Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ரமளானின் கடைசி பத்து - பழைய நினைவுகளிலிருந்து... 1

அதிரைநிருபர் பதிப்பகம் | June 15, 2016 | , ,

நினைவுகளோடு நீசசல்...
இறையருட்கொடைகளை நம்மீது குறைவின்றி பொழியும் இந்த புனித ரமழான் நம்மை விட்டு மெல்ல,மெல்ல நகர்ந்து கொண்டிருப்பதை அறியாமல் இறுதியில் நாம் ஒரு மாதம் செய்த நல்லமல்களுக்கு இறைவன் கொடுக்கும் கூலியாய் வரும் ஈத் பெருநாளை புதிய சட்டை, வேட்டி, தொப்பி, கைக்குட்டை, செருப்பு, நறுமண செண்ட், கைக்கடிகாரத்திற்காக சிறுவயது உள்ளம் பெருமிதம் கொண்டு பேரானந்தம் அடைந்து அந்த நாளை எண்ணி ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ஒரு காலத்தில்.

ஊரில் ஒவ்வொரு பள்ளிகளும் ஒரு மாத இரவுத் தொழுகையில் ஓதி வந்த திருக்குர்'ஆனை மெல்ல,மெல்ல முடித்து இறுதியில் 30வது ஜூஸ்வின் சிறிய சூராக்களை ஓத ஆரம்பிக்கும்.

ஊரில் சில பள்ளிகள் அலங்கரிக்கப்பட்டு 27ம் இரவு தொழுகைக்காகவும் அதற்குப்பின் இரவுத் தொழுகையில் ஓதி முடிக்கப்படும் திருக்குர்'ஆன் "தம்மாம்" விடப்பட்டு (சவுதி தம்மாம் அல்ல) இதுவரை தொழுகைக்கு கட் அடித்த பெருசு, சிறுசுகள் யாவும் பேணுதலுடன் அனைத்து ரக்காத்துக்களுடன் பிளஸ் மூன்றையும் தொழுது முடிக்கும். நல்ல பிரியாணி நார்சாவாய் பிளாஸ்டிக் பைக்குள் நைந்து கிடக்கும். வீடு செல்லும் வரை காத்திருக்காத சில உள்ளங்கள் மொளனமாய் அதை அங்கேயே பிரித்து மேயும்.

ஒரு பள்ளியில் வாங்கிய நார்சாவுடன் அடுத்த பள்ளிக்கு செல்ல நேரம்/வாய்ப்பு தேடும். கிடைத்தால் அதையும் நன்கு பயன்படுத்திக்கொள்ளும்.

தெரு தையல்கடைக்காரரின் கடையோ நியாயவிலைக்கடை (ரேசன்)போல் கூட்டம் அலைமோதி நிற்கும். சொன்ன தேதியில் அவர் துணிமணிகளை தைத்து கொடுத்து விட்டால் உள்ளம் அவரை கின்னஸ் புத்தகத்தில் வர வேண்டியவர் என வெறும் வாயில் புகழ்ந்து தள்ளும்.

பெரும்பாலும் ஜகாத் கடைசி பத்தில் நம் ஊரில் விநியோகிக்கப்படுவதால் அதை நன்கறிந்த மாற்று மத வெளியூர் கூட்டம் கூட தலையில் தொப்பியுடன், கிழிந்த மேல்துணி அணிந்து பஸ், ரயில் ஏறி எப்படியும் ஊர் வந்து சேரும். தெரிந்த சில இஸ்லாமிய வார்த்தைகளை நாவில் அரைகுறையாய் உச்சரித்து காசு கேட்டு வாங்கிச்செல்லும்.

சென்னையிலிருந்து வந்த தொழிலதிபர்களின் பிள்ளைகளும் உள்ளூர் தொழிலதிபர்களின் பிள்ளைகளுடன் ஒன்று சேரும். உற்சாகம் ஊரில் கலைக்கட்டும் இதனால் சில சிறு சண்டைகளும் அரங்கேறும்.

ஏழை, பணக்காரர் ஏற்ற இறக்கமின்றி எல்லோரிடமும் காசு நிரப்பமாய் வந்து சேரும்.

பெருநாளுக்கு எடுக்கும் வேட்டி 80x80, 60x60, 60x40  என்று பள்ளிக்கூட கணக்கு பாடம் நடத்தும். அந்த குழப்பத்திலும் உள்ளம் குறைந்த காசு எது என்று பார்த்து அதையே வாங்கி உடுத்தி மகிழும்.

பெருநாள் இரவு ஊர் சுற்ற கடைத்தெரு பரீதா, வின்னர் வாடகை சைக்கிள் கடைகளில் முன் பதிவு செய்யும். 
வரும் வழியில் தலைக்கேற்ற தொப்பியை இலியாஸ், அன்சாரி கேப் மார்ட்டில் வாங்கி அணிந்து மகிழும். தொழுகை முடிந்ததும் அதை மடித்து எக்களில் சொறுகி வைக்கும்.

வருடத்தில் செல்லாத சொந்த பந்த வீடுகள் செல்ல உள்ளம் துடிக்கும் வர இருக்கும் (பெருநாள் காசு) வருவாயை எண்ணி பெருமிதம் கொள்ளும்.

பெருநாள் இரவு பிறை பார்ப்பதில் ஏற்பட்ட குழப்பம் இறுதியில் முஹல்லாப்பள்ளியில் (மரைக்காப்பள்ளி) உலமாக்களின் முடிவுக்கு கொண்டுவரப்படும். அவர்களின் நல்ல முடிவுக்கு பொறுமையின்றி காத்திருக்கும். நாளை பெருநாள் இல்லை நோன்பு என்று முடிவானால் சந்தோசப்படவேண்டிய உள்ளமோ கனத்த இதயத்துடன், கவலையுடன் வீடு திரும்பும்.

பெருநாள் பிறையை பார்க்க உள்ளம் பரவசம் அடைந்து அவசரப்படும். அது பார்க்கப்படாவிட்டாலும் ஏன் பார்க்கப்படவில்லை? என்று அறியாமல் உள்ளம் கேள்வி கேட்கும்.

பெருநாள் இரவு இறைச்சிக்கடைகளெல்லாம் பேரிரைச்சல் அடையும். ஆட்டின் உறுப்புகளை தனித்தனியே கூறுபோட்டு ஆடர் செய்யும். இது வரை வேண்டாவெறுப்பாய் இருந்த இறைச்சிக்கடைக்காரனும் வேண்டப்பட்டவனாய் ஆகிப்போவான். உள்ளம் வருடம் முழுவதும் அவனிடம் கறி வாங்குவது போல் பவ்வியமாக பேசி காரியம் சாதிக்க கிட்னி பக்கம் கண் திரும்பும்.


பெருநாளுக்கு எடுத்த வேட்டியில் ஒட்டப்பட்ட லேபிள் அவசரத்தில் கிழிக்கப்பட்டு அவ்விடத்தில் கருங்காக்கை ஒன்று போட்ட வெள்ளை எச்சம் போல் காட்சி தரும்.

கண்ட இடத்தில் உட்கார்ந்து எழ கருப்பு கம்பாயம் போட்ட வேட்டி கை கொடுக்கும். இன்று கம்பனையும் காணவில்லை கம்பாயம் போட்ட வேட்டியணிந்தவர்களையும் காண இயலவில்லை.

புது சட்டை அவசரத்தில் பிரிக்கும் பொழுது எடுத்த குண்டூசி சில சமயம் கையை நன்கு பதம் பார்க்கும். ஆடு அறுக்கும் முன்பே நம் கையில் காவு வாங்கும்.

சல்லடை போன்ற பனியனும் அது வெளியில் தெரிய கண்ணாடி போல் அணிந்த மார்ட்டின் சட்டையும் அதன் பாக்கெட்டில் வைத்த சலவை பத்து, இருபது ரூபாய் நோட்டுக்களும், சப்தம் வர அணிந்த சோலப்புரி செருப்பும் அந்த காலத்தின் சரித்திரக்குறியீடுகள்.

எவ்வித பிரயோஜனமும் இல்லாமல் இரவு நேர ஓவர்டைம் வேலையை பெண்கள் அனல்பறக்கும் அடுப்பங்கரையில் பார்த்து நல்ல ருசிக்கு பொறித்த ரொட்டி சுட்டெடுத்து, வட்லப்பம், கடல்பாசி, இடியப்பம், கறியாணம் என கலைக்கட்டும் அடுப்பங்கரை சளைக்காத வீட்டுப்பெண்கள். (ஜப்பானாக இருந்தால் பை நிறைய பார்த்த ஓ.டி.க்கு பணம் பார்த்திருப்பார்கள் பாவம்)

மல்லிகைப் பூக்காரி கூட இரவு நேரத்தில் நம் தெரு வீதி உலாவருவாள். நல்ல வியாபாரத்தையும் செய்து முடிப்பாள்.

பெருநாள் இரவு முழுவதும் பேய்பிசாசு பயமின்றி நண்பர்களுடன் சுற்றி விட்டு பெருநாள் காலை சுபுஹ் தொழுக்கைக்கு எழும்ப அலும்பு பண்ணும். வீட்டினரின் ஓலத்தில் வேண்டா வெறுப்பாய் எழுந்து கண்சிமிட்டி கூசும். வீட்டுப்பெரியவர்களின் அதட்டலில் கடைசியில் பல் துலக்காமல் பள்ளி வந்து சேரும்.

குளித்து புத்தாடை அணிந்து நறுமணத்தைலம் அங்குமிங்கும் உடலில் தடவி பள்ளிக்கு வந்து தொழுகைக்கு அமரும். பெரியவர்களுடன் சேர்ந்து கலிமாவும் கூறும். தொழுகை முடிந்ததும் பள்ளியின் வெளியே விரிக்கப்பட்ட விரிப்பில் தன் பாக்கெட்டிலிருந்து பள்ளி சாபுக்கு சலவை நோட்டு பத்தோ, இருபதோ அல்லது இயன்றதைப்போட்டு மகிழும்.

காலை மெல்ல, மெல்ல பொறித்த ரொட்டி சுவையுடன் பெருநாளும் நம்மை விட்டு மெல்ல, மெல்ல எட்டப்பார்வை போல் மறையத்துவங்கும். தெருவில் விற்கும் ஜஸ்கிரீம் உண்டு ஆசைத்தாகம் தீரும். பெருநாள் பகல் நல்ல பிரியாணி உண்டு அயர்ந்து போகும். சாய்ங்காலப்பெருநாள் சக நண்பர்களுடன் மல்லிப்பட்டினம் மனோரா காணத்தூண்டும்.

எல்லாம் முடிந்து வீடு திரும்பியதும் சென்ற ரமழானுக்காக வருந்தத்துவங்கும் செய்வதறியாது விழிக்கும். வருடம் முழுவதும் ரமழானாய் இருக்கக்கூடாதா? என உள்ளத்துக்குள் கேள்வி எழுப்பி பதிலின்றி மொளனமாய் உறங்கிப்போகும்.

சென்ற ரமழான்களை எண்ணிப்பெருமிதம் கொள்வதுடன் கையில் இருக்கும் ரமழானை நன்கு அமல்கள் செய்து பயன்படுத்துவோம். இறைவனின் பொருத்தத்தைப்பெருவோம் இன்ஷா அல்லாஹ்...

நம்மை விட்டு பிரிந்து இறைவனடி சேர்ந்த அனைவருக்காகவும் இறைஞ்சுவோம்...

மலரும் நினைவுகளுடன் நிகழ்கால நிகழ்வுகளுடன்..
மெய்யாலுமே இது ஒரு நினைவு மீள்பதிவுதானுங்க !
மு.செ.மு. நெய்னா முஹம்மது.

1 Responses So Far:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ம்ம்ம்.... அருமையான மலரும் நினைவுகள்.
அசைபோட எனக்கு எல்லாம் நல்லாத்தான் இருக்கு.
ஆனா...
அதென்ன...?!
//கருங்காக்கை ஒன்று போட்ட வெள்ளை எச்சம்//
ஏன்... ஏன்...ஏன்...?!?!?
"காக்கை போட்ட எச்சம்" ன்னு சொன்னா போதாதா..?

"கருப்பு எச்சம் போடும் வெள்ளைக்காக்கை" ஒண்ணு அதிராம்பட்டினத்தில் பறக்குதா என்ன..?!?!?!?

:-)))

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு