Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேற்று! இன்று ! நாளை! – தொடர் 30 ( நமது கல்வி- 2 ) 17

அதிரைநிருபர் பதிப்பகம் | February 27, 2014 | , , , , , ,

சென்ற வாரத்திலிருந்து முஸ்லிம்களின் கல்வி நிலையின் பிற்போக்கான நிலைமைக்கான வரலாற்றுக் காரணங்களைக் கண்டு வருகிறோம். அந்த சம்பவங்களைத் தொடர்ந்து பதியும் முன்பு , இன்றைய அரசியல் நிலையை சற்று தொட்டுவிட்டுச் செல்ல நினைக்கிறோம். கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கான தற்போதைய சதவீதத்தை உயர்த்தி இன்று தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கும் அரசு தருமென்று மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த நமது சமுதாயத்துக்கும் – இதற்காக பெருமளவில் மக்களைத் திரட்டிக் காட்டி போராட்டம் நடத்திய தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் இயக்கத்துக்கும் பதில் அளிக்கும் விதமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை கடந்த 25/02/2014 அன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் வெளியிடப்பட்டு இருக்கிறது. இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு அந்தக் கட்சி எதிரானது என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவே நாம் கருதுகிறோம். அந்த தேர்தல் அறிக்கையின் சாராம்சங்களை அதிமுக தேர்தல் அறிக்கை: முக்கிய அம்சங்கள் என்ற தலைப்பில் இணைய தளத்தில் தொகுத்து வெளியிட்டு இருக்கிற இந்து ( தமிழ் ) கீழ்க்கண்டபடி குறிப்பிடுகிறது.

சமூக நீதி

“இட ஒதுக்கீட்டுக் கொள்கையை தொடர்ந்து நிலைநாட்ட அதிமுக பாடுபடும். இதே போன்று, அந்தந்த மாநிலங்கள், மாநிலங்களின் நிலைமைகளுக்கு ஏற்ப இட ஒதுக்கீடு பின்பற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.”

அம்மையாரின் இந்த பூசி மொழுகும் நிலைப்பாடு பொதுவாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும் இதைப்பற்றி பெரும் நம்பிக்கை கொண்டு இருந்த சகோதரர்களுக்குத்தான் இந்த நிலைப்பாடு ஏமாற்றம் அளித்து இருக்கும். அடுத்து இருதரப்பிலும் என்ன அறிவிப்பு வரப்போகிறது என்பதைத்தான் எதிர்பார்க்கலாம். வரும் அறிவிப்பு, சமுதாயத்துக்கான நலனுக்காகவும் ஒற்றுமைக்காகவும் இருக்கவேண்டுமென்று அதற்காக து-ஆச் செய்யலாம். இப்போது தொடருக்குள் செல்லலாம். 

கடந்த வாரம் குறிப்பிட்டது போல தமிழகத்தின் பல ஊர்களிலும் முஸ்லிம் கல்வி நிலையங்கள் முளைவிடத்தொடங்கின. இப்போது தலைநகர் சென்னையின் முறை. 1920 - ஆம் ஆண்டு இராமனாதபுரத்தைச் சேர்ந்த பிரபல தோல் வணிகர் மர்ஹூம் ஜமால் முகைதீன் ராவுத்தர் அவர்கள் சென்னை பெரம்பூரில் மதரஸா ஜாமியாவை நிறுவினார். இந்த மதரசாவில் பிக்ஹூ சட்டம் , பாஸில் (இஸ்லாமிய தத்துவம்) , மற்றும் இஸ்லாமியக் கல்விப் பிரிவுகள் போதிக்கப்பட்டன.

அதற்கு முன்பு 1901 –ல். சென்னையில் முஸ்லிம் இஸ்லாமியச் சங்கம் ஒன்று கூடி ஒரு தீர்மானம் போட்டது. அந்தத் தீர்மானத்தின் பிரகாரம், மத சார்பற்ற கல்வியை இஸ்லாமியக் கல்வியுடன் இணைக்க ஒரு புதிய பரிமாணத்தை முன்னெடுத்தனர். இதன் விளைவாக 1902 – ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் MEASI ( Muslim Educational Association of South India ) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் ஆரம்ப நிலை பரிதாபம், ஏனென்றால் தமிழ் அல்லது மலையாளம் தெரியாதவர்கள் இந்த அமைப்பின் தலைமையை ஆக்ரமித்ததுதான். ஜஸ்டிஸ் டியூடர் லாடம் என்ற பெயருடைய ஆங்கிலேயர்தான் இந்த கல்வி அமைப்பின் நிறுவனத் தலைவராக வந்தார். பிரபல பாஷா குடும்பத்தைச் சார்ந்த ஹாஜி பாஷா சாஹிப் அவர்களும் மிர்ஜா ஹாசிம் இஸ்பஹாணி ஆகிய இரண்டு முஸ்லிம்கள் துனைத்தலைவர்களானார்கள். இருவருமே உருது பேசும் முஸ்லிம்கள். இவர்களுக்கு மற்ற தென்னிந்திய மொழிகள் தெரியாது. இஸ்லாமியக் கல்வியுடன் நவீன உலகக்கல்வியை இணைத்த இந்த அமைப்பின் குறிப்பிடத்தக்கவர்களில் திருச்சியைச் சேர்ந்த உருது பேசும் சையித் முர்துஸாவும் அங்கம் வகித்தார். இன்றும் இவர் பெயரில் திருச்சியில் ஒரு பள்ளி நடைபெற்று வருகிறது. அத்துடன் முக்கியப் பங்கு வகித்த ஒரே தமிழ் பேசும் முஸ்லிம்களில் நாகப்பட்டினம் அஹமதுதம்பி மரைக்காயர் ஆவார். இந்த பத்தியில் நாம் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொரு உண்மை இத்தகைய நவீனக் கல்வியை ஆதரித்து அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த முகைதீன் பக்கீர் என்பவர் ஒரு கையேடும் வெளியிட்டார் என்பதே. 

இந்த MEASI – யின் தலைமை மற்றும் முக்கிய அங்கங்களில் உருது பேசுவோர் வீற்று இருந்ததால் தென் இந்திய கல்விக் கழகம் என்பது பெயரளவில் இருந்ததே தவிர , வாய்ப்புக்கள் யாவும் உருது பேசுபவர்களுக்கே அளிக்கப்பட்டது என்பதுதான் உண்மை. இதனால் உருது பேசும் வட்டாரங்களில் கல்வி விழிப்புணர்வு ஏற்பட்டது. அதுவும் பணம் படைத்தவர்கள் மத்தியில்தான். அங்கங்கே உப்புக்குச் சப்பாணியாக மற்ற மதரஸாக்களுக்கு சில நேரங்களில் நிதிஉதவிகள் கிடைத்தன என்பதைத்தவிர உருது மொழியே பாலூட்டி வளர்க்கப்பட்டது. இதனால் மொழிவாரி சமத்துவமான பகிர்வுடைய கல்வி வளர்ச்சி தடைப்பட்டது. இதில் உச்சபட்ச முயற்சியாக உருது மொழியை முஸ்லிம்களின் மொழியாக அங்கீகரித்து சென்னை ராஜதானியின் மொழியாகவும் மாற்ற முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் ஆங்கில அரசு இதனை ஏற்க மறுத்துவிட்டது.

1924- ஆம் ஆண்டு பெரம்பூரில் மதரஸா ஜாமியாவைத் தொடங்கிய ஜமால் முகைதீன் ராவுத்தர் வபாத் ஆனதும் அவரது மகனார் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். இங்கு 1925-ல் சையத் சுலைமான் நக்வி என்கிற புகழ்பெற்ற மார்க்க அறிஞர் இறைத்தூதர் நபி ( ஸல்) அவர்களைப் பற்றி உருதுவில் 6 முறைகள் தொடர் உரை நிகழ்த்தினார். உலகமகாக் கவி அல்லாமா இக்பால் அவர்கள் கூட இஸ்லாத்தின் தாத்பரியங்களைப் பற்றி உரையாற்றியதும் குறிப்பிடத்தக்கது; சிறப்பானது. 

முஸ்லிம்களின் கல்வி அறிவை மார்க்கக் கல்வியோடு நிறுத்திவிடாமல் உலகக்கல்வியோடும் இணைத்துவிட வேண்டுமென்று ஆங்கிலேயர்கள் அளவற்ற ஆர்வம காட்டினர். இதற்குக் காரணம் முஸ்லிம்கள் மீது அவர்களுக்கிருந்த பரிவல்ல. ஏற்கனவே கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டதைப் போல மதரஸாவில் கல்வி பயின்றவர்கள் அடக்குமுறைகளுக்கு எதிராகக் காட்டிய வீரமும் தவறுகளைத் தட்டிக் கேட்கும் அவர்களின் தைரியமும் ஆங்கிலேயரை அச்சுறுத்தியது என்பது ஒரு முக்கியக் காரணம். அத்துடன், இந்தியர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியூட்டி அதன் மூலம் கிருத்துவ மதத்தையும் பரப்பினால் மத ரீதியில் இந்தியர்களின் மனதை சுதந்திரத்துக்கு எதிராகத் திரும்பாமல் வென்று எடுக்கலாம் என்கிற இராஜதந்திர முயற்சியும்தான். ஆகவே மதசாக்கள் மீது தனது பிடியை இறுகச் செய்வதற்காக சாம்பியன் திட்டம் என்று அழைக்கப்பட்ட ஒரு திட்டத்தை 1930- 31 – ல் ஆங்கில அரசு கொண்டு வந்தது. 

இந்த சாம்பியன் திட்டம் என்பது ஒரு பசுத்தோல் போர்த்திய புலி. கல்விக் கூடங்களுக்கு அரசும் உதவி செய்ய வேண்டுமென்ற போர்வையில் பள்ளிகளையும் அவற்றின் பாட திட்டங்களையும் அரசின் கட்டுப் பாட்டில் கொண்டுவரும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டதுதான் சாம்பியன் திட்டம். அத்துடன் அரசின் உதவியை எதிர்பார்த்துத்தான் அடி எடுத்துவைக்க வேண்டுமென்ற ஆதிக்க உணர்வுடன் வந்ததே அந்தத் திட்டம். முதலில் உதவுவதுபோல் உதவி, பிறகு உதவிகளை படிப்படியாகக் குறைத்து முஸ்லிம்களின் கல்வி கற்கும் மற்றும் கல்வி நிலையங்களை அமைக்கும் முயற்சிகளை பலவீனப்படுத்தினர். அரசுக்குப் பண நெருக்கடி என்று பஞ்சப் பாட்டு பாடத் தொடங்கினர். இதன் ஒரு நடவடிக்கையாக சிறிய பள்ளிகளை பெரிய பள்ளிகளுடன் இணைக்க ஆரம்பித்தனர். இதன் விளைவாக தெருக்களில் அந்தந்த முஹல்லாக்களில் சிறு அளவில் அடிப்படையாக ஆரம்பிக்கப்பட்ட தொடக்கப் பள்ளிகள், மதரஸாக்கள் ஆகியவை இழுத்து மூடப்பட்டு பெரிய பள்ளிகளுடன் கலப்புக் கல்விக்காக இணைக்கப்பட்டன. பல இடங்களில் கல்வி நிலையங்கள் வெகுதூரங்களில் இருந்த பள்ளிகளுடன் இணைக்கப்பட்டதால் மாணவர்கள் போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் பயணித்துப் படிப்பதைவிட கடைகளில் எடுபிடி வேலை செய்வது நலம் என்கிற நிலைக்குத் தள்ளப் பட்டனர். பொருளாதார நெருக்கடி என்று காரணம் கூறி எப்படி நாளடைவில் கல்விக் கூடங்கள் குறைக்கப்பட்டன என்பதை கீழ்க் கண்ட அட்டவணை பட்டவர்த்தனமாக பறைசாற்றும்.


ஆதாரம்: தொடக்கப் பள்ளிகளின் பொதுக் கல்வி பற்றிய அறிக்கை 1928 to 1940. 

ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து சர்க்கரையும், தேன்மிட்டாயும் வகுப்பில் இருக்கும் அனைவருக்கும் கொடுத்து ( அந்தக் காலத்தில் பள்ளிக் கூடங்களில் சேர்த்துப் பெயர் எழுதினால், முதல் நாள் வகுப்புக்கு வரும்போதே ஒரு தட்டில் நாட்டுச் சர்க்கரை, அல்லது பனைமரத்துக் கருப்பட்டி, அல்லது தேன்மிட்டாய் கொண்டுவந்து வகுப்பில் இருக்கும் எல்லோருக்கும் கொடுப்பார்களாம். ) ஆர்வமுடன் படிக்க ஆரம்பித்த முஸ்லிம் மாணவர்கள் 100 பேர் என்று வைத்துக் கொண்டால் ஐந்தாம் வகுப்பு வரை படிப்பில் நிலைத்து இருந்தவர்கள் வெறும் 7 % தான். மீதி 93% பிள்ளைகள் படிப்பைத் தொடராமல் விட்டுவிட்டார்கள். இதற்குக் காரணங்கள் பல. 

வறுமை, சரியான வழிகாட்டுதல் இல்லாமை, பெண்கள் சற்று புஷ்டியாக வளர்ந்தாலே பள்ளிக் கூடத்தைவிட்டு நிறுத்துவது, அரபி & பாரசீக மொழிகளைப் படித்துக் கொடுக்க எல்லாப் பள்ளிகளிலும் போதிய முன்னேற்பாடு இல்லாமை, குடும்பத்தின் தேவைகள், சகோதரிகளின் சீதனத்துக்காக ஆண்களை இளவயதில் சம்பாதிக்க அனுப்புவது, விவசாயம், நெசவு, பாய் முடைதல் போன்ற கைத்தொழில்கள் கற்றுக் கொள்வது, உள்ளூரில் தொழில் செய்தால்தான் ஜீவனம் செய்ய முடியுமென்ற நிலைமை , பள்ளிக் கூடங்கள் வெகுதூரத்தில் அமைந்துவிடுவது, பாட நூல்களில் மார்க்கத்துக்கு முரணான கருத்துக்களால் மன வெறுப்பு, உலகக் கல்வி கூடாது என்கிற ஒரு சிலரின் பத்வா, போதிய இஸ்லாமியக் கல்வியைப் போதிக்கும் ஆசிரியர்கள் இல்லாமை, இப்படிப் பல குறைகள் – காரணங்கள் முஸ்லிம் குழந்தைகளின் படிப்பை மூடி போட்டு மூடிவிட்டன. தடைகளை உடைத்து வெளியே வந்து படிக்க வேண்டுமென்ற தாக்கமும் முயற்சியும் வெகுவாகக் குறைந்து போனது. வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர் நீச்சல் என்று மனதில் உறுதி இல்லாமல் போனது. 

முஸ்லிம்களுக்கு கல்வியில் ஆர்வமில்லாமல் போனதற்கு அன்று நிலவிய இன்னொரு சமூகக் காரணமும் உண்டு. அவர்கள் இயல்பிலேயே “திரைகடலோடியும் திரவியம் தேடும்" இரத்த அணுக்களுக்குச் சொந்தக்காரர்கள். நாகபட்டினத்தில் கப்பலைக் கொண்டு வந்து போட்டுக் கொண்டு மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் வருகிறவர்கள் வரலாம் என்று ஒரு வாசல் திறந்து விடப்பட்டு இருந்தது. ஊருக்கு ஊர் ஒலிபெருக்கி அறிவிப்புகள் என்று சொல்கிறார்கள். அந்தக் காலம், தூரக் கிழக்கு நாடுகளான மலேசியாவும் சிங்கப்பூரும் இன்னும் பர்மாவும் அண்மையில் இருக்கும் இலங்கை கூட பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்ததால் - இந்த நாடுகளில் வசித்த மக்கள் ஒரே ஆளுமையின் கீழ் வந்துவிட்ட காரணத்தால் இக்காலத்தில் உள்ளது போல விசா அது இது என்று பெரிதாக ஒன்றும் தேவைப்படவில்லை. எல்லோரும் பிரிட்டிஷ் குடியுரிமை பெறுவது இலகுவாக இருந்தது. இன்று கூட, அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வைத்திருந்தவர்களின் பிள்ளைகள் தாங்களும் பிரிட்டிஷில் வாழ உரிமை உள்ளது என்று கேட்டு பிரிட்டனில் வாழ்வதைப் பார்க்கிறோம். “கட்டை விளக்குமாறு ஆனாலும் கப்பல் கூட்டும் விளக்குமாறு “வேண்டுமென்று வெளிநாட்டில் பொருளீட்டுபவர்களை உயர்த்திப் பார்க்கும் மனோபாவம் தென்புலத்து மக்களிடம் வளர்ந்தது. இதனால் தொடக்கப்பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்தவர்கள் கூட அக்கரைச்சீமைக்குப் போகத் தொடங்கினார்கள். அவர்களது பிள்ளைகளையும் அங்கேயே அழைத்துக் கொண்டார்கள். இதனால் பலரின் புத்தக மூட்டை பட்டாணிக் கடலைக் கடையைத் தேடிப் போனது. கடிதம் எழுதக் கூட அடுத்தவரை நாடும் அளவுக்குத்தான் இப்படிப் போனவர்களின் கல்வியறிவு இருந்தது. கைகளில் காசு ஏறினாலும் இவர்களின் மூளையில் ஒன்றுமே ஏறவில்லை. 

வடக்கிலோ தோல் தொழிற்சாலைகளில், பீடி சுற்றும் தொழிலில் வேலை கிடைத்தால் போதும் உள்ளூரில் , மனைவி மக்களுடன் சுகமாக வாழலாமென்ற மனோபாவம் வளர்ந்தது. கல்வி கற்று, அரசாங்கப் பதவிகளில் அமர வேண்டுமென்ற ஆர்வம் முழு முஸ்லிம்களின் இரத்த நாளங்களில் இடம்பெறாமல் போனது. விதி விலக்கான சிலர் வீதிக்கு விளக்காயினர். ஆனால் அந்த வெளிச்சம் போதவில்லை. 
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
ஆக்கம் : P. முத்துப் பேட்டை பகுருதீன் B.Sc;
உருவாக்கம்: இப்ராஹீம் அன்சாரி

17 Responses So Far:

adiraimansoor said...

///உலகக் கல்வி கூடாது என்கிற ஒரு சிலரின் பத்வா, போதிய இஸ்லாமியக் கல்வியைப் போதிக்கும் ஆசிரியர்கள் இல்லாமை, இப்படிப் பல குறைகள் – காரணங்கள் முஸ்லிம் குழந்தைகளின் படிப்பை மூடி போட்டு மூடிவிட்டன. ////

இதில் சிக்கியவனில் நானும் ஒருவன் படிப்பிலாததினால் அன்று முதல் இன்றுவரை அரபுலகிலேயே என் வாழ்க்கையை தனிமையில் இளமையை தொலைத்துவிட்டேன்

இதை அவர்களால் திருப்பி தரமுடியுமா படிப்பிலாததினால்தான் நான் அரபுலகிற்கு தள்ளப்பட்டேன் இன்றுவரை மீலமுடியவில்லை
என்னைப் போன்ற எத்தனை சகோதரர்கள் நம் சமுதாய தலைவர்கள் அன்று முதல் இன்று வரை நம் மக்களை மாக்களாக்கி கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பதை நாம் கண்கூடாக அனுபவித்து வருகின்றோம்
அனுபவி ராஜா அனுபவி அரபு நாடு சென்று அனுபவி நம்மை படு பாதாளத்தில் தள்ளிவிட்டார்கள்

adiraimansoor said...

காக்கா இது ஒரு சோகம் தாங்கிய வரலாற்று குறிப்பு மிக அருமையான தொகுப்பு

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அன்று உலகக்கல்வி வேண்டாம் என்ற நிலைக்கு காரணம் "சாம்பியன்" திட்டம் என்பதும் அது அன்றைய சூழலுக்கு அவர்களை எதிர்க்க அந்த "ஃபத்வா" தேவைதான் என்பதும் நீங்கள் தரும் கல்வி மூலம் அறிய முடிகிறது.

இன்னும் பல பாடம் அறியத் தருவதற்கு நன்றி காக்காs

sheikdawoodmohamedfarook said...

//விதி விலகான சிலர் வீதிக்கு விளக்காயினர்// அதுவும் Low Watt bulb ஆனது.வெளிச்சம் கம்மி!

sabeer.abushahruk said...

இப்படித்தான் பிற மொழிகளைக் கற்க வேண்டாம் என்று கங்கனங்கட்டி கூட்டம்கூட்டி தார் பூசிய அரசியலால் பம்பைக்குப் போய் இறங்கியதும் கேட்ட

"க்யா பாத் ஹை?! என்ற கேள்விக்கு
"சும்மா பாத்தேன்" என்றும்

அரபு நாட்டில் இறங்கியதும் கேட்ட

"ஷூ ஹாதா?" என்ற கேள்விக்கு
"என்னோட ஷுதான்" என்றும்

வெள்ளக்காரன் சொன்ன
"வாட்ஸ் யுவர் ஃபாதர்?" என்ற கேள்விக்கு

"மை ஃபாதர் நேம் இஸ் மொய்ம்பிச்ச" என்றும் திக்கித் திணறி விடுகிறோம், இல்லையா?

படிக்க விடமாட்டாய்ங்களே. ஆனா அவிங்க மட்டும் சான்ஸ்க்ரிட்டிலிருந்து சகலமும் படிச்சிடுவாய்ங்க.

Shameed said...

//கைகளில் காசு ஏறினாலும் இவர்களின் மூளையில் ஒன்றுமே ஏறவில்லை. //

தலைலே கைய வச்சிடியல .

அதுசரி அறிக்கை எப்போ வரும்

Ebrahim Ansari said...

அன்பான சகோதரர்களே!

இந்தப் பதிவில் MEASI பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறோம்.

இந்த கல்வி அமைப்பிற்குள்தான் பின்னாளில் சென்னை புதுக் கல்லூரி உருவாகி வந்தது.

இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள உருது மொழி பேசுவோரின் ஆதிக்கம் அதிகம் என்கிற கருத்தையும் மீறி பிற்காலத்தின் இந்த அமைப்பின் செயலாராக மூன்று வருடங்கள் தொடர்ந்து எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக செயலாற்றினார் ஒரு தமிழ் பேசும் முஸ்லிம் .
நமக்குத் தெரிந்த காலங்களில், மூன்று முறை தொடர்ந்து இந்தப் பதவியை வகித்த பெருமைக்கு உரியவர்.

அதே பெருமகனார் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராகவும் இரண்டு ஆண்டுகள் செயலாற்றினார். அரசியல்வாதி அல்லாத ஒருவரை வக்பு வாரியத் தலைவராக நியமித்தவர் எம் ஜி யார்.

அவர் யார்?

அதிரையின் மண்ணுக்கு சொந்தக்காரர் .

மரியாதைக்குரிய ஏ. ஜெ. அப்துல் ரஜாக் காக்கா அவர்கள்தான் அமைதியாக இந்தப் பெரும் பொறுப்பைக்களை ஏற்று நடத்தியவர்கள் .

தகவல் உபயம்: கலைக்களஞ்சியம் தம்பி நூர் முகமது அவர்கள்.

sabeer.abushahruk said...

காக்கா,

ரஜாக் காக்கா அவர்களை என் வாழ்நாளில் மறக்க முடியாது. காரணம் எஞ்சினியரிங் சீட்டுக்காகக் காத்திருந்து காத்திருந்து அட்மிஷன் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் புதுக்கல்லூரியில் சேர்வதற்காக ரஜாக் காக்கா அவர்கள் முன்னால் நின்றேன்.

முதலில் ஃபிஸிக்ஸ் தர மறுத்தவர்கள் என் ப்ள்ஸ் 2 மதிப்பெண்களைப் பார்த்தவுடன் உடனே அட்மிஷன் கொடுத்தார்கள். அவர்களின் அந்த உதவிக்காக பல முறை அல்லாஹ்விடம் அவர்களுக்காகத் துஆச் செய்துள்ளேன்.

நம்ம காக்காவாக இருக்கப்போய் ஃபிஸிக்ஸ் கொடுத்தார்கள், அவாளா இருந்திருந்தால் ஜூலாஜியோ வேறு ஒப்பேத்தும் டிகிரியோ கொடுத்து ஓய்த்திருப்பார்கள்.

அந்தக் காலத்தில் இஞ்சுனியரிங் சீட்டெல்லாம் மெடிக்கல் போலவே கஷ்டம். இப்ப போல கூவி விற்பதில்லை.

sabeer.abushahruk said...

இந்த அருமையான செய்திக்களஞ்சியத்தை எங்களுக்கு வாரந்தோரும் கொடுத்துதவும் காக்காமார்களுக்கு மிக்க நன்றி.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நேற்று இன்று நாளை என்று (அன்று) அரசியலைப் பேசலாம்னு ஆரம்பித்த இந்த அருமையான தொடர் இன்று அசலான விஷயங்களை அலசுகிறது !

தேடித் தேடி அடைய வேண்டிய தகவல்களை ஒருங்கே... (வெட்டி / ஒட்டி அல்ல) எங்களுக்கு வழங்கி வரும் காக்காஸ் (அண்ணன் மார்கள் என்றால் காப்பி பேஸ்டாயிடும் அப்புறம் இந்திய பீனல் கோர்ட் கா.பே.சட்டம் 2014 - உட்பிரிவு 3 குற்றமாகும்)

தேர்தல் நேரமாக இருப்பதால் ஏதேனும் / எவ்வளவு "ஒதுக்கீடு" இருக்கக்கும்னு அடுத்த வாரத்தில் தெரிய வருமோ ?

பி.கு.: "ஒதுக்கீடு" என்பத் இடம் பொருள் ஏவல் பொருத்தே !

இப்னு அப்துல் ரஜாக் said...

வெள்ளைக்காரன் நம் முன்னோர்களை இஸ்லாத்தை விட்டு அப்புறப்படுத்தி,சாதிக்கலாம் என எண்ணினான் அல்லாஹ் நம்மை காப்பாற்றியதோடு - இன்று அவன் நாட்டில் (லும்) இஸ்லாம் கோலோச்சும் அளவுக்கு அல்லாஹ் அருள் புரிந்து கொண்டுள்ளான்.சூழ்சிக்காரனை விட அல்லாஹ் பெரும் சூழ்சிக்காரன் என்பது வெள்ளைத் தோலர்களுக்கும்,கைபர் கனவாய் வழி வந்தவர்களுக்கும் இனியாவது புரிந்தால் சரிதான்.

Ebrahim Ansari said...

தவறுக்கு வருந்துகிறேன் ஒன்று

//இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள உருது மொழி பேசுவோரின் ஆதிக்கம் அதிகம் என்கிற கருத்தையும் மீறி பிற்காலத்தின் இந்த அமைப்பின் செயலாராக மூன்று வருடங்கள் தொடர்ந்து எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக செயலாற்றினார் ஒரு தமிழ் பேசும் முஸ்லிம் . //

மேலே மூன்று வருடங்கள் என்று குறிப்பிட்டு இருப்பது தவறு.

மூன்று முறைகள் என்று இருந்து இருக்க வேண்டும். ஒரு முறை என்பது மூன்று ஆண்டுகள் . ஆக, ஒன்பது வருடங்கள் அந்தப் பதவியில் ஏ ஜே அப்துல் ரஜாக் காக்கா அவர்கள் இருந்திருக்கிறார்கள். இது அதிரைக்குக் கிடைத்த பெரும் பேறு.

அவர்களுக்காக து ஆச செய்யவேண்டும் நாம் அனைவரும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

Ebrahim Ansari said...

தவறுக்கு வருந்துகிறேன் இரண்டு.

//அதே பெருமகனார் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராகவும் இரண்டு ஆண்டுகள் செயலாற்றினார். அரசியல்வாதி அல்லாத ஒருவரை வக்பு வாரியத் தலைவராக நியமித்தவர் எம் ஜி யார்.//

இதிலும் இரண்டு வருடங்கள் என்பது இரண்டு முறைகள் என்று இருந்து இருக்க வேண்டும். ஒரு முறை என்பது மூன்று வருடங்கள். ஆக, ஆறு வருடங்கள் தொடர்ந்து ஒரு அரசியலில் இல்லாதவர் வக்பு வாரியத்தலைவராகப் பதவி வகித்ததும் நமது மண்ணுக்குக் கிடைத்த பெருமை.

இந்த நேரத்தில் ஒன்றைப் பதிய விரும்புகிறேன். பல துறைகளிலும் திறமையாளர்களாக இருப்பவர்கள் அரசியலில் இல்லாவிட்டாலும் அவர்களைத் தேடித் பிடித்துக் கொண்டுவந்து அரசுபதவிகள் அல்லது அரசு நிறுவனங்களில் அமர்த்தி அவர்களின் திறமைகளை நாட்டுக்குப் பயன்படுத்தும் இயல்பும் பழக்கமும் எம்ஜியார் இடம் இருந்தது.

இப்போ? ????????????????????????????????????????????????????????????

Ebrahim Ansari said...

தவறுக்கு வருந்துகிறேன் மூன்று .

//இந்த அமைப்பின் செயலாராக // செயலாளர் மற்றும் தாளாளராக என்று இருந்து இருக்க வேண்டும்.

இந்த மூன்று தவறுகளுக்கும் முன்னூறு முறை இம்போசிஷன் எழுதிவிடட்டுமா?

Ebrahim Ansari said...

தம்பி அபூ இப்ராஹீம்!

//நேற்று இன்று நாளை என்று (அன்று) அரசியலைப் பேசலாம்னு ஆரம்பித்த இந்த அருமையான தொடர் இன்று அசலான விஷயங்களை அலசுகிறது !//

அரசியல் விஷயங்களை அலசினால் அடிக்கடி அலைபேசி வருகிறது. அதனால்தான் இப்படி பிழைப்பை ஓட்டவேண்டி இருக்கிறது. இருந்தாலும் இறுதியில் அரசியலிலேயே நிறைவுறும்.

Yasir said...
This comment has been removed by the author.
Yasir said...

பலவித பயனுள்ள தகவல்களை அள்ளி தரும் சகோதரர் பகுருதீன் அவர்களுக்கும் அன்சாரி மாமா அவர்களுக்கும்..வாழ்த்துக்களும் துவாக்களும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு