்டில், இந்த மேலவை வெண்ணிற ஆடை நிர்மலாவைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போனதால் எம்ஜியாரால் கலைக்கப் பட்டது என்பது தனிக்கதை.

அதற்கு முன் எதை எதைக் கலைத்தார்களோ என்பது அவர்களது அந்தரங்கக் கதை.

Ebrahim Ansari said...

//எங்கிட்ட மட்டும் சொல்லுங்க காக்கா... உங்க ஓட்டு யாருக்கு?

(சுகி சிவம் ஒரு லிமிட்டுக்கு மேல போர் காக்கா)//

இரண்டு விஷயத்திலும் நான் உங்கள் கட்சி தம்பி.

அந்த இடை விஷயத்தை இடையில் சொருகியவர் நெறியாளர் என்பதை இந்த நேரத்தில் அவைக்கு தெரிவித்துக் கொள்வதில் ஆனந்தமடைகிறேன்.


Ebrahim Ansari said...

தம்பி அபூ ஆசிப் !

அதிரை & முத்துபேட்டை வாசிகள் இருவருமே நக்கல் செய்வதற்குப் பெயர் பெற்றவர்கள்தான்.

ஆனால் அவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் நக்கல் செய்துகொள்வது இன்னும் நன்றாக இருக்கும்.

முத்துப் பேட்டைக்காரர் ஒருவர் அதிரை வந்தார். பஸ் ஸ்டாண்டில் ஒரு டீக் கடையில் டீ குடிக்கப் போனார். .

ஒரு உறிஞ்சு உறிஞ்சியதும் சொன்னார் " என்னப்பா! அதிராம்பட்டினம் டீ கீரைச்சாறு மாதிரி இருக்கு .:

டீ போட்டவர் அடுத்த டீக்கு கிளாசைக் கழுவிக் கொண்டே சொன்னார் "பத்தியம் இல்லே காக்கா பயப்படாம குடிங்க"

இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒரு அதிரைக் காரர் தனது சொந்தக்கார முத்துப் பேட்டைக் காரரை உடம்பைத் தொட்டுப் பார்த்துக் கேட்டார்

" என்னப்பா உடம்பு சுடுது"

" உம்மா இப்பதான் அடுப்பிலிருந்து இறக்கி வச்சாக"

Shameed said...

வித்தகர்னா என்னங்க வித்தை காட்டுபவரா ? வித்ததை காட்டுபவரா ?

Anonymous said...

யேவ் ! சேட்ஜி! எந்திரிய்யா! வழக்கம் போல உள்ளே போய் தூங்குறது தானே? கால்லே போட்டுருக்குற ஜப்பான் நாட்டு கித்தா செறுப்பே எவனாச்சும் அடிச்சு கிட்டு போயிடப் போறான் !

S.முஹம்மது பாரூக்,அதிராம்பட்டினம்

Yasir said...

அரசியல் அறிவைக் கற்றுத்தரும் பாடம் இவ்வாக்கம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு