Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

என் இதயத்தில் இறைத்தூதர் - 6 [மனிதம் இழக்கும் மதுப் பழக்கம் !] 7

அதிரைநிருபர் பதிப்பகம் | April 06, 2014 | , , ,

மனிதம் இழக்கும் மதுப் பழக்கம் !

அவர் ஒரு எமன் நாட்டுக்காரர், கலிபோர்னியாவில் வசிக்கிறார். அவர் ஒரு நாள், அங்கு ஒரு டாக்ஸியை அணுகி எங்கெல்லாம் liquor ஸ்டோர் இருக்கிறதோ அங்கு கொண்டு போ என பணிக்கிறார். டாக்ஸி ஓட்டுனரோ ஒரு முஸ்லிம்தான். அந்த எமனி சொன்னது போல் ஒவ்வொரு liquor  ஸ்டோர் க்கும் கூட்டிப்போக, அந்த எமன் தேசதவர்  உள்ளே சென்று கடை முதலாளிகளிடம் பேசிவிட்டு வருவதுமாக இருந்துள்ளார். இதனிடையே ளுஹர் தொழுகைக்கான நேரம் வருகின்றது. பள்ளிக்கு கூட்டிச் செல்ல சொல்கிறார். இருவரும் பள்ளி சென்று தொழுகையை நிறைவேற்றி விட்டு வெளியே வருகின்றார்கள். டாக்ஸி டிரைவருக்கு ஏன் இவர் இவ்வாறு ஒவ்வொரு Liquor கடைக்கும் செல்கிறார் ? என ஆவல் பிறக்கிறது. உடனே கேட்டும் விடுகிறார். 

அந்த எமன் நாட்டவரோ "யாரேனும் சாராயக் கடைகளை விற்க எண்ணினால் அதை வாங்கலாம் ,அதில் தான் இப்போதுள்ள நிலைமையில் காசு பார்க்கலாம் அதனால்தான் ஒவ்வொரு கடைகளுக்கும் செல்கிறேன்" என்று சொன்னதும்.

"அது எப்படி,நீ ஒரு முஸ்லிமாக இருக்கிறீர் இது சரியல்லவே !" என டாக்சி டிரைவர் சொல்லவும். அந்த எமனியின் பதிலைக் கேட்டவுடன், டாக்ஸி டிரைவருக்கு 'சொலக்'கென்றது. காரணம் அவர் நம்ம ஊர்காரர்(பின்னே அதிரைகாரருக்கு சொலக் இல்லாமல் இருக்குமா,சகோ நெய்னா கவனிக்க)அவர் என்னிடம் பகிர்ந்தவைகளே இவைகள். சரி அந்த எமனி என்னதான் சொன்னார் ?

"பிரதர் நான் முஸ்லிம், அதனால் சாராயம் குடிப்பதில்லை,அது ஹராம். ஆனால் மற்றவர்களுக்கு விற்கலாம் தானே !?" - 

தூக்கி வாரிப் போடாமல் இருக்குமா?

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள், மதுபானத்துடன் தொடர்புள்ள பத்து பேரைச் சபித்தார்கள் அவர்கள்.

1. மதுவை தயாரித்தவர்
2. அதை தயாரிக்கச் சொன்னவர்
3. அதை அருந்தியவர்
4. அதை சுமந்து எடுத்து வந்தவர்
5.அதை சுமந்து வரச் சொன்னவர்
6. அதை பரிமாறியவர்
7. அதை விற்றவர்
8. அதை விலைகொடுத்து வாங்கியவர்
9. அது யாருக்காக வழங்கப்பட்டதோ அவர்.
10. அதில் கிடைக்கும் வருமானத்தை உண்டவர்.
-அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி). நூல் : ஜாமிஉத் திமிதீ, பாகம் 1216

அரசாங்கத்திற்கு கோடி கோடியாக வருமானத்தை அள்ளித் தரும் இந்த மதுபானத் தொழிலால், கோடிக்கணக்கில் மக்கள் பலவகைகளில் பாதிப்படைவதைக்  கண்டும் காணாமல் இருக்கின்றன பல அரசுகள்.

இந்துமத புராணங்களில், அவர்களால் புனையப்பட்ட போலி தெய்வங்கள் எல்லாம் மதுவகைகளை புழங்கியதாக சொல்லப்பட்டு வருகிறது. அதேபோன்று, இயேசுவின் இரத்தம் என சொல்லி கிறிஸ்தவ ஆலயங்களில் wine பரிமாறப்படுகின்றது. இப்படி பிற மதங்களின்  போதனைகள் மதுவிற்கு வக்காலத்து வாங்குவதாகவே அமைந்துள்ளன.

இஸ்லாம் மட்டுமே,  "மது தீமைகளின் தாய்" என்று சொல்லி அதனை நெருங்க வேண்டாம் என நம்மை தடுத்து வைத்திருக்கின்றது.

இஸ்லாம் சொல்பவைகள்தான்  இன்றைய உலக நடப்புக்கள் என நிரூபித்துக் கொண்டுள்ளன. உலகின் பல்வேரு நாடுகளிலும், அது எந்த நாடாக இருப்பினும் - நடக்கும் குற்றங்களுக்கு முதல் மூல காரணமாக இருப்பது "மதுவே" என நிருபிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு Tasmac என்ற பெயரில் சாராயம் விற்று வருவதை நாம் அறிவோம். கள்ள சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்று பெயர் காரணம் சொல்லப்பட்டு. அரசாங்கமே இந்த அமைப்பை 1983-ம் வருடம் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. கலைஞர் கருனாநிதியின் ஆட்சியில் புத்துணர்வு பெற்று, இப்போது அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் மிகவும் செழிப்புற்று விளங்குகிறது. அந்த அளவிற்கு திராவிடக் கழக ஆட்சிகள், தமிழக மக்களை குடிகாரர்களாக ஆக்கி மகிழ்கிறது. இதனால், பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்தும், தற்கொலைக்கு ஆளாகியும், வறுமைப் பட்டும், நிம்மதியின்றியும் வாடுவதை, வதைபடுவதை கேட்க நாதியில்லை.

இந்த குடித் தொல்லையால், பெண்கள் கற்பழிக்கப்படுவதும், சட்டம் ஒழுங்கு கெடுவதும் பற்றி எந்த அரசுகளும் கவலை கொண்டதாக தெரியவில்லை. ஆனால். அரசின் கஜானா நிறைந்தால் போதும் என்று சாராய விற்பனையைப் பெருக்க முயற்சி மேற்கொள்ளப் படுகின்றது. எவன் செத்தால் எனக்கென்ன ? எவள் தாலி அறுந்தால் எங்களுக்கென்ன என்ற நிலைதான் நாம் காண முடிகிறது.

ரூ 18,081.16 கோடி ரூபாயை நிகர வருமானமாக ஈட்டிய (2011-12-ம் ஆண்டு கணக்கு) இந்த Tasmac நிறுவனத்திற்கு 41 கிடங்குகளும் 6,500 கடைகளும் இருக்கின்றன. இன்னும் இது பெருகிக் கொண்டே செல்கின்றன. இதனால் பொது மக்களின் கவலைகள் அதிகரித்து வருவதை யாரும் கண்டு கொள்ளவில்லை.

ரத்தத்தில் காணப்படும் எத்தனால் அளவு ஒரு குறித்த அளவை விஞ்சினால் அவர் சட்டரீதியாக "போதையில் உள்ளவர்" என கருதப்படுவார். இவ்வாறுள்ள நிலைமையில் அவர் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். ஆனால், நடை பெறுகின்ற வாகன விபத்தைக் கனித்துப் பார்த்தோமேயானால், மிக அதிக அளவில் இந்தக் குடிகாரர்களின் வேலையாகத்தான் இருக்கும்.

1994-ல் உருவான உலக வர்த்தக அமைப்பு, மதுபானத்தை சுதந்திர வர்த்தகப் பொருளாக வகைப்படுத்துகிறது. இப்படி உலக நாடுகளில் அங்கீகாரம் கொடுத்து சாமான்யனும் அதை ஏதோ மருந்துப் பொருளாக உட்கொண்டு, தானும் கெட்டு, அதன் குடியையும் கெடுத்து, உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டுள்ளான்.

1980-களில் குடிப்பவர்களின் குறைந்த பட்ச வயது 26-ஆக இருந்தது. 2007-ல் 17 ஆக குறைந்து விட்டது. அசோசெம் என்கிற வர்த்தக கூடமைப்பின் சமூக வளர்ச்சிப் பிரிவு செய்த ஆய்வில் 19-26 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் மத்தியில் குடிப்பழக்கம் 60 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும், கடந்த 10 ஆண்டுகளில் டீன் ஏஜ் குடிப்பழக்கம் 100% அதிகரித்திருப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

மதுவின் மூலமாக அறியப்படும் எத்தனால் என்பது ஒருவகையான வேதிச் சேர்மம் ஆகும். இது எரியக் கூடிய தன்மையுடையதும், நிறமற்றதுமாகும். சர்க்கரையை கொதிக்கச் செய்து எத்தனால் தயாரிப்பது காலந்தொட்டு நடைமுறையில் உள்ள பழக்கமாகும். அண்மைக் காலங்களில் எத்தனால் ஒரு மாற்று எரிபொருளாக முன் வைக்கப்படுகிறது, நேரடியாக வாகனங்களில் எரிபொருளாகவும், பெட்ரோல் போன்ற எரிபொருள்களோடு கலந்தும் இதனைப் பயன்படுத்த இயலும். இதன் மூலக் கூறு எண் C2H6O என்பதாகும். இது மதுவகைகள் செய்ய கலக்கப்படுகின்ற ஒன்றாகும் எனும்போது, இது எவ்வாறெல்லாம் நம் ஈரல்களை பாதித்து அழுகச் செய்து, மரணம் சம்பவிக்க  காரணமாக அமைகிறது என்பதை அறிந்தால் மனம் பதைக்கிறது. ஆனால், மதுப் பிரியர்களோ திருந்தின பாடில்லை.

நம் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒரு கூற்றாக மறுமை நாளின் அடையாளமாக, மது அருந்துவதைப் பற்றியும் கூறியுள்ளார்கள்.

"கல்வி அகற்றப்படுவதும், அறியாமை வெளிப்படுவதும், மது அருந்தப்படுவதும், விபச்சாரம் பகிங்கரமாக நடைபெறுவதும், ஐம்பது பெண்களுக்கு ஒரு நிர்வாகியாக இருப்பான் என்ற அளவுக்கு ஆண்கள் குறைந்து பெண்கள் அதிகமாவதும் மறுமைநாளின் அடையாளமாகும் இவை ஏற்படாத வரை மறுமைநாள் வராது" என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டுள்ளேன். - அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக்(ரலி), நூல் : புஹாரி : 6808.

இன்று முஸ்லிம் நாடுகளிலும் அரசல், புரசலாகவும், பகிங்கரமாகவும் மது விற்பனை கொடி கட்டிப் பறக்கிறது. முஸ்லிம் பெயர் தாங்கிகளும், மதுவை ஏதோ 'டானிக்' என்ற நினைப்பில் அருந்துகின்றனர். நம் ஊர் நிலைமையும் மோசமாகத்தான் உள்ளது. இன்றைய இளைஞர்களில் பலர் மதுவுக்கு அடிமையாகி தங்கள் வாழ்வையும் இழந்து ஈமானையும் இழக்கும் துர்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். நம் ஊர் சங்கங்களுக்கு பெண்களால் "குலா" விட்டு வரும் புகார்க் கடிதங்களில் குடிகார கணவனிடமிருந்து விடுதலை வேண்டும் என்பதும் அடக்கம். அதேபோல், ஆண்கள், பல சங்கங்களை நாடி 'தலாக்' வேண்டும் என்ற விண்ணப்பதின் முக்கிய சில சாராம்சங்களாக அமைபவைகள் செல்போன் மற்றும் ஆட்டோ தொடர்பு  என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இரண்டிலும் என்ன தீமைகள் விளைந்து கொண்டிருக்கின்றன என்பதை நீங்களே புரிந்து கொள்ள இயலும்.நான் விரிவாக செல்ல விரும்பவில்லை.

இதுவரை யாரும், என் கணவன் / மனைவி தொழுவது இல்லை, குர்ஆன் ஓதுவது இல்லை, நோன்பு நோற்பது இல்லை, ஷிர்க் வைக்கிறாள், தட்டு, தாயத்து, கந்தூரி, தர்கா என்று அலைகிறாள் என்பதற்காக "தலாக்" என்ற ஆயுதத்தை எடுத்ததாக காணோம், "குலா" தரக் காணோம் !

இதெற்கெல்லாம் அடிப்படைக் காரணம், அடிப்படை இஸ்லாமிய அறிவு இல்லாதது, கணவன் எப்படி சம்பாதித்தால் எனக்கென்ன ? எனக்கு மாதம் ஐந்து இலக்கத்தில் செலவுப் பணம் தந்தால் போது என்ற எண்ணமும், ஹலால் / ஹராம் பேணாமையே.

இறுதியில், இருவரும் நஷ்டப்பட்டு, ஹராமான பொருளை உண்ணக் கொடுத்து - ரத்தமும் - சதையையும் ஹராமாக்கிக் கொண்டு, இறுதியில் நரக படுகுழிக்கு ரிசர்வ் செய்யும் அவலத்தை எண்ணி திருந்தினால் நமக்கே நல்லது.யா அல்லாஹ், எம்மையும், எம் சமுதாய மக்களையும் காப்பாயாக - ஆமீன் !

"ஒரு காலம் வரும் அப்போது மக்கள் தாங்கள் சம்பாதிப்பவை ஹலாலா ? ஹராமா ? என்பதை பொருட்படுத்த மாட்டார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் -அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) - நூல் : புஹாரி.

நல்ல வழியில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்த காலம் மலையேறிவிட்டது. தான் செய்யும் தொழிலால் சமுகமே பாதிக்கும் என்று தெரிந்தும், அந்த தொழிலை செய்யவே நாட்டம் கொள்கிறான்.

இறைவனின் கோபத்தைப் பெற்றுத் தரும் தொழில் இது எனத் தெரிந்தும் அந்த தொழிலையே செய்கிறான். இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ளதா ? இல்லையா ? என்றெல்லாம் சிந்திப்பதில்லை.

"நாய் விற்ற காசு குறைக்காது"
"கருவாடு விற்ற காசு நாறாது"
"சாராயம் விற்ற காசு போதை ஆவாது"

என்று கூறும் அளவுக்கு தவறான / ஹராமான தொழில், நல்ல / ஹலாலான தொழிலாக மாற்றிவிட்டார்கள். இந்த சம்பாத்தியம் முலம் தானும் ஹராமை உண்டு, தன் தாய் தந்தை, பிள்ளைகள், மனைவி, உற்றார் உறவினர் என்று எல்லோருக்கும் அந்த ஹராமான உணவை  உண்ண வைக்கிறான். இதன் விபரீத விளைவுகளை, நாளை மறுமையில் சந்திக்க நேரிடுமே என்று கவலை கொண்டதாகத் தெரியவில்லை.

"நபியே, நீங்கள் கூறுங்கள், எனது அடியார்களே ! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும். அல்லாஹ்வின் அருளைப் பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்து விட வேண்டாம் (நீங்கள் பாவத்திலிருந்து விலகி, மனம் வருந்தி, மன்னிப்பை கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்களுடைய) பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடுவான் ஏனென்றால், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும், கிருபை உடையவனாகவும், இருக்கின்றான்."

ஆகவே (மனிதர்களே) உங்களை வேதனை வந்தடைவதற்கு முன்னதாகவே, நீங்கள் உங்கள் இறைவன் பக்கம் திரும்பி, அவனுக்கு முற்றிலும் வழிபட்டு நடங்கள் (வேதனை வந்து விட்டாலோ) பின்னர் (ஒருவராலும்) நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்"

"(மனிதர்களே) நீங்கள் அறியாத விதத்தில் திடீரென உங்களிடம் வேதனை வருவதற்கு முன்னதாகவே, உங்கள் இறைவனால் உங்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட (வேதங்களில்) மிக அழகான இதனைப் பின்பற்றுங்கள்" 

திருக்குர்ஆன் : அத்தியாயம் அஸ்ஸூமர் வசனங்கள் 53, 54, 55

இன்ஷா அல்லாஹ் தொடரும்

இப்னு அப்துல் ரஜாக்

7 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சாராய வியாபாரிகளுக்கும் நல்ல அறிவுரைகள்!

adiraimansoor said...

///"ஒரு காலம் வரும் அப்போது மக்கள் தாங்கள் சம்பாதிப்பவை ஹலாலா ? ஹராமா ? என்பதை பொருட்படுத்த மாட்டார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் -அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) - நூல் : புஹாரி.///

மச்சான்

இந்த ஹதீஸ் 1400 வருடங்களுக்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருவாய் மலர்ந்தது எவ்வளவு நிதர்சனமான உண்மை என்பது அறிய வருகின்றது

மேக்சிமம் அமேரிக்காவிலும் லண்டனிலும் கடையில் வேலை செய்பவர்களின் நிலையை நினைக்கும்போது மிக பரிதாபத்துக்குள்ள விஷயம் அந்த குறைந்த அளவு அமெரிக்காவில் கடைகளில் வேலை செய்யும் சாகோதரர்கள் யார் என்று கண்டுபிடித்து அந்த சகோதரர்களுக்கு இந்த பதிவு கிடைக்குமாறு ஏற்பாடு செய்யவும் அல்லாஹ் ஹிதாயத்தை கொடுக்கலாம் செய்யும் தவறை உணரலாம் குறைந்த பட்சம் மண உறுத்லையாவது உண்டாகலாம்

Shameed said...

//நல்ல வழியில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்த காலம் மலையேறிவிட்டது. தான் செய்யும் தொழிலால் சமுகமே பாதிக்கும் என்று தெரிந்தும், அந்த தொழிலை செய்யவே நாட்டம் கொள்கிறான்//

உங்களின் ஆதங்கம் சரியோ.நல் வழியில் சம்பாரிக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலனவர்களிடம் இல்லை ஒருசிலர் ரகசியமாக வட்டிக்கு கொடுத்துக்கொண்டு ஊர்முழுக்க பயான் சொல்லி திரிகின்றார்கள் .வட்டிக்கு கொடுப்பதை பற்றி கேட்டால் உதுமான் லெப்பை சொல்வது ஊருக்குத்தான் தனக்கில்லை என்ற பாணியில் பதில் சொல்கின்றார்கள்

இப்னு அப்துல் ரஜாக் said...

கருத்திட்ட,வாசித்த,துவா செய்த அனைவருக்கும் நன்றி.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மது !

அருந்தாதவனையும் குடிகாரன் என்று சொல்ல வைக்கும் போதை அதில் இருப்பதை எல்லோரும் அறிந்திருந்தும், பேச்சிலும் எழுத்திலும் தடுமாற்றம் இருந்தால் ! அவர்களையும் குடிகாரனாட்டம் என்றுதான் சொல்கிறார்கள்.

நல்லதொரு கருவை எடுத்து, சிந்திக்க வைத்திருக்கிறீர்கள் தம்பி!

sabeer.abushahruk said...

பட்டி தொட்டியெல்லாம் புட்டிச் சாராயம் கொடி கட்டிப் பறக்கிறது; வட்டிக்கு வாங்கியேனும் புட்டி அடிக்கும் இக்கால மனிதர்கள் தலையில் குட்டி வைக்கிறது இக்கட்டுரை.

வாழ்த்துகள் தம்பி.

Ebrahim Ansari said...

மனிதம் இழக்கும் மதுப பழக்கம். - தலைப்பே அசத்தல்.

நான் அறிந்து வேதனைப் பட்ட ஒன்று பெருநாள் தினங்களில் அதிரையில் உள்ள மதுக் கடைகளில் சரித்திரம் காணாத வியாபாரம் என்ற புள்ளி விபரம்.

அல்லாஹ் பாதுகாப்பானாக்.!

மது அருந்தாமலும் வர்க்கூட்டிய மமதைகளுக்கும் போதை என்றுதான் சொல்கிறார்கள். உதாரணமாக புகழ் போதை. அதிகார போதை ஆணவ போதை.

எல்லாவகை போதையில் இருந்தும் அல்லாஹ் காப்பானாக!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு