Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 024 0

அதிரைநிருபர் பதிப்பகம் | February 26, 2016 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!. 

பெற்றோர் நலம் பேணல், உறவினர்களை ஆதரித்தல்!

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! (அல்குர்ஆன் : 4:36)

தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால்  அவர்களுக்குக் கட்டுப்படாதே! (அல்குர்ஆன் : 29:8)

''என்னைத் தவிர வேறு எவரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக! 

அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! ''சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!'' என்று கேட்பீராக!(அல்குர்ஆன் : 17:23,24)

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு  மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. (அல்குர்ஆன் :31:14)

'அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான செயல் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். உரிய நேரத்தில் தொழுவது என்று நபி(ஸல்) கூறினார்கள். பின்பு எது? என்று கேட்டேன். பெற்றோருக்கு நன்மை செய்தல்' என்று கூறினார்கள். பின்பு எது? என்று கேட்டேன். 'இறைவழியில் போர் புரிதல்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஅப்துர்ரஹ்மான் என்ற அப்துல்லா இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 312)

''அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தன் விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும். மேலும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தன் உறவினருடன் இணைந்து வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் நல்லதைச் சொல்லட்டும். அல்லது மவுனமாக இருக்கட்டும் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 314).

''நிச்சயமாக அல்லாஹ், படைப்புகளைப் படைத்து, முடித்தபோது, 'உறவு' எழுந்து நின்றது. ''(என்னை) துண்டித்துக் கொள்வதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புக் கோரும் இடம் இது'' என்று கூறியது. ''ஆம்! உன்னை சேர்த்துக் கொள்பவனை நானும் சேர்ப்பேன். உன்னை துண்டிப்பவனை நானும் துண்டிப்பேன் என்பதை நீ திருப்தியுறவில்லையா? என்று அல்லாஹ் கேட்டான். ''திருப்திதான்'' என உறவு கூறியதும், ''உனக்கு அது உண்டு'' என்று அல்லாஹ் கூறினான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பின்பு ''நீங்கள் விரும்பினால் (பின்வரும்) வசனத்தை ஓதுங்கள்'' என்றும் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 315)

நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் ஏற்படுத்தவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா?

அவர்களையே அல்லாஹ் சபித்தான். அவர்களைச் செவிடாக்கினான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கினான். (அல்குர்ஆன் : 47:22,23)

'ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். இறைத்தூதர் அவர்களே! என் அழகிய நட்புக்கு மனிதர்களில் அதிக தகுதி வாய்ந்தவர் யார்? என்று கேட்டார். 'உன் தாய்' என்று கூறினார்கள். பின்பு யார்? என்று கேட்டார். 'உன் தாய்' என்றார்கள். பிறகு யார்? என்று கேட்டார் 'உன் தாய்' என்றார்கள். பிறகு யார்? என்று கேட்டார். 'உன் தந்தை' என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 316)

''முதிய வயதையுடைய பெற்றோர்களில் இருவரோ அல்லது ஒருவரோ இருந்தும் சொர்க்கம் நுழைய முடியாமல் போன மனிதரின் மூக்கு நாசமாகட்டுமாக! மூக்கு நாசமாகட்டுமாக! மூக்கு நாசமாகட்டுமாக!'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 317)

''நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர், ''இறைத்தூதர் அவர்களே! எனக்கு சில உறவினர் உண்டு. அவர்களை நான் இணைத்து வாழ்கிறேன். என்னை அவர்கள் பிரிக்கிறார்கள். அவர்களிடம் நல்லவிதமாக நடக்கிறேன். அவர்கள் என்னிடம் தீவினையுடன் நடந்து கொள்கிறார்கள். அவர்களிடம் நான் கனிவுடன் நடக்கிறேன். அவர்கள் என்னைக் கண்டு கொள்வதில்லை'' என்று கூறினார். ''நீ கூறுவது போல் நீ இருந்தால், சுடு சாம்பலை நீ அவர்களை உண்ணச் செய்தது போலாகும். நீ இதே நிலையில் இருக்கும் வரை அவர்களுக்கு எதிரான பாதுகாவலர் (வானவர்) அல்லாஹ்விடமிருந்து உன்னுடன் இருந்து கொண்டேயிருப்பார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 318)

''தன் உணவு (வாழ்வாதாரம்) தனக்கு அதிகரிக்கப்படவும், தன் ஆயுள் தனக்கு நீடிக்கப்படவும் ஒருவர் விரும்பினால் அவர் தன் உறவினரை இணைந்து வாழட்டும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 319)

''அபூதல்ஹா(ரலி) அவர்கள் மதீனாவிலேயே, மதீனாவாசிகளில் பேரீத்தம் பழத்தோட்டங்கள் அதிகம் உள்ளவராக இருந்தார். அவரது சொத்துக்களில் அவருக்கு மிக விருப்பமானதாக 'பய்ரூஹா' தோட்டம் இருந்தது. பள்ளி வாசலுக்கு அருகில் அது அமைந்திருந்தது. நபி(ஸல்) அவர்கள் அதன் உள்ளே போய், அதன் சுவையானத் தண்ணீரைக் குடிப்பார்கள். ''உங்களுக்கு விருப்பமானவற்றை (இறைவழியில்) செலவழிக்காதவரை நீங்கள் நன்மையினை அடைந்திட முடியாது. மேலும் எதனை நீங்கள் செலவழித்தாலும் திண்ணமாக, அல்லாஹ் அதனை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.'' 3:92 வசனம் இறங்கியதும், நபி (ஸல்) அவர்களிடம் அபூதல்ஹா வந்தார். ''இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் உங்கள் மீது 3:92 வசனத்தை இறக்கி உள்ளான். என் சொத்தில் எனக்கு மிகவும் விருப்பமானது 'பய்ரூஹா' தான். அதை அல்லாஹ்வின் வழியில் (நான்) தர்மம் (செய்கிறேன்). அதன் நன்மையை, நற்கூலியை அல்லாஹ்விடமே ஆதரவு வைக்கிறேன். இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் நாட்டப்படி அதை நீங்கள் (செலவு) செய்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், ''நல்லது. இது லாபம் தரும் சொத்தாகும். இது லாபம் தரும் சொத்தாகும் என (இருமுறைக்) கூறிவிட்டு ''இது விஷயமாக நீ கூறியதைக் கேட்டேன். உன் நெருங்கிய உறவினர்களுக்கு இதை பங்கீடு செய்வதை நான் விரும்புகிறேன்'' என்றும் கூறினார்கள். உடனே அபூதல்ஹா அவர்கள் ''இறைத்தூதர் அவர்களே! அப்படியே செய்கிறேன்'' என்று கூறிவிட்டு, அபூதல்ஹா அந்த தோட்டத்தை தன் நெருங்கிய உறவினர்களுக்கும் தன் சிறிய தந்தையின் மக்களுக்கும் பங்கீடு செய்தார். (அறிவிப்பவர்: அனஸ்(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 320)

''பிரதி உபகாரம் (உதவிக்கு உதவி) என வாழ்பவர், உறவை இணைத்து வாழ்பவர் அல்லர். எனினும் தன் உறவினர் தன்னை துண்டித்தாலும், இணைத்து வாழ்பவரே இணைத்து வாழ்பவர் ஆவார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள் (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 322)

''உறவு என்பது, அர்ஷை பிடித்துக் கொண்டு ''என்னை இணைத்து வாழ்பவரை அல்லாஹ் இணைத்துக் கொள்வான். என்னைப் பிரித்து விடுபவரை அல்லாஹ்வும் பிரித்து விடுவான்'' என்று கூறும்'' என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 323)

''இன்ன கூட்டத்தார் எனக்கு விருப்பமானவர்களல்லர். நிச்சயமாக எனக்கு விருப்பமானவர்கள், அல்லாஹ்வும், அவனை நம்பிக்கை கொண்ட நல்ல அடியார்களும் தான். எனினும் அந்தக் கூட்டத்தாரிடம் எனது இரத்த பந்தம் உள்ளது. அதை அதன் (சேர்த்துக் கொள்ளுதல் எனும்) நீரால் நனைத்துக் கொள்வேன்'' என ஒளிவு மறைவு இன்றி நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். (அறிவிப்பவர்: அபூஅப்துல்லாஹ் என்ற அம்ரு இப்னு ஆஸ்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 330)

நபி (ஸல்) அவர்களிடம், ''இறைத்தூதர் அவர்களே! சொர்க்கத்தில் என்னை நுழையச் செய்கின்ற, நரகிலிருந்து என்னைத் தூரமாக்கி விடுகின்ற ஒரு செயலை என்னிடம் கூறுங்கள்'' என்று ஒருவர் கேட்டார். ''நீ அல்லாஹ்வை வணங்குவீராக! எதையும் அவனுக்கு இணைவைக்காதீர்! தொழுகையைப் பேணுவீராக! ஜகாத் கொடுப்பீராக! உறவினரை இணைந்து வாழ்வீராக!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஅய்யூப் என்ற காலித் இப்னு ஸைத் அன்சாரீ (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 331)

''உங்களில் ஒருவர் நோன்பு துறந்தால், ஒரு பேரீத்தம் பழத்தால் நோன்பைத் துறக்கட்டும். அதுவே அபிவிருத்தி தரும். ஒரு பேரீத்தம் பழம் இல்லையென்றால், தண்ணீர் (மூலம் நோன்பு துறக்கட்டும்) அதுவே சுகாதாரமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ''ஏழைக்கு தர்மம் தருவது, ஒரு தர்ம(க் கூலி)தான். உறவினருக்கு தர்மம் வழங்குவது இரண்டு (கூலி)களாகும். ஒன்று தர்மம், மற்றொன்று உறவை இணைத்து வாழ்தல் என்றும் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸல்மான் இப்னு ஆமிர்(ரலி)  அவர்கள் (திர்மீதி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 332)

"ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு