Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நபிமணியும் நகைச்சுவையும் - ஃபேஸ்புக்கில் மதிப்புரை 6

அதிரைநிருபர் பதிப்பகம் | June 20, 2015 | , , ,

ஜனரஞ்சக இணையதளமான அதிரை நிருபர்.இன் தளத்தின் இரண்டாவது வெளியீடான நபிமணியும் நகைச்சுவையும் புத்தகத்தை புத்தக வெளியீடுக்கு முன்பே நான் கேட்டுக்கொண்டதன் பேரில் எனக்கு சென்ற வாரம் அனுப்பி வைத்திருந்தனர்.

அதிரை நிருபர் தளத்தை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு சகோ இக்பால் சாலிஹ் நன்கு பரிச்சயமாகியிருக்கக்கூடும். எனக்கு இப்புத்தகத்தில் தான் அவர் அறிமுகமானார். அதனால் தான் ஒருவித எதிர்பார்ப்பு இருந்துக்கொண்டே இருந்தது. ஒரு பத்து பதினைந்து ஹதீஸ்கள், அதை வைத்து சம்பவங்கள் தொகுத்து முடிஞ்சளவு பக்கத்தை நீட்டினாலும் 50-க்குள்ள வந்திருக்கும் சிறிய புத்தகம் என்ற அளவிலேயே கற்பனைக்குள் அடக்கி வைத்திருந்தது எவ்வளவு தவறென்று புத்தகத்தின் கனத்தை பார்த்த பின் தான் தெரிந்தது. அதுவே புத்தகத்தை வாசிக்கவும் வைத்தது. "ம்ம்ம் என்னத்தான் சொல்லியிருப்பார்?"

அவர் புத்தகத்தில் என்னன்ன சொல்லியிருப்பார் என்பதை விட அதனை சொன்ன விதம் தான் தொடர் வாசித்தல் உணர்வை கட்டாயமாக்கியது. ஓர் உதாரணம் , நபி ஸல் அவர்களை குறிப்பிட வந்த இடங்களில் எல்லாம் ஆசிரியரின் அழகுதமிழ் வர்ணனை புத்தக வாசிப்பின் சளிப்பை களையச்செய்தது. நபிகளாரை மட்டுமல்ல, நபர்களை மட்டுமல்ல, ஒவ்வொரு வரிகளையும் பார்த்து பார்த்து தான் செதுக்கியிருக்கிறார். ஒவ்வொரு சம்பவங்களையும் ரசித்து ரசித்து எழுதி ரசிக்க ரசிக்க வாசிக்க வைக்கிறார். இது புத்தகத்தின் முதல் வெற்றி என்றே சொல்வேன்.

நபி ஸல் அவர்களின் நகைச்சுவை எவ்வாறாக அமைந்தது என்பதில் இருந்து தொடங்குகிறது புத்தகம். அப்போது தான் தெரிந்தது இப்புத்தகம் நகைச்சுவை சம்பவங்களை அடுக்கி வைத்து நிரப்பப்பட்ட புத்தகமல்ல.. மாறாக ஒரு சாம்ராஜ்யத்தின் தலைவர், அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்ட இறைத்தூதர், இறைவனின் வாக்குகளை மக்களுக்கு எடுத்துரைத்து நேர்வழிகாட்டும் ஆன்மீகத்தலைவர் எனும் அந்தஸ்தை பெற்றவரின் இயல்பான வாழ்வு எவ்வளவு ரசனையானது என்பதையும் அவரின் நகைச்சுவை உணர்வும் அதனுடன் இணைந்தே இருந்த அவரின் செயல்களையும் விவரிக்கும் புத்தகம் இது. அதற்காக சொல்லப்பட்ட ஒவ்வொரு விஷயமும் ஆசிரியரின் தேடலின் துல்லியத்தை மௌனமாக சொல்லிக்கொண்டே வந்தது.

ஆயிஷ், ஹுமைரா (சிகப்பழகே) என தன் மனைவியின் மீது அன்பை பொழிந்த நிகழ்வுகளாகட்டும்,

மனைவியுடன் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டதாக இருக்கட்டும்

ஆயிஷா ரலி சவ்தா ரலிக்கு உணவு ஊட்டிவிட கை திசை மாறி சவ்தா ரலியின் முகத்தை உணவாக்கிய போது ஆயிஷா ரலியின் கையை பிடித்துக்கொண்ட நபி ஸல், சவ்தாவை நோக்கி ஆயிஷா முகத்தினை அப்படி செய்யும் படி சொல்லி அந்த தருணத்தை மூவருக்கும் இனிமையாக்கியதாகட்டும்..

சுப்ஹானல்லாஹ்... வாழ்வின் நிகழ்வுகளை விவரித்து நபிகளாரின் உண்மை குணாதிசயத்தை இயம்பியது. மார்க்கம் மார்க்கம் என்று கூறிக்கொண்டு எந்நேரமும் கஞ்சி போட்ட உள்ளத்தை கொண்டு விரைப்பாகவே நடந்துக்கொள்பவர்களுக்கு இந்த புத்தகத்தில் தொகுக்கப்பட்ட விஷயங்கள் சம்மட்டி அடி!

ரொம்பவே அலைய விடாமல் , ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் ஆதாரங்கள் காட்டப்பட்டன. ஒவ்வொரு சம்பவத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்கச்செய்தது. ஹதீஸ் கிரகந்தங்களிலிருந்து மட்டுமல்லாமல் இன்னும் பல பத்திரிக்கைகள், புத்தகங்கள், மேற்கோள்கள் என பலவற்றையும் சேர்த்து கொடுத்துள்ளார்.

சிரிப்பதையும் நகைச்சுவையாய் பேசுவதையும் கூட ஹராம் என்ற அளவில் நினைக்கும் மார்க்கப்பற்று கொண்ட சராசரி மனிதர்களாகிய நமக்கான வழிகாட்டியாம் மாமனிதர் நபி ஸல் அவர்களின் வாழ்க்கையும் அதில் அவர் புகுத்திய இனிமையும் நமக்கு முன்மாதிரி. இதனை பலர் அறியாததால் தான் கரார் பேர்வழியாகவே உலாவுகிறார்கள். இப்புத்தகம் அனைவரும் வாசிக்க வேண்டியது. மட்டுமல்லாமல் படிப்பினை பெறக்கூடியது. வாளால் பரப்பட்ட மதம் என்றும் ரத்தக்கறை படிந்த மார்க்கம் என்றும் இஸ்லாத்தையும் அதன் தலைவரையும் வசைபாடுபவர்களுக்கு வாசிக்க கொடுக்க வேண்டிய புத்தகம். "பார் எங்கள் உத்தம நபியின் கருணையை, பார் எங்கள் கண்மணி நபி ஸல் அவர்களின் இனிய குணத்தை, பார் எங்கள் உயிரினும் மேலான மாமனிதரின் சுவாரசியமான வாழ்வை"

அருமையான புத்தகத்தை அறிமுகப்படுத்தியதற்கும் கிடைக்கச்செய்ததற்கும் சகோ AbuIbrahim Nainathambi அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். ஜஸக்கல்லஹ் ஹைர். 5000 பிரதிகள், அனைத்தும் விற்று விரைவில் அடுத்த எடிசன் வெளியிட என் பிரார்த்தனைகள். நீங்களும் துஆ செய்யுங்கள் சகோஸ்

புத்தகத்தின் பெயர் : நபிமணியும் நகைச்சுவையும்
ஆசிரியர் : இக்பால் எம். சாலிஹ்
பதிப்பகம் : அதிரை நிருபர்
விலை :150
பக்கம் :256

புத்தகம் வாங்க தொடர்புக்கு :
முஹம்மது அபூபக்கர் (மூனாகீனா) 9840549700
அதிரை அஹ்மது : 9894989230
ஜமீல் M ஸாலிஹ் : 9043727525

(கவனிக்க : இந்த புத்தக விற்பனையின் அனைத்து தொகையும் பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்லும் பணிக்கும் மற்றும் தாவா பணிக்குமாக முழுவதும் வழங்கப்படுகிறது... இதில் எவ்வித இலாப நோக்கமோ அல்லது புத்தகத்தின் விலை அடக்கமோ பதிப்பகத்தாருக்கு சேராது. )

ஆமினா முஹம்மது
நன்றி:டீக்கடை முகநூல் குழுமம்

6 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஒவ்வொரு வரியின் சுவையை அனுபவித்து எழுதியிருக்கும் அருமையான புத்தக விமர்சனம் (மதிப்புரை) மனதில் என்றும் நிலைத்து இடம் பிடிப்பது நிச்சயம். நுல் கொண்டிருக்கும் கருவை கச்சிதமாக தனது மதிப்புரையில் எடுத்துரைத்து அனைவருக்கும் பரிந்துரை செய்த சகோதரி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

ZAKIR HUSSAIN said...

சகோதரி ஆமினா முஹம்மது அவர்களுக்கு நன்றி.

மிகத்தெளிவாக மிகவும் கச்சிதமாக நண்பன் இக்பால் சாலிஹ் எழுதிய புத்தகத்தை பரிந்துரை செய்திருக்கிறீர்கள்.

பள்ளிக்கூட நாட்களில் அறிமுகமான இக்பால்...பின்னாளில் தனக்கென்று ஒரு தனி இடத்தை மார்க்க அறிவில் வளர்த்துக்கொண்டு எத்தனையோ விசயங்களுக்கு மார்க்க ரீதியாக விளக்கம் அளிக்கும்போது நான் வியந்தது அதிகம். காரணம் நாங்கள் எல்லாம் எல் கே ஜியில் நின்று விட்ட மாதிரியும் இக்பால் மட்டும் யுனிவர்சிட்டிக்கு போய் விட்ட மாதிரி மார்க்க விசயத்திலும் அதன்படி நடப்பதிலும் முன்னேறிவிட்டதுதான். I felt i am left out on that.

நண்பன் இக்பால் ஒரு புத்தகம் எழுதியதில் எனக்கு ஆச்சர்யமில்லை. இன்னும் பல புத்தகம் எழுதும் அளவு அறிவில் மிகைத்த தரம் உடையவன்.

தனது மகளின் திருமணத்தில் இப்படி ஒரு சிறந்த தலைப்பில் , அதுவும் நமது பெருமானாரின் வாழ்வில்
நடந்த அழகான நிகழ்வுகளை தொகுத்து ....நபி அவர்கள் கண்டித்து திருத்த மட்டும் வரவில்லை...வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதிலும் எடுத்துக்காட்டாக இருந்தார்கள் என்பதை எளிமைப்படுத்தி வாசகர்களுக்கு தந்தது மிகவும் பாராட்டுக்குறியது.

புத்தக வெளியீட்டில் அதிகம் பாடுபட்ட அனைவருக்கும் என் நன்றி.

sheikdawoodmohamedfarook said...

//மார்க்கம்,மார்க்கம்என்றுகூறிக்கொண்டுஎந்நேரமும்கஞ்சிபோட்டஉள்ளத்தைக்கொண்டுவிரைப்பாகவேநடந்துகொள்பவர்களுக்குஇந்தபுத்தகத்தில்தொகுக்கப்பட்டவிஷயங்கள்சம்மட்டிஅடி!//சரியாகசொன்னீர்கள்சகோதரிஆமினாமுஹம்மது.அவர்கள்கிட்டேபோய்மார்க்கசம்பந்ததப்பட்டசிலசந்தேகங்களைகிட்டேபோய்கேட்கவேஅச்சம் வருகிறது! காரணம் அவர்களின் கஞ்சிபோட்ட விரைப்பும் முகமும். நோன்புநேரத்தில் கஞ்சியை நினைவு படுத்திவிட்டீர்கள்! அவர்கள்போட்டகஞ்சிஎறச்சிபோட்ட கஞ்சியா? இல்லை வெறும் தேங்காபால் கஞ்சியா?

sabeer.abushahruk said...

Alhamdhulillah!

Jazakkallahu khairan, sister

Allah aaththik Aafiya, Iqbal

Adirai anbudhasan said...

ஆன்மீக குருவாய், ஆட்சித்தலைவராய், குடும்பத்தலைவராய் இன்னும் பல்வேறு பொறுப்பு வகித்து, அனைத்திற்கும் நெறிமுறை காட்டித்தந்த எம்பெருமான் நபி முஹம்மது சல்லலாஹு அலைஹிவசல்லம் அவர்களுடைய வாழ்க்கை முறைகளை தொகுத்து , தனி தனியே தலைப்பிட்டு புத்தகமாய் கொண்டுவருதல் மிகவும் ஏற்றமான, தேவையான பணி. குறை அல்ல, அக்கரையில் சொல்ல வருகிற ஒரு சிறு ஆலோசனை, கூடுதல் வார்த்தை ஜோடனைகள் சொல்ல வந்த உட்கருத்தை கிரகிக்க சிரமப்படுத்துகிறது. அடுத்தடுத்த புத்தகங்களில் கவனம் கொண்டால் நலமாக இருக்கும்

Iqbal M. Salih said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

எனதன்பு நண்பன் ஜாகிர் குறிப்பிட்டதுபோல, மிகக் கச்சிதமான ஒரு மதிப்புரையை அளித்திருக்கும் சகோதரி ஆமினா முஹம்மது அவர்கட்கு மிக்க நன்றி! புத்தகத்தின் என்னுரையில் பதிக்கப்பட்டிருக்கும் நோக்கம் மிகத்தெளிவானது:

நபிமணி (ஸல்) அவர்களின் நகைச்சுவை நிகழ்வுகளை வாசிக்கும்போது, வாசகரை அறியாமலேயே, அவர் முகத்தில் புன்னகைப் பூக்கள் மலர வேண்டும். அதன் விளைவாக இறையருளால், அவருக்கு நேர்வழியின் வாசல், விரியத் திறக்குமேயானால், அதுவே, இந்த வெளியீட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும், இன்ஷா அல்லாஹ்.

மதிப்பிற்குரிய சகோதரி அவர்கள் 'இஸ்லாமியப் பெண்மணி' யின் ஆசிரியர் குழுவில் முக்கியமானவர் என்ற வியப்பான தகவல், எனக்கு மகிழ்வளித்தது. மாஷா அல்லாஹ்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு