Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 33 14

அதிரைநிருபர் பதிப்பகம் | March 26, 2014 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
முந்தைய பதிவில் நபி(ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் மன்னிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்துள்ளார்கள், மேலும் அவர்கள் யாவரும் பகைமை பாராட்டாதவர்களாக வாழ்ந்து மரணித்துள்ளார்கள் என்பதை அறிந்து நாம் படிப்பினைப் பெற்றோம். இந்த வாரம் சத்திய சஹாப்பாக்கள் என்போர் யார்? அவர்களின் சிறப்புகள் பற்றி திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் என்ன சொல்கிறது? என்பது பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.

நாம் வாழும் இன்றைய நவீண யுகத்தில், மக்களின் கவனம் திருக்குர்ஆன் வசனங்கள் மற்றும், நபி மொழிகளின்மீது இருப்பதைவிட உலக விசயங்களின் அதிக கவனம் செலுத்துவதையே விரும்புகிறார்கள். ஒரு அரசியல் தலைவன், சினிமா முன்னணி நடிகன், ஒரு இயக்கத் தலைவன், இவர்களின் செயல்பாடுகள், பேச்சுகள், நடிப்புகள், விவாதங்களுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் நம் நபி(ஸல்) அவர்களோடு வாழ்ந்து உயிர்த்தியாகம் செய்த சத்தியத் தோழர்களான அந்த ஸஹாபாக்களின் வாழ்க்கை வரலாற்றுக்கு இருப்பது மிக மிக அரிதாகவே காணப்படுகிறது. காரணம் இன்றைய சூழலில் ஒரு தனி மனிதனுக்கு கொடுக்கப்படும் மரியாதை ஒட்டுமொத்த தியாகக் கூட்டத்தின் கண்ணியமிக்க, வீரமிக்க, எழுச்சிமிக்க வரலாற்றை மறக்கடிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

நபியவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை பிரச்சாரம் செய்யும் பொறுப்பை என்று ஏற்றார்களோ, அன்று முதல் அவர்களது மரணம் வரை அவர்களுடன் துணை நின்று அவர்களது மரணத்திற்குப் பின்னால் இந்த இஸ்லாத்தை உரிய முறையில் வருங்காலத் தலைமுறைக்கு எத்திவைத்து அல்லாஹ்வின் திருப்தியை பெற்ற ஒரு சமுதாயமே நபித்தோழர்கள். அவர்கள் பற்றி அறிந்து கொள்வது, அவர்களை நபிவழி சொல்லும் வடிவில் நம்புவது நம்முடைய இஸ்லாமிய நெறியில் ஒரு பகுதியாகும். 

‘நபியவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்று அதே நிலையில் மரணித்தவரே ஸஹாபி என அழைக்கப்படுவார்.’ ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இத்தகுதியை பெற்றுள்ளனர். ஆனாலும் ஹதீஸ்களை நபியவர்களிடமிருந்து  அறிவித்தவர்கள் 1600ற்கும் குறைந்தவர்களே. ஸஹாபாக்களை அல்-குர்ஆன் 3 தரங்களாக வகுக்கிறது. 1-முஹாஜிரூன் 2-அன்ஸார் 3 -மக்கா வெற்றியின் பின்னர் இஸ்லாத்தை ஏற்றவர்கள்.

ஒரு காலகட்டத்தில் நபித்தோழர்களைப் பற்றி படுமோசமாக விமர்சனம் செய்து, அவர்களின் கண்ணியத்தை கேளிக்கூத்தாக்கிக் கொண்டு ஒரு கூட்டம் சியா என்ற பிரிவாக பிரிந்தது. அதே நிலையை இன்று குர்ஆன் சுன்னாவை பற்றி பேசும் ஒரு கூட்டத்தார் ஏற்படுத்தி விடுவார்களோ என்ற அச்சம் நம் அனைவரிடம் எழுகிறது.  நபித் தோழர்களை நாம் விமர்சிக்கவோ ஏசவோ கூடாது என்பது பற்றிப் பின்வரும் ஹதீஸ் தெளிவாகக் கூறுகின்றது. 

நபித் தோழர் அப்துர்ரஹ்மான் பின் அவ்ப் அவர்களுக்கு ஒரு சச்சரவின் போது நபித் தோழர் காலித் பின் வலீத் ஏசிவிட்டார் அந்த சமயத்தில் நபியவர்கள் பின்வருமாறு  கூறுகிறார்கள்.

என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது. அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ(ரழி) ஆதாரம் : புஹாரி 3673

நபித்தோழர்களிடம் பிழையிருந்தாலும் சரியிருந்தாலும் அவர்களை ஏசுவதற்கும் விமர்சனம் செய்யவும் யாருக்குமே உரிமை கிடையது. உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது. என்று நபியவர்கள் கூறியிருப்பது நபித்தோழர்களின் உளத்தூய்மையையும், இஸ்லாத்துக்காக எவ்வளவும் செலவு செய்வோம் என்ற அவர்களின் தாராளத் தன்மையையும், தியாகத்தையும் கோடிட்டுக் காட்டுகின்றது.

உண்மையில் நபித் தோழர்கள் செய்த வணக்க வழிபாடுகளையும், நாம் செய்கின்ற வணக்க வழிபாடுகளையும் ஒப்பிடும் போது கால அடிப்படையில் நாம் அதிகமாக வணக்கம் செய்வதாகத் தெரிந்தாலும் உளத்தூய்மையில் நபித்தோழர்களுக்கும் நமக்கும் அதிக வித்தியாசங்களுள்ளன. எனவே அதிகமாக வணக்கம் செய்வது பெருமையான அம்சமல்ல. ஒரேயொரு வணக்கம் செய்தாலும் முழுமையான உளத்தூய்மையோடு அதைச் செய்வதுதான் அவசியமானதாகின்றது. ஹுதைபியா உடண்படிக்கையின் போது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நபித்தோழர்  காலித் பின் வலீதுக்கே அபர்துர்ரஹ்மான் போன்ற ஒரு நபித்தோழரை ஏசுவதற்கு அனுமதியில்லையென்றால் நம்மைப் போன்றவர்களுக்கு எவ்வகையிலுமே நபித்தோழர்களை ஏசுவதற்கும் விமர்சனம் என்ற பெயரில் கிண்டலான வார்த்தைகள் சொல்லி அழைப்பதற்கோ எந்த அனுமதியும் இல்லை.

நபித்தோழர்கள் பற்றி ஆய்வு செய்யும் போது, அல்குர்ஆன் அவர்களைப் பற்றி என்ன சொல்கின்றது? ஹதீஸ் அவர்கள் தொடர்பில் என்ன கூறுகின்றது? என்ற இரு பெரும் மூலாதாரங்களின் அடிப்படையில்தான் நபித்தோழர்கள் தொடர்பான ஆய்வு ஆவணப்படுத்தப்பட வேண்டும். அல்லாஹ் ஒரு சமுதாயத்தினரை ‘மோசமானவர்கள்’ என்று  சொல்லிவிட்டால்.  அவர்கள் எவ்வளவு நன்மைகள் செய்திருந்தாலும் நாம் அவர்களை ‘மோசமானவர்கள்’ என்றே கூறுவோம்.

அதே வேளை அல்லாஹ் ஒரு சமூகத்தை ‘நல்லவர்கள்’ என்று கூறிவிட்டால் அவர்கள் என்ன தீமைகள் செய்திருந்தாலும் அவர்களை நாமும் ‘நல்லவர்கள்’ என்றே சொல்வோம். ஏனெனில் நடைபெற்றவைகளை வைத்தே ஒருவரை நல்லவர், கெட்டவர் என்று நாம் தீர்மானிப்போம். நடக்கப் போகின்ற விடயங்களை வைத்து யாரையும் நல்லவர், கெட்டவர் என முடிவு செய்ய நம்மால் முடியாது. ஏனென்றால் நடக்கப் போவனவைப் பற்றிய அறிவு நமக்குக் கிடையாது. நடந்தவை, நடைபெற விருப்பவை அனைத்துமே தெரிந்தவன் அல்லாஹ் ஒருவனே. ஆகவே அல்லாஹ் ஒரு சாராரை நல்லவர்கள் என்று சொன்னால் அவர்கள் செய்கின்ற நன்மைகள் அல்லாஹ்வுக்குத் தெரிந்திருப்பதைப் போல அவர்களுடைய தீமைகளும் அல்லாஹ்வுக்குத் தெரியும் எனவே நன்மை, தீமை இரண்டும் தெரிந்துதான் அல்லாஹ் அவர்களை நல்லவர்கள் என்று சான்று பகர்கின்றான்.

இதைப் போன்றுதான் நபி(ஸல்) அவர்களின் மரணத்துக்குப் பின்னால் நபித்தோழர்களுக்குள் என்னென்ன ஏற்படும் என்பது பற்றியும், அபூபக்கர் (ரழி) உமர் (ரழி), உஸ்மான் (ரழி), அலீய் (ரழி) போன்றோரினால்  நடைபெறும் தவறுகள், பிழைகள் பற்றியும் அல்லாஹ் மிக அறிந்தவனாகும். எனவே அவர்களிடமுள்ள தவறுகள், பிழைகள் பற்றிய அறிவோடுதான் அல்லாஹ் அவர்களை ‘சிறந்தவர்கள்’ எனக் கூறியுள்ளான் என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும். ‘ஆயிஷா (ரழி) அவர்கள் தூய்மையானவர்’; என்று அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான் என்றால் அது நேற்றைய தூய்மை மட்டும் குறிக்காது நாளைய தூய்மையையும் குறிக்கும். ‘நம்பிக்கையாளர்’ என அல்லாஹ் ஒருவரைக் கூறினால் நம்பிக்கை விடயத்தில் அந்நபர் நம்பகமானவர் என்பது உறுதியாகிவிடுகின்றது. அவ்வாறுதான் அல்லாஹ் ஒருவரை ‘தூய்மையானவர்’ என்று சாட்சி சொல்லி விட்டால் மனிதனென்ற அடிப்படையில் சில தவறுகள் அவரிடம் காணப்பட்டாலும் அவர் கெட்டுப் போகமாட்டார்.

நபித்தோழர்களின் சிறப்புகள் பற்றி ஏராளமான திருக்குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் உள்ளன, அவைகளில் சிலவற்றை நாம் காண்போம்.

இஸ்லாமிய வரலாற்றில் சிறப்புமிக்க ஹுதைப்பிய்யா உடன்படிக்கையில், ஒரு மரத்தடியில் 1400 ஸஹாப்பாக்கள் பங்குபெற்றார்கள், அவர்கள் அனைவரையும் அல்லாஹ் பொருந்திக்கொண்டான் என்ற பின் வரும் வசனத்தை வாசித்துப் பாருங்கள்.

அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதிமொழி எடுத்த போது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளங்களில் இருப்பதை அவன் அறிவான். அவர்களுக்கு நிம்மதியை அவன் அருளினான். அவர்களுக்கு சமீபத்திலிருக்கும் வெற்றியையும் வழங்கினான். (அல்பத்ஹ் : 18) 

மேலும் நபித்தோழர்கள் பற்றி அல்லாஹ் தன் அருள்மறையில் கூறுகிறான்.

முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே இறக்கம் மிகுந்தும் இருக்கின்றனர். ருகூஉ, ஸஜ்தா செய்வோராக நீர் அவர்களைக் காண்பீர். அல்லாஹ்விடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடுவார்கள். அவர்களின் அடையாளம் ஸஜ்தாவின் விளைவாக அவர்களின் முகத்தில் இருக்கும். ( சூரத்துல் பத்ஹ் : 29)

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விசயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டார்கள்……‘ (சூரத்துத் தவ்பா : 100)

உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன்னர் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாகமாட்டார்கள். (வெற்றிக்குப்)  பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட அவர்கள் மகத்தான  பதவியுடையவர்கள். அனைவருக்கும் அல்லாஹ் அழகியதையே  வாக்களித்துள்ளான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.  (சூரத்துல் ஹதீத் :  10) 

இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தவர்களையும், அன்ஸார்களையும்  அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம்  புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில்  அவரைப் பின் பற்றியவர்களையும் மன்னித்தான். (சூரத்துத் தவ்பா : 117)

நபித்தோழர்களின் சிறப்பு பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறியதாவது.

உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். இதன் அறிவிப்பாளரான இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அவர்கள் ‘இதற்குப் பிறகு இரண்டாவது அல்லது மூன்றாவது தலை முறையினரை நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்களா என்று எனக்குத் தெரியாது’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஸஹ்தம் பின் முழர்ரிப் ஆதாரம் : புஹாரி 6428

நட்சத்திரங்கள் வானத்துக்குப் பாதுகாப்பாகும். அவை அழிந்து விட்டால்வானத்துக்கு வாக்களிக்கப் பட்டது வந்து விடும். நான் எனது தோழர்களுக்குப் பாதுகாப்பாகும். நான் சென்று விட்டால் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்து விடும். என் தோழர்கள் என் சமூகத்துக்குப் பாதுகாப்பாகும்.  அவர்கள் சென்று விட்டால் எனது சமூகத்துக்கு வாக்களிக்கப்பட்டது வந்து விடும். அறிவிப்பவர் : அபூ புர்தா ஆதாரம் : முஸ்லிம் 6629

எனது தோழர்களை கண்ணியப்படுத்துங்கள்.  

அறிவிப்பவர் : அப்துல்லாஹிப்னு ஸுபைர் (ரழி). ஆதாரம்: முஸன்னப் அப்துர்ரஸ்ஸாக் 20710

வழிகெட்ட ஷியாக்கள், நபித்தோழர்களை பற்றி கேவலமாக பேசியும் திட்டியும், விமர்சனம் செய்தும் தங்களுடைய கொள்கை வளர்த்துக் கொண்டார்கள். இன்று அதே ஷியாக் கூட்டம் ஈராக்கிலும், ஈரானிலும், சிரியாவிலும், லெபனானிலும் குர்ஆன் சுன்னா வழியில் வாழும் அஹ்லுஸ்ஸுன்னா மக்களை கொன்று குவித்து தங்களுடைய வெறித்தனத்தின் உச்ச நிலையில் உள்ளார்கள். நபித்தோழர்களை நேசிக்கும் முஸ்லீம்களை கொல்லும் ஒவ்வொரு ஷியாவும் ஷஹீதுடைய அந்தஸ்து பெற்றவர்கள் என்ற கொள்கையை வைத்து படுமோசாமான மனித இனமில்லா ஜன்மங்களாக உள்ளார்கள் அந்த ஷியாக்கள். அந்த அயோக்கிய ஷியாக் கொள்கையிலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.

இன்று தமிழ் பேசும் ஒரு சில மக்கள், நபி(ஸல்) அவர்களோடு வாழ்ந்து, அவர்கள் கொண்டு வந்த தீனுக்காக எண்ணற்ற தியாகங்கள் செய்த சத்திய ஸஹாப்பாக்களை ஒரு சாதாரண மனிதர்களைப் போன்று தங்களுடைய பேச்சால் விமர்சனம் செய்து கேவலப்படுத்துகிறார்கள். போனாப்போகுது என்று சோறு கொடுத்தோம் என்று அன்சாரிகள் முஹாஜிர்களை பார்த்து சொன்னதாகவும், அன்சாரி நபித்தோழர்களையே பதவி வெறி பிடித்தவர்கள் என்றும், அண்ணன் எப்போ போவான் திண்ணை எப்போ காலியாகும் என்றும், அம்ரு இப்னு ஆஸ்(ரலி) அவர்களை கிரிமினலான வேலை செய்பவர் என்றும் நபித்தோழர்களுக்கு சொல்லக்கூடாத வார்த்தை பிரயோகம் செய்வதோடு அல்லாமல், இது போன்ற விமர்சனங்கள் நபித்தோழர்களுக்கு செய்வதில் என்ன தவறு என்றும் வாதிட்டு தங்களின் தவறுகளை மறைக்க நடைமுறை வழக்கு மொழி என்று வெட்டி நியாயம்வேறு பேசி வருகிறார்கள். இது போன்ற கேடுகெட்ட கூட்டத்திலிருந்து நம் எல்லோரையும் அல்லாஹ் காப்பாற்றுவானாக.

நபித்தோழர்களை நேசிப்போம், அவர்களை கண்ணியப்படுத்துவோம், அவர்களை கேவலப்படுத்தும் கயவர்களை களையெடுப்போம் என்ற சபதம் ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும். காரணம், இந்த தூய மார்க்கம் இன்று நம்மிடம் கிடைப்பதற்கு அல்லாஹ்வால் நபி(ஸல்) அவர்களுக்கு அளிக்கப்பட்ட மாபெரும் பொக்கிஷங்கள் நபித்தோழர்கள். அல்லாஹ் இந்த நபித்தோழர்களை வைத்தே திருக்குர்ஆனை பாதுகாத்தான், நபித்தோழர்களை வைத்தே ஷஹீஹான ஹதீஸ்களை நமக்கு தொகுத்துதர உதவி செய்தான். 

ஏதாவது ஒரு நபித்தோழர் பற்றி ஒரு துளி அளவு தீய எண்ணம் நம்மிடம் இருந்தால், நம்முடைய நேர்மையில் கோளாறு உள்ளது என்பதாக நாம் கருத வேண்டும். காரணம் அல்லாஹ்வும், அவன் தூதரும் கண்ணியப்படுத்தி சிலாகித்து பாராட்டிய நபித்தோழர்களை நாமும் கண்ணியப்படுத்த வேண்டும். மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் தவறு செய்திருந்தால் அவற்றை பெரிதுபடுத்தாமல், அவர்கள் மேல் நல்லெண்ணம்கொள்ள வேண்டும்.

நபித்தோழர்கள் மேல் கண்ணியம் நமக்கு குறையுமானால், ஹதீஸ்களின் மேல் இருக்கும் நம்பிக்கை குறையும் வாய்ப்பு உருவாகலாம், பின்னார் குர்ஆனின் மேல் உள்ள நம்பிக்கையும் குறையும் வாய்ப்பு ஏற்படலாம்(நவுதுபில்லாஹ்). அல்லாஹ் நம் எல்லோரையும் ஈமானில் உறுதியுள்ள மக்களாக ஆக்கி அருள் புரிவானாக.

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்...
M.தாஜுதீன்

14 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

//ஹுதைபியா உடண்படிக்கையின் போது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நபித்தோழர் காலித் பின் வலீதுக்கே அபர்துர்ரஹ்மான் போன்ற ஒரு நபித்தோழரை ஏசுவதற்கு அனுமதியில்லையென்றால்//
ரலி என சேர்க்கவும்.

//இன்று தமிழ் பேசும் ஒரு சில மக்கள், நபி(ஸல்) அவர்களோடு வாழ்ந்து, அவர்கள் கொண்டு வந்த தீனுக்காக எண்ணற்ற தியாகங்கள் செய்த சத்திய ஸஹாப்பாக்களை ஒரு சாதாரண மனிதர்களைப் போன்று தங்களுடைய பேச்சால் விமர்சனம் செய்து கேவலப்படுத்துகிறார்கள். போனாப்போகுது என்று சோறு கொடுத்தோம் என்று அன்சாரிகள் முஹாஜிர்களை பார்த்து சொன்னதாகவும், அன்சாரி நபித்தோழர்களையே பதவி வெறி பிடித்தவர்கள் என்றும், அண்ணன் எப்போ போவான் திண்ணை எப்போ காலியாகும் என்றும், அம்ரு இப்னு ஆஸ்(ரலி) அவர்களை கிரிமினலான வேலை செய்பவர் என்றும் நபித்தோழர்களுக்கு சொல்லக்கூடாத வார்த்தை பிரயோகம் செய்வதோடு அல்லாமல், இது போன்ற விமர்சனங்கள் நபித்தோழர்களுக்கு செய்வதில் என்ன தவறு என்றும் வாதிட்டு தங்களின் தவறுகளை மறைக்க நடைமுறை வழக்கு மொழி என்று வெட்டி நியாயம்வேறு பேசி வருகிறார்கள். இது போன்ற கேடுகெட்ட கூட்டத்திலிருந்து நம் எல்லோரையும் அல்லாஹ் காப்பாற்றுவானாக.//

பீஜேயும் பேசுகிறார்,கோவை அய்யூபும் பேசுகிறார்,ஷம்சுதீன் காசிமியும் பேசுகிறார்.இன்னும் பலர் இவ்வாறு மதிப்புக்குரிய ஸஹாபாக்களை பற்றி பேசும் போது,நமக்கு நெஞ்சு வெடித்து விடும் போல் உள்ளது.மவ்தூதியின் ஒரு புத்தகத்தில் அவர் ஒரு ஸஹாபா கண்மணியை விமர்சித்ததை படித்தவுடன்,சீ என்றாகிவிட்டது.(புத்தகம் பெயர் நினைவில் இல்லை).ஏன் அப்படி நடக்கிறார்கள் என்று தெரியவில்லை.
நம் தாய் தந்தையை விமர்சிக்கலாம்.ஆனால் ஸஹாபாக்களை விமர்சிக்க நமக்கு அறவே உரிமை இல்லை.அவர்கள் நம் தலைவரோடு நிழலாக வாழ்ந்தவர்கள்.

ஷியாக்கள் விஷயத்தில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.,ஈரான் ஒரு முஸ்லிம் நாடு என்ற போர்வையில் இருக்கும் முஸ்லிம் எதிர்ப்பு நாடு என்பதை நாம் அறிய வேண்டும்.

சகோ தாஜுக்கு வேண்டுகோள் ஒன்று,ஷியாக்களின் அந்தக் கால நடப்பு முதல் இன்று வரை உள்ள செய்திகளை அலசி ஒரு தொடர் தொடருங்களேன்,இன்ஷா அல்லாஹ்.

ஸஹாபாக்களை மதிப்போம்.இன்ஷா அல்லாஹ் வெற்றி பெறுவோம்.

sheikdawoodmohamedfarook said...

//சினிமா நடிகன் அரசியல் தலைவன் இயக்கத்தலைவன்இவர்களின் நடிப்புக்கும் பேச்சுக்கு ம் இருக்கும் .......// இவர்களை பற்றி பேசினால்தான்' நாமும் பேரை வாங்கலாம் ! பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்' என்ற நியதி மனிதன் நெஞ்சில் ஆலமரம்போல வேரோடும் விழுதோடும் செழித்தோங்கி வளர்ந்து விட்டது ! அவர்களுக்கு அல்லாவைதவிர வேறுயாரும் பாடம் புகட்ட முடியாது ! இங்கே ஒரு நடிகன் கட்சி தலைவன் ஆகிறான்! கட்சி தலைவன் நடிகன் ஆகிறான்!. வீநோதமான இந்த நாட்டில் நல்லநல்ல போதனைகளை கூறுவது குருடர்கள் ஊரில் ஓவியம் விற்பதைபோல. இருந்தாலும் கூவிக்கொண்டே இருப்போம்! கூவல் கேட்டு ஓருநாள் செவிதிறக்கலாம்! ஆமீன்!

adiraimansoor said...

///நம் தாய் தந்தையை விமர்சிக்கலாம்.ஆனால் ஸஹாபாக்களை விமர்சிக்க நமக்கு அறவே உரிமை இல்லை.அவர்கள் நம் தலைவரோடு நிழலாக வாழ்ந்தவர்கள்.///

இந்த பின்னூட்டம் மிகவும் கவணிக்க வேண்டிய ஒன்று இதை ஒவ்வொருவரும் தனது உள்ளத்தில் பதியவைத்தால் ட்ராக் மாறாது.
என்னுடைய கருத்து தாய் தந்தையை கூட நாம் விமர்சிக்க தகுதி அற்றவர்கள் ஒரு பேச்சுக்காககூட சொல்ல முடியாது

Shameed said...

ஹதீஸ்களுக்கு வாரத்திற்கு ஒரு விளக்கம் (மாற்றி மாற்றி )கொடுக்கும் அரசியலில் இல்லாத ஆனால் அரசியல் செய்யும் அந்த தலைவருக்கு சஹாபாக்களை விமரிசிக்க எந்த தகுதியும் கிடையாது

sabeer.abushahruk said...

மீண்டும் மீண்டும் வாசித்து மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டிய உபதேஷங்களை உள்ளடக்கிய இவ்வத்தியாயம் இக்காலச் சூழலுக்கு உகந்தது.

ஜஸாக்கல்லாஹ் க்ஹைரன்.

Ebrahim Ansari said...

//இன்றைய சூழலில் ஒரு தனி மனிதனுக்கு கொடுக்கப்படும் மரியாதை ஒட்டுமொத்த தியாகக் கூட்டத்தின் கண்ணியமிக்க, வீரமிக்க, எழுச்சிமிக்க வரலாற்றை மறக்கடிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது//

// அதே நிலையை இன்று குர்ஆன் சுன்னாவை பற்றி பேசும் ஒரு கூட்டத்தார் ஏற்படுத்தி விடுவார்களோ என்ற அச்சம் நம் அனைவரிடம் எழுகிறது. //

// இது போன்ற கேடுகெட்ட கூட்டத்திலிருந்து நம் எல்லோரையும் அல்லாஹ் காப்பாற்றுவானாக.//

நான் நினைக்கிறேன். தம்பி தாஜுதீன் இம்முறை ஒரு சாட்டையைக் கையில் எடுத்து இருக்கிறார். அவ்வளவு விரைவில் இந்த எழுத்துச் சாட்டையை கீழே போட வேண்டாம்.

சமுதாயத்தை வழிகேடுப்பவர்கள் எவ்வளவு முனைப்பாக இருக்கிறார்களோ அதைவிட அதிகமாக உண்மைகளை உலகுக்கு உரைப்பதில் உங்களைப் போன்ற இளைஞர்களின் உழைப்புத் தேவை. பாராட்டுக்கள்.

Ebrahim Ansari said...

தம்பி இப்னு அப்துல் ரஜாக் அவர்களின் கருத்து குறிப்பாக ஷியாக்கள் பற்றிய வரலாற்று செய்திகள் நிச்சயம் எழுதப் பட வேண்டும். இன்ஷா அல்லாஹ் எதிர்பார்ப்போமாக!

Ebrahim Ansari said...

அப்படியே குழப்பவாதி இப்னு சபா பற்றியும் எழுதுங்கள். இன்ஷா அல்லாஹ். இப்போது பல இப்னு சபாக்கள் ஒழிந்ததாகத் தெரியவில்லை.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த பதிவை வாசித்து கருத்திட்ட சகோதரர்கள், வாசித்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மிக்க நன்றி.

ஜஸக்கல்லாஹ் ஹைரா..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சகோதரர்கள் இபுறாஹீம் அன்சாரி காக்கா, இப்னு அப்துல் ரஜாக் உங்கள் எண்ணமே என்னுடைய எண்ணம். இஸ்லாத்திற்கு எதிராக ஷியாக்கள் செய்த சூழ்ச்சிகளும், முஸ்லீம்களை கருவருக்கும் திட்டங்களை அவர்கள் நடைமுறைப்படுத்தியது பற்றிய தகவல்கள் விரைவில் தொகுத்துத் தர முயற்சிக்கிறேன்.

நபித்தோழர்களை நேசிப்போம், அவர்களை கண்ணியப்படுத்துவோம், அவர்களை கேவலப்படுத்தும் கயவர்களை களையெடுப்போம் என்ற சபதம் ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும். காரணம், இந்த தூய மார்க்கம் இன்று நம்மிடம் கிடைப்பதற்கு அல்லாஹ்வால் நபி(ஸல்) அவர்களுக்கு அளிக்கப்பட்ட மாபெரும் பொக்கிஷங்கள் நபித்தோழர்கள். அல்லாஹ் இந்த நபித்தோழர்களை வைத்தே திருக்குர்ஆனை பாதுகாத்தான், நபித்தோழர்களை வைத்தே ஷஹீஹான ஹதீஸ்களை நமக்கு தொகுத்துதர உதவி செய்தான்.

Unknown said...

இப்னு சபாஹ் என்ற யூதனாக இருந்து முஸ்லீமாக மாறியது போன்று நடித்தவனோடு கூட்டு சேர்ந்தது யார் என்று பார்த்தால் 'பார்ச்சீகம் எனப்பட்ட இன்றைய ஈரானின்' அன்றைய 'ஷியா மூதாதையர்தான்' என்பது வரலாறு கூறும் முதல் உண்மை.

ஈரான் என்னும் சாம்ராஜ்யத்தை - மாவீரன் அலெக்ஷாண்டெர் கூட ஒழிக்க முடியாத சாம்ராஜ்யத்தை - இஸ்லாம் என்ற கொள்கை ஒழித்து கட்டிவிட்டதை சகித்து கொள்ள முடியாத 'ஈரானிய சதிகாரர்கள்' யூதர்களோடு சேர்ந்து சதி செய்து 'முஸ்லீம்களுடன்' கலந்து பிரிவினை உண்டாக்கி நயவஞ்சகம் புரிய துவங்கிய கொள்கைதான் 'ஷியாக்களாக' அவர்களை உருவாக்கியது.

இந்த 'ஷியாக்கள்' கலிபா உமர் (ரலி) அவர்களை கொன்றபோது 'யூத கைகூலிகளோடு' சேர்ந்து கொண்டு நேரடியாக கொலை செய்தனர்.

எனினும் பின்னர் உஸ்மான் (ரலி) காலத்தில் இருந்து தங்களது செயல்பாடுகளை மாற்றிக்கொண்டு 'முஸ்லீம்களை' வைத்து 'முஸ்லீம்களை' காலி செய்த முனைந்து, முஸ்லீம்களிடையே 'உஸ்மான் (ரலி)' குறித்து கேவலமாக செய்தி பரப்பி அவரை குழப்பாவாதி என்று கூறி இறுதியில் அவரை கொலை செய்து விட்டு அவரது ஜனாஸாவை முறையாக 'அடக்கம்' செய்ய கூட விடாமல் செய்தனர்.

அலி (ரலி) அவர்களை இதே ஷியாக்கள் 'இப்னு சபாவின்' தூண்டுதலின் பேரில் 'கடவுளாக' சித்தரித்து பின்னர் சதி செய்து கொன்றனர். அலி (ரலி) அவர்களது மகன்களான ஹசன் (ரலி) அவர்களை விஷம் வைத்தும் ஹுசைன் (ரலி) அவர்களை 'போர் செய்ய தூண்டி விட்டு' பின்னர் துரோகம் இழைத்து பின் வாங்கி கொல்லப்பட 'காரணமானார்கள்' கூபாவை சேர்ந்த சதிகாரர்கள்.

Unknown said...

ஷியாக்கள் இஸ்லாத்தை 'குழப்ப' அலி (ரலி) அவர்களை கடவுளாக, அல்லாஹுவிர்க்கு சமமாக சித்தரிக்க முயன்றதன் விளைவுதான் 'அக்பர் அலி' அல்லது 'அலி அக்பர்' என்று 'அலி பெரியவன்' (அல்லாஹு பெரியவன் என்பதற்கு மாற்றாக) பெயர் வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார்.

மேலும் 'அல்லாஹுவிர்க்கு' பதிலாக ஈரானியர்கள் வணங்கிய கடவுளின் பெயரான 'குதா' என்னும் சொல்லையும் 'ஷியாகள்' பயன்படுத்துவர். உதாரணமாக 'குதா ஹாபிஸ்' என்று கூறுவார்கள் - 'அல்லாஹ் ஹாபிஸ்' என்பதற்கு பதிலாக.

அடுத்ததாக 'இமாம்களை தக்லீது செய்யும் முட்டாள்தனத்தை' புகுத்தி, அவுலியாக்கள், சூபியாக்கள் என்ற பெயரில் 'இறந்தோர்' சமாதிகளில் கல்லறைகள் கட்டி அவர்கள் 'செய்யாத அற்புதங்களை செய்ததாக சொல்லி' இறைத்தூதரை விட அவர்களை உயர்த்தி காட்டி மக்களை வழி கெடுத்தனர், இன்று வரை வழி கெடுக்கின்றனர்.

எங்களது ரசூலான முகம்மது நபி (ஸல்) அவர்களை பின்பற்றுகிறேன் என்று ஒரு முஸ்லீம் கூற வேண்டியது ஈமானின் அங்கம் என்ற நிலையில் 'இமாம்களை பின்பற்றுகிறேன்' என்று கூற வைத்தனர் 'தக்லீது செய்யும்' ஷியாக்கள்.

'காலிப்' போன்ற ஷியா கவிஞர்கள் ஆங்கிலேயர்களை, வெள்ளையர்களை 'வழிபடவே துவங்கினர்'.

'டாக்கியா' என்ற கொள்கையில், எப்படி வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ஏமாற்றி வாழலாம் என்ற 'ஷியாக்களின்' கொள்கையின் மூலம் 'தர்காக்களை' கட்டி 'முஸ்லீம்களோடு' கலந்து 'முஸ்லீம்களை' முழுமையாக கெடுத்து 'விபச்சாரம்', 'போதை பொருள் உபயோகம்', 'ஓரின சேர்க்கை' எல்லாவற்றிற்கும் மேலாக 'சமாதிகளை வணங்கும்' இணைவைப்பில் முஸ்லீம்கள் குப்பற தள்ளப்பட்டு - அறிவற்றவர்களாக, ஆன்மா இழந்தவர்களாக, இணை வைக்கும் 'தர்கா சமாதி வழிப்பாட்டை' கவிதைகளை வைத்து ஆதரிக்கும் அசிங்க பிறவிகளாக மாற்றினர்.

எனவே சமாதிகளை வணங்குவதை வைத்து, 'அக்பர் அலி' போன்ற பெயர்களை வைத்து, அல்லாஹுவிர்க்கு பதிலாக 'குதா' என்று கூறுவதை வைத்து, சூபியாக்களை பெரியோர்களை ஏற்றி போற்றுவதை வைத்து, முஹம்மது நபி (ஸல்) அவர்களை பின்பற்றுகிறேன் என்று கூறாமல் இமாம்களை பின்பற்றுகிறேன் என்று கூற வைப்போரை வைத்து ஒருவரின் 'ஷியா' மற்றும் அதன் வழிவாறான 'பரேல்வி', 'டியோபந்தி', 'சூபி' வழிகேடுகளை புரிந்து கொண்டு இம்மை, மறுமை வெற்றியை பாழாக்கும் ஈரானிய 'ஷியா' கொள்கையை விட்டு நம்மால் ஒதுங்க இயலும்.

எனவே 'மின்னுவதை எல்லாம் பொன் என்று நம்பாமல்', 'கவிதை புனைவோரின் பசப்புகளுக்கு மயங்காமல்' - அல்லாஹுவும் அவனால் வழிக்கட்டப்பட அவனது ரசூலும் மட்டுமே நேர்வழி காட்ட கூடியவர்கள் என்பதை, அல்லாஹ் மற்று அவனது தூதர் காட்டிய வழியில் நாம் யாவரையும் செலுத்தி, அதில் வரும் துன்பங்களில் பொறுமையுடன் இருக்க செய்து, நமது சிறிதும் பெரிதுமான அறிந்தும் அறியாமலும் செய்யப்பட்ட பாவங்களை மன்னித்து இம்மை மறுமை வெற்றியாளர்களாக 'முஸ்லீம் சமுதயாத்தை' ஆக்க அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறேன்.

"காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து. சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்த மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை)
".(103:1-3)

இப்னு அப்துல் ரஜாக் said...

சகோ khan testant நல்ல முறையில் விளக்கம் தருகிறீர்கள்.மாஷா அல்லாஹ்

Unknown said...

// பீஜேயும் பேசுகிறார்,கோவை அய்யூபும் பேசுகிறார்,ஷம்சுதீன் காசிமியும் பேசுகிறார்.இன்னும் பலர் இவ்வாறு மதிப்புக்குரிய ஸஹாபாக்களை பற்றி பேசும் போது,நமக்கு நெஞ்சு வெடித்து விடும் போல் உள்ளது. //

அன்புள்ள சகோதரர் இப்னு அப்து ரசாக் அவர்களே அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ். எனது பின்னூட்டம் குறித்த உங்களது நல்லெண்ணதிற்கு நன்றி.

அதே நேரம் உங்களது கருத்துக்களை தொடர்ந்து கவனித்து வருவான் என்ற முறையில் உங்களிடம், இஸ்லாமிய கொள்கை மற்றும் வரலாறு குறித்து இன்ஷா அல்லாஹ் இன்னும் உறுதியாக கருத்துக்களை எழுத வாய்ப்பிருப்பதாக நம்புகிறேன்.

முதலாவதாக, மதிப்புக்குரிய சஹாபாக்களை மதிப்பது வேறு, அவர்களது செயல்பாடுகளை - அவர்களும் மனிதர்கள்தான் என்ற முறையில் சீர் தூக்கி பார்த்து அதிலிருந்து படிப்பினை பெறுவது வேறு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இதில் வினோதம் என்னவென்றால் மூமின்களின் தாயாரான ஆயிஷா (ரலி) அவர்களையும் குலபாயே ராஷிதீன்களான உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரை படு கேவலமாக 'இஸ்லாத்தின் எதிரிகள்' என்று கேட்ட வார்த்தைகளால் திட்டும் 'சமாதி வணங்கி இஸ்லாமிய எதிரிகளான ஷியாக்களின்' பிரிவில் வந்த 'பறேல்விகளும்', 'தியோபந்தி நக்ஷ்பந்திகளும்' தான் இஸ்லாமிய வரலாறு அறியாத அப்பாவிகளை ஏமாற்றி - சாதரணமான இஸ்லாம் விரும்பும் அறிவு ரீதியான ஆய்வை திரித்து - நீங்கள் கூறியது போன்று 'நெஞ்ஜே வெடித்து விடும்' போலான நிலைக்கு ஆளாக்குகின்றனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இஸ்லாமிய வரலாறு மற்றும் சஹாபாக்களின் வரலாற்றை ஆய்வு செய்வதை தவிர்த்து புனிதம் புனிதம் என்று எண்ணுவதற்கும் 'குரானை' ஓதாமல், மொழி பெயர்த்தாவது புரிந்து கொண்டு படிக்காமல் அதை வீட்டில் உயரமான யாருக்கும் எட்டாத இடத்தில் நல்ல உறை போட்டு முடி வைப்பதற்கும் எந்த வித்தியாசமுமில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

மேலும் இந்த போக்கு தான் இமாம்களை, இஸ்லாம் சொல்லாத 'சூபி' எனப்படும் ஈரானிய 'போலி துறவிகளை' இறைத்தூதரை விட உயரமான இடத்திற்கு கொண்டு சென்று 'ஷியாக்களின் இரானிய கடவுளை' குதா என்று அழைத்து, நான் 'ஹனபி' அபு ஹனீபாவை பின்பற்றுகின்றேன் என்று 'முட்டாள்தனமாக' இஸ்லாமிய வரம்புக்கு அப்பாற்பாடு உளரும் 'போலிகளை' உருவாக்குகிறது.

மேலும் இந்த போக்கு 'இஸ்லாமிய அறிவில்லாத' வீட்டு பெண்களின் பேச்சை கேட்டு, பொண்டாட்டி பேச்சை கேட்டு இஸ்லாமிய எதிரிகளான 'ஈரானிய ஷியாக்களின்' 'ஷபே பராத்தை' (ஷபே என்பது பாரசீக மொழியில் இரவு என்பதாகும்) ரொட்டி சுட்டு கொண்டாட வைக்கிறது, நபிகள் நாயகம் பிறந்த தினத்தை கிருத்துவர்களின் கிறிஸ்தமஸ் பண்டிகையை பின்பற்றி மீலாது விழாவாக கொண்டாட வைக்கிறது, முஹராம்மை 'நபிகள் நாயகத்தின் கட்டளைக்கு' எதிராக துக்க மாதமாக மாற்றுகிறது, இறை தூதரே அறியாத 27 ஆம் இரவை 'லைலத்துல் கதிர்' என்று உறுதியாக அறிவித்து கொண்டாட வைத்து ரசூலை விட 'ஷியாகள்', 'சூபி போலி துறவிகள்' யாவரும் அறிவாளிகள் என்ற எண்ணத்தை நிலை நிறுத்துகிறது.

எனவே அல்லாஹுவை அறிந்து கொண்ட உண்மையான அறிவாளியாக, 'முஸ்லீம் அறிஞனாக' நீங்கள் திகழ முயற்சிக்கும் அதே நேரம், 'இஸ்லாம் பெயர் கூறி ஏமாற்றும் சமாதி வணங்கிகளின்', 'ஷியா வெறியர்களின்' முட்டாள்தனமான சதி செயல் குறித்து நீங்களும் விழிப்புணர்வுடன் இருந்து உங்களை சுற்றி உள்ளோரையும் எச்சரித்தால்,இன்ஷா அல்லாஹ் உங்களது 'நெஞ்சே வெடிக்கும் நிலையும்' வராது, 'சமாதி வணங்கி பயல்களின்' 'நெஞ்சே வெடித்து போகுமளவிற்கு' அவர்களின் இரட்டை வேடத்தை தோலுரித்து தொங்கவும் விடலாம்.

என்ன நான் சொல்வது? சரிதானே... : ) - அல்லாஹ் ஹாபிஸ், மாசலாம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு