Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வருக ரமலானே ! 38

அதிரைநிருபர் பதிப்பகம் | May 26, 2016 | , , , , ,

வருக வருகவே வாரித் தருகவே
வான் மறை ஈந்து வாழ்வழி வகுத்த
வளமான மாதமே வருக வருகவே

வான்பிறை ஒன்றில் துவங்கி
வளர்பிறை பாதி தேய்பிறை மீதி
மாதம் முழுவதும்
வேதம் ஒலித்திட வருக வருகவே

பதினோரு மாதங்கள்
புதிரோடு கடக்க
புதிதாக உதிக்கும் ரமலானே
புதிர்களை அவிழ்க்க
விடைகளும் விளங்க வருக வருகவே

பசிப்பிணி உணர பட்டினி அறிய
புசித்திட உணவு பக்கத்தில் இருக்க
படைத்தவன் அருள் வேண்டி
பொறுமையைத் தர வருக வருகவே

தீய சக்திகளைக் கட்டிப்போடவும்
தீனின் கீர்த்திகளை உலகம் போற்றவும்
இரவுகள் யாவும் பிரகாசமாக
இலங்க வைக்கவே வருக வருகவே

தொழுது வணங்கவும் அழுது கேட்கவும்
கேட்டவை யாவும் கூடுதலாய்க் கிடைக்கவும்
அளவற்ற அருளாளனின்
அன்பைப் பொழிந்திட வருக வருகவே

மறுமையில் வரவு வைக்க
இம்மையின் செலவே ஏழைக்கு ஈவது
தர்மத்தை எமக்குக் கடமையாக்கிய
தூய மாதமே வருக வருகவே

பாவக் கறைகளைத் தூரமாக்கிட
மாதம் முழுவதும் நோன்பு நோற்றிட
வாழும் வாழ்க்கையில் அர்த்தம் சேர்த்திட
வான்புகழ் ரமலானே வருக வருகவே!


-v-v-v-v-v-v-v- ரமலான் ஸ்பெஷல் போனஸ் கவிதை -v-v-v-v-v-v-v-

நினைவிருக்கா?

வெட்டிக்குளம் நினைவிருக்கா
வேட்டிகட்டு நினைவிருக்கா
மேற்குத் திசை வானத்தின்
மேகமூட்டம் நினைவிருக்கா

மின்னல் கீற்றைப் போல
வெட்கப் புன்னகை போல
மறைவாகவும் தெளிவாகவும்
முதற்பிறை நினைவிருக்கா

உறைமோர் நினைவிருக்கா
உணவுவகை நினைவிருக்கா
ஊர்முழுக்க ஒலிக்கும்
உபரி வணக்கம் நினைவிருக்கா

இஞ்சித் தேநீர் நினைவிருக்கா
இறைவேதம் நினைவிருக்கா
கொஞ்சம்கொஞ்சம் வாய்ப்பளித்த
ஓதும் சபை நினைவிருக்கா

நள்ளிரவு நினைவிருக்கா
நண்பர்கள் நினைவிருக்கா
பள்ளிவாசல் மைதான
கிளித்தட்டு நினைவிருக்கா

கடந்த காலம் நினைவிருக்கா
செய்த பாவம் நினைவிருக்கா
சென்ற வருட ரமலானில்
செய்த சபதம் நினைவிருக்கா

நல்ல செயல் செய்திடவும்
நல்ல எண்ணம் கொண்டிடவும்
சென்ற வருட ரமலானின்
துவக்க சிந்தனை நினைவிருக்கா

அடுத்தடுத்த மாதங்களில்
அத்தனையும் குறைந்துபோய்
அற்ப உலக ஆசைகளில்
அலைகழிந்தது நினைவிருக்கா

பேரருளாளன் பரிசாக
மேலுமொரு வாய்ப்பாக
இந்த வருட ரமலானை
இன்முகமாய் வரவேற்று

நினைவில் வைத்துக்கொள்ள
நற் செயல்கள் தேர்ந்தெடுப்போம்
எக் கணமும் மறக்காமல்
இறைமார்க்கம் பேணிடுவோம்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

38 Responses So Far:

Ebrahim Ansari said...

வெட்டிக்குளம் நினைவிருக்கு- " சமரண்டா" வேட்டி நினைவிருக்கு-

பிறைபார்க்க படித்துறையில் கூடும் கூட்டம் நினைவிருக்கு -

சாயங்கால நேர சர்பத் கடை நினைவிருக்கு அந்த சர்பத்தில் மிதக்கும் சப்ஜா விதையும் நினைவிருக்கு -

கஞ்சிக் கமிட்டி வசூலிக்கும் இரண்டு ரூபாய் நினைவிருக்கு-

கஞ்சி வாங்க அசருக்குப் பிறகு தூக்கும் அடுக்குச்சட்டி நினைவிருக்கு-

வாடா வாங்க வரிசையில் நின்றது நினைவிருக்கு-

சாபு பள்ளியில் அர் - ரஹ்மான் ஓதிக்கொண்டு ஆமீன் அல்லாஹ் கோஷம் போட்டு தெருக்களில் ஊர்வலம் போனது நினைவிருக்கு-

வாகை மரத்தில் ஊஞ்சல் பலகை போட்டு ஆளுக்கு இருபத்தி ஐந்து ஆட்டத்துக்கு அரையணா வாங்கியது நினைவு இருக்கு-

சில்லுப் பந்து விளையாட்டு நினைவு இருக்கு-

தராவீஹுப் பிறகு வாங்கும் சமூசா நார்சா நினைவு இருக்கு-

நார்சா பகிரும் நேரம் வரும்வரை விளையாடிய உச்சு உருட்டு பளிங்கு ரவை விளையாட்டு நினைவிருக்கு-

இருபத்தி ஏழாம் கிழமை ரொட்டிக் கறியும் நினைவிருக்கு.

அழியாத கோலங்கள்.

crown said...

வருக வருகவே வாரித் தருகவே
வான் மறை ஈந்து வாழ்வழி வகுத்த
வளமான மாதமே வருக வருகவே
--------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.அல்ஹம்துலில்லாஹ் ரமலான் அருள் மாதம் ஆரம்பம் . வழக்கம்போல் வளமான கவிதை நயம்!எல்லாருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.

crown said...

வான்பிறை ஒன்றில் துவங்கி
வளர்பிறை பாதி தேய்பிறை மீதி
மாதம் முழுவதும்
வேதம் ஒலித்திட வருக வருகவே
-----------------------------------------
வான் பிறை ஒன்றில் தொடங்கும் இந்த விசயத்தில் கவிஞரே யாரும் ஒன்றி வருவதில்லை என்பது குறையே!"
மாதம் முழுவதும்
வேதம் ஒலித்திட வருக வருகவே""
-ஆமீன்.

crown said...

பதினோரு மாதங்கள்
புதிரோடு கடக்க
புதிதாக உதிக்கும் ரமலானே
புதிர்களை அவிழ்க்க
விடைகளும் விளங்க வருக வருகவே
--------------------------------------------
நிம்மதி தரும் நல் மாதம்!
முழுமதியில் நிறைவு பெரும் !
முகமதியர் அனைவருக்கும் ஆனந்தம்!
பேர் இன்பம்!
அல்ஹம்துலில்லாஹ்!

crown said...

பசிப்பிணி உணர பட்டினி அறிய
புசித்திட உணவு பக்கத்தில் இருக்க
படைத்தவன் அருள் வேண்டி
பொறுமையைத் தர வருக வருகவே
-------------------------------------------
உடலுக்கு பட்டினி ஆன்மாவுக்கு தீனி!(தீனுக்கு தீனி!)

Anonymous said...

புனித ரமழானே வருக!!!
எங்களனைவருக்கும் புத்துணர்வை தருக!!!

சங்கை மிகு ரமழானே வருக!!!
எம் சகோதரத்துவத்தை மலரச்செய்க!!!

கண்மணியான ரமழானே வருக!!!
எம் கஷ்டங்களனைத்தையும் போக்குக!!!

கருணையுள்ள ரஹ்மானின் கிருபையே!!!
எங்களனைவருக்கும் நல்லருள் புரிக!!!

தராவீஹ் எனும் தாரக மந்திரம் பொதிந்த மாதமே!!!
எமக்கு தடையில்லா பாக்கியங்கள் நிரம்பத்தருக!!!

லைலத்துல் கத்ரு எனும் இரவைக்கொண்ட மாதமே!!!
எமக்கு எல்லையில்லா கருணைகளை எந்நாளும் தருக!!!

எளியோரின் நிலை செல்வந்தரும் அறியச்செய்ய வரும் மாதமே!!!
எங்கள் எல்லாத்தியாகங்களையும் இறைவனிடத்தில் கொண்டு போய் சேர்க்குக!!!

இந்த சங்கைமிகு ரமழானை எங்கோ ஒரு மூலையிலிருந்து உளம் குளிர, புறம் நடுங்க வாழ்த்தி வரவேற்று நிற்கின்றேன் இறைவனிடத்தில் இரு கையேந்தியவனாக........

மு.செ.மு.நெய்னா முஹம்மது

crown said...

தீய சக்திகளைக் கட்டிப்போடவும்
தீனின் கீர்த்திகளை உலகம் போற்றவும்
இரவுகள் யாவும் பிரகாசமாக
இலங்க வைக்கவே வருக வருகவே
-------------------------------------------
துரதிஸ்ட வசமாய்! நம் இளைஞர்காள் !சைத்தான் வசம் மாட்டி! புனித இரவை பாழடித்து வாழ்வின் சூதுகவ்வும் இருளாய் ஆக்கிவைத்திருப்பது நம் ஊரின் சாபம்!அல்லாஹ்வின் கோபத்திலிருந்து இனியேனும் விடுபட அல்லாஹ்வை அஞ்சி வாழ்வோமாக!!

crown said...

தொழுது வணங்கவும் அழுது கேட்கவும்
கேட்டவை யாவும் கூடுதலாய்க் கிடைக்கவும்
அளவற்ற அருளாளனின்
அன்பைப் பொழிந்திட வருக வருகவே
-----------------------------------------
ஆமீன்,ஆமீன்,ஆமின்

crown said...

மறுமையில் வரவு வைக்க
இம்மையின் செலவே ஏழைக்கு ஈவது
தர்மத்தை எமக்குக் கடமையாக்கிய
தூய மாதமே வருக வருகவே
------------------------------------------
எதற்கும் ஒரு விலையுண்டு! இங்கே நன்மைக்கு விலையாக நன்மையே கூலி!அல்லாஹ் கூலிகொடுப்பானாக!ஆமின்!

crown said...

பாவக் கறைகளைத் தூரமாக்கிட
மாதம் முழுவதும் நோன்பு நோற்றிட
வாழும் வாழ்க்கையில் அர்த்தம் சேர்த்திட
வான்புகழ் ரமலானே வருக வருகவே!
----------------------------------------
வருக வருகவே!

crown said...

வெட்டிக்குளம் நினைவிருக்கா
வேட்டிகட்டு நினைவிருக்கா
மேற்குத் திசை வானத்தின்
மேகமூட்டம் நினைவிருக்கா
-------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். வெட்டிவிட முடியாத அளவிற்கு நினைவுகளாய் நிறைந்திருக்கும் குளமல்லவா? அள்ள ,அள்ள குறையாத நிவைவல்லவா?

crown said...

மின்னல் கீற்றைப் போல
வெட்கப் புன்னகை போல
மறைவாகவும் தெளிவாகவும்
முதற்பிறை நினைவிருக்கா
----------------------------------
அது அரும்பு மீசைபோல் பூனைமுடி நியாபகம்! வெட்கப்புன்னகையில் நிலவு முகம் ! முதற்பிறையாய் அரும்பு மீசை!எத்தனை தவடை மழித்து எடுத்தாலும் இன்னும் நினைவில் மகிழ்வை தூண்டும் அந்த அரும்புமீசை!

crown said...

உறைமோர் நினைவிருக்கா
உணவுவகை நினைவிருக்கா
ஊர்முழுக்க ஒலிக்கும்
உபரி வணக்கம் நினைவிருக்கா
---------------------------------------
இருக்காதா பின்னே! அது சுவைதரும் லசிபோல் அள்ளவா?

crown said...

இஞ்சித் தேநீர் நினைவிருக்கா
இறைவேதம் நினைவிருக்கா
கொஞ்சம்கொஞ்சம் வாய்ப்பளித்த
ஓதும் சபை நினைவிருக்கா
-------------------------------------
எப்படி மறக்கும் இஞ்சித்தேனீர். நெஞ்சைவிட்டு ஒரு "இஞ்ச்" அளவிற்கு கூட நகராத நங்கூரம் அல்லவா? அந்த முத்தோர் சபையில் கிடைத்த இடம் என்றும் மனதில் நிரந்தரமாய் இடம்பிடித்தது அல்லவா?

crown said...

நள்ளிரவு நினைவிருக்கா
நண்பர்கள் நினைவிருக்கா
பள்ளிவாசல் மைதான
கிளித்தட்டு நினைவிருக்கா
--------------------------------
நம்புங்கள் நண்பர்கள் இதுபோல் விளையாடும் நினைவுகள் தட்டுத்தடுமாறமல் நினைவில் நிற்கிறது!ஆனாலும் நள்ளிரவில் நண்பருகளுடன் இருந்த நாட்கள் எங்களுக்கு இல்லை!வீட்டின் மேல் உள்ள "கிலி" அது!

crown said...

சில எழுத்துப்பிழைகளுக்கு மன்னிப்புகோருகிறேன்!

Yasir said...

யா அல்லாஹ் இந்த கண்ணியமான மாதத்தில் நாங்கள் முழுமையாக நல்ல அமல்களின்பால் எங்கள் கவனங்களை செலுத்தி உன்னை தொய்வின்றி வணங்கும் பாக்கியத்தை எங்கள் அனைவருக்கும் தந்தருள்வாயாக

எங்கெல்லாம் முஸ்லிம்கள் போரினாலும் / எதிரிகளின் துன்புறுத்தல்கலினாலும் கஷ்டப்படுகின்றார்களோ அவர்களின் கரங்களை வலுப்படுத்தி இந்த ரமலான் மாதத்தி ல்உன்னை நிம்மதியாக வணங்க்குவதற்க்கு உதவி செய் நாயனே

கவிக்காக்காவின் ரமலான் வரவேற்பு அருமை

எல்லாமே நினைவிருக்கு காக்கா...

Yasir said...

நல்வரவு சகோ.கிரவுன்....

//இஞ்சித்தேனீர். நெஞ்சைவிட்டு ஒரு "இஞ்ச்" அளவிற்கு கூட நகராத நங்கூரம் அல்லவா?/// வாயடைக்க வைக்கும் தமிழ்ப்புலமை.....அழகுக்கு அழகு கூட்டுகின்றது கிரவுனுரை..உடல் நலம் பேணிக்கொள்ளுங்கள்

crown said...

நல்வரவு சகோ.கிரவுன்....

//இஞ்சித்தேனீர். நெஞ்சைவிட்டு ஒரு "இஞ்ச்" அளவிற்கு கூட நகராத நங்கூரம் அல்லவா?/// வாயடைக்க வைக்கும் தமிழ்ப்புலமை.....அழகுக்கு அழகு கூட்டுகின்றது கிரவுனுரை..உடல் நலம் பேணிக்கொள்ளுங்கள்
--------------------------------------------------
நலமா? சகோதரரே! நான் நலம்!அல்லாஹ் அனைவருக்கும் இந்த ரமலானில் அவனின் அருளை வழங்கட்டும் ஆமின்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வருக வருக வென வாரித்தரும் நன்மைகள் பற்றிய நற்கவி, நமக்கு நல்வரவு!

நினைவிருக்கா என அன்றைய கால ஓட்டத்தை புரட்டிய இனிய கவி, ஏக்கம் தரும் வரவு!!

இக்கவிகளுக்கு தமிழ்த்தோரணை தந்து தொடர்ந்த க்ரவ்னாரின் வரவு, வரவுக்கு மேல் வரவு!!!

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Sabeer Abushahruk,

MashaAllah, a timely and very nice poem with excellent flow...

Welcoming the Month of Ramadan is welcoming the opportunities for spiritual reformation, with great expectations from God Almighty for acceptance of deeds and forgiveness.

The bonus poem recollects the past and advise us to be more committed.

Jazakkallah khairan

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

Abdul Razik said...

மாஷா அல்லாஹ் கவிச்சுவையால் புனித ரமளானின் இன்பங்களை வார்த்தைகளால் அள்ளிக்கொட்டிய கவிஞருக்கு வாழ்த்துக்கள்

Dear all, Please read the below mentioned hadeedh "How Special Ramadan"
Once Moosa (AS) asked Allah Ta'ala: O Allah ! You have granted me the honor and privilege of talking to you directly, Have you given this privilege to any other person? Allah Ta'ala replied, O!! Moosa during the last period I am going to send an ummat, who will be the Ummat of Mohammed (SAW) with dry lips, parched tongues, emaciated body with eyes sunken deep into their sockets, with livers dry and stomachs suffering the pangs of hunger- will call out to me (in dua) they will be much closer to me than you O Moosa! while you speak to me there are 70000 veils between you and me but at the time of iftaar there will not be a single veil between me and the fasting Ummati of Mohammed (SAW) O!! Moosa I have taken upon myself the responsibility that at the time of iftaar I will never refuse the dua of a fasting person!

Sub'hanallah!!

Abdul Razik
Dubai

ZAKIR HUSSAIN said...

ரமலான் மாதத்தில் வித்தியாசமான பதிவு உன் கவிதை. Keep it up.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

"ரமலான் கறீம்"

Yasir said...

மெய் சிலிர்க்க வைத்த சகோ. Abdul Razik இங்கு காட்டி இருக்கும் ஹதீஸ்.....யா அல்லாஹ் எங்கள் துவாவை கபூல்ச் செய்வாயாக ஆமீன்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா,

ரமலான் மாதத்தில் வித்தியாசமான பதிவு

JAZAKKALLAH HAIRA

ZAKIR HUSSAIN said...

ஓர் நல்ல செய்தி:

Channel 4 எனும் தொலைக்காட்சி நிலையம் London ல் இந்த ரமலான் மாதத்தில் சுபுஹுக்கான பாங்கு சொல்வதை நேரடி ஒலிபரப்பாக செய்ய ஆரம்பித்திருக்கிறது. அதே போல் மஃரிபு நேரத்துக்கும்.

crown said...

ZAKIR HUSSAIN சொன்னது…

ஓர் நல்ல செய்தி:

Channel 4 எனும் தொலைக்காட்சி நிலையம் London ல் இந்த ரமலான் மாதத்தில் சுபுஹுக்கான பாங்கு சொல்வதை நேரடி ஒலிபரப்பாக செய்ய ஆரம்பித்திருக்கிறது. அதே போல் மஃரிபு நேரத்துக்கும்.
------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். என்ன மருதுவ(ர்)காக்கா நலம்தானே? அல்ஹம்துலில்லாஹ் நல்லதொரு செய்தி!லண்டனின் இந்த பாங்கு(செயல்) நல்லதொருமாற்றம்!இதன் பங்களிப்பிற்கு நற்கூலி உண்டு!

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ரமலான் கரீம்.

இவ்வருட ரமலான் இறைவனின் பரிசு எனில், நோன்பு திறந்தபின் இஷா/தராவீஹ்ஹுக்கு முன் ராஜாமடம் நோக்கிய நடைப் பயற்சியில் உடன் வரும் உணர்வாய்/பரிசாய் கிரவுனின் பின்னூட்டங்கள்.

இவ்வருட ரமலானை வரவேற்றும் சென்ற வருடங்களின் ரமலானை நினைவுறுத்தியும் எழுதிய இந்தப் பதிவை எழுதும்போதைவிட, வாசித்தபோதைவிட கிரவுன் பகுதி பகுதியாக வாசித்துக்காட்டும்போதுதான் நான் மிகவும் ரசித்தேன்.

கிரவுன், என் பதிவுகளுக்குத் தங்களின் விளக்கவுரைகளை எனக்குக் கிடைத்த, பெரும்பாலும் எனக்கு மட்டுமே கிடைத்து வருகின்ற ஒரு அரிய கெளரவமாகவே கருதுகிறேன்.

அல்லாஹ் தங்களின் அனைத்து துஆக்களையும் இந்த ரமலானின் பொருட்டு கபூலாக்கித்தரவும் தங்களின் வியாபாரத்தில் விருத்தியேற்படுத்தவும் என் துஆ.

இன்னும் இப்பதிவை வாசித்து என்னுடன் சேர்ந்து ரமலானை வரவேற்கும் அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் அவரவர்கள் துஆக்கைளை கபூலாக்கித் தருவானாக, ஆமீன்.

வஸ்ஸலாம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜஸாக்கல்லாஹ் ஹைர்... காக்கா !

நோன்பு ஒன்று - அல்ஹம்துலில்லாஹ் சிறப்புடன் நிறைவுற்றது !

இப்போ நான் என்னா பன்னனும் !?

Anonymous said...

//மறுமையில் வரவு வைக்க
இம்மையின் செலவே ஏழைக்கு
ஈவது தர்மத்தை கடமை
யாக்கிய தூய மாதமே
வருக வருகவே//

[வாழ்கையின் வரவு செலவு கணக்கை வகை வகை படுத்தி காட்டும் கவிதை வரிகள். பாராட்டுக்குரியது.

சாப்பிட்ட கையால் காக்கா விரட்டாதவன் 'கல்'நெஞ்சைக்கூட கசிய வைக்கும் வரிகளாக இருக்கிறது.

இல்லார்க்கு ஈயும் பாக்கியத்தை அல்லாஹ் எனக்கு'அருளினானே 'என்ற நன்றி உணர்வோடு சிலர் கொடுப்பதாக தெரியவில்லை. இதிலும். ''சிலர் சுயவிளம்பர'' யுக்திகளையும் கையாளுவதாக புலப்படுகிறது. வலது கையால் கொடுப்பதை இடது' கை' க்கு தெரியாமல் கொடுப்பதே சிறந்த ஈகை.

வறியார்க்கு என்று ஈவதே ஈகை; மற்றெல்லாம் குறி எதிர்ப்பை நீரதுடைத்து' '[குறள் 221]

விளக்கம்:ஏழைகளுக்கு ஒன்றை கொடுப்பதே ஈகை:: மற்றதெல்லாம் குறிப்பிட்ட ஒரு சுய இலாபத்தை எதிர் பார்த்து கொடுப்பதாகும் 'என்று வள்ளுவரும் சொல்லி விட்டு போய் விட்டார்.

''யாஅல்லாஹ் இந்த பொன்னான நன் நாளில் உன் அருளையும் அன்பையும் தவிர வேறு எவரிடத்திலும் எதையும் எதிர்பாராமல், இல்லார்க்கு இறங்கும் இதயத்தையும் உன் எல்லை இல்லா அருளையும் எங்களுக்கு தருவாயாக'' என்று இருகையேந்தி வேண்டுவோமாக.. ஆமீன்.

S.முஹம்மது பாரூக்,அதிராம்பட்டினம்

Unknown said...

என்னை மெய் சிலிர்க்க வைத்த ரமலான் கவிதை.

அத்தோடு உபரியாக , கடந்த ரமளானின் நினைவுருத்தல்களை கவிதையாகக்
கொட்டியது, மேலும் கவிதைக்கு மெருகூட்டியது

.பசிப்பிணி உணர பட்டினி அறிய
புசித்திட உணவு பக்கத்தில் இருக்க
படைத்தவன் அருள் வேண்டி
பொறுமையைத் தர வருக வருகவே

செல்வச்சீமான்களும் ஏழைகளின் பட்டினியை உணரவேண்டும் என்பதை
நோக்கமாகக்கொண்டுள்ள இப்புனித ரமளானின் புனித நோக்கத்தை
உன் கவித்திரமையின் , வார்த்தை மழைகளால் கொட்டிய விதம்
அருமையிலும் அருமை.

எங்கிருந்துடா இந்த வார்த்தைகளை பெயர்தெடுக்கின்றாய்?
உன் மண்டை என்ன தமிழ் வார்த்தைகளின் சுரங்கமா ?
அல்லது வார்த்தைகளின் அமுத சுரபியா ?
அல்லது வார்த்தைகளின் மாயஜால வித்தையா ?

ஏதோ ஒன்று எங்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை
ஏதோ ஒரு அழகிய தலைப்புகளில் ஒரு கவிதை
கிடைக்க, அதிரை நிருபர் வலைதளத்தில், உன்மூலம்
அழகிய கவிதை கிடைத்துக்கொண்டிருக்கின்றது என்பதில்
எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சி .

அபு ஆசிப்.

Unknown said...

நினைவிருக்கு எனக்கு,

செடியன் குளத்தில் மூக்கையும் காதையும் பொத்துக்கொண்டு குளித்துவிட்டு
ஈரவேட்டியோடு வீட்டுக்கு வந்து உம்மாவிடம் ஏச்சு வாங்கியது நினைவிருக்கு.

நோன்பு திறப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னால் , வடை, சமூசா, பஜ்ஜி,
இறால் புதைக்கப்பட்ட வாடா , மற்றும் இதர தின் பண்டங்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு போகும்போது, நோன்பு என்பதை மறந்து ஒருவாடாவை தின்ன வாயில் வைத்து மென்று விழுங்குவதற்கு முன்பு நோன்பு ஞாபகம் வந்து பிறகு துப்பியது,ஞாபகம் இருக்கு.

ஜாவியாவில் முஹம்மத் சாலிஹ் காக்கா அவர்களின் நாட்டாமை ஞாபகம் இருக்கு. கஞ்சி சிட்டியில் ஊற்றி (அந்தக்காலத்தில் சிட்டிதான்) தயாராக எல்லோரும் கஞ்சி சிட்டிக்கு முன்னாள் (நோன்பு பிடிக்காத சிறுவர்கள் உட்பட )
உட்கார்ந்து இருக்கும்போது, தாமதமாக வரும் நோன்பாளிகளுக்கு சிட்டி கிடைக்காமல் பற்றாக்குறை (கஞ்சி அல்ல , சிட்டி )ஏற்படும்போது, முகமது சாலிஹ் காக்கா, டேய் , நோன்பு பிடிக்காதவர்களெல்லாம் , கஞ்சியை குடித்து விட்டு சிட்டியை கொடு என்று அதட்டல் போட்டது ஞாபகம் இருக்கு.

வருடத்தில் 11 மாதங்கள் வராத கூட்டம்,அந்த புனிதமான மாதத்தில் மட்டும், தராவீஹ் என்னும் சுன்னத்தான தொழுகையை நிறைவேற்றத்துடிக்கும் வேகத்தை, பர்லு தொழுகையில் காட்டுவதில்லை என்னும் காட்சியை நேரடியாக பார்த்த இன்றும் பார்த்துக்கொண்டிருக்கின்றது ஞாபகமிருக்கு.

ஹரிக்கன் லாம்ப் வெளிச்சத்தில் பழைய துளுக்காப்பள்ளி (இன்றைய தக்வா பள்ளி ) முனையில் ஹஜாமியாக்கா வடை விற்க கடை திறக்கும்போது, முதல் கஸ்டமராக நின்று வடை வாங்கிய ஞாபகம் இருக்கு.

தராவீஹ் தொழுது முடித்தவுடன், ஓதும் சபையில், லொவ்டுதம்பி பக்கத்தில் முதல் யார் அமர்வது என்று போட்டி இட்டு ( போட்டி எனக்கு, நண்பன், சைய்யது முஹம்மது,(இப்பொழுது துபாயில்),இப்ராஹிம் ( இப்பொழுது அமெரிக்காவில் ) போட்டியில் வெல்வது, செய்யதுதான். என்பதும் ஞாபகம் இருக்கு.

என்னும் எத்தனயோ அடிக்கிக்கொண்டே போவேன்.நேரமும், காலமும் இடம் தராது என்ற காரணத்தினால் , சொற்ப ஞாபகங்களோடு நிறுத்திக்கொண்டு விடை பெறுகின்றேன்.

அன்புடன் அபு ஆசிப்.

அதிரை.மெய்சா said...

புனித மிகு ரமலான் மாதத்தின் சிறப்புக்களையும் அம்மாதத்தில் நடந்த மறக்க முடியாத பழைய நிகழ்வுகளையும் கவிதையாய் வடித்த அன்பு நண்பர் சபீர் அவர்களுக்கு எனது உளம் நிறைந்த ரமலான் நல் வாழ்த்துக்கள்.

Anonymous said...

கிட்டிகம்பு ஞாபாகம் இருக்கா !
கிச்கிச்சு தாம்பலம் ஞாபகம் இருக்கா!
கங்கு பந்து ஞாபகம் இருக்கா!
கவட்டி கம்பு ஞாபகம் இருக்கா !
வெட்டிக் குளத்தில் குட்டிக் கரணம் ஞாபகம் இருக்கா!
கழச்சிகாய் ஆட்டம் ஞாபகம் இருக்கா! தாயக் கொட்டை ஞாபகம் இருக்கா!
ஓசினா தோப்பில்கும்மி கோலாட்டம் ஞாபகம் இருக்கா!
ஒரு சட்டி [நோம்பு] கஞ்சிக்கு உதட்டை காயவச்சு உக்காந்து இருந்தது ஞாபகம் இருக்கா!
கோயில் மாட்டுக்காரன் குறிசொல்லி வந்தது ஞாபகம் இருக்கா!
குடுகுடுப்பை காரன் ஞாபகம் இருக்கா!
கண்ணாமூச்சி விளையாட்டு ஞாபகம் இருக்கா!
ஓரான் ஈரான் மூவான் கட்டு ஞாபகம் இருக்கா
ஒலிப்பம் ஒலிஞ்சது ஞாபகம் இருக்கா''!
ஓணானே அடிச்சா ஒன்பது நண்மை!
பல்லியை அடிச்சா பத்து நண்மை! ஞாபகம்இருக்கா!
நாங்குலு மீனு ஞாபகம் இருக்கா!
கூட்டாஞ் சோறு ஞாபகம் இருக்கா!
கட்டிச் சோறு ஞாபகம் இருக்கா!
நிலா சோறு ஞாபகம் இருக்கா!
சொன்னதெல்லாம் மறந்திடப் போமோ சொல் சொல் அந்த நினைவுகள்l நெஞ்சில் வந்ததே ஏன்?

Sமுஹம்மது.பாரூக்,அதிராம்பட்டினம்

KALAM SHAICK ABDUL KADER said...

//வருக வருகவே வாரித் தருகவே
வான் மறை ஈந்து வாழ்வழி வகுத்த
வளமான மாதமே வருக வருகவே

கவிவேந்தரின் இவ்வரிகளை, இசை வேந்தர் அப்துல்காதிர் (அபூ ஆசிப்) அவர்கள் பாடினால் எப்படி இனிமையாக இருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறேன்!

\\இஞ்சித் தேநீர் நினைவிருக்கா
இறைவேதம் நினைவிருக்கா
கொஞ்சம்கொஞ்சம் வாய்ப்பளித்த
ஓதும் சபை நினைவிருக்கா//

நெஞ்சை விட்டு அகலாத நினவலைகள்; உங்களின் கவிதை வலைக்குள்!
ஒவ்வொரு முறையும் புதுப்பள்ளியைக் கடந்து செல்லும் பொழுதும், புதுப்பள்ளிக்குள் உட்கார்ந்திருக்கும் பொழுதும் பழைய நினைவுகளாய் மனத்தினில் ஓடும் இந்த காட்சி; அதனை மெய்ப்பிக்கும் உங்களின் கவிதையும் ஒரு சாட்சி!

உங்களின் கவித்திறனை மேன்மேலும் மேம்படுத்த அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்!

Unknown said...

//கவிவேந்தரின் இவ்வரிகளை, இசை வேந்தர் அப்துல்காதிர் (அபூ ஆசிப்) அவர்கள் பாடினால் எப்படி இனிமையாக இருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறேன்!//

இப்பொழுதெல்லாம், எந்தக்கவிஞரின் பாடலையும் பாட அபு ஆசிபின் குரல் இடம் தருவதில்லை, தற்சமயம்,(வயது கூடுகின்றது அல்லவா ?) அபு ஆசிபின் குரல் பொதி சுமக்கும் பிராணியின் குரலை ஒத்து இருப்பதால்.

அபு ஆசிப்.

KALAM SHAICK ABDUL KADER said...

இனிய நண்பரும் என் உயிர்நண்பனின் மாமாவுமாகிய இசைவேந்தர் அபூஆசிப் அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்!

தன்னடக்கம் என்ற தன்மையால் தங்களின் தகுதியைக் குறைவாக மதிப்பிட வேண்டா. “படிக்கட்டுகள்” புகழ் - உளவியலார் ஜாஹிர் ஹூசைன் அவர்களிடம் கேட்டால் உங்களின் இத்தகையக் குறை மதிப்பீடு ஓர் உளவியல் ரீதியாக உங்களின் திறமையைத் தடை போடும் திரை என்பதாகச் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.

இசை முரசு அவர்களை விடவா நீஙகள் வயதானவராகி விட்டீர்கள்?

அந்த நாள் ஞாபகம் வந்ததே நெஞ்சிலே என்பதால் கேட்டுக் கொண்டேன்; மேலும், நான் சுட்டிக் காட்டிய வரிகளும், கவிவேந்தரே அறியாமல் ஓர் இசை- ஓசை நயத்துடன் விழுந்து விட்ட வரிகளும்- இதனையொத்த ஓசை நயத்துடன் இசை முரசு அவர்களின் பாடலும் நினைவுக்கு வந்ததும் நம் ஊரின் இசை வேந்தரான நீங்கள் பாடினால் எப்படி இருக்கும் என்ற அந்த “நினைத்தாலே இனிக்கும்” அவாவில் கேட்டுக் கொண்டேன்.

யாருக்குத் தெரியும்? நீங்கள் இப்பொழுது உங்கள் அறை நண்பர்களின் செவிகட்குத் தேனூற்றும் பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கலாம் அல்லவா?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு