Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

55

அதிரைநிருபர் பதிப்பகம் | September 13, 2014 | , , ,

தொடர் பகுதி - எட்டு
 
புனித ஜெருசலத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகள் பாக்கி இல்லாமல் சலாஹுதீன் அவர்களால் கைப்பற்றப் பட்டன. சதுரங்க விளையாட்டில் எங்கும் நகர இயலாதபடி ராஜாவுக்கு செக் வைப்பார்களே அப்படி அய்யூபி அவர்களிடம் சிக்கிக் கொண்டது ஜெருசலம். அவ்வளவுதானே தவிர ஜெருசலத்தைக் கைப்பற்றிய மாவீரர் சலாஹுதீன் அய்யூபி அவர்கள் நகருக்குள் நுழையாமல் அதை முற்றுகைதான் இட்டு இருந்தார். அதற்குக் காரணங்கள் இருந்தன. 

நகருக்குள் பரம்பரையாக வாழ்ந்து கொண்டிருந்த ஐந்தாயிரம் முஸ்லிம்களும் சிக்கி இருந்தார்கள். அத்துடன் அறுபதாயிரம் சிலுவைப் போர் வீரர்கள் அங்கு மிச்சம் இருந்தார்கள். அரசரின் குடும்பம் இருந்தது. அத்துடன் பாலியன் ஐபெளின் Balian of Ibelin என்கிற சிலுவைப் போரின் இராணுவ அதிகாரி, சலாஹுதீன் ஒரு எட்டு வைத்து உள்ளே வந்தாலும் ஐந்தாயிரம் முஸ்லிம்களையும் அழித்துவிடுவேனென்றும் புனித பைத்துல் முக்கத்தசை தகர்த்துவிடுவேனென்றும் இத்தனை கிருத்தவர்கள் முற்றுகையிடப்பட்டு சளி பிடித்து இருமிக் கொண்டிருப்பதை உணராமல் விழி உருட்டி உறுமிக் கொண்டிருந்தான். முதலில் இந்த இருமலுக்கும் உறுமலுக்கும் மருந்து கண்ட பிறகே ஜெருசலத்தின் தலைவாசல் படிகளில் தனது தடத்தைப் பதிக்க சலாஹுதீன் அய்யூபி அவர்கள் நினைத்தார்கள். 
அதே நேரம், கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்குப் பிறகு இறைவனின் அன்புக்குரிய ஆலயமான பைத்துல் முக்கதசில் அல்லாஹு அக்பர் என்ற பாங்கொலியை மீண்டும் முழங்கச் செய்ய வேண்டுமென்ற அவசரமும் அய்யூபிக்கு இருந்தது. ஆகவே, தனது ஆலோசனைக் குழுவை அவசரமாகக் கூட்டினார். முடிவுகள் எடுக்கப்பட்டன; அறிவிப்புகள் ஜெருசலத்தின் வீதியெங்கும் விதை தூவின. அந்த அறிவிப்புகளால், மனிதாபிமானமும் மார்க்க அபிமானமும் பெற்ற மனிதர் சலாஹுதீன் அய்யூபி என்பதை உலகம் உணர்ந்து தனது அழியாத சரித்திர ஏடுகளில் அவரது பெயரை பொறித்து வைக்கத் தொடங்கியது.

“புனிதமான ஜெருசலத்தில் வசித்து வரும் பொது மக்களே! இந்தப் புனித பூமியின் கோட்டையை என்னிடம் ஒப்படைத்து விட்டு இங்கிருந்து கிளம்பிச் செல்ல விரும்புவோர் அனைவரும் நாற்பது நாட்களுக்குள் ஆண்கள் பத்து தினாரும் பெண்கள் ஐந்து தினாரும் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் ஒரு தினாரும் பிணைத் தொகையாக செலுத்திவிட்டு அமைதியுடன் வெளியேறலாம். எனது வீரர்கள் உங்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் வயோதிகரை மரியாதையுடன் நடத்துவார்கள். இங்கிருக்கும் சிலுவைப் போர் வீரர்கள் உட்பட்ட எவரையும் நான் எதிரிகளாகக் கருதவில்ல. இந்த அறிவிப்பை ஏற்று என்னிடம் ஜெருசலத்தை ஒப்படைத்துவிட்டு நீங்கள் வெளியேறலாம். மாறாக, இரத்தம் சிந்தி போரிட்டுத்தான் இந்த ஜெருசலத்தை நான் அடைய வேண்டுமென்று நீங்கள் நினைத்தால் நான் வேறு வழி இல்லாமல் அதைச் செய்ய நேரிடும். ஆனால் இந்தப் புனித பூமியில் இனி ஒரு சொட்டு இரத்தம் கூட சிந்தப்படுவதை நான் மனதார விரும்பவில்லை."

இவ்வாறு சலாஹுதீன் அய்யூபி அறிவித்தார். பத்து தினார் என்பதோ ஐந்து தினார் என்பதோ ஒரு தினார் என்பதோ ஒவ்வொருவரின் உயிரோடு ஒப்பிடும்போது ஒரு பெரிய தொகையல்ல. ஆனால், இந்தக் குறைந்த தொகையை ஏன் அறிவித்தார் என்றால் அதைக் கூட கட்ட அருகதை இல்லாத மக்களாக அன்றைய ஜெருசலத்தில் வாழ்ந்த மக்களின் பொருளாதார நிலை இருந்தது; அப்படித்தான் அவர்களை வைத்திருந்தது அதுவரை ஆண்ட கிருத்துவர்களின் அரசு. 

ஜெருசலத்தின் மக்கள் , சலாஹுதீன் அய்யூபி அவர்களின் சரணடைந்து உயிர் பிழைத்து வெளியேறுவதற்கான சலுகைத் திட்டங்களை மனதளவில் வரவேற்றார்கள். ஆனால் பாதிரியார்மார்களிடமும் சிலுவைப் போர் வீரர்களிடமும் கொழுப்பு இன்னமும் கொண்டாட்டம் போட்டுக் கொண்டுதான் இருந்தது. மக்கள் மீண்டும் ஒரு யுத்தம் வந்தால் மரணிப்பது நிச்சயம் என்று பயந்தார்கள். சலாஹுத்தீன் அய்யூபி அவர்களின் வாள், தங்களின் வாழ் நாளை எண்ணி இறுதியாக்கி விடுமென்று உறுதியாக நம்பினார்கள். இவ்வளவு இரக்கமுள்ள மனிதரின் சலுகைகளை பயன்படுத்திக் கொண்டு பிழைத்துப் போய்விட வேண்டுமென்றே விரும்பினார்கள். 

“சிரம் அறுத்தல் வேந்தருக்கு பொழுது போக்கும் இனிய கலை ; ஆனால் நமக்கோ அதெல்லாம் உயிரின் வாதை” என்ற பாரதிதாசனின் வரிகளுக்கொப்ப ஆளும் வர்க்கம் அடித்துக் கொள்ளும். ஆனால் அவதிக்குள்ளாவது பொதுமக்கள்தானே என்ற எண்ணம் பரவலாக ஊடுருவி இருந்தது. போரிட்டுக் கைப்பற்றப்பட்ட நாடுகளில் பொது மக்களைக் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கும் அரசர்களையே கண்டு பழக்கப்பட்ட உலகமும் , ஜெருசலத்தின் மக்களும் சலாஹுதீன் அய்யூபியின் கருணையான உள்ளத்தைக் கண்டு உள்ளுக்குள் வியந்தது.

இந்த நிகழ்வை தனது Glimpses of World History என்ற நூலில் குறிப்பிடுகிற பண்டித ஜவஹர்லால் நேரு இவ்விதம் வியந்து விவரிக்கிறார். 

“Saladin, was a great fighter and famous for his chivalry. Even the Crusaders who fought Saladin came to appreciate this chivalry of his. “ என்று சொல்லும் பண்டித நேரு ஒரு நிகழ்வை பாராட்டிக் குறிப்பிடுகிறார். 

“There is a story that once Richard was very ill and was suffering from the heat. Saladin, hearing of this, arranged to send him fresh snow and ice from the mountains. Ice could not be made artificially then by freezing water, as we do now . So natural snow and ice from the mountains had to be taken by swift messengers. “என்பன நேருஜியின் வரிகள். “இன்னா செய்தார்க்கும் இனியவையே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு ?” என்ற வள்ளுவரின் வாக்குக்கு வடிவமாக விளங்கினார் சலாஹுதீன் அய்யூபி என்பது இதனால் விளங்குகிறது. 

இவ்வளவு கருணை இருந்தும் சலாஹுதீன் என்கிற கற்பூர வாசனையை நுகரத் தெரியாதவர்கள் தான் ஜெருசலத்தின் நிர்வாகத்தில் இருந்தனர். சலாஹுதீனையும் அவரது அறிக்கையையும் அவர்கள் அலட்சியம் செய்தார்கள். எவ்வளவு காலம் இந்த இஸ்லாமியப்படை கோட்டைவாசலில் கொட்டகை போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்க முடியுமென்று நினைத்தார்கள். ஜெருசலத்தின் உள்ளே தேவையான உணவுப் பொருட்கள் இருக்கின்றன; ஐரோப்பியப்படைகளுடைய உதவிகளும் கிடைக்கும்; மருத்துவ வசதிகள் இருக்கின்றன; மருண்டு ஓடிவிடுவார் சலாஹுதீன் என்று மனக் கோட்டை கட்டினார்கள் கிருத்தவ ஆட்சியாளர்கள். 

அவர்களது மனக் கோட்டை மண் கோட்டையாகப் போகப் போவதை அறியாமலேயே காத்திருந்து காத்திருந்து காலங்கள்தான் போனது. ஆனால் சலாஹுதீன் என்ற கப்பல் தனது நங்கூரத்தைக் கிளப்பிக் கொண்டு போவதாகத் தெரியவில்லை. கிருத்தவ நிர்வாகமும் கோட்டைக்குள் அடைபட்டுக் கிடந்த சிலுவைப் போர் வீரர்களும் பொதுமக்களும் சலிப்படைந்தனர். அவர்களின் பிடிவாதத்தின் பாதரசத்தின் உச்சமானி, சலாஹுதீன் அவர்களிடம் சரணடைவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலையில் வந்து நின்றது. பசி வந்திட, அவர்களுக்குப் பத்தும் பறந்து போய்விட்டு இருந்தது. தப்புக் கணக்குப் போட்டுவிட்ட தம்புசாமியின் நிலையில் தவித்தனர். இப்போது என்ன வழி? 

சலாஹுதீன் அவர்களின் அறிவிப்புகளை ஏற்று பணயத் தொகைகளைக் கட்டிவிட்டு மூட்டை முடிச்சுகளையும் கட்டிக் கொண்டு ஆயுதங்களையும் அங்கேயே போட்டுவிட்டு ஜெருசலத்தை விட்டு வெளியேறுவதுதான் இவ்வளவு நாட்கள் முற்றுகைக்குப் பின்னரும் கிருத்துவப் படைகளுக்கும் நிர்வாகத்துக்கும் எதிரே இருந்த ஒரே வழி. சமாதானத்துக்கான தூது அனுப்ப வேண்டியதுதான் அடுத்து அவர்கள் செய்ய வேண்டியது. அதைத்தான் செய்தார்கள். சலாஹுதீன் நினைத்தத்தை முடிப்பவரல்லவா அதனால் அவர் நினைத்து எதிர்பார்த்த சமாதானத்தை புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டு வெள்ளைக் கொடி காட்டி வந்தவர்களுக்குப் பச்சைக் கொடி காட்டினார்.

அவர் காட்டிய பச்சைக் கொடியில் பல இரத்தினங்களும் பதிக்கப்பட்டு மின்னலடித்தன. அன்று முதல் பாலஸ்தீனம் இஸ்லாமியப் பேரரசின் அங்கம் என்று அறிவித்தார். ஜெருசலம் வெற்றி கொள்ளப்பட்டது என்றும் அறிவித்தார். நேரடியாக பைத்துல் முக்கத்தஸ் சென்று அங்கு காணிக்கை தொழுகையை நிறைவேற்றினார். அதன்பின் அல்லாஹு அக்பர் என்று பாங்கொலித்து விட்டு ஜமாத்துடன் தொழுதார். 90 ஆண்டுகளுக்குப் பிறகு அல்லாஹ் மற்றும் அவனது ரஸூலின் பெயர் ஜெருசலத்தின் கோட்டைச் சுவர்களில் எதிரொலித்தது.

அத்துடன், சமாதானத்தை நாடிவந்த கிருத்தவர்களுக்கு இன்னும் சில சலுகைகளையும் அறிவித்தார். அதன்படி அன்று முதல் ஜெருசலத்தில் தங்கி இருந்த பொது மக்கள் அவர்கள் கிருத்துவரானாலும் யூதரானாலும் ஜெருசலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் இல்லை; ஐரோப்பாவின் பல பகுதிகளில் இருந்து ஜெருசலத்திற்கு வந்து குடியமர்ந்த அனைவரும் கூட இனி இஸ்லாமிய ஆட்சிக்குக் கட்டுப்பட்ட பாலஸ்தீனத்தின் பாகுபாடற்ற குடிமக்கள் என்கிற அந்தஸ்தைப் பெறுவார்கள் என்று அறிவித்தார். 

ஆனால் வாளேந்தி இஸ்லாத்துக்கு எதிராக போரிட்ட சிலுவைப் போர் வீரர்களின் வாசனையோ அடையாளமோ அங்கு இருக்கக் கூடாது; அவர்கள் அனைவர் மட்டும் பிணைத் தொகையைக் கட்டிவிட்டு நாற்பது நாட்களுக்குள் குடும்பத்தினருடன் வெளியேறியே ஆகவேண்டும் என்று மீண்டும் அறிவித்தார். பிணைத் தொகையைக் கட்ட இயலாதவர்கள் சுல்தானின் அடிமையாக இருக்கவேண்டுமென்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. 

இதனால் நாம் அறிவது என்னவென்றால் சலாஹுதீன் அவர்கள் ஆட்சியின் தலைவர் என்ற முறையில் அனைவருக்கும் ஒரே அளவு கோலை எடுக்கவில்லை. “ உதவி வரைத்தன்று உதவி உதவி செய்பட்டார் சால்பின் வரைத்து” என்கிற வள்ளுவரின் வரிகளை சலாஹுதீன் படித்திருப்பார் என்று தோன்றவில்லை. ஆனால் அது அவரது பிறவியின் இயல்பாகவும் அவர் பின்பற்றிய இஸ்லாத்தின் கோட்பாடாகவும் இருந்ததுதான் அவர் இவ்வளவு இரக்கமுள்ளவராக இருந்ததற்குக் காரணம். இன்று போர் என்ற பெயரில் அப்பாவிகளையும் குழந்தைகளையும் பொதுமக்களையும் கொல்லும் முறையில் குண்டுவீசி அழிக்கும் பாவிகள் சலாஹுதீன் அவர்களின் வாழ்க்கை பக்கங்களைப் படித்துப் பார்க்க வேண்டும். சலாஹுதீன் நினைத்திருந்தால் அவர்கள் அத்தனை பேரையும் பிற்காலத்தில் ஹிட்லர் நடத்திய இனப்படுகொலைக்கு ஒத்திகை நடத்திக் கொன்று குவித்திருக்க முடியும். ஆனால் பெருமானார் ( ஸல்) அவர்களின் வழிகளைப் பின்பற்றிய சலாஹுதீன் அவர்களால் இதைசெய்திருக்கவே இயலாது.

மாறாக, அகதிகளாக வெளியேற வேண்டிய அவர்கள் மீது இன்னும் இரக்கம் காட்டினார். வரலாற்று ஆசிரியர்களில் பலர் சலாஹுதீன் அவர்களின் இந்தச் செயலை மூக்கின் மேல் விரலைவைத்துப் பாராட்டுகிறார்கள். சிலர் இந்த ஆளுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று கண்டிக்கவும் செய்கிறார்கள். அவை யாவை?

முதலாவதாக ஜெருசலத்தை விட்டு வெளியேறியே தீரவேண்டுமென்று உத்தரவிடப்பட்ட- போரின்போது பல கொடுமைகளை இழைத்த சிலுவைப் போர் வீரர்கள் மீது அவர் செலுத்திய கருணை. பிணைத்தொகையை கட்டி விட்டு வெளியேறவேண்டும் அல்லது அடிமையாக வேண்டுமென்று சுல்தான் சலாஹுதீன் அவர்கள் பிறப்பித்த உத்தரவு அப்படியே இருந்தாலும், சலாஹுதீன் அவர்களோ அவர்களைப் பற்றி இரக்க சிந்தனையுடன் சிந்திக்கத் தொடங்கி இருந்தார். கட்டுவதற்குப் பணம் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் என்றும் யோசித்தார். ஆயிரமானாலும் சிலுவைப் போர் வீரர்களும் தான் வெற்றி கொண்ட நாட்டின் பிரஜைகளே என்ற உச்சகட்ட இரக்க சிந்தனை அவருக்குள் ஏற்பட்டது.

மொத்தம் அறுபதாயிரம் வீர்கள் அங்கு குவிந்து இருந்தார்கள் அவர்களுள் பிணைத்தொகை கட்டுவதற்குப் பணம் இல்லாத நிலையில் பத்தாயிரம் வீரர்கள் இருந்ததைக் கண்ட சலாஹுதீன் அவர்கள், அந்தப் பாவிகளின் தலைமகன்களுக்குரிய பிணைத்தொகையை தனது சொந்தப்பணத்திலிருந்து தானே கட்டினார். மேலும் ஏழாயிரம் வீரர்களுக்காக பிணைத் தொகையை தனது சகோதரரை கட்டும்படிப் பணித்தார். இன்னும் சிலருக்கு சலாஹுதீன் அவர்களுடைய அரசியல் ஆலோசகர்கள் பிணைத்தொகையைக்கட்டி காட்டுச் சனியன்களை நாட்டைவிட்டு வெளியேற்றினர். இதுபோல் அதிசயம் உலக சரித்திரத்தில் நடந்ததா என்று சல்லடைவைத்து சலித்தாலும் காணக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

சலாஹுதீன் அவர்களுடைய இந்த மனிதாபிமான நடவடிக்கையை நிதியை நிர்வாகம் செய்துகொண்டிருந்த அவரது அமைச்சர்கள் எதிர்த்து ஆலோசனை கூறினாலும் , சிலுவைப் போர் வீரர்களும் மனிதர்கள்தானே என்று தனது அமைச்சர்களின் வாயை அடைத்தார் சலாஹுதீன். தனது அமைச்சர்களின் எதிர்ப்பு, எவ்வளவு மதிப்பு வாய்ந்தது என்பதை பின்னாளில்தான் தெரிந்து கொண்டார். நஞ்சைக் கக்கும் நாகப்பாம்புக்கு பால்வார்த்த தவறுக்கு சலாஹுதீன் அவர்கள் கொடுத்த விலை கொஞ்சமல்ல. 

கடந்த அத்தியாயத்தில் நாம் கண்ட பழரசம் பருகிய ஜெருசலத்தின் அரசர் Lusingan King Consort – ஐ, அவர் மனைவி சிபில்லா வுடன் சேர்த்துவைத்து அவர்களின் பொருட்களுடன் பத்திரமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். மேலும் Queen Tamar of Georgia வுடைய வேண்டுகோளை ஏற்று அவர் அனுப்பிய பரிசுப் பொருள்களையும் ஏற்றுக் கொண்டு போரின்போது அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட அனைத்துப் பொருள்களையும் பத்திரமாக வண்டியில் ஏற்றி அனுப்பி வைத்தார். இவற்றை சலாஹுதீன் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய Baha ad- din Ibn Saddad அவர்கள் குறிப்பிடுகிறார். 

சிலுவைப் போர் வீரர்களுக்கு பிணைத்தொகையைத் தானே கட்டி அவர்களை பத்திரமாக வெளியேறிய பின்னர் வானத்தில் போன சனியனை ஏணிவைத்து இறக்கியும் இரக்கம் காட்டினார். அஷ்கிலான் Ashkelon என்ற பகுதியில் குடியேறி இருந்த யூதர்களை வாருங்களேன் வந்து ஜெருசலத்தில் குடியேறுங்களேன் என்று வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து அவர்களையும் ஜெருசலத்தில் குடியேற்றினார். பின்னாளில், வாருங்கள் என்று வரவேற்கப்பட்ட அவர்கள் சலாஹுதீன் அவர்களின் காலை வாரி விடப்போவது தெரியாமல் இவற்றை செய்தார். இன்றைய பாலஸ்தீனப்பிரச்சனைக்கு இப்படி ஒரு வகையில் சலாஹுதீன் அவர்களின் இரக்க சுபாவம் இரை போட்டது. அது மட்டுமா? 

சிலுவைப் போர்கள் நடந்த அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தோற்று ஓடிப் போன சிலுவைப் போர் வீரர்களை ஏற்றுக் கொள்ள எந்த கிருத்தவ நாடுகளும் தயாராக இருக்கவில்லை. ‘கையில் காசு இல்லாதவன் வந்தால் கதவை சாத்தடி’ என்ற கொள்கைப்படி அகதிகளாக வந்த சிலுவைப்போர்வீரர்களுக்கு கோட்டைக் கதவுகள் சத்தத்துடன் சாத்தப்பட்டன. பல நாடுகளும் அவர்களை விரட்டியடித்தன. சாலைப் பணியாளர்கள் போல் தலையில் சொந்த சுமைகளுடன் அவர்கள் நாடு விட்டு நாடு நாடோடிகளாக அலைந்தனர். எகிப்துக்கும் சிரியாவுக்கும் திரிபோலிக்கும் சிலுவைப்போர்வீரர்கள் ஓடினார்கள் ; உறைவிடம் தேடினார்கள். இன்னும் ஓடினார்கள் ஓடினார்கள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினார்கள். வறுமையின் கோரத் தாண்டவத்தால் சிலுவைப் போர் வீரர் ஒருவரின் மனைவி நல்ல தங்காளாக மாறி பசியால் துடித்த தனது குழந்தையை கடலில் வீசி எறிந்த பரிதாபமும் நிகழ்ந்தது என்ற சம்பவம் எல்லா வரலாற்று நூல்களிலும் காணக் கிடைக்கிறது. 

தன்னால் வெற்றி கொள்ளப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சிலுவைப் போர் வீரர்கள் கிருத்துவ நாடுகளால் அரவணைக்கபடாமல் அவதியுறும் செய்தி கருணையின் மன்னன் - காருண்யதாசன் சலாஹுதீன் அவர்களை சென்றடைகிறது. உடனே அவரது இதயத்தின் இரக்க வால்வு திறந்து கொள்கிறது. அந்த இரக்கமான நெஞ்சில் சுரந்த சுரப்பிகள் சிலுவைப் போர் வீரகளை அரவணைக்கத் தூண்டியது. அந்த இரக்கத்தின் காரணமாக நாடோடிகளாகத் திரிந்த அந்த வீரகளை தங்கள் குடும்பத்துடன் சலாஹுதீன் அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட இன்றைய தெற்கு லெபனானின் கடற்கரை நகரான * TYRE என்ற நகரில் குடியமர்ந்து கொள்ள அனுமதியளித்தார். இந்த நகரை பைபிள் தீரு என்று குறிப்பிடும். மூட்டை முடிச்சுகளுடன் வந்த அகதிகளுக்கு அடைக்கலம் தந்ததுடன் அவர்களின் வயதான பெற்றோர்கள் பயணிக்கக் கழுதைகளையும் தந்து உதவினார் சலாஹுதீன் அவர்கள். அண்ணன் ஆணையிட்டுவிட்டான் என்று திண்ணையைப் பிடிக்க TYRE நகர் நோக்கித் திரண்டது கிறித்தவக் கூட்டம். 

அழகிய அந்த நகரில் இடம் கிடைத்ததும் நன்றி மறந்த சிலுவைப்போர் வீரர்கள் மடத்தைப் பிடுங்க ஆலோசனை செய்தனர். படுக்கப் பாய் கொடுத்ததும் கிடைக்கு இரண்டு ஆடு வேண்டுமென்று கேட்ட கதையாக உலகெங்கும் இருந்த கிருத்தவர்களை ஒன்று திரட்டும் பணிகளில் ஈடுபட்டார்கள். இதன் விளைவாக சலாஹுதீன் அவர்களின் கருணைக்கு அவர்கள் தந்த பரிசுதான் அவருக்கு எதிராக மூன்றாவது சிலுவைப் போர். 

இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பார்க்கலாம். 

 TYRE என்கிற இந்த நகருக்கு 1983 ஆம் வருடம் ஒரு தியாகத் நாளான ஹஜ் பெருநாளன்று நான் செல்லுகிற ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அழகான கடற்கரைப் பட்டினமான இந்த ஊரைப் பற்றியும் லெபனானில் 1979 – 1984 வரை அதன் தலைநகர் பெய்ரூட்டில் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை பற்றியும் நினைத்தால் அது ஒரு திகிலான அனுபவங்களின் தொகுப்பாகும். இன்ஷா அல்லாஹ் இன்னொரு சந்தர்ப்பத்தில் அந்த அனுபவங்களைப் பகிர்வேன். 

இபுராஹீம் அன்சாரி

55 Responses So Far:

Unknown said...

மிக அருமையான தகவல்கள் தற்போதைய இளைகர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது எனவே சலாஹுதீன் அய்யுபி அவர்களின் வரலாறு மட்டுமாவது இன்றைய முஸ்லிம் மாணவர்கள் அறிய ஏற்பாடு செய்யஉம்

Ebrahim Ansari said...

துரதிஷ்டவசமாக உலக மாவீரர்கள் என்கிற வரிசையில் கட்டாயம் இடம் பெற வேண்டிய சலாஹுதீன் அய்யூபி ( ரஹ் ) அவர்களின் பெயர் மாவீரர் அலேக்சாண்டருடனோ. நெப்போலியனுடனோ, அக்பர் தி கிரேட் என்று சொல்லப்படும் வகையுடனோ கூட உலகம் அறிந்திருக்கவில்லை.

அதை அறிமுகபடுத்தும் நோக்கத்திலேயே நான் படிக்கப் படிக்கக் கவர்ந்த இந்த மனிதப் புனிதனின் கதையை விரிவாக எழுதுகிறேன்.

வேண்டுமானால் இவருடைய கதையை மரபும் மார்க்கமும் மீறாமல் நாடகாமாக எழுதித்தரவும் தயாராக இருக்கிறேன். பள்ளி அல்லது கல்லூரி ஆண்டு விழாவில் அரங்கேற்ற இயலுமா?

உலகத்துக்கு நம் கதையை பின் எப்படித்தான் சொல்வது?

இப்னு அப்துல் ரஜாக் said...

அழகான ஒரு இரக்கமுள்ள,ஒரு வீரனின் அற்புதமான வரலாறு . அதை கோர்த்து தரும் பெரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் காக்கா உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.

ஒரு சின்ன request

திருக்குறள் அல்லது வேறேதிலிருந்தும் மேற்கோள் காட்ட வேண்டாம்.
குரான் மற்றும் ஹதீசிலிருந்து மேற்கோள் காட்டினால் எங்களுக்கும் பயன் கிடைக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வுடைய அருள் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ் ,செய்வீர்களா ?

இப்னு அப்துல் ரஜாக் said...

அதை அறிமுகபடுத்தும் நோக்கத்திலேயே நான் படிக்கப் படிக்கக் கவர்ந்த இந்த மனிதப் புனிதனின் கதையை விரிவாக எழுதுகிறேன்.

வேண்டுமானால் இவருடைய கதையை மரபும் மார்க்கமும் மீறாமல் நாடகாமாக எழுதித்தரவும் தயாராக இருக்கிறேன். பள்ளி அல்லது கல்லூரி ஆண்டு விழாவில் அரங்கேற்ற இயலுமா?

உலகத்துக்கு நம் கதையை பின் எப்படித்தான் சொல்வது?

It's wonderful idea. Keep it up Kakka

இப்னு அப்துல் ரஜாக் said...

//மனிதப் புனிதனின்//
This word is belongs to our prophet Muhammad sal only.

இப்னு அப்துல் ரஜாக் said...

//துரதிஷ்டவசமாக உலக மாவீரர்கள் என்கிற வரிசையில் கட்டாயம் இடம் பெற வேண்டிய சலாஹுதீன் அய்யூபி ( ரஹ் ) அவர்களின் பெயர் மாவீரர் அலேக்சாண்டருடனோ. நெப்போலியனுடனோ, அக்பர் தி கிரேட் என்று சொல்லப்படும் வகையுடனோ கூட உலகம் அறிந்திருக்கவில்லை.//

This is because of so called historians as we talked earlier episode.

Insha Allah
May Allah make easy for salahuddeen ayubi rah to enter jannaththul firthouse.aameen

Ebrahim Ansari said...

தம்பி இப்னு அப்துல் ரஜாக் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

தங்களின் அன்பான அனைத்து அறிவுரைகளையும் இனி கடைப் பிடிக்கிறேன்.

தாங்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ள வார்த்தைப் பகுதிகளை நீக்கிவிடுவதிலும் ஆட்சேபமில்லை. வேண்டுமானால் தவ்பாச் செய்து கொள்கிறேன்.

( எனக்கு பேஸ்மட்டம் கொஞ்சம் வீக்தான். ) ஹஹஹா.

Ebrahim Ansari said...

தம்பி இப்னு அப்துல் ரஜாக் அவர்களின் கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் அதே நேரம் திருக்குறளையும் பாரதி தாசனையும் மேற்கோள் காட்ட வேண்டிய சில சூழ்நிலைகளையும் நான் குறிப்பிடக் கடமைப் பட்டு இருக்கிறேன்.

ஒன்று. அதிரை நிருபரில் வரும் தொடர்களை மற்ற மத நண்பர்களும் படிக்கிறார்கள் எனபதை நான் அறிகிறேன். சில நேரங்களில் பாராட்டாகவும் சில நேரங்களில் மிரட்டல் கலந்தும் அலை பேசிகள் வருகின்றன.

இரண்டு . தமிழை ஆர்வமாகப் படித்த காரணத்தால் எழுதும்போது தமிழ்க் கவிதைகள் அல்லது பொருத்தமான மேற்கோள்கள் வந்து விழுவதை தவிர்க்க முடியவில்லை.

மூன்று. படிப்பவர்களுக்கு சுவை கூட்டுவதற்காகவும் அல்லது விளக்குவதற்காகவும் எனக்குத் தெரிந்த மேற்கோள்களை கையாள்கிறேன்.

நான்காவதாக, வரலாற்றுச் செய்திகளை எழுதும்போது கூடியவரை அந்த செய்திகள் ஏற்கனவே யாராவது எழுதியே இருப்பார்கள்.

அதைப் படிக்கும் சில உள்நோக்கம் கொண்டவர்கள் நான் காபி பேஸ்ட் வியாபாரி என்று முத்திரை குத்துகிறார்கள்.; குத்தினார்கள் ; குத்துவார்கள் .

ஆகவே வரலாற்று சம்பவங்களை தனிதத்னமையான தமிழில் இரவு பகல் கஷ்டப்பட்டு எவ்வித இலாப நோக்கமும் இன்றி ஒரு பணியாக எழுதுகிறேன்.. ஆகவே பழிகளையும் சுமக்க விரும்பவில்லை. எனவேதான் சில தமிழ்க் கவிதைகளை , குறட்பாக்களை எழுத வேண்டிய நிலை .ஏற்படுகிறது.

இதுவும் ஈமானை சோதிக்கும் என்றால் அவற்றை யும் இனி தவிர்ப்பதையே தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்.

நேற்று வெள்ளிக் கிழமை பயானில் பெருமானார் ( ஸல்) அவர்களின் மன்னிக்கும் மனப்பான்மையைப் பற்றி புகழ்ந்து ஒரு மணி நேரம் பேசிய இமாம் அவர்கள் பேச்சின் இடையில்

" இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் " என்ற குறளைக் கூறினார். என்பதை தங்களின் தகவலுக்கச் சொல்ல விரும்புகிறேன். இந்தக் குறளை பெருமானாரின் நல்ல தன்மைகளைப் பற்றி புகழ்ந்து கூறவே பயன்படுத்தினார்.

இப்படி நமக்கு மாறுபடாத கருத்துக்களை யார் சொல்லி இருந்தாலும் அவற்றை நாம் எடுத்தாள்வது தவறாகுமா?

முன்பே சொன்னது போல் எனக்கு மார்க்க பேஸ்மட்டம் வீக்.

அன்புடன் அறிவுரை பகர வேண்டுகிறேன்.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சலாஹுதீன் அய்யுபி அவர்களின் வீர வரலாறு நாளுக்கு நாள் உணர்ச்சிபூர்வமான சம்பவங்களைக் கொண்டு அழகாகத் தொடர்கிறது.

பள்ளிக் காலங்களில் ஏதாவது ஒரு கட்டுரையைக் கொடுத்து சுருக்கி வரைக என்றொரு கேள்வி கேட்பார்கள். எதை விடுவது எதை எடுப்பது என்று தெரியாமல் திணறிப் போவோம். கடைசியில் ஏதாவது முக்கியமான சம்பவங்களைச் சுருக்குகிறோம் என்றெண்ணி விட்டுவிடுவதால் 10க்கு 7 மார்க்தான் கிடைக்கும்.

ஆனால், காக்கா உங்கள் தொடரில் ஒரு சின்ன சம்பவத்தைக்கூட விடாமல் சிறப்பாக அதே சமயம் சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதிச் செல்வது அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கும் அருட்கொடையாகும்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

sabeer.abushahruk said...

//அறிவிப்புகள் ஜெருசலத்தின் வீதியெங்கும் விதை தூவின//

// சலாஹுத்தீன் அய்யூபி அவர்களின் வாள், தங்களின் வாழ் நாளை எண்ணி இறுதியாக்கி விடுமென்று உறுதியாக நம்பினார்கள்//

//இத்தனை கிருத்தவர்கள் முற்றுகையிடப்பட்டு சளி பிடித்து இருமிக் கொண்டிருப்பதை உணராமல் விழி உருட்டி உறுமிக் கொண்டிருந்தான்//

எழுதும் பேசுபொருளோடு ஒன்றிப்போனால் மட்டுமே இதுபோன்ற எழிலான தமிழ் கைவசப்படும்.

க்ளாஸ்!

Ebrahim Ansari said...

அன்புக்கு அன்பான தம்பி சபீர்!

நான் எழுதும்போது எவையெல்லாம் ரசிக்கபடலாம்- அதுவும் தங்களால் என்று கருதினேனோ - அவற்றை எல்லாம் பட்டியலிட்டிருக்கிறீர்கள். குறிப்பாக அந்த இருமல் - உறுமல்.

ஒரு உண்மைய சொல்லியே ஆக வேண்டும். அதிரை நிருபரில் எழுதத் தொடங்கிய பிறகு நான் இரண்டு பேரிடமிருந்து இரண்டு முறைகளைக் கற்றுக் கொண்டேன்.

ஒன்று தம்பி கிரவுநிடமிருந்து அதன் பிரதிபலிப்புத்தான் வாள் - வாழ்

அடுத்தது உங்கள் ஜாகிர் எங்க தம்பி ஜாகிர் சொல்லவேண்டியதை நகைச்சுவை உணர்வு கொப்பளிக்க சொல்வது. கிரவுன் கலை கொஞ்சம்
வந்துவிட்டது. ஜாகிர் கலை -- இன்னும் முயன்று கொண்டிருக்கிறேன்.

என் எழுத்தை விட உங்கள் கமெண்ட்ஸ்தான் கிளாஸ் .

Ebrahim Ansari said...

தம்பி சபீர்!

வ அலைக்குமுஸ் சலாம்.

நீங்கள் கூறுவது போல் பல சம்பவங்களை சுருக்கியே எழுதி இருக்கிறேன். ஆனால் விட்டுவிட்டு எழுதவில்லை. அதையும் கண்டுபிடித்துவிட்டீர்கள்.

பாலஸ்தீனத் தொடரை எழுத நினைத்துத் தொடங்கியபோது அதற்கான நூல்களைத் தேடித் படிக்க ஆரம்பித்த பொது சலாஹுதீன் அய்யூபி (ரஹ் ) அவர்களின் வரலாற்றை படிக்கப் படிக்க இத்தனை நாள் இவ்வளவு அற்புதமான மனிதரைப் பற்றிப் படிக்காமல் போய்விட்டோமே என்று வருந்தினேன்.

அந்த வருத்தம்தான் இப்படி வழிந்து விழுகிறது.

இன்ஷா அல்லாஹ் அடுத்த அத்தியாயம் சலாஹுதீன் அவர்களின் மறைவோடுகண்ணீரோடு நிறைவுறும் .

sabeer.abushahruk said...

மற்றுமொரு விஷயம்!

பேஸ்மெண்ட் வீக் என்று நீங்களே உங்களைத் தாழ்த்தி மதிப்பிடுவது தவறு என்பது என் கருத்து.

கலிமாதானே பேஸ்மெண்ட்? அதில் உங்கள் பேஸ்மெண்ட்டும் ஸ்ட்ராங்க் அதைக் கொண்டு நன்மையை நாடும் வாழ்வில் உங்கள் பில்டிங்கும் ஸ்ட்ராங்க்தான் காக்கா!

இயக்கவாதிகளுக்கிடையே நடக்கும் விவாதங்களைக் கேட்டுப் பார்த்தால் யார் பேஸ்மெண்ட் வீக் என்பதில் பெருத்த ஐயம் ஏற்படும்.

நல்ல எண்ணங்கள் இருந்தால் போதும் காக்கா. பேஸ்மெண்ட்டும் பில்டிங்கும் ஸ்ட்ராங்தான்!

sabeer.abushahruk said...

மற்றுமொரு விஷயம்!

பேஸ்மெண்ட் வீக் என்று நீங்களே உங்களைத் தாழ்த்தி மதிப்பிடுவது தவறு என்பது என் கருத்து.

கலிமாதானே பேஸ்மெண்ட்? அதில் உங்கள் பேஸ்மெண்ட்டும் ஸ்ட்ராங்க் அதைக் கொண்டு நன்மையை நாடும் வாழ்வில் உங்கள் பில்டிங்கும் ஸ்ட்ராங்க்தான் காக்கா!

இயக்கவாதிகளுக்கிடையே நடக்கும் விவாதங்களைக் கேட்டுப் பார்த்தால் யார் பேஸ்மெண்ட் வீக் என்பதில் பெருத்த ஐயம் ஏற்படும்.

நல்ல எண்ணங்கள் இருந்தால் போதும் காக்கா. பேஸ்மெண்ட்டும் பில்டிங்கும் ஸ்ட்ராங்தான்!

pls forgive me if you find me spoken too much.

Unknown said...

இந்தத் தொடர் நல்ல ஜனரஞ்சகமாகப் போய்க் கொண்டு இருக்கிறது. அபுதாபியில் ஒரு அலுவலகத்தில் ஜாதி மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் சேர்ந்து இதைப் படிக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். அமெரிக்காவில் இருந்து பேசும் ஒரு உறவினர் இந்தத் தொடர் பற்றிக் குறிப்பிட்டு பாராட்டிப் பேசுகிறார்.

ஆனால் தொடரின் ஆசிரியரின் ஊக்கத்தை தடை செய்யும்படி அவரை அதை எழுதாதே இதை எழுதாதே என்று அடிக்கடி சிலர் குறுக்கிடுவது சரியல்ல. அப்படி ஒன்றும் மார்க்கத்துக்கு முரணான விஷயத்தை கட்டுரை ஆசிரியர் புகுத்துவதாகத் தெரியவில்லை. மேலும் யாரோ ஒரு தனிப்பட்டவரின் விருப்பு வெறுப்புக்காக மட்டும் அவர் எழுதவில்லை. அவரைக் கண்டிக்கும் முறையில் பணிவு இருந்தாலும் அவர் அதை கண்டனமாகத்தான் எடுத்துக் கொள்வார். அதனால் தொடரின் சுவை குறையும். அதன் நஷ்டம் வாசகர்களுக்குத்தான்.

வள்ளுவரை பாரதிதாசனை மேற்கோள் காட்டக் கூடாது என்று கூறுபவர்கள் மேட்டூர் அணையில் மூழ்கி இருக்கும் ஜலகண்டேசுவரர் கோயிலின் மீது பட்டு அதன் லிங்கத்தைக் கழுவிக் கொண்டு வரும் காவிரி நீரை தங்களின் வீட்டுப்பக்கம் வர வேண்டாம் என்று தடுப்பார்களா என்று கேட்க விரும்புகிறேன். அந்தத் தண்ணீரை விட்டு நிரப்பத்தானே செக்கடிக் குளம் சீர்படுத்தப்படுகிறது?

அதிராம்பட்டினத்தில் பெருமாள் கோயிலைக் கடந்துதானே பலர் அவரவர் வீட்டுக்குப் போக வேண்டும்? செல்லியம்மன் கோயிலைக் கடந்துதானே மெயின் ரோட்டுக்குப் போக வேண்டும்? ஒரு மதச் சார்பற்ற நாட்டில் வாழ்ந்து கொண்டு தொட்டதற்கெல்லாம் மதம் மார்க்கம் என்ற பெயரால் தடை போட்டு ஒரு எழுத்தாளரை முடக்க நினைப்பது சரியல்ல.

sheikdawoodmohamedfarook said...

மாவீரன்சலாஹுதீனிடம்வீரத்தைவிடஅன்பும்இறக்கமும்நிறையவேஇருந்தது.சமையலுக்குருசிதரும்பொருலில்உப்பும்ஒன்றுதான்.ஆனால்அது அளவுக்குக்கு குறைந்தாலோ கூடினாலோ உணவுசுவைக்காது. அவரின்அன்பும்இறக்கமுமே மூன்றாம் சிலுவை போரைகொண்டுவந்தது. அடித்தபாம்பைவிட்டதுதப்பு.போர்களத்தில்ஒப்பாரிஇல்லை'.'இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்: எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்''என்றும்ஒருதிரைப்படபாடல்உண்டு.எழுதியவர்கண்ணதாசனோபட்டுக்கோட்டையோ தெரியவில்லை. மைத்துனர் இனா.அனா.வின் எழுத்துவலிமைக்கு தங்கத்திலானபேனாபரிசுகொடுக்கலாம். தங்கவிலைகுறையுமா?

Ebrahim Ansari said...

தம்பி சபீர் அவர்களுக்கு,

//நல்ல எண்ணங்கள் இருந்தால் போதும் காக்கா. பேஸ்மெண்ட்டும் பில்டிங்கும் ஸ்ட்ராங்தான்!//

நல்ல எண்ணத்தில்தான் விவாதங்களைத் தவிர்க்க என்னை அப்படிக் குறிப்பிட்டுக் கொண்டேன். மேலும் கருத்துரைத்தவர் நமது அன்புக்குரிய தம்பி என்பதால் அவர் சொல்வது சரியாகவே இருக்குமென்று ஏற்றுக் கொண்டேன்.

நீங்கள் சொல்லவேண்டியதையும் சரியாகவே சொல்லி இருக்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு நான் எனது நன்றியை அல்ல அன்பைச் சொல்கிறேன்.

//pls forgive me if you find me spoken too much.// நெறியாளர் அவர்களே! இந்த வார்த்தைகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டுகிறேன்.




sheikdawoodmohamedfarook said...

//நீங்கள்சொல்லவேண்டியதையும்சரியாகவேசொல்லிஇருக்கிறீர்கள். அதற்காகஉங்களுக்குநான்எனதுநன்றியைஅல்லஅன்பைசொல்கிறேன்// மைத்துனர்இ.அ.சொன்னது//ஏன்அந்த'நன்றி'என்றமூன்றெழுத்துஎன்ன பாவம்செய்தது?''ஜாதிபிரஷ்டம்''செய்துவிட்டீர்களே?தீண்டாமை சட்டவிரோதம். உள்ளேபுடிச்சுபோட்டுடுவாங்க!

Ebrahim Ansari said...

நன்றி என்ற வார்த்தையை ஜாதி பிரஷ்டம் செய்யவில்லை மச்சான். நெருக்கமான தம்பிக்கு நன்றிவேண்டாம் அன்பே அவருக்குப் போதும் என்றே அப்படிச் சொன்னேன்.

sheikdawoodmohamedfarook said...

//நல்லஎண்ணங்கள்இருந்தால்போதும்காக்கா.பேஸ்மெண்ட்டும்பில்டிங்கும்ஸ்ட்ராங்தான்/ மருமகன் ஷபீர் அபு ஷாருக் சொன்னது. அதோடு.காற்றுவரஜன்னலும்உண்டு!கதவைத்திறந்துவிடுங்கள்! காற்றுவரட்டும்!

இப்னு அப்துல் ரஜாக் said...

//( எனக்கு பேஸ்மட்டம் கொஞ்சம் வீக்தான். ) ஹஹஹா.//

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா.
நம் எல்லாரது பேஸ்‌மென்ட் ம் ஸ்ட்ராங்க் ஆக அல்லாஹ் உதவி செய்வானாக.ஈமானை அதிகரித்து ஈருலகிலும் நாம் வெற்றி அடைய வைப்பானாக ஆமீன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

//தம்பி இப்னு அப்துல் ரஜாக் அவர்களின் கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் அதே நேரம் திருக்குறளையும் பாரதி தாசனையும் மேற்கோள் காட்ட வேண்டிய சில சூழ்நிலைகளையும் நான் குறிப்பிடக் கடமைப் பட்டு இருக்கிறேன்.


ஒன்று. அதிரை நிருபரில் வரும் தொடர்களை மற்ற மத நண்பர்களும் படிக்கிறார்கள் எனபதை நான் அறிகிறேன். சில நேரங்களில் பாராட்டாகவும் சில நேரங்களில் மிரட்டல் கலந்தும் அலை பேசிகள் வருகின்றன. //
மாற்று மத நண்பர்கள் படிக்கிறாரகள் என்பதற்காக நாம் அந்த நூற்களில் இருந்து மேற்கோள் காட்டுவது சரியல்ல. உண்மையில் சொல்லப் போனால்,மாற்று மத சகோதர்கள் தாகத்‌திலும்,தேடுதலிலும் இருக்கிறார்கள்.அவர்களுக்கு தேவை நல்ல மருந்து,அதுவே குர்ஆன் மற்றும் ஹதீஸ்.உங்களுக்கு ஏத்தி வைத்த கூலி.

இப்னு அப்துல் ரஜாக் said...

இரண்டு . தமிழை ஆர்வமாகப் படித்த காரணத்தால் எழுதும்போது தமிழ்க் கவிதைகள் அல்லது பொருத்தமான மேற்கோள்கள் வந்து விழுவதை தவிர்க்க முடியவில்லை.
உங்களை சொல்லவில்லை.தமிழ் இலக்கியவாதிகள் என்றும்,தமிழே சிறந்த மொழி என்று கூறிக் கொண்ட,கூறிக் கொள்கிற so called சிலர் - அந்த தமிழுக்காக பொய்யான ராமாயன் மஹா பாரத் மற்றும் மூட நமபிக்கைகள் கொண்ட திருக் குரல் இன்ன பிறவற்றை மேற்கோள் காட்டி,மாற்று மத மக்களிடம் அபிமானம் பெற்றார்கள்.ஆனால் அது அல்லாஹ்வுக்கு உவப்பானதா?அல்லது குரானை - ஹதீஸை மேற்கோள் காட்டி, போதித்து - அதன் மூலம் நன்மையை சம்பாதிப்போர் பல ஆயிரம் பேர்.now its your turn kaaka.please turn your table.

இப்னு அப்துல் ரஜாக் said...

//மூன்று. படிப்பவர்களுக்கு சுவை கூட்டுவதற்காகவும் அல்லது விளக்குவதற்காகவும் எனக்குத் தெரிந்த மேற்கோள்களை கையாள்கிறேன். //
ஒரு முறை நம் தலைவர் நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் உமர் ரலி அவர்கள்,தவ்ராத்‌திலிருந்து ஒரு மேற்கோள் கட்ட,அதற்கு நம் தலைவரின் கண்கள் சிவந்தன கோபத்தில் ,என்பது வரலாறு.

த்வ்ராத் மூசா நபிக்கு அருளப்பட்ட ஒரு வேதத்திற்கு இக் கதி என்றால்,புழுகு மூட்டைகள்,பொய்க் கதைகளுக்கு???

இப்னு அப்துல் ரஜாக் said...

//நான்காவதாக, வரலாற்றுச் செய்திகளை எழுதும்போது கூடியவரை அந்த செய்திகள் ஏற்கனவே யாராவது எழுதியே இருப்பார்கள்.

அதைப் படிக்கும் சில உள்நோக்கம் கொண்டவர்கள் நான் காபி பேஸ்ட் வியாபாரி என்று முத்திரை குத்துகிறார்கள்.; குத்தினார்கள் ; குத்துவார்கள் . //
ஒருவருக்கு காயமே படக் கூடாது என்றால்,ஒருவருக்கு மனக் கஷ்டம் வரக் கூடாது என்றால்,ஒருவருக்கு எந்த துன்பமும் நேரக் கூடாது என்றால்,கண்ணை மூடிக் கொண்டு - இன்ஷா அல்லாஹ் நீங்களும்,நானும் ,ஏனையோரும் சொல்லுவோம் "அது எங்கள் நபிக்கு எந்த துன்பமும் வரக் கூடாது "என்போம்.அவர்கள் பற்கள் உடைந்த போது,ஸஹாபாக்கள் தங்கள் பற்கள் களை உடைத்துக் கொண்டார்கள்.நீங்களும்,நானும் எம்மாத்திரம்.
அவர்களின்,ஏச்சுக்கு நீங்கள் ஆளானால் கவலை கொள்ள வேண்டாம்.அல்லாஹ்வின் கூலி இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு இருக்கிறது.

//ஆகவே வரலாற்று சம்பவங்களை தனிதத்னமையான தமிழில் இரவு பகல் கஷ்டப்பட்டு எவ்வித இலாப நோக்கமும் இன்றி ஒரு பணியாக எழுதுகிறேன்.. ஆகவே பழிகளையும் சுமக்க விரும்பவில்லை. எனவேதான் சில தமிழ்க் கவிதைகளை , குறட்பாக்களை எழுத வேண்டிய நிலை .ஏற்படுகிறது. //
உங்கள் எண்ணத்திற்கு அல்லாஹ் பெரும் கூலியை தரப் போதுமானவன்.
அதற்காக,குர்ஆன் ஹதீஸ் அல்லாத மேற்கோள்கள் அது ஒரு விஷம்தான் என்பதில் சந்தேகம் இல்லை.

இப்னு அப்துல் ரஜாக் said...

//இதுவும் ஈமானை சோதிக்கும் என்றால் அவற்றை யும் இனி தவிர்ப்பதையே தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். //
பிளீஸ் காக்கா.உங்கள் மைத்துளிகள் இஸ்லாத்திற்கு defend பன்னட்டும்.

//நேற்று வெள்ளிக் கிழமை பயானில் பெருமானார் ( ஸல்) அவர்களின் மன்னிக்கும் மனப்பான்மையைப் பற்றி புகழ்ந்து ஒரு மணி நேரம் பேசிய இமாம் அவர்கள் பேச்சின் இடையில்

" இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் " என்ற குறளைக் கூறினார். என்பதை தங்களின் தகவலுக்கச் சொல்ல விரும்புகிறேன். இந்தக் குறளை பெருமானாரின் நல்ல தன்மைகளைப் பற்றி புகழ்ந்து கூறவே பயன்படுத்தினார். //
அந்த இமாமுக்கு தயவு செய்து புரிய வையுங்கள்,இன்ஷா அல்லாஹ் திருந்திக் கொள்வார்.

இப்படி நமக்கு மாறுபடாத கருத்துக்களை யார் சொல்லி இருந்தாலும் அவற்றை நாம் எடுத்தாள்வது தவறாகுமா?
அல்லாஹ்,அல்லாஹ்வுடைய தூதர்,ஸஹாபாக்கள் தவிர,மற்ற எவர் கருத்தும் ஏற்புடையது அல்ல.ஸஹாபாக்கள் நம் தலைவரை அடியொற்றி வாழ்ந்ததால் மற்றும் அல்லாஹ்வே அவர்களை பொருந்திக் கொண்டேன் என்பதாலும் அவர்கள் கருத்தை நாம் ஏற்கலாம்.
----------------------------------------------------------------------------------------------

இப்னு அப்துல் ரஜாக் said...

ஒரு முஸ்லிம் எதையும் கண்டும்,காணாமல் இருப்பதை அல்லாஹ்வும்,அவன் தூதரும் விரும்பவில்லை.ஒரு முஸ்லிம் அறிவாளியாக இருக்க வேண்டும்,மாணவனாக இருக்க வேண்டும்,அறிவை தேடிக் கொண்டே இருக்க வேண்டும்.ஒரு பாமரனாக இருப்பதை இஸ்லாம் விரும்பவில்லை.இப்படி சுட்டிக் காட்டுவதும் - அல்லாஹ் ஒருவனுக்காகவே தவிர,வேறு உள் நோக்கம் இல்லை.நான் கற்கத் துடிக்கும் ஒரு மாணவன்,நீங்கள் ஒரு ஆசிரியர்.
தவறு இருப்பின் அல்லாஹ்வுக்காக மன்னியுங்கள்.

Unknown said...

அன்பர்களே!

மீண்டும் ஒரு அர்த்தமற்ற விவாதம் இங்கு வலியுறுத்தப்படுகிறது. .

அந்தக் கருத்தை வலியுறுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உயர்நிலைக் கல்வி வரையாவது படித்தே இருப்பார்கள். பத்தாவது வரையாவது படித்தே இருப்பார்கள். பத்தாவதில் பிளஸ் டூவில் தமிழ் மொழிப் பாடம் இருக்கிறது. தமிழ் மொழிப்பாடத்தின் மனப்பாடபகுதி என்று ஒரு பத்து மார்க் கேள்வி இருக்கும். அந்த பத்து மார்க்குக்கு வைக்கபட்டிருக்கும் தமிழ் இலக்கியம் கடவுள் வாழ்துப் பாடலாக இருக்கும். அந்தக் கடவுள் வாழ்த்து பொன்னார் மேனியனே என்று தொடங்கும் அல்லது திருவாசகம், திருப்புகழ் அல்லது வள்ளலார் அல்லது தாயுமானவர் பாடலாக இருக்கும். அதைப் படித்து எழுதினால்தான் பத்து மார்க்குக்கு எட்டு மார்காவது வாங்க முடியும். அதை நான் படிக்க மாட்டேன் எழுத மாட்டேன் என்றால் பத்தாவது கூட பாஸ் ஆக முடியாது.. திருக்குறளும் அப்படிப் படித்துதான் ஆகவேனுமேன்பது பாடத் திட்டம். அப்படி அவற்றைப் படிக்காமல்தான் இங்கு வாதம் நடத்துபவர்கள் படித்தார்களா என்று தைரியமாக சொல்லட்டும்
இதுதான் நிலைமை.
ராமாயணம் மகா பாரதம் என்றெல்லாம் சொல்கிறார்கள். இவற்றில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கிய முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ஒரு முஸ்லிம் எதையும் கண்டும் காணாமலும் இருப்பதை அல்லாஹ் விரும்பவில்லை என்பது உணமைதான். அதே நேரம் வழியில் குறுக்கிடும் சிலவற்றை ஒதுக்கி நடக்க இயலாத நிலையில் இருக்கிறோம். ஆகவே கட்டுரை ஆசிரியர் தனக்கு தெரிந்த சில விளக்கங்களை அளிப்பதை யாரும் அதை இதைச் சொல்லி தடை செய்ய வேண்டாம்.
வேண்டாத விவாதங்களில் ஈடுபட வேண்டாம். இப்ராஹீம் அன்சாரி அவர்களை தடை செய்பவர்கள் தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தை தடை செய்ய முடியுமா?

இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும் என்று ஒரு மீன் கடையில் ஒரு போர்டில் எழுதி இருந்தது.
இதைப் பார்த்த ஒருவன் மீன்கடைக்காரனிடம் வந்து இங்கு விற்காமல் வான்த்திலேயா விக்கிறே அதனாலே இங்கு என்ற வார்த்தையை எடுத்துவிடு என்றான் அவனும் எடுத்துவிட்டான் .
அப்புறம் நல்ல மீன்கள் விற்கப்படுமேன்று எழுதி இருக்கியே மற்றவர்கள் கெட்டமீனா விக்கிறாங்க என்றான். அதைக் கேட்ட மீன்காரன் நல்ல என்கிற வார்த்தையையும் எடுத்துவிட்டான்.
அப்புறம் மிச்சம் இருந்தது மீன்கள் விற்கப்படும் என்பதுதான். மீன்கடையில் மீன் விக்காமல் மானா விக்கிறே என்று கேட்டான். அதைக் கேட்ட மீன்காரன் அந்த வார்த்தையையும் எடுத்துவிட்டான். இப்போ போர்டு காலி. இப்போ போர்டு எதுக்கு அதையும் தூக்கி எறி என்று அதையும் தூக்கி வீசிவிட்டான்.

அதே போல் இப்ராஹீம் அன்சாரி அவர்கள் இப்படி அர்த்தமற்ற விவாதங்களால் இந்தத் தொடரை தூக்கி வீசிவிட்டுப் போகாமலிருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.

அவரவர் கருத்தை அவரவருடன் வைத்துக் கொள்ளுங்கள் . ஆரவமுடன் படிக்கும் மற்றவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.

இப்னு அப்துல் ரஜாக் said...

رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ
“எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!” 5:83

இப்னு அப்துல் ரஜாக் said...

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ
“எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக; முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!” 7:126

இப்னு அப்துல் ரஜாக் said...

الْيَوْمَ تُجْزَىٰ كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ ۚ لَا ظُلْمَ الْيَوْمَ ۚ إِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ
அந்நாளில் ஒவ்வோர் ஆத்மாவும், அது சம்பாதித்ததற்குக் கூலி கொடுக்கப்படும்; அந்நாளில் எந்த அநியாயமும் இல்லை. நிச்சயமாக, அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன். 40:17

Ebrahim Ansari said...

"தம்பி,

'நல்லதையே சொன்னாலும் சொல்வது காஃபிர் என்றால் ஏற்கக்கூடாது' என்று குர் ஆன் வசனமோ நபிமொழியோ இருந்தால் காட்டுங்கள். ஏற்றுக்கொள்கிறேன்."
இவ்வளவு பிடிவாதமாக நீங்கள் இருப்பதாலும் உங்களைத்தவிர பலர் நான் எழுதுவதை ஏற்றுக் கொண்டிருப்பதாலும் நான் எழுதியே தீருவேன். அல்லாஹ் தண்டித்தால் நான் ஏற்றுக் கொள்கிறேன்.
வஸ்ஸலாம்.

sheikdawoodmohamedfarook said...

இப்ராஹீம்அன்ஸாரிஎழுதுவதைநானும்ஏற்றுகொள்கிறேன்.அல்லா தண்டித்தால்அதையும்ஏற்றுகொள்கிறேன்.

sheikdawoodmohamedfarook said...

மேட்டூர்அணையிலிருந்துஜலகண்டேஸ்வரர்சாமியேகழுவிவரும்தண்ணீரை குடிக்கலாமா?குடிக்ககூடாதா?

Ebrahim Ansari said...

அன்புள்ள நெறியாளர் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

எனது பதிவுகளை நான் நேரடியாக பப்ளிஷ் செய்வது இல்லை. நெறியாள்மைக்கு அனுப்பியே வெளியிடப்படுகிறது. நான் எழுதுவதில் தவறுகள் இருந்தால் அதை திருத்த /நீக்க தங்களுக்கு உரிமை உண்டு.

நான் மேற்கோளாகக் காட்டிய திருக்குறளோ பாரதி தாசன் கவிதைகளோ இப்போது எழுதப்படும் பேசு பொருளுக்குத் தொடர்புடையவை அல்ல என்றால் தாங்கள் நீக்கிவிட்டு வெளியிடலாம். எனக்கு ஆட்சேபனை இல்லை. மார்க்கம் தெரிந்த சிலரிடம் அணுகிக் கெட்டதிலும் இதில் தவறு இல்லை என்று சொல்கிறார்கள். ஆகவே எனது எழுத்து முடக்கும் நோக்கில் இப்படி தொடர்ந்து இடையூறு செய்யப்படுவதாக நான் நினைக்கிறேன்.

ஏற்கனவே இப்படி ஒரு பிரச்னை ஏற்பட்டு அதற்கு பதில் எழுதவே ஒரு அத்தியாயம் எழுதவேண்டிய நிலையும் ஏற்பட்டது.

இப்போது மீண்டும் ஒரு பிரச்னை எழுப்பப்பட்டு அதற்காக சாபம் எல்லாம் விடப்படுவதாக உணர்கிறேன். இப்படி ஒவ்வொன்றுக்கும் பதில் எழுத எனக்கு நேரம் இல்லை.

எனது மனசாட்சியின்படி நான் தவறாக எழுதவில்லை என்றே உணர்கிறேன். அப்படித்தவறு இருந்தாலும் திருத்திக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன். ஆனால் கைபட்டால் கால் பட்டால் குற்றம் கண்டுபிடிக்கும் நிலையில் தாங்களும் அதைப் பற்றி எதுவும் சொல்ல இயலாத நிலையில் இந்தத் தொடரை என்னால் தொடர்ந்து எழுத மனம் இல்லை.

ஆகவே பாலஸ்தீன தொடரை இந்த அளவுடன் இத்துடன் நிறைவு செய்து கொள்கிறேன். இதனால் எந்த நன்மை இல்லாவிட்டாலும் எனக்கு சற்று ஓய்வாவது கிடைக்கும்.

அரசியலில் பொருளாதாரத்தில் எழுத எவ்வளவோ இப்போது இருக்கின்றன. அவற்றை எழுதுகிறேன். காரணம் எழுத்து சுதந்திரம் இல்லாமல் ஒரு படைப்பாளி படபடப்புடன் உருப்படியாக எதையும் எழுத இயலாது. ஒவ்வொரு வரியையும் ஒவ்வொருவருக்கும் பயந்து பயந்து எழுத என்னால் முடியாது.

Yasir said...

//பாலஸ்தீன தொடரை இந்த அளவுடன் இத்துடன் நிறைவு செய்து கொள்கிறேன்// வருத்தமளிக்கின்றது.....எழுத்தாளர் இஸ்லாமிய வரமுறையை எப்பொழுதும் மீறியது இல்லை.....இஸ்லாமும் சகோதர் சொல்வதுபோல் செய்ய சொல்லவில்லை...இஸ்லாம் எளிமையானது...தயவுசெய்து கடினமாக்கி விடாதீர்கள்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும் இபுறாஹீம் அன்சாரி காக்கா..

தங்களின் அனைத்து பதிவுகளையும் வாசித்து வருகிறேன் காக்கா, கருத்த்கிட. காக்கா..

அரைகுறை மார்க்க அறிவுடைய கேள்விகளும் கருத்துக்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்க்கவும். காக்கா

நீங்கள் எழுதும் இந்த தொடர் வரலாற்றுத் தொடர், மார்க்க விசயமல்ல. இதனை அறிந்தவர்கள் இதில் மார்க்கத்தை இழுக்க மாட்டார்கள்.

எவனுடைய தொந்தரவுக்கு அஞ்சி நீங்கள் ஆவணப்படுத்தும் நம் சமுதாய வரலாற்றை முடக்க வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் காக்கா..

ஊரில் தமிழ்நாட்டில் முஸ்லீம்களுக்கு எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும் போது தமிழ்நாட்டில் போலி பகுத்தறிவை கொண்டு
சூனியக் கொள்கையை மூலதனமாக கொண்டுள்ளவர்கள் சூனியம் சூனியம் என்று மொட்டைத் தலைக்கும் முலங்காள்ய்க்கும் முடிச்சுப் போடுவது போல் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு குர்ஆன் மற்றும் ஷஹீஹான ஹதீஸ்கள் அனைத்தையும் ஏற்றுள்ள முஸ்லீம்கள் அனைவரையும் முஷ்ரிக்குகளாக்கிக் கொண்டுள்ளார்கல் ஒரு கேடுகெட்ட கூட்டம்.

இது போல் அவர்களின் கருத்தின் தாக்கம் இன்று ஏராளமான நம்மவர்கள் அவர்கள் தலையிடும் தளங்கள், பொது இடங்களில் மார்க்கம் போசுகிறோம் என்று சொல்லி வாயைவிட்டு மாட்டிக்கொண்டு ஓட்டமெடுக்கிறார்கள் அல்ல்து விதாண்டவாதம் செய்கிரார்கள். நம் சமூகத்தை வல்லவன் ரஹ்மான் தான் காப்பாற்ற வேண்டும்.

சகோ. இப்னு அப்துல் ரஜாக் முதலில் அவசரப்பட்டு கவிதை ஹராம் என்று சொல்லி பின்னர் அது தவறு என்று உணர்ந்த்தார்.. இதற்க்கும் அவ்வாறே நிகழும் என்று நல்லொண்ணம் வைப்போம்..

sheikdawoodmohamedfarook said...

அன்புள்ளமைத்துனர்இ.அ.வுக்குஅஸ்ஸலாமுஅலைக்கும்.தாம்எழுத்து மூலமாகபலர்அறியவேண்டியநல்லவிசயங்களைஅறிந்திருக்கிறார்கள். ஏதோசிலரின்வீண்பனங்காட்டுசலசலப்புக்குமதிப்பளித்துநிகழும் தொடரையும்மற்றும்இனிவரப்போகும்தொடர்களையும்கைவிடவேண்டாம்.எதற்கெடுத்தாலும்குறைகூறும்கூட்டம்எங்கும்உண்டு .அதையெல்லாம் காதில் போட்டு கொண்டால் காரியம் ஒப்பேறாது. தம்பிதாஜுதீன் சொல்வது போலசொல்லும்வீண்குறைகளுக்குபதில்அளிக்காமல்எழுத்துபணியை தொடரவும்.

sabeer.abushahruk said...

//பாலஸ்தீன தொடரை இந்த அளவுடன் இத்துடன் நிறைவு செய்து கொள்கிறேன்// it is shocking and dissappointing!

please think over your decision once again.

இப்னு அப்துல் ரஜாக் said...

Dear Brothers, assalamu alaikkum . First of all,
Am not perfect ,just sharing whatever I know so that by telling others I can at least try my best to practise in my life.In Islam we have only 2 things 1.Halal 2.Haram .There is no third
So we have to obey Allahs commandments and follow the preachings of our Prophet sallallahu alaihi Wasallam .
We cannot compromise on Dheen.
We are all imperfect people and May Allah perfect us in our Dheen so that it may protect us from the hell fire and bring the true pleasure from our creator
If Allah is with us,who can be against us
So we all brothers must sincerely put all our efforts to sacrifice for the sake of Allah so that we may be contended in this dunya and be the happiest of all in the hereafter in sha Allah
Death is the best reminder for all of us and if every1 of us remember everyday then we may not indulge in slandering,backbiting,and other bigger sins like shirk, bida,riya, trading in interest etc
May Allah protect us all AAMEEN
LAKUM DEENUKKUM WALIYA DEEN

Unknown said...

Assalamu Alaikkum
Respected brother Mr. Ebrahim Ansari,

The series of articles on history of Palastine have been published through Adirai Nirubar forum providing an opportunity for our brothers and sisters to know the real story behind the bloody scenes.

Your writings on the topic particularly this episode is having excellent narration of Salahuddin Ayyubi Rahmathullahi, which portrays amazing qualities such as pious, courage, making shura, compassion to fellow human even if they are enemies which are purely the derivatives and followings of Prophet Muhammed Sallallahu Alaihiwasallam.

Your proficiency in Tamil, using regional, cultural, contemporary, trendy and colloquial are unique and highly appreciated and enjoyed by the readers here. I would like to request you to see the constructive criticisms positively and just neglect the ones which produce negativism in your mind and keep your passion for the writing till the end. Please don't discouraged.

May Allah bless you with health and reward you for your efforts.

B. Ahamed Ameen from Dubai.

இப்னு அப்துல் ரஜாக் said...

لَقَدْ أَنزَلْنَا إِلَيْكُمْ كِتَابًا فِيهِ ذِكْرُكُمْ ۖ أَفَلَا تَعْقِلُونَ
உங்களுக்கு நிச்சயமாக நாம் ஒரு வேதத்தை அருளியிருக்கின்றோம்; அதில் உங்களின் கண்ணியம் இருக்கின்றது. நீங்கள் அறிய மாட்டீர்களா?   21:10

இப்னு அப்துல் ரஜாக் said...

وَهَٰذَا ذِكْرٌ مُّبَارَكٌ أَنزَلْنَاهُ ۚ أَفَأَنتُمْ لَهُ مُنكِرُونَ
இன்னும் இது (குர்ஆன்) நாம் அருள் செய்த பாக்கியம் மிக்க புனிதமான உபதேசமாகும். இதனையா நீங்கள் புறக்கணிக்கிறீர்கள்?   21:50

இப்னு அப்துல் ரஜாக் said...

وَهَٰذَا ذِكْرٌ مُّبَارَكٌ أَنزَلْنَاهُ ۚ أَفَأَنتُمْ لَهُ مُنكِرُونَ
இன்னும் இது (குர்ஆன்) நாம் அருள் செய்த பாக்கியம் மிக்க புனிதமான உபதேசமாகும். இதனையா நீங்கள் புறக்கணிக்கிறீர்கள்?   21:50

இப்னு அப்துல் ரஜாக் said...

அல்லாஹ் நம் அனைவரையும் கெட்ட விஷயங்கள் (addiction for indian,tamil culture which produce shirk)இருந்து காப்பாற்றி நல்ல விஷயங்களில்( Quran and hathees) ஒன்று சேர்ப்பானாக ஆமின்

Ebrahim Ansari said...

Dear younger Brother Ahmed Ameen, & Dear Thambi Sabeer

வ அலைக்குமுஸ் சலாம்.

//I would like to request you to see the constructive criticisms positively and just neglect the ones which produce negativism in your mind and keep your passion for the writing till the end. Please don't discouraged.//

ஜசாக் அல்லாஹ் ஹைரன். இன்ஷா அல்லாஹ் தொடர் தொடரும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” 3:8

Ebrahim Ansari said...

தும்மிய காரணத்துக்காக உலகில் யாருக்காவது தூக்கு தண்டனை கிடைத்து இருக்கிறதா?

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

Shameed said...

Ebrahim Ansari சொன்னது…
//தும்மிய காரணத்துக்காக உலகில் யாருக்காவது தூக்கு தண்டனை கிடைத்து இருக்கிறதா?

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்//



"எனக்கு தெரியவில்லை"


ஒன்னு மட்டும் நல்லா வெளங்குது பாலஸ்தீனமும் பிரச்சனையும் பிரிக்க முடியாத ஒன்று என்று

sabeer.abushahruk said...

சகோ இப்னு அப்துர்ரஸாக்,

குர் ஆன் வசனங்கள் மற்றும் நபி மொழியேயாயினும் பதிவுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களை தயவு செய்து தவிர்த்துக் கொள்ளுங்கள்.

இப்னு அப்துல் ரஜாக் said...

//சகோ இப்னு அப்துர்ரஸாக்,

குர் ஆன் வசனங்கள் மற்றும் நபி மொழியேயாயினும் பதிவுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களை தயவு செய்து தவிர்த்துக் கொள்ளுங்கள்.//
இன்சா அல்லாஹ் காக்கா

sheikdawoodmohamedfarook said...

//குர்ஆன்வசனங்கள்மற்றும்நபிமொழியேயாயினும்பதிவுக்குதொடர் பில்லாதபின்னூட்டங்களைதவிர்த்துக்கொள்ளுங்கள்//மருமகன்சபீர் சொன்னது.''இன்சாஅல்லாகாக்கா//இப்னு அப்துல் ரஜாக் சொன்னது.//அப்போவரும்சனிக்கிழமைஇடியுடன்கூடியமழைபெய்யும்னு tvலேசொன்னாங்களே!பொய்யா?

Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
Yasir said...

http://ireport.cnn.com/topics/1170398?hpt=hp_c5

brother ameen this is for you....pls write on this blog , let everyone know what is true Islam is

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Yasir, Thanks for your suggestion. I will consider writing on that portal about my understanding about Islam. InshaAllah.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு