Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இட ஒதுக்கீடு! – இன்னும் ஒரு ஆய்வா !? - பகுதி இரண்டு ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | April 17, 2014 | , , , , ,

பட்டு வேட்டியைப் பற்றி கனாக்கண்டிருந்த போது
நாங்கள் கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது.” 

என்று வைரமுத்து ஒரு கவிதையில் கூறியிருப்பார். 

இந்திய சுதந்திரத்துக்கு முன்பு ஆங்கில ஆட்சியில் வழங்கப் பட்டிருந்த இட ஒதுக்கீடு கூட சுதந்திர இந்தியாவால் சுரண்டப்பட்டது என்பது வேதனையான வரலாறு.

நீதியரசர் ரெங்கநாத் மிஸ்ரா அவர்களின் விசாரணைக் கமிஷன் தந்த அறிக்கையை கடந்த வாரம் பார்த்த நாம் இப்போது இன்னொரு நீதிபதி இராஜேந்திர சச்சார் அவர்களின் தலைமையில் இந்திய முஸ்லிம்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர மற்றொரு கமிஷனையும் அமைத்தது பற்றியும் அந்த அறிக்கையின் சாராம்சங்களையும் காணலாம். 

இந்த விசாரணைக் குழுவில் மொத்தம் ஏழு பேர்கள் இருந்தனர். இந்தக் குழு நாடு முழுதும் சுற்றுப் பயணம் செய்தது. பலரை சந்தித்தது. களப்பணியாற்றி பல உண்மைகளைக் கண்டறிந்தது. ஆனாலும் சில அரசுத்துறைகள், அரசு சார்ந்த நிறுவனங்கள், முக்கியமாக இராணுவத்தில் தரைப்படை, கப்பல்படை, விமானப்படை ஆகியவை இந்தக் குழுவுக்கு கேட்ட தகவல்களை முறையாகத் தர மறுத்துவிட்டன என்பதையும் நாம் பதிவு செய்தாக வேண்டும். 

நீதிபதி சச்சார் கமிஷன் தனது அறிக்கையை நவம்பர் 2006ல் மத்திய‌ அரசிடம் சமர்பித்தது. அந்த அறிக்கையில் முஸ்லிம்கள் கல்வி, அரசு வேலைவாய்ப்பு போன்றவற்றில் இந்தியாவில் அவர்களின் மக்கள்தொகையின் ஒப்பீட்டு விகிதாச்சாரத்தைக் காட்டிலும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டியது. இன்னும் ஒரு படி மேலே சொல்லப்போனால் தலித்துகள், மலைவாழ் மக்களை விடவும் பின் தங்கிய நிலையில் இருந்து வருகின்றனர் என்பதை படம் பிடித்துக்காட்டியது. இந்த அறிக்கை, இவ்வளவு காலமும் முஸ்லிம்கள் எதோ ராஜபோக வாழ்க்கை வாழ்வதாக எண்ணிக கொண்டு அவர்களைப் பற்றி எண்ணிப் பார்க்காமலும் ஏறெடுத்துப் பார்க்கமலும் இருந்தவர்களுக்கு ஒரு இடி போல் இறங்கியது. அரசுகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கே தங்களுடைய உண்மை நிலை என்ன என்றும் உணர்த்தியது. 

சச்சார் கமிட்டி கண்டறிவித்த உணமைகளில் நாம் அறிந்துகொண்ட அதிர்ச்சி தரும் நிலைகள் சில:
  • 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 13.4% முஸ்லிம்கள் இருக்கின்றனர். 
  • ஆனால் ஐ.ஏ.எஸ் பணியில் முஸ்லிம்கள் 3%, மட்டும் 
  • பட்டப்படிப்பு படித்தவர்கள் 3%, மட்டுமே 
  • இரயில்வே துறையில் 4.5% மட்டுமே (அதில் 98.7% பேர் கடை நிலை ஊழியர்கள்) இருந்து வருகின்றனர். 
  • 25.2% முஸ்லிம்கள் வாழக்கூடிய மேற்கு வங்கத்தில் முஸ்லிம் அரசு ஊழியர்கள் 4.7% மட்டுமே ஆவார்கள்.
  • 18.5% முஸ்லிம்கள் வாழும் உத்திர பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் 7.5% மட்டுமே ஆவார்கள் என்று முஸ்லிம்களின் அவல நிலையை பட்டியலிட்டது சச்சார் கமிஷன்.
  • நாடு முழுவதும் முஸ்லிம்களே மிகக் குறைந்த வருமானத்தில் வாழ்கின்றனர். முஸ்லிம்களில் 94.8% பேர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கிறார்கள். ரேஷன் கார்டு வைத்திருக்கும் 32% தலித் மக்களோடு ஒப்பிடுகையில் 22% முஸ்லிம்களிடமே ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. விவசாயம் செய்துவரும் முஸ்லிம்களில் 2.1% விவசாயிகளே டிராக்டர் முதலிய விவசாய உபகரணங்களை வைத்து இருக்கிறார்கள். நிலங்களுக்கு நீர் பாய்ச்சும் பம்ப்செட் வைத்திருப்பவர்கள் 1% பேர்களே. பாராளுமன்றத்தின் 543 உறுப்பினர்களில் 33 பேர்களே முஸ்லிம்கள். இவர்களில் முஸ்லிம்களுக்கு உண்மையாக உழைப்பவர்கள் இன்னும் சொற்பம். உயர்கல்வி பயில்வதற்கு கல்விக்கடன் பெற்றுள்ள மொத்த மாணவர்களில் 3-2% மட்டுமே முஸ்லிம்கள் . 
  • நீதித்துறையில் தலித்துகளின் பங்கு 20 சதவிகிதமாக இருக்கிற போது முஸ்லிம்கள் பங்கு 7.8 சதவிகிதம் மட்டுமே. தலித்துகளில் 23 சதவிகிதத்தினருக்கு குழாய் குடிநீர் கிடைக்கையில் முஸ்லிமகளில் 19 சதவிகிதத்தினருக்கு மட்டுமே அது கிடைக்கிறது. பொதுத்துறை (7.2%) சுகாதாரத்துறை (4.4%) ரயில்வே துறை (4.5%) போன்ற பல்வேறு அரசு சார்ந்த துறைகளில் தலித்களைவிட முஸ்லிம்களின் பங்கு குறைவாகவே இருக்கிறது. மின்சாரமே இல்லாத கிராமங்களில் அதிகம் வாழ்பவர்கள் முஸ்லிம்களே. அதுபோல சேரிகளில் வாழ்பவர்களிலும் முஸ்லிம்களே அதிகம். இவை எல்லாம் நீதிபதி சச்சார் கமிட்டி கண்டறிந்து அறிவித்தவை. 
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் இந்தியாவில் ஓரளவு நல்ல நிலையை அடைந்துள்ளதற்கு காரணம் அவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடுதான் என்று இடஒதுக்கீட்டின் அவசியத்தை நீதிபதி சச்சார் குறிப்பிட்டு மட்டுமிருந்தார். இந்த அறிக்கையில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் முஸ்லிம்கள் தங்களின் கஷ்டத்தின் காரணமாக தங்களின் இனப் பெருக்கத்தை கருத்தடை முறைகளைப் பின்பற்றி தன்னிச்சையாகக் குறைத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் காரணத்தால் முஸ்லிம்களின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. நீதிபதி இராஜேந்திர சச்சார் அளித்த இந்த அறிக்கையில் முஸ்லிம்கள் இவ்வளவு கீழான நிலையில் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர் என தீர்க்கமாக அறிக்கை தந்து அறிவித்தது.

“பேசும்போது நல்லா பேசு ! ஆனா பாட்டெழுதும்போது பாட்டை விட்டுடு” என்று ஒரு புகழ்பெற்ற வசனம் தமிழ்நாட்டில் உலவி வந்ததுண்டு. அதே போல் முஸ்லிம்களின் அவலநிலையை பட்டியலிட்ட சச்சார் கமிஷன் துரதிஷ்டவசமாக முஸ்லிம்களின் துயர்களைக் களைய வழிமுறைகளை அல்லது இடஒதுக்கீடு போன்றவற்றிற்கான அளவீடு அல்லது இன்னும் என்னவெல்லாம் செய்யவேண்டுமென்ற பரிகாரம் எதையும் பரிந்துரை செய்யவில்லை. 

இதற்கு மாறாக, நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கின்றது, இந்நிலை மாற முஸ்லிம்களுக்கு 10% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரையை பதிவு செய்து இருந்தது.

ஆயினும் ஒன்றைச் சொல்லலாம். நீதிபதி சச்சார் கமிஷன், இந்திய சமூக இனங்களுக்கிடையே நிலவி வரும் ஏற்றத்தாழ்வு எனும் நோயை ஆராய்ந்து கண்டறிந்து அறிவித்தது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனோ இப்படிப்பட்ட ஏற்ற தாழ்வை நீக்கும் நிவாரணம் இடஒதுக்கீடுதான் என்றது. 

ஆனால் இந்த இரு கமிஷன்களின் அறிக்கைகளும், பரிந்துரைகளும் முஸ்லிம்களின் மறுவாழ்வு மற்றும் நலத்திட்டங்களுக்காக பரிந்துரை செய்திருந்தாலும் அந்த கருத்துக்கள் அடங்கிய அறிக்கைகளை பலகாலம் தொட்டிலில் போட்டு தாலாட்டி தூங்கவைத்து விட்டு தேர்தல் நேரத்தில் மட்டும் இடஒதுக்கீடு என்று தேர்தல் அறிக்கைகளில் மத்திய அரசை ஆண்ட காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டு முஸ்லிம்களை ஏமாற்றி வருகிற வாழைப் பழக் கதையை வழக்கமாக வைத்திருக்கிறது. அதே போல் அரசு , இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள நினைக்கும் போது அதை எதிர்த்து கருத்து தெரிவித்த கட்சிகள் கூட சமூக நீதி, முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு என்றெலாம் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிடுவது நகைச்சுவை இல்லாமல் வேறென்ன?

இந்த வாழைப்பழக் கதை மாதிரியே “திரும்ப முதல்லேருந்து வா” என்று இன்னொரு நகைச்சுவைக் கதையும் உண்டு. அதே போல்தான் இடஒதுக்கீடு என்ற உன்னத சமூக நீதிக் கொள்கைகள் மத்திய மாநில அரசுகளால் பந்தாடப்படுகின்றன. சுதந்திரம் பெற்று அறுபதுஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. நாட்டில் நலிவடைந்த பிரிவோரின் நிலைகள் என்ன என்று அரசு அறிந்து கொள்வதற்கு விசாரணைக் குழுக்கள் வேண்டுமென்று ஒன்றுக்கு இரண்டு குழுக்கள் போடப்பட்டு அறிக்கைகளும் நீதியின் வழியில் நீதிபதிகளால் சாதகமாகவே தரப் பட்டுவிட்டன. அவற்றை நிறைவேற்றுவதற்கு அதிகாரம் படைத்த அரசுகள் வாயளவில் முஸ்லிம்களுக்கு வெண்ணை தடவுகின்றனவே தவிர முழு அளவில் அந்த அறிக்கைகள் பரிந்துரைத்தவைகளை நடைமுறைப் படுத்த மனம் வரவில்லை என்றால் – இயலவில்லை என்றால்- சட்ட வடிவம் தந்து எழுந்து நடக்க வைக்காமல் சவளைப் பிள்ளையாகவே காலத்துக்கும் வைத்திருக்கிறது.

இன்னொரு வரலாற்று செய்தியையும் இங்கு பதிவு செய்தாக வேண்டும். இவ்வாறு நீதியரசர்கள் சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா போன்ற விசாரணை குழுக்கள் அமைக்கபப்ட்டது வரலாற்றில் முதல் முறையல்ல. இவ்வாறு இஸ்லாமிய சமுதாயம் குறித்து எச்சரிக்கை மணி ஒலிக்கப்படுவதும் முதன் முறை அல்ல. 1953ல் காகா கலேல்கர் கமிஷன், 1983 கோபல் சிங் கமிஷன், 1989 மண்டல் கமிஷன் என்று பல கமிஷன்கள் அமைக்கபப்ட்டே இருந்தன. 

இப்படியே இந்த சமுதாயம் ஆசைகாட்டி மோசம செய்யபடுவது ஒரு வழக்கமான அரசியல் விளையாட்டு என்றால் அதன் அரசியல் பின்னணி என்ன?

அதன் பின்னணி ஒன்றுமில்லை. இந்திய தேசிய ரத்தத்தில் கலந்துவிட்ட வகுப்பு துவேஷம் என்கிற விஷம்தான் காரணம். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மேலே குறிப்பிட்ட முஸ்லிம்களுக்கு சாதகமான இரண்டு நீதிபதிகளின் பரிந்துரைகளை சட்டமாக்கினால் அதை பிஜேபி போன்ற இன மத துவேஷ எதிர்க் கட்சி எதிர்க்கும் என்பதுதான் முதன்மைக் காரணம். இதே பிஜேபி எதிர்த்தாலும் அணு உலை அமைப்பு போன்ற ஏனைய எல்லா சட்டங்களையும் அவசரச் சட்டம் போட்டாவது நிறைவேற்றத் துணிகிற மத்திய அரசு, முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டு விஷயத்தில் மட்டும் பாராளுமன்றத்தின் மேற்கூரையை பார்த்துக்கொண்டே பத்தாண்டுகளை ஓட்டியது ஏன்? எதிர்க் கட்சியான பிஜேபி மட்டுமல்ல, காங்கிரசுக்குள்ளேயும் காங்கிரசின் கூட்டணி என்ற பெயரில் அந்த அரசைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் கட்சிகளுக்குள்ளேயும் ஆர் எஸ் எஸ் சித்தாந்தங்களை மறைமுகமாக பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் அடிவருடிகள், கதராடை அணிந்து காந்தி பெயர்ச் சொல்லி கட்சிகளுக்குள் ஊடுருவி இருப்பதும்தான் காரணம்.

இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என்று அதன் அரசியல் சட்டத்தில் எழுதிவைக்கபப்ட்டு இருக்கிறது. உண்மைதான். மத சார்பற்ற அணி என்று அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் ஒரு பகுதி தங்களை அடையாள படுத்திக் கொண்டு இருக்கின்றன. ஆனால் நாம் கேட்க விரும்புவது என்னவென்றால் மத சார்பற்ற அணி என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அரசியல் கட்சிகள் உண்மையிலேயே சிறுபான்மையினருக்காகவும் தாழ்த்தப் பட்ட மற்றும் பிற்படுத்தப் பட்ட மக்களுக்காகவும் ஆக்கபூர்வமாக செய்தது என்ன? மத சார்பற்ற என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் முதலிய சிறுபான்மையினரின் வாக்குகளை குறிவைத்து வாய்ஜாலம் பேசுவதுதான் இந்தக் கட்சிகளின் குறிக்கோளாக இருக்கிறதே தவிர, உண்மையில் சிறுபான்மையினருக்காக காலம் காலமாக எந்த உண்மையான நன்மைகளை நடைப் படுத்தி இருக்கிறார்கள் என்பது நாம் சிந்திக்க வேண்டிய செய்தியாகும்.

அப்படி ஆக்கபூர்வமான காரியங்கள் நடந்திருந்தால் 
  • முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு பத்து சதவீதம் தரவேண்டுமென்ற நீதிபதிகளின் அறிக்கை ஆஸ்பத்திரிப் படுக்கையில் கிடந்தது ஆக்சிஜனுக்காக போராட வேண்டிய அவசியம் ஏன் ஏற்படுகிறது?
  • சிறைச்சாலைகளில் பல சிறுபான்மையினரை பல வருடங்கள் வழக்கு ஏதுமின்றி விசாரணைக் கைதிகளாகவே வைத்திருக்கவேண்டிய நிலைமை ஏன் ஏற்பட்டு இருக்கிறது? 
  • எல்லா இயக்கங்களும் மாறி மாறி போராட்டங்களை அறிவித்தும் நடத்தியும் கூட மத்திய மாநில அரசுகள் இந்த கோரிக்கைகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? 
ஏனென்றால் சிறுபான்மையினரின் பிரச்னைகள் தீர்க்கப் படாமலேயே இருக்க வேண்டும் அப்போதுதான் அவர்களை இங்கும் அங்குமாக உதைத்து மற்ற பெரிய கட்சிகள் பந்தாட இயலும் என்கிற கீழ்த்தரமான நோக்கம்தான். இதில் வேதனையாகக் குறிப்பிட வேண்டிய செய்தி என்னவென்றால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இயக்கங்கள் பெரிய அரசியல் கட்சிகளின் கால்களில் உதைபடும் கால்பந்தாக நாங்கள் வருகிறோம் என்று போட்டி போட்டுக் கொண்டு தாங்களே உருண்டு ஓடிப்போய் மைதானத்தின் நடுவில் உட்கார்ந்து கொள்வதுதான். 

இந்த நிலைமைகள் தான் மனசாட்சி உள்ள – எந்த இயக்கத்தைச் சேர்ந்த யாரும் உண்மை நிலைமைகள் என்று உணர்ந்து இருந்தாலும் கூட மதசார்பற்ற அணி என்று அறிவித்துக் கொள்ளும் அணியோடுதான் நம்மை ஏதாவது காரணம் சொல்லி இணைத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். காரணம், ஒரு புறம் வேடன் மறு புறம் நாகம் இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான் என்கிற நிலைமைதான் சிறுபான்மையினரின் நிலைமை. 

ஒருபுறம் மத வெறியர்கள் வெளிப்படையாக விளம்பரப் பலகை வைத்து இந்தப் பக்கம் வராதே! என்று நம்மை பயமுறுத்துகிறார்கள். மற்றொரு புறம் பிற அரசியல் கட்சிகள், நமது ஓட்டுப் பால் சுரக்கும் மடிகளில் ஆறுதல் விளக்கெண்ணையை தடவி செம்பு நிறைய பால் கறக்கிறார்கள். நாமோ பலவாறு பிரிந்து கிடப்பதால் அவர்களுக்கு ஜால்ரா அடித்துக் கொண்டு போயஸ் தோட்டத்துக்கும் கோபாலபுரத்துக்கும் முட்டுக் கொடுத்துக் கொண்டு அவர்கள் போடும் ஒன்று இரண்டு இடங்களுக்காக தயவை எதிர்பார்த்து நிற்கிறோம். இதற்காக நமது சொந்த சகோதரர்களை துர்வார்த்தைகளால் அர்ச்சிப்பதற்கும் நாம் தயங்குவதில்லை. இதே இட ஒதுக்கீட்டைக் காரணம் காட்டி நமக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் அவர்களின் கரங்களில் இருக்கும் கத்திகளுக்கு நாமே கழுத்தைக் கொடுத்து பலியாகிறோம். பிரித்தாளும் கொள்கையில் பெயர் பெற்றவன் பிரிட்டிஷ்காரன் என்று அன்று சொல்வார்கள். இன்றோ அரசியலில் வித்தகம் என்பது சிறுபான்மையினரையும் தலித்துக்களையும் கூறு போட்டுப் பிரித்து திக்காலுக்கு திக்கால் விட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டு முட்டி மோதவிடுவதுதான் என்பதாக ஆகிவிட்டது.

மிகுந்த வேதனையுடன் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். இந்து சகோதரர்கள் இடையே எவ்வாறு சாதிரீதியான கட்டமைப்பு உருவாகி இவர் செட்டியார், இவர் முதலியார், இவர் பிள்ளைமார் , இவர் வன்னியர் , இவர் கவுண்டர் என்று பாகுபாடுகள் ஊடுருவி உருவாகி இருக்கிறதோ அதற்கு சற்றும் குறையாமல் அதே அளவு வீரியத்துடன் முஸ்லிம்களிடையே இயக்கப் பாகுபாடுகளும் இயக்க வெறியும் நிலவி வருகிற உணமையை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். சாலையில் போகிற ஓர் இந்து சகோதரனை அடுத்த இந்து சகோதரன் இந்த ஆள் என்ன சாதி என்று கேட்பது போல் ஒரு முஸ்லிம் சகோதரனை மற்றொரு முஸ்லிம் சகோதரன் இவன் எந்த இயக்கத்தில் இருக்கிறான் என்று எடை போடுவது , ஆராய்வது இன்றைய சமுதாயத்தின் நடுவே வேதனையான விஷ விருட்சமாக வளர்ந்துவிட்டது. இந்து சகோதரர்கள் தங்களுடைய சாதித் தகராறுகளை தர்மபுரியிலும் பரமக்குடியிலும் மரக்காணத்திலும் முதுகுளத்தூரிலும் கீழ வளவு மற்றும் மேல வளவிலும் காட்டிக் கொள்கிறார்கள் என்றால் முஸ்லிம்கள் திருவிடச்சேரியிலும் அதிராம்பட்டினத்திலும் மதுக்கூரிலும் கிளியநூரிலும் காட்டிக் கொள்கிறார்கள் அல்ல காட்டிக் “கொல்கிறார்கள்” . இதையா இஸ்லாம் போதித்தது? இந்த ஒற்றுமையின்மை சால்வையை போர்த்திக் கொண்டு இட ஒதுக்கீடு கேட்டு இயக்கத்துக்கு ஒரு மாதிரி போராட்டங்கள் நடத்தினால் நமக்கு இஞ்சி போட்ட டீ கூட கிடைக்காது . இடஒதுக்கீடா கிடைத்துவிடும்? 

பல்வேறு இயக்கங்களின் போராட்டங்களுக்குப் பிறகு தமிழகத்தில் 3.5% கல்வியில் இட ஒதுக்கீடு கிடைத்தது. கிடைத்த இந்த இட ஒதுக்கீட்டிற்கு உரிமை கொண்டாடி ஒவ்வொரு இயக்கமும் தங்களது கொடிகளையும், பெயர்களையும் முன்னிறுத்திக் கொண்டன. விளைவு ஒரு இயக்கத்தார் மற்றொரு இயக்கத்தாரை பழிப்பதும், இழிப்பதும் காட்சியானது. இந்தக் கட்டுரை வெளியாகும் தினம் அன்றுவரை இந்தப் பகையுணர்வு நீங்கவில்லை. இந்த 3.5% இட ஒதுக்கீட்டைத் தந்த கட்சியும் அதன் தலைவரான கலைஞர் கருணாநிதியும் நமது கோரிக்கையான ஏழு சதவீதத்தை நமக்காக ஒரே நேரத்தில் தந்திருக்க இயலாதா? தரவில்லை. காரணம் அடுத்த தேர்தலுக்காக முஸ்லிம்களுடன் பேரம் நடத்த ஒரு கைப்பொருள் கையில் வேண்டும் என்பதுதான் காரணம். அதேபோல் அதை நாங்கள் அதிகரித்துத் தருகிறோம் என்று அடுத்தகட்சியும் இந்த இட ஒதுக்கீட்டை வைத்து நம்மிடம் அரசியல் பேரம் நடத்துவதற்கும் இவைகள் காரணமாக இருக்கின்றனவே தவிர இந்தக் காரணங்களும் பிரச்னையும் கோரிக்கையும் காலத்துக்கும் இருந்து கொண்டு இருந்தால்தான் நம்மைவைத்து இவர்கள் அனைவரும் நடத்தும் அரசியலும் இருக்கும். பிரச்னை தீர்ந்துவிட இவர்கள் விடமாட்டார்கள். அப்படிப் பிரச்னை தீர்ந்துவிட்டால் இவர்கள் நம்மோடு நடத்தும் அரசியலும் தீர்ந்துவிடும்.

இடஒதுக்கீடு பெறுவதற்கும் நம்மை கல்வி, வேலைவாய்ப்பு , சமூக நிலை ஆகியவற்றில் உயர்த்திக் கொள்ளவும் என்னவெல்லாம் வழியாக இருக்கலாம்?

முதலாவதாக நமக்குள் இருக்கும் இயக்க மயக்கங்கள் தீரவேண்டும். ஒற்றுமை ஒன்றே குறிக்கோளாக இருக்க வேண்டும். ஒற்றுமைக்கு குறுக்கே வரும் எவரையும், “ அண்ணன் என்னடா ! தம்பி என்னடா ! அவசரமான உலகத்திலே” என்று ஒதுக்கிவிட வேண்டும். 

அடுத்து நமது கல்வித்தகுதிகளை உயர்த்திக் கொள்ள வேண்டும். 

மூன்றாவதாக கல்வித்தகுதியை உயர்த்திக் கொள்வதுடன் நாம் கற்ற கல்விக்குத் தகுந்த அரசுப் பணிகளைத் தேடித்தரும் போட்டித் தேர்வுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்ள வேண்டும். அதே போல் பல உயர் கல்வி நுழைவுதேர்வுகளிலும் கலந்து கொள்ள வேண்டும். 

நான்காவதாக நமது அரசியல் வலிமையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். அரசியல் வலிமைய வலுப்படுத்தே வேண்டுமென்றால் இங்கே இருக்கும் பெரிய ஆலமரக் கட்சிகளின் நிழலில் வளர்ந்துவிட முடியுமென்ற நினைப்பை அகற்ற வேண்டும். நமக்கென்ற ஒரே ஒரு அரசியல் அமைப்பில் நாம் மட்டுமல்ல நம்முடன் கை கோர்க்க நம்மை போல் ஒடுக்கப் பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுடன் நமது தலைமையில் நமது கூட்டணி அமைந்தால் அரசியலில் – நிர்வாகத்தில் நாம் இந்தியாவுக்கே தலைமை தாங்க நம்மால் முடியும்.

காலமெல்லாம் உயர் சாதியினராலும் பெரும் கட்சிகளாலும் வார்த்தை அலங்காரங்களால் வஞ்சிக்கப் பட்டவர்களின் வரிசையில் வருபவர்கள் யார் என்று எண்ணிப் பார்த்தால் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட மக்களோடு முஸ்லிம் மற்றும் கிருஸ்தவ மக்களே வருவார்கள். இந்திய சமுதாயத்தில் இந்தப் பிரிவினரின் மக்கள் தொகை அளவுதான் அதிகம் . ஆனால் இவர்கள் ஆளப்படுவது இவர்களைவிடக் குறைந்த அளவுள்ள உயர் பிரிவு வகுப்பினரால் மட்டுமே. தங்களின் வாழ்வாதாரங்களுக்ககவும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களுக்காகவும் மற்றவர்களிடம் இவர்கள் துண்டேந்தி நிற்கும் நிலை ஒரு வித்தியாசமான வேடிக்கை. ஆகவே ஆண்டாண்டு காலமாக வஞ்சிக்கப்பட்டு வரும் சமூகத்தின் இப்பிரிவினர் தங்களின் கரங்களை வலுவாக கோர்த்து ஒரு மாற்று அரசியல் அணி உருவாகி நாட்டை ஆளும் நிலை வரும்போதுதான் உண்மையான சமூக நீதி இந்தியாவில் உருவாக வாய்ப்புண்டு. இந்த நிலை ஏற்படாதவரை வாழைப் பழக்கதைகளும் மறுபடியும் முதல்லே இருந்து வா போன்ற நிகழ்வுகளும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். 

உத்தரவுகளை இடும் நிலையில் உட்கார வேண்டிய சமூகங்கள் , தங்களின் உண்மை நிலைகளை உணராத வரையில் உத்தரவுகளை எதிர்பார்த்து ஆண்ட வர்க்கங்களின் வாசலில் வரிசையாக நின்று கொண்டு போட்டதைப் பொறுக்கிக் கொண்டு போகும் நிலைதான் தொடரும். 

இனி இதைப் பற்றி சற்று சிந்திக்கத் தொடங்கலாமா? இன்ஷா அல்லாஹ்.

அதிரைநிருபர் பதிப்பகம்

6 Responses So Far:

Unknown said...

//இந்த ஒற்றுமையின்மை சால்வையை போர்த்திக் கொண்டு இட ஒதுக்கீடு கேட்டு இயக்கத்துக்கு ஒரு மாதிரி போராட்டங்கள் நடத்தினால் நமக்கு இஞ்சி போட்ட டீ கூட கிடைக்காது . இடஒதுக்கீடா கிடைத்துவிடும்? //நல்ல காரமாக இருக்கிறது.

Unknown said...

இட ஒதுக்கீடு என்னும் பங்கீடு மூலம் நம் சமுதாயம் நல்லதைப்பெரும் என்னும்
எண்ணம் நாம் ஒற்றுமையில்லாமல் இருக்கும் வரை சாத்தியமற்றதே.

எத்தனையோ கமிட்டியின் பரிந்துரைகள் நமக்கு சாதகமாக இவ்விஷயத்தில் பரிந்துரை செய்தும் நமக்கு இது எட்டாக்கனியாக இதுவரை இருப்பதன் காரணம்
மூலைக்கு ஒரு இயக்கமும், ஒற்றுமை என்னும் கயிறை பற்றிப் பிடிக்காமல்
இருப்பதுமே.

அபு ஆசிப்.

Unknown said...

//இனி இதைப் பற்றி சற்று சிந்திக்கத் தொடங்கலாமா? இன்ஷா அல்லாஹ்.//

இன்ஷா அல்லாஹ் இச்சிந்தனை ஒற்றுமையை பற்றி பேசுவதாக இருக்கட்டும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

சரியான அலசல்.
இன்னொன்று, எதற்கெடுத்தாலும் நாம் பிராமணர்களையோ அல்லது உயர் சாதியையோ விமர்சிப்பதை விட,எம் முஸ்லிம் சமுதாயம் சுய பரிசோதனை செய்ய வேண்டும்.அதற்கு இக்கட்டுரை உதவும் என நம்புகிறேன்.எம் சமுதாய வீழ்சிக்கு நாமும் காரணம் தான் என்பதை மறந்துவிடல் ஆகாது.இன்ஷா அல்லாஹ்,சென்றவை அனைத்தும் அல்லாஹ் நம் மீது விதித்த தக்தீர் என பொருந்திக் கொண்டு,இனி முயற்சிப்போம்,இன்ஷா அல்லாஹ் வெற்றி பெருவோம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இட ஒதுக்கீடு கோஷம் ! தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் காணாமல் போய் விட்டது, அடுத்த தேர்தல் தேதி அறிவிக்கும் வரை ஒத்து வைக்கப்பட்டு விட்டது !

தடங்களுக்கு வருத்தம் தெரிவிக்க நாங்கள் என்ன அவர்களா ? என்று கேட்கும் தன்மானமுள்ள, ஒவ்வொரு செயலுக்கும் விளக்க கூட்டம் போடும் சமுதாய உயிர்(!!!)நாடி !

இப்படிக்கு

3/36 தேர்தல் பணிக் குழு

sabeer.abushahruk said...

எப்படா தேர்தல் முடியும் என்றிருக்கிறது!

சொல்றோம் கேட்கிறதில்லே... வையிறாய்ங்க.
அப்புறம், அவிங்களாவே செய்றாய்ங்க, அதிலேயும் சொச்சமிச்சம்.

அடுத்தது என்னான்ற பீதியிலேயே 24ந்தேதி சட்டுனு வந்துடாதான்னு தோணுது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு