Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேற்று! இன்று ! நாளை! – தொடர் 31 (நமது கல்வி- 3) 14

அதிரைநிருபர் பதிப்பகம் | March 13, 2014 | , , , , ,

இடையில் ஒருவாரம் இந்த தொடர் வாயிலாக சந்திக்க இயலாத நிலைக்கு வருந்துகிறோம். இயலாமை, மருத்துவம் போன்றவை அனைத்து தரப்பினருக்கும் பொதுவானது. 

கடந்த  ஒரு வாரம் ஒன்றும் சும்மா கடந்து போய் விடவில்லை. 

சந்தையிலே கூவிக் கூவி விற்கப்பட்ட இட ஒதுக்கீடு எனும் சாத்துக்குடி ஒரு புளித்துப் போன பொய்முகம் பூண்ட போச்சம்பள்ளி பழம்தான் என்று புவியோர்க்குத் தெரிந்தது. 

சரணடைய வேண்டுமென்று பல நாட்களுக்கு முன்பே போடப்பட்ட சதித்திட்டம் சந்திக்கு வந்தது. சமுதாய அடகுக் கடையில் நாலு பேர் நின்று அல்லது நெருங்கி அமர்ந்து சமுதாயத்தை எதற்கோ அடகுவைத்த சம்பவமும் நடந்தேறிவிட்டது. பொது எதிரியை வீழ்த்த ஸ்திரமான ஒரு காரனியாக வருமென்று எதிர்பார்க்கப்பட்ட இயக்கம், பொது எதிரிக்கு கரமாக விளங்கப் போகும் கட்சிக்கு தனது ஆதரவை அளித்தது.  

என்ன காரணத்துக்காக இப்படி ஒரு நிலை எடுக்கப்பட்டதோ என்று சமூக வலைதளங்களில் பொது நோக்காளர்கள் தங்களது ஆதங்கத்தையும் கவலையையும் வெளியிட்டனர்; இன்னும் சிலரோ வசை பாடியும் தீர்த்தனர். இப்போதுதான் அந்த இயக்கத் தோழர்களே ஏன் அப்படி இருக்கக் கூடாது என்று சிந்திக்கத் தொடங்கி இருப்பதாக செய்திகள் வருகின்றன. அல்லாஹ் போதுமானவன். நாம் தொடருக்குள் செல்லலாம். 

கடந்த வாரம் ஆரம்பப் பள்ளிகள் அரசியல் தலையீடு ஆரம்பமானதால் கல்வி வளர்ச்சி எவ்வாறு இறங்கு முகாமானது என்று கண்டோம். இப்போது இடை நிலைப் பள்ளிக் கல்வியில் இஸ்லாமிய மாணவ மாணவிகளின் கல்வி  நிலையைப் பார்க்கலாம்.  இதற்கும் ஒரு பட்டியலைப் பார்த்துவிடுவோம்.

சந்துகளின் பொந்துகளில் நின்று யார் கூவினாலும் இந்தப் புள்ளி விபரங்கள் எல்லாம் நகலெடுத்து ஒட்டப்  பட்டவைதான். இவை எல்லாம் ஒன்றும் குறை சொல்பவர்களின் அண்ணாச்சி வீட்டு அஞ்சறைப் பெட்டிக கணக்கல்ல. அரசின் ஆவணம். இவற்றைத் தேடி எடுத்துப் பகிர்வதில்தான் எங்களின் அர்ப்பணிப்பு இருக்கிறது. இதற்காக எந்தப் பெட்டியும் கைமாறுவதில்லை.  கூவிக் கொண்டு இருக்கும் எவரும் கூவிக் கொண்டே  கிடக்கட்டும் வாருங்கள் தோழர்களே!  நாம் வரலாற்றைப் படிப்போம்.


ஆதாரம்: பொதுக் கல்வி நிலைக்கான அறிக்கை.  1930  to 1941

நன்றி: முஸ்லிம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி – ஜெ. பி. பி. மோரே. 

இனி , கல்லூரிக் கல்வியைப் பற்றியும் சில குறிப்புகளைத் தரலாம்.

1916ஆம் ஆண்டு சென்னையில் முகம்மதன் கல்லூரி என்கிற பெயரில் முஸ்லிம்களுக்குப் பிரத்யோகமாக கல்லூரி தொடங்கப் பட்டது. (இந்தக் கல்லூரிதான் பின்னாளில் காயிதே மில்லத் பெண்கள் கல்லூரியாக உருவெடுத்தது.)   1919-ஆம் ஆண்டு வாணியம்பாடி முஸ்லிம் கல்விச் சங்கத்தின் சார்பில் நடைபெற்றுக் கொண்டிருந்த இடை நிலைப் பள்ளி கல்லூரியாக மாற்றப்பட்டது. அதுவே இன்றைய இஸ்லாமியக் கல்லூரி. அதே நேரம் கர்நூளிலும் வேலூரிலும் சேர்த்து மொத்தமாக தோற்றுவிக்கப் பட்ட அரபிக் கல்லூரிகளின் எண்ணிக்கை 194 ஆகும். உலகக் கல்வியைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களால் தொடங்கப் பட்ட கல்லூரிகள் மிகவும் குறைவாகவே இருந்ததால் மற்ற சமூகத்தினரின் அளவுக்கு முஸ்லிம்கள்,  கல்லூரி நிலைக் கல்வியைக் கற்க இயலவில்லை.  மற்ற சமூகத்தினரால் தொடங்கப் பட்ட திருச்சி தேசியக் கல்லூரி முதல் சென்னை பச்சையப்பன் கல்லூரி வரை முஸ்லிம்களை சேர்ப்பதில்லை என்பதை எழுதப் படாத சட்டமாகவே வைத்து இருந்தன. தொடங்கப் பட்டு அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சி தேசியக் கல்லூரியில் அனுமதிக்கப் பட்ட முதல் முஸ்லிம் மாணவர்,  பேராசிரியர் கவிமாமணி தி. மு. அ. காதர் அவர்கள் என்று அவர் நம்மிடம் சொல்வதிலிருந்து இந்த நிலைமைகளை  நாம் அறியலாம்.  

1842- ல் சென்னையில் தொடங்கப் பட்ட பச்சையப்பன் கல்லூரியின் பிரதானக் கொள்கை முஸ்லிம்களை அனுமதிப்பதில்லை என்பது என்று அங்கு சேர்ந்து படித்த - படிக்க முயற்சித்த பலர் கூறுகிறார்கள். 1919 –ல் கொண்டுவரப்பட்ட மாண்டேகு- செம்ஸ்போர்டு அமுல்படுத்தப்பட்ட சில வருடங்களுக்குப் பிறகு அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தார். இதற்காக   20 இலட்சம் ரூபாய் ஆங்கில அரசுக்கு அளிக்கப்பட்டது.  இப்படி சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரும் கல்வியின் முக்கியத்துவம் கருதி தங்களால் இயன்ற கல்விப்பணிகளை தாங்கள் சார்ந்த சமுதாயத்துக்கு ஆற்றிக் கொண்டிருந்த வேளையில் ஆங்கில அரசின் ஆதரவுடன் கிருத்துவ அமைப்புகள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி பல்வேறு நிலைகளில் கல்வி ஸ்தாபனங்களை தோற்றுவித்து செம்மைப்படுத்தினர். ஆனால் முஸ்லிம்கள் சார்பாக இவற்றில் பரவலான ஆர்வம்  இல்லாமலேயே இருந்தது முஸ்லிம் சமுதாயத்தின் மீதான ஒரு வரலாற்றுக் குற்றம். 

1901 – ஆம் ஆண்டு ஜஸ்டிஸ் டியூட்டர்ஸ் போதம் இவ்வாறு கூறுகிறார்.  “தொடக்கப் பள்ளிகளில் 57704 முஸ்லிம் குழந்தைகள் சேர்ந்தார்கள். ஆனால் அவர்களில்  1529 பேர்கள்தான் இடைநிலைப் பள்ளிகளில் சேர்ந்தார்கள் “ என்று கூறுகிறார். இதைவிட நமது கல்வியின் அழிவு நிலையை சுட்டிக் காட்ட வேறு என்ன புள்ளி விபரம் வேண்டும்?

இடைநிலைப் பள்ளிகளை விட்டு வெளியேறிய அந்த சொற்பப் பேர்களிலும்  11 பேர்கள்தான் பி.ஏ பட்டதாரிகளாக ஆயினர் என்பது அடுத்த அதிர்ச்சி தரும் செய்தி.   சட்டம், மருத்துவம், பொறியியல் கல்விகற்ற முஸ்லிம்கள் ஒருவர் கூட இல்லை. இத்துடன் கூட ஒரு அதிர்ச்சித் தகவல், மைசூர், திருவிதாங்கூர், ஹைதராபாத் சமஸ்தானங்களை  உள்ளடக்கிய சென்னை இராஜதானியில் பட்டம் பெற்ற  7230 நபர்களில் முஸ்லிம்கள் மொத்தமே  57 பேர்கள்தான் தோழர்களே! 

நமது வீழ்ச்சி எப்படித் தொடங்குகிறது  அவர்களின் உயர்வு எப்படி த் தொடங்குகிறது என்று கவனியுங்கள். 1935-36 ஆம் ஆண்டில் மக்கள் தொகையில்  3 சதவீதம் இருந்த பிராமணச் சகோதரர்கள், கலைக் கல்லூரிகளில் 45.4% சதவீதமும்  தொழிற் கல்விகளில் 46%  ஆகப்பயின்று பட்டம் பெற்றனர். பிராமணர்களின் இந்த புள்ளி விவரத்தை ஒப்பிடும் போது மக்கள் தொகையில் 6%4 இருந்த முஸ்லிம்கள் பயின்றதோ கலைக் கல்லூரிகளில்,  .4.3% சதவீதமும் தொழிற் கல்விகளில் 4.6% சதவீதமும் தான். இந்த வரலாற்று உண்மைகளை நாம் மீண்டும் மீண்டும் நமது உச்சந்தலையில் குட்டிக் குட்டி ஆராய்ந்து பார்க்க வேண்டும். தீதும் நன்றும் பிறர் தர வாரா. கல்வித்துறையைப் பொருத்தவரை, நமது அழிவுக்கு நாமேதான் காரணம். நமது ஆர்வமின்மைதான் காரணம். 

அண்மையில் மகளிர் தினத்தைக் கொண்டாடினார்கள். முஸ்லிம் பெண்களின் கல்விக்கு இஸ்லாம் தடை ஏதும் விதிக்கவில்லை என்றாலும் மக்களின் முயற்சியின்மை காரணமாக, நமக்கு ஏற்பட்ட இழிநிலையை சுட்டிக் காட்ட ஒரே ஒரு உதாரணமாக, நாம் சுட்ட விரும்புவது,  முஸ்லிம் பெண்களுக்கான இடை நிலைப் பள்ளியாக இருந்த  சென்னை ஹோவர்டு பள்ளியாகும்.  1922 ஆம் ஆண்டு இந்தப் பள்ளியில்-166 முஸ்லிம் பெண்கள் பயின்றார்கள். இவர்களுள் ஒருவர் கூட கல்லூரிக் கல்வி கற்கத் தகுதியை தேடிக் கொள்ளவில்லை.  1926-27ல் இறுதித் தேர்வு எழுதியவர்கள் 4 பெண்கள். இவர்களுள் தேர்வு பெற்றவர் ஆசைக்கு ஒண்ணு அருமைக்கு ஒண்ணு என்று ஒண்ணே ஒண்ணு கண்ணே  கண்ணுதான். 

தொடர்ந்து பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ். 

ஆக்கம் : P. முத்துப் பேட்டை பகுருதீன் B.Sc;
உருவாக்கம்: இப்ராஹீம் அன்சாரி

14 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அன்று முதல் நம்மவர்களின் கல்வி நிலையை ஆதாரங்களுடன் தொகுத்து காட்டியமைக்கு ஜசாக்கல்லாஹ் ஹைர் காக்கா.

adiraimansoor said...

///சந்தையிலே கூவிக் கூவி விற்கப்பட்ட இட ஒதுக்கீடு எனும் சாத்துக்குடி ஒரு புளித்துப் போன பொய்முகம் பூண்ட போச்சம்பள்ளி பழம்தான் என்று புவியோர்க்குத் தெரிந்தது.

சரணடைய வேண்டுமென்று பல நாட்களுக்கு முன்பே போடப்பட்ட சதித்திட்டம் சந்திக்கு வந்தது. சமுதாய அடகுக் கடையில் நாலு பேர் நின்று அல்லது நெருங்கி அமர்ந்து சமுதாயத்தை எதற்கோ அடகுவைத்த சம்பவமும் நடந்தேறிவிட்டது. பொது எதிரியை வீழ்த்த ஸ்திரமான ஒரு காரனியாக வருமென்று எதிர்பார்க்கப்பட்ட இயக்கம், பொது எதிரிக்கு கரமாக விளங்கப் போகும் கட்சிக்கு தனது ஆதரவை அளித்தது///

மன வேதனை அளிக்ககூடிய விசயம்
தக்லீது கூடாது என்பது ஒருமுகம் தன் அறியாமையினால் தக்லீதில் விழுந்து கிடப்பது மருமுகம் தக்லீது என்பது ஆகிரத்து கல்வி மட்டுமல்ல உலகவாழ்க்கைக்கும் அது பொருந்தும் ஒருத்தார் சொல்வதெல்லாம் சரியானது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது சொல்பவர் இறைத்தூதர் இல்லை

ஒரு காலத்தில் நாமும் அப்படி இருந்து செயல்படபோய்தான் இந்த இயக்கங்கள் இப்படி வளர்ந்தன
நாம் செய்த தியாகங்கள் இப்பொழுது உள்ளவர்களுக்கு எங்கு தெரியப்போகின்றது

எண்ணி 8 பேர் ஊரையே பகைத்துக்கொண்டு செயல்பட்டோம்

ஒட்டப்படும் போஸ்ட்டர்கள் யாவும் சொந்த கையால் ஒட்டி இயக்கம் வளர்த்தோம். ஒட்டப்படும் போஸ்ட்டர்கள் யாவும் நம் கண் முன்னாடியே கிழிக்கப்படும் காட்சிகளும் அமைக்கப்படும் மேடைகள் யாவும் நம் கண்முன்னே அகற்றப்படும் காட்சிகளும் இன்னும் நம் கண்முன்னே நிழலாடுகின்றன. எங்கு சென்றாலும் பதஸ்ட்டம் எந்த பள்ளியிலும் இப்பொழுது இருப்பதுபோல் ப்ரீயாக தொழமுடியாத காலம் எந்த பள்ளிக்கு சென்றாலும் வம்பு இல்லாமல் வெளியில் வந்த வரலாறு இல்லை விட்டுக்கு சென்றாலும் மனைவி மக்களிடம் பிரச்சனை குடும்பத்தில் பிரட்ச்சனை ஆக மொத்தத்தில் வாழ்க்கையே பதஸ்ட்டத்துடன் நிறைந்த வாழ்க்கையோடு இயக்கத்தை வளர்த்தோம்
அதந்த தியாக வரலாறு தெரியாமல் ஆடுகின்றனர் ஆடட்டும் நமக்கு ஒன்றும் கவலையில்லை

அவர்களின் இள ரத்தம் இப்படித்தான் ஆட சொல்லும்
அது நமக்கு கவலையில்லை அதிரை நிருபரில் வளம் வரும் பெரும்பாலான சகோதரர்கள் தவ்ஹீது சிந்தனையாளர்கள்தான் என்பதை மறந்துவிட்டார்கள் அதுபற்றியும் நமக்கு கவலையில்லை
நாம் எந்த அண்ணன் மாறுகளுக்கும் பயந்து வாழும் வயதல்ல. நம்முடைய வயது இறைவன் ஒருவனுக்கு மட்டும் பயந்து நமது பொது வாழ்க்கையை தொடருவோம்

sheikdawoodmohamedfarook said...

''படிச்சிட்டு போயி ஒருதன்ட்டே கைகட்டி சம்பளம் வாங்கித்தான் எங்கூட்டு அடுப்புலே ஓலே ஏறனுங்குற தலையெழுத்து எங்களுக்குஇல்லே!அவென் யான்வேனளுலேயும் வெயிலுலேயும் பள்ளிகொடம்போயிபடிக்கனும்?எங்ககிட்டேஏழுஎட்டுபேருபண்ணை கணக்குஎழுதி கை நீட்டிசம்பளம்வாங்கிபொலைக்கையிலே எம்மவன்படிச்சுதான்சம்பாதிக்கனுண்டுஅல்லாஅவன்தலையிலேஎலுதலே.அவன் ஊட்டுலேயே புள்ளேயா இரிக்கட்டும்''என்ற வசனங்கள் சின்னப்பண்ணை பெரிய பண்ணை தமிழ் முஸ்லிம்கள் வீட்டில் முழங்கியதால் '' ஆலைஇல்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை'' என்று சொல்லும் அளவுக்கு கூட பல இஸ்லாமியர்கள் ஊர்களில் கூடஆரம்பபள்ளியே அரிதாகிப்போனது.பிள்ளைஅழவில்லை;பால்கொடுக்கவில்லை.கல்லாமைகுற்றம் நமதே!

Yasir said...

மறைக்கப்பட்ட வரலாறுகளுடனும் / எங்களுக்கு அறியா புள்ளி விவரங்களுடனும் எங்களையும் சமுதாய சிந்தனை உள்ளவர்களாக மாற்றி, வரும் தலைமுறைகளையாவது செம்மை படுத்த உதவும் இந்த மாதிரியான தொடர்கள் அவசியம் அதனை செம்மையாக செய்துவரும் உங்களுக்கு துவாக்களும் பாரட்டுக்களும்...

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அநாமத்தேய பிட் நோட்டீஸ் எழுதுவது, பொதுக் கழிவறைச் சுவற்றில் யாரும் பார்க்கவில்லை என்கிற அற்ப திருப்தியில் ஆபாச கோஷங்கள் எழுதுவது போன்ற "அஞ்சாம்ப்பு ஆறாம்ப்பு" இலக்கிய ரசனை மிக்க முகமிலிகளோடு சரிக்குச் சமம் விவாதிக்கும் எண்ணம் அதிரை நிருபருக்கு இல்லை என்பதை உணர்த்துவதற்காக மெளனம் காக்கப்போய், "பின் வாங்கி விட்டார்கள்" என்று பாதகை வைக்காத குறையாக குஜாலாகிவிட்டார்கள் விசிலடிச்சான் குஞ்சுகள்.

இருப்பினும், தனி நபரைச் சுட்டி செய்யப்படும் அரைவேக்காட்டு தாக்குதல்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதிலடி கொடுப்பதை அ.நி. கட்டுப்படுத்தலாகாது.

தன்னுடைய Blogger Profile ல் உள்ள விசயங்களையே வெளியிட வக்கில்லாத இவர்கள் எப்படி மரண அடி கொடுத்ததாக எழுதுகிறார்கள்.

ரொம்ப காமிக்ஸ் புக்ஸ் படிப்பார்கள் போல தெரியுது..."வீட்லெ பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வா' எனச் சொல்வது நல்லது.


இவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று பார்க்கிறது, பிறகு நாமும் அதைச்சார்ந்து கமென்ட்ஸ் எழுதுவது எல்லாம் அள்ளக்கைகளை அசுரனாக காட்டும்.

எனது பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய, தமிழகத்திலேயே மார்க்க ஞானத்தில் தலையானவர் என்று நான் மதிக்கும் ஒரு தலைவரை அவர்தம் அரசியல் நிலைபாடுகளில் என் திருப்தியின்மையை வெளிப்படுத்தினால் அதை ஆரோக்கியமாக ஆராயாமல்,

கண்மூடித்தனமாக சப்போர்ட் செய்கிறேன் என்பதும், தவ்ஹீத் கொள்கை என்பது ஏதோ இவர்கள் வாங்கி வந்த ஃப்ரான்ச்சைஸ் லைசன்ஸ் மாதிரி என்று ஒரு மாயையை ஏற்படுத்துவதும்....பின்னாளில் ஒரு சி டி யில் வெளிச்சமாக்கப்பட்டுவிடும்.


இப்படி எதற்கெடுத்தாலும் தன்னுடைய கருத்தை மதிக்காதவர்களைத் திட்டியவர்களும், அடாவடித்தனமாக நடப்பவர்களும் கடைசியில் யாராவது ஒரு அற்பனிடம்தான் தோற்கிறார்கள் என்பது வரலாறு. அல்லது ஒரு தர்ஹா கட்டி முஹப்பத்தை வெளிப்படுத்தி ஓய்ந்துபோவார்கள் என்பதும் சாத்தியம்.

என்றைக்கு "இதைச் சொல்வது நான் தான்" என்று தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஆண்மை நம் சகோதரர்களுக்கு வருகிறதோ அன்றைக்கே கண்ணியமான ஆரோக்கியமான கருத்தாடல்கள் சாத்தியப்படும். இல்லையேல், தன்னை அ.நி.யில் முறையாக அறிமுகப்படுத்திக்கொண்ட தவ்ஹீதுகானை எழுத அனுமதிப்பதில் தறில்லை.

அதிரை நிருபர் தம் கடின உழைப்பால் தேடிக்கொண்ட புகழ் ஓங்குக! இது ஊத்திக்கொடுத்து ஏற்றப்படாத போதையாதலால் இந்தப் புகழில் கிடைக்கும் போதையை சற்றே சுகிப்பது ஹராமல்ல என்றே நினைக்கிறேன்.


Yasir said...

கவிக்காக்காவின் கருத்துடனும் நானும் உடன்படுகின்றேன்...இயக்க சகோதர்களே...அ.நி-யில் உள்ள நாங்கள் எந்த வித இயக்கத்துடனும் தொடர்பில் இல்லை. இருக்கவும் மாட்டோம் இன்ஷா அல்லாஹ்..தனி நபர் புகழ்பாடும் அந்த கொள்கையில் நம்பிக்கையும் இல்லை...எங்கள் தளத்தை வசைபாடுவதை விட்டுவிட்டு ஆக்கப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்....எல்லாவற்றிற்க்கும் ஒரு எல்லை உண்டு...பொதுப்பணியில் விமர்சனங்கள் வரும்தான் அதனை பாஸிட்டிவ்வாக எதிர்க்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்...வயது வரம்பின்றி நீங்கள் அனைவரையும் திட்டித்தீர்க்கின்றீர்கள்..மனதுக்கு கஷ்டமாக இருக்கின்றது....யார் ? எந்த மார்க்கம் ? உங்களுக்கு இதனைக் கற்றுத்தந்தது..அல்லாஹ்விற்க்கு அவன் ரசூலுக்கும் அஞ்சிக்கொள்ளுங்கள்.

இப்படிக்கு எவ்வியக்கத்தையும் சார
ஒரு எளிய இஸ்லாமியன்
முகமதுயாசிர்
கடற்க்கரைத் தெரு

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இடையில் ஒருவாரம் இந்த தொடர் வாயிலாக சந்திக்க இயலாத நிலைக்கு வருந்துகிறோம். இயலாமை, மருத்துவம் போன்றவை அனைத்து தரப்பினருக்கும் பொதுவானது.//

தங்களைப் போன்ற பக்குவப்பட்ட பண்பாளர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை காக்கா... ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்கான அலுவகளும் ஆரோக்கியமும் மிக முக்கியம்.

தங்களையே வருத்திக் கொண்டு பேச்சிலும் எழுத்திலும் துர்நாற்றத்தை தூவி தூற்றும் ஒரு கூட்டம் தான் வருந்த வேண்டும்...

கவிக் காக்கா, அவ்வ்வ்ளோ விஷயமா எழுதனும் !?

Ebrahim Ansari said...

இராமர் கோயில் - பொது சிவில் சட்டம் - அதிமுக ஆதரிக்கும்
- ஜெயலலிதா.

https://www.facebook.com/photo.php?fbid=610388872373179&set=a.219341251477945.54501.100002062167464&type=1

இப்னு அப்துல் ரஜாக் said...

ஆங்கிலேயர்,பிராமனன்,அரசு இவைகளுடன் உருது மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம்களிடம் ஏற்பட்ட கருத்து வேற்றுமையும் கூட,கல்வியில் முஸ்லிம்கள் பின் தங்க காரணம் என எண்ணுகிறேன்.

Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி அபூ இப்ராஹீம் அவர்களுக்கு,

//வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை காக்கா.//

காரணம் இருக்கிறது. ஒதுங்குவதற்கும் பதுங்குவதற்கும் வித்தியாசம் தெரியாமல் சில சகோதரர்கள் பதுங்கிவிட்டதாக பழி தூற்றினர்.

நமது பாதையில் எதிர் வரும் சிலவற்றைப் பார்த்து நாம் ஒதுங்கிப் போவது இயல்பு. நமது எதிரில் வருவது பாம்பாகவும் இருக்கலாம் ...............

துஷ்டரைக் கண்டால் தூர விலகு என்ற அடிப்படையிலும் இருக்கலாம்.

Shameed said...

ஒருமுறை ஊரில் ஜும்மா தினமான அன்று வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையுடன் பைக்கில் வரும்போது சகதியில் புரண்டு எழும்பி வந்த எருமைமாடு வாலை சுழற்றியதில் அதன் சகதி என் வெள்ளை வேட்டி சட்டையை நாரடித்துவிட்டது இதனால் அந்த "எருமை"க்கு ஏதும் பாதிப்பு கிடையாது எனக்குத்தான் பாதிப்பு அதில் இருந்து "எருமை"மாட்டை கண்டால் நான் ஒதுங்கியோ செல்வேன்

எது எப்படியோ அந்த எருமைக்கு தெரியாது நாம் பாதிக்கப்படுவது காரணம் அதற்க்கு"ஐந்தறிவு" தானே அதுக்கு

Unknown said...

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது யார்?:கருணாநிதி கேள்வி!

சென்னை: முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது ஜெயலலிதாதான் என்பதை நிரூபிக்க தயாரா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

"கடந்த 9-3-2014 அன்று நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியது அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்துள்ளது. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது அ.தி.மு.க. ஆட்சிதான் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியிருக்கிறார்.

தி.மு.க. ஆட்சியில் தான் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது என்று நாங்கள் கூறுகிறோம். இதில் எது உண்மை?. அ.தி.மு.க. ஆட்சியில்தான் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது என்றால், அதற்கான சட்டம் இயற்றப்பட்டதா? எந்தத்தேதியில் அதற்கான ஆணை வெளிவந்தது?.

எந்த நாளேட்டில் அந்தச் செய்தி வெளியிடப்பட்டது? திட்டவட்டமாகவும் குறிப்பாகவும் ஜெயலலிதா கூறத்தயாரா? 2006-ம் ஆண்டு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை திருத்தியமைத்ததும், அவர்களின் பரிந்துரையைப் பெற்றுத்தான் இடஒதுக்கீடு செய்ய வேண்டுமென்ற அம்சத்தை சேர்த்ததும் அ.தி.மு.க. ஆட்சி என்றும், அதனால் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்தது அவர்கள்தான் என்றும் ஜெயலலிதா பேசியிருக்கிறார்.

இஸ்லாமிய சமுதாயப் பெருமக்களை கேட்கிறேன். இன்னமும் ஜெயலலிதா அணியினருக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று தெரிவிக்கின்ற பல்வேறு இயக்கத்தோழர்களை கேட்கிறேன். ஜெயலலிதா செய்ததுதான் இடஒதுக்கீடு என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை ஜெயலலிதாதான் தமிழகத்தின் முதல்-அமைச்சர்.

உண்மையிலேயே முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமென்று அவர் கருதியிருந்தால், அவர் பதவியிலே இருந்த அந்த 5 ஆண்டு காலத்திலேயே பிற்படுத்தப்பட்டோர் நலவாரியத்தின் பரிந்துரையை பெற்று, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்திருக்கலாம் அல்லவா? அதை ஏன் அவர் செய்யவில்லை?

தேர்தல் நேரத்தில் இஸ்லாமியர்களை ஆதரித்துப் பேசும் ஜெயலலிதா கடந்த காலத்தில் அவர்களைப் பற்றி பேசியது என்ன?. “அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை ஆதரிக்கிறீர்களா என்று கேட்டபோது, “ஆமாம், ஆதரிக்கிறேன். இந்தியாவிலேயே ஒரு ராமர் கோவில் கட்ட முடியவில்லை என்றால் வேறு எங்கே கட்ட முடியும்?” என்று கூறியவர்தான் ஜெயலலிதா."

மேற்கண்ட அறிக்கை தி.மு.க தலைவர் கருணாநிதி 14.03.2014 அன்று வெளியிட்ட அறிக்கை.

பி/கு. நான் திமுக காரன் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் எந்த கட்சியையும் சார்ந்தவன் கிடையாது. ரொம்ப நாளா ஓட்டுப் போடணும்னு ஆசையா இருக்கு அதுக்கு கூட வாய்ப்பு இல்லைங்கையா

Unknown said...

இந்திய முஸ்லீம்களின் கல்வி பின்னடைவுக்கு முக்கிய காரணம் 'வட இந்திய' முஸ்லீம் அறிஞர்களிடம் இருந்த 'உருது மற்றும் பார்சி' வெறித்தனம் தான்.

இந்த 'மொழி வெறித்தனம் தான் முஸ்லீம்கள் 'ஆங்கிலம் படிப்பது ஹராம்' என்று இரு நூற்றாண்டுகளாக பத்வா வெளியிட வைத்தது.

இதன் விளைவு இன்று வரை எதிரொலித்து, சரியாக 'ஆங்கிலம்' கற்க முடியாமல் 'எஞ்சினீர்' பட்டம் படித்தாலும் 'பிட்டடித்து' அரை குறை மார்க் வாங்கி, இந்தியாவில் வேலை கிடைத்தாலும், அரபு நாடுகளில் வேலை கிடைத்தாலும் 'திறமையற்ற முட்டாள்களாக' திரியும் பலரை கண்டு வருத்தம் தான் மேலிடுகிறது.

இதில் கொடுமை என்னவென்றால் 'இதே மொழி வெறித்தனம்' இரண்டு, மூன்று தலைமுறைகளாக 'தமிழ் ஆர்வலர்கள்' என்ற பெயரில், தமிழகத்திலும் தலை விரித்து ஆடியது.

அதன் விளைவு தனக்கு தெரிந்த எதுகை மோனையில் 'தமிழில் தத்து பித்தென்று' கவிதை புனைந்து தங்களை 'தாய் மொழி' பாதுகாவலர்களாக காட்டிய ஒரு 'படிக்காத, அல்லது அரை குறையாக படித்த ஒரு கடைசி பெஞ்சு கும்பல்' - தனக்கு சுட்டு போட்டாலும் வராத 'ஆங்கிலம்' வேறு எந்த முஸ்லீமுக்கும் வந்து விட கூடாது என்று 'உறுதி எடுத்து' போராடியது. ஆங்கிலம் கேவலம் என்று வாதாடியது.

இத்தகைய ஆங்கிலம் தனக்கு வராது என்ற தாழ்வு மனப்பான்மையினால், கள்ளக்காப்பி அடித்து 'எஞ்சினீர் பட்டம் வாங்கி', 'அரபு நாடு சென்று' ஆயிரக்கணக்கில் சம்பாதித்தாலும் எந்த துறையிலும் சொந்தமாக, சிறப்பாக 'சாதிக்க இயலாத மூடர்களாக' ஒரு பெருங்கூட்டமாக இவர்கள் அலைந்து கொண்டிருப்பதை இன்றும் காணக்கூடியதாக உள்ளது - அவர்கள் 'இணையத்தில் ஆங்கிலத்தில் பிதற்றும் பிதற்றல்களை வைத்து'.

எனவே, இது போன்ற 'உருது பற்று, தமிழ் பற்று' என்று தங்களது உள்ளார்ந்த 'ஆங்கில அறியாமையை' மறைக்க 'வேடமிட்டு பாடுபடும்' மூடர்களை 'ஒத்துக்கி தள்ளிவிட்டு' - இந்த நூற்றாண்டின் உலக மொழிகளான 'ஆங்கிலம் மற்றும் எந்த நூற்றாண்டின் மொழியுமான அரபு' மொழிக்கு முன்னுரிமை கொடுத்து நமது அடுத்த தலைமுறையை படிக்க தூண்டல் வேண்டும்.

ஆங்கில அறிவும் அரபி அறிவும் குரான், உலக வரலாறு, இஸ்லாமிய வரலாறு குறித்த தெளிவான பார்வையை நமது மாணவர்களுக்கு வழங்கி, தலை சிறந்த ஆராய்ச்சியாளர்களாக, துறை வல்லுனர்களாக, சாதனையாளர்களாக, 'கள்ளகாப்பி அடிக்காமல் பாசான' உண்மையான 'சரக்குள்ள எஞ்சினீர்களாக, டாக்டர்களாக, விஞ்ஞானிகளாக விளங்க வாய்ப்புள்ளது.

முக்கியமாக நபிகள் நாயகம் (ஸல்) மீண்டும் மீண்டும் தங்களது மரணத்தருவை வரை கூறியது போன்று அல்லாஹுவின் சாபத்தை தங்கள் மீது வாங்கும் 'சமாதிகளை வணங்கும்' தர்காவாலாக்களாக இல்லாமல் ஒரு தலைமுறை காப்பாற்ற பட வேண்டுமானால் 'ஆங்கிலமும், அரபியும்' அவர்களுக்கு மிகவும் அவசியம் என்பது உறுதி.

ஒரு படி மேலே சென்று 'தர்காக்களை, அவற்றில் கட்டியெழுப்பட்ட கபுர்களை இடித்து தரை மட்டமாக்கி' அங்கே ஆங்கிலமும், அரபியும், அறிவியலும், கணிதமும் உயர் கல்வியும் கற்றுத்தரப்படும் கல்வி நிலையங்களை உருவாக்க 'இறைவன் ஒருவனே' என்று நம்பும் ஒவ்வொரு முஸ்லீமும் உறுதி எடுக்க வேண்டும். இன்றே.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு