Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 28 12

அதிரைநிருபர் பதிப்பகம் | February 05, 2014 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
இமாம் புகாரி அவர்களின் வாழ்வின் சில சம்பவங்கள் பற்றி இதற்கு முந்தைய பதிவில் அறிந்து அதன் மூலம் நாம் என்ன படிப்பினை பெறுகிறோம் என்பது பற்றி பார்த்தோம். இந்த பதிவில் இஸ்லாமிய வரலாற்றில் முன்றாம் கலீபா, நபி(ஸல்) அவர்களின் அருமைத் தோழர், அவர்களின் அருமை மருமகனார் உஸ்மான் (ரலி) அவர்களின் வாழ்க்கை பற்றிய சிறிய தொகுப்பில் ஒரு சில முக்கிய சம்பவங்களை பற்றி அறிந்து கொள்வோம், படிப்பினை பெருவோம். இன்ஷா அல்லாஹ்.

இஸ்லாமிய வரலாற்றில் தனக்கென்று ஒரு சிறப்பான இடத்தை பிடித்துள்ள உத்தம நபியின் உன்னத தோழர்களில் உஸ்மான் (ரலி) அவர்கள் மிகவும் முக்கியமானவர். உஸ்மான் (ரலி) அவர்களுக்கு அபூஅம்ர் மற்றும் அபூஅப்துல்லாஹ் என்று பெயர்கள் சொல்லியும் அழைக்கப்பட்டார்கள். உஸ்மான் (ரலி) அவர்களின் தந்தை பெயர் அஃfப்பான் அவர்கள், தாயார் பெயர் உம்மு ஹக்கீம் ஃபைலா. எப்படி அபூபக்கர்(ரலி) அவர்களை சித்தீக் என்றும், உமர்(ரலி) அவர்களை ஃபாரூக் என்றும் வரலாற்றில் அழைக்கப்படுகிறதோ, அது போல் உஸ்மான் (ரலி) அவர்களையும் “துன்னூரைன்” (இரண்டு ஒளி படைத்தவர்). நபி(ஸல்) அவர்களின் அருமை மகளான ருகைய்யா(ரலி) மற்றும் உம்மு குல்தும்(ரலி) ஆகிய இருவரையும் (ஒருவர் மரணித்த பின்பு மற்றொருவரை) திருமணம் முடித்திருந்த காரணத்தால் துன்னூரைன் என்று அழைக்கப்பட்டார்கள்.

அபூபக்கர்(ரலி) அவர்கள் மூலம் இந்த தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள் உத்தமத் தோழர் உஸ்மான்(ரலி) அவர்கள். அவர்களின் குணம், நேர்மை, நன்னடத்தை, பொறுமை, வெட்கம் இவைகளை பார்த்த நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய மகள் ருகைய்யா(ரலி) அவர்களை திருமணம் முடித்துக் கொடுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் உத்தரவின் பெயரில் அபிசீனியாவிற்கு முதன் முதலில் ஹிஜ்ரத் செய்தவர்களில் உஸ்மான்(ரலி) அவர்களும் அவர்கள் அருமை மனைவியும், நபி(ஸல்) அவர்கள் அருமை மகளாருமான ருகைய்யா(ரலி) அவர்களும் அடங்குவார்கள். பத்ருப் போர் நடைபெற்ற நேரம், உஸ்மான் (ரலி) அவர்கள் போரில் கலந்து கொள்ள விரும்பினார்கள், ஆனால் மனைவி ருகைய்யா(ரலி) அவர்கள் உடல்நிலை சரியில்லாததால் நபி(ஸல்) அவர்களின் ஆலோசனைப்படி மனைவி ருகைய்யா அவர்களை கவனித்துக் கொண்டார்கள் பத்ருப் போரில் கலந்துக்கொள்ள முடியவில்லை. பத்ருப் போர் நடந்து கொண்டிருந்த சமையத்தில் ருகைய்யா(ரலி) அவர்கள் மரணமடைந்தார்கள். ருகைய்யா(ரலி) அவர்களின் மரணம் உஸ்மான்(ரலி) அவர்களுக்கு மிகப்பெரும் இழப்பு. காரணம் இறந்தது மனைவி மட்டுமல்ல, அகிலத்தின் அருட்கொடை நற்குணத்தின் சிகரம் அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களின் மருமகன் என்ற அந்தஸ்து இனி இல்லையே என்ற வருத்தம் அவர்களை மிகவும் பாதித்தது.

நபி(ஸல்) அவர்கள் உஸ்மான்(ரலி) அவர்களின் வருத்தத்தை அறிந்து தன்னுடைய மற்றொரு மகள் உம்மு குல்தும்(ரலி) அவர்களை உஸ்மான்(ரலி) அவர்களுக்கு திருமணம் முடித்து கொடுத்தார்கள். சிறிது காலம் கழித்து உம்மு குல்தும்(ரலி) அவர்களும் மரணித்து விட்டார்கள். மீண்டும் அதே வருத்தத்தில் ஆழ்ந்து விட்டார்கள் அவர்கள். உஸ்மான்(ரலி) அவர்களின் வருத்தத்தை அறிந்த நபி(ஸல்) அவர்கள் “எனக்கு திருமணம் ஆகாத மற்றொரு மகள் இருந்தால், உங்களுக்கு திருமணம் முடித்து தந்திருப்பேன்” என்று உஸ்மான்(ரலி) அவர்களை பார்த்து ஆறுதல் கூறினார்கள். நபி(ஸல்) அவர்களின் இரண்டு மகள்களை திருமணம் முடித்து நபி(ஸல்) அவர்களுக்கு இரண்டு முறை மருமகனாக இருந்த அந்தஸ்து உஸ்மான்(ரலி) அவர்களுக்கு மட்டுமே கிடைத்தது. நபி(ஸல்) அவர்கள், அபூபக்கர்(ரலி), உமர்(ரலி) ஆயோரின் மரணத்திற்கு பிறகு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கலீபாவாக பொறுபேற்று, நீதியாக ஆட்சி செய்தார்கள். சில வருட ஆட்சிக்கு பிறகு அநீதியாளர்களால் கொடூரமான முறையில் தன்னுடைய 84வது வயதில் கொல்லப்பட்டு ஷஹீதானார்கள். இன்னா லில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிவூன்.

உஸ்மான்(ரலி) அவர்கள் ஷஹீதாக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் சொர்க்கவாசி என்று நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்து நற்சான்றிதழ் வழங்கினார்கள். உஸ்மான்(ரலி) அவர்கள் இயற்கையாகவே அமைதியான குணமுடையவர்களாக உள்ளவர்கள், இரக்க குணம் கொண்டவர்கள், அதிகம் வெட்கப்படக் கூடியவர்கள், அல்லாஹ்வின் தண்டனைக்கு அதிகம் பயந்தவர்கள் இப்படி ஒரு நல்ல மனிதனுக்கு இருக்க வேண்டிய நற்பண்புகள் அனைத்தும் இருந்துள்ளது.

மேற்சொன்ன நற்குணங்களுக்கு மட்டுமல்ல, ஒரு தயாள குணமுடையவர்களாக வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு வரலாற்று சான்றுகள் ஏராளம் காணலாம். மதீனாவுக்கு நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் வந்த பிறகு மதீனாவில் முஸ்லீம்களுக்கு தண்ணீர் தேவை என்றால் யூதர்களை நம்பியே இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தன் தோழர்களிடம் “யூதர்களிடம் இருக்கும் இந்த குடிநீர் கிணற்றை விலைக்கு வாங்கி தருபவர்கள் யார், இந்த உதவி செய்பவர்களுக்கு அல்லாஹ் சொர்கத்தில் ஒரு மிகப்பெரிய நதியை தருவான்” என்று கூறினார்கள். உடனே உஸ்மான்(ரலி) அவர்கள் தன்னிடம் இருந்த 20,000 தங்க தினார்கள் நபி(ஸல்) அவர்களிடம் தந்து யூதர்களிடம் அந்த தண்ணீர் கிணற்றை வாங்கினார்கள். அந்த கிணற்றிற்கு பெயர் உஸ்மான்( உதுமான்) என்று அழைக்கப்பட்டது. இதிலிருந்து தான் இந்த தயாள குணம்படைத்தவரின் பொருளாதார உதவி இஸ்லாமிய வளர்ச்சிக்கு வாரி வாரி வழங்குவது ஆரம்பமானது. சுப்ஹானல்லாஹ். இஸ்லாத்திற்காக பொருளுதவி செய்வதில் உஸ்மான்(ரலி) அவர்கள் மற்ற நபித்தோழர்களுக்கு முன் மாதியாகவும் வாழ்ந்துள்ளார்கள் என்று சொன்னால் மிகையில்லை.

மதீனாவில் இஸ்லாம் வளர்ந்தது, மஸ்ஜித் நபவியை விரிவாக்கம் செய்ய விரும்பினார்கள் நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ்வுடைய பள்ளிக்காக அதற்காக உதவி செய்பவர்கள் யார்? என்று வினவினார்கள், உடனே கொடைவள்ளல் உஸ்மான்(ரலி) அவர்கள் தன்னிடமிருந்த சொத்துக்களை கொடுத்து மஸ்ஜித் நபவி விரிவாக்கத்துக்கு பேருதவி செய்தார்கள். இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் கடினமான போர் என்று வர்ணிக்கப்பட்ட தபுக் போருக்காக நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய தோழர்களிடம் உதவி கோரினார்கள். அந்த சமையம் முஸ்லீம்கள் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களாக இருந்தார்கள், அப்போதும்கூட நம்முடைய உஸ்மான்(ரலி) அவர்கள் தன்னிடமிருந்த ஆயிரம் தங்க பொற்காசுகளை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதற்காக வாரி வழங்கினார்கள். அபூபக்கர் (ரலி) ஆட்சி காலத்தில் ஒரு மிகப்பெரும் வரட்சி ஏற்பட்டது. அந்த தருணத்தில் உஸ்மான்(ரலி) அவர்களுக்கு சிரியாவிருந்து மிகப்பெரிய வியாபார கூட்டம் வந்தது. தனக்கு வந்த அனைத்து வியாபாரப் பொருட்களையும் அல்லாஹ்வுக்காக மதினமா நகரிலுள்ள முஸ்லீம்கள் அனைவருக்கும் தர்மம் செய்தார்கள். இஸ்லாமிய வரலாற்றில் நபி(ஸல்) அவர்களுக்கு பிறகு அல்லாஹ்வுக்காக தர்மம் செய்வதற்கு ஒரு துளி அளவுகூட தயங்காத உஸ்மான்(ரலி) அவர்களும் நமகெல்லாம் முன் மாதிரி என்றால் மிகையில்லை.

அபூபக்கர் (ரலி) சித்தீக்(ரலி), உமர்(ரலி), அலி(ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), ஜைத் பின் ஜாபித்(ரலி), ஸஃஅத்பின் அபீவக்காஸ்(ரலி) என்று இப்படி முழு திருக்குர்ஆனையும் மனனம் செய்த நபித்தோழர்களில் உஸ்மான்(ரலி) அவர்களும் ஒருவர். முழு குர்ஆனையும் மனனம் செய்த ஹாஃபிழ் நம்முடைய உஸ்மான்(ரலி) அவர்கள். அபூபக்கர்(ரலி) அவர்கள் காலத்தில் திருக்குர்ஆனின் வசனங்கள் இலைகளிலும், தோல்களிலும், மரக்கட்டைகளிலும் எழுதி வைக்கப்படிருந்தது, அவைகளை கலீபா அபூபக்கர்(ரலி) அவர்கள் சேகரித்து பாதுகாத்து வந்திருந்தார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சிகாலத்தில் திருக்குர்ஆனை முழுமையாக பிறதி எடுக்க ஆணை பிரப்பித்தார்கள். நபி(ஸல்) அவர்களின் அருமை மனைவி ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் இருந்த அந்த மூலப் பிரதியை வைத்து முழு குர்ஆனும் முதன் முதலில் எழுதுவடிவியில் முழுமையாக பிரதி எடுக்கப்பட்டு தொகுக்கப்பட்ட்து. இன்று நம்மிடம் இருக்கும் திருக்குர்ஆன் என்ற இறைமறை ஓர் அழகிய தொகுப்பாக நம்மிடம் இருப்பதற்கு ஓர் அடித்தளமிட்டவர்கள் நம்முடைய மூன்றாவது கலீபா உஸ்மான்(ரலி) அவர்கள்.

நபி(ஸல்) தம்முடைய தோழர்களை மண்ணறைக்கு சென்று மரணித்து அடக்கம் செய்யப்படும் இடத்தை சென்று பார்த்துவிட்டு வர கட்டளையிட்டார்கள், ஒவ்வொரு முறை உஸ்மான்(ரலி) மண்ணறக்கு சென்றால் அழுது விடுவார்கள். அந்த அளவுக்கு கஃபுருடைய வேதனையை உணர்ந்திருந்தார்கள் உஸ்மான்(ரலி) அவர்கள்.

இப்படி அல்லாஹ்வின் அச்சமுடைய இந்த நல்லடியார், தனக்கு கிடைத்த இஸ்லாமிய ஆட்சியை அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாக நீதியான ஆட்சி செய்தார்கள். ஆனால் யூதர்களின் கைக்கூலி இப்னு ஸபா என்பவன் சூழ்ச்சியினால் எண்ணிலடங்கா குழப்பங்கள் செய்து, நம்முடைய இந்த உத்தம தோழர் கொடூரமான முறையில் கொடுங்கோலர்களால் கொலை செய்யப்பட்டு ஷஹீதானார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இஸ்லாத்திற்காக தன்னுடைய வாழ்வின் ஆரம்ப காலம் முதல் தன்னுடைய உடலாலும், பொருளாலும், அறிவாற்றலாலும் பேருதவி செய்து தன்னுடைய இறுதி மூச்சு வரை வாழ்ந்த இந்த உத்தம தோழர் உஸ்மான்(ரலி) அவர்கள் போல் தற்காலத்தில் வாழும் ஏதாவது ஒரு முஸ்லீம் தலைவரை நாம் காண இயலுமா?

இன்றைய காலகட்டத்தில் ஒரு பெரும் அரசியல் கட்சி தலைவரின் மருமகன், அல்லது ஒரு பெரிய பணக்காரருடைய மருமகன் இவர்கள் போடும் ஆட்டம், சுப்ஹானல்லாஹ். நபி(ஸல்) அவர்களுக்கு இரண்டு முறை மருமகனாக இருக்கும் வாய்ப்பு பெற்ற இந்த உத்தம தோழர் உஸ்மான்(ரலி) அவர்கள் ஒரு சராசரி மனிதராக இருக்கும் போதும் சரி, ஆட்சி அதிகாரத்தில் ஜனாதிபதியாக இருக்கும் போதும் சரி அடக்கமாகவும், நிதானமாகவும், வெட்க குணமுடையவராகவும், நீதியாளராகவும், இரக்கமிக்கவர்களாகவும் வாழ்ந்துள்ளார்கள். எந்த ஒரு பெருமையோ இன்றி தன்னுடைய வாழ்நாளை கழித்துள்ளார்கள் உஸ்மான்(ரலி) அவர்கள். இன்று உஸ்மான் (ரலி) அவர்கள் போன்று ஒரு தனி நபரையோ அல்லது ஓர் இஸ்லாமிய தலைவரையோ பார்க்க முடியுமா?

உஸ்மான் (ரலி) அவர்களின் வாழ்வில் நிறைய படிப்பினைகள் உள்ளது. யா அல்லாஹ்! அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்...
M.தாஜுதீன்

12 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இப்படியான ஆட்சியாளர்கள் இல்லாவிடினும்... கிடைத்திருக்கும் இயக்கத் தலைவர்கள் எவரேனும்... இந்த வழ்வுக்கு சொந்தக் காரராக இருக்க மாட்டார்களா? என்று ஏங்க வைக்கிறதே !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அபூஅம்ர் , அபூஅப்துல்லாஹ் என்றெல்லாம் அழைக்கப்பட்ட உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹூ அவர்கள் வாழ்க்கை நமக்கு நல்ல பாடம்.

ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

அல்லாஹ் பெரியவன்.

ஒரு தலைவருடைய வெற்றிக்கு அந்தத் தலைவரின் கட்டளைகளை ஏற்று நடக்கும் அடுத்த நிலையில் உள்ளவர்களும் காரணம். ஹஜரத் உஸ்மான் (ரலி) அவர்கள் அத்தகையோரில் ஒருவராக இருந்து இருக்கிறார்கள்.

இன்றோ அடுத்த நிலையில் இருக்கும் நபர்கள் நடந்து கொள்ளும் முறைகள்? பேசும் நாகரீகமற்ற பேச்சுக்கள் ???????? அல்லாஹ் போதுமானவன்.

இத்தகைய அருமையான வரலாறுகளைப் பார்த்தாவது திருந்த வேண்டியவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும்.

ஜசாக் அல்லாஹ் தம்பி.

sheikdawoodmohamedfarook said...

// 20000ஆயீரம் தங்க தினார் கொடுத்து உஸ்மான்[ரலி] அவர்கள் மதீனாவுக்கு தண்ணீர் கொண்டு வந்தார்கள்// இன்று ''என்னை M.P.யாக தேர்வு செய்து டெல்லிக்கு அனுப்பி வைத்தால் கங்கை நதியே இங்கே ஓட வைப்பேன்'' என்று வாக்குறுதி தருவார்கள். ''கங்கை இங்கே வந்தால் துடுப்பு போட்டு தோணியேகூட ஓட்டலாமே!'' என்ற நப்பாசையில் ஓட்டுபோட்டு டெல்லிக்கு அனுப்பினால் கங்கை இங்கே,ஓடாது! வாக்காளப் பெருமக்கள் கண்ணிலே கங்கை ஓடும்.'ஒஸ்மான்' என்ற மாமனிதரின் பெயரை சூடியவர்கள் நிறைய உண்டு: ஆனால் அவர்களின் கொடையுள்ளம் கொண்டோர் குறைவே!

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
sheikdawoodmohamedfarook said...

//20000 ஆயிரம் தினார்என்று இருப்பது தவறு. தயவுசெய்து 20 ஆயீரம்தினார் என்று திருத்தி வாசிக்கவும்.

adiraimansoor said...


எனது கண்கள் இரண்டும் 23 வது தொடரை படிக்கத் தவறி இருக்கும் முக்கிய புள்ளிகளான இப்ராஹீம் அன்சாரி காக்காவையும், கவியன்பனையும், மு.செ.முவையும், க்ரவுன் மச்சானையும், ஜாஹிர் ஹுசைனையும் காணவில்லையே எங்கே சென்றார்கள் அவர்கள்
இதை படித்திருந்தால் நிச்சயம் அவர்களிடமிருந்து நல்ல பின்னூட்டங்கள் வந்திருக்குமே

அவ்ர்களை அதை படிக்கதூண்டும் விதமாக இட்ன பதிவில் இதை பதிவு செய்து எந்து 23வது தொடரை படிக்க வெண்டுகின்றேன்

எனக்கு என்னவோ கவிதைகள் வராது
அதையும் மீறி வந்த இந்த கவிதைகளை
கவிதை என்று சொல்வதைவிட
கண்தானத்தை ஊக்கப்படுத்தும் காவியமாகத்தான் இதை நான் கருதுகின்றேன்
அதனால்தான் அதை படிக்க வலியுருத்தி இங்கு பதிகின்றேன்

தாஜுதீன் தடங்களுக்கு வருந்துகின்றேன்

sabeer.abushahruk said...

இத்தகைய அருமையான வரலாறுகளைப் பார்த்தாவது திருந்த வேண்டியவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும்.

ஜசாக் அல்லாஹ் தம்பி.

sabeer.abushahruk said...

மன்சூர்,

கங்கனங்கட்டிக்கொண்டு எழுதினால் கவிதை வராது. தாண்டவக்கோனே பாணியில் பாட்டு வேண்டுமானால் எழுதலாம்.

கவிதையில் ஒரு தாக்கம் இருக்க வேண்டும் என்பது என் கருத்து; சப்தமும் சந்தமும் கவிதைக்கு அவசியமில்லை.

உங்களைப்போல் திறமையாக கண்கள் இரண்டும் என்னால் எழுத முடியாது. அதுதான் உங்கள் தனித்திறமை. அதையே பயிற்சி செய்து மென்மேலும் மெருகேற்றினால் வெற்றி நிச்சயம். கவிதையெல்லாம் ஜுஜுபி.

adiraimansoor said...

கொடைவள்ளல் உஸ்மான்(ரலி) அவர்களின் வாழ்க்கை வறலாற்றை ஒவ்வொரு முஸ்லீமும் கடை பிடித்தால்
சொற்கத்தை இங்கேயே நாம் அனுபவிக்கலாம்

வேண்டாம் ஒவ்வொரு முஸ்லீமை விடுங்கள் முஸ்லீம்களின் தலைவர் என்று தன்னை காட்டிக்கொள்ளும் தலைவர்கள் கொடைவள்ளல் உஸ்மான்(ரலி) அவர்களின் வாழ்க்கையை பின் பற்றினாலே சொற்கத்தை இங்கேயே நாம் அனுபவிக்கலாம்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த பதிவை வாசித்த மற்றும் வாசித்து கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. ஜஸக்கல்லாஹ் ஹைரா..

எழுத்துப் பிழையை சுட்டிக்காட்டிய எங்கள் மூத்த சகோதரர் ஃபாருக் காக்காவுக்கு மிக்க நன்றி. ஜஸக்கல்லாஹ் ஹைரா.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு