Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேற்று ! இன்று ! நாளை! 1

அதிரைநிருபர் பதிப்பகம் | February 17, 2016 | , , , , , , ,

இரண்டாம் பாகம் : பகுதி இரண்டு

தமிழ் நாட்டில் பெண்ணைப் பார்த்து திருமணம் பேசி முடிப்பது என்பது பாரம்பரியமான ஒரு பண்பாட்டின் பரிமாணம். ‘ தாயை தண்ணீர் எடுக்கும் இடத்தில் பார்த்தால் , மகளை வீட்டில் போய் பார்க்கவேண்டியதில்லை ‘ என்பதும் நம்மிடையே வழங்கப்படும் பழமொழிதான். காரணம் என்னவென்றால் அன்பு, பண்பு, அடக்கம், ஒடுக்கம் ஆகியவை வெளிப்படும் இடம் தண்ணீர் எடுக்கும் நீர் நிலைகள் அல்லது குழாயடிகள்தான். குடங்களை கேடயமாகத் தாங்கி பெண்கள் ஒருவருக்கொருவர் போட்டுக் கொள்ளும் குழாயடிச் சண்டைகள் தமிழ்நாடெங்கும் காலைவேளைகளில் காணக்கிடைக்கும் காட்சிகள்.

அதேபோல் சம்பந்தா சம்பந்தமில்லாத சத்தம் அதிகமாக கேட்கும் இடத்தையும் நாம் சந்தைக்கடை என்று வர்ணிப்போம். பள்ளி அல்லது கல்லூரி வகுப்புகளில் மாணவர்கள் படிப்பில் ஈடுபடாமல், சத்தமாகப் பேசிக் கொண்டு இருந்தால் இது என்ன வகுப்பா இல்லை சந்தைக் கடையா என்று சத்தம் போடும் ஆசிரியர்களை நமது அனுபவத்தில் கண்டு இருக்கிறோம். 

இதேபோல் குழாயடி, சந்தைக்கடை போன்ற உதாரணங்களுடன் சட்டமன்றத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தனிமனிதர்களிடையே தோன்றிய பகைமையின் காரணமாக பாராளுமன்ற , சட்டமன்ற ஜனநாயக மரபுகள் கூவம் நதியில் குளிக்கப் போய்விட்டன. காலம் காலமாக கற்றோராலும் கல்லாதோராலும் கட்டிக் காக்கப்பட்ட மனிதப் பண்புகளும் நடை முறை நாகரிகங்களும் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. அண்மைக் காலங்களில் இதன் நிருபணம் அதிகமாகி விட்டது. 

இன்றைய சட்டமன்ற நிகழ்வுகளை ஒப்பீடாக வைத்து பகுருதீன் ஒரு கற்பனை சித்திரத்தைத் தீட்டி இருக்கிறார். சற்று அதையும் பார்ப்போமே!

வானளாவி வளர்ந்த ஒரு மரத்தில் வட்ட மேசை மாநாடு !  கிளைக்கு ஒன்றாக கீசாரிப்பட்ட ஷைத்தான்கள் உட்கார்ந்து நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தன. அவைகளின் முகங்களில் ஒருவித ஏக்கம் குடிகொண்டிருந்தது. அன்றைக்கு அவர்களின் பொழுது போக்குக்கு ‘ பசாது’ ஒன்றுமில்லையே என்று ஷைத்தான்கள் கவலைப் பட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த நேரம் ஒரு கரும்புகை எழுந்தது. மெல்ல மெல்ல அந்தக் கரும்புகை, வெண்புகையாக மாறியது. அந்த வெண்புகையிலிருந்து வெளிப்பட்டது ஒரு ஜின். அந்த ஜின்னின் கையில் ஒரு தமிழ் செய்தித்தாள்! ஷைத்தான்கள் தாங்கள் உட்கார்ந்திருந்த வட்ட மேசையிலிருந்து ஆர்வமாக எழுந்தன வானுலகம் போன ஜின்னை வழிமறித்தன. தங்களின் ‘பசாதுப்’ பசிக்கு இரை கிடைத்துவிட்டது என்ற ஆர்வம் அவைகளிடையே வெளிப்பட்டது.

ஹாவ்! ஹாவ்! என்று சப்தமிட்டவாறே ஷைத்தான்கள் ஜின்னை சூழ்ந்தன. ஜின் அமைதியாக தனது கரத்திலிருந்த செய்தித்தாளை நீட்டியது. நாய்கள் ரொட்டித் துண்டைக் கவ்வுவது போல அதைப் பறித்த ஷைத்தான்கள் செய்தித்தாளை விரித்துப் படித்தன. தலைப்புச் செய்தி இதுதான். 

“தமிழக சட்ட மன்றம் நாளை கூடுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மக்கள் முதல்வரின் அனுமதிகேட்டு வாயைத் திறந்த மன்றத்தின் முதல்வர் அறிவிப்பு! பரப்பரப்பான சூழ்நிலையில் கூடும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க் கட்சிகளும் அவைகளை எதிர்கொள்ள ஆளுங்கட்சியும் வரிந்து கட்டுகின்றன.” என்று அச்சடிக்கப்பட்ட செய்திகள் ‘நச்’ என்று இருந்தன. ஷைத்தான்களின் முகங்களில் நமுட்டுச் சிரிப்பு. 

ஷைத்தான்களில் சற்று விபரம் தெரிந்த ஒரு ஷைத்தான் இப்படிச் சொன்னது. “ கடந்த காலங்களில் சட்டமன்றம் கூடும்போது மக்கள் பிரச்னைகளை எழுப்ப எதிர்க் கட்சிகளும் அவற்றை எதிர்கொள்ள ஆளுங்கட்சியும் தயாராகின்றன என்றுதான் செய்திகள் வரும். ஆனால் இப்போது வரிந்து கட்டுகின்றன என்று ஊடகங்களே செய்திகள் வெளியிடுகின்றன என்றால் ஏதோ குஸ்தி நடக்கபோகிறது அதனால் நமக்கெல்லாம் நிறைய தீனி இருக்கிறது என்று அர்த்தம் “ என்று சொன்னது. 

“அப்படியானால் நாமும் போய் என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிடுவோமா? “ என்று ஒரு ஷைத்தான் ஆர்வமுடன் கேட்டது. இந்தப் பிரேரணை ஒருமனதாக நிறைவேறியது. அவை உடனே கிளம்பின. ஒரு வாயு மண்டலம், கருநிறமாக எழுந்தது. மூன்று ஷைத்தான்களும் கண்சிமிட்டும் நேரத்தில் பூலோகத்தில் வந்திறங்கின. அவை இறங்கிய ஊர் சிங்காரச் சென்னை. சென்றடைந்த இடம் - சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கும் விடுதி. 

விடிந்தால் சட்ட மன்றம் கூடுகிறது. ஆளுநர் உரை அது இது என்று பாதுகாப்புப் பரபரப்பு. அதே நேரம் சட்ட மன்ற உறுப்பினர் விடுதியின் அனைத்து அறைகளும் மூடப்பட்டிருந்தன. ஒரே ஒரு துணிச்சலான ஷைத்தான் மட்டும் சாவித்துவாரத்தின் வழியே உற்றுப் பார்த்தது. உள்ளே உறுப்பினர்கள் அடுத்த நாள் கூட்டத்துக்கு அவசர அவசரமாகத் தயாராகி வருவதை அறிந்தது. ஆமாம்! உறுப்பினர்களின் உணவு மேஜை முன்னே சோமபானமும் சுறா பானமும். அருகில் அவர்கள் கடித்துத் துப்பிய செந்நிறம் தடவப்பட்ட கோழிகளின் எலும்புத் துண்டுகள். 

சரி ! அடுத்த அறையைப் பார்ப்போம் என்று பார்த்தால் அங்கும் அதே காட்சிகள். ஆளும் கட்சி உறுப்பினர்களின் அறைகளில் மட்டும்தானா என்றால் இல்லை! எல்லாக் கட்சி உறுப்பினர்களின் அறைகளிலும் இதே காட்சிகள். சரிதான்! இந்த மாதிரி அத்தியாவசிய விஷயங்களில் எல்லோரும் ஒற்றுமையைக் கடைப்பிடிக்கிறார்கள் என்று ஷைத்தான்கள் சந்தோஷமாகப் பேசிக் கொண்டன. 

அதே நேரம், தங்களை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்த மக்களுக்குப் பிரதிநிதிகளாக பணியாற்றுகிறார்களோ இல்லையோ, பூலோகத்தில் தங்களுடைய பிரதிநிதிகளாக இவர்கள் வேலை செய்யத் தயாராகிறார்கள் என்பதை ஒரு ஷைத்தான் சுட்டிக் காட்டியது. இந்த சந்தோஷத்தைத் தாங்களும் கொண்டாட வேண்டுமென்று விடுதிக்கு அருகிலிருக்கும் டாஸ்மாக் பாருக்கு மூன்று ஷைத்தான்களும் சென்று மொடாக்குடி குடித்தன. 

குடித்துவிட்டு வெளியே வந்த ஷைத்தான்கள் நிலை தடுமாறி டாஸ்மாக் கடை வாசலில் மண்ணில் புரண்டு கிடக்கும் மனித ஷைத்தான்களுடன் தாங்களும் தடுமாறி விழுந்து புரண்டன. ஒரே ஒரு ஷைத்தான் மட்டும் கேரளாவுக்கு போன் போட்டு அங்கிருந்த ஒரு மரக்கிளையிலிருந்து  குட்டிச்சாத்தானை  அழைத்தது, “ மை டியர் குட்டிச் சாத்தான்! அடுத்த பஸ்ஸைப் பிடித்து அவசரமாக சென்னைக்கு வா !” என்று தகவலை தாக்கீதாக அனுப்பிவிட்டு , தானும் சாலை ஓரமாக சக ஷைத்தான்களுடன் படுத்துக் கொண்டது. 

பொழுதுவிடிந்தது! குட்டிச்சாத்தானும் குறிப்பிட்டபடி வந்து ஷைத்தான்களை துயிலெழுப்ப நால்வரும் கூப்பிடு தூரத்தில் இருந்த கூவத்தில் குளித்துவிட்டு சட்டமன்றம் நோக்கி நடந்தே சென்றன. சட்ட மன்றத்தின் பொதுமக்கள் நுழையும் வாயிலில் காத்திருக்காமல் அனைவரும் காற்றாக மாறி ‘ விஷ் ‘ என்று சட்டமன்றத்தின் பார்வையாளர் பகுதியில் ஒரு வசதியான இடத்தில் அமர்ந்தனர். 

அவை நடவடிக்கைகள் ஆரம்பமாயின. ஆளுநர் வந்தார். அம்பிகையே ஈஸ்வரியே என்று ஆலாபனை பாடிவிட்டு அமைச்சரவை தயாரித்துத் தந்த உரையைப் படித்துவிட்டு , சர்க்கரை போடாத காபியையும் குடித்துவிட்டு கிளம்பிப் போனார். 

ஆளுநர் உரையின் மீது விவாதம் ஆரம்பமானது. அவைத்தலைவர் சூரிய நமஸ்காரம் செய்வதுபோல் வானை நோக்கிக் கையை உயர்த்தி தென் சென்னைப் பக்கம் நோக்கி கும்பிட்டு விட்டு தனது இருக்கையில் அமர்ந்தார். 

விவாதம் தொடங்கலாம் என்று அவைத்தலைவர் அறிவித்ததுதான் தாமதம் எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்திருந்த திமுகவினர் எழுந்தனர். ஆளுநர் உரையை கண்டிக்கிறோம் என்றார்கள் . சிறை தண்டனை அளிக்கப்பட்டு ஜாமீனில் இருக்கும் சீதேவியைப் புகழ்வதில் ஆளுநரும் தனது பங்கை ஆற்றியதை எதிர்த்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார்கள் . உடனே அந்தக் கட்சி உறுப்பினர்களும் கூடவே ஆதரவுக் கட்சிகளும் ஒரு விடுமுறை உற்சாகத்தில் வெளியேறின. 

அமைச்சர்கள் அமரும் பகுதியில் ஒரு அமைச்சர் தனது காலுக்கு ஒரு தைல பாட்டிலில் இருந்து தைலம் தடவிக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்த குட்டி சாத்தான் , “சாச்சா! அவர் என்ன தடவுகிறார்? ஏன் தடவுகிறார் என்று கேட்டது?” உடனே பெரிய சைத்தான் சொன்னது, “ ஒன்றுமில்லை! அண்மையில் நடந்த ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது குத்தாட்டம் போட்ட அமைச்சர் அவர். அந்த வலி ஆடும்போது அவருக்குத் தெரியவில்லை- தெரிந்து கொள்ளும் நிலையிலும் அவர் இல்லை. இப்போது கால்வலிக்கிறது அதனால் தைலம் தேய்த்துக் கொண்டிருக்கிறார்" என்றது. அமைச்சர்களும் இப்படி ஆடுவார்களா என்ற சந்தேகத்துடன் அனைத்து ஷைத்தான்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மீண்டும் சட்டமன்றத்தின் நடுப்பகுதியில் கூச்சல் கேட்டது. 

வெளிநடப்பு செய்த எதிர்க் கட்சி உறுப்பினர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். 

அடுத்து ஒரு உறுப்பினர் , சட்டமன்றத்துக்கு வராத தலைவர்களைப் பற்றி ஒரு வினா எழுப்பினார். அதற்கு ஒரு ஆளும் கட்சி உறுப்பினர் அப்படி யாரும் வராமல் இல்லை ஒரு கிழவரும் ஒரு சிடிஜனும்தான் வருவதில்லை என்று கூறினார். கிழவர் யார் என்று அவரது கட்சியினருக்கும் சிடிசன் என்று அதாவது குடிமகன் என்று யாரைச் சொல்கிறார்கள் என்று அவரது கட்சியினருக்கும் விளங்கி அதை முன்னிட்டு சட்டமன்றம் சற்று நேரம் கோயம்பேடு ஹோல்சேல் மார்கெட் ஆனது. 

இப்படிப் பட்ட வார்த்தைகளால் மற்றவர்களின் உணர்வுகளைக் கிளறிப் பார்ப்பதும் தகுதி இழந்தவர்களுக்கு அளவுக்கு மீறி புகழாரம் சூட்டுவதும் இந்த மன்றத்தில் இப்போது நடை முறை என்று புரியாத ஷைத்தான்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டன. 

திமுக உறுப்பினர் ஜே. அன்பழகன் எழுந்து தங்கள் கட்சி உறுப்பினர்கள் அமரும் இடத்தில் மூட்டைப் பூச்சி கடிப்பதாக ஒரு கேள்வி எழுப்பினார். அதற்கு ஒரு அமைச்சர் இப்படியெல்லாம் கோமாளித்தனமாக பேசாதீர்கள் என்றதுதான் தாமதம் உடனே அங்கு ஒரு குருஷேத்திரப் போர் மூண்டது. அவைக் காவலர்கள் அழைக்கப்பட்டனர். அனைத்து திமுக உறுப்பினர்களும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இந்தக் கலவரத்தில் பல உறுப்பினர்களின் வேஷ்டிகள் அவிழ்ந்து விழுந்தன; அல்லது உருவப்பட்டன. பெண் உறுப்பினர்கள் தலை கவிழ்ந்தனர். 

இதைக் கண்ட ஷைத்தான்களுக்கு சந்தோசம் எல்லை மீறியது. உணவு இடைவேளை ! ஷைத்தான்கள் சட்டமன்றத்தை விட்டு வெளியே வந்தன. உணவுக்குப் பின் மீண்டும் உள்ளே போகவேண்டுமா என்ற பொருள்பட ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டன. மூத்த ஷைத்தான் பேசியது, “ இந்த பூலோகத்தில் நமக்குப் பிரதிநிதிகளாய் இந்த மன்ற உறுப்பினர்கள் இருக்கும்வரை நாம் பூலோகத்துக்கு வரவேண்டிய வேலையே இல்லை. நமது வேலையைத்தான் இவர்கள் பார்க்கிறார்கள் . ஆகவே நாம் மீண்டும் நமது மரத்துக்கே  போய் நிரந்தர ஒய்வு எடுக்கலாம் “ என்று சொல்லி கண்ணை மூடின ; உடனே உயரப்பறந்தன. குட்டிச் சாத்தானும் ஒரு ஆட்டோ பிடித்து கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்குப் போனது. - என்று சித்திரம் தீட்டினார் பகுருதீன். 

இதோ! நான் பரிமாறும் ஒரு பழைய சோறும் ஊறுகாயும். 

முதலமைச்சர் காமராஜர்! அறிஞர் அண்ணா எதிர்க் கட்சித் தலைவர்! விலைவாசி உயர்வைப் பற்றி விவாதம்! அண்ணாவுக்கு வழங்கப்பட்டதோ கால்மணி நேரம். அவர் பேசியதோ முக்கால் மணி நேரம். காமராசர் பேச்சை ரசித்துக் கொண்டே எவரையும் குறுக்கிடக் கூடாது என்று கண்ணாலேயே உத்தரவு பிறப்பிக்கிறார். அண்ணா தனது பேச்சை நிறைவு செய்யும் போது, “ முதலமைச்சர் காமராசருக்கு , விலைவாசி உயர்வால் குடும்பங்கள் படும் கஷ்டங்கள் புரியாது. காரணம் அவர் பிரம்மச்சாரி. தனிக்கட்டை. குடும்பம் நடத்திப் பார்த்தால்தான் குடும்பங்கள் படும் கஷ்டம் தெரியும் ! “ என்று குறிப்பிட்டார். 

அண்ணாவுடைய பேச்சுக்கு அன்றைய சட்ட மன்ற உறுப்பினர் அனந்தநாயகி அம்மையார் பதில் அளித்தார். காமராஜரைப் பற்றி அண்ணா குறிப்பிட்டது பற்றி அவருக்கு கோபம் கொப்பளித்தது. “அண்ணா இப்படி முதல்வர் காமராசரைப் பற்றிக் கூறுகிறார். இவர் இப்படிப் பேசுவதால்தான் ஆண்டவன் இவருக்கு குழந்தையே இல்லாமல் செய்துவிட்டான்'. என்றார் அனந்த நாயகி. 

அவையில் இருந்த காமராஜர் உடனே எழுந்து கோபமாக தனது அறைக்குச் சென்றார். அனந்த நாயகிக்கு காமராஜரிடமிருந்து வந்தது ஒரு அவசர அழைப்பு. காமராஜர் தனது அறைக்கு வந்த அனந்த நாயகியிடம், “ஏம்மா! அண்ணாத்துரை அப்படி என்ன இல்லாததை சொல்லிவிட்டார். நான் பிரம்மச்சாரி தானே! ஆனால் அதற்காக நீ ஒரு பெண்ணாக இருந்தும் அண்ணாதுரைக்கு குழந்தை இல்லை என்று குத்திக் காட்டுகிறாயே அவர் மனம் எவ்வளவு வருத்தப்படும்? அவரது மனைவி இதைக் கேள்விப் பட்டால் எவ்வளவு வருத்தப்படுவார்? உடனே போய் அவரிடம் மன்னிப்புக் கேள்!" என்று சொன்னார். 

அனந்தனாயகியும் அவ்வாறே செய்தார். இப்போது சட்ட மன்றம் நடைபெறும் இதே இடத்தில்தான் இந்த நிகழ்வும் நடந்தது. 

ஒரு தலைவரை வாய்க்குவந்தபடிஎல்லாம் வசைபாடக் கூடாது என்று பயிற்சியளிக்கும் பாசறையாக அன்றைய சட்டமன்றம் இருந்தது. இன்றோ , எப்படிப் பேசினால் எதிர்க் கட்சிகளை சீண்டலாம் என்றே பயிற்சியளிக்கப்படுகிறது. முதல்வரை திருப்தி செய்வதற்காகவே பண்பாடற்ற வார்த்தைகள் பரிமாறப்படுகின்றன. அதைப் பார்த்தும் கேட்டும் முதல்வரும் குலுங்கக் குலுங்க சிரிக்கிறார். சபை நாகரிகமும் சந்தி சிரிக்கிறது. 

இப்படிப்பட்ட நாகரிகமற்ற அரசியல் அவலங்கள் இப்போது உச்சநிலையில் நின்று நிலவக்காரணம் நேற்றைய அரசியல் என்பது கட்சி சார்ந்த , கொள்கை சார்ந்த அரசியல். ஆனால் இன்றைய அரசியல் தனிநபர்களை முன்னிறுத்தி நடத்தப்படும் துதிபாடும் அரசியல். இதற்கு உதாரணம் எம்ஜியார், கருணாநிதி , ஜெயலலிதா, நரேந்திர மோடி ஆகியோர் மட்டுமல்ல மறைந்த மூப்பனார் முதல் வாசன் வரையும், வைகோ முதல் விஜயகாந்த் வரையும் சரத் குமார் முதல் மருத்துவர் ஐயா வரையும் மட்டுமல்லாமல் இயக்கங்களை இயக்குவோர் வரையும் கூட நீளும். நாளை என்ன நடக்குமோ?

இன்ஷா அல்லாஹ் அடுத்தவாரம் பாராளுமன்றத்தில் சந்திக்கலாம்.

ஆக்கம்: முத்துப் பேட்டை பகுருதீன். B. Sc; 
கலந்தாய்வு மற்றும் உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி.

1 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

/இன்றைய அரசியல் தனிநபர்களை துதிபாடும்அரசியல்/ஆளும்கட்சி அமைச்சர்கள் கூட சட்டமன்றத்தில் அவர்களின் நாற்காலியில் சாய்ந்து உட்காராமல் முதுகு எலும்பு ராமனின் வில்போல் வலைந்தே போனது.இவர்கள் தந்தைபெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் வாரிசுகளாம்.வெட்கம்!வெட்கம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு