Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மக்கா ‘மஸ்ஜிதுல் ஹராமில்’ ரமழான் நோன்பு துறப்பு! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | July 25, 2016 | , , ,


இதற்கு முன்பு ‘அதிரை நிருபர்’ தளத்தின் ஓர் இழையில், ‘மதீனாவில் ராமழானும் பெருநாளும்’ எனும் தலைப்பில் ஒரு பதிவு இட்டிருந்தேன்.  இப்போது, உங்களைப் புனித மக்காவுக்கு அழைத்துச் செல்கின்றேன்.

மக்கா ‘ஹரம் ஷரீஃப்’ நிர்வாக அதிகாரியான ஹமூத் அல்-இயாத் அவர்களின் கூற்றுப்படி, ஒவ்வோர் ஆண்டும் ரமழானில் இப்புனிதப் பள்ளியில் நாற்பது லட்சம் மக்கள் தம் நோன்பைத் துறப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்!  நம் கண்கள் வியப்பால் விரிகின்றன!  இது, கடந்த இரண்டாண்டுகளுக்கு முந்தைய செய்தி.  தற்போது எப்படியோ?

எனினும், எனது அனுபவத்தில் கண்ட ‘இஃப்தார்’ எனும் நோன்பு துறக்கும் நிகழ்வைச் சில வரிகளில் தந்து, வாசகர்களின் வியப்பையும் வேட்கையையும் கிளர்ந்தெழச் செய்ய விழைகின்றேன்.

இரவு – பகல் இருபத்து நான்கு மணி நேரமும் தொடர்ந்து நடக்கும் வணக்கம், மக்கத்துக் ‘கஅபா’வை மக்கள் வலம்வரும் வணக்கம் மட்டுமே எனில் மிகைக் கூற்றாகுமோ?  அதுவும், புனித ரமழானில்...?


‘இஃப்தார்’ எனும் நோன்பு துறக்கும் நேரம் நெருங்க நெருங்க, இறைக் காதலர்களின் நடையெல்லாம் புனிதக் ‘கஅபா’வை நோக்கியே.  விடுதிகளில் தங்கியிருப்போர், வீடுகளில் வசிப்போர், ஜித்தா – தாயிஃப் போன்ற அடுத்திருக்கும் நகரங்களிலிருந்து வந்திருப்போர், இன்னும் ரியாத், தம்மாம், புரைதா, தபூக் முதலான தொலைவிலுள்ள நகரங்களிலிருந்து வந்திருப்போர் அனைவரின் நோக்கமும், ‘கஅபாவில் இஃப்தார் செய்யவேண்டும்’ என்பதே.

‘ஹரமுல் மக்கி’ – புனிதக் ‘கஅபா’ – நிர்வாகத்தினரின் முன் அனுமதியைப் பெற்ற உள்ளூர்வாசிகள் தம் வீடுகளிலிருந்து நோன்பு துறப்பதற்கான உணவுப் பொருள்களைக் கொண்டுவரலாம்.  அவை, அவர்களுக்கு மட்டுமா? ضيوف الرحمن   (ழுயூஃபுர் ரஹ்மான்)  எனும் இறைவிருந்தினர்களுக்கும் சேர்த்துத்தான்!

‘கஅபா’ பள்ளியின் மேல் – கீழ் வளாகங்களில் விரிப்புகள் பரப்பப்பட்டு, அவற்றின் மீது மக்கத்தும் மதீனத்து (அஜ்வா, பர்ஹி) மற்றும் தாயிஃப், தபூக், கஸீம் (சுக்கரி), அல்பாஹா, கைபர் முதலான ஊர்களில் விளைந்த இனிமையான பேரீத்தம் பழங்கள் பரப்பப்படுகின்றன.  இல்லை, ‘டன்’ கணக்கில் கொட்டப்படுகின்றன!   

கெட்டித்தயிர், பாலாடைக் கட்டி, ஜூஸ், ரொட்டி முதலான உணவு வகைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.  அல்லாஹ்வின் அடியார்கள் அழுது கண்ணீர் வடித்து, அவனிடத்தில் ‘துஆ’ – இறைஞ்சல் - செய்து கொண்டிருப்பர். அது, தன் அடியார்களின் வேண்டுதல்களை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளும் புண்ணிய நேரம்!

இதே வேளை, இன்னொன்றும் நடந்துகொண்டிருக்கும்.  மதீனாவின் ‘நபிப்பள்ளி’யில் நிகழ்ந்ததல்லவா?  அது போன்ற இழுபறி!  “தஆல், தஆல், தஆல் ஹினா” (வாருங்கள், வாருங்கள், இங்கே வாருங்கள்!”) என்ற கனிவான அழைப்போசைகள்!  அரபுகளின் அன்பழைப்பைத்  தவிர்க்க முடியாத நம்மவர்கள், தமக்காகக் கிடைக்கும் இடங்களில் அமர்ந்து, அவர்களும் ‘துஆ’விலும் இறைநினைவிலும் திளைத்திருப்பார்கள்.

‘அதான்’ (பாங்கு) சொல்லும் ‘முஅத்தின்’ ஒலிப்பானைத் தட்டுகின்றார்.  அதனைத் தொடர்ந்து, “அல்லா.........ஹு அக்பர்!  அல்லா........ஹு அக்பர்!” என்ற அழைப்போசை மக்காவெங்கிலும் எதிரொலிக்கின்றது!

“பிஸ்மில்லாஹ்!  பிஸ்மில்லாஹ்!  பிஸ்மில்லாஹ்!  பிஸ்மில்லாஹ்!”  ‘கஅபா’ பள்ளி முழுவதிலும் இதே ஓசை!  நோன்பாளிகள் விரைவாக நோன்பு துறக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  “நோன்பாளிக்கு மகிழ்வுக்குரிய நேரங்கள் இரண்டு.  ஒன்று, நோன்பு துறக்கும்போது;  மற்றொன்று, அவர் தன் இரட்சகனை (அல்லாஹ்வை மறுமையில்) காணும்போது.”   - ஸஹீஹ் முஸ்லிம் (2120)

‘ஹரம்’ நிர்வாகி ஹமூத் கூறுகின்றார்:  “நோன்பு துறக்கும் நேரத்தில் எதிர்பாராத நிகழ்வுகள் ஏதேனும் நிகழ்ந்தால், நோன்பாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை செய்ய ‘ஆம்புலென்ஸ்’ வண்டிகள் ஆயத்த நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும்.  மேலும், ‘இறைவிருந்தாளி’ (ழுயூஃபுர் ரஹ்மான்)களை இருப்பிடங்களுக்குக் கொண்டுபோய் விடுவதற்காகவும் வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.”

இனி, ஓர் அற்புத நிகழ்வின் பக்கம் வாசகர்களின் கவனத்தைத் திருப்புகின்றேன்.  நோன்பாளிகள் பத்தே நிமிடங்களுக்குள் நோன்பைத் துறந்துவிட்டு, ‘ஜமாஅத்’ எனும் கூட்டுத் தொழுகைக்காக எழுந்துவிடுவார்கள்.  நோன்பு துறப்பு நிகழ்வின்பின் ‘கஅபா’ வளாகத்தில் பரவிக் கிடக்கும் குப்பை கூளங்களை அகற்றுவது எப்படி?  யார் அகற்றுவார்?  அதற்காகவென்றே நீல நிறச் சீருடை அணிந்த துப்புரவுப் பணியாளர்களின் ‘படை’ ஆயத்த நிலையில் வந்து நிற்கும்!  அதோ, மேலே உள்ள படத்தில் பார்க்கின்றீர்கள் அல்லவா?  அவர்கள்தாம்!

‘இப்படை தோற்கில், எப்படி வெல்லும்?’ என்று கூறுவது போன்று, அவர்கள் முடுக்கி விடப்படுவார்கள்.  முதலில், மக்கள் கடந்து செல்லாத அளவுக்குத் ‘தடைப்பட்டி’ நிறுத்தங்கள் அமைக்கப்படும்.  வரிசை வரிசையாகச் சிறு சிறு துப்புரவு வாகனங்கள் வந்து, தண்ணீரையும் உணவுத் துகள்களையும் உறிஞ்சிக்கொள்ளும்.  இவ்வாறு சுற்றிலுமுள்ள குறிப்பிட்ட ஒரு பகுதி தூய்மையாக்கப்பட்டவுடன், அடுத்த பகுதிக்கும் அவ்வாறே.  இப்படி, ‘கஅபா’ வளாகம் முழுவதுமே ஐந்து அல்லது பத்து நமிடங்களுக்குள் தூய்மை செய்யப்பட்டுவிடும்!  

இப்பணியாளர்கள் இயங்கும் விதம்!  ஆகா!  அற்புதம்!  எஞ்சியிருக்கும் தண்ணீரையும் பொருள்களையும் நீலச் சீருடைப் பணியாளர்கள் வழித்தெடுக்கும் விதம்!  Roller Scatting கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  பார்த்திருக்கிறீர்களா?  அதே போன்று, எஞ்சிய தண்ணீரையும் துகள்களையும் தம்மிடமுள்ள wiper (வழிப்பான்)களைக் கொண்டு வழித்துக் கொண்டுபோய், ‘கஅபா’ வளாகத்தின் சுற்று ஓரங்களில் தள்ளிவிடுவார்கள்.

இவர்கள் இயங்கும் விதம், மிக அற்புதமானது!  இவர்கள் பயிற்சி கொடுக்கப்பட்டார்களா?  அல்லது, தமது பல்லாண்டுப் பட்டறிவின் விளைவா? தெரியவில்லை! Spotless clean! ‘கின்னஸ் ரிக்கார்ட்’ பதிவுக்குப் பொருத்தமானது!  

இந்தப் பணியின் ஒரு சிறு பகுதியைத்தான் இணைப்புப் படங்களில் நீங்கள் பார்க்கின்றீர்கள்!  நேரில் போய்த்தான் பாருங்களேன், இந்த ரமழானில்!  இன்ஷா அல்லாஹ்...!       

அதிரைஅஹ்மது

3 Responses So Far:

Unknown said...

எனக்கு இந்த ரமலான் (பிறை 1ல் ) உம்ரா செய்வதற்கு வாய்ப்பை அல்லாஹ் தந்திருக்கின்றான்

( அனைவரின் ) உம்ராவும் கபூலாக அதிரை நிருபர் குழு வின் துஆவை எதிர் பார்த்தவனாக!

அபு ஆசிப்

sabeer.abushahruk said...

புனித இடத்தில் நோன்பு துறக்கும் அற்புதமான தருணங்களைப் பற்றிய அழகான வர்ணனை.

அப்துல்மாலிக் said...

நடந்தவை பார்த்தவைகள் அனைத்தையும் எழுத்தின்மூலம் கண்முன்னே கொண்டுவந்துட்டீங்க காக்கா...

வல்ல இறைவன் நம் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் அந்த நல்பாக்கியத்தை கொடுப்பானாகவும் ஆமீன்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு