Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஈரம் அன்றி வேறில்லை...! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | July 16, 2014 | , , ,


பதினைந்து நாள் ஷார்ட் வெக்கேஷனில் ரெண்டே நாள் நண்பரோடு குற்றாலம் என இங்கிருந்து கிளம்பும்போதே ப்ளான் போட்டுத்தான் கிளம்பினேன்... ஏனென்றால் சீசன் களைகட்டியிருந்ததாக எங்க பார்த்தாலும் நியூஸ்... மனதும் மனது சார்ந்தவைகளும் ரெஃப்ரஷ் ஆக இப்படி ஒரு ரெண்டு நாள் அவசியம் தேவைப்படுகிறது..கார் பயணத்தை தவிர்த்துவிட்டு இந்த தடவை பேருந்து பயணம்தான் என்பது ஏற்கனவே முடிவான ஒன்று.. தஞ்சாவூர், மதுரை, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம் வரை இருக்கும் அனல் கடையநல்லூரை நெருங்கியதும் கொஞ்சம் கொஞ்சமாய் போக தொடங்கி தென்காசியை அடைந்ததும் மொத்தமாய் போய்விட்டது... குற்றாலம் போகும் பேருந்தில் ஏறிய கொஞ்ச நேரத்திலேயே குற்றாலம் வந்துவிட்டது...விவரிக்க முடியாத அளவுக்கு சரியான க்ளைமேட்... முடிவெட்டியதும் கழுத்து, தலை பகுதியில் வாட்டர் ஸ்ப்ரே அடிப்பார்கள் தெரியுமா அதே மாதிரி சிலிர்க்கும்படியான ச்சில்லிப்பான வானிலை.. 


லோக்கல் ஸ்லாங்கும் எனக்கு ரொம்ப பிடித்தமான ஒன்று.... ‘வந்துருவாம்ல... தெங்காசில பஸ்ஸ புடிச்சிட்டியளா...’ ஏதோ ஒரு உரிமையானவர் பேசுறது மாதிரியான வட்டார வழக்கு அது... அந்த ஊர்க்காரர்களிடம் வேனும்னே பேச்சை கொடுத்து அவர்களை பேசும் பாங்கை, அந்த வட்டார வழக்கை ரசித்துட்டு இருப்பேன்... 


பேருந்தில் வந்து களைப்பு, சீசன் நேரம் என்பதால் எல்லா லாட்ஜும் மேக்ஸிமம் ஃபுல்... போனதும் ரெண்டு உள்ளங்கையை விரிக்கிறார்கள்.. ரூம் இல்லை... அந்த மெயின் அருவி ரோட்லேர்ந்து நடந்து நடந்து கொஞ்சம் தூரம் வந்ததும் வீடு மாதிரியான லாட்ஜில் ரூம் கிடைத்தது... 


ரெண்டு மணி நேர தூக்கத்திற்கு பிறகு கழுத்தில் துண்டை போட்டுட்டு கெளம்பியாச்சு.... முதலில் பழைய குற்றாலம் போகனும்... அங்கே போய் ஆசை தீர குளியலை போட்டுட்டு திரும்பலாம் என்ற ப்ளான்... முட்டி தெரிய டவுசரை போட எனக்கு விருப்பமில்லை... நிறைய பேர் அப்படித்தான் அலைந்தார்கள்... நண்பரும் முட்டி தெரிந்த வஸ்து தான் போட்டிருந்தார்...பழைய குற்றாலம் போயாச்சு... ஜனத்திரள் அதிகம்... அதுவும் மேடான ரோடு அது... அதில் போய் முடியும்வரை வந்துக்கொண்டே இருக்கிறார்கள்..  அருவியில் பனியனோடு போய் கூட்டத்தோடு கூட்டமாய் உள்ளே புகுந்து தலையை காட்டி....பிரமாதமான ஃபீல்... எத்தனையோ முறை வந்தாலும் அந்த நேரத்து அனுபவம் குற்றாலத்தை பொறுத்து புதுசுதான்...


நான் ஏன் பனியோடு உள்ளே போனேன் என்றால் சக குளியர்கள் எண்ணெய்யை தன் உடம்பில் தேய்த்து வந்துவிட்டு நம் உடம்புகளுக்கு தவணை முறையில் எக்சேஞ்ச் செய்துவிட்டு போய்விடுகிறார்கள்... இந்த படுமோசமான எக்ஸ்ப்ரீயன்ஸ் பொதுவா எல்லோருக்கும் இருக்கும்.. அதனால் பனியன் உடுத்தி அல்லது போர்த்தி குளித்து தடுத்தேன் எண்ணெய்களை.. உச்சந்தலையில் விழும் தண்ணீரின் இன்பமான பாரம் எவ்ளோ நேரம் வேண்டுமானாலும் தாங்ககூடியதுதான்... சரியான குளியல்... ஊறியாச்சு...போகவே மனசில்லை... நேரமாச்சுன்னு நண்பர் சொல்லியதால் அந்த பழைய குற்றால மலைப்பாதையில் நடந்து வந்துக்கொண்டிருந்தோம்... மென் தூறல் வேற உடம்பில் பட்டு பட்டு தெறித்தது.... 


மாங்காய் கீத்துகளை நறுக்கி உப்பு கார பொடி தடவி செம்மஞ்சள் கலரில் கூடையில் படுக்க வைத்து விற்பனை செய்துக்கொண்டிருந்தவரிடம் பத்து கீத்துகளை வாங்கி சாப்பிட்டுக்கிட்டே நடந்து வந்துட்டே இருந்தோம்...அந்த க்ளைமேட்டுக்கும் அங்கிருந்த பச்சை பசேல் சூழலுக்கும், மென் தூறலுக்கும், குளித்து முடிந்த பசியில் சாப்பிடும் மாங்காய் கீத்து’களின் ருசிக்கும் அன்றைய தேதியில் அதான் பாஸ் ஆஸெம்... ஆஸெம்.... ஹ்ஹம்ம்ம்... மெயின் ரோடு வந்ததும் ஷேர் ஆட்டோவில் ஏறி குற்றாலம் வந்தடைந்தோம்.. பக்கத்திலிருந்து ஓட்டலில் நான் வெஜ் சாப்பாடு... ரைஸ் வித் மட்டன் குழம்போடு ஆம்லேட்... நண்பர் பரோட்டா சாப்பிட்டார்.. மலை வாழைப்பழம் சாப்பிட்டுட்டு ரெண்டு மணி நேரம் தூக்கம்..மறுபடியும் குளியலுக்கு ரெடி... பேரருவிக்கு போலாமா ஐந்தருவிக்கு போலாமான்னு விவாதத்திற்க்கு பிறகு ஐந்தருவி என முடிவானது... பக்கத்தில் உள்ளவற்றை நாளைக்கு பார்த்துப்போம் தூரத்தில் உள்ளவைகளை முதலில் முடிப்போம் என்பது சரியான முடிவுதான்... 


ஐந்தருவியிலும் தண்ணீர் தாராளமாய் கொட்டியது.. மக்கள் கூட்டமாய் இருந்தார்கள்... இருக்கத்தானெ செய்வார்கள்... இங்கே ஐந்தருவியில் மேற்படி பழைய குற்றால குளியல் டெக்னிக்லேயே பனியனோடுதான் பாத் என்ற கொள்கையோடு உள்ளே புகுந்து குளிக்க ஆரம்பிச்சாச்சு... இங்கே நண்பர் பனியோடு குளிக்க வந்திருந்தார்... ஒரு வண்டி எண்ணெய்யை தடவிட்டாங்க போல ப.குற்றால அருவியில் குளிக்கும்போது... பட்டாத்தான் தெரியும் பட்டாளத்தானுக்கு என்ற பழமொழியை அவர்கிட்ட சொல்லலை... உங்ககிட்ட சொல்றேன்.. ஐந்தருவியில் இருந்த போலீஸ்க்காரரின் கெடுபிடி அதிகமாக இருந்தது... நல்லதுதான்... கண்டிப்புதான் ஒழுங்குப்படுத்தும்... பிரமாதமான, அதிக நேர குளியல் ஐந்தருவியில்... அங்கே குளித்துமுடித்துவிட்டு கொஞ்ச தூரம் ரோட்டில் நடந்து போய் பிறகு போவோம் என்று நடந்தபடியே பேசிட்டு போனோம்... அடுத்த வருஷம் இதே ரெண்டு நாளை நாலு நாளா மாத்தி வரனும் அப்படின்னு சொல்லிட்டு இருந்தேன் நண்பரிடம்... ஆமோதித்தார்...


அன்றைய முதல் நாள் குளியல் + குளியல் + குளியல் என்றபடி கடும் ஈரத்தோடு அமோகமாய் அற்புதமாய் போனது... டூரிஸ்ட் ப்ளேஸ் என்றால் ஏடிஎம் கொஞ்சம் கூடுதலாய் வைத்திருக்கலாம்... நாங்க தங்கியிருந்த லாட்ஜ்க்கு பக்கத்தில் இருந்த ஏடிஎம் ஒர்க் ஆகவில்லை என்று பேருந்து நிலையம் வரை போகவேண்டியிருந்தது அடுத்த ஏடிஎம்க்கு.... இது ஒரு மைனஸ்...ரெண்டாவது நாளில் பனை ஓலையில் பின்னி மடிக்கப்பட்ட சிறிய பாக்ஸில் பனங்கல்கண்டு கருப்பட்டியில் ஆரம்பித்தது முதல் பர்சேஸ்... அப்படியே தொடர்ந்து கிர்னி பழம் என தொடர்ந்து ஒரு மணி நேரம் தொடர் பர்சேஸ்.... பத்து மணிக்கு காலை சாப்பாட்டை முட்டை தோசை சட்னியோடு முடித்தாச்சு... அந்த அடாத்து மு.தோசையை ரோஸ்ட் என்று வேறு எழுதிவைத்திருந்தார்கள் அந்த ஓட்டலில்.. ரோஸ்ட்’ஐ ஃபோட்டோ எடுத்துட்டு போய் காட்டனும்..  


இப்போது மெயின் அருவிக்கு போயிடலாம் என கிளம்பினோம்.. பேருந்து நிலையத்தை ஒட்டியே இருக்கும் அந்த அருவிக்கு நடையிலேயே போயாச்சு... இந்த அருவியில்தான் எண்ணெய் குளியர்கள் மெஜாரிட்டியுடன் இருந்தார்கள்... வேற வழியில்லை இது பொது... குளித்துதான் ஆகனும் என்று வந்தாச்சு... இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாது இருத்தல் அவசியம் என்ற கருத்து மேலோங்கியது... மெயின் அருவி என்பதால் நினைத்ததை விட கூட்டம் அதிகம் இருந்தது.. நன்றாக குளித்தோம்... ஒரு கும்பல் கத்திக்கொண்டே இருந்தது... அந்த சூழலில் தண்ணீரின் இறைச்சலில் அந்த கும்பல் கத்தியது பிடித்தது...சொல்லப்போனால் சேர்ந்து கத்தினோம்... நல்ல ஃபீல் அது... மொத்தமாய் கவனித்தால் மத்த அருவியில் குளித்து ஊறியதைவிட மெயின் அருவியில் குளித்ததுதான் அதிக நேரம்.... ஏனென்றால் இரண்டாம் நாள் முடிவில் இன்னும் ஒரு அருவி மட்டுமே பாக்கி என்ற நிலை... ஆகவே வந்தவரை விடக்கூடாது என்ற மனநிலை ஓங்க குளியலை விட்டு வெளி வர மனமில்லை... 


ஒருவழியாக ஒன்றரை மணி நேர குளியலுக்கு பிறகு மெயின் அருவிலேர்ந்து பேருந்து நிலையம் வரை வரும் ரோட்டில் நடந்தோம்.... அப்போது நடந்து வருகையில் பழாச்சுளை மற்றும் அதே செம்மஞ்சள் மாங்காய் கீத்துகளை சைக்கிளில் கூடை வைத்து அந்த சைக்கிளை ஸ்டாண்டு போட்டு வைத்திருந்து நின்றபடியே விற்றுக்கொண்டிருந்தார்... சொல்லவா வேண்டும்... வாங்கியாச்சு.. கண்டிப்பா அந்த பழாச்சுளை செம டேஸ்ட்.... இன்னும் கொஞ்சம் வாங்கியிருக்கலாம்ன்னு ரூம் கிட்ட வந்தபோது தோன்றியது.. திரும்பி போக மனமில்லை.. கால்களின் முட்டி ரெண்டும் லீவுல போயிருந்தது... முறையான வலி...பகல் ஒரு மணிக்கு ரூம் வந்தாச்சு... மதிய சாப்பாட்டை முடித்துவிட்டு மறுபடியும் குளியலுக்கு ரெடி... கடைசியாக பேரருவி மட்டுமே பாக்கியிருந்ததால் சீக்கிரமே போயாச்சு... அங்கேயும் கணிசமான கூட்டம் இருந்தது... ஒரு மணி நேரம் பத்து நிமிஷம் குளித்து இருப்போம்... குத்துமதிப்பான நேரம்தான் அது.... பேரருவி தண்ணீரின் ஃபோர்ஸ் கொஞ்சம் கூடுதலாய் இருந்தது... மழைத்தூறல் வேற.. அன்றைய தினம் பயணம் என்பதால் அந்த கடைசி பேரருவி குளியலின் ஈரம் இன்னும் ஞாபகமிருக்கிறது...


குளியல் முடித்து ரூமிற்க்கு வருகையில் ’அசல் ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா மற்றும் பால் பொருட்கள் பண்ணையிலிருந்து நேரடி விற்பனை’ என்ற போர்டு கண்டேன்... அந்த குற்றால பயணத்தின் கடைசி பர்சேஸ்’ஆக நெய்யினால் செய்யப்பட்ட பால்கோவா’வை வாங்கிட்டு ரூம்’க்கு வந்தாச்சு... மணி நான்கரை’க்கு மேல் ஆகிவிட்டிருந்தது... வெளியில் சிறுதூறல்... எப்படியப்பா இந்த ஊரை விட்டு போறதுன்னு சின்னப் புள்ளைத்தனமான பிடிவாதத்துடன் கெளம்பியாச்சு... குற்றாலம் பேருந்து நிலையத்தில் தென்காசி பேருந்துக்கு வெயிட்டிங்... நாங்க நின்றபோது தூறல் வேற... ஒரு பேருந்தும் இல்லை...அப்புறம் ஒரு மினிபேருந்து வந்தது... எனக்கு தயக்கம்... ஆனால், நண்பர்.. இதை விட்டா தூறலில் நனைய முடியாது... வாங்க போவோம்ன்னார்... அதுவும் சரிதான்னு இரண்டு நாள் குற்றாலத்திற்கு விடை கொடுத்தது போல் கிளம்பியது மினிபஸ்... அந்த மினிபேருந்தில் ஏறியது எவ்ளோ நல்லதுன்னு பிறகுதான் புரிஞ்சது... ஏனென்றால் அந்த குற்றால சுற்றுவட்டாரமே பார்க்க கண்கொள்ளா காட்சிகளை அளித்தது.. மலையும் மலையை கிழிக்கும் மேக உரசலும்னு ரெண்டு கண்களும் நம்பகிட்ட இல்லை... அதிலும் அந்த மினிபஸ் போன வழியெல்லாம் மிகப்பிரமாதமான வழி...

‘இலஞ்சி' என்னும் அருமையான ஊர்வழியாக சுற்றிதான் கூட்டிப்போனார்கள்... அதுவும் மிக நல்லதா போயிருச்சு... பார்க்க பார்க்க பிடிக்கும் படியான பச்சை பசேல் வண்ணங்களை தீட்டியது போலான நிலப்பரப்பு... அட்டகாசமான உணர்வு... ப்ச்... சூப்பர்.... ஆக இப்படியாக இரண்டு நாள் பயணம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது... 

Disclaimer: இந்த ஆக்கத்திற்க்கு தேவைப்பட்டமையால் இணையத்திலிருந்த மேற்கண்ட படங்கள் இணைக்கப்பட்டிருக்கிறது. 

என்றும் அன்புடன்,
அஹமத் இர்ஷாத்

9 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

//பஸ்ஸைபுடிசிட்டியாள//வட்டாரவழக்கு!ஸ்லேங் கொஞ்சம்நீளும்! தமிழ்பிறந்தமண்அது.அந்தமக்களோடுஇரண்டொருமாதம்பழகினால் இலக்கியதமிழ்சொற்க்களைஅறியலாம்.தமிழின்ஆசான்அகத்தியர்அங்கு தான்உலாவந்தார்.நான்மலேசியாவில்பினாங்கில்ஒருதென்காசிகார பெரியவரிடம்பேசிக்கொண்டிருந்தபோது''மிலேச்சன்''என்ற வார்த்தையையும் பேச்சோடுபேச்சாகசொன்னார். இதுஇலக்கியத்தமிழ்.காட்டுமிறாண்டிஎன்றுபொருள். இதுபோன்றஅரியதமிழ்சொற்க்களைஅவர்களிடமிருந்துசெவியுறலாம்.

sabeer.abushahruk said...

ஜில்லென்று ஒரு கட்டுரை!

இர்ஷாத்,

சீஸனுக்கு சீஸன் குற்றாலம் ஓக்கே. சீஸனுக்கு சீஸன் மட்டும்தான் இந்தப்பக்கம வர வேண்டுமா?

வாசிக்க வாசிக்க குற்றாலப் பலாச்சுளையாக இனிக்கும் உமது எழுத்தை மாங்காய்க் கீற்றைப் போல வண்டியில் வைத்து விற்காமல் அதிரை நிருபர் ஷோ ரூமில் கடை விரிக்கலாமே?

ர்ர்ர்ர்ரொம்ப ரசித்த வர்ணனை:


// குற்றாலம் வந்துவிட்டது...விவரிக்க முடியாத அளவுக்கு சரியான க்ளைமேட்... முடிவெட்டியதும் கழுத்து, தலை பகுதியில் வாட்டர் ஸ்ப்ரே அடிப்பார்கள் தெரியுமா அதே மாதிரி சிலிர்க்கும்படியான ச்சில்லிப்பான வானிலை.. //

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அழகியலைச் சொல்ல இவருடைய அண்ணன் ஒரு வகை என்றால், இளமையுடனும் ஆங்காங்கே இளஞ்சிரிப்பூட்டும் இன்றைய இளசு தமிழ் இவரிடம் தனிவகை !

கையைப் பிடித்துக் கொண்டு மலை ஏற்றிச் சென்ற அனுபவமும், காலார அந்த சாலைகளில் நடந்த அனுபவமும் கூட்டிச் செல்கிறது அழகிய எழுத்து !

எதைச் சொன்னாலும் தனக்கே உரிய நகைச்சுவை மட்டுமல்ல, எவ்வயதினரையும் எழுத்தால் தன் வசம் இழுக்கும் பொடிசு இவர் !

கவிக் காக்கா சொன்னது மாதிரி சீஸனுக்கு சீசன் வருவதல்லாமல், அடிக்கடி வந்து செல்ல ஒரு துண்டு போட்டு வை தம்பி !

Anonymous said...

சபீர் காக்கா,

நெய்னாதம்பி காக்கா (என்ன அதிசயம் பாருங்கள்..! தம்பி’க்கு அடுத்து காக்கா என்று கூப்பிடும் படி உங்கள் பெயர் இருக்கிறது.. :) )

ரொம்ப தேங்க்ஸ்... தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்...!

Ahamed irshad

Ebrahim Ansari said...

நோன்பு முடிந்து குற்றாலம் சென்று வர ஒரு பட்டாளம் தாயராகி வருகிறது. அந்தப் பட்டாளத்தில் சேர மறுத்தோரை சேரும்படித் தூண்டிவிட்டது இந்தப் பதிவு.

அதிரையின் இன்றைய சூட்டுக்கு இதமான சாரல். வாழ்த்துக்கள்.

ZAKIR HUSSAIN said...

குற்றாலம் போகும் ஆசை வந்து விட்டது. போட்டோ தேர்வு பிரமாதம். குற்றாலம் நான் முதன் முதலில் போன போது வந்த எண்ணம். குற்றாலத்திற்கு என்று ஒரு கலெக்டர் தேவை. இயற்கையை ரசித்து எழுதும் எழுத்தாளர்களும், கவிஞர்களும் ஒருபுறம்...இதை எல்லாம் காதில் வாங்காத எறுமைமாட்டு மக்கள் ஒரு புறம். இவ்வளவு குப்பைகளும் எப்படித்தான் சேர்கிறதோ தெரியவில்லை.

ZAKIR HUSSAIN said...

அஹமத் இர்ஷாத்தின் எழுத்து அதிரைநிருபருக்கு தேவை.

adiraimansoor said...

அஹ்மது இர்ஷாத்
என்னை கொஞ்ச நேரம் குற்றாலத்திற்கே இழுத்து சென்று அங்குள்ளவற்றை அப்படியே அனுபவிக்கின்ற மாதிரி ஒரு பிரமையை ரியாத்தில் இருக்கும் எனக்கு எற்படுத்தியது இந்த பதிவை படித்து முடிக்கும்வரை என் உடம்பெல்லாம் குற்றால சாரல் குளிரை அனுபவித்தது உண்மையிலேயே குற்றாலத்திற்குள் நுழைந்தது போன்று ஒருவிதமான பிரமை
செலவில்லாமல் குற்றால சாரலில் நனையவைத்ததற்கு நன்றி

போட்டோக்களும் மிகவும் ரசித்து கலை பார்வையுடன் எடுக்கப்பட்டிருக்கின்றது
அனைத்து போட்டொக்களையும் எனது கனினியில் சிறை பிடித்துவிட்டேன்

இப்படிபட்ட ரசனைமிக்க போட்டோக்களை தந்ததற்கு வாழ்த்துக்கள்

Ahamed irshad said...

இப்றாகீம் அன்சாரி காக்கா,
ஜாஹிர் காக்கா,
மன்சூர் காக்கா,

மிக்க நன்றி...!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு