Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) 4

அதிரைநிருபர் பதிப்பகம் | July 02, 2015 | ,

இஸ்லாமிய வரலாற்றின் முதல் பாடசாலையும் பல்கலைக் கழகமும் ஆன 'திண்ணையில்' பயின்ற  தோழர்களில் அதிமுக்கியமானவர்  அபூஹுரைரா (ரலி).

துவக்கத்தில் இங்கே நபித் தோழர் உபாதா இப்னு ஸாபித் (ரலி) அவர்கள்தான் தோழர்களுக்குக் குர்ஆனைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் ஆக இருந்தார். அதன்பின்னர், திண்ணைத் தோழர்களின் தலைவராக அபூஹுரைராவை அண்ணலார் நியமித்தார்கள். ஏறக்குறைய எழுபதுக்கும் மேற்பட்ட தோழர்களின் இந்தக் குழுவில் குறைஷிகளின் ஸஅத் இப்னு அப்பாஸ் (ரலி), ஈரானின் ஸல்மான் ஃபார்ஸி (ரலி), ரோமாபுரியின் சுஹைப் பின் ஸினான் (ரலி), அபிசீனியாவின் கறுப்புக் குயில் பிலால் பின் ரபாஹ் (ரலி), கிஃபாரிக் கோத்திரத்தின் உன்னதப் பண்பாளர் அபூதர் கிஃபாரி (ரலி),  இவர்களுடன் நாடோடிகளான தவ்ஸ் குலத்தைச் சார்ந்த அபூஹுரைரா (ரலி) அவர்களையும் சேர்த்து அந்த ஒப்பற்ற ஓரிறைக் கொள்கை எனும் நறுமண மலர்  மாலையில்தான் இந்தப் பல்வேறு குல, இன, நிற மக்களும் அழகாகக் கோர்க்கப்பட்டிருந்தார்கள். முஸ்லிம் மாணவர்கள் தங்கிக் கல்வி கற்பதற்காகச் சரித்திரச் சாலையில் முன்னுதாரணமாக உருவான முதல் 'தங்கும் விடுதியும்' (ஹாஸ்டல்) இதுதான்!

இந்த அற்புதமான பல்கலைக் கழகத்திலிருந்துதான் நெறி மிகுந்த ஆட்சியாளர்களும் அநீதிகளை எதிர்த்துப் போராடும் அறப்போர் வீர்களும் வெற்றியை மட்டுமே விளைநிலமாக்கும் தானைத் தளபதிகளும் கல்விக்கடலில் முத்தெடுத்து வந்த அறிஞர் பெருமக்களும் நேர்மையான தீர்ப்பு வழங்கும் சட்டமேதைகளும் தன்னலத்தைத் துறந்து பொதுப்பணி புரியும் அருந்தொண்டர்களும் உருவாகி வந்தனர். வரலாற்றில் அழியாப் புகழ் பெற்று நிலைத்து நின்றனர்!

அப்போது கைபர் யுத்தம் நிகழ்ந்து  கொண்டிருந்தது! மதீனா நகரில் மகத்துவம் ஓங்கும் மன்னர்  நபி (ஸல்) அவர்களைக் காணாததால், நேராகப் போர்க் களத்திற்கே சென்று மனித நேயர் மாண்பு நபி (ஸல்) யின் கரங்களில் பைஅத் செய்து இஸ்லாத்தில் நுழைந்தார் அபூஹுரைரா (ரலி). அன்றைய நாளிலிருந்து அண்ணலாரின்  இறுதிக் காலம் வரை, உள்ளூரில் தங்கி இருக்கும்போதும் பயணத்தில் இருக்கும்போதும் அல்லாஹ்வின் தூதரை  அண்மியே வாழ்ந்து வந்தார் நம் அபூஹுரைரா (ரலி) அவர்கள். ஏறக்குறைய நான்காண்டுகள் அறிவுப் பொற்பேழை அண்ணலாரின் அருகிலேயே இருந்து அவர் கற்றுக்கொண்ட நபிமொழிகள் மட்டும் ஏறக்குறைய  5374 ஆகும்.

"என்னுடைய முஹாஜிர் தோழர்கள் சந்தையில் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார்கள். என் அன்சாரி நண்பர்களோ வயலில் விவசாயம் செய்து கொண்டிருந்தார்கள். நான் ஒரு வீடோ வேலையோ இன்றி அண்ணலாரை நிழல் போலத் தொடர்ந்து கொண்டிருந்தேன். அண்ணலார் உதிர்த்த பொன்மொழிகள் அனைத்தையும் நினைவில் பதிந்து கொண்டேன்" என்கின்றார் அபூஹுரைரா (ரலி).

தொழுகையின் முதல் வரிசையில் எப்போதும் அபூஹுரைரா (ரலி) அவர்களைக் காணலாம். சில சமயங்களில் பசி தாளாமல் அவர் மயங்கிவிழுந்து விடுவதும் உண்டு! புதிதாக அவரைப் பார்ப்பவர்கள் 'பைத்தியமோ' என்று கூட நினைப்பார்கள்! ஒரு  முழுமையான ஆடை கூடக் கிடையாது. ஒரே ஒரு போர்வை. கழுத்திலிருந்து அதைக் கட்டிக் கொள்வார்!

அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்: எவனைத் தவிர வணக்கத்திற்குரியவன்  வேறெவனுமில்லையோ அத்தகைய அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் பசிக் கொடுமையால் என் வயிற்றைத் தரையில் வைத்து அழுத்திக்கொண்டு படுத்திருக்கிறேன். மேலும், கடும் பசியினால் வயிற்றில் நான் கல்லை வைத்துக் கட்டிக் கொண்டதுமுண்டு.

ஒருநாள், நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் பள்ளிவாசலுக்குச் செல்லும் பாதையில் அமர்ந்துகொண்டேன். அப்போது அபூபக்ரு (ரலி) என்னைக் கடந்து சென்றார். உடனே நான் இறைவேதத்திலுள்ள ஒரு வசனத்தைப் பற்றி அவரிடம் கேட்டேன். என் வயிற்றை அவர் நிரப்புவார் என்பதற்காகவே அது குறித்து அவர்களிடம் கேட்டேன். எனினும், அவர் கடந்து சென்றார்; என் பசி நீங்க எதுவும் அவர் செய்யவில்லை. பிறகு உமர் ஃபாரூக் (ரலி) என்னைக் கடந்து சென்றார். உடனே நான் அவரிமும் இறைவேதத்திலுள்ள ஒரு வசனம் குறித்துக் கேட்டேன். அவர் என் வயிற்றை நிரப்புவார் என்பதற்காகவே அது குறித்து அவரிடம் கேட்டேன். அவரும் என் பசியைப் போக்க ஒன்றும் செய்யாமல் போய்விட்டார். 

பிறகு அன்புள்ளம் கொண்ட அபுல்காஸிம் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். என்னைக் கண்டு, எனக்கு ஏற்பட்டுள்ள கடும்பசி நிலையையும் என் முகமாற்றத்தையும் அவர்கள் புரிந்துகொண்டு புன்னகைத்தார்கள். பிறகு, 'யா அபூஹிர்!  என்று அழைத்தார்கள். நான் 'இதோ காத்திருக்கிறேன்; இறைத்தூதர் அவர்களே!' என்றேன். 'என்னைப் பின்தொடர்ந்து வாரும்!' என்று சொல்லிவிட்டு நடந்தார்கள். நான் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன்.

இனிய நபி (ஸல்) அவர்கள் தம் இல்லத்தில் நுழைந்தார்கள். நான் உள்ளே செல்ல அனுமதி கோர, எனக்கு அனுமதியளித்தார்கள். நான் உள்ளே சென்றேன். அப்போது வீட்டில் ஒரு கோப்பையில் பாலைக் கண்டார்கள். உடனே தம் துணைவியாரிடம் 'இந்தப் பால் எங்கிருந்து வந்தது?' என்று கேட்டார்கள். அவர்கள் 'இன்ன 'ஆண்' அல்லது 'பெண்' தங்களுக்கு இதை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்' என்றார்கள். எங்கள் நபி (ஸல்) அவர்கள் 'அபூஹிர்' என அழைத்தார்கள். நான் 'இதோ வந்துவிட்டேன்; இறைத்தூதர் அவர்களே!' என்றேன். 'திண்ணைவாசிகளிடம் சென்று என்னிடம் அவர்கள் அனைவரையும்  அழைத்து வாரும்' என்றார்கள். 

திண்ணைவாசிகள் (அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா) இஸ்லாத்தின் விருந்தினர்கள் ஆவர். அவர்கள் புகலிடம் தேட அவர்களுக்குக் குடும்பமோ செல்வமோ கிடையாது. வேறு யாரிடமும் செல்லவுமாட்டார்கள். வறுமை ஏற்றுப் பெருமை கொண்ட வள்ளல் நபி (ஸல்) அவர்களிடம் ஏதேனும் தானப் பொருள்கள் வந்தால் அதனை திண்ணைத் தோழர்களுக்கு  பெருந்தன்மை மிக்கப் பெருமானார்  (ஸல்) அவர்கள் அனுப்பிவிடுவார்கள். அதிலிருந்து தாம் எதையும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். தம்மிடம் ஏதேனும் அன்பளிப்புப் பொருள்கள் வந்தால் இவர்களைத் தம்மிடம் அழைத்துவரும்படி ஆளனுப்பிவிடுவார்கள். அவர்கள் வந்தவுடன் அவர்களுடன் சேர்ந்து தாமும் உண்பார்கள். 

இப்போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திண்ணைவாசிகளை அழைத்துவரச் சொன்னதால் எனக்குக் கவலைதான் ஏற்பட்டது. 'இருப்பதோ சிறிதளவு பால். திண்ணைவாசிகளுக்கு இந்தப் பால் எம்மாத்திரம்? இதைச் சிறிதளவு பருகி  என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு நானே பொருத்தமானவன். திண்ணைவாசிகள் வந்தால், நபியவர்கள் எனக்கு உத்தரவிட, நானே அவர்களுக்குக் கொடுத்துவிட்டு இறுதியில் எனக்கு இந்தப் பாலில் ஒன்றும் கிடைக்காமல் போகலாம். இருப்பினும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியாமல் இருக்க இயலாது' என மனத்துக்குள் சொல்லிக் கொண்டேன். 

பிறகு, நான் திண்ணைவாசிகளிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்களும் அழைப்பை ஏற்று வந்து வீட்டுக்குள் நுழைய அனுமதி கோரினார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திண்ணைவாசிகளுக்கு அனுமதி வழங்கினார்கள். அவர்கள் அந்த வீட்டில் ஆங்காங்கே இடம் பிடித்து அமரலானார்கள். அன்பு நபி (ஸல்) அவர்கள் 'அபூஹிர்' என அழைத்தார்கள். நான் 'இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!' என்றேன். அருமை நபி (ஸல்) அவர்கள் 'இதை எடுத்து இவர்களுக்குக் கொடுப்பீராக' என்றார்கள்.

நான் அந்தக் கோப்பையை எடுத்து ஒரு மனிதருக்குக் கொடுத்தேன். அவர் தாகம் தணியும் வரை குடித்தார். பிறகு அவர் என்னிடம் அந்தக் கோப்பையைத் திருப்பித் தந்தார். நான் அதை இன்னொரு மனிதரிடம் கொடுத்தேன். அவரும் தாகம் தீரும் வரை குடித்துவிட்டுக் கோப்பையை என்னிடம் தந்தார். பிறகு இன்னொருவர் தாகம் தீரும் வரை குடித்தார். பிறகு என்னிடம் அதைத் திருப்பித் தந்தார். இறுதியில் நான் ஏந்தல் நபி (ஸல்) அவர்களிடம் அதைக் கொண்டு சென்றேன். அப்போது மக்கள் அனைவரும் பசியும் தாகமும்  தணிந்திருந்தினர்.

வேத நபி நாயகம் (ஸல்) அவர்கள் அந்தக் கோப்பையை வாங்கித் தம் கையில் வைத்துக்கொண்டு என்னைக் கூர்ந்து பார்த்த பிறகு சிரித்தார்கள்.

பின்னர்,  'அபூஹிர்!' என்று அழைத்தார்கள். நான் 'இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!' என்று சொன்னேன். அதற்கவர்கள் 'நானும் நீயும்  மட்டும் தான் எஞ்சியுள்ளோம், அப்படித்தானே?' என்று கேட்டார்கள். நான், ஆம். உண்மைதான், யா ரசூலல்லாஹ்!' என்றேன். பாசமிகுந்த பண்பாளர்  (ஸல்) அவர்கள் 'உட்கார்ந்து இதைப் பருகுவீராக' என்றார்கள். நான் உட்கார்ந்து பருகினேன். 'இன்னும் பருகுவீராக' என்றார்கள். பருகினேன். இவ்வாறு அவர்கள் 'இன்னும் பருகுவீராக' என்று சொல்லிக் கொண்டேயிருக்க, நான் பருகிக்கொண்டேயிருந்தேன்.

இறுதியில் 'இல்லை; சத்திய மார்க்கத்தைக் கொண்டு தங்களை அனுப்பிவைத்த இறைவன் மீது ஆணையாக! இனிப் பருகுவதற்கு வழியே இல்லை' என்றேன். தங்க நபி (ஸல்) அவர்கள் 'சரி. அதை எனக்குக் காட்டுவீராக' என்றார்கள். எனவே, நான் அவர்களிடம் அந்தக் கோப்பையைக் கொடுத்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுடைய திருப்பெயர் கூறி எஞ்சிய பாலைப் பருகினார்கள். (1)

இந்தச் சம்பவம் திண்ணைத் தோழர்களின் வறுமை நிலையை மட்டுமல்ல. தன் அடியார்களுக்கு அற்புதமாக உணவளிப்பதில் அல்லாஹ் (ஜல்) எத்தகைய சிறப்பானவன் என்பதையும்  காட்டுகிறது!

பூனை மீது அதிகம் பிரியம் கொண்டிருந்ததால் பெருமானார்  (ஸல்) அவர்கள், இவரைப் பூனைத்  தோழன் (அபூஹிர்) என்று செல்லமாக அழைத்தார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள்,  பஞ்சை ஏழைகளின் பங்காளர் நபி   (ஸல்) அவர்கள் மீது மிகுந்த நேசம் கொண்டிருந்தார்கள். எம் பெருமான் நபி (ஸல்) அவர்களின் பொன்முகத்தைப் பார்த்து ரசிப்பதிலேயே பூரிப்படைவார்கள். 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

'அறம் காத்த போதகர் அண்ணல் நபி நாயகர் (ஸல்) அவர்களின் திருமுகத்தைவிடத்  தெளிவான, அழகான வேறு முகம் எதையும் நான் இதுவரை கண்டதேயில்லை! சூரியனின் ஒளிக் கதிர்கள் அவர்கள் முகத்தில் ஓடுவது போல அவர்களது முகம் எப்போதும் இலங்கிக் கொண்டேயிருக்கும்'.

ஒரு நாள், ஒரு கிராமவாசி மஸ்ஜித் நபவீக்கு வந்தார். பள்ளியில் அல்லாஹ்வின் தூதரும் தோழர்களுடன் அமர்ந்திருந்தார்கள். அப்போது கிராமவாசி தன்  தொழுகையை முடித்தார். பின்னர், துஆ செய்யத்தொடங்கினார்.

'இறைவா! எனக்கும் முஹம்மதுவுக்கும் மட்டும் மன்னிப்பளிப்பாயாக! எங்களுடன் வேறு யாரையும் மன்னிக்க வேண்டாம்' என்று பிரார்த்தித்தார்!

இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சிரித்து விட்டார்கள். பின்னர், அவரை அருகே அழைத்தார்கள். 'மகத்துவமும் வல்லமையும் மிக்க அருளாளன் அல்லாஹ்வின் விசாலமான அருளானதைத் தடுத்து நீர் சுருக்கிவிட்டீரே!' என்றார்கள்.(2)

ஒருமுறை, மாநிலத்தின் மணிவிளக்கு மாண்பு நபி (ஸல்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) யைக் கடந்து சென்றார்கள். பார்த்தால், அபூஹுரைரா (ரலி) அவர்கள் மரக்கன்று  ஒன்றைப் பள்ளம் தோண்டி நட்டுக் கொண்டிருந்தார். 'யா அபூஹிர்! என்ன செய்கிறீர்?' அதற்கு 'செடி ஒன்றை நடுகின்றேன், யா ரசூலல்லாஹ்!' என்றார்.

நல்லது! இதைவிடச் சிறந்த மரம்  ஒன்றை நடுவதை நான் சொல்லித் தருகிறேன். அது என்ன தெரியுமா? அதுதான்: "சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்" 'இந்த ஒப்பற்ற வாசகத்தை ஒவ்வொரு முறை சொல்லும்போதும் அதைச் சொன்னவருக்காகச்  சுவனத்தில் மரம் ஒன்று நடப்படுகின்றது' என்றார்கள். (3) 

அபூஹுரைரா (ரலி),  அருளாளன் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் இவ்வாறு கேட்டார்: 

'ஒரு மனிதன் தவறு செய்ய நினைக்கின்றான். ஆனால், தவறு செய்யவில்லை. அது குற்றமா? அல்லாஹ்வின் தூதரே?’

அதற்கு, அண்ணல் எங்கள் ஆருயிர்  நபி (ஸல்) அவர்கள், 'என் அடிமை தீய செயல் ஒன்றைச் செய்ய நினைத்தால், அதை அவன் செய்யாதவரை அவனை மன்னித்து விடுகிறேன். அதைச் செய்துவிட்டான் என்றால், அவன் கணக்கில் ஒரு தீமையாகவே எழுதிக் கொள்கிறேன்' என்று அளவற்ற அருளாளன் அல்லாஹ் சொல்கிறான்.

மேலும், "என் அடிமை நன்மை செய்ய எண்ணும்போதே, அந்த ஒரு நன்மையைப் பதிவேட்டில் எழுதிக்கொள்கிறேன். அவன் உண்மையிலேயே நன்மை செய்து முடித்துவிட்டால், அதனைப் பத்து மடங்காக எழுதி விடுகிறேன்" என்று கருணை நிறைந்த ரஹ்மான் கூறுகின்றான் என்ற பிறகு,

'என்னுடைய உம்மத்தினரின் உள்ளத்தில் எழுகின்ற ஊசலாட்டங்கள், தவறான எண்ணங்கள் போன்றவற்றை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான், ‘அதை அந்த அடியான் வாயைத் திறந்து சொல்லாதவரை, செயலால் செய்யாதவரை' என்று இறைவன் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.

ஒரு கிராமவாசி மஸ்ஜித் நபவீக்குப் புதிதாக  வந்தவர், என்ன காரியம் செய்தார் என்றால், விறுவிறுவென்று சென்று மஸ்ஜித் உடைய எல்லைக்குள்ளேயே சிறுநீர் கழிக்கத் துவங்கிவிட்டார். தோழர்கள் கடுங்கோபம் கொண்டு அவர் மீது பாய விரைந்தார்கள். உடனே, இருலோகம் போற்றும் இறைத் தூதர் (ஸல்) அவர்கள், தோழர்களைத் தடுத்தார்கள். அவர் முழுவதும் சிறுநீர் கழித்து முடிக்கும்வரை காத்திருந்து விட்டு, அவர் எழுந்ததும் அவரை அருகே அழைத்தார்கள்.

"நண்பரே! இது அல்லாஹ்வின் இல்லம். அவனை மட்டுமே வணங்குவதற்காக இருக்கும் புனிதமான  இடம். இந்தத் தூய்மையான இடத்தில் சிறுநீர் கழிக்கக் கூடாது" என்று அன்பாக அவரைப் பார்த்துச் சொல்லிவிட்டு, ஒரு வாளித் தண்ணீரை வரவழைத்து அவர்களின் திருக்கரங்களாலேயே நீரை ஊற்றி அந்த இடத்தை முழுவதும் சுத்தம் செய்தார்கள். இந்த இனிய அணுகுமுறையைக் கண்ட அந்த கிராமவாசி, நெகிழ்ந்துபோய், அண்ணலே! எனது இந்த தீய செயலுக்காக என்னை நீங்கள் ஏசவும் இல்லை! என்னைத்  தாங்கள் அடிக்கவும் இல்லை! தரணி போற்றுகின்ற பெருமானே! என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும் என்றார். (4)

இன்னும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்: ‘ஒரு மனிதர் வந்தார். பிரார்த்தனைகளுள் சிறந்தது எது, யா ரசூலல்லாஹ்?' என்று கேட்டார்.

அவரிடம் அருமைத் தூதர் (ஸல்) அவர்கள், 'இறைவா! முஹம்மது உடைய உம்மத்தினர் மீது உன் கருணையைப்  பொழிவாயாக!' என்று பொதுவாகக் கேட்குமாறு கூறினார்கள்.(5)

பெற்றோரை மதிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார் அபூஹுரைரா (ரலி). ஒரு தடவை, ஓர் இளைஞனும் முதியவரும் நடந்து சென்றதைக்  கண்டவர், அந்த இளைஞனிடம் 'இவர் யார்?' என்றார். 'என் தந்தை' என்று பதிலளித்த இளைஞனிடம், அபூஹுரைரா (ரலி) அவர்கள், 'அவரது பெயரைச் சொல்லி அவரை அழைக்காதே! அவருக்கு முன்னால் நடக்காதே! அவர் சபையில் அமருமுன்பு நீ அமராதே!' என்று அந்த இளைஞனுக்கு அறிவுரை வழங்கினார்.

மிஃராஜ் இரவின் அற்புத நிகழ்வுகளைப் பற்றி ஆர்வமுடன் கேட்ட அபூஹுரைராவிடம் 'சித்ரத்துல் முன்தஹா' வைக் கண்டு வந்த செம்மல்  நபி (ஸல்) அவர்கள்:

"அந்த மகத்தான இரவில் நான் ஏழாம் வானத்தை அடைந்தேன். அப்போது, எனக்கு மேலாக அச்சந்தரும் இடியின் சப்தத்தையும் கண்களைக் கூசவைக்கும் மின்னலின் ஒளிக்கீற்றையும் கண்டேன். சில மனிதர்களின் வயிறு மட்டும் ஒரு வீட்டைப் போன்று பெரிதாக இருந்தது. அந்த வயிற்றில் பாம்புகள் நெளிந்து கொண்டிருந்ததை வெளியிலிருந்தே என் கண்களால் காண இயன்றது! 'யார் இவர்கள்?' என விசாரித்தபோது, 'இவர்கள்தாம்  வட்டியைச் சாப்பிட்டவர்கள். வட்டி வாங்கித் தின்றவர்கள்' என்றார் ஜிப்ரீல்!

பிறகு, அதிலிருந்து கீழே இறங்கி, இந்த பூமிக்கு மேல் உள்ள வானத்தை அடைந்தேன். எனக்குக் கீழாகப் புகை மண்டலத்தையும் புழுதியையும் சப்தங்களையும் கேட்டேன். 'ஜிப்ரீலே! இவை என்ன?" என்று வினவியதற்கு, 'அவை ஷைத்தான்கள். மனிதர்களைச் சுற்றிச்  சுற்றி வருகிறார்கள். வானங்கள், பூமியின் இயக்கம் மற்றும் அதன் கட்டுப்பாட்டை குறித்து மனிதர்களை யோசிக்கவிடாமல் தடுக்கிறார்கள். இந்த விஷயம் மட்டும் இல்லையென்றால், மனிதர்கள் இயற்கையின் அற்புத அதிசயங்களைக் காண்பார்கள்' என்று பதிலளித்தார் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

அப்துர்ரஹ்மான் இப்னு ஸஃகர் அதாவது அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் அண்ணலின் பண்பு நலன்களைப் பற்றிக் கேட்கப்பட்டது:

"நன்மையின் நாயகர் நபியவர்களைவிட அழகிய உருவம் உடையவரை, தோற்றத்தில் கவர்ச்சியானவரை இதுவரை நான் கண்டதே கிடையாது. அவர்களின் முகத்தில் கதிரொளி வீசுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்! அண்ணல் நபியைவிடவும் விரைவாக நடப்பவரை நான் கண்டதே இல்லை! அண்ணலாரின் கால்களுக்குக் கீழே இந்த பூமி வேகமாகச் சுருட்டப் படுகிறதோ என்று தோன்றும். நாம் நம்மை நாமே கஷ்டத்தில் ஆக்கிக் கொள்கிறோம். ஆனால், அண்ணலார் இவ்வாறு செய்ய மாட்டார்கள்" என்றார் அபூஹுரைரா (ரலி).(6)

இறைவனின் இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் கீழ்வரும் பிரார்த்தனையைத் தமக்குக் கற்றுக்கொடுத்தார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்.

'இறைவா! எங்களால் கட்டுப் படுத்த இயலாத, உன்னால் மட்டுமே கட்டுப்படுத்த முடிகின்ற எங்களின் உள்ளத்தைப் பற்றி உன்னிடம் யாசிக்கின்றோம். இறைவா. நீ திருப்தி அடைகின்ற விஷயங்களைப் பற்றி மட்டுமே அது செய்ய வேண்டும். அதனையே நாங்கள் கோருகின்றோம்'.(7)  

மேலும்,'இறைவா! எல்லாக் கஷ்டங்களையும் எளிதாக்கித் தந்து என் மீது அருள்வாயாக! அது எத்தகைய கஷ்டமானாலும் அதை எளிதாக்குவது உன்னைப் பொருத்தவரை மிகச் சாதாரண காரியமே! இந்த உலகத்திலும் மறு உலகத்திலும் எளிதானதையும் உன் பேரருளையும்தான் உன்னிடமிருந்து நான் யாசிக்கிறேன்’.(8)

முஆவியா (ரலி) கிலாபத்தின்போது, இவர் சிறிது காலம் மதீனாவின் ஆளுநராக இருந்தார். அப்பொழுது தம் வீட்டிற்கான விறகுக் கட்டைகளை, இவரே தெருவில் சுமந்து செல்வார். செல்லும் வழியில் நெரிசல் அதிகமாக இருந்தால், மக்களைப் பார்த்து 'உங்களின் ஊழியனுக்கு வழி விடுங்கள்' என்று அபூஹுரைரா (ரலி) கூறுவார்.

இத்தகைய குறிப்பிடத் தக்க தியாகத்தின் வழியில் இலட்சிய வாழ்வு வாழ்ந்து காட்டிய அபூஹுரைரா (ரலி) அவர்கள், தம் 78 ஆம் வயதில் ஹிஜ்ரீ 59ல் இறப்பெய்தி என்றும் அழியாத பேருலகை நோக்கி விடைபெற்றுச் சென்றார்.

இன்றுவரை, அவர் மனனம் செய்து அறிவித்த ஆயிரக் கணக்கான நபிமொழிகள் பல கோடிக் கணக்கான மக்களால் பயின்றறியப்பட்டும் படித்துணரப்பட்டும் நடமுறைப்படுத்தப்பட்டும் நிலையான நன்மைகளைப் பன்மடங்கில்  வாரி வழங்கி வருகின்றன! 
o o o 0 o o o
ஆதாரங்கள்
(1) புஹாரி 6452 : அபூஹுரைரா (ரலி)
(2) இப்னு மாஜா 572: அபூஹுரைரா (ரலி)
(3) இப்னு மாஜா 3807: அபூஹுரைரா (ரலி)
(4) முஸ்னத் அஹ்மத் 10155: அபூஹுரைரா (ரலி)
(5) அல்ஹாக்கிம்: அபூஹுரைரா (ரலி)
(6) முஸ்னத் அஹ்மத்: அபூஹுரைரா (ரலி)
(7) இப்னு அபீஷைபா: அபூஹுரைரா (ரலி)
(8) தப்ரானி அல்அவ்ஸத்: அபூஹுரைரா (ரலி)
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
இக்பால் M. ஸாலிஹ்


4 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

தனக்கு கிடைத்த பாலை பசித்திருந்த திண்ணை தோழர்களுக்கு முதலில் பருககொடுத்துஅவர்கள்பசியேபோக்கியபின்மிஞ்சியதைகடைசியில் அருந்தியமாபெரும்தலைவரின்செயலைஇன்றையநிலையோடுஒப்பிடுபோதுவெட்கமாய்இருக்கிறது.''பொருங்கபாவா!கூப்பிட்டவிருந்தாளிகள் சாப்பிட்டுமிச்சமிருந்தால்உங்களுக்குபோடுகிறோம்!சோறுவாங்கஏத்தனம்கொண்டுவந்தியளா?''என்றுகேக்குறகாலமிது.

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
sheikdawoodmohamedfarook said...

//இறைவா!எனக்கும்முகம்மதுக்கும்மட்டும்மன்னிப்பு அளிப்பாயாக! எங்களுடன்வேறுயாரையும் மன்னிக்கவேண்டாம்//ரசூலுல்லாஹ் கூடபழகியும்கூடஅவர் மனிதபுத்தியேகாட்டிவிட்டார்.

Iqbal M. Salih said...

நகைச்சுவை பற்றிய தொடர்களுக்கு, நகைச்சுவையாகவே கமெண்ட்ஸ் எழுதும் மதிப்பிற்குரிய ஃபாரூக் காக்கா அவர்கட்கு புன்னகையுடன் நன்றிகள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு