Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேற்று! இன்று ! நாளை! – தொடர் - 32 ( நமது கல்வி- 4 ) 17

அதிரைநிருபர் பதிப்பகம் | March 20, 2014 | , , , , ,

முஸ்லிம்களின் கல்வி மீதான ஆர்வம் குறைந்து போனதற்கு உரிய காரணங்களை விவாதிக்கும் போது ஒரு கருத்தை வலியுறுத்திச் சொல்லியே ஆக வேண்டும். எண்ணூறு ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்ட மொகலாய மன்னர்கள் முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சிக்காக பெரிதாக ஒன்றும் கிழித்துவிடவில்லை என்பதே அது. பிறகு அந்த ஆட்சியையும் ஆங்கிலேயர்களால் பறித்தெடுக்கப்பட்டு விட்டதால் வெள்ளையருக்கு எதிரான ஒரு உணர்வும் வேட்கையும்தான் முஸ்லிம்களின் நெஞ்சங்களில் முதலிடம் பெற்றது. படிக்க வேண்டும் -முன்னேற வேண்டும் - பதவி பெற வேண்டும் ஆளும் வர்க்கமாக ஆகவேண்டுமென்று எண்ணங்கள் அவர்களின் இதயங்களில் அரும்பவில்லை. அதன் விளைவுதான் முஸ்லிம்களே முன்னின்று நடத்திய சிப்பாய்க் கலகமும், மாப்பிள்ளைமார் புரட்சியும், இன்னும் பிற சிறு சிறு போராட்டங்களும் ஆகும். இதனால் முஸ்லிம்களுக்கு பிரிட்டிஷார் மீது ஒருவித வெறுப்பும், பிரிட்டிஷாருக்கு முஸ்லிம்கள் மீது ஒரு வெறுப்பும் அவர்களின் கல்வியை மற்றும் மொழியையும் படிக்கும் வெறுப்பில் போய் முடிந்தது. 

உத்தரப் பிரதேசத்தில் இன்றும் இருக்கும் புகழ்பெற்ற தேவ்பந்த் அரபுக் கல்லூரியின் மார்க்க அறிஞர்கள் “ ஆங்கிலம் படிப்பது ஹராம் “ என்று மார்க்கத் தீர்ப்பான பத்வா வழங்குமளவுக்கு அந்த வெறுப்பு விதைகளைத் தூவி நட்டு வளர்ந்த்தது. (காலத்தின் ஒரு கோலம இன்று அதே தேவ்பந்த் கல்லூரியில் பயின்ற சென்னை மக்கா மசூதியின் இமாம் மவுலானா சம்சுதீன் காசிமி , முஸ்லிம்களின் பின் தங்கிய கல்வியின் நிலையைப் போக்க இல்மி (ILMI ) என்று ஒரு இயக்கத்தை இன்று தொடங்கி இருக்கிறார். )

தோப்பில் மீரான் என்றொரு தென் தமிழகத்தின் தேங்காய்ப்பட்டினத்து நாவலாசிரியர் மண்ணின் கதைகளை மணத்துடன் பரிமாறுபவர் என்று இலக்கிய உலகில் தொடர்புடைய நண்பர்கள் அறிவார்கள். ‘இலக்கியம் என்பது ஒரு காலத்தின் கண்ணாடி’ என்று கூறுவார்கள். அந்த வகையில் இலக்கியங்கள் வெளிப்படுத்தும் மக்களின் வார்த்தைகள் வரலாற்றையும் வெளிப்படுத்தும். தோப்பில் மீரான் எழுதிய நாவல்களில் மக்கள் உரையாடிக் கொள்வதாக வரும் சில வார்த்தைகள் மக்களின் மனநிலையைக் காட்டும். அவற்றில் சில 

"அரபி அல்லாஹ்க்கா பாசே – இங்கிலீஷ் நஸ்ராநிக்கா பாசே" ( அரபி அல்லாஹ்வுடைய மொழி – ஆங்கிலம் கிறிஸ்தவர்களின் மொழி )

"ஆங்கிலப் பள்ளிக் கூடத்தில் படிச்சா நரகம்தான் கிடைக்கும்"

"உலகம் அழியப் போகும் நாளின் அறிகுறிதான் ஆங்கிலக் கல்வி"

என்றும் கூற வைத்து இப்படிப்பட்ட நம்பிக்கைகள் முஸ்லிம்களின் இதயங்களில் நங்கூரம் பாய்ச்சி நின்று கொண்டு இருந்த நிலைமைகளை தோப்பில் மீரான் கோடிட்டுக் காட்டுகிறார். இப்படிப் பட்ட மனோநிலை அரபி மற்றும் பார்சி கூடவே உருது போன்ற மொழிகளைப் படிக்க முஸ்லிம்களைத் தூண்டியதே அல்லாமல் “ சீனா சென்றேனும் சீர்கல்வி பெருக” என்ற அரேபிய பழமொழியை மறக்கடித்தன. எந்த மொழியையும் கற்காதே என்று இஸ்லாம் தடைப் பட்டியல் இட்டு இருக்கிறதா? அன்னத்தில் வின்னத்தைக் கலக்கும் சமுதாய விரோதிகள் அப்போதே இருந்து இருக்கிறார்கள். 

இவ்வாறு பிரிட்டிஷார் மீதான் வெறுப்பின் காரணமாக, ஆங்கில மொழியும் அந்த மொழி மூலமான உலகக் கல்வியும் நமது சமுதாயத்தால் புறக்கணிக்கப் பட்டன. இதன் விளைவாக பல்வேறு கல்வியின் பரிணாமங்களின் துறைகளைக் கற்கும் வாய்ப்பை முஸ்லிம்கள் இழந்தனர். 

அலிகரில் முஸ்லிம் பல்கலைக் கழகத்தை தோற்றுவித்த சர். செய்யத் அகமது கான் போன்றோர் முஸ்லிம்கள் முன்னேற வேண்டுமானால் நவீன ஆங்கிலக் கல்வியைப் பெற்றுக் கொள்ள முனைப்புக் காட்ட வேண்டுமென்று பரப்புரை செய்தனர்; வலியுறுத்தினர். பலருடைய எதிர்ப்பையும் மீறி சர். செய்யத் அகமது கான் அவர்களால் தொடங்கப் பட்ட அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் தொடங்கப் பட்ட பின்னரும் கூட அதில் சேர்ந்து படிக்க பல முஸ்லிம்கள் தயங்கினார்கள். காரணம் அலிகரில் படிப்பது நரகத்துக்குப் பாதை வகுத்துவிடுமென்ற பலரின் தவறான பரப்புரையே காரணம். அலிகர் பல்கலைக் கழகத்தின் நோக்கம் நிறைவேறி அது தன் வெற்றியைக் கண்ட பின்னரும் கூட பல பகுதிகளிலும் தயக்கமே காணப்பட்டது. இந்த நிலையில் முஸ்லிம்களின் கல்வி நிலை மீது இன்னொரு இடி இறங்கியது. 

1920 ஆம் ஆண்டு நாகபுரியில் நடைபெற்றது காங்கிரஸ் மாநாடு. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய மைல் கல்லாக இந்த மாநாடு இருந்தது. காரணம் இந்த மாநாட்டில்தான் ஆங்கிலேயருக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்குவது என்று தீர்மானிக்கப் பட்டது. ஒத்துழையாமை இயக்கத்தின் நடைமுறைப் படுத்தப்பட வேண்டிய வைகளாக பதினோரு வழிமுறைகள் காந்தியால் அறிவிக்கப் பட்டன. அவற்றின் ஒன்று ஆங்கிலக் கல்வியைப் புறக்கணிக்க வேண்டும் என்பதுமாகும். காந்தி முதல் நேரு வரை பாரிஸ்டர் பட்டம் பெற்ற பின்னர் இந்த அறிவிப்பு ஒரு வேடிக்கையான அம்சம். 

இதற்குத் தலையாட்டி பலியானோரில் அதிகம் பேர் முஸ்லிம்களே என்பதே வேதனையான உண்மை. காரணம் இந்த ஒத்துழையாமை இயக்கத்தின் அம்சங்களை நடைமுறைப் படுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது கிலாபத் இயக்கம் . முஸ்லிம்கள் மட்டுமே பெருமளவில் பங்கு வகித்து, தன் வாயில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட நிலையை ஏற்படுத்தியது கிலாபத் இயக்கம் ஏற்படுத்திய உணர்வுப் பெரு ஆழி அலைகள். 

1920 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் நாள் ஒன்றுபட்டிருந்த சென்னை ராஜதானியின் பல பகுதிகளிலும் கிலாபத் குழுக்கள் ஏற்படுத்தப் பட்டன. பள்ளிகள் , கல்லூரிகள், நீதிமன்றங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். அந்த தீர்மானத்தை உணர்வுடன் நடை முறையும் படுத்தினர். இதே போல் தீவிரமாக சுதந்திர வேட்கையுடன் கல்வியையும் சேர்த்துப் புறக்கணித்த வேறு ஒரு சமுதாயம் இருந்து இருக்குமா என்பது சரித்திர சந்தேகம். 

கிலாபத் இயக்கத்தின் தலைவராக இருந்த மெள லானா முகமது அலி அவர்கள் 1921 – ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற கிலாபத் இயக்கத்தின் தலைமை உரையில் முஸ்லிம்கள் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றுவது ஹராம் என்று முழங்கினார். ராணுவத்தில் பணியாற்ற வேண்டுமானால் அதற்கு ஏற்ற படிப்புகளைப் படித்து இருக்க வேண்டும். முஸ்லிம்கள் படிப்பை புறக்கணித்ததால் ராணுவம் என்கிற ஒரு பெரும் வேலைவாய்ப்புத் துறையிலே அவர்களது வாடை கூட வீசாமல் போனது. 

 26/01/1921 அன்று சென்னையில் இருந்து வெளியான உருது நாளேடான ‘கெளமி ரிப்போர்ட்’ என்கிற பத்திரிகை , ‘ஒவ்வொரு முஸ்லிம் இளைஞன் மற்றும் மாணவனின் கடமை’ என்கிற தலைப்பிட்டு, ‘ “தங்களைப் படைத்த இறைவன் மற்றும் இறை தூதருக்காக, முஸ்லிம் இளைஞர்கள் எவ்வித இலாப நஷ்டமும் பாராமல் கிலாபத் இயக்கத்தில் ஈடுபட்டு பிரிட்டிஷ்காரர்களின் கல்வியைப் புறக்கணிக்க வேண்டும் “ என்று படித்துக் கொண்டிருந்த முஸ்லிம் மாணவர்களை இன்று சில இயக்கங்கள் மூளைச் சலவை செய்வது போல் செய்தன. 

இதற்கு மாறாக, முஸ்லிம் மாணவர்கள் கிலாபத் இயக்கத்தில் ஈடுபடுவதும் அவர்களை ஈடுபடுத்துவதும் அவர்களது கல்வியைப் பாதிக்கும் எனவே அவ்வித பங்கேற்பையும் அதற்கான அழைப்பையும் முஸ்லிம் மாணவர்கள் புறக்கணித்துவிட்டு படிக்கச் செல்ல வேண்டுமென்று உருது நாளேடான ஜார்தா – இ- ரோஜ்கார் தலையங்கம் ( 12/02/1921) தீட்டி எச்சரித்தது. இதையேதான் அண்மையில் ஒரு இயக்கம் இட ஒதுக்கீடு கேட்டு நடத்திய போராட்டத்தில் மாணவர்களை விலகி இருக்கும்படி நாமும் சொன்னோம். அதற்காக நியாயமற்ற முறையில் தரம் குறைந்து விமர்சிக்கப்பட்டோம்.

இவை போன்ற அரசியல் மற்றும் இயக்க உணர்வுகளால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டது. பலர் படிப்பை பாதியில் விட்டனர். 1920-21 ஆம் கல்வியாண்டில முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியினை சென்னை மாகாண நிர்வாக அறிக்கை குறிப்பிடும்போது “1920-21–ல் சென்னை மாகாணத்தில் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை முன்பு இருந்ததைவிட 4,420 குறைந்தது. இதற்கு, கிலாபத் இயக்கத்தின் தாக்கமே காரணம் “ என்று குறிப்பிடுகிறது. 

ஒரு வேதனையான உதாரணத்தைச் சொல்லலாம். 1921-ல் கிலாபத் இயக்கத்தின் தீவிரம் காரணமாக வாணியம்பாடியைச் சேர்ந்த முஸ்லிம்கள் , பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை ஊரை விட்டு விலக்கி சமுதாயப் புறக்கணிப்பு செய்வது என்று கூட தீர்மானித்தனர் என்று ஒரு குறிப்பு இந்த துரதிஷ்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதன் காரணமாக வாணியம்பாடி இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 75 % குறைந்தது. 

1920 – ஆம் ஆண்டு, வாணியம்பாடி முஸ்லிம் கல்விச் சங்கம் , இஸ்லாமியா கல்லூரியை நிறுவியது. சென்னை முகம்மதன் கல்லூரிக்குப் பிறகு இது இரண்டாவது கல்லூரி. 1920 ஆம் ஆண்டில் சென்னை மாகாண கல்வித்துறையின் இயக்குனரின் அறிக்கையில் வாணியம்பாடிக் கல்லூரியைப் பற்றி குறிப்பிட்டு கடைசியில் ஒரு செய்தியைச் சொ௦ல்கிறார். அந்தச் செய்தி, "கிலாபத் நாட்களில் வாணியம்பாடிக் கல்லூரி நின்று தழைக்குமென்று கல்வித்துறை நம்பவில்லை" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டு இருந்தது. இந்தக் குறிப்பு அன்றைய நிலையை சொல்லாமல் சொன்னது. 

வாணியம்பாடி இஸ்லாமியாக் கல்லூரி தொடங்கப் பட்ட நேரத்தில் முஸ்லிம் அல்லாத மாணவர்களின் எண்ணிக்கை கல்லூரியின் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குதான் இருக்க வேண்டுமென்று அரசு விதி வகுத்து இருந்தது. ஆனால் சோகத்திலும் சோகம் கிலாபத் இயக்கத்தில் முஸ்லிம் மாணவர்கள் ஆங்கில முறைக் கல்வியை புறக்கணித்த காரணத்தால் விதிகளை மீறி பிற மத மாணவர்கள் அதிகம் சேர்க்கப் பட்டனர். 

காந்திஜி முன் மொழிந்த ஒத்துழையாமை இயக்கத்தை உயிரோட்டமுடையதாக ஆக்குவதற்கு தோளோடு தோளாக நின்ற கிலாபத் இயக்கத்தின் தாக்கம் , முஸ்லிம்களின் சுதந்திர தாகம் அவர்களின் கல்வியை பலி கொண்டது. முஸ்லிம்களின் கல்வி பின்னடைவை சந்தித்தது. காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் வரை தங்களின் படிப்பைப் பாதியில் விட்டனர். சுதந்திர போராட்டத்துக்கும் முஸ்லிம்களின் கல்வி உணர்வு காவு கொடுக்கப்பட்டது. அதே நேரம் மற்றவர்கள் கல்வியில் முஸ்லிம்களைவிட முன்னேறினார்கள். 

இன்னும் அதிகமான கல்வி நிறுவனங்கள் நிறுவ வேண்டுமென்ற ஆவலும் செயல்பாடும் மிக தாமதமாகவே முஸ்லிம்களுக்கு மூளையில் உரைத்தன. அதன் பின்புதான் திருச்சியில் ஜமால் முகமது, அதிராம் பட்டினத்தில் காதிர் முகைதீன், உத்தம பாளையத்தில் ஹாஜி கருத்த ராவுத்தர், சென்னை புதுக் கல்லூரி, மதுரையில் வக்பு போர்டு, பாளையங்கோட்டையில் சதக்கத்துல்லா அப்பா ஆகிய கல்லூரிகள் துவங்கின. பெண்களுக்காக, ஜஸ்டிஸ் பஷீர் அஹமது சயீத் அவர்களால் சென்னையில் S I E T கல்லூரியும் தொடக்கமாக துவங்கி வைக்கபப்ட்டன. இந்தக் கல்லூரிகளைத் துவக்கிய பெருமக்களுக்காக நாம் அனைவரும் துஆச் செய்வது நமது சமுதாயக் கடமை. அண்மையில்தான் வணிக நோக்கோடு கீழக்கரை, இராஜகிரி முதலிய பல ஊர்களிலும் முஸ்லிம்களால் கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. ஆனாலும் அவற்றில் எவ்வளவு முஸ்லிம்கள் பயில்கின்றார்கள் அவை எவ்வாறு நமது கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றன என்பது விவாதத்துக்கு உரியது. 

ஆயினும் இன்னும் கல்வியில் தொடர்ந்து பின் தங்கியே இருக்கிறோம் என்பதை நாம் இன்னும் உணரவேண்டும். இதைப் பற்றி இன்னும் விவாதிக்கலாம். இன்ஷா அல்லாஹ். 

ஆக்கம் : P. முத்துப் பேட்டை பகுருதீன் B.Sc;
உருவாக்கம்: இப்ராஹீம் அன்சாரி

17 Responses So Far:

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

அற்புதமான வரலாற்றுக் குறிப்புகள்.

கல்வியில் நாம் பின் தங்கி விட்டதற்கான அடிப்படைக் காரணங்களை அடுக்கடுக்காகச் சொல்லி வரும் அருமை காக்கா மார்களுக்கு அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா. இப்படிப்பட்டக் காரணங்கள் அப்பட்டமாகத் தெரிய வந்தும் இன்னும் மாணவர்களைத் தீவிர அரசியலிலோ தீவிர ஆன்மீகத்திலோ ஈடுபடுத்தும் மனப்போக்கு கண்டிக்கத்தக்கது.

ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்போ பட்டயப்படிப்போ தொழிற்கல்வியோ கற்றுத் தேறும்வரை மாணவர்களை விட்டு வைப்பதே எதிர்கால இஸ்லாமியரை படித்த தலை முறையாக உருவாக்கித் தரும் என்னும் உண்மையை ஓங்கிச் சொல்லும் தங்கள் எழுத்து ஓங்குக!

sabeer.abushahruk said...

இன்னொரு சேதி காக்கா,

நம்மூரைச் சேர்ந்த சிலர், “அதிரை பைத்துல்மாலுக்கு பரகத் சாரை விட்டால் வேறு தலைவரே இல்லையா?” என்று தொடர்ந்து புலம்பி வருகின்றனர். இந்த புத்திசாலிகளுக்கு நான் ஒரு எல் கே ஜி டைப்ல விளக்கம் சொல்ல விரும்புகிறேன். அப்போதாவது புரிகிறதா என்று பார்ப்போம்.

இந்தியாவின் பிரதமரை தீர்மாணிப்பது இந்தியர்களா இதர தேசத்தவரா? இந்தியர்கள்தானே?

தமிழ்நாட்டின் முதல்வரைத் தீர்மாணிப்பது பெரும்பான்மை தமிழர்நாட்டவரா ஆந்திர நாட்டவரா? தமிழ் நாட்டவர்தானே?

அ.இ.அ.தி.மு.கவின் தலைவரைத் தேர்ந்தெடுப்பது அஇஅதிமுகவினரா எதிர்க்கட்சியினரா? அக்கட்சியினர்தானே?

இதேப் போல எந்த ஒரு இயக்கத்தையோ சங்கத்தையோ அமைப்பையோ சார்ந்தவர்கள்தானே அதனதன் தலைமையைத் தேர்ந்தெடுக்க முடியும்?

ஆக, பைத்துல்மாலின் தலைவரைத் தேர்ந்தெடுப்பது பைத்துல்மாலின் உறுப்பினர்களா எதிர் வாதம்செய்யும் பைத்தியங்களா?

பரகத் சாரை மாற்றி விடலாம். அதற்கு முதலில் பைத்துல்மாலின் அங்கத்தினராக வேண்டும் என்னும் அடிப்படைகூட தெரியாத அம்மாஞ்சிகளை என்னவென்பது?

ஐயா, அறிவு ஜீவிகளே, முதலில் உங்களை பைத்துல் மாலின் அடிப்படை உறுப்பினர் என்னும் தகுதிக்குள் இணைத்துக் கொள்ளுங்கள். சுய தேவைக்காக அல்ல; ஊர்த் தேவைக்காகவே பாடுபடுவோம் என்று ஓராண்டு காலமாகவாவது நிரூபியுங்கள். வருடா வருடம் வரும் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுங்கள்; பிறகு நீங்களே பைத்துல்மாலின் தலைவர்.

அதை விடுத்து, மரப்புக்குப் பின்னால் நின்று புலம்புவதில் பெண்மை மிளிர்கிறது ஐயாமார்களே.

அதிரைக்காரன் said...

நிரந்த தலைவராக 'ஒன்மேன் ஆர்மி' ஐ ஆயுட்கால தலைவராகக் கொண்டுள்ள அமைப்பை தாங்கிப்பிடிக்கும் அஷ்ரப் அவர்களுக்கு, பைத்துல்மால் நிர்வாகம் குறித்து விமர்சிக்கத் தகுதியில்லை.

அதிரை பைத்துல்மால் என்பது அதிரையர்களால், அதிரையர்களுக்காக உருவாக்கப்பட்ட தன்னார்வ சேவை அமைப்பு. இதன் தலைவராகத் தேர்வு செய்யப்படுபவரும் உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடந்தான் தேர்வு செய்யப்படுகிறார் என்பதை அறியவும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//நிரந்த தலைவராக 'ஒன்மேன் ஆர்மி' ஐ ஆயுட்கால தலைவராகக் ///

அப்படி இல்லைன்னா இன்னொரு இயக்கம் உருவாகிடுமே...

இந்த அரிச்சுவடிகூடவா தெரியலை !?

Ebrahim Ansari said...

அப்படியா?

பைத்துல் மாலையும் மரியாதைக்குரிய தன்னலமற்ற தொண்டர் பரக்கத் சார் அவர்களையும் விட்டு வைக்க வில்லையா? - இவர்கள் விமர்சிக்காத நல்ல காரியம் செய்யும் நபர்கள் உண்டா?

பூமியில் இருப்பது வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!

Shameed said...

ஏன் பைத்துல்மால் இட ஒதிக்கீடு பற்றி ஏதும் கட்டுரை போட்டுட்டாங்களா?

sabeer.abushahruk said...

http://www.satyamargam.com/articles/arts/lyrics/2299-election-india-2014.html

Unknown said...

//தோப்பில் மீரான் என்று ஒரு கேரளநாட்டு நாவலாசிரியர்//

தோப்பில் மீரான் தமிழ் நாட்டுக்காரர்; கேரளாவைச் சார்ந்தவரல்லர்.
தென் தமிழகத்தின் 'தேங்காய்ப்பட்டினம்' இவரது பிறந்தகம்.

Ebrahim Ansari said...

Assalamu alaikkum .

Dear Ahmed kakka,

Jasak Allah Hairan. தவறுக்கு வருந்துகிறேன்.

நெறியாளர் அவர்களுக்கு , தோப்பில் மீரான் என்ற நாவலாசிரியர் என்று திருத்தம் செய்ய வேண்டுகிறேன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

தெரியாத பல விஷயஙகள்,தெரிய வைத்த உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.

sheikdawoodmohamedfarook said...

//''அதிரை பைத்துல் மாலுக்கு பரகத்சாரை விட்டால் வேறுதலைவரே இல்லையா?''என்று நம்மூரைசேர்ந்த சிலர் புலம்பி வருகின்றனர்//மருமகன் சபீர்அஹமத் சொன்னது. பேசாமல் ஒரு யானைபிடித்து அதன் தும்பிக்கையில் பூமாலை கொடுத்து அது யார் கழுத்தில் மாலை போடுகிறதோ அவரே 'பைத்துல் மால் தலைவர்' என்று ஏற்றுக்கொள்ளலாம். இது ஜனநாயகமுறையை விடசிறந்த 'கஜ' நாயகமுறை!

sheikdawoodmohamedfarook said...

நாம் கல்வியில்பின்தங்கியதற்கு மைத்துனர் இப்ராஹிம்அன்சாரி கூறும்வரலாற்று சான்றுகள் அனைத்தும்அப்பட்டமான காப்பிபேஸ்ட்.எல்லாம்வரலாற்று நூலில் இருந்து எடுத்தது. இதில் கடுகளவும் சொந்த சரக்கு இல்லவே இல்லை! இனிமேல் வரலாற்று சான்றுகளை மருத்துவ நூலிலிருந்து எடுக்கவும்.

sheikdawoodmohamedfarook said...

பைத்துல்மால் தலைவரை தேர்ந்து எடுக்க இன்னொரு சிறந்தவழி கிளிஜோசியம்.கிளி எடுக்கும் சீட்டில் யார் படம் வருகிறதோ அவரே பைத்துல்மால் தலைவர். இதில் யாருக்கும் எந்த மனத்தாங்களும் உண்டாகாது.

Anonymous said...

//sheikdawood mohamedfarook சொன்னது…
பைத்துல்மால் தலைவரை தேர்ந்து எடுக்க இன்னொரு சிறந்தவழி கிளிஜோசியம்.///

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

அன்பு SMF காக்கா அவர்களுக்கு:

மேற்சொன்ன தங்களின் தனிப்பட்ட சொந்த கருத்து, இஸ்லாத்தில் ஜோஸியம் என்பதில் நம்பிக்கையில்லை.. அப்படி எதனையும் முன்னெடுத்து செல்லக் கூடாது.

sheikdawoodmohamedfarook said...

கிளிஜோசியத்தில் எனக்கும் நம்பிக்கைகிடையாது! அதை ஒருகிண்டாலோடுகூடிய ஹாஸிய ரசத்தை ஊட்டும் எண்ணத்திலேயே சொன்னேன் [Satire] .தயவு செய்துவாசக சகோதர்களும் மற்றும்நெறியாளரும்என்னையும்என்கருத்தையும்தவறாகஎடுத்துக்கொள்ளவேண்டாம்.அப்படியேஅது யார் மனதிலும் அது பிம்பத்தை உண்டுபண்ணினால் தயங்காமல் சொல்லுங்கள். மன்னிப்புடன் என் குறிப்பிட்டகருத்தைதிரும்பபெற்றுக்கொள்கிறேன்.அறியாமல்செய்ததவறுக்குமன்னிப்புகேட்பதுஇழிவல்ல.மன்னிப்பதுமனிதாபிமானம்அஸ்ஸலாமுஅலைக்கும்

Anonymous said...

//sheikdawood mohamedfarook சொன்னது…

கிளிஜோசியத்தில் எனக்கும் நம்பிக்கைகிடையாது! அதை ஒருகிண்டாலோடுகூடிய ஹாஸிய ரசத்தை ஊட்டும் எண்ணத்திலேயே சொன்னேன் [Satire] .தயவு செய்துவாசக சகோதர்களும் மற்றும் நெறியாளரும் என்னையும் என் கருத்தையும் தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.

அப்படியேஅது யார் மனதிலும் அது பிம்பத்தை உண்டு பண்ணினால் தயங்காமல் சொல்லுங்கள். மன்னிப்புடன் என் குறிப்பிட்ட கருத்தை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்.

அறியாமல்செய்ததவறுக்குமன்னிப்புகேட்பதுஇழிவல்ல.மன்னிப்பதுமனிதாபிமானம்அஸ்ஸலாமுஅலைக்கும் //

அன்பு SMF மூத்த காக்கா அவர்களுக்கு:

உங்களைப் பற்றி நன்காறிந்தவர்கள் நாங்கள் ! தங்களின் கடந்த கால அனுபவத்தின் ஒவ்வொரு நிமிடமும் எங்களுக்கு படிப்பினைகளும் இருக்கும் !

அதிரைநிருபர் தளத்தின் நிலைபாட்டை எடுத்துரைத்தது தங்களை அப்படியான பிம்பத்தில் இருப்பது போன்ற நோக்கமல்ல, நன்றாகவே அறிவோம் தங்களின் ஹாஸ்யமும் சமயோசிதமும் எங்களிடையே பிரபல்யமே !

உங்களின் பெருந்தன்மை எங்களுக்கு நல்லதொரு முன்னுதாரணம் !

அன்புடன்
நெறியாளர்
www.adirainirubar.in

sheikdawoodmohamedfarook said...

//அப்படியான பிம்பத்தில் இருப்பது போன்ற நோக்கமல்ல// நெறியாளர் சொன்னது. அப்பாடா! ராத்திரி பூரா தூக்கம் போச்சு! 'ங்காடா' வைபாத்துட்டு நெறியாளர் என்ன சொல்றார்ன்னு பாக்கப்போனேன். கரண்டு போச்சு.10.31க்குதான் கரண்டுக்கார சாறு கரண்டை தொறந்துஉட்டாரு.அப்பாடா! நெறியாளர் அவர்நிலைபட்டை- கடமையே நல்லபடியா சொல்லி இருக்கிறார்.இதில் அவர் காப்பிபேஸ்ட் ஏதும் செய்ததுபோல் எங்கண்ணுக்கு தெரியலே! மத்தவங்க கண்ணை பத்திஎனக்குதெரியாது..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு