Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நோன்பாளிகளே.... 0

அதிரைநிருபர் பதிப்பகம் | July 06, 2015 | , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

நோன்பு கடைசி பத்து நம்மை நெருங்கி வந்து கொண்டு இருக்கிறது. ஆயிரம் மாதங்களைவிட சிறந்த இரவும் நம்மை கடந்து செல்ல இருக்கிறது. ஆயிரம் மாதங்களைவிட சிறந்த இரவான லைலத்துல் கத்ரை பற்றி இந்த தொடரில் பார்ப்போம்.

‘‘நிச்சயமாக மகத்துவமிக்க இரவில் இதை(குர்ஆனை) நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.’’ (அல்குர்ஆன்: 97:1,5)

இருபத்தி ஏழாம் கிழமை:

நாம் சிறு வயதில், பெரிய வயதாக கூட இருக்கலாம். இருபத்தி ஏழாம் கிழமை என்ற தினத்தை கொண்டாடி இருக்கிறோம். இன்று புது துணி உடுத்தி இரவு முழுவதும் பள்ளியில் இருந்து தொழுது பின் டீ, உணவுகள் நமக்கு கொடுக்கப்படும். இந்த இரவை மட்டும் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் செய்தார்கள் என்று தெரியவில்லை. நாமும் அறியாமல் செய்து வந்தோம்.

மேலும் தஸ்பீஹ் நபில் தொழுகையும் தொழுது வந்தோம். இந்த தொழுகையும் நபி(ஸல்) அவர்களால் காட்டித்தரப்படவில்லை. இருபத்தி ஏழாம் இரவில் மட்டும் அமல்கள் செய்து விட்டு மற்ற இரவுகளில் எதுவும் அமல்கள் செய்யாமல் இருக்கிறார்கள்.

நம் இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் இந்த இரவை பற்றி என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை கீழ்க்கண்ட ஹதீஸ்கள் தெளிவாக விளக்கம் தருகிறது.

'நபி(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ரு பற்றி (அது எந்த இரவு என்று) அறிவிப்பதற்காகத் (தம் வீட்டிலிருந்து) வெளியே வந்தார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். (இதைக் கண்ணுற்ற நபி(ஸல்) அவர்கள்) 'லைலத்துல் கத்ர் பற்றி உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் (வீட்டைவிட்டு) வெளியேறினேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டுவிட்டது. அதுவும் உங்களுக்கு ஒரு நன்மையாக இருக்கலாம். (ரமலான் மாதத்தின் இருபத்து) ஏழு (இருபத்து) ஒன்பது (இருபத்து) ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயலுங்கள்' என்று கூறினார்கள்' (அறிவிப்பவர்: உபாதா இப்னு ஸாமித்(ரலி), புகாரி: 49)

'ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!' என 'நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) புகாரி: 2017 )

இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்குக் காட்டப்பட்டது; பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது; எனவே கடைசிப்பத்து நாள்களில் அதைத் தேடுங்கள்! (அந்த நாள்களிலுள்ள) ஒவ்வொரு ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடுங்கள்!  (அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி)  புகாரி: 2018 )

பாவங்கள் மன்னிக்கப்படும் இரவு:

'நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் லைலத்துல் கத்ர் எனும் புனித இரவில் நின்று வணங்குகிறவரின் முந்தைய குற்றங்கள் மன்னிக்கப்படும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) புகாரி: 35 )

'லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.' (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) புகாரி: 1901 )

ரமளானின் கடைசி பத்தில் வணக்கம்:

நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப்பத்து நாட்களில் அதிகமாக வணக்கத்தில் ஈடுவடுவார்கள். ஏனைய மாதங்களில் இந்த அளவு ஈடுபடுவதில்லை. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),  முஸ்லிம்)

மேலும் அறிவிக்கிறார்கள்:-

நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப்பத்து நாட்கள் வந்துவிட்டால் தமது கச்சையைக் கட்டிக்கொண்டு அவற்றின் இரவுகளில் விழித்திருந்து வணக்கம் புரிவார்கள். தமது குடும்பத்தினரையும் விழித்தெழச் செய்வார்கள். (புகாரி முஸ்லிம்)

லைலத்துல் கத்ர் இரவில் ஓதும் துஆ:

அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல்கத்ரின் இரவை நான் அடைந்தால் அதில் என்ன ஓதவேண்டும் என்று கேட்டேன். அதற்கு பின்வரும் துஆவை ஓதுமாறு நபியவர்கள் கூறினார்கள்.

اَللَّهُمَّ إِنَّكَ عَفْوٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ

அல்லாஹும்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபு அன்னீ.

பொருள்: இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை விரும்புவனாக இருக்கின்றாய்.எனவே  என்னை மன்னிப்பாயாக. (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) ஆதாரம்: திர்மிதீ)

சகோதர சகோதரிகளே ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவு, நமது பாவங்கள் மன்னிக்கப்படும் இரவு நெருங்கி வருகிறது. அதனால்  இந்த இரவை தவறவிட்டு விடாமல் (நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத அமல்களை செய்யாமல்)  ஒற்றைப்படையான இரவுகளில் நம்பிக்கையுடன் அமல்களை அதிகமதிகம் செய்து பாவ மன்னிப்பு கோரி வல்ல அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையும் நன்மக்களாக நாம் அனைவரும் மாறுவதற்கு முயற்சிகள் செய்வோம் -இன்ஷாஅல்லாஹ்!.

S.அலாவுதீன்
இது ஒரு ரமளான் மீள்பதிவு

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு