Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்கள் – ஜகாத் [ரமளான் ஸ்பெஷல் - 2] 0

அதிரைநிருபர் பதிப்பகம் | June 30, 2015 | , , , ,

ரமளான் ஸ்பெஷல்

இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்கள் – ஜகாத்

இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் நாம் நோன்புப் பெருநாளைக் கொண்டாட இருக்கிறோம். இந்தப் பெருநாளை அரபி மொழியில் ஈதுல் பித்ர் (EID UL FITR) என்று  அழைக்கிறார்கள். தமிழில் இதை ஈகைத்திருநாள் என்று சொல்லலாம். உலக சரித்திரத்திலேயே ஈகைக்காக ஒரு ஒரு நாளை திருநாளாகக் கொண்டாடுவது இஸ்லாத்தின் சிறப்பியல்புகளில் குறிப்பிடத் தக்க ஒன்று. ஈத்துவக்கும் இன்பத்தை கடமை யாக்கிய ஈடு இணையற்ற மார்க்கமே இஸ்லாம். உலகில் தோன்றிய எந்த மதத்துக்கும் இந்த சிறப்பு இல்லை. தர்மமும் மனிதாபிமானமும் சமத்துவமும் சகோதரத்துவமும் இஸ்லாத்தின் நாடி நரம்புகளில் ஓடிக் கொண்டு இருக்கும் கொள்கைகள். பிற மதங்களில் ஏதாவது தவறு செய்துவிட்டால் அதற்குப் பரிகாரம் கோயில் உண்டியலில் காசு போடவேண்டும்; நூற்றுக் கணக்கில் தேங்காய் உடைக்க வேண்டும்; நெருப்பில் நடக்க வேண்டும்; தலையில் மொட்டை அடிக்க வேண்டும்; மண்சோறு சாப்பிட வேண்டும்; ஆணிச்செருப்பு போட வேண்டும் ; அரை நிர்வாணமாய் ஓடவேண்டும்; அலகு குத்த வேண்டும்; பச்சைக்  குழந்தைகளை மண்ணில் போட்டு புதைத்து பின் மீட்டு எடுக்க வேண்டும்; மொட்டை  மண்டையில் மொட்டைத்தேங்காயை உடைக்க வேண்டும்- இப்படி. ஆனால் முஸ்லிம் ஒருவன் பாவமான செயலை செய்துவிட்டால் – அந்தப் பாவத்துக்குப் பரிகாரம் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்; இல்லாதோர்க்கு தானியங்களை தாரைவார்க்க வேண்டும் என்பதே. அந்த வகையில் தர்மத்தை தனது மூச்சாக வைத்து இருப்பது இஸ்லாம். 

ஜகாத் பற்றிய கடந்த அத்தியயங்களில் படித்து வரும் அன்பானவர்களுக்கு இன்னும் ஒரு சிறு விளக்கம் இந்த அத்தியாயத்தில் விவாதித்து விட்டு பின்னர் இன்னும் சில இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகளுக்கு செல்லலாம்.  

யாருக்கு ஜகாத் கடமையாகிறது என்கிற கேள்விக்கு ‘நிஸாப்’ என்கிற அளவுகோலை வைத்து இருக்கிறார்கள். சொத்தானது ஜகாத் கடமையாவதற்குரிய உச்ச வரம்பை  அடைந்திருந்தால்  அதனை  ‘நிஸாப்’ என்று அழைக்கலாம். நிஸாப்  என்பது ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு வகையாக மாறுபட்டு ஜகாத் கொடுப்பதன் அளவை  நிர்ணயம் செய்கிறது. 

பொதுவாக , புனித ரமழான்  மாதத்தில்தான் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகின்றது. ரமழானில் ‘ஸதகா’ வலியுறுத்தப்படுகின்றது. எனினும், ஜகாத்தைப் பொறுத்தவரையில் ஒரு வருடம் பூர்த்தியானால் வழங்க வேண்டும் . வருடக் கணக்குப் பார்ப்பதற்கு முஸ்லிம்கள் பிறைக்   கணக்கின் அடிப்படையில் சந்திர கணக்கு அடிப்படையில்தான் கணிக்க வேண்டும் . மாறாக, சூரிய அடிப்படையிலான கணிப்புகளை செய்தால் நாட்கள் வேறுபடும். பிறை பார்த்து நோன்பு வைக்கிறோம் பிறை பார்த்து பெருநாள் கொண்டாடுகிறோம் . எனவே வருடம் கணக்கிடுவதற்கு சந்திரக் கணக்கையே தேர்ந்தெடுப்பது சிறந்தது என்று நாம் ஏற்கலாம். 

ரமழான் மாதத்தைப்  பொதுவாகத் தேர்ந்தெடுக்கக் காரணம் ரமழான் மாதத்தில் செய்யப் படும் நன்மைகளுக்கும் அமல்களுக்கும் இறைவனிடத்தில் அதிக நன்மைகள் கிடைக்கும் என்கிற எண்ணம் காரணமாக இருக்கலாம். மேலும் பொதுவாக பணம் படைத்தவர்கள் பலர் இந்தப் புனித  மாதத்தில் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று நோன்பு மற்றும் அமல்களில் ஈடுபட விரும்புவார்கள்.  ஜகாத்தை தங்களின் கரங்களால் வழங்க வேண்டுமென்று விரும்புவோர்களும் உண்டு.  இந்தக் காரணத்தால் ஜகாத் வழங்குவதற்கு ரமழான் மாதத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். ஆனால் ரமழானில்தான் வழங்க வேண்டுமென்று  சட்டமல்ல. அந்தந்த தேவைகளுக்கு சூழ்நிலைகளுக்கு  ஏற்றபடி ஜகாத்தை வழங்கலாம்.  உதாரணமாக அடிமைகளை விடுவிக்க, கல்விப் பணிகளுக்கு, புதிதாக இஸ்லாத்துக்கு வந்த சகோதரர்களுக்கு உதவ என்று அல்லாஹ் விதித்த ( 9:60)  விதிகளின்படி தேவைக்கு வழங்க வேண்டும். அசாதாரண சூழ்நிலைகளில் ரமழான் வரும் வரை காத்திருக்க வேண்டுமென்பது  கொடுக்க மாட்டாதவன் சினை ஆட்டைக் காட்டுவதற்கு ஒப்பானது. தேவையில் உதவுவதே உண்மையான உதவி. 

இன்று நம்மிடையே எழுந்துள்ள ஒரு முக்கியமான கேள்வி ஜகாத்தை எப்படிப் பங்கீடு செய்வது என்பதுமாகும். சிறு செல்வந்தர்கள்  தாங்கள் கொடுக்க வேண்டிய ஜகாத் தொகைகளை கணக்கிட்டு பெரும்பாலும் தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும், வேண்டியவர்களுக்கும், அண்டை அயலார்களுக்கும் வழங்குகிறார்கள். பல பணக்காரர்கள் தாங்கள் கணக்கிடும்  ஜகாத் தொகைகளை சில்லரையாக மாற்றி வைத்துக் கொண்டு ஒரு காம்பவுண்டுக்குள் ஏழைகளின் கூட்டத்தை அடைத்து வைத்துக்கொண்டு ஜகாத் திருவிழா நடத்துகிற அவலங்களும் நடைபெறுகின்றன. இதனால் கூட்டத்தில் சிக்கி பலர் இறந்து போன நிகழ்வுகளும் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. இந்த நிலையில் ஒரு பொதுவான அமைப்பின் மூலம் ஜகாத் தருவோரிடமிருந்து நிதியைத் திரட்டி அந்த அமைப்பின் மூலம் தேவையானவர்களையும் தகுதியானவர்களையும் கண்டறிந்து உதவுவது என்கிற செயல்முறைகள்  பல பெரிய முஸ்லிம் ஜமாஅத் இருக்கும் ஊர்களில் இன்று நடைமுறைப் படுத்தப் படுகின்றன. இதுவும் தவிர மாறுபட்ட இயக்கங்களும் தங்களின் சார்பாக போட்டி போட்டுக் கொண்டு ஜகாத் நிதியை வசூல் செய்கின்றன. 

“(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக,..” (9:103).

என்ற வசனம் மூலம் ஜகாத்தை வசதியுள்ளவர்களிடமிருந்து வசூல் செய்யுங்கள்  என்று கூறப்படுகின்றது. மேலும்  நபி(ஸல்) அவர்கள் ஸகாத் குறித்துக் கூறும் போது,

“அது அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து எடுக்கப்பட்டு அவர்களிலுள்ள ஏழைகளுக்கு வழங்கப்படும்”  எனக் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: முஆத் (ரலி). நூல்: முஸ்லிம்.

இந்த நபிமொழி ஜகாத் என்பது வசதியுள்ளவர்கள் தாமாக நேரடியாக ஏழைகளுக்கு வழங்குவதன்று. வசதியுள்ளவர்களிடமிருந்து பெற்று ஏழைகளுக்கு வழங்கும் ஒரு மூன்றாம் தரப்பு இதில் ஈடுபடவேண்டும் என்பதை உணர்த்துகின்றது.

ஜகாத் பெற தகுதியான எட்டு வகையினர்  பற்றி திருமறை  குறிப்பிடும் போது ஜகாத்திற்காக பணிபுரிந்தோரும் ஒரு பகுதியினர் எனக் கூறுகின்றது.

“(ஜகாத் என்னும்) தானங்கள் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதனை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படு வதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை,.” (9:60).

என்று கூறுகின்றது. இதுவும் ஜகாத்தைச் வசூலிக்க  ஒரு பணியாளர் மற்றும் அமைப்பு என்கிற  கூட்டம் இருக்கவேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

இந்த அடிப்படையில் ஜகாத்தை பொது நன்மையைக் கருதும் ஒரு சிலர் ஒன்று இணைந்து ஒரு குழுவாக  சேகரித்து திட்டமிட்டு அது பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதனால் பல நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளன. அவை யாவை என்பதைப் பார்க்கலாம்.

அளவில் பெரும் தொகை :

ஒரு ஊரில் ஜகாத் வழங்கத் தகுதி யுள்ளவர்கள் அதிகம் பேர் இருந்து  பேர் இருந்து, அவர்கள் அனைவரது ஜகாத்தும் ஒன்று திரட்டப்பட்டால் வசூலாகும் ஜகாத்தின்  தொகை அதிகமாகின்றது. இதன் மூலம் குறைந்தது வருடத்திற்கு ஊரிலுள்ள கணிசமான  அளவுள்ள ஏழைகளின்  பிரச்சினைகளாவது தீர்வதற்கு வாய்ப்பு ஏற்படுவதுடன் பல்வேறு வகைப் பட்ட பிரச்னைகளையும் பெரும்தொகை கையில் இருந்தால் பிரச்னைகளை ஒட்டுமொத்தமாக  தீர்க்கும் வகையில் அணுக முடியும்.  இதற்கு மாற்றமாக, தனித் தனியாக நம்மிடம் வருபவர்களுக்குப் பகிர்ந்து அளிப்பதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. சிதறிப் போன செல்வம் சிறப்பாக சாதிக்க இயலாது. திரண்ட செல்வத்தால் நிறைய சாதிக்க வாய்ப்புண்டு.  தனி மரங்கள் தோப்பாவதில்லை. 

முன் திட்டமிட்ட முறையான  பகிர்ந்தளிப்பு:

கூட்டுமுறையில் ஜகாத்  சேகரிக்கப் படும் போது, அதனை தொழில் வாய்ப்பு, கடன் நிவாரணம் என பகுதி பகுதியாகப் பிரித்து, தேவையுடையோர் இனங்காணப்பட்டு, திட்ட மிட்டுப் பகிர்ந்தளிக்கும் வாய்ப்பு ஏற்படுகின்றது.

அனைவருக்கும் கிடைக்கும் வகை :

கூட்டுமுறையில் பகிர்ந்தளிக்கும் போது தேவையுடைய அனைவரையும் ஜகாத்  சென்றடையும் வாய்ப்பு அதிகமுள்ளது. தனித் தனியாக வழங்கும் போது குறிப்பிட்ட சிலர் மட்டும் அதிக பயனடையும் வாய்ப்பு கூடுதலாகவுள்ளது.

சுய கௌரவம் பாதுகாக்கப்படும்:

தேவையுடையோர் தனித்தனி நபர்களை அணுகி ஜகாத் பெற பிடரியை சொரிந்து கொண்டும் வீணாகப் புகழ்ந்துகொண்டும்  முயற்சிக்கும் போது ஏழைகளின் சுய மரியாதை  பாதிக்கப்படுகிறது. ஒரு குழுவிடம் தேவையை முன்வைத்து நிர்வாக ரீதியாக தேவையைப் பெறும் போது ஏழைகளின் சுயமரியாதை  பாதுகாக்கப்படுகின்றது.

தற்பெருமைக்கு இடமிருக்காது:

தனித்தனியாக ஜகாத் வழங்குபவர்களிடம் தற்பெருமையும் தம்பட்டமும்  எழ வாய்ப்புள்ளது. தன்னிடம் ஜகாத் வாங்கியவன் தன்னைக் கண்டால் எழுந்து நிற்க வேண்டும்; தொழுவதற்கு நாற்காலி எடுத்துப் போடவேண்டும்;  பல்லிளிக்க வேண்டும் சில நேரங்களில் வீட்டு வேலைகளைக்கூட செய்து கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கள் எழ வாய்ப்புண்டு. கூட்டுமுறையில், அந்த வாய்ப்புக்கள் நீக்கப் பட்டு  செல்வந்தர்கள் தற்பெருமையிலிருந்து பாதுகாக்கப்படுகின்றனர். யாருடைய பணம் யாருக்கு கொடுக்கப்பட்டது என்பது தெரியாமல் இருக்கும். 

ஜகாத்தின் நோக்கம் நிறைவேறும்:

ஜகாத்தின் நோக்கமே புனர் வாழ்வாகும். தனிப்பட்ட முறையில் ஒருவரது உண்மையான தேவைகளை அளவிடாமல் செய்யப்படும் சிறு அளவிலான உதவிகளால் புனர் வாழ்வு என்பது அவ்வளவு சாத்தியமல்ல. அதே நேரம் பலர் இணைந்து ,  ஒரு கணிசமான தொகையை ஒருவருக்கு வழங்கினால்  வாழ்வை புனரமைத்துக் கொள்ள அவருக்கு உதவும் என்கிற கருத்தும் இருக்கிறது. தனித்தனியாய் நூறு இருநூறு  என வழங்குவதை விடவும் கூட்டாக இணைந்து பத்தாயிரம், இருபதாயிரம் என தொகையினை அதிகரித்து வழங்கும் போது கடன்கலைத்  தீர்க்க அல்லது தொழில் செய்வதற்கான ஏற்பாடு செய்து கொடுக்கும் போது ஜகாத்தின் நோக்கம் நிறைவேறுகின்றது.

ஜகாத்தை கணக்கிடும் முறைக்  குறைபாடுகள் நீங்க :

நூற்றுக்கு இரண்டரை வீதம் என ஜகாத் கட்டாயமாக  கணக்குப் பார்த்து வழங்கப்பட வேண்டும். தனித்தனியாக வழங்குபவர்கள் ஏதோ வங்கிக் கரன்சிகளை சில்லரையாக  மாற்றி வைத்து வழங்கிவிட்டு, ஜகாத்தை நிறைவேற்றிவிட்டதாக மனதிருப்தி கொள்கின்றனர். இறைவனின் கணக்கில் செலுத்த வேண்டியது பாக்கி நின்று கொண்டே இருக்கும். பகுதியாகக் கொடுத்தால் பயன் இல்லை. . கூட்டு நடைமுறை மூலமாக தான் கொடுக்க வேண்டிய மொத்த ஜகாத் தொகையை கணக்கிட்டு கொடுத்துவிட்டால்   இந்தத் தவறான நடைமுறையை நீக்க முடியும்.

பிச்சைக்காரர்களின் கூட்டத்தை  தடுத்தல் :

தனித் தனியாக ஜகாத்  வழங்கும் நடைமுறைப் பிச்சைக்காரக் கூட்டத்தை உருவாக்கியுள்ளது. ரமழான் காலங்களில் ஜகாத், சதகா, ஹதியா, பித்ரா என்ற பெயரில் கூட்டம் கூட்டமாக வீடுகளுக்குப் படையெடுக்கும் நிரந்த /தற்காலிக  கூட்டம் இதற்கு கண்ணேதிரே காணும்  காட்சியாகும். அது மட்டுமல்ல பல பிற மதத்தவர் முஸ்லிம்களைப் போல் வேடமிட்டு தொப்பி,  முக்காடு போன்ற காஸ்ட்யூம் அணிந்து கலந்து வர ஆரம்பிக்கின்றனர். கூட்டு முறையில் இனம் கண்டு கொடுத்தால் , ஜகாத்தை முஸ்லிம்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டுமென்கிற இறைவனின் விதி மீறப்பட வாய்ப்பில்லாமல் போகும்.  

தன்மானம் கருதும்  மரியாதையுள்ள  ஏழைகள் பாதுகாக்கப்படல்:

வறுமையில் உழன்றாலும் ‘ஏற்பது இகழ்ச்சி’  என்று எண்ணும் குணமுள்ளோர்- கையேந்த தயங்கும் குணமுள்ளோர் ஜகாத்தை கேட்கவோ வேண்டிப் பெறவோ தயங்குவார்கள். ஆனாலும் ஜகாத் பெறத் தகுதி படைத்த அத்தகையோரைக் கண்டறிந்து அவர்களுக்கும்   ஜகாத்தின் பங்கு வழங்கப் பட கூட்டு முறை ஜகாத் துணை புரியும். அழும் பிள்ளையே பால் குடிக்கும் அதற்காக அழாத பிள்ளைகளை பட்டினி போடுவது தர்மம் அல்லவே. 

குறிப்பிட்ட சிலர் பயனடையும் நிலை:

வாய்ப்பகட்டு பேசும்  பல புரபஷனல் இரப்போறை  நாம் நிறையக் கண்டு இருக்கிறோம். கேட்டுப் பழகியவன் எல்லோரிடமும் கேட்பான். இந்த வகையில் தனித் தனியாக ஜகாத் வழங்கும் நடைமுறையில் சிலர் ஊர்கள்  பூறாகச் சுற்றிச்  சுற்றி பணம் சேர்க்கின்றனர். இதனால், கேட்டுப் பழகியவர்கள் எல்லோரிடமும் பெற்று அதிகமாக திரட்டிக் கொள்ளவும் வாயற்ற  இப்பழக்கமற்ற ஜகாத் பெற தகுதி உடைய நல்லோர்கள் பாதிக்கவும் படுகின்றனர். அனைவரையும் அளவிட்டு வழங்கப் படும் கூட்டு நடை முறை இதைத் தடுக்கும். 

 உள்ளூரில் ஜகாத் வழங்கப்பட:

ஒரு ஊரில் திரட்டப் படும்  ஜகாத் நிதி, அவ்வூர் ஏழைகளுக்கே பகிர்ந்தளிக்கப்படுவது உள்ளூர்ப் பொருளாதாரத்தை - அண்டை அயலாருடைய செல்வ நிலையை மேம்படுத்தும். வாழ்வின் அத்தியாவசியங்களை நிறைவேற்றும்.  இது அடிப்படைத் தத்துவம்.  பொதுவாக ஒருவன் தனது ஊரில் தன்மானம் போய்விடக்கூடாது என எண்ணி அடுத்தடுத்த ஊர்களுக்குச் சென்று ஜகாத் பெறுகின்றான். இதனால் உள்ளூர்வாசிகளுக்கு முன்னுரிமை கொடுப்பது தடைப் படுகிறது. இது ஜகாத்தின் அடிப்படைக்கே மாற்றமாகும். கூட்டு முறையில் இந்நிலை தவிர்க்கப் படும். 

உள்ளூர் செல்வந்தர்களிடையே ஒன்றுபட்ட  புரிந்துணர்வு:

கூட்டுமுறையில் பணம் சேகரிக்கப்பட்டு திட்டமிட்டுப் பகிரப்படும் போது, ஒரு ஊரிலுள்ள அத்தனை செல்வந்தர்களுக்கும் இடையில் ஒரு தொடர்பும், பரஸ்பரம் நெருக்கமும் ஏற்படுகின்றன. இந்நெருக்கம் ஊர் விவகாரங்களில் அவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புக்களையும் உணர்வுகளையும் ஏற்படுத்தும். இவ்வடிப்படையில் ஜகாத்தை அவரவர் தனித் தனியாக அன்றி, ஒரு குழுவாக இணைந்து திட்டமிட்டு பகிர்ந்தளிக்கும் முயற்சியை ஒவ்வொரு ஊரின் அனைத்து ஜமாத்துகளும் இணைந்து பைத்துல் மால் போன்ற அமைப்பை ஏற்படுத்தி ஜகாத்தைப் பகிர்ந்து அளிக்கலாம். 

கூட்டுமுறையில் ஜகாத் திரட்டப் பட்டு கொடுக்கப் படக்கூடாது என்கிற வாதமும் நிலவுகிறது. இதற்கு சொல்லப் படும் முக்கியமான காரணம், இத்தகைய நிதிகளை கையாள்வோருடைய கைசுத்தம் பற்றியது. மேலும் தனக்கு வேண்டியவர்களுக்கு, தெருக்காரர்களுக்கு , உறவினர்களுக்கு பொது நிதியிலிருந்து  எடுத்து தாராளமாக வழங்கி தங்களுடைய சொந்த செல்வாக்குகளை வளர்த்துக் கொள்வார்கள் . அதாவது ஊரார் வீட்டுக் கோழியை அறுத்து உம்மா பெயரில் பாத்திஹா ஒதிவிடுவார்கள் என்று கூறப்படுகிறது. அண்மையில் சில இயக்கங்கள் திரட்டிய ஜகாத் மற்றும் பித்ரா போன்ற நிதிகள் சரிவர பகிரப்படவில்லை என்கிற குற்றச்சாட்டுகளை  ஒருவர் மீது ஒருவர் சாட்டிக்கொண்டனர்.  

கூட்டு முறையில் ஜகாத் வழங்கிய செல்வந்தர்கள் அப்படி தாங்கள் வழங்கிய புனிதப் பணம் சரியான முறையில் பகிரப் படவில்லை என்று அறிந்தால் அடுத்தடுத்த வருடங்களில்  இந்த பைத்துல்மால் போன்ற பொது அமைப்பை நம்பி ஜகாத் நிதியைதர யோசிப்பார்கள். இந்த அறப்பணியில்  தொய்வு ஏற்படும். 

இந்திய நாட்டைப் பொறுத்த வரையில் ஒரு ஒன்றுபட்ட ஜகாத் அமைப்பு நிறுவப் படுவதற்கான சாத்தியக்கூறு ஒரு சதவீதம் கூட இல்லை என்றே சொல்ல வேண்டும். இங்கு ஒன்று பட்ட  முஸ்லிம் தலைமை இல்லை. இதனால் அருட் தூதர் முகம்மது ( ஸல்) அவர்கள் காலத்திலும் ஏனைய கலிபாக்கள் மற்றும் நபித்தோழர்கள் காலத்திலும் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப் பட்ட இந்த வறுமை ஒழிப்புத் திட்டம் இன்றைக்கு இறை அச்சம் குறைவானதன் காரணமாகவும் போட்டி அரசியல் காரணமாகவும் தலைவர்கள் என்று பவனி வருகிறவர்களிடம் ஏற்பட்டுள்ள ஈகோ காரணமாகவும் நடைமுறைப் படுத்த இயலவில்லை. இதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும். களை எடுக்க வேண்டுமென்றால் களை எடுக்க வேண்டும்.  

ஆயினும் இந்தப் பணியை இப்படி அரைகுறையாக சரியான நிர்வாகம் இல்லை என்று காரணம் கூறி விட்டுவிட இயலாது. எமது ஊராம் அதிரையைப் பொறுத்த மட்டில் இரண்டு அமைப்புகள் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றன. ஊர் முழுமைக்கான பைத்துல்மால் என்கிற அமைப்பு ஊரின் பொதுநல விரும்பிகளால் ஒன்றிணைந்து நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் கர்ழன் ஹசனா என்கிற அல்லாஹ்வுக்கு அழகிய கடன் என்கிற அமைப்பும் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. வறுமை ஒழிப்புத் திட்டத்தில் இவை இரட்டைக் குழல் துப்பாக்கியாக இன்னும் சிறப்புடன் செயல்பட வேண்டும். பல காரியங்களில் இவ்விரண்டு அமைப்புகளும் ஒருங்கிணைந்து (Co- ordination)  செயல்பட வேண்டுமென்பது பலரின் ஆவல். 

ஏழைப் பொதுமக்களின் நலனுக்காக இறைவனால் வழிகாட்டப்பட்ட-  வகுக்கப்பெற்ற இந்தத் திட்டம் ஒருபோதும் தோல்வியுறுவதில்லை. இது  இறைவனால் கட்டளையிடப்பட்ட கடமை. இது தனிமனிதர்களோடு மட்டும் சம்பந்தப்பட்ட சொந்த விஷயமல்ல . ஆகவே ஜகாத்தை தருவதற்கு தகுதி பெற்றோர் துல்லியமாகக் கணக்கிட்டு அதனைப் பெற்றிட தகுதி உடையோருக்கு நேரடியாகத் தாங்களே இயன்றவரை கொடுத்துவிட்டு தாங்கள் கணக்கில் மிகுதி இருப்பதை பொதுவான இறையச்சம் கொண்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமைப்பிடம் கொடுத்து பகிரச்செய்யலாம்; பகிர்வைக் கண்காணிக்கலாம்; மேற்பார்வை இடலாம்.

இபுராஹீம் அன்சாரி

குறிப்பு : வாரந்தோறும் பிரதி சனிக்கிழமைகளில் வெளிவந்து இந்த தொடர் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றது - அல்ஹம்துலில்லாஹ். இந்த தொடர் நூல் வடிவம் பெறுவதற்கான அனைத்து ஆயத்தங்களை செய்யப்பட்டு வருகிறது விரைவில் அதன் அறிவிப்பு வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ் !

நபிகளாரின் தூய வாழ்வின் இறுதி நாட்கள் - ரமளான் சிந்தனை! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | June 29, 2015 | , , ,

அன்பானவர்களே, அஸ்ஸலாமு அலைக்கும், இப்புனித ரமழான் மாதத்தில், ரமளான் சிந்தனை என்ற தலைப்பில் நல்ல சிந்தனை தூண்டும் மார்க்க செற்பொழிகளை மற்ற இஸ்லாமிய தளங்களிலிருந்து இங்கு பகிர்ந்துக் நாமும் மற்றவர்களும் பயனடைய வேண்டும் என்பதற்காக பதியப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நம் உயிரினும் மேலான நபி முகம்மது (ஸல்) அவர்களின் இறுதி நாட்களைப் பற்றி மிக அற்புதமான குரல் வலத்தில், அனைத்து தரப்பட்ட மக்களின் மனதில் எளிதில் புரியும்படியான ஒரு வரலாற்று ஆடியோவை “ நபிகளாரின் தூய வாழ்வின் இறுதி நாட்கள்” எனற தலைப்பில் கீழே வெளியிடுகிறோம். கேட்டு பயனடையுங்கள், மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

இந்த ஆடியோவை ஒவ்வொரு முஸ்லீமும் ஒவ்வொரு நாளும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். நம் மனதை உருக்கும் நிகழ்வு.



மேலே உள்ள ஆடியோ உலகளாவிய போட்டியில் முதல் பரிசு பெற்ற “இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு” என்ற நூலின் ஆடியோ தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

ஆசிரியர் : இஸ்லாமியப் பேரறிஞர் ஸஃபிய்யுர் ரஹ்மான்
தமிழில் : மௌலவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி

Books and MP3 CDs are Available at : Darul Huda, New No. 211(102), First Floor, Linghi Chetty St., Chennai - 600 001.

முழு வரலாறு ஆடியோ தொகுப்பை (real media files) தரவிரக்கம் செய்ய இங்கு சென்று http://www.islamkalvi.com/history/raheeq_audio/index.htm  தரவிரக்கம் செய்துக்கொள்ளலாம்.

இந்த அற்புதமான வரலாற்று தொகுப்பை இவ்வுலகிற்கு தந்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.
நல்ல விசயங்கள் எங்கேல்லாம் இருக்கிறதோ அவைகளை மட்டும் நாம் தேர்ந்தேடுத்து, கேட்டு, பிறருக்கும் எடுத்துச் சொல்லி, நாமும் பயனடைந்து மற்றவர்களையும் பயனடைய செய்யலாமே.

அதிரைநிருபர் பதிப்பகம்

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 24லிருந்து.... 0

அதிரைநிருபர் பதிப்பகம் | June 28, 2015 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்.
முந்தைய பதிவுகளில் மரணத்தை எதிர்பார்த்து வாழ்ந்த அந்த சத்தியத்தோழர்கள் சிலரின் வாழ்விலிருந்து ஓரிரு சம்பவங்களைப் பார்த்தோம் படிப்பினை பெற்றோம். இந்த வாரம் முதல் நபி(ஸல்) அவர்களின் நற்குணங்களுக்கு எடுத்துக்காட்டாய் உள்ள சம்பவங்களைப் பார்ப்போம், படிப்பினைகளை பெறுவோம். இன்ஷா அல்லாஹ்.

இவ்வுலகில் நன்மை தீமை, வெற்றி தோல்வி, இவை அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகிறது என்பது நம்முடைய ஈமானில் உள்ள ஒரு நம்பிக்கை. ஆனால் நாம் இன்று நம்முடைய வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் நாம் தான் காரணம் என்று அல்லாஹ்வின் நாட்டத்தை, அல்லாஹ் நமக்கு நிர்ணயித்த அந்த விதியை இரண்டாம் பட்சமாகவே பார்க்கிறோம். அல்லாஹ் எனக்கு அளித்த நிஃமத் என்பதை மறந்துவிடுகிறோம். இது போல் நமக்கு ஒரு தீங்கு ஏற்பட்டுவிட்டால், அதன் மூலம் பிறரைக் காரணம் காட்ட முயற்சிக்கிறோமே தவிர இது அல்லாஹ் நமக்கு நிர்ணயித்த விதி, இதன் மூலம் அல்லாஹ் நம்முடைய ஈமானைச் சோதிக்கிறான் என்பதை மறந்து விடுகிறோம். ஆனால் நம்முடைய வாழ்வுக்கு முன் மாதிரி அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை காணும் போது நம்முடைய வாழ்வு அவர்கள் காட்டித்தந்த வழியில் உள்ளதா என்பதை சிந்திக்கத் தூண்டும்.

ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு ரமழான் பிறை 12இல் இடம்பெற்ற மக்கா வெற்றி இஸ்லாம் அரபு தீபகற்பத்தில் மிக பலம் வாய்ந்த சக்தி என்பதை புலப்படுத்தியது. ஹூதைபியா உடன்படிக்கைகளுள் ஒன்றை மக்கத்து காஃபிர்கள் முறித்ததைத் தொடர்ந்து   நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து 10,000க்கும் மேற்பட்ட படை வீரர்களோடு மக்காவை நோக்கிச் சென்றார்கள்.

நபி(ஸல்) அவர்களின் உயர்ந்த பண்புகளால் கவரப்பட்ட மக்கத்து குறைஷி வம்சத்தின் தலைவர்களுள் ஒருவரான அபூ ஸூப்யான் இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் மக்கத்து மக்களுக்கு "யார் அபூஸூப்யானின் வீட்டில் நுழைகின்றனரோ அவர்களும், மதீனா பள்ளிவாசலில் யார் நுழைகின்றனரோ  அவர்களும் பாதுகாப்பு பெற்று விட்டார்கள்" என பிரகடனம் செய்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் எந்த யுத்தமுமின்றி அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவர்களாக மக்காவுக்குள் பாதுகாப்பாக நுழைந்தார்கள். பிறகு கஃபாவை தவாப் செய்துவிட்டு அதனுள் காணப்பட்ட 360 சிலைகளையும் அகற்றினார்கள்.

பிறகு மக்கத்து காபிர்கள் தங்களுக்கு முஹம்மத் என்ன செய்துவிடுவாறோ என அஞ்சி நின்றபோது அவர்களை அழைத்து பொது மன்னிப்பு வழங்கி விட்டு 'நீங்கள் சென்று விடுங்கள். நீங்கள் சுதந்திரம் பெற்று விட்டீர்கள்' எனக்கூறி சுதந்திர பிரகடணம் செய்தார்கள்.

அநீதிக்கும் சித்திரவதைக்கும் உட்பட்டு தாய்நாட்டிலிருந்து துரத்தப்பட்ட நபி (ஸல்) அவர்கள் அம்மக்களுக்கு பூரண மன்னிப்பை வழங்கி வெற்றியை ஆரவாரமின்றி கொண்டாடியமை எவ்வளவு படிப்பினை மிக்க செயலாகும். இது இஸ்லாம் சாந்தி சமாதான மார்க்கம் என்பதை உறுதிசெய்கிறது.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், இன்று நாம் பிறந்த ஊரைவிட்டு விரட்டி அடிக்கப்பட்டால், நம் நிலை என்னவாக இருக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். நாம் சம்பாதித்த சொத்துக்கள், கட்டிய வீடு, சொந்த பந்தங்கள், நண்பர்கள், ஓடி ஆடி விளையாடிய தெருவீதிகள், ஐவேளை தொழுகை தொழுதுவரும் பள்ளி வாசல்கள், நாம் படித்த பள்ளிக்கூடங்கள், நல்ல நண்பர்களாக இருந்த பிற மத நண்பர்கள், இவைகள் அனைத்தனையும் விட்டு நிர்கதியான நிலையில் வேறு ஊருக்கு அடித்து துரத்தப்பட்டால் நம்மிடம் நிச்சயம் சந்தோசம் இருக்காது, நிம்மதி இருக்காது. 

என்னதான் காலம் கழிந்தாலும் நான் வாழ்ந்த அதே ஊருக்கு வந்தடைய வேண்டும் என்ற ஏக்கம் இருந்துக் கொண்டே இருக்கும், பெருளாதார பலத்துடன் ஆள் பலத்துடன் நாம் துரத்தி அடிக்கப்பட்ட அந்த சமூகத்துக்கு நம் ஊருக்கு வந்தால், மனிதனாக பிறந்த நாம் நிச்சயம் நம்மை துரத்தி அடித்தவர்களை பழிவாங்கியே ஆகவேண்டும் என்ற கோப எண்ணத்தில் மலை உச்சி பெருமை கொண்டவர்களாகத் தான் நாம் வருவோம். ஆனால் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வை  புகழ்ந்தவர்களாக, ஒரு துளி பெருமையும் மனதில் இல்லாமல், தன்னை துன்புறுத்தியவர்களை மன்னித்து, அவர்களுக்கு பாதுகாப்பும் கொடுத்துள்ளார்கள் என்றால், அவர்களின் வழியில் வாழ்கிறோம் என்று சொல்லும் நாம், பழிவாங்கும் எண்ணத்தில் இன்று நம்மை சுற்றியுள்ளவர்களை நிரந்தர எதிரிகளாக பாவித்து வருகிறோமே? இது தான் நபி(ஸல்) அவர்களிடமிருந்து நாம் கற்ற நற்குணங்களா?

எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே (அல்ஹம்துலில்லாஹ்) என்ற இந்த வார்த்தையை நாம் சரியாக உணரவில்லை என்பது நாம் நம்முடைய வாழ்விலிருந்து கண்டுவரும் உண்மை. பெருமையின் உச்சக்கட்ட்த்தில் சிறிய பெரிய உதவிகளைச் சுய விளம்பரங்களின் மூலம் முக்கியத்துவம் கொடுக்கிறோமா இல்லையா? நான் உத்தமனாக வாழ்கிறேன், அவன் இப்படிப்பட்டவன், இவன் இப்படிப்பட்டவன் என்று அடுத்தவனை இழிவுபடுத்தி நம்மை நாமே பெறுமையடித்துக் கொள்கிறோமா இல்லையா? எனக்கு கோபம் என்பதே வராது, நான் காசு எல்லாம் பார்க்க மாட்டேன் தர்மம் அள்ளிக்கொடுப்பேன் மேலும் நான் மார்க்கத்தில் வழி தவறாதவன் அவன் வழி தவறியவன் என்று சொர்கத்துக்கு அனுமதி சீட்டு வாங்கியவர்கள் போன்று பேசிக் கொள்பவர்களாக இருக்கிறோமா இல்லையா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

யா அல்லாஹ்! அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்....
M. தாஜுதீன் 

இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்கள் – ஜகாத் [ரமளான் ஸ்பெஷல் - 1] 2

அதிரைநிருபர் பதிப்பகம் | June 27, 2015 | , , ,

ரமளான் ஸ்பெஷல்...
இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்கள் – ஜகாத்

“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்று முழங்கப் பட்ட கோஷம் அண்மைக்கால அரசியலில் இடம்பெற்ற கோஷங்களில் புகழ்  பெற்ற ஒன்று. ஆனால் அவை எல்லாம் வெற்று கோஷத்துடன் நின்று விட்டன.  அல்லது நீர்க்குமிழிகள் போல் சில திட்டங்கள் சில வருடங்கள் மட்டுமே தோன்றி மறைந்துவிட்டன. அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மறைக்கப்பட்டுவிட்டன.  காலம் தோறும்  நின்று நிலைக்கும்படி ஆக்கபூர்வமாக எதுவும் செய்யப்படவில்லை.  ஆனால் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஏழையின் ஏற்றத்தை என்றுமே காணும் திட்டத்தை மனிதனின் வாழ்நாள் கடமையாக்கி மார்க்கத்தின் சட்டமாக்கி வைத்திருப்பது இஸ்லாம். 

பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்ட இஸ்லாத்தின் கோட்பாடுகளில், இஸ்லாத்தின் ஐந்து கட்டாயக் கடமைகளில் ஒன்றாக சேர்க்கப் பட்டு, உலகில் மனித இனம் வாழ்வதற்கு பொருளாதாரம் எவ்வளவு முக்கியம் என்பதை இறைவனே உலகுக்குப் பறைசாற்றும் ஒரு ஜீவாதாரக் கொள்கை ஜகாத். படைத்த இறைவனின் சாம்ராஜ்யத்தின் பொருளாதாரக் கொள்கைதான் ஜகாத். இஸ்லாமிய அமைச்சரவையின் பொருளாதார  திட்டக் கமிஷனின் தலைமை இடம் ஜகாத்துக்குத்தான்.  ஜகாத் என்பது பக்தர்கள் செலுத்தும் காணிக்கையல்ல; கடமை. ஜகாத் என்பது ஒரு சடங்கு அல்ல ; சட்டம்.

அவரவர் திறமைக்கேற்ப  பொருளீட்டும் சமுதாயத்தில் ஏற்ற தாழ்வை எடுத்தெறிந்து  பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமையை இக்கடமை பெற்று இருக்கிறது. பொருளாதாரத்தின் ஆணிவேரான  உற்பத்திப்  பெருக்கத்துக்கு ஜகாத்  காரணமாகிறது. அடுத்து,  செல்வம் ஒரே  இடத்தில் குவியாமல் செல்வத்தின் பகிர்வு பகிர்வு என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் மற்ற இசங்களுக்கு மத்தியில் ஆன்மீக முறையில் அடக்கமாக கத்தியின்றி இரத்தமின்றி அந்தப் பணியைச் செய்கிறது. மேலும் ஜகாத் பொருளாதாரத்தின் ஆதாரமான வேலை வாய்ப்புப் பெருக்கத்தையும் வாய்ப்புகளையும் அதிகமாக்குகிறது. உரிய முறையில் நிறைவேற்றப்படும்போது சமூகம் சார்ந்த பல்வேறு சவால்களைச் சமாளிக்கும் சாத்தியம் ஏற்படுகின்றது.

நவீன பொருளியல் கோட்பாடுகளைப் பற்றிப் படிக்கும் மாணவர்கள் LAW OF DIMINISHING MARGINAL UTILITY (குறைந்துசெல் பயன்பாட்டுவிதி) என்கிற கோட்பாட்டை விழுந்து விழுந்து படிப்பார்கள். இது வேறொன்றுமல்ல . ஒரு மனிதனின் பயன்பாட்டுக்கு உதவும் ஒரு பொருள் , அந்தப் பொருளின் அளவு அவனிடம் சேரச்சேர தொடக்கத்தில் அந்தப் பொருள் அவனிடம் சேரத்தொடங்கிய போது அந்தப் பொருள் அவனுக்குப் பயன்பட்டதாக அவன் உணர்ந்த அளவுக்குப் பயன்பாட்டை தொடர்ந்து சேரும் அதே பொருளால் அந்த மனிதனால்  உணர முடியாது என்பதே இந்த விதி. உதாரணமாக சொல்லப் போனால்  வேலைக்குச்சென்று வாங்கும் முதல் சம்பளத்தின் மீது இருந்த ஆர்வம், பயன்பாடு, தேவை, வேட்கை ஆகியவை முப்பது வருடங்கள் டேரா போட்டு சம்பாதித்து வாங்கும் கடைசி சம்பளத்தின் மீது மனிதனுக்கு இருக்காது.  இடைப்பட்ட காலத்தில் அவன் வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளத்தின் மீதும் ஆசை குறைந்துவிடும்.  பணம் சேரச்சேர மனதளவில் அதன் மதிப்பு இறங்கிக் கொண்டே வரும். முதல் சம்பளத்தின் தேடல் மற்றும் தேவைகளின் அளவு இருபதாவது  முப்பதாவது சம்பளத்தில் இருக்காமல் இறங்க ஆரம்பித்துவிடும்.

அடுத்து சொல்ல வருவதுதான் மிக முக்கியம்.

இப்படி உபரியாக மனிதனால் ஈட்டப்படும் அந்தப் பணம் அடுத்தவர்களின் தேவைக்கு அளிக்கப் பட்டால் அது அவர்களின் அத்தியாவசிய காரியங்களுக்குப் பயன்படும். அதாவது ஒருமனிதன் தனக்குப் போதும் என்கிற நிலையில் கருதும் பணம் மற்றவனுக்கு வாழ்வின் ஆதாரமாக ஆகும்.  இதுவே ஜகாத் என்கிற தாரக மந்திரத்தின் சூட்சமக் கயிறு. ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே ஜகாத் விதியாக்கப் பட்ட போது இன்றைக்கு நவீனப் பொருளாதாரத்தின் விதி இவ்வாறு இறைவனால் அன்றே உபதேசிக்கப் பட்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது.

தனது செல்வத்தில் நாற்பதில் ஒரு பங்கை எழைகளுக்கு வருடா வருடம் வரியாகப் பிரித்துக் கொடுத்துவிட வேண்டுமென்கிற சட்டம் சமுதாயத்தில் பாய்கிற போது கொடுப்பவருக்கும் துன்பமில்லை. அதைப் பெறுபவர் அந்த நிதியைக் கொண்டு தங்களின் ஏழ்மை வாழ்வை செம்மையாக்கிக் கொள்ள இயலும் என்பதே இதன் பொருளாதாரத் தத்துவம். ஒரு பணக்காரரின் வருமானத்திலிருந்து ஒரு சிறு அளவு,  ஜகாத்தாக ஏழைக்கு சென்று சேர்கிற பொழுது பணக்காரருக்கு ஏற்படும் இழப்பைவிட ஏழைக்குக் கிடைக்கும் இலாபமே அதிகமாகும். இதனால் ஒட்டுமொத்த சமுதாயத்தில் சமத்துவம்    சம்மணம்  போட்டு அமரும்.

ஜகாத் என்பது ஒரு பெரிய ஏரியின் வரப்புகள் நீர் மிகுதியால் உடைப்பெடுத்துக் கொள்ளாமல்  வெட்டிவிடப்பட்ட ஒரு சிறு வாய்க்கால். அதிலிருந்து ஏழைகளின் வயல்களை நோக்கி உற்பத்திக்கான நீர் ஓடிக்கொண்டே இருக்கும் . அதே நேரம் இறைவனின் அருள் என்கிற ரஹ்மத்தும், பரக்கத்தும் பெருமழையாய் பெய்து ஏரியை நிரப்பிக் கொண்டே இருக்கும். ஆண்டுதோறும் ஜகாத்  செலுத்தப் படவேண்டுமென்கிற  விதி  இந்த ஆன்மீகப் பணியின் மூலமான சமுதாய வளர்ச்சி   தொய்வில்லாமல் நடைபெற வழி வகுக்கிறது.  சொர்க்கத்தில் நமக்கென இடத்தைப் பதிவு செய்யும் நன்மைக் கட்டணமாக ஜகாத் இறைவனிடம் சென்று செயல்படுகிறது.

மனிதப்  பிறவியின் மாறுபட்ட மோகம், பொறாமை, கர்வம், அகம்பாவம் போன்ற கெட்ட இயல்புகளை  மாற்றும் மாபெரும் சக்தி ஜகாத்துக்கு இருக்கிறது.

‘ஆசைகளின் மூட்டை’ என வர்ணிக்கப் படும்  மனிதனிடம் இயல்பாகவே பொருளாதாரத்தில் மோகம் இருக்கின்றது. பொருளாதாரத்தைத் தேடி, திரட்டி அதைப் பார்த்து மகிழ்வடையும் மனநிலை காணப்படுகின்றது. தொடர்ந்து நியமப்படி ஜகாத்  வழங்கிவரும் ஒருவனிடம், பொருளாதாரத்தின் மீதான வெறித்தனம் தணிந்து அதிலே ஓரளவு தாராளத்தன்மை ஏற்படும். இது ஏற்பட்டு விட்டால் நியாயமான முறையில் பணம் திரட்டும் பக்குவம் ஏற்பட்டுவிடும். நீதியையும் நேர்மையையும் நெறிப்படுத்தும் மாபெரும் சக்தி பெற்றது ஜகாத்.

தான் தேடிய செல்வத்தை, தான் கூட அனுபவிக்காமல், அதனைப் பார்த்துப் பார்த்து ரசிக்கும் தன்மை பலரிடம் காணப்படுகின்றது. தனக்கே செலவழிக்காதவன் பிறருக்கு எப்படிக் கொடுப்பான்? இறைவனின் ஆணையை ஏற்று, இந்தக் கட்டாய தர்மத்தைச் செய்பவனிடம் கஞ்சத்தனம் விடுபட்டுவிடும். அதன் பின் அவன் தாராளத் தன்மையுடன் உபரியான தர்மங்களைச் செய்பவனாக மாறிவிடுவான். கஞ்சத்தனம் இஸ்லாத்தில் கண்டிக்கப்பட்ட குற்றமாகும்.

தனக்குக் கிடைத்தது அடுத்தவனுக்குக் கிடைத்து விடக்கூடாது, அல்லது அடுத்தவனுக்குக் கிடைத்தது அவனிடமிருந்து அழிந்துவிட வேண்டும்என்ற உணர்வே பொறாமையாகும்.  ஜகாத்  கொடுப்பவன் தன்னைப் போல் அடுத்தவனும் பொருளாதார முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று விரும்புவதால் அவனிடமிருந்து இயல்பாகவே பொறாமைக் குணம் பாதியிலேயே கழன்றுபோய் விடுகிறது.  ஏழைகள்கூட செல்வந்தர்கள் மீது பொறாமை கொள்ளலாம். அதே செல்வந்தர்கள் ஜகாத்  மூலம் தமக்கு உதவும் போது தமக்கு உதவுபவர்கள் மீது அவர்களுக்கு பொறாமை ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே, ஜகாத் கொடுப்பவர், எடுப்பவர் இருவரிடமும் பொறாமை என்ற தீய குணம் ஏற்படுவதைத் தவிர்க்கின்றது.


சிலரிடம் பெருமை, கர்வம் என்ற தீய குணம் இருக்கலாம். தன்னைப் போல அடுத்தவனும் உயர்வடைவதை, கர்வம் கொண்டவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஆனால், ஜகாத்   செல்வந்தர்களிடம் இந்த கர்வ உணர்வை ஒழிக்கின்றது. ஏழைகளும் செல்வந்த நிலையை அடைவதை விரும்புபவனிடம் கர்வம் அற்றுப்போகும். பொது நல உணர்வு மேலோங்கும்.

பணம்படைத்தவர்களில் பலர்  சமூக உணர்வு அற்றவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் ஜகாத் வழங்குபவர்களாக மாறும் போது சமூகத்தில் நலிவடைந்தவர்களின் வாழ்க்கை நிலவரத்தைப் புரிந்துகொள்ளவும், அவர்கள் மீது அக்கறை  காட்டவும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இவர்கள் ஏழைகளின் மீது  அக்கறை செலுத்தும் போது,  இயல்பாக சமூக உணர்வு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகின்றது. இவ்வாறு நோக்கும் போது ஜகாத் பல்வேறு விதத்திலும் மனித மனங்களைத் தூய்மைப்படுத்தி நல்ல மாற்றங்களை                       விளை விக்கின்றது.

உலக சரித்திரத்தில் பொருளாதார சித்தாந்தங்களில் இன்றுவரை பேசப்படும் ஒரு வார்த்தை வர்க்க பேதம் என்பதாகும். செல்வம் ஒரே இடத்தில் குவிவதால் ஒரு புறம்  பணக்கார வர்க்கமும் , அவர்களின் செல்வத்தின் குவியலுக்குக் காரணியாகத்  திகழ்கிற - காலத்துக்கும்  பஞ்ச்சையாக, பராரியாக யாரிடமும் எதுவும் கேட்கமுடியாத ஊமையாக  பாட்டாளி வர்க்கமும் அமைந்துவிட்டதால் - செல்வத்தைப் பகிர்வதற்கு ஆன்மீக ரீதியாக அன்பு முறையில் முறைகள் சொல்லப் படாததால் - வழிகள் வகுக்கப் படாததால் செங்குழம்பு இரத்தம் சிந்தப்  பட்ட  வரலாறுகளைப் படித்து இருக்கிறோம். அத்துடன் நேற்றைக்குப் பணக்காரன் இன்றைக்குப் பிச்சைக்காரன் ஆகும்படி அவனது செல்வங்கள் வன்முறையால் பிடுங்கப் படும் வரலாறுகளை ஜகாத் தடுத்து நிறுத்துகிறது. ஒரு ஆன்மீக உடன்பாட்டில் –இறையச்சத்தில்-  ஏழைகளுக்கு,  அவர்களுக்குரிய செல்வம் பணக்காரர்களால் பாசத்துடன் பந்திவைத்துப் பரிமாறப் படுகிறது.  அரசியல் சரித்திரத்தில் ஆன்மீக மேம்பாட்டில் அமைதியை  தழைக்கச் செய்யும் அருமருந்தே ஜகாத்.

இறைமறையிலும் நபி மொழியிலும் வலியுறுத்திக் கூறப்  படுகிற ஜகாத்துடன் நவீனப் பொருளாதாரத்தை ஒப்பிட்டுக் காட்டினால் ஜகாத்தின் சிறப்பு இன்னும் புலப்படும்.

இன்றைக்கும் வளரும் நாடான நமது இந்தியாவில் நக்சலைட்டுகள் என்றொரு இயக்கம் உருவாகி வெறியாட்டம் போடுவதன் பின்னணியில் வறுமையும் வேலை இல்லாத் திண்டாட்டமும் இருப்பதை யாரும் மறுக்க இயலாது. ஏழைகளின்பால்               இறக்கமற்றவர்களின் செல்வக் குவிப்பு - தனக்கே எல்லாம் வேண்டும் என்கிற சுயநலப் போக்கு  காடுகளில் மலைகளில் பல ஏழை இளைஞர்களை நெஞ்சில் பொறாமையுடனும்  கையில் துப்பாக்கிகளுடன் வன்முறை வெறியாட்டங்களுக்கு வித்திட்டு வைத்திருக்கிறது. பணக்காரர்கள் இரக்கமற்ற பாவிகளாக இருப்பதால் இல்லாதவர்களின் நெஞ்சில் அவர்களின் மேல் ஏற்படும் பொறாமைத் தீ  அமைதியான  வாழ்வுக்கு அங்கங்கே சாவுமணி அடித்துக் கொண்டே இருக்கிறது. ஜகாத்தின் சட்டங்கள் அமுலில் இருக்கும் நாடுகளில் - ஜகாத் வழங்கப் படும் சமுதாயத்தில் பணக்காரர்களின் மேல ஏழைகளுக்கு பொறாமைக்கு பதிலாக மரியாதை ஏற்படுகிறது என்பதே கண்கூடான காட்சி. ஜகாத் அரசாளும் பிரதேசங்களில் ஆண்டான் அடிமை வர்க்க பேதங்கள் அடிபட்டுப் போகின்றன. ஏழைகளையும் பணக்காரர்களாக்கும் இறைவனின் வித்தை இது . பணக்காரர்களை நன்மை செய்யத்தூண்டும் நற்பணி மன்றம் இது.

நவீனப் பொருளாதாரத்தில் வரிவிதிப்புக் கொள்கைகளை சில முறைகள் வரையறுக்கின்றன. இவற்றில் மிகவும் முக்கியமானது 

Keep it simple. The tax system should be as simple as possible, and should minimize gratuitous complexity. The cost of tax compliance is a real cost to society, and complex taxes create perverse incentives to shelter and disguise legitimately earned income.  என்பதாகும் . அதாவது, எந்த ஒரு வரியும் வசூலிப்பதற்கு இலகுவாகவும்  எளிதாகவும்  இருக்க வேண்டும் என்பதே இதன் சாராம்சம். 

இன்றைய அரசுகள் வசூலிக்கும் வரிகள் இந்தத்தன்மையைப்பெற்று  இருக்கின்றனவா என்றால் இல்லை என்ற சொல்ல நேரிடும். வரியை வசூலிக்க அந்த குறிப்பிட்ட வரியால் வரும் வருமானத்தைவிட அதிகம் செலவழிக்க வேண்டி இருக்கிறது. விற்பனை வரிச்சட்டம்- வருமானவரிச்சட்டம்- நிலவரிச்சட்டம்- உள்ளூராட்சிவரிச்சட்டம் –  என்பன போன்ற சட்டங்கள், அவற்றிற்கான தனித்தனி அலுவலகங்கள்- அவற்றிற்கான ஊழியர்கள் என்றெலாம் அளவிடமுடியாத அமைப்புகள் மற்றும் செலவுகளை மேற்கொண்டே அரசுகளால் வரிகளை வசூலிக்க முடிகிறது. இத்தனை ஏற்பாட்டுக்குப் பிறகும் கூட இவற்றில்  பல கள்ளக் கணக்குகள்,  தில்லுமுல்லுகள், செப்பிடுவித்தைகள்,  ஏமாற்றுகள்,  நிலுவைகள் என்று   பலதகிடுதத்தங்கள் வெளிப்படுகின்றன.

இந்தியாவில் வசூலிக்க முடியாத நிலுவையில் உள்ள  வருமான வரிமட்டும் ஒழுங்காக வசூலிக்கப் பட்டால் அதைவைத்து எதிர்காலத்தில் வரியே போடாமல் ஆள முடியுமென்று ஒரு ஆய்வு கூறுகிறது. பலருடைய வரி பாக்கிகளுக்காக அவர்களுடைய இருப்பிடம் உட்பட சொத்துக்கள் ஏலத்துக்கு விடப்படுகின்றன. இருக்கும்போது  நவாப்சாவாக இருந்தவன் இல்லாவிட்டால் பக்கீர்சாவாக ஆகிவிடுகிறான். வரியை  ஏய்ப்பதற்கு தகுந்தபடி கணக்கை சரிக்கட்டுவதற்கே தனித்திறமை பெற்ற ஆடிட்டர்கள் இருக்கிறார்கள். அரசை ஏமாற்றி பதுக்கப் பட்ட பணம் கள்ளப் பணமாக உருவெடுத்து மற்றொரு பொருளாதார சீர்கேட்டின் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. இவ்வளவுக்கும் காரணம் , வரி வசூலிக்கும் முறையும் சரியில்லாமல் இருப்பது மட்டுமல்ல வரிகளின் விகிதமும் உச்சாணியில் ஏறி , ஏமாற்றுவதை  தூண்டிவிடும்வகையில் அதிகமாக இருப்பதுதான்.  

இதற்கு மாறாக இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் ஜகாத் பிரதான  வரியாக விதிக்கப்படுவதாக நாம் கற்பனை பண்ணிப் பார்ப்போம்.  இறையச்சத்தின் அடிப்படையில் அமையும் அந்த சமுதாயத்தில் ஏமாற்று வேலைகளுக்கு வேலை இல்லை. சட்ட நடவடிக்கைகளுக்கு சாத்தியம் இல்லை. இருக்கும் சொத்தை ஏலம் விட அவசியம் இல்லை. தந்து தேவைகள் போக திரளும் செல்வத்தில் மட்டுமே செலுத்துபவர் தரும் சதவீதம் மிகவும் குறைவு என்பதால் செலுத்துபவர்களுக்கும் கஷ்டம் இல்லை; அரசுக்கு வருமானம் திட்டமிட்டபடி வந்து சேரும். ஜகாத் செலுத்துவதும் இறைவணக்கத்தின் ஒரு பகுதி என்று ஆகிவிடுவதால்  இன்முகத்துடன் எல்லோரும் அவரவர் வைத்திருக்கும் செல்வங்களுக்கு ஏற்றபடி தந்துவிடுவார்கள். இறையச்சத்தின் அடிப்படையில் கூடுதலான சதகா என்கிற தர்ம சிந்தனையும் சேர்ந்துகொண்டால் ஜகாத்தும் சதக்காவும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக வறுமை என்னும்  பிசாசின் அடையாளத்தை அடித்து நொறுக்கிவிடும்.  இப்படி ஒரு இனிய சமுதாயம் அமையுமா? 

நவீனப் பொருளாதாரத்தைப் பின்பற்றும் நாடுகள் மாய்ந்து மாய்ந்து தீய்ந்து போவது இரண்டு விஷயங்கள் பற்றித்தான். ஒன்று உள்நாட்டில் வறுமை, மற்றது வெளிநாட்டுக் கடன் அதன் வட்டிமற்றும் அதன் குட்டிகள்.

அரசின் வரி  வருமானம் ஜகாத் மூலம் சரியாக , ஒழுங்காக வருமானால் அரசு வெளிநாடுகளிடம் கடனுக்காக கை ஏந்தவேண்டியது இல்லை. அதற்காக பெரும்தொகையை வருடாவருடம் உலகவங்கிகளுக்கு வட்டியாகக் கட்டிவிட்டு தனது நாட்டு மக்களின் நல்வாழ்வுத்திட்டங்களுக்கு பணமில்லாமல் ஈரச்சாக்கைப் போட்டுப் போர்த்திக் கொண்டு படுக்க வேண்டியது இல்லை.

வளர்ந்து வரும் நாடான இந்தியா தனது வருமானத்தில் 26% த்தை வெளிநாடுகளில் வாங்கிய கடன்களுக்காக அழுது வருகிறது என்று புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. நாட்டில் வாழும் மக்களுக்கு இன்னும் அடிப்படை வசதிகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவை முழுமையாக தரப்படவில்லை. வறுமைக்கோட்டுக்கு கீழே பல கோடிமக்கள். இந்நிலையில் இவ்வளவு பெரும்தொகை வட்டியாகப் போகிறது . இந்த சுமையில் இருந்து மீள வல்லுனர்கள் கூறும் கருத்து வரிகளையும் வரிகளின் நிலுவைகளையும்  வசூல் செய்யுங்கள் என்பதுதான். ஆனால் வரி செலுத்தும் நிலுவைப் பட்டியலில் உள்ளவர்களோ மலை முழுங்கி மகாதேவன்களாக இருக்கின்றனர்.   அரசியலில் வாலாட்டும் தன்மை கொண்டவர்களுக்கு எலும்புத்துண்டுகளைப் போட்டு அவ்வப்போது தப்பித்துக் கொள்கின்றனர்.  இந்த நிலையில் ,

இந்த நிதியாண்டில் மட்டும் இந்தியா தனது மொத்த வெளிநாட்டு கடனான 390.04 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து, 172.35 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். இந்த தொகை இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடனில்  44 சதவீதம் ஆகும். 

உலகம் முழுதும் இத்தகைய நிலைகள் இருக்கின்றன. இப்படிப்பட்ட பொருளாதார சறுக்கல்கள் ஏன் ஏற்படுகின்றன? யாரால் காப்பாற்ற முடியும்? இஸ்லாம் காப்பாற்றும். இஸ்லாமியப் பொருளாதாரம் காப்பாற்றும். காப்பாற்றச் சொல்லி இறைவனை நோக்கி கை ஏந்துவார்களா?

ஜகாத் பற்றிய இறைவனின் வாக்குகள், எச்சரிக்கைகள், நபிமொழிகள், வரலாற்று சம்பவங்கள் ஆகியவற்றை அடுத்து காணலாம்.

வாழு ! வாழவிடு ! ‘’ என்பது கூட ஒரு கவர்ச்சியான கோஷம்தான். ஆங்கிலத்தில் இதை Live ! Let to Live” என்றும் முழங்குவார்கள். ஆனால் இந்தகோஷத்தை ஆராய்ந்து பார்த்தால் ‘நீ வாழ்ந்துகொள் மற்றவரையும் தொல்லை பண்ணாமல்   வாழவிடு’ என்ற பொருளையே தருகிறது. வெளிப்படையாகப் பார்த்தால் நீ வாழ்ந்துகொள் என்பது சுயனலத்தின்பால் பட்டது. அவரவர் தாங்கள் வாழவே முதலில் வழிவகுத்துக் கொள்வார்கள். அதேபோல் மற்றவரை வாழவிடு என்பதும் பிறரை துன்புறுத்தாதே தொல்லை செய்யாதே என்கிற அறவழியை மட்டும் போதித்து ஒதுங்கிவிடுகிறது;  உணர்த்துகிறது. ஆனால் இஸ்லாம் கூறும் ஜகாத் , “வாழு! வாழவிடு! வாழ வை! “ என்று மிகப் பரந்து விரிந்த கருத்தைப் பறை சாற்றுகிறது.  நீ மட்டும் வாழ்ந்தால் போதாது- மற்றவர்களை வாழவிட்டு ஒதுங்கி இருத்தலும் பற்றாது- இல்லாதோர் வாழ நீ உதவி செய்து அவர்களும் வாழ வழி செய்ய வேண்டுமென்ற சமுதாய பொருளாதார ஏற்றத்துக்கு கால்கோள் கல்லிடுகிறது.  

ஒரு கையில் இறைவேதமும் மறு கையில் நபி போதமும் தாங்கி நிற்கும் ஒரு இஸ்லாமியனுக்கு , ஏழைக்கு உதவும் ஈகைத்தன்மையையும் தடம் புரண்டு போனோரைத் தாங்கிப் பிடிக்கும் தத்துவத்தையும் வறியோர்க்கும் வக்கற்றோர்க்கும் வகையற்றோ ருக்கும் வாழ்வளிக்கும் வழிகாட்டுதல்களையும் வழங்கி இருப்பது இஸ்லாம். அந்த வகையில்  இறைவனின் ஜகாத் பற்றிய அறிவுறுத்தல்களையும் பெருமானார் ( ஸல்) அவர்களின்  மணிமொழிகளையும் தொகுத்துத் தரும் முன்பு ஜகாத் பற்றிய இன்னும் தீர்க்கமான திடமான தெளிவான சிந்தனைகளை உள்ளத்தில் இருத்த வேண்டி ஜகாத் மற்றும் சதகா ஆகிய இரண்டு அறச்செயல்களுக்கும் இடையே இருக்கும் சில வேறுபாடுகளை இங்கு முதலில் பட்டியலிடுவது சிறப்பாக இருக்குமெனக் கருதுகிறேன்.  

ஜகாத்
சதகா
ஜகாத் என்பது ஒருவர் தம்முடைய பொருள்களிலிருந்து இஸ்லாமிய ஷரீஅத் வரையறுத்துள்ளபடி குறிப்பிட்ட சிலருக்கு கொடுப்பதன் மூலம் செய்யும் ஒரு இறைவணக்கமாகும்.
சதகா என்பது இஸ்லாமிய ஷரீஅத்தின் படி கடமையாக இல்லாவிட்டாலும் ஒருவர் தம்முடைய பொருள்களிலிருந்து பிறருக்கு கொடுப்பதன் மூலம் செய்யும் ஓர் இறை வணக்கமாகும்.
ஜகாத் என்பது தங்கம், வெள்ளி, பயிர்கள், பழங்கள், வியாபார பொருட்கள், ஒட்டகம், ஆடு, மாடு போன்ற கால் நடைகள் ஆகிய குறிப்பிட்ட பொருட்களுக்காக ஷரீஅத் வரையறுத்துள்ள குறிப்பிட்ட அளவின்படி கொடுக்கப்படுவதாகும்.
சதகா என்பது குறிப்பிட்ட ஒரு பொருள் என்றில்லாமல் ஒருவர் எந்தப் பொருளையும் இறைவழியில் செலவழிப்பதாகும். இதற்கு இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்பது வரையறை இல்லை.
ஜகாத் என்பது ஒருவரின் செல்வம் ஒரு குறிப்பிட்ட அளவை (நிஸாப்) அடைந்து ஒரு ஹிஜ்ரி ஆண்டு பூர்த்தியாகிவிட்டால் அவர் மீது கடமையாகும்.
சதகா என்பதற்கு ஒரு குறிப்பிட்ட விதிமுறைகள் கிடையாது. ஒருவர் எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். 
ஜகாத் என்பது இறைவன் வரையறுத்துள்ள (அத்.9:60) ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு கொடுப்பதாகும். இந்தப் பிரிவினர்களைத் தவிர வேறு யாருக்கும் ஜக்காத்தைக் கொடுப்பதற்கு அனுமதியில்லை.
சதகா என்பது இறைவன் ஜக்காத்துக்காக வரையறுத்துள்ள பிரிவுகள் மட்டுமின்றி பிறருக்கும் கொடுக்கலாம்.
ஜக்காத் கடமையான நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவரது வாரிசுகள் அவருடைய சொத்துக்களை பங்கிடுவதற்கு மற்றும் அவரது மரண சாசனத்தை நிறைவேற்றுவதற்கு முன்னரே கடமையான ஜக்காத்தை இறந்தவரின் சொத்திலிருந்து முதலில் நிறைவேற்ற வேண்டும். 
சதகா என்பதில் அவ்வாறான கடமை எதுவும் இல்லை.
ஜக்காத் கொடுக்காவிட்டால் மறுமையில் தண்டணைகள் உண்டு.
சதகா கொடுத்தால் நன்மைகளைப் பெற்றுத் தருமேயல்லாது கொடுக்காவிட்டால் குற்றமாகாது.

இவையே ஜகத்துக்கும் சதக்காவுக்கும் உள்ள பொதுவான வேறுபாடுகள். ஆனாலும் 

எல்லா நற்செயலும் தர்மமே என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார். (ஆதாரம் : புகாரி). அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

திருமறையின் ஒன்பதாவது அத்தியாயமாகிய அத்தவ்பா வின் அறுபதாவது வசனத்தில்  ஜகாத்தை பெறுவதற்கு தகுதிபடைத்தவர்கள் யார் யார் என்று இறைவன் பட்டியலிட்டுக் காட்டுகிறான்.
  • வறுமையின் கொடுமையில் சிக்கிக் கொண்ட ஏழை முஸ்லிம்கள்.
  • தங்களது வாழ்க்கைத் தேவைகளைத் தேடிக் கொள்வதற்கான வழிவகையில்லாத வசதியற்ற முஸ்லிம்கள்.
  • புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய முஸ்லிம்கள்.
  • எதிரிகளிடம் கைதிகளாகச் சிக்கிக்கொண்ட இஸ்லாமியப் போர்க்கைதிகள். (விடுவிக்கப்பட)
  • அவசரத் தேவைகளின்போது பட்ட கடன்களிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் முஸ்லிம்கள்.
  • இஸ்லாமிய ஆட்சியாளர்களால் ஜகாத்தை வசூலிப்பதற்காக நியமிக்கப்பட்ட முஸ்லிம் பணியாளர்கள் அவர்களுடைய  ஊதியம்.
  • இறைப் பணியில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள், இஸ்லாமிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள், இஸ்லாத்தைக் கற்பதில் ஈடுபட்டுள்ளவர்கள், இஸ்லாமியப் பிரச்சாரப்பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள்.
  • பயணத்தின்போது அந்நிய நாட்டில் அகப்பட்டுக்கொண்டு உதவிகோரும் முஸ்லிம் பயணிகள்.
ஜகாத்துக்கு இறைவன் வழங்கி இருக்கிற தன்மை செல்வத்தை தூய்மைப் படுத்தும் தன்மையாகும். ஜகாத் என்கிற அரபு வார்த்தை,   தூய்மை, வளர்த்தல் என்ற பொருள்களைத் தரும்.

“அவர்களின் செல்வங்களிலிருந்து, தானத்தை வசூல் செய்து (ஜகாத்தை நீர் எடுத்துப் பெற்று ) அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி பரிசுத்தப் படுத்துவீராக! அவர்களை முன்னேரச்செய்வீராக! மேலும் அவர்களுக்காக நல்லருள் வேண்டி பிராத்திப்பீராக! “என்று இறைவன் , பெருமானருக்குக் கட்டளை இடுகிறான். (அத். 9:103)

ஜகாத் கொடுப்பதை தங்களின் வாழ்வின் வழக்கத்தில் கொண்டுவருபவர்களின் வாழ்வு பலவகைகளில் தூய்மைப் படுத்தப் படுகிறது;  பல் வேறுபட்ட தூய்மை நிலையை ஏற்படுத்துகின்றது. முதலாவதாக இறைவன் பெரிதும் வெறுக்கக் கூடிய கருமித்தனத்தில் இருந்து அவர்கள் காப்பாற்றப் படுகிறார்கள். இறைவனின் எச்சரிக்கை இப்படி இருக்கிறது .

“மேலும் உறவினர்கள், அனாதைகள், வறியவர்கள் ஆகியோருடன் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள் . மேலும் உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், பக்கத்திலிருக்கும் நண்பர், வழிப் போக்கர், அடிமைகள் ஆகியோருடன் நயமுடன் நடந்து கொள்ளுங்கள் . திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள் ! வீண் பெருமையிலும் கர்வத்திலும் உழல்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. அவர்கள்தான்  கருமித்தனம்  செய்வதுடன், (பிற) மனிதர்களையும் கருமித்தனம்  செய்யும் படி தூண்டி அல்லாஹ் தன் அருட்கொடையினின்று அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக் கொள்கிறார்கள். அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை நாம் தயார் செய்து  வைத்துள்ளோம் ‘ (4:37).

நான் கஞ்சத்தனத்தை விட்டும் உன்னிடம் பாது காவல் தேடுகின்றேன், என நபி(ஸல்) அவர்களும்  பிரார்த்தனை புரிந்துள்ளார்கள்’ (புகாரி).

இந்த வகையில் உள்ளத்தில் உள்ள கருமித்தனத்தை  நீக்கும் மருந்தாக ஜகாத் அமைந்துள்ளது.

அடுத்து ஜகாத் செல்வத்தை வளர்க்கும் அருளாதாரம் அடங்கிய பொருளாதாரத் தன்மை கொண்டதென்று இறைவன் குறிப்பிடுகிறான்.  இதனை


“அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான். இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துக்களைக் கொண்டு) பெருகச் செய்வான். (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (அத். 2:276)

என்ற வசனம் உணர்த்துகின்றது.

இறைவன் மனிதர்களுக்குத் திறந்து கொடுத்திருக்கிற நனமைகளுக்கான சேமிப்புக் கணக்கில் ஜகாத் ஒரு மறுமைக்கான மங்காத சேமிப்பு என்பதை 

“இன்னும், தொழுகையை முறையாகக் கடைபிடித்தும் ஜகாத்தைக் கொடுத்தும் வாருங்கள். ஏனெனில், உங்களின் மறுமை நலனுக்காக நற்செயல் எதையும் நீங்கள் சம்பாதித்து முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை எல்லாம் உற்று நோக்கி யவனாகவே இருக்கிறான்’ (அத். 2:110).  என்று திருமறை சுட்டிக் காட்டுகிறது.

மேலும் பெருமானார் ( ஸல்) அவர்களிடம்  ஒரு முறை  ஒரு முழு ஆடு சமைத்த  நிலையில் தரப்பட்டது. அதை ஆயிஷா ( ரலி) அவர்களிடம் கொடுத்த பெருமானார் ( ஸல்) அவர்கள் இதனை வரியோர்க்கு வழங்குங்கள் என்று சொல்லி வெளியே சென்று விட்டார்கள். சற்று நேரம் கழித்து வந்த பெருமானார் ( ஸல்) அவர்கள் ஆயிஷா ( ரலி) அவர்களை நோக்கி தான் கொடுத்துச்சென்ற ஆட்டுக் கறியில் மிச்சம் இருக்கிறதா என்று கேட்டபோது ஒரு தொடைக் கறி மிச்சம் இருப்பதாக பதில் உரைத்தார்கள். அப்போது பெருமானார் ( ஸல் ) அவர்கள், “ நான் உங்களிடம் தந்து சென்றதில் எவ்வளவை நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுத்தீர்களோ அதுதான் நம்முடையது. நம் வீட்டில் மிச்சம் இருப்பது மற்றவர்களுக்கு உரியது “ என்று கூறினார்களாம். அதாவது வெளியே தர்மமாக கொடுக்கப் பட்டது நம்முடைய நன்மைக் கணக்கில் சேரும் என்பது இதன் பொருள். ஆகவே பிறருக்குக் கொடுப்பது    நம்முடைய கணக்கில் இறைவனின் பேரேட்டில் வரவு வைக்கப் படும்.

மேலும் ஜகாத் கொடுப்பவர்கள் தங்களுடைய மறுமை வாழ்வு என்ன ஆகுமோ என்கிற அச்சம் கொள்ளத்தேவையில்லை என்பதை இறைவன் இவ்வாறு உறுதியளிக்கிறான்.

“எவர்கள் இறை நம்பிக்கை கொண்டு, நற்பணிகள் ஆற்றி தொழுகையையும் நிலை நாட்டி, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ அவர்களுக்கு உரிய கூலி நிச்சயமாக அவர்களுடைய அதிபதியிடம் உண்டு . அவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை; அவர்கள் துயரப் படவும் மாட்டார்கள்.”   (அத் . 2:277).

அடுத்து தர்மம் தலை காக்கும் என்கிற அடிப்படையில் இறைவன் வழங்கும் தண்டனையிலிருந்து பாதுகாப்புத் தரும் கவசமாக ஜகாத் திகழும் என்பதை

“நான் நாடுகிறவர்களுக்கு தண்டனை அளிப்பேன் . ஆயினும் என்னுடைய அருள் அனைத்தையும் சூழ்ந்து இருக்கிறது . எனவே எவர்கள்  இறைவனுக்கு அஞ்சுகிறார்களோ மேலும் ஜகாத்தையும் அளிக்கின்றார்களோ மேலும் என்னுடைய வசனங்களையும் நம்புகிறார்களோ அவர்களுக்கு நான் அந்த அருளை உரித்தாக்குவேன் என்று (அல்லாஹ்) மூஸா நபி ( ஸல்) அவர்களுக்கு பதிலுரைத்தான். (7:156).

என்ற வசனம் இதனை உணர்த்து கின்றது. மேலும் நபி  மொழியோ

“செல்வந்தர்கள் தமது செல்வங்களுக்குரிய  ஜகாத்தை வழங்காவிட்டால், வானத்தில் இருந்து பொழியும் மழையை விட்டும் அவர்கள் தடுக்கப்படுவார்கள்”  என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி), நூல் : இப்னு மாஜா

இறைவனின் கட்டளைப்படி ஜகாத் தொடர்ந்து கொடுத்து வருபவர்களுக்கு இறைவனின் அருள் என்றும் கிடைத்துக் கொண்டிருக்குமென்பதையும், அல்லாஹ்வின் அருளைப் பெற்றவரால் தான் சுவனம் செல்ல முடியும். அல்லாஹ்வின் அருளைப் பெற ஜகாத் ஒரு சிறந்த வழியாகும் என்பதையும் .

இறை நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர்  உற்ற துணைவர்களாக  இருக்கின்றனர். அவர்கள் நன்மை புரியுமாறு ஏவுகிறார்கள். தீமையிலிருந்து தடுக்கிறார்கள்.  தொழுகையை நிலைநாட்டுகிறார்கள்.  ஜகாத்தை முறையாகக் கொடுத்து வருகிறார்கள். அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கீழ்ப்படுகிறார்கள். அத்தகையோர் மீதுதான் அல்லாஹ்வின் கருணை பொழிந்து கொண்டு இருக்கும். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.  நிலையான சுவனங்களில் தூயமையான இல்லங்களை அல்லாஹ்    வாக்களித்துள்ளான்  (அத். 9:71).

உலகில் யாரிடத்தில் கிடைக்கும் உதவிகளிலும் உயர்ந்த உதவி படைத்த அல்லாஹ் வாக் களிக்கின்ற  உதவியாகும். இதனை ஜகாத்தை பேணுவோர்க்கு அல்லாஹ் வாக்களிக்கின்றான். கீழ்க்காணும் இறைவேதத்தின் மொழிகள் , தொழுகையும் ஜகாத்தும் இருந்தால் அல்லாஹ்வின் அண்மை  கிட்டும் என்பதை உணர்த்துகின்றன.

“நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன். நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஜகாத்தும் கொடுத்து, என் தூதர்களை விசுவாசித்து, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்கு அழகிய கடனும் கொடுப்பீர்களானால் நிச்சயமாக நான் உங்கள் பாவங்களை மன்னித்து சதா நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளில் உங்களை நுழைய வைப்பேன்”  (அத். 5:12)

அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு நிச்சயமாக  அல்லாஹ்வும் உதவி செய்வான்’ (அத். 22:40).

அடுத்து சமுதாயத்தில் சகோதரத்துவத்தையும் ஒருவருக்கொருவர் அன்பையும் அரவணைப்பையும்  வளர்ப்பதில் ஜகாத் முன்னிற்கும் சக்தியாகும் . இதை இந்த இறைமறையின்  வரிகள் பறைசாற்றுகின்றன.

“ஆயினும், அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைபிடித்து, ஸகாத்தையும் (முறையாகக்) கொடுத்து           வருவார்களா னால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களே! நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம்” (அத். 9:11).

இவ்வசனம், ஜகாத்தை வழங்க மறுப்பவர்கள் இறைமறுப்பாளர்கள்  என்ற கருத்தைத் தருகின்றது.

“அவர்கள்தாம் ஜகாத்தைக் கொடுக்காதவர்கள். மறுமையை நிராகரிப்பவர்களும் அவர்களே!” (அத். 41:7).

என்ற வசனமும் இதை உறுதி செய்கின்றது.

இறைவனின் கட்டளைகளுக்கு அடிபணிந்து மறுமையை நம்பி, இறைத்தூதர்களை விசுவாசித்து, தொழுகையை கடைப் பிடித்து, ஜகாத்தை நிறைவேற்றி வருபவர்களே இவ்வுலக வாழ்வில் வெற்றியாளர்கள் அவர்களுக்கே மறுமைவாழ்வும் இறைவனிடத்தில் உறுதி செய்யப் பட்டு இருக்கிறது என்பதற்கு இறைவன் தரும் உத்திரவாத வரிகள்

“இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள். மேலும், இவர்களே வெற்றியாளர்கள்” (அத். 2:5).

ஆகவே ஜகாத் பற்றிய மேற்கண்ட தொகுக்கப் பட்ட இறை மொழிகளின் பிரகாரம் ஜகாத் செல்வத்தை தூய்மைப் படுத்துகிறது; செல்வத்தை வளர்க்கிறது;  கருமித்தனத்தில் இருந்து காப்பாற்றுகிறது ;  சகோதரத்துவத்தை வளர்க்கிறது ;  மறுமை வாழ்வின் நல்ல இடத்தை உறுதி செய்கிறது; நிராகரிப்பிலிருந்து விடுவிக்கிறது ;  இறைவனின் அருள் மழையையும் பெரும் கருணையையும் நம் மீது      பொழியச்செய்கிறது என  உணரலாம்.

ஜகாத்தை இறைப் பொருத்தத்திற்கேற்ப எப்படிப் பங்கீடு செய்வது? என்று ஒரு கேள்வி வந்திருக்கிறது. இதற்குள் பல கருத்துக்கள் விவாதிக்க வேண்டியுள்ளன. எனவே
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
இபுராஹீம் அன்சாரி

மதீனா ஒப்பந்தம் 0

அதிரைநிருபர் பதிப்பகம் | June 26, 2015 | ,

::::: தொடர் - 28 :::::

எல்லையில்லா அருளும் அன்பும் கொண்ட அல்லாஹ்வின் பெயர் கூறி, இந்த ஒப்பந்தத்தைத் தொடங்குகின்றோம்.  இந்த ஒற்றுமைக்கான ஆவணம், உம்மி நபியாகிய முஹம்மதால் உருவாக்கப்பெற்றது.  இந்த ஒப்பந்தமானது, மக்காவிலிருந்து புலம் பெயர்ந்து மதீனாவுக்கு வந்துள்ளவர்களுக்கும், மதீனாவில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாத அரபுகளுக்கும், இந்தப் புனிதப் பதியில் வந்து பல்லாண்டுகளாக வாழ்ந்துவரும் யூதர்களுக்கும் இடையேயான நல்லாட்சி ஒப்பந்தமாகும்.  இங்கு வாழும் மக்கள் பல்வேறுபட்ட இனத்தவர்களாயினும், இது அவர்கள் அனைவருக்குமான அமைதிக்குரிய ஒப்பந்தமாகும்.
  • மக்காவிலிருந்து ‘ஹிஜ்ரத்’ செய்து மதீனாவுக்கு வந்த ‘முஹாஜிர்’ சகோதரர்கள், இங்குள்ள ‘அன்ஸார்’களுடன், ஒரே இனம் என்ற உணர்விலும், இஸ்லாமிய சகோதரத்துவ அடிப்படையிலும் சேர்ந்து வாழவேண்டும்.
  • மக்காவிலிருந்து ‘ஹிஜ்ரத்’ செய்து மதீனாவுக்கு வந்த குரைஷி ‘முஹாஜிர்’கள் தாம் முன்னதாக மக்காவில் கடைப்பிடித்துவந்த கொலைக்குப் பகரமான பிணைத்தொகை கொடுக்கும் வழக்கத்தை இங்கும் தொடர வேண்டும்.
  • பிணைத்தொகை கொடுக்க முடியாத பொருளாதார வலிமையற்ற உறவினருடன் இணக்கமாகவும் இரக்கமாகவும் வாழவேண்டும்.
  • மதீனாவில் உள்ள ‘பனூ அவ்ஃப்’ முதலான ‘அன்ஸார்’கள் தற்போதுவரை நடைமுறையில் உள்ள வழக்கங்களை பலவீனமான மற்ற இனத்தவர்களோடு பரிவுடனும் சகோதரத்துவ உணர்வுடனும் தொடர வேண்டும்.
  • மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த முஸ்லிம்கள், பலவீனமான தமது இனத்தவர்களுக்காகப் பணயத் தொகை அல்லது கொலைக்குரிய தண்டனைப் பணம் போன்றவற்றைக் கொடுத்துதவி, மக்கத்தவர்களின் பிடியிலிருந்து விடுபடச் செய்யவேண்டும்.
  • அடிமைத் தளையிலிருந்து விடுபட்டு, சுதந்திரமான வாழ்க்கையைப் பெற்ற எவருடனும் முஸ்லிம்கள் கூட்டு சேர்ந்து, அவ்வினத்தவருக்கு எதிராகச் செயல்படக் கூடாது.
  • உண்மையான இறைநம்பிக்கை கொண்டவர்கள், நீதி நேர்மைக்கு எதிராகத் தம் இனத்தவருடன் கூட்டு சேரக் கூடாது. அத்தகையவர்கள் முஸ்லிம்களாக மாறிவிட்டிருந்தாலும் சரியே.
  • முஸ்லிம்கள் தமது இனத்தைச் சேர்ந்த முஸ்லிமல்லாதவருக்கு ஆதரவாக, எந்த முஸ்லிமையும் கொலை செய்வதில் கூட்டு சேரக் கூடாது.
  • முஸ்லிம்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்களே.  நீதி செலுத்துபவன் அல்லாஹ் ஒருவன்தான் என்ற அடிப்படையில், தண்டனையோ மன்னிப்போ எதுவாயினும், அவனிடத்திலிருந்தே வரவேண்டும் என்று நம்பவேண்டும்.
  • யூத இனத்தவர் நம்மைப் பின்பற்றுவாராயின், அவர் நம்முடைய உதவிகள் மற்றும் சமத்துவம் ஆகியவற்றைப் பெறுவார்.  அவர் பாரபட்சமாக நடத்தப்பட மாட்டார்; அல்லது அவருக்கு எதிராக, அவருடைய எதிரிகளுக்கு உதவியும் செய்யப்பட மாட்டாது.
  • அல்லாஹ்வின் பாதையில் புனிதப் போர் நடக்கும்போது, எந்த இறைநம்பிக்கையா ளருக்கும் சார்பாக, அவருடைய இனத்தவரைத் தனிமைப் படுத்திவிட்டு, எதிரிகளுடன் சமாதான உடன்படிக்கை செய்யப்பட மாட்டாது.  எங்கும் சமநீதிதான் நிகழ்வுறும்.
  • போருக்குச் செல்லும்போது ஏறிச் செல்ல வாகனப் பற்றாக்குறை ஏற்பட்டால், இறைநம்பிக்கையாளர்கள் தமக்குள் வாகனத்தை மாறி மாறிப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
  • இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடும்போது, குருதி சிந்த நேர்ந்தால், அதற்குக் காரணமானவரைப் பழி வாங்கலாம்.
  • இறைப் பற்று மிகுந்த இறைநம்பிக்கையாளர் எவரும் உதவி வழங்கப்பட்டு, நேர்வழியில் நடாத்தப்படுவார். 
  • மக்கத்துக் குறைஷியருக்கும் அவருடைய சொத்துக்கும் பாதுகாவலர் என்ற தகுதியில் வரும் இணைவைப்பாளர் எவரும் உதவி செய்யப்பட மாட்டார். அல்லது, இறைநம்பிக்கையாளர் எவருடனும் கூட்டு சேர்ந்து பரிந்துரை கூறவும் அனுமதிக்கப்பட மாட்டார்.  
  • உண்மையில் வரம்பு மீறி, எவருடைய இறப்பிற்காவது காரணமானவர், அவருக்குத் தண்டனை கொடுக்க உரிமைப்பட்டவர் ஆறுதல் அடையும்வரை,  தண்டனைக்கு ஆளாவார்.       
  • இறைநம்பிக்கையாளர் ஒருவரின் இறப்பிற்குக் காரணமான எவரும், தண்டனைக்கு உரியவர் ஆவார். அதற்காகப் பழிவாங்குவது முஸ்லிம்கள் அனைவர் மீதும் கடமையாகும்.
  • அல்லாஹ்வின் மீதும், இறுதித் தீர்ப்பு நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட எந்த இறைநம்பிக்கையாளரும், இந்த ஒற்றுமை ஆவணத்திற்கு எதிராக, தீங்கிழைத்த எவருக்கும் அடைக்கலம் கொடுக்கக் கூடாது.  அவ்வாறு செய்பவர், இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ்வின் கோபத்திற்கும் சாபத்திற்கும் தண்டனைக்கும் ஆளாவார்.  அதற்குப் பகரமாக எவ்வித நஷ்ட ஈடும், எந்தப் பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 
  • எவருக்காவது இந்த ஒற்றுமை ஆவணத்தின் ஏதேனும் பகுதியை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அப்போது அவர் அல்லாஹ்வின் வேதத்தையும் நபியின் தீர்ப்பையும் நாடுவார்.
  • முஸ்லிம்களும் யூதர்களும் இறைமறுப்பாளர் மற்றும் இணைவைப்பாளர்களோடு போரில் ஈடுபட்டிருக்கும்போதெல்லாம், அப்போருக்கான செலவை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்வது போன்றே, யூதர்களும் பணப் பங்களிப்புச் செய்யவேண்டும்.
  • ‘பனி அவ்ஃப்’ யூதப் பிரிவைச் சார்ந்தவர்கள் முஸ்லிம்களுடன் ஒரே இனமாகக் கருதப்படுவர். யூதர்களுக்கு, அவர்களின் மதத்தைப் பின்பற்றுவதும், முஸ்லிம்களுக்கு அவர்களின் மார்க்கத்தைச் சார்ந்திருப்பதும் சாலும்.
  • யூதர்களின் ‘பனூ அவ்ஃபு’க்கு வழங்கப்பட்ட உரிமைகள், மற்ற யூத இனத்தவர்களான ‘பனூ நஜ்ஜார்’, ‘பனில் ஹாரிதா’, ‘பனூ ஸாஇதா’, ‘பனூ ஜுஉஷும்’, ‘பனூ தஅலபா’, ‘ஜுஃப்னா’, ‘பனூ ஷுத்தைபா’ ஆகியோருக்கும் பொருந்தும்.
  • யூத இனத்தவருக்குள்ளேயே பகை ஏற்பட்டு, அவர்களுக்குள் சண்டை நடக்கும் சூழல் உருவானால், முஹம்மத் (ஸல்) அவர்களின் ஒப்புதலின்றிப் போர் நடைபெறாது.
  • இனப்போர் மூளும் நிலை வந்தால், அவர்களின் பெண்களையும் சிறார்களையும் பாதுகாப்பதில் முனைப்புக் காட்டவேண்டும்.  இனப்பகையால் யூதர்களோ முஸ்லிம்களோ போருக்குச் செல்லும்போது, அதன் செலவினங்களை அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • போரைத் தவிர்ப்பதற்காக, தீமையைக் களைந்து நன்மையைப் புகுத்தி, அவர்கள் முதலில் தமக்குள் சமாதானப் போதனை செய்ய வேண்டும். 
  • ஓர் இனம் தவறிழைத்தால், அதன் தனி மனிதன் குற்றம் சாட்டப்படக் கூடாது.  பாதிக்கப் பட்டவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்ய வேண்டும்.
  • யாரெல்லாம் இந்த உடன்படிக்கையில் பங்களிப்புச் செய்து இணக்கம் காட்டுவாரோ, அவர்கள் அனைவரும் மதீனாவின் மையப் பகுதியைப் புனிதமாகக் கருதவேண்டும்.
  • அடுத்தடுத்த அண்டை வீட்டார் ஒற்றுமையுடன் இணைந்து வாழவேண்டும்.  பாவம் செய்தும் தொந்தரவு செய்தும், ஒருவருக்கொருவர் பகைவர்களாகிப் போய்விடக் கூடாது.  
  • தன்னுடையது அல்லாத சொத்தில் அதன் உரிமையாளரின் அனுமதியின்றி நுழையக் கூடாது.
  • இவ்வொப்பந்தத்தின்படி, முஸ்லிமாகாத மக்கத்துக் குறைஷிகளும், அவர்களின் உடன்படிக்கையாளர்களும் எவ்விதப் பாதுகாப்பையும் பெற முடியாது.
  • இந்த ஆவணத்தை மதித்து ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்ட ஒவ்வொருவரும், எதிரிகளிடமிருந்து மதீனாவைப் பாதுகாப்பது தம் கடமைகளுள் தலையாயது என்று கருதவேண்டும். 
  • எவருடனாவது பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொள்ள முஸ்லிம்களால் மற்றவர்கள் அழைக்கப்பட்டால், அவர்கள் அதற்குத் தமது முழுமையான ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும்.
  • முஸ்லிம்கள் அல்லாத மற்றவர்கள் இதுபோன்ற அமைதி ஒப்பந்தம் செய்துகொள்ள முஸ்லிம்களை அழைத்தால், போர் முழுமையாக முடிந்துவிட்ட நிலையில், அதற்கு முஸ்லிம்கள் இணங்குவதும் அல்லது இணங்காதிருப்பதும் முஸ்லிம்களின் முடிவைப் பொருத்ததாகும்.
  • எவருடனாவது போர் செய்து வெற்றியைப் பெற்றால், எதிரிகளிடமிருந்து கவர்ந்த போர்க்கருவிகளும் மற்ற உடைமைகளும் அவரவருக்கே சொந்தமாகும்.  இவ்வொப்பந்தமானது, பாவம் மற்றும் அநீதியைப் புரியும் எவருக்கும் பாதுகாப்பைத் தராது. போரில் பங்களிப்புச் செய்பவர்களும், செய்யாமல் தம் வீடுகளில் இருப்பவர்களும் பாதுகாப்பைப் பெறுவார்கள். ஆனால், அநீதியும் பாவமும் செய்பவருக்குப் பாதுகாப்புக் கொடுக்க இயலாது. நல்லவர்களுக்கும், தமது மார்க்கத்தில் பற்றுடையவர்களுக்கும் இவ்வொப்பந்தத்தில் பங்குண்டு.  இது, அல்லாஹ்வின் கருணையும் ஆகும். 

அதிரை அஹ்மது


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு