Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நிலவின் ஒளியில் சலங்கை ஒலிகள் 0

அதிரைநிருபர் பதிப்பகம் | May 07, 2015 | ,

 நபிமணியும் நகைச்சுவையும் - தொடர் : 14

"அஸ்ஸலாமு அலைக்கும் யா ரசூலல்லாஹ்!"

அழகிய முறையில் பதில் முகமன் கூறிக் கொண்டே, தயங்கி நின்ற நபித் தோழரை கனிவுடன்  உற்று நோக்கினார்கள், கருணையின் வடிவமான கண்ணியத் தூதர் (ஸல்) அவர்கள்.

யாரையும் எதிர் கொள்ளும்போதும் எந்தச்  சந்திப்பின்போதும் அரைகுறையாக வரவேற்றார்கள் என்றோ   முகத்தை மட்டும் கழுத்தை வளைத்துத் திரும்பிப் பார்த்தார்கள் என்றோ   ஒரு நிகழ்ச்சியைக்கூட நம் தங்கத் தலைவரின் வரலாறு நெடுகிலும் எவரும் காணவே முடியாது! எவரை எதிர் கொண்டாலும்  அவர் மீது முழுமையான அக்கறையுடனேயே எதிர் கொள்வார்கள். 

இத்தகைய உன்னதமான தன்மையின் பிரதிபலிப்பால் ஒவ்வொரு தோழரும், அல்லாஹ்வின் தூதர் இவ்வுலகத்தில் வேறு எவரையும்விடத்  தன் மீதே அதிக அக்கறையும் அன்பும் கொண்டிருப்பதாக உணர்ந்தனர்.(1) அதனால்தான் நபித் தோழர்கள் அல்லாஹ்வின் தூதரைத் தங்கள் அழகிய முன்மாதிரியாய் ஆத்மசுத்தியுடன் ஆக்கிக் கொண்டனர். அந்தச்  சரித்திரத்தின் சான்றாக சுந்தர நபி (ஸல்) உதிர்த்த  சுத்தமான சொற்களெல்லாம் பசுமரத்தில் ஆணிபோல அவர்கள்தம் மனதில் ஆழமாகப் பதிந்து போயின!

இந்த மானுட வர்க்கம் முழுதும் நல்லவர்களாகவும் அந்த நல்லவர்கள் அனைவரும் சுந்தர நந்தவனமாம் சுவர்க்கத்தை அடைந்துவிட வேண்டும் என்பதும் அண்ணலின் அபிலாஷையாய் ஆகிப்போனது. அந்தப் பாலைவன மணற்குன்றுகளில் நின்று, இந்த அவனியை அவர் பார்த்த வெளியெங்கும் பாதை பரந்து விரிந்த பரப்பானது!

எனவேதான், இந்தியாவிலிருந்து வந்த ஏகத்துவத்தின் தென்றலையும் அண்ணல் எங்கள் ஆருயிர் நபியால் ஆயிரத்து நானூறு  ஆண்டுகளுக்கு முன்பே அனுபவித்துச் சொல்ல முடிந்தது. அழகின் சிகரம் அண்ணல் ரசூல் அவர்கள் அமைத்துக் கொடுத்த வாழ்வியல் நெறிகள் எல்லாம் அல்குர்ஆனின் அறுவடைப் பயிரானது!

அல்லாஹ்வும் அல்குர்ஆனிலே, "நீர் ரஹீமாகவும் ரஹ்மத்துல் ஆலமீன் ஆகவும் இருக்கின்றீர்" எனச் சான்று பகர்கின்றான். அதன் விளைவாகவே, "எம் இன்னுயிரைவிடவும் உயர்வானவரே!" என்று தங்களின் உயிரையே அண்ணலை நோக்கி அனுதினமும் சமர்ப்பித்து நின்றனர் அருமைத் தோழர்கள். இவை வெறும் வெற்று வேட்டு வார்த்தைகளில்லை! நிஜத்திலும் அது நிஜமானது! 

தங்களின் இஷ்ட அசைவுகளால் ஏற்படும் எந்தச்  சிறிய-பெரிய தவறுகளையும் குற்றங்களையும் நன்மைகளையும் உத்தமத் திருநபியிடம் உரைக்காமல் அவர்கள் ஒளித்துக் கொண்டதே இல்லை. கருணைக் கடலாம் காவலனின் தூதரின் முன், உள்ளதை உள்ளபடி உரைத்துத்  தங்கள் தலைவரின் தீர்ப்புக்காகக்  கண்ணசைக்காமல் காத்து நின்றனர்.

அவர்களுள்  ஒரு நபித் தோழர்தான் இதோ திருத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஸலாம் கூறி நிற்கின்றார்.

செங்கதிரும் தண்மதியும் சேர்ந்து ஒன்றாய் நின்றொளிரும் அண்ணலாரின் கனிவான பார்வையில் ஓரளவு ஆறுதல் பெற்றவராக, தயங்கியபடியே தொடங்கினார்.

"யா ரசூலல்லாஹ்! என் மனைவியைத் தாய்க்கு நிகராக ஒப்பிட்டு நான் “ளிஹார்” செய்து விட்டேன். ஆனால், அதன்பிறகு, ஒப்பிட்டதற்குப் பரிகாரம் காணுமுன்பே மீண்டும் தாம்பத்திய உறவில்  அவளுடன் நான் இணைந்துவிட்டேன். இதோ தங்களின் தீர்ப்புக்கு முற்றிலும் கட்டுப்படுவதற்குக் காத்து நிற்கின்றேன்!"

பெருமானார்  (ஸல்) அவர்கள் பேசினால், அவர்களின் நண்பர்கள் தங்கள் தலைகளில் பறவைகள் அமர்ந்திருக்கின்றன என்பது போன்று ஆடாது அசையாது அமைதியாக இருப்பார்கள்"(2) என்பதற்கிணங்க, அத்தோழர் ஆணியறைந்ததுபோல் அப்படியே நின்றார்.

கூர்ந்து நோக்கிய இறைவனின் நேசர் ஏந்தல் நபியவர்கள், "இதற்கு உன்னைத் தூண்டியது எது?" என்று அவரைப் பார்த்து அன்பாய் வினவினார்கள்.

சிறிது தயங்கியபின், அண்ணல் நபியின் பொன்முகத்தை நோக்கிய அவர், ஒருவழியாக  பதில் உரைக்க  தயார் ஆனார்:

"அல்லாஹ்வின் தூதரே! அந்த நீல வானத்து முழு நிலவின் ஒளிச்சுடரில் என் இனிய மனைவியின் கால்களை அலங்கரித்து இருக்கும் கால் காப்பின் அழகை, அந்த நிலவில் ஒளிரும்  சலங்கைகளின் வெண்மையை நான் கண்டேன். அதில் நான் அப்படியே மயங்கி விட்டேன்..... அதன் பின்னர், என்னைக் கட்டுப்படுத்த என்னாலேயே  இயலாமல் போய்விட்டது! அந்த வசீகரமான சூழ்நிலையில் அவளுடன் அங்கே இல்லறச் சோலையில் நான் இணைந்துவிட்டேன், யா ரசூலல்லாஹ்!"

இந்த வர்ணிப்பைக் கேட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிரிப்பு வந்து விட்டது!  செந்தாமரை அழகைப் போல  சிந்தி ஒளிர்ந்த அந்த முழுமதி முகத்தின் முத்துச் சிரிப்பால், இறுக்கமான சூழ்நிலை அங்கே முற்றிலும் இளகிப்போய்விட்டது! ‘பூவோடு சேர்ந்து நாறும் மணம் பெரும்’ என்பது போல், அண்ணலின் சிரிப்பு அவரையும் தொற்றிக் கொண்டது. 

இறுதியாக, மனித வாழ்வினில் இனிமை சேர்த்த மகிமை நபி (ஸல்) அவர்கள் பரிகாரம் (கஃப்ஃபாரா) காணுமுன்பே இனிமேல் மனைவியுடன் தாம்பத்திய உறவுக்கு நெருங்க வேண்டாம் என்று அன்புடன் அவரை நோக்கி ஆதரவாய்ச் சொல்லி அனுப்பினார்கள்.(3)

o o o o o 000 o o o o o  

“ளிஹார்”  விளக்கம்:

بسم الله الرحمن الرحيم

مَّا جَعَلَ اللَّهُ لِرَجُلٍ مِّن قَلْبَيْنِ فِي جَوْفِهِ وَمَا جَعَلَ أَزْوَاجَكُمُ اللَّائِي تُظَاهِرُونَ مِنْهُنَّ أُمَّهَاتِكُمْ ...
எந்த மனிதனுடைய அகத்திலும் அல்லாஹ் இரண்டு இருதயங்களை உண்டாக்கவில்லை - உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் ளிஹார் (என் தாயின் முதுகைப் போன்று அதாவது தாய் போன்று இருக்கிறாள் என்று) கூறுவதனால் அவர்களை (அல்லாஹ் உண்மையான) உங்கள் தாயாக்கி விடமாட்டான் …(4)

ஏதேனும் ஒரு காரணத்துக்காகத் தன் மனைவியை ஒதுக்கிவைக்க நினைக்கும் ஒருவன் "உன் முதுகு என் தாயின் முதுகை ஒத்திருக்கிறது" என்று சொன்னால் போதும் என்பது அன்றைய அறியாமைக் காலத்தில் அரபுலகில் பரவலாக இருந்த நடைமுறையாகும். 'ளஹ்ரு' (முதுகு) எனும் பெயர்ச் சொல்லிலிருந்து 'ளிஹார்' எனும் வினை பிறந்ததென்பர்.

கவ்லா பின்த் ஃதஅலபா எனும் நபித்தோழியின் விவகாரத்தில் அவருடைய கணவர் ளிஹார் செய்தபோது அதைச் செல்லாததாக்கி, அஞ்ஞான ளிஹாரை முற்றிலும் மனித சமுதாயத்திலிருந்து ஒழித்துக் கட்டுவதற்காக, அதற்கான பிராயச்சித்தத்தோடு கீழ்க்காணும் வசனத்தை அல்லாஹ் அருளினான்:

قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللَّهِ وَاللَّهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ .
الَّذِينَ يُظَاهِرُونَ مِنكُم مِّن نِّسَائِهِم مَّا هُنَّ أُمَّهَاتِهِمْ إِنْ أُمَّهَاتُهُمْ إِلَّا اللَّائِي وَلَدْنَهُمْ وَإِنَّهُمْ لَيَقُولُونَ مُنكَرًا مِّنَ الْقَوْلِ وَزُورًا وَإِنَّ اللَّهَ لَعَفُوٌّ غَفُورٌ .
وَالَّذِينَ يُظَاهِرُونَ مِن نِّسَائِهِمْ ثُمَّ يَعُودُونَ لِمَا قَالُوا فَتَحْرِيرُ رَقَبَةٍ مِّن قَبْلِ أَن يَتَمَاسَّا ذَلِكُمْ تُوعَظُونَ بِهِ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ .
فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ مِن قَبْلِ أَن يَتَمَاسَّا فَمَن لَّمْ يَسْتَطِعْ فَإِطْعَامُ سِتِّينَ مِسْكِينًا ذَلِكَ لِتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَتِلْكَ حُدُودُ اللَّهِ وَلِلْكَافِرِينَ عَذَابٌ أَلِيمٌ .

(நபியே!) தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான். மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; (எல்லாவற்றையும்) பார்ப்பவன்.

"உங்களுள் சிலர் தம் மனைவியரைத் "தாய்கள்" எனக் கூறிவிடுகின்றனர், அதனால் அவர்கள் இவர்களுடைடைய தாய்கள் (ஆகிவிடுவது) இல்லை; இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம் இவர்களுடைய தாய்களாவர். எனினும், நிச்சயமாக இவர்கள் சொல்லில் வெறுக்கத் தக்கதையும் பொய்யானதையுமே கூறுகிறார்கள். எனினும், நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொறுப்பவன்; மிகவும் மன்னிப்பவன். 

மேலும் எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால், அவ்விருவரும் இல்லறத்தில் ஈடுபடும் முன்னர் ஓர் அடிமையை(க் கணவன்) விடுதலை செய்ய வேண்டும் எனும் அறிவுரையைக் கொண்டு நீங்கள் அறிவுறுத்தப் படுகின்றீர்கள். மேலும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான். 

ஆனால் (அடிமையை விடுதலை செய்ய) வசதியற்றவர் (தன் மனைவியுடன்) இல்லறத்தில் ஈடுபடும் முன்னர் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும்; இதற்குச்  சக்தி பெறாதவர் அறுபது ஏழைகளுக்கு உணவு அளித்தல் வேண்டும், நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்மீதும் (உறுதியான) விசுவாசம் கொள்வதற்காக (இவ்வாறு கட்டளையிடப்பட்டுள்ளது). மேலும் இவை அல்லாஹ் விதிக்கும் வரம்புகளாகும் அன்றியும், மறுதலிப்போர்க்கு நோவினை செய்யும் வேதனை உண்டு. (5)

ஆதாரங்கள்:
(1) ஷமாயில் திர்மிதீ எண் 8
(2) புஹாரி 2842 : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
(3) நஸாயீ  3457 : இப்னு அப்பாஸ் (ரலி)
(4) அல்குர்ஆன்: 33:4
(5) அல்குர்ஆன் : 58:4
தொடரும் இன்ஷா அல்லாஹ்....
இக்பால் M. ஸாலிஹ்

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு