Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் பெருநாள் - மறுநாள் மந்தி எனும் வீண் விரயம் ! 25

அதிரைநிருபர் | July 30, 2014 | , , , , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… 

அருட்கொடையாளன் அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால், இந்த வருட ரமளான் மாதம் மிகச் சிறப்பாக அமைந்ததற்காக நம்மை எல்லாம் படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ்வின் உதவியால் வெளிநாடு மற்றும் வெளியூர்களில் உள்ள நம் அதிரைச் சகோதர சகோதரிகள் தங்களின் நண்பர்கள், மற்றும் சொந்தங்களுடனும், அவர்களோடு தங்கியிருக்கும் சக முஸ்லிம் சகோதரர்களோடும் பெருநாளை சந்தோசமாக கொண்டாடி மகிழ்ந்திருப்பார்கள். இதற்கு மேல் ஊரில் உள்ள நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகள், குடும்ப சொந்தங்கள், நண்பர்கள் அனைவருடன் அன்பும் நட்பும் பாராட்டி வழக்கம் போல் ஈகைத் திருநாளை கொண்டாடி மகிழ்ந்திருப்பார்கள் அல்ஹம்துலில்லாஹ்!

'ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'இஸ்லாத்தில் சிறந்தது எது' எனக் கேட்டதற்கு, '(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்' என்றார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.  புகாரி 12.  Volume :1 Book :2

அதிரையில் நம்மோடு நெருங்கிப் பழகும் சகோதரர்களின் நட்பு பாராட்டும் ஏற்பாட்டால், பெருநாள் விருந்து என்று 400க்கு மேற்பட்டவர்களுக்கு விருந்து பரிமாறி தங்களின் உணவு உண்ணும் நிகழ்வை நடத்தி ஈகை திருநாளின் புனித நோக்கத்திற்கு மாற்றாக அமையப் பெற்றதை ஒட்டு மொத்த அதிரை முஸ்லீம்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த ‘மந்தி’ விருந்தோம்பலில் கலந்து கொண்ட 90% சதவீதத்திற்கு மேற்பட்ட சகோதரர்கள் தங்களின் அன்றைய உணவுக்கு திண்டாடுபவர்களல்ல. 

பெருநாள் தினத்தன்று அதனைத் தொடரும் விடுமுறை நாட்களில் தாய் தந்தை, மனைவி, குழந்தைகள், உடன்பிறந்த சகோதர சகோதரிகள் என்று ஒன்று கூடி சந்தோசமாக கொண்டாடப்பட வேண்டிய நாட்கள், இந்த மந்தி விருந்திற்கு அழைக்கப்பட்டவர்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் தங்களுக்கென்று வீடு குடும்பம் இல்லாமல் இருப்பவர்களுமல்ல !

குடும்பங்கள் ஒன்று கூடும் வீட்டில் தாய், தந்தை, சகோதர சகோதரிகள், மனைவி, குழந்தைகளை விட்டு விட்டு இவ்வாறான விருந்தோம்பல் அவசியம் தானா ?

ஒன்று கூடல் பெருமைக்கும் பகட்டுக்காகவும் இவ்வகை விருந்து வீண் விரையங்கள் நடைபெறுகிறதே, இதனை எடுத்துக் கூறி நல்வழியில் செலவிடச் சொல்ல ஊரில் எந்த ஒரு இயக்கத்திற்கும் அல்லது மார்க்க அறிஞர்களுக்கும் தோன்றவில்லையா?

அனாச்சாரங்களை தட்டிக்கேட்க வேண்டியவர்களே பம்மிக் கொண்டு நமக்கொரு அழைப்பில்லையே என்று ஏங்கிக் கொண்டிருகிறார்களா? என்னவோ ! அவர்களெல்லாம் எங்கே ? பொதுக் காரியங்களில் ஈடுபடும் சகோதரர்கள் இவ்வாறான பகட்டுக்காக புகைப்படமெடுத்து விளம்பரப்படுத்தப்படும் விருந்துகளில் கலந்து கொள்வது அவர்களின் பொதுநலச் சேவைகளை கேள்விக் குறியாக்காதா?

பெருநாள் பகல் தினத்திலோ அல்லது பெருநாள் முடிந்த அடுத்தடுத்த நாட்களிலோ ஏழைக் குடும்பங்களின் திருமணத்தை நடத்தி வலிமா என்ற பெயரிலா இவ்வாறான மந்தி விருந்து கொடுக்கப்பட்டுள்ளதா?

கடந்த சில வருடங்களாக தங்களின் பொருளாதாரத்தை அர்த்தமற்ற இது போன்ற பொழுதுபோக்கு மற்றும் பகட்டுக்கான விருந்துகளுக்கு பண உதவி செய்பவர்கள் அதற்கு உடந்தையாக செல்பவர்கள் பின்வரும் இறைவசனத்தை கொஞ்சம் நிதானமாக வாசித்துப் பாருங்கள்.

மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. குர் ஆன் 4:36. 

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. குர் ஆன் 7:31

(ஒருவேளை உணவுக்கு அண்ணல் நபி(ஸல்) அவர்களும், அவர்களின் குடும்பமும், சத்திய சஹாபாக்களும் எவ்வளவு கஷ்டப்பட்டிருபார்கள்? அந்த கஷ்டத்தில் ஒரு துளி உணவின்றி நாம் கஷ்டப்பட்டிருப்போமா? நம் கண்களின் கண்ணீர் வர வைக்கும் அந்த சம்பவங்களை  சிறிதளவேனும் அறிந்து கொள்ள இங்கே சுட்டிப் பாருங்கள் http://adirainirubar.blogspot.in/2013/05/8.html)

இது போன்ற அனாச்சார விருந்துக்கு செலவு செய்யும் பணத்தில், ஊரில் எத்தனையோ பேர் வட்டி என்ற கொடுமையால் அறிந்தோ அறியாமலோ விழுந்து கஷ்டப்படுகிறார்கள், அவர்களில் வருடத்திற்கு ஒருவரையாவது மீட்டெடுக்க முன் வரக்கூடாதா?

ஊரில் எத்தனையோ எழை கன்னிப் பெண்கள் தங்களது திருமணச் செலவு செய்ய நாதியற்று இருக்கிறார்களே, இது போன்ற பெருநாள் தினத்தில் மந்திக்காக ஒன்று கூடுபவர்கள் அந்த ஏழைகளுக்கு பெருநாள் தினத்தில் திருமணம் நடத்தி வலிமா விருந்தை அல்லாஹ்வுக்காக ஒன்றுகூடி மந்தி சமைத்து அந்த ஏழை குடும்பங்களிடம் மகிழ்ச்சியை வரவழைக்க  முன்வரக் கூடாதா?

அனாதை பிள்ளைகள் உள்ள நமதூர் எத்தீம்கானா மதர்ஸாவுக்காகவது அன்றைய தினம் இது போன்ற மந்தி சமைத்துக் கொடுத்து அந்த அனாதைகளின் முகத்தில் மகிழ்ச்சியை மிளிரவிட்டு நன்மையை அள்ள முந்தக் கூடாதா?

பல வருடங்களாக இஸ்லாமியர்கள் ஏற்றம் பெறவும் முஸ்லீம் ஏழைகளுக்கு உதவுவதற்காகவே இயங்கி வரும் அதிரை பைத்துல்மாலை அணுகி நாங்கள் 400 ஏழைகளுக்கு உணவளிக்க இருக்கிறோம் என்று சொல்லி அவர்களின் ஆலோசனையின் பேரில் ஏழைக் குடும்பங்களுக்கு பெருநாள் தினத்திலோ அல்லது அடுத்த நாளோ மந்தி சமைத்து உணவளிக்க முன்வரக் கூடாதா?

ஊரில் பெருளாதார ஏற்றத்தாழ்வுகளாலும், குலப்பெருமையாலும் பிரிந்து கிடக்கும் பிறதெரு சொந்தங்களை அழைத்து ஒற்றுமையின் அவசியத்தை வழியுறுத்தி உறுக்கமான, கவலையான மார்க்க உபதேசங்கள் செய்து சந்தோசமாக ஒருவருக்கு ஒருவர் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த மந்தி சமைத்து ஊர் ஒற்றுமையை நிலை நாட்ட முயற்சிகள் செய்யக் கூடாதா?

முஸ்லீம்கள் என்றால் பிரியானி, ஆட்டுக்கறி தின்பவர்கள் என்று சொல்லும் பிற மதத்தவரை அழைத்து, பெருநாள் விருந்து என்று நம்முடையை அழகிய விருந்து உபசரிப்பை காட்டி, அவர்களுக்கு நாங்கள் இஸ்லாத்தில் இருப்பதால் எவ்வளவு சந்தோசமாக உள்ளோம் என்பதை சொல்லி தூய இறை மார்க்கத்தை எத்தி வைக்க ஓர் வாய்ப்பாக மந்தி சமைத்து முந்திக் கொண்டு நன்மையின் பக்கம் அழைக்கக் கூடாதா?

உணவுப் பழக்கமோ அல்லது சுகாதரச் சூழலோ எதன் விளைவோ அல்லது வேறு எதனாலோ ஊரில் நிறைய பேர் உயிர்கொல்லி நோயான கேன்சரில் பாதிக்கப்பட்டுள்ளார்களே, அவர்களை கண்டறிந்து அவர்களின் நோய்கான செலவுகளுக்கு இதுபோன்ற அனாச்சார செலவுகளுக்கு கிடைத்த தொகையை கொடுத்து உதவ முன்வரக் கூடாதா?

வசதி வாய்பின்றி கல்வி பயில கஷ்டப்பட்டு வெளியில் சொல்ல முடியாத எத்தனையோ இஸ்லாமிய சொந்தங்கள் உள்ளார்கள், ஏன் சில தினங்களுக்கு முன் கல்வி உதவி கேட்டு வலைப்பூக்களில் நிதியுதவி வேண்டி கோரிக்கை வைத்துள்ளார்கள், இது போன்றவர்களின் கல்வி செலவுக்கு மந்திக்கு ஆகும் செலவை கொடுத்து நன்மையை அள்ளிக் கொள்ளக்கூடாதா?

ஊரில் எத்தனையோ மனநோயாளிகள் சரியான பராமரிப்பின்றி அன்றாடம் சிரமத்துக்கு உள்ளாகிறார்களே, குறைந்த பட்சம் பெருநாள் தினத்திலாவது நல்ல உடையுடுத்தி, நல்ல உணவு கொடுத்து கவுரவித்து சந்தோசப்படக் கூடாதா?

எத்தனையோ நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் பல சிரமத்துக்கு மத்தியில் உள்ளார்கள், இது போன்ற பெருநாள் தினத்தில் அவர்களை சந்தித்து நலம் விசாரித்து, அவர்களுக்கு உணவோ அல்லது உதவியோ செய்து, இஸலாமியர்கள் இவ்வளவு கருணையாளர்கள் என்று அவர்களின் சிந்தனையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி தூய இஸ்லாத்தை நாடி அவர்கள் நம் வழி நாடி வர ஒரு தூண்டுகோலை ஏற்படுத்தக்கூடாதா? 

என்னதான் நடக்கிறது ஊரில்? 

ஒவ்வொரு பெருநாள் காலங்களில் என்ன ஆனது நமதூர் ஊர் செக்கடிமேடு நண்பர்களுக்கும், இளைஞர்களுக்கும் எத்தனை நாட்களுக்கு இப்படியே சாப்பாட்டையும் அரட்டையையும் முன்னிருத்தி பெருமையடிப்பார்கள்? இன்னுமா திருந்தவில்லை? ஏன் இந்த அவசியமற்ற பெருமை? நாளை நமது பிள்ளைகள் இவ்வாறே தொடர்ந்தால் அதன் விளைவாய் ஏற்படும் அந்த வலியை சொல்லிக்காட்ட ஆள் இருக்காது கிள்ளிப் போடத்தான் சுற்றியிருக்கும் கூட்டம்.

தேர்தல் நேரத்தில் கட்சிகளுக்காக ஓட்டு கேட்கவும் கூட்டுகளை உடைக்கவும் பல கூட்டணிகளில் பங்கெடுக்கும் நம் சகோதரர்கள், மந்தியென்றதும் முந்திக் கொண்டு இந்த சாப்பாட்டுக் கூட்டணி ஏன்? [ஒற்றுமையின் அவசியம் அறிந்துதான் செயல்படுகிறோம் என்றால் இதில் மட்டுமல்ல இன்னும் ஏனைய காரியங்களிலும் முன்னிருத்தி காட்டுவதுதான் சிறந்தது].
காஸாவில் முஸ்லீம்களுக்குஎதிராக இஸ்ரேல் நடத்தி வரும் பயங்கரவாதத்தில் நாளுக்கு நாள் மக்கள் கொல்லப்படும் இந்த சூழலில் செக்கடிமேடு சார்ந்த சில  சகோதரர்கள் இப்தார் நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்கள். ஆனால் அதே சகோதரர்கள் இந்த மந்தி விருந்தை அங்கீகரித்திருப்பது எவ்வகையான நிலைபாடு என்பது புரியவில்லை.

வீண் பெருமை, வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை என்று தனது திருமறையில் தெள்ளத் தெளிவாக அறிவித்து விட்டானே, வீண் பெருமைக்காக, தேவையின்றி வீண் விரயமாக செய்யப்படும் இவ்வாறான செயல்களால் அல்லாஹ்வின் நேசம் நெருங்குமா என்பதை நம் சகோதரர்கள் அனைவரின் சிந்தனைக்கே விட்டு விடுகிறோம்.

மேற்கண்ட கேள்விகள் உங்களின் சிந்தனையை சிதைக்கவல்ல, சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயே எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

அன்பான எங்கள் நண்பர்களே, சகோதரர்களே மேலே சொன்னவை எந்த ஒரு தனி நபர்கள் மேல் வெறுப்பு கொண்டு எடுத்து வைக்கப்பட்டது அல்ல. மாறாக நாம் எங்கே செல்கிறோம்? நம்முடைய வருங்கால சமுதாயத்திற்கு எவ்வகை அனாச்சார செயலை நற்செயலாக முன்னுதாரனமாக காட்டுகிறோம்? நாளை நமது பிள்ளை இதே வழியை நாடினால் பெருமைப்பட்டுக் கொள்ளும் நிலையில் இருப்போமா? அல்லது அவர்களின் நேர்வழி வேண்டி இறைஞ்சுவதில் இருப்போமா? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

நோன்பு காலத்தில் நீங்கள் கேட்ட மார்க்க சொற்பொழிவுகளில் நபி(ஸல்) அவர்களும், சத்திய சஹாபாக்களும் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை ஒரு கணம் சிந்தித்து பாருங்கள். பர்மா, சிரியா, பாலஸ்தீன், ஈராக் போன்ற நாடுகளில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டு நாளுக்கு நாள் உண்ண உணவிற்கு எண்ணிலா துயரங்களை சந்திக்கிறார்களே என்று எண்ணி, அல்லாஹ் நம்மை இந்த அளவுக்கு வைத்திருக்கிறானே என்று அவனுக்கு அதிகமதிகம் நன்றி செலுத்துங்கள்.

இது போன்ற வீண் விரய விருந்துகளை புறக்கணியுங்கள், நீங்கள் அறிந்தோ அறியாமலோ இதற்கு ஆதரவு கொடுத்திருந்தால் அதற்காக, அல்லாஹ்விடம் தவ்பா செய்யுங்கள். இந்த வீண் விரய உணவு உபசரிப்பில் கலந்து கொண்டிருந்தால் அதற்காக பரிகாரம் தேடுங்கள். இந்த வீண் விரய விருந்தை முதன் முதல் ஆரம்பித்து வைத்த சகோதர்களுக்கு இதன் தொடர் பாவங்கள் அவர்கள் கணக்கில் சேர்ந்து வருகிறது என்பதை உணர்ந்து அவர்களும் அல்லாஹ்விடம் பரிகாரம் தேடட்டும்.

அல்லாஹ் நம் எல்லோரையும் இது போன்ற வீண் விரையங்களை ஏற்படுத்தும் விருந்து உபசரிப்புகளிருந்து தடுத்து அனைவரையும் பாதுகப்பானாக. ஆமீன் !

அதிரையின் செய்தி ஊடகங்களில் பங்கெடுக்கும் சகோதர்களுக்கு மீண்டும் அன்பான வேண்டுகோள், நீங்கள் ஊரின் அன்றாட நிகழ்வுகளை சுடச் சுட செய்திகளாக பல இன்னல்களுக்கு மத்தியில் வெளியிட்டு வருகிறீர்கள் மாஷா அல்லாஹ்!, இதனை மிகப்பெரும் நற்பணியாக செய்து வருகிறீர்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால்  இது போன்ற வீண் விரய அனாச்சார நிகழ்வுகளை வெறும் செய்தியாக மட்டும் போடாமல், அந்த அனாச்சாரங்களை திட மனத்திடத்துடன் கண்டித்தும் வெளியிடுங்கள். இதுதான் இஸ்லாமிய ஊடகக்காரர்கள் செய்ய வேண்டிய துணிச்சலான செயலாக இருக்க முடியும். சமுதாய பெறுப்புணர்வுடன், எதிர்கால சந்ததிகளுக்கு நாம் எதை பதிந்து வைக்கிறோம் அவர்களுக்கு வரலாற்றில் ஏடாக எதைக் கொடுக்கப் போகிறோம் என்ற கவலையுடன் செய்திகளை வெளியிடுங்கள். கேடுகெட்ட தினசரிகளைப் போன்று இஸ்லாமியர்கள் பங்கெடுக்கும் ஊடகங்களும் அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதை வேண்டுகிறோம்.

இது போன்ற விரயங்களை தற்பெருமையாக இணையத்தில் வெளியிட்டு இதனை படிப்பவர்கள் சந்தோசமடைவார்கள் என்று தவறான நோக்கத்துடன் இருக்கிறார்கள் மந்தி விருந்து ஏற்பாட்டாளர்கள். இதற்கு விதிவிலக்காக அதிரையில் மார்ர்கத்திற்கு புறம்பான வீண் விரயங்களை சுட்டிக்காட்டி அதிலிருந்து நம்மக்களை தவிர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படும் இன்ஷா அல்லாஹ். இதனை பிற வலைப்பூக்கள் செய்யத் தவறினாலும் நாம் அதிலிருந்து பிறழாமல் எவருக்கும் அஞ்சாமல் செயல்படுவோம், மவுனமாக இருக்க மாட்டோம் என்பதற்கு இந்த பதிவும் முந்தைய பதிவுகளும் சாட்சி பகரும்.

இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மிக நெருக்கமானவர்களே அவர்கள் ஒவ்வொருவரையும் நேரிலோ அல்லது அலைபேசி வாயிலாகவோ அழைத்து எடுத்துச் சொல்வது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால் இதனை ஒரு கண்டன பதிவாகவே பொதுவில் உங்கள் அனைவரின் முன் வைக்கிறோம். 

இஸ்லாமிய சமுதாய, நம்மக்களுக்கு ஒவ்வாத, புறம்பான செயல்கள் எதுவாயின் அதனை விமர்சிக்கவும், அவற்றிலிருந்து நம்மக்களை தவிர்த்திட வைக்கவும் அதிரைநிருபர் தளம் தயவு தாட்சனைகளின்றி செயல்படும் இன்ஷா அல்லாஹ் !

அதிரைநிருபர் பதிப்பகம்
editor@adirainirubar.in

ரமளானுக்கு பின்... 0

அதிரைநிருபர் பதிப்பகம் | July 30, 2014 | , , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!). இந்த பதிவில் ஷவ்வால் நோன்பை பற்றி பார்ப்போம்.

ஷவ்வால் நோன்பு:

யார் ரமலானில் நோன்பு நோற்று பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வால் நோன்பு நோற்கின்றாரோ அவர் (ஆண்டு) காலம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போலாவர். (அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி) நூல்: முஸ்லிம்)

ஒரு மாத நோன்பு பத்து மாத நோன்புக்குச் சமமானது, அதன் பின்னர் ஆறு நோன்பு இரண்டு மாதங்களுக்குச் சமமானது என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஃப்வான்(ரலி) நூல்: தாரிமி: 1690)

இந்த ஹதீஸில் ரமளானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் நோன்பு நோற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து என்ற வார்த்தையிலிருந்து பெருநாளைக்குப் பிறகுள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து பிடிக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இது தவறான வாதமாகும். ஏனெனில் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று ஷவ்வாலிலும் ஆறு நாட்கள் நோன்பைத் தொடர வேண்டும் என்ற கருத்தில்தான் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளதே தவிர, ஆறு நாட்கள் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்று கூறப்படவில்லை. தொடர்வது என்பதற்கு அத்பஅஹு என்ற அரபுச் சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. தொடர்ச்சி என்பதற்கு முததாபிஐன் என்ற சொல் பயன்படுத்தப் பட வேண்டும். உதாரணமாக திருக்குர்ஆனில், மனைவியைத் தாய்க்கு ஒப்பிட்டு விடுபவர் அதற்குப் பகரமாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிக் கூறப்படுகின்றது.

(அடிமை) கிடைக்காதவர் ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். யாருக்குச் சக்தியில்லையோ அவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். (அல்குர்ஆன்: 58:4)

இந்த வசனத்தில் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும் என்பதற்கு முததாபிஐன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற வாசகம் பயன்படுத்தப்பட்டிருந்தால் ஆறு நோன்பு தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்று கூறலாம். ஆனால் மேற்கண்ட ஹதீஸில் அவ்வாறு கூறப்படவில்லை. ஒரு வாதத்திற்கு ரமளானைத் தொடர்ந்து ஆறு நாட்கள் நோன்பு பிடிக்க வேண்டும் என்று அந்த ஹதீஸ் கூறுகின்றது என்று வைத்துக் கொண்டால், பெருநாளில் நோன்பு பிடிப்பதற்குத் தடை உள்ளது. ஆறு நாட்கள் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும் என்ற கருத்தில் உள்ளவர்கள் கூட ஷவ்வால் பிறை 2 லிருந்து 7 வரை தொடர்ந்து பிடிக்க வேண்டும் என்று தான் கூறுகின்றனர். இதில் ரமளானைத் தொடர்ந்து என்ற வாதம் அடிபட்டுப் போகின்றது. ஒரு நாள் விடுபட்டு விட்டால் அது ரமளானின் தொடர்ச்சியாக ஆகாது. மேலும் ஷவ்வால் பிறை 2 லிருந்து 7 வரைதான் ஆறு நோன்பு பிடிக்க வேண்டும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் ஹதீஸ்களில் இல்லை. எனவே ஆறு நோன்புகள் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஷவ்வால் மாதம் முழுவதும் உள்ள நாட்களில் ஏதேனும் ஆறு நாட்கள் நோன்பு வைக்கலாம் என்பதே சரியான கருத்தாகும். முப்பது நோன்பும் ஆறு நோன்பும் சேர்த்து முப்பத்து ஆறு நோன்புகளாகின்றது. நன்மைகள் ஒன்றுக்குப் பத்து என்ற கணக்குப் படி தினமும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் காரணம் கூறியுள்ளனர். ஆறு நோன்பின் தத்துவம் இதுதான் என்றால் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம். ஆனால் ஷவ்வாலில் என்று ஹதீஸ்களில் இடம் பெறுவதால் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் வைத்து விட வேண்டும்.

ஷவ்வால் நோன்பு பெண்களுக்கு மட்டும் இல்லை. ஆண்களும் வைக்க வேண்டும். ஆறு நோன்புகள் வைத்த பிறகு ஆறு நோன்பு பெருநாள் என்று பெண்கள் கொண்டாடுவார்கள். ஆறு நோன்பு பெருநாள் மார்க்கம் கற்று தந்த வழிமுறை இல்லை.

சகோதர, சகோதரிகளே நோன்பு முடிந்து வாரம் கடந்து விட்டது. நமது செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்து விட்டது. சகோதரர்கள் விட்ட தீய பழக்கங்களை தொடர ஆரம்பித்து விட்டார்கள். புகை, மது, சினிமா, சீர்யல் என்று நோன்பில் கட்டுப்பட்ட விஷயங்கள் பெருநாள் முடிந்தவுடன் தொடர ஆரம்பித்து விட்டது. (ஒரு சகோதரர் தொலைபேசியில் உரையாடியது காதில் விழுந்தது. என் மச்சான் பெருநாள் அன்று டிக்கெட் எடுத்து விட்டேன் உடனே வாடா என்றவுடன் நான் சென்று படம் பார்த்து விட்டு வந்தேன் என்றார். பெருநாள் அன்று செய்த நல்ல காரியம்?).

சகோதரிகளும் தொலைக்காட்சி ரிமோட்டை கையில் எடுத்து விட்டார்கள். மெகா தொடர்களை பார்க்காமல் நோன்பில் தவித்து விட்டார்கள். நோன்பு திறப்பது, மஃரிபு தொழுவது, சிறிது ஓய்வு, இஷா தொழுகை, இரவுத்தொழுகை, இரவு உணவு, ஸஹர் உணவு, பஜ்ர் தொழுகை, பிறகு உறக்கம், லுஹர் தொழுகை, நோன்பு திறக்க உணவுகள் தயாரிப்பது, அஸர் தொழுகை, குர்ஆன் ஓதுவது என்று நேரங்கள் சரியாக இருந்தது. நேரம் கிடைக்காததால் பார்க்கமுடியவில்லை என்று நினைக்கிறேன்.

ஷைத்தானின் சபதம்:

உனது கண்ணியத்தின் மீது ஆணையாக! தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர அவர்கள் அனைவரையும் வழி கெடுப்பேன் என்று (ஷைத்தான்) கூறினான். (அல்குர்ஆன் : 38:82,83)

இறைவனின் பதில்:

உன்னையும், அவர்களில் உன்னைப் பின்பற்றியோர் அனைவரையும் போட்டு நரகத்தை நிரப்புவேன் (என்று இறைவன் கூறினான்). (அல்குர்ஆன் : 38:85)

நோன்பின் மூலம் கிடைத்த இறையச்சம்:

நம்மை கடந்து சென்ற நோன்பு நமக்கு தந்த படிப்பினை என்ன? ஒவ்வொரு நாளும் மார்க்கத்தில் முன்னேற்றம் அடைய நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? என்பதை சிந்தித்து செயல்படக்கூடிய தருணம் இதுதான். ஷைத்தான் அவனுடைய பரிவாரங்களோடு நம்மை வீழ்த்த நமது வீடு தேடி வந்து கொண்டு இருக்கிறான். நல்வழியில் நாம் செல்வதற்கு மார்க்கமும் நம் வீடு தேடி வந்து கொண்டு இருக்கிறது. எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை நாம்தாம் முடிவு செய்ய வேண்டும்.

மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் நாம் ஈடுபட நினைக்கும் பொழுது நம் மனதில் உறுத்தல் ஏற்பட்டால் கடந்து சென்ற நோன்பு நம்மிடையே இறையச்சத்தை  தந்துள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

நோன்பில் மட்டும் தவிர்த்துக் கொண்ட மார்க்கத்திற்கு முரணான காரியங்களை நோன்பு முடிந்த பிறகு மனதில் எந்த உறுத்தலும் ஏற்படாமல் நாம் செய்ய ஆரம்பித்தோம் என்றால் இறையச்சம் நம்மிடம் ஏற்படவில்லை என்று புரிந்து கொள்ளலாம்.

''மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். '' (அல்குர்ஆன்:50:16)

''எனது உள்ளம் தூய்மையானது என்று நான் சாதிக்கவில்லை. எனது இறைவன் அருள் புரிந்ததைத் தவிர உள்ளம் தீமையைத் தான் அதிகம் தூண்டுகிறது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' (என்றும் கூறினார்) ( அல்குர்ஆன் : 12:53)

S. அலாவுதீன்
இது ஒரு மீள்பதிவு...

பெருநாள் இரவு ஒளி மழை ! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | July 29, 2014 | , , , ,

மழையில்லா இரவில் துபாயில் இன்று ஒளி மழை !

இந்த ஒளி மழை பெய்வதற்கு பொறுப்பேற்றிருக்கும் நிறுவனத்தில் பணியிலிருக்கும் முக்கியமான ஒருவரின் அருகில் இருந்து கொண்டு அதன் நுணுக்கங்களை தெரிந்து கொண்டே ஆடிய கைகளில் சிக்கிக் கொண்ட கேமராவில் தட்டுப்பட்ட துளிகள் !

இந்த வெளிச்சமும் அதில் காணும் வலைவுகளுக்குக்குள் ஏதேனும் அரபி எழுத்து தெரிகிறது என்று அர்த்தங்கள் கொடுத்தால் நான் எப்படிங்க பொறுப்பாக முடியும் ! :)?

இவ்வகை வானவேடிக்கைகள் நிறைந்த விரையங்களில் உடண்பாடில்லை, இருப்பினும் வெகு சில நிமிடங்களே நிகழ்த்த முடிந்த ஒளி மழைக்கான செலவு, அதற்கான ஆயத்தங்கள், எத்தனை பணியாட்கள், எவ்வாறு அதனை இயங்கச் செய்கிறார்கள், அதன் பாதுகாப்பு எப்படி கையாளப்படுகிறது என்ற அனுபவ நுணுக்கங்கள் அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட முடிந்தது.

குறிப்பு : கேமராவை கையில் எடுத்து நீண்ட நாட்களானதால் சிக்கியதை அள்ளிப் போட்டிருக்கிறேன்...



























அபூஇப்ராஹீம்

பெருநாள் சாப்பாடு எப்படி !? 2

அதிரைநிருபர் பதிப்பகம் | July 28, 2014 | , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

குல்லுஆம் வஅன்த்தும் பின் கைர் !

அல்ஹம்துலில்லாஹ் ! இந்த வருடம் ஹிஜ்ரி 1435 ரமளான் மாதம் மிகச் சிறப்பாக நம்மிடையே ஒன்றி உலாவி நம் அமல்களை வலுப்படுத்தி உள்ளத்தாலும் உணர்வுகளாலும் தூய்மையை நம்மிடையே நிலைத்திருக்கச் செய்துவிட்டு நம்மை விட்டு விடைபெற்றுக் கொண்டது !

இன்று வளைகுடாவில் பெருநாள், ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னர் ஒருமணி நேரத்திற்கு முன்னர் எழுந்து தூய்மையான குளியல் பின்னர் தொழுகை, தொடர்ந்து நபிவழி பெருநாள் தினத் துவக்கம் அதிகாலைப் பொழுது புலரும் அற்புதமான தினம் துபாயில் விடிந்தது !

பெருநாள் தொழுகைக்கும் கூடினோம், தொழுதோம், இறைஞ்சினோம் வல்ல இறைவன் அல்லாஹ்விடமே !

வழியெங்கும் சவால் விடும் போஸ்டர்கள் இல்லை! எங்களோடு இணைந்து தொழும் தொழுகைக்கு சலுகைகள் என்ற தம்பட்டம் இல்லை ! மெளலவிகளைத் தேடும் தேடல் இல்லை!



அடுத்து என்ன !?

அதிரையின் வாசம் அமீரகத்தில் வீசாமல் ஒரு பெருநாளா ?

அதிரைப் பெருநாள் என்றாலே நம்மில் பெரும்பாலோர் மூக்கிலும் நாக்கிலும் வேர்க்கும் ! அதுதான் மண்வாசனை தூக்கலுடன் இருக்கும் காலை பசியாறவும் அதனைத் தொடரும் பகல் சாப்பாடும் கலைகட்டும் !

இடியப்பம் இல்லாத இல்லமா ? வீட்டில் செய்யா விடினும் (அன்னபூர்னாவுக்கு) தேடிச் சென்று எங்கே கிடைக்குமோ அங்கே காத்திருந்து விழித்திருந்து வாங்கி வந்து சாப்பிடும் வேகம் நம்மவர்களிடையே அதிகம்.

இன்று பெருநாள் (காலைச்) சாப்பாட்டில் கலந்து சிறப்பித்தவைகள் !

மலேசியா பரோட்டா
அண்ணபூர்னா இடியப்பம்
இந்தியா ஆட்டுக்கறி
ராஸல்கைமா பண்ணைக் கோழி
கேரளா சேமியா
சைனா கடப்பாசி
சவுதி வட்டிலப்பம்
பன்னாட்டு இனிப்பு புளிப்பு துணையுடன்...

அதிரையர்களாகிய எங்களை சுவைக்க வைத்தது இன்றைய சிறப்பம்சம். !

அடுத்தென்ன பகல் சாப்பாடு(தான்)...!

பின்னூட்டத்தில் பகல் சாப்பாட்டின் முன்னோட்டம் இன்ஷா அல்லாஹ் தொடரும்... !

அது சரி உங்கள் பெருநாள் எப்படி !? [அதிரையில் நாளைக்காமே !?]

அதிரைநிருபர் பதிப்பகம்

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

21

அதிரைநிருபர் பதிப்பகம் | July 26, 2014 | , , , , ,

குறுந்தொடர் - பகுதி : ஒன்று

உலக மனித இனத்தின் வரலாறு என்பதை ஒரு ஆலமரமாகக் கொண்டால் அந்த ஆலமரத்தின் ஆணிவேர் ஆழப்பதிந்திருப்பது இன்று அன்றாடம் அழுகுரல் கேட்டுக் கொண்டிருக்கும் பாலஸ்தீனத்தில்தான். இன்று பாலஸ்தீனத்தின் மண் செந்நிறம் கொண்ட இரத்த சகதியாக மாறிப் போகக்காரணம் ஏதோ நேற்றுத் தொடங்கிய பகை முடிக்க பாண்டி பஜாரில் கண்டு எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. இது ஒரு ஜென்மப் பகை! இரத்தத்தின் அணுக்களில் ஊறித் திளைத்துப் பின் தினவெடுக்கும் கரங்கள் கைகளில் எடுத்த ஆயுதப் பகை! இந்தப் பகையின் வரலாறு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்குச் சொந்தமானது. இன்றைக்கு பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மக்கள் கதறி அழுவதன் அடிப்படைக் காரணம், காலம் காலமாக களம் கண்டு வரும் இருபுறத்து மக்கட்பிரிவின் பிறப்புப் பகை! பிறக்கும் குழந்தைகள் உதைத்து விளையாடுவது இயற்கையின் படைப்பு. ஆனால் இஸ்ரேலிலோ பிறந்த குழந்தை கூட ஒருநாள் ஆனதும் உதைக்கத் தேடுவது பாலஸ்தீனியர்களை. உண்மைக் காரணங்கள் யாவை? 

இஸ்ரேல் என்றால் என்ன? இஸ்ரேலியர் என்றால் யார்? பாலஸ்தீனியர்களுக்கும் அவர்களுக்கும் என்ன பகை? இஸ்ரேலியர்கள் என்பவர்களின் இதயம் இருக்கும் இடத்தில் கருங்கல் துண்டு ஒன்று இருக்கக் காரணம் என்ன? காஸா என்கிற கைதி கண்ணாயிரத்தின் என்ன? எங்கே? எப்போ? என்கிற கதையின் காரணங்கள் யாவை? அலசுவோம் ஒரு குறுந்தொடராக. 

பாலஸ்தீனம் என்பது உலகப்படத்தில் மத்திய தரைக் கடலின் ஒரு ஓரத்தில் ஒரு சிறிய லக்ஸ் சோப் அளவு இருக்கும் ஒரு கீரைப்பாத்தி நாடுதான். ஆனால் இந்த நாடுதான் உலகில் தோன்றிய பல மதங்களுக்கும் நபி மார்களுக்கும் தாய்வீடாகத் திகழ்கிறது. இஸ்லாம் கூறுகிற நான்கு வேதங்களான சபூர், தவ்ராத், இன்ஜீல் மற்றும் குர்ஆன் ஆகிய இறைவனின் வேதங்கள் என்று நம்பப்படுகிற வேதங்களில் திருக் குர்ஆனைத் தவிர மற்ற அனைத்து வேதங்களும் இறங்கியதும் இந்த வேதங்களில் கூறப்படும் வரலாற்று நிகழ்வுகளும் அந்த வேதங்களின் நாயகர்களும் வாழ்ந்த – ஆண்ட- போதித்த – குறிப்பிட்ட இடங்களை எல்லாம் கொண்டிருப்பது இந்த நாடுதான். 

பைபிளை எடுத்துப் பார்த்தால் இந்த பிரதேசத்தை அது கானான் நாடு என்று குறிப்பிடுகிறது. இதைதான் அந்த நாளில் இஸ்ரேல் என்றும் அழைத்தார்கள். கிருத்தவ வேதங்களில் தேவன் என்று நம்பப்படுகிற கர்த்தர் கூறுவதாக இப்படி ஒரு வாக்கு வருகிறது. இஸ்ரேலியர்களுக்காகவே படைக்கப்பட்டு அவர்களை வாழ்வதற்காக இறைவன் அவர்களை அனுப்பிவைத்த இடம் இந்த கானான் தேசம் அல்லது இஸ்ரேல். இதுவே பாலஸ்தீனம் என்றும் அழைக்கப்பட்டது. ஆகவே வேதங்களில் இஸ்ரேல் என்றாலும் பாலஸ்தீனம் என்றாலும் ஒன்றுதான். அதனால்தான் இந்த அடிபிடி.

கடவுள் இடமிருந்து வந்த வார்த்தையாக பைபிள் இஸ்ரேலியர்களை நோக்கி இப்படிக் கூறுகிறது. இதைத்தான் உலக நாடுகளும் இஸ்ரேலை ஆதரிக்கும் நாடுகளும் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கின்றன. இந்த வசனங்கள் இந்தப் பிரச்னையின் அடிப்படை என்பதை நாமெல்லோரும் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். 

Palestine, or Canaan, or Israel, was described by God in Deuteronomy 8:7-9.

"For the Lord your God is bringing you into a good land, a land of brooks of water, of fountains and springs, flowing forth in valleys and hills, a land of wheat and barley, of vines and fig trees and pomengranates, a land of olive oil and honey; a land where you shall eat food without scarcity, in which you shall not lack anything; a land whose stones are iron, and out of whose hills you can dig copper."

மேற்கண்ட வரிகளில் வர்ணிக்கப்படுகிற பல வளங்கள் நிறைந்த அழகிய நீர்வளம் நிலவளம் மிக்க இடம் நிறைந்த வாழ்வாதாரங்களுடன் இஸ்ரேலியர்களுக்காகப் படைக்கப்பட்டு அவர்களுக்கு வாக்களிக்கபட்டு அவர்கள் வாழ்வதற்காக அளிக்கப்பட்டது என்பது வேத காலத்து அல்லது புராண காலத்து நிலை. இதைத்தான் இஸ்ரேலியர்கள் தங்களுக்கு தங்களின் கடவுளால் வாக்களிக்கப்பட்ட இடம் “Promised Land” என்று பாலஸ்தீனத்தை உரிமை கொண்டாடுகிறார்கள். 

சரித்திர காலத்துக்கு வந்தால், கி பி 636 ஆம் ஆண்டு உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில், இஸ்லாமியப் பேரசின் எழுச்சியின் காரணமாக கிபி 661 ஆண்டு சிரியா வெற்றி கொள்ளப்பட்டது. சிரியா இஸ்ரேலோடு எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து பாலஸ்தீனமும் வீழ்ந்தது. இதைத் தொடர்ந்து அலி (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட பின்பு 691 ஆம் ஆண்டு இன்றைய பாலஸ்தீனத்தில் உள்ள ஜெருசலத்தில் வைத்துத்தான் உமய்யாக்காளின் தலைவரான முஆவியாவுடைய (ரலி) பதவியேற்பு வைபவமும் நடந்தேறியது. உமய்யாக்களுக்குப் பிறகு 750ல் வந்த அப்பாஸிகளின் ஆட்சியிலும் அதனைத் தொடர்ந்து 878ல் எகிப்திய மன்னர்களாலும் ஆளப்பட்டு அன்றைய யூதர்கள் ஓரங்கட்டப்பட்டு இஸ்லாம் அங்கு ஆட்சி செலுத்தியது. ஆகவே யூதர்கள் கரங்களில் இருந்த பாலஸ்தீனம் முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்பட்டது என்பது சரித்திர சம்பவம். 

என்றைக்குமே தன்னிகரற்ற ஜெருசலம் தலைநகராகத் திகழ்ந்தது. City of Dawood என்று அழைக்கப்படுகிற ஜெருசலம் உலகின் புராதான நகரங்களில் ஒன்றாக கருதப் படுகிறது. நபி தாவூத் (அலை) அவர்களால் நிர்மாணிக்கப்பட்டு அவர்களது மகன் நபி சுலைமான் (அலை) அவர்களால் அலங்கரிக்கப்பட்ட நகராகத் திகழ்ந்தது ஜெருசலம் என்று வரலாறு குறிப்பிடுகிறது. யூத, கிருத்தவ, இஸ்லாம் ஆகிய மதங்களான ஆப்ரகாமிய மதங்கள் என்று உலக வரலாறு குறிப்பிடும் மதங்களின் தாயகமாக ஜெருசலம் விளங்கியது. “ஆலம் வாழுகின்ற தீனோர் யாவர்க்கும் ஆரம்பக் கிப்லா அதுதான்” என்ற கூற்றுடன் பைத்துல் முக்கத்தஸ் இங்குதான் இருக்கிறது. உலக முஸ்லிம்கள் மக்காவில் உள்ள காபாவை நோக்கித் தொழும் முன்பு பைத்துல் முகத்தஸ் இருக்கும் திசை நோக்கித்தான் தொழுது வந்தார்கள். நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் முன்னோர்கள் வாழ்ந்த பூமியும் நகரமும் இதுதான். பெருமானார் முகமது (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் சென்ற போது ஜிப்ரீல் (அலை) அவர்களின் இறக்கையில் வந்து இறங்கிய இடம் என்று நாம் நம்புகிற நகரும் ஜெருசலம்தான். பல நபிமார்களின் அடக்கஸ்தலங்கள் அமைந்து இருப்பதும் ஜெருசலத்தில்தான். இதன் இருப்பிடமும் பாலஸ்தீனத்தை சேர்ந்ததுதான்.

பெத்லஹெம் என்பது நபி ஈசா (அலை) அவர்களின் பிறப்பிடம். இதுவும் இருப்பது பாலஸ்தீனத்தில்தான். நபி ஈசா(அலை) அவர்கள் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டதாக கிருத்துவர்கள் நம்பிக் கண்டு இருக்கும் கல்வாரி மலை இருக்கும் இடமும் பாலஸ்தீனம்தான்.

கானான் தேசத்தார்- யூதர்கள்- கிருத்தவர்கள்- முஸ்லிம்கள் என்று பலரின் கரங்களில் அகப்பட்ட இந்த புனிதர்கள் வாழ்ந்த பூமி பின்னர் உலக வழக்கம் போல பிரிடிஷார் கைகளிலும் அகப்பட்டது. இதுதான் இன்றைய பிரச்னைகளின் ஆரம்ப அறிமுகப் படலம். 

இன்ஷா அல்லாஹ் இந்தக் குறுந் தொடரில் இன்று உலகமே இரக்கப்பட்டுக் கண்ணீர் வடிக்கிற பாலஸ்தீனியர்களின் கதையைத் தொடர்ந்து தர முயற்சிக்கிறோம். 

இன்ஷா அல்லாஹ் சந்திக்கலாம்.

இபுராஹீம் அன்சாரி

இறைவன் அருளிய இரவு! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | July 25, 2014 | , , , , ,


தெளிவான வேதம் தரைவந்த மாதம்
ஒளியான இரவில் இறைதந்த மார்க்கம்
பிரகாச இரவை பிசகாத அருளை
பிறைசார்ந்த உறவை படைத்திட்ட இறைவா

பாவமென அறிந்தும் பழகியன பொறுத்து
பாரமென அழுத்தும் தண்டனை அகற்ற
கடைப்பத்து நோன்பின் ஒற்றைப்படைப் பிறையில்
கிடைத்திட அருள்வாய் ‘லைலத்துல் கதிர்’

கைக்கெட்டும் தூரம் கவளமென சோறும்
கைப்பிடி குவளையில் கனிகளின் சாறும்
கண்படும் அருகில் கிடைத்திட்ட போதும்
கடன்பட்ட நாவோ இறைப்புகழ் ஓதும்

நிற்கின்ற நிலையில் நெடுநேரம் தொழுதோம்
நெற்றி நிலம்தொட்டு நின்றன்முன் விழுந்தோம்
பட்டதுய ரெல்லாம் போதுமென அழுதோம்
பகலிரவு பாராமல் பிரார்த்தித்தே எழுந்தோம்

கணக்கிட்டுக் கொடுத்த தர்மங்கள் அறிவாய்
மெனக்கெட்டு செய்த தியானங்கள் ஏற்பாய்
மனக்கட்டுக் கொண்டு துதித்தது உனையே
இனக்கட்டுச் சிறக்க இறைஞ்சுகிறோம் அல்லாஹ்

அன்பிலும் அருளிலும் அளவற்ற நீதான்
அகத்தையும் புறத்தையும் அறிந்திட்ட அல்லாஹ்
எண்ணமும் செயல்களும் செய்திட்டப் பாவம்
மன்னித்துக் காத்திடு மறைதந்த இறையே

இம்மையும் மறுமையும் அழகாக்கி தருவாய்
இழிவையும் அழிவையும் நிகழாது நீக்கு
உன்னையே துதிக்கிறோம் உளமாற கேட்கிறோம்
நரகத்து நெருப்பை எமைவிட்டு விலக்கு

ஏந்திடும் கரங்களில் ஈடேற்றம் இடுவாய்
ஏகனே எங்களைச் சுவர்க்கத்தில் விடுவாய்
நீர்நிலை நெளிந்தோடும்  நதிக்கரை தருவாய்
நின்னையே வணங்கினோம் எம்மைநீ காப்பாய்

நரகத்து நெருப்பிற்கு விறகாக்க வேண்டாம்
நாள்தோறும் வெந்தழியும் தண்டனை வேண்டாம்
சுவனத்துக் கதவுகள் திறக்கின்ற மாதம்
சுகமான சீவிதம் கிடைக்கட்டும் இறைவா

ஆயிரம் இரவுகளுக்கு மேலான இரவின்
அருள்மழை எம்மீது பொழியட்டும் அல்லாஹ்
முகமன் செய்தொழுகும் அதிகாலை வரையே
வானவர் உலவவே இறைஞ்சுகிறோம் அல்லாஹ்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
இது ஒரு ரமளான் மீள்பதிவு

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 79 2

அதிரைநிருபர் பதிப்பகம் | July 25, 2014 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!

பிரார்த்தனையின் சிறப்பு:

அல்லாஹ் கூறுகிறான் :
''என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன், எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்'' என்று உங்கள் இறைவன் கூறுகிறான். ( அல்குர்ஆன் : 40:60)

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் ! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். ( அல்குர்ஆன் : 7 : 55 )

''அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின்ஷர்ரி மாஅமில்து வமின் ஷர்ரி மாலம் அஹ்மல்'' என்று தன் பிரார்த்தனையில் நபி(ஸல்) அவர்கள் கூறுவார்கள். (முஸ்லிம்)

பொருள்:
இறைவா! நான் செய்துள்ளவற்றின் தீங்கை விட்டும் நான் செய்யாதவற்றின் தீங்கை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1477 )

''மூஃமின்களின் அன்னையே! உங்கள் வீட்டில் நபி(ஸல்) அவர்கள் இருக்கும் போது, எந்த துஆவை அதிகம் ஓதுவார்கள்?'' என்று கேட்டேன். ''யா முகல்லிபல் குலூபி ஸப்பித் கல்பீ அலா தீனிக'' என்பதுதான் அவர்களின் துஆவில் அதிகமாக இருந்தது என்று பதில் கூறினார்கள்.  ''

பொருள் : இதயங்களைப் புரட்டுபவனே! என் இதயத்தை உன் மார்க்கத்திலே உறுதிபடுத்துவாயாக! (அறிவிப்பவர்: ஷஹ்ரு இப்னு ஹவ்ஷப் (ரலி) அவர்கள் (திர்மிதீ)  (ரியாளுஸ்ஸாலிஹீன்:1489 )

''நபி(ஸல்) அவர்கள் அதிகமாக துஆ செய்வார்கள். அதில் எதையும் நாங்கள் மனனம் செய்ததில்லை. (ஒருமுறை நபி(ஸல்) அவர்களிடம்) இறைத்தூதர் அவர்களே! அதிகமாக துஆ செய்கிறீர்கள். அதிலிருந்து எதையும் நாங்கள் மனனம் செய்யவில்லையே என்று கூறினோம். ''அவை அனைத்தையும் சேர்த்து உங்களுக்கு நான் கூறட்டுமா?'' ''அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க மின் கய்ரி மா ஸஅலக மின்ஹு நபிய்யுக முஹம்மது(ஸல்), வஅஊது பிக மின் ஷர்ரி மஸ்தஆப்த மின்ஹுநபிய்யுக முஹம்மது(ஸல்), வஅன்தல் முஸ்தஆனு, வஅலய்கல் பலாஃகூ, வலா ஹவ்ல, வலாகுவ்வத்த இல்லாபில்லாஹ் என்று கூறுவீராக! எனக் கூறினார்கள்.

பொருள்:
இறைவா! உன் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் உன்னிடம் கேட்ட நல்லவற்றை அனைத்தையும் உன்னிடம் நான் கேட்கிறேன். உன் நபி முஹம்மது (ஸல்) உன்னிடம் பாதுகாப்புத் தேடிய தீமையானவற்றை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ உதவி செய்ய கோரப்படுபவன். உன்னிடமே நான் கேட்டவை உண்டு. எந்த திரும்புதலும், சக்தியும் உன்னிடமே தவிர வேறில்லை.  (அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி) அவர்கள் (திர்மிதீ)(ரியாளுஸ்ஸாலிஹீன்:1492 )

முன்னே இல்லாதவருக்கும் துஆ செய்வதின் சிறப்பு:

அல்லாஹ் கூறுகிறான் :
''அவர்களுக்குப் பின் வந்தோர் எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! (அல்குர்ஆன் : 59 : 10)

(நபியே) உமது பாவத்திற்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் நீர் மன்னிப்பு கேட்பீராக! (அல்குர்ஆன்: 47:19)

''தன் சகோதரருக்காக மறைவாக துஆ செய்யும் ஒரு முஸ்லிம் அடியாரிடம் ''உனக்கும் இதுபோல் உண்டு'' என ஒரு மலக்கு கூறாமல் இருப்பதில்லை'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுதர்தா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1494 )

''முஸ்லிமான ஒருவர் தன் சகோதரருக்காக மறைவாக செய்யும் துஆ, ஏற்கப்பட்டதாக அமையும். (துஆ செய்கிற) அந்த மனிதரின் தலை அருகே, நியமிக்கப்பட்ட வானவர் இருப்பார்.அவர் தன் சகோதரருக்காக நல்லதை கேட்கும் போது, வானவர், ''அப்படியே ஆகட்டும்! உனக்கும் இதுபோலவே உண்டு'' என்று கூறுவார் என நபி(ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூதர்தாஉ (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1495 )

துஆவின் சட்டங்கள்:

''ஒருவரால் நன்மை செய்யப்பட்டவர், அதை செய்தவருக்கு ''ஜஸாக்கல்லாஹு கய்ரன் (அல்லாஹ் உனக்கு நற்கூலி வழங்குவானாக) என்று கூறினால், (நன்றி கூறி) அவரைப் புகழ்வதில் அவர் அதிகமாக நடந்து கொண்டவராவார்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்கள் (திர்மிதீ)  (ரியாளுஸ்ஸாலிஹீன்:1496 )

''உங்களுக்கு எதிராக துஆ செய்யாதீர்கள். உங்களின் குழந்தைகளுக்கு எதிராகவும் துஆ செய்யாதீர்கள். உங்களின் சொத்துகளுக்கு எதிராகவும் துஆ செய்யாதீர்கள். (இப்படி துஆ செய்வது மூலம்) நீங்கள் அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டு, உங்களுக்கு அவன் துஆ ஏற்கின்ற அந்த நேரத்திற்கு உட்பட்டு விட வேண்டாம்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1497 )

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...

அலாவுதீன் S.

அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல்.. 7

அதிரைநிருபர் பதிப்பகம் | July 24, 2014 | , , ,

எல்லாம் வல்ல இறைவனின் இனிய பெயர்கள் அனைத்தும் அப்பெயர்களுக்குரிய தமிழாக்கத்துடன் கவி நடையில் . மனப்பாடம் செய்து இறைஞ்ச ஏற்றது. 

காவல் பிஸ்மியும் கனிவாய் ஹம்தும் 
ஆவல் மிகவே அகமுவந் துரைத்தோம் 
எல்லா உலகும் ஏகமாய்க் காக்கும் 
வல்லான் இறையே வான்புகழ் அல்லாஹ்! 

அளவிலா அருளின் அர் ரஹ்மானே!
அளவிலா அன்பின் அர் ரஹீமே!
ஒரு பேரரசாய் உயர் மாலிக்கே!
துருவே  இல்லாத தூய குத்தூசே!

சரிநிகர் இல்லாச் சாந்தி ஸலாமே!
விரியுமடைக்கலம் விளங்கு முமினே!
கனிவுற அனைத்தும் காக்கும் முஹைமினே!
தனிமிகையாகத் தானுயர் அஸீசே!

ஒரு சமநிலையின் உயர் ஜப்பாரே!
பெருமை மிக்க பேர் முதக்கப்பிரே!
எல்லாம் ஆக்கும் இறை காலிக்கே!
வல்லானாகி வனையும் பாரியே!

படைப்பின் வடிவைப் படைக்கும் முஸவ்விரே!
இடர்ப்படு பிழைகளை எடு கப்பாரே!
அனைத்தையும் அடக்கி ஆள் கஹ்ஹாரே!
தனிப்பெரும் கொடைகள் தரு வஹ்ஹாபே!

உணவினை வழங்கும் உயர் ரஸ்ஸாகே!
மனமுறு வெற்றி மன்னு ஃபத் தாஹே!
எல்லாம் அறியும் ஏக அலீமே!
ஒவ்வா உணவை ஒறுக்கும் காபிளே !

அகமும் அன்னமும் அருள் பாஸித்தே!
தகவிலா தவற்றைத் தாழ்த்து காபிளே!
உவக்கும் பதவியில் உயர்த்தும்  ராபியே!
சீரும் சிறப்பும் சேர்க்கும் முயிஸ்ஸே!

சாரும் இழிவினை சாட்டு முதில்லே!
இறைஞ்சலைக் கேட்கும் இனிய ஸமீயே!
உறைவான பார்க்கும் உயரிய  பஸீரே!
தீர்ப்புகள் அளித்துத் தேற்றும் ஹகமே!

தீர்ப்பில் நீதி திகழும் அதில்லே!
உள்ளருள் காக்கும் உயர் லத்தீபே !
உள்ளமை அறியும் ஒண் கபீரே!
தெள்ளிய அமைதி தேர் ஹலீமே!

வல்லமை மிகுந்த வரிசை அளீமே! 
அல்லதை மன்னித்தருள் கபூரே !
நன்றி சிறக்கும் நல்  ஷக்கூரே !
மன்றிலே உயர்ந்த மாபெரும் அலீயே!

ஆணையில் வல்ல அரிய கபீரே!
பேணிக் காக்கும் பெரிய ஹபீளே!
திட்பமும் வலிமையையும் திகழும் முகீத்தே!
நுட்பமாய் கணக்கை நோக்கும் ஹசீபே!

தடையிலா வல்லமை தங்கும் ஜலீலே!
கொடையாலுயர்ந்த கோதறு கறீமே! 
கண்காணிக்கும் கண்ணிய ரகீபே!
நன்முரைஈட்டை நல்கு முஜீபே!

விரிவாய்க் கொடுக்கும் விரி வாஸீயே!
தெரி நுண்ணறிவின்  தெளிவார் ஹகீமே!
மிகுதியாய் உவக்கும் மேன்மை வதூதே!
தகுதியாந் தலைமை தகு மஜீதே!

தட்டியெழுப்பும்  தனிப்பெரும் பாயிதே!
ஒட்டிய காட்சி யுடைய ஷஹீதே!
மறுப்பிலா உண்மை மருவும் ஹக்கே!
பொறுப்புகள் ஏற்கும் புகழ் வகீலே!

வல்லமை மிக்க வான் கவிய்யே!
செல்லும் உறுதிசேர் மத்தீனே!
விசுவாசிகட்கு விகசித வலிய்யே!
நசியாப்புகழின் நாயன் ஹமீதே!

தன்னாலறியும் தனி முஹ்ஸீயே!
முன்னாள் வெளியிடும் முதல் முப்தீயே!
இறுதியல் மீட்டும் இன் முயீதே!
இறந்தோர்க்குயிரை ஈயும் முஹ்யே!

இறக்கச் செய்யும் இறவா முமீத்தே!
சிறக்க வாழும் சீரிய ஹையே!
என்றும் நிலைக்கும் எழில் கையூமே!
நன்றாயுணரும் நலமார் வாஜிதே!

பொன்றாத் தலைமை புகழார் மாஜிதே!
ஒன்றாய்த் தணிக்கும் உயர்வாம் வாஹிதே!
ஒருமைக் குரிய ஒளிசேர் அஹதே!
மருவும் தேவைகள் மருவா ஸமதே!

ஆற்றல் அனைத்தும் அமையும்  காதிரே!
ஆற்றல் அருளும் அரிய முக் ததிரே!
முன்னாலாக்கும் மூலமாம் முகத்திமே!
பின்னாலாக்கும் பிழையிலா முஅக்கிறே!

ஆதியா யிலங்கும் அரியதோர் அவ்வலே!
பேதியா திறுதி பிறங்கும் ஆகிறே!
வெளிப்படை யாகிய வேத ளாகிரே!
களிப்படை ரகசிய கண்ணிய பாத்தினே!

ஆளும் பொறுப்புகள் அமைந்திடு வாலியே!
மூளும் பதவியின் முத்த ஆ லிய்யே!
நன்றியளிக்கும் நலமார் பர்ரே!
என்றும் தவ்பா ஏற்கு தவ்வாபே!

ஊறு செய்வோரை ஒறுக்கு முன்தகிமே!
பூரிய பிழைகள் பொறுக்கும் அபூவே!
முன்னே இரங்க முத்து ரவூஃபே!
மன்னே இருமையின் மலிக்குல் முல்கே!

யாதல் ஜலாலி வல் இக்ராமே!
நீதம் செய்யும் செய்யும் நேரிய முக்ஸிதே!
கடைநா ளதனில் கூட்டும் ஜாமியே! 
அடையும்  தேவைகள் அற்ற கனிய்யே!

தேவைகள் தீர்க்கும் திரு முக்னீயே!
தாவும் துன்பம் தடை மானீயே!
சேரார் துன்புறச் செய்யும்  ளார்ரே!
பாரோர் பயனுறப் பார்க்கும் நாஃபியே!

வானார் ஒளியை வழங்கும் நூரே!
தீனார் நேர்வழி தெரிக்கும் ஹாதியே!
புதுமைகள் புரியும் புகழார் பதீயே!
முதுமை நிலைக்கும் மூவா பாகியே!

எல்லாம் அழிந்தபின் இலங்கும் வாரிதே!
ஒல்லும் நேர்வழி உணர்த்தும் ரஷீதே!
இணையில் பொறுமை இலங்கு ஸபூரே!
காவல! உனக்கு கனிவாய்ச் சூட்டிய 

ஆவல் மிகு அழகுத் திருப்பெயர் 
பலவும் கொண்டு பணிவுடன் வேண்டினோம்.
நலமே யருள்வாய்! நன்மையே பொழிவாய்! 

இறையருட் கவிமணி, பேராசிரியர் மர்ஹூம் கா . அப்துல் கபூர் 
பரிந்துரை : இப்ராஹீம் அன்சாரி


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு