Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எங்கே அமைதி...? - (டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் ) 3

அதிரைநிருபர் பதிப்பகம் | December 31, 2015 | , , , ,

அமைதி இன்றைய நிலை!

உலகின் முதல் அணுகுண்டு, விஞ்ஞானி ஓப்பன் ஹெய்மர் தலைமையில் தயாராகி வந்த வேளை அது.

அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது. அங்கே இந்த விஞ்ஞானி அணுகுண்டு வெடித்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை பற்றி விளக்கிச் சொன்னார்.

“இந்த அணுகுண்டின் தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் ஏற்பாடு உள்ளதா?”

“ஆம்” என்றார் விஞ்ஞானி. “என்ன அது?” என அனைவரும் ஆர்வத்தோடு கேட்டார்கள்.

“அது சமாதானம்” என்றார்.

‘என்ன விலை கொடுத்தேனும் அமைதியை வாங்க வேண்டும்’ என்பதே ஒவ்வொரு மனிதனின் ஆசையுமாகும்.

இறைவனிடத்தில் ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டுமே பிரார்த்தனை புரிய வேண்டும் என்று ஒருவனுக்குக் கட்டளையிடப்பட்டால் அறிவும் அனுபவமும் உள்ள மனிதன் ‘இறைவா! எனக்கு அமைதியைத் தா’ என்றே பிரார்த்தனை புரிவான்.

கல்வி, செல்வம், பதவி, புகழ், வீரம் எல்லாமிருந்தும் வாழ்க்கை அமைதியற்றதாகி விட்டது; அர்த்தமற்றதாகி விட்டது. இது போலவே ஒரு நாட்டில் பொருள் வளம், மனித வளம், இயற்கை வளம், அறிவு வளம் எல்லாமிருந்தும் மக்கள் அமைதியாக வாழ முடியாத அளவுக்கு வன்முறைகளும், குற்றங்களும் நிகழுமாயின் அந்த நாட்டை ‘வளர்ந்த நாடு’ என்று கூற முடியாது.

அமைதியுள்ள மனிதனே மனிதரில் சிறந்தவன் !

அமைதியுள்ள நாடே பாருக்குள்ளே நல்ல நாடு !

அமைதியை விரும்பாதவர் எவருமில்லை. அமைதியைக் குலைப்பவர்களும் அமைதியையே விரும்புகிறார்கள். உலக நாடுகளுக்கிடையே சண்டைகளை மூட்டி விட்டு இராணுவத்தளவாடங்களை விற்பனை செய்யப் போட்டி போடும் வல்லரசுகளும் தங்கள் நாடுகள் அமைதியாக இருக்க வேண்டும் என்றே எண்ணுகின்றன.

உலக அளவில் ஆயுத விற்பனை செய்வதில் அமெரிக்காவுக்கே முதலிடம் ! 1990 – ஆம் ஆண்டில் மட்டும் 7.1 பில்லியன் டாலருக்கு ஆயுதங்களை அந்நாடு விற்பனை செய்துள்ளது. வளர்ந்து வரும் நாடுகள் வாங்கிய ஆயுதங்களில் 65 விழுக்காடு அமெரிக்காவிலிருந்து வாங்கப்பட்டவையே ! (Report by Congressional Research Service – CRS – Hindu 08.08.99) ஆனால் உலக நாடுகளில் அமைதி, மனித உரிமைகள், அணு ஆயுதத்தடுப்பு ஆகியவற்றைப்பற்றி வாய் கிழிய பேசுவதில் இவர்களே வல்லவர்கள் !

எதிர்க்கட்சியாக இருக்கும் போது கலவரங்களையும், மோதல்களையும் தூண்டிவிடுபவர்கள், ஆளும் கட்சியாக மாறுகின்ற போது அமைதியாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். ‘பாருங்கள்…! நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து எந்தக் கலவரமும் நிகழ்ந்ததில்லை’ என்று மார்தட்டிக் கொள்கின்றனர்.

அனாவசியமாக அடுத்தவர் விவகாரத்தில் தலையிட்டுக் குட்டையைக் குழப்புகின்றனர். அமைதியைக் கெடுப்பவர்கள் தாம் மட்டும் அமைதியாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

ஆதிக்கக்காரர்கள், தன்னலவாதிகள் ஆகியோரின் தூண்டுதலுக்குப் பலியாகி கலவரங்களில் ஈடுபட்ட பொதுமக்களும் இறுதியில் தமது தவறை உணர்ந்து அமைதிக்காக ஏங்கி அலைகின்றனர். எங்களை அமைதியாக வாழவிடுங்கள் என்று ஆதிக்கக்காரர்களுக்கு ஆணையிடுகின்றனர்.

ஆண்டுக் கணக்கில் போர் ! ஆயிரக்கணக்கில் சாவு ! கோடிக்கணக்கில் பொருட்சேதம் ! இதற்குப் பிறகு அமைதிப் பேச்சில் ஈடுபடுவதைத் தவிர வேறுவழியில்லை என்ற முடிவுக்கு வருகின்றனர்!

அமைதி – இன்றைய நிலை

அமைதிக்காக ஏங்குகிறது மனித சமூகம். அது விரும்பிய அமைதி கிட்டியதா?

தனிமனிதனுக்கு அமைதியில்லை. வீட்டிலும் அமைதியில்லை. சமூகத்திலும் அமைதியில்லை. நாட்டிலும் அமைதியில்லை. சர்வதேச அளவிலும் அமைதி இல்லை.

பெருகிவரும் மனநோய்களும் தற்கொலைகளும் தனிமனித அமைதியின்மைக்குச் சான்று ! மன நோய்கள் மட்டுமல்ல; உடல் நோய்களும் அமைதியற்ற மனநிலையால் உருவாகுகின்றன. அமெரிக்க மக்களில் அறுபது சதவீதத்தினர் மனநல மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுகின்றனர். உலகிலேயே மக்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தி வரும் ஸ்வீடனிலும் சுவிட்சர்லாந்திலும்தான் அதிக அளவில் தற்கொலைகள் நிகழ்கின்றன என்று கூறுகிறது. ஒரு பத்திரிகைக் குறிப்பு. ஒவ்வொரு எட்டு விநாடிக்கும் உலகில் ஒருவர் தற்கொலைக்கான முயற்சியில் ஈடுபடுகிறார்.

பெருகி வரும் மணமுறிவுகள் இல்லற வாழ்வின் அமைதியின்மையை உணர்த்துகின்றன. இங்கிலாந்தில் மூன்றில் ஒரு திருமணம் மணமுறிவில் முடிகின்றது. ஸ்வீடன், டென்மார்க், நார்வே, ஐஸ்லாண்ட், (Scandinavian Countries) முதலிய நாடுகளில் ஏழில் நான்கு திருமணங்கள் மணமுறிவில் முடிகின்றன. “அமெரிக்காவில் தற்கொலைக்கான முக்கியக் காரணம் மணமுறிவே ஆகும். “(The Detrioit செப்டம்பர் 1,1995)

பிள்ளைகள் – பெற்றோர்கள் உறவில் ஏற்படும் விரிசலுக்கு சாட்சியாக விளங்குகின்றன. முதியோர் இல்லங்கள். பல ஆண்டுகள், தனக்காகவும், குடும்பத்திற்காகவும் உழைத்தவர்கள் தமது வாழ்வின் மாலைப் பருவத்தை வீட்டில் குடும்பத்தினரோடு அமைதியாகக் கழிக்க வேண்டிய முதியவர்கள் தனிமையில் மன உளைச்சலோடு முதியோர் இல்லங்களில் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

துள்ளித்திரியும் பதின்பருவத்தினரும் (Teenage) அமைதியிழந்து தவிப்பதும் இந்த நூற்றாண்டு வேதனைகளில் ஒன்று. இளம் வயதுக் குற்றவாளிகள் பெருகிய வண்ணம் உள்ளனர். நாட்டில் நடைபெறும் மொத்தக்குற்றங்களில் 56 விழுக்காடு குற்றங்கள் 16 முதல் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்களால் நிகழ்த்தப்படுகின்றன. போதைப் பொருட்களுக்குப் பலியாகி இளமையைத் தொலைத்துவிட்டு பரிதாபமாகக் காட்சி தருகின்றனர்.

பள்ளிச் சிறுவர்கள் துப்பாக்கிகளோடு பள்ளிக்கூடத்திற்கு வந்து சக மாணவர்களைச் சுட்டுக் கொல்லும் நிகழ்ச்சியும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. அமெரிக்க மக்கள் தொகை 25 கோடி. அமெரிக்காவில் தனியார் வசமிருக்கும் கைத்துப்பாக்கிகளின் எண்ணிக்கை 20 கோடி (PTI செய்தி) சராசரியாக ஒருவருக்கு ஒரு துப்பாக்கி !

சாதி, மதம், இனம், மொழி, பிராந்தியம் ஆகியவற்றின் அடிப்படையில் வன்முறை நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

“எவர் குருதியும் சிவப்பு தான்

எவர் கண்ணீரும் உப்பு தான்”

என்று புத்தன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் ஜாதிக்கொடுமைக்கு எதிராகப் புயலாக எழுந்து நின்றான். ஆனால் இந்த நூற்றாண்டிலும் தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை, கிராமங்களில் இரட்டைக் கிணறு, இரட்டை மயானம், இரட்டைப் பாதை என்ற நிலை தொடர்கிறது. தீண்டாமை மட்டுமல்ல பார்க்காமை, பேசாமை, நெருங்காமை, நிழல்படாமை ஆகிய அனைத்துக் கொடுமைகளும் நிகழ்த்தப்படுகின்றன.

இந்திய மக்களின் அமைதியைக் குலைப்பதில் வகுப்புக் கலவரங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. மதத்தின் பேரால் நமது நாட்டைப் போன்று உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இத்தனைக் கலவரங்கள் நிகழ்வதில்லை.

நாடுகளுக்கிடையில் நடந்து வரும் மோதல்களும் உச்சகட்டத்தை அடைந்துள்ளன. போஸ்னியா, கொசாவோ, ருவாண்டா, அயர்லாந்து, இலங்கை, காஷ்மீர், பாலஸ்தீனம் என உலகில் பல பகுதிகளிலும் தொடர்ந்து பிரச்னைகள் ஒரு மூத்த பத்திரிகையாளரின் கணிப்புப்படி உலகில் பல்வேறு இடங்களில் -116-க்கு மேற்பட்ட இடங்களில் மோதல்கள் நடந்த வண்ணம் உள்ளன.

நொடிப்பொழுதில் உலகத்தைத் தரைமட்டமாக்கும் வலிமை வாய்ந்த அணுகுண்டுகள், மக்களைக் கூண்டோடு அழிக்கும் இரசாயன ஆயுதங்கள் (Chemical Weapons) நோய்களை உண்டாக்கும் உயிரி ஆயுதங்கள் (Biological) ஆகியவற்றைப் பெறுவதில் உலக நாடுகளுக்கிடையே போட்டி நிலவுகிறது. இந்தப் போட்டியில் பங்கு பெறும் அனைத்து நாடுகளும் அமைதிக்காகவே இவற்றைத் தயாரிக்கிறோம் என்று கூறுகிறார்கள்.

விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் ஒருவர் ‘மூன்றாவது உலகப் போர் மூண்டால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். ‘என்னால் நான்காவது உலகப் போரைப் பற்றி மட்டுமே சொல்ல முடியும்’ என்று பதில் தந்தார் ஐன்ஸ்டீன். மேலும் அவர் ‘நான்காவது உலகப் போர் நடைபெறாது. ஏனெனில் மூன்றாவது உலகப் போரிலேயே உலகம் முழுமையாக அழிந்து போகும்’ என்றார்.

இவ்வாறு தனிமனிதனும், வீடும், நாடும் இன்று அமைதியின்றித் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அமைதியைத் தொலைத்துவிட்ட மனிதன் அமைதியைத் தேடி ஆலாய்ப் பறக்கின்றான்.

பிரார்த்தனை, யாகம், வேள்வி, தியானம், யோகா போன்ற வழிகளில் அமைதியைக் காண விழைகின்றான்.

உலகப்பற்றை ஒழித்து தனிமையில் தவம் புரிந்தால் அமைதி கிட்டும் என்பது சிலருடைய நம்பிக்கை !

இயற்கை எழில் சூழ்ந்த அமைதியான ஆரவாரமற்ற இடங்களுக்குச் சென்று அமைதி பெறத் துடிக்கிறான்.

‘வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்ற பழமொழிக்கேற்ப நகைச்சுவை மன்றங்களுக்கும் அமைதி நாடிச் செல்பவர் உளர்.

இசை, ஆடல், பாடல் இவற்றில் லயித்து அமைதி பெற எண்ணுபவர் பலர்.

அமைதிக்காக போதை மருந்து, தூக்க மாத்திரை இவற்றை நாடிச் செல்பவர்களும் உள்ளனர்.

ஆனால் அமைதி ஒன்றும் அப்படி எளிதில் கிடைத்து விடுவதல்ல ! ஒருவேளை கிடைத்துவிட்டாலும் அது தற்காலிகமானது. தொடக்கத்தில் குறிப்பிட்டது போல் அமைதி பலவழிகளில் சீர்குலைக்கப்பட்டிருக்கிறது. எனவே அதனை அடையும் வழிகளும் பலவாகும்.

அமைதியை தனிமனித அமைதி, சமூக அமைதி, இறைவனுடன் பெறும் அமைதி எனப் பிரிக்கலாம். இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை; அமைதியற்ற மனிதன் அமைதியற்ற சமூகத்தை உருவாக்குகிறான்; அமைதியற்ற சமூகம் அமைதியற்ற மனிதனை உருவாக்குகிறது.

பேராசை, பொறாமை, புகழ்வெறி, பதவி வெறி, ஆதிக்க உணர்வு உள்ள மனிதர்கள் தங்களது அமைதியையும் இழந்து விடுவதோடு சமூகத்தின் அமைதியையும் கெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். பதவி வெறி பிடித்த அரசியல்வாதியால் நாட்டின் அமைதி எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

வறுமை, சாதி மத வெறி, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை முதலிய கொடுமைகள் நிரம்பிய சமூகம் அமைதியற்ற மனிதனை உருவாக்குகிறது. சமூகம் தீமைகளால் சூழப்பட்டிருக்கின்ற போது அதில் வாழும் மனிதன் மட்டும் எப்படி அமைதியாக வாழ முடியும்?

சாதி வேண்டாம் என்று தனிமனிதன் கூறினாலும் சாதி அமைப்பிலிருந்து அவனால் விடுபட முடியவில்லை. சாதியை அவன் விட்டாலும் சாதி அவனை விடுவதாக இல்லை. சாதியைப் பொருட்படுத்தாது அவன் திருமணம் செய்ய விரும்பினால் சமூகம் அவன் மீது சாதியைத் திணிக்கிறது.

இலஞ்சம் வாங்குவதை ஒருவன் வெறுத்தாலும் இலஞ்சம். கொடுத்தே ஆக வேண்டிய நிலைமையில் இருக்கிறான்.

ஆபாசத்தை வெறுப்பவர்களும் ஆபாசமே ‘வாழ்க்கை முறை’ என்றாகி விட்ட சமூகத்தின் பாதிப்பிலிருந்து தப்ப முடியவில்லை.

எனவே அமைதியை உருவாக்க விரும்புபவர்கள் இவ்விருவகை அமைதியின்மை பற்றியும் சிந்திக்க வேண்டும். பொதுவாக சமயவாதிகள் அல்லது ஆன்மீகவாதிகள் தனிமனித அமைதி பற்றி மட்டுமே பேசுவார்கள். அவர்கள் தரும் தீர்வுகள் பிரார்த்தனை, வழிபாடு, தியானம் என்ற அளவிலேயே அமைந்திருக்கும். ஆனால் சமயச்சார்பற்ற கொள்கையுடையவர்கள் சமூக, அறிவியல், பொருளாதார விஷயங்களைப் பற்றியே அதிகம் பேசுவார்கள். தனிமனித ஒழுக்கம், அமைதி, சீர்திருத்தம் ஆகியவை பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். தனிமனிதனும், சமூகமும் அமைதி பெறும் போதுதான் உண்மையான, முழுமையான அமைதி மலர முடியும்.

தனி மனித அமைதி

சமூக அமைதி

இவ்விரண்டையும் நிலைநாட்ட வந்த சமயமே இஸ்லாம்.

இஸ்லாம் என்ற சொல்லுக்கு அமைதி என்றும், கீழ்ப்படிதல் என்றும் பொருள். பொதுவாக சமயங்களின் பெயர்கள் அச்சமயத்தை நிறுவியவர்கள் அல்லது அவை தோன்றிய இடம் ஆகியவற்றோடு தொடர்புடையவையாக இருக்கும். ஆனால் இஸ்லாம் இதனின்று மாறுபட்டு ‘அமைதி மார்க்கம்’ என்று அழைக்கப்படுகிறது.

பெயரில் மட்டும் ‘அமைதி’ என்பதை வைத்துக்கொண்டு, அமைதியைப் பற்றி பேசாது அமைதியாக இருந்து விடும் சமயமல்ல ! அதன் ஒவ்வொரு அடியும் அமைதியை நோக்கி எடுத்து வைக்கப்படுகிறது.

ஒருவரைச் சந்திக்கும் போது சொல்ல வேண்டிய முகமன் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ உங்கள் மீது சாந்தி உண்டாகுக என்பதே.

வீட்டினுள் நுழையும்போதும் (திருக்குர்ஆன் 24:27) தொழுகையை முடிக்கும் போதும் ‘அமைதி உண்டாகுக’ என்றே கூற வேண்டும்.

இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் பகுதிக்கு ‘தாருல் இஸ்லாம்’ அமைதியின் இருப்பிடம் எனப் பெயர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனா எனும் நகர் வந்து இஸ்லாமிய அரசை நிறுவினார்கள். அவர்கள் மதீனாவில் நுழைந்தவுடன் மக்களை நோக்கிச் சொன்னார்கள்:

“அமைதியைப் பரவலாக்குங்கள். உணவு அளியுங்கள். இரத்தபந்த உறவுகளை உறுதிப்படுத்துங்கள். இரவில் மக்கள் உறங்கும் வேளையில் தொழுகையில் ஈடுபடுங்கள். நீங்கள் சுவனம் புகுவீர்கள்!”

(நூல் : திர்மிதி, இப்னு மாஜா)

அமையப் போகின்ற இஸ்லாமிய அரசு எத்தகையதாக இருக்கும் என்பதற்குக் கட்டியம் கூறுவது போல் அமைந்துள்ளது பெருமானாரின் இக்கூற்று.

“தொழுகை, நோன்பு, தர்மம் ஆகியவற்றைவிட சிறந்த செயல் ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என வினவினார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். “கட்டாயம் அறிவியுங்கள்” என்றனர் நபித்தோழர்கள். மக்களுக்கிடையில் சமரசம் செய்து வையுங்கள்; உறவுகளை சீர்குலைப்பதே அழிவுக்கான காரணமாகும்” என்றார்கள் நபிகள் நாயகம். (திர்மிதி)

“குழப்பம் விளைவிப்பது கொலையைவிடக் கொடியது.” (திருக்குர்ஆன் 2 :27)

“பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள். உண்மையில் நீங்கள் இறைநம்பிக்கை கொண்டவராயின் இதில்தான் உங்களுக்கு நன்மை இருக்கின்றது.” (திருக்குர்ஆன் 7 :85)

“குழப்பம் விளைவிப்பவன் சுவனம் புகமாட்டான்.” (புகாரி, முஸ்லிம்)

மேற்குறிப்பிட்ட திருக்குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளும் மட்டுமே அமைதியைப் பற்றிப் போதிக்கின்றன என்பதல்ல. திருக்குர் ஆனின் எல்லா வசனங்களும், நபிகள் நாயகத்தின் ஒவ்வொரு சொல்லும் செயலும் அமைதிக்கு வழிவகுப்பதாகவே அமைந்துள்ளன. எனவேதான் இறைவன் தான் அருளிய சமயத்திற்கு ‘இஸ்லாம்’ ‘அமைதி’ என்று பெயரிட்டான். இவ்வுலகில் மனிதன் அமைதியாக வாழ வேண்டும். மறுமையில் அமைதியின் இருப்பிடமாம் சுவனத்திற்குச் செல்ல வேண்டும். இதுவே இறைவனின் விருப்பமாகும்.

அமைதிக்கான வழிகளைக் காட்டுவதற்காகவே மனிதர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தன் தூதர்களாக நியமித்து, அவர்கள் வாயிலாக அமைதிக்கான அனைத்து வழிகாட்டுதல்களையும் இறைவன் வழங்கினான். இத்தூதர்கள் இறைக்கோட்பாடுகளை மக்களுக்கு விளக்கியதோடு அமைதியை நிலை நாட்டும் பணியிலும் ஈடுபட்டனர். முதல் மனிதராகிய ஆதம் முதல் இறைத்தூதர் ஆவார். அவரைத் தொடர்ந்து தூதர்கள் பலரை உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் இறைவன் நியமித்தான். அந்த வகையில் இறுதியாகப் பணியாற்றியவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களாவார்.

இறைவனுன் வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தும் சமுதாயமே அமைதி பெறும். இஸ்லாம் என்ற சொல்லுக்கு அமைதி, கீழ்ப்படிதல் என இரு பொருள் உண்டு என்பதை தொடக்கத்தில் பார்த்தோம். இறைவனின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்தால் அமைதி கிட்டும். இறைவழிகாட்டுதலை மீறினால் அமைதி மறுக்கப்படும் என்பதே அச்சொல் நமக்கு உணர்த்தும் பாடமாகும்.

‘சாந்தி உண்டாகும் (இறைவனின்) நேர்வழியைப் பின்பற்றி நடப்போருக்கு’ (குர் ஆன் 20 : 47) எனும் இறைவசனமும் இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகிறது.

மனிதர்கள் அனைவரும் ஒரு ஆண் பெண்ணின் வழித்தோன்றல்கள். ஒரே ஆன்மாவிலிருந்து பிறந்தவர்கள். எனவே அனைவரும் சகோதரர்கள் எனும் இறைக்கருத்தை மறுத்து மனிதர்களை நாம் பல வர்ணங்களாகப் பிரித்தோம். அதன் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்தோம். விளைவு சாதி இன மோதல்கள் !

மதுவை தீமைகளின் பிறப்பிடம் என்கிறது இறைக்கோட்பாடு ! அதனை வருமானங்களின் பிறப்பிடம் எனக்கருதி அதனைத் திறந்துவிட்டோம். விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

வட்டி ஒரு சுரண்டல்; ஒரு கொடுமை என்ற இறைக்கோட்பாட்டை ஏற்க மறுத்து வட்டியின்றி பொருளியலே இயங்க முடியாது என்ற நிலையை உருவாக்கினோம். பணவீக்கம், விலைவாசி உயர்வு, ஏழைகளும், ஏழை நாடுகளும் சுரண்டப்படுதல், அடிமைப்படுத்தப்படுதல் போன்ற பல கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றோம் !

‘மானக்கேடானவற்றிற்கு அருகில் கூட நெருங்காதீர்கள்’ என்ற இறைக் கோட்பாட்டை மீறியதால் ஏற்பட்ட விளைவுகள் விபச்சாரமும், கருக்கலைப்பு, பால்வினை நோய்கள், எய்ட்ஸ்…!

இப்படி வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் இறைச்சட்டங்களை மீறிய போதெல்லாம் மனித சமூகம் அமைதியை இழந்து விடுகின்றது. எனவே அமைதியைப் பெறுவதற்கான ஒரே வழி –

“படைத்தவனின் பக்கம் திரும்புவதே !”

(திருக்குர்ஆன் 94 :8)

“இறைவனின் பக்கம் விரைந்து வருவதே !” (திருக்குர்ஆன் 51 :50)

( எங்கே அமைதி …? எனும் நூலிலிருந்து )

பரிந்துரை : அதிரை அஹ்மது

3 Responses So Far:

Abu Easa said...

மா ஷா அல்லாஹ்!

மிக அழகிய நடையில் அமைந்திருக்கிறது

N. Fath huddeen said...

//தீண்டாமை மட்டுமல்ல
பார்க்காமை,
பேசாமை,
நெருங்காமை,
நிழல்படாமை
ஆகிய அனைத்துக் கொடுமைகளும் நிகழ்த்தப்படுகின்றன.//

எல்லா ஆமைகளும் ஒன்றாய் சேர்ந்து அமைதியை போக்கி விட்டது.

N. Fath huddeen said...

//“எவர் குருதியும் சிவப்பு தான்
எவர் கண்ணீரும் உப்பு தான்”//

மிகச் சிறப்பாக எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரை

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு