Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கருமையும் வெண்மையும் 2

அதிரைநிருபர் பதிப்பகம் | June 20, 2016 | , ,

நபிமணியும் நகைச்சுவையும் - தொடர் - 
அது ஒரு ரமலான் மாதத்தின் பின்னிரவு நேரம்!

மதீனா நகரமே இரவுத் தொழுகைக்குப் பின்னர் அமைதியான உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது! ஆனால், அந்த ஒரே ஒருவருக்கு மட்டும் இருப்புக் கொள்ளவில்லை. பரபரப்பாக ஏதோ செய்துகொண்டிருந்த அவரை யார் பார்த்தாலும்,  'இந்த இரவில் இவர் தூங்கப் போவதில்லை' என்று முடிவுக்கு நிச்சயமாக வந்துவிடுவர்.


படுக்கையில் படுப்பதும் சில நிமிடங்களில் எழுந்து தலையணைக்கடியில் கையை விட்டு எதையோ துழாவி எடுப்பதும் அதை மேலும் கீழும் உற்றுப் பார்த்துவிட்டு, தனக்குள் 'இல்லை இல்லை' என்று தலையசைத்துவிட்டு மறுபடிப் படுப்பதுமாக மாறிமாறி செய்து கொண்டிருந்தார். சஹர் உணவின் நேரமும் வேக வேகமாக நழுவிக் கொண்டிருந்தது. ஆனால், அதிலெல்லாம் அவருக்குக் கவனமில்லை!

மறுபடியும் தலையணைக்கடியில் கைவிட்டு எடுத்துப் பார்க்கத் தொடங்கிவிட்டார். இப்படியே தொடர்ந்ததில் பொழுது புலரும் நேரமும் நெருங்கிவிட்டது!

இந்தப் பரபரப்புக்குத் தகுந்த காரணமும் இருந்தது! அந்த இரவில்தான் அந்தப் புனித மாதத்திற்கென்று எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான ‘வஹீ’ ஒன்றை அல்லாஹ் அருளியிருந்தான்!(1) அந்த வஹீயைப் பற்றித் தெரியுமுன்பு, நமக்கு இந்த நபித் தோழரின்  அறிமுகம் சற்று அவசியமாகிறது!

அவர் ஒன்றும் சாதாரணமான ஆளன்று! அந்தக் காலத்தில் மிகப் பெரும் பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரர்தான் அவர்! அரபுலகின் பிரபலமான “தய்யி” கோத்திரத்தின் தலைவனும்  அம்மக்களின் அரசனும் மிகப்பெரும் புகழ்பெற்ற கொடை வள்ளலுமாகிய ஹாதிம் அத்தாயீ என்பவரின்  செல்வப் புதல்வர்தான் நமது இந்த இளவரசர்! பெயர் அதீய் பின் ஹாதிம் அத்தாயீ. தந்தைக்குப் பிறகு, தன் மக்களின் மன்னனாகவும் முடி சூட்டப்பட்டார். 'உல்லாச உலகம் உனக்கே சொந்தம், அதை முடிந்தவரை அனுபவி ராஜா' என்று ராஜபோக சொகுசு வாழ்க்கையின் அனைத்து சுகங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தார்.

அதெல்லாம் ஒரு காலம்!

இருளும் இழிவும் நிறைந்த வழியை விட்டும் நீங்கி, அருளும் அறமும் நிறைந்த இயற்கை மார்க்கமாம் இஸ்லாத்தைத் தழுவியபின், ராஜபோகத்தில் திளைத்த அந்த மன்னரா  இவர்? என்று மூக்கில் மட்டுமல்ல, முகம் முழுக்க விரல் வைத்துப் பார்க்கும் அளவுக்கு ஆச்சர்யமாய் மாறிப்போனார் அதீய் (ரலி)!

ஆம்! அவரை மட்டுமல்ல! அந்த ஆறாம் அறிவைத் தட்டியெழுப்பி, ஆயிரம் பாடங்கள் பயிற்றுவித்த  அண்ணல் நபியவர்கள் கொண்டுவந்த அற்புத வேதம், அனைத்துத் தோழர்களின் வாழ்வையும் அடியோடு புரட்டிப் போட்டது. பழைய அத்தியாயங்களில் எந்த அளவுக்குப் படுமோசமாக இருந்தார்களோ, அதே மனிதர்கள் சங்கை மிகும் நபியைச் சந்தித்த பிறகு, இந்த மானுட சமூகத்திலேயே தலை சிறந்தவர்களாக, உள்ளத்தால் உயர்ந்தவர்களாக, அறிவால் ஆழமானவர்களாக, சடங்கு சம்பிரதாயங்களைத் தூக்கி எறிந்தவர்களாக, நேர்வழியில் நிலைத்தவர்களாக, சுயநலத்தை எடுத்துச் சுழற்றி வீசிவிட்டவர்களாக, வாழும் சூழலின் வகை தெரிந்தவர்களாக, எளிமையில் இனிமை கண்டவர்களாக, தாங்கள் பெற்ற மார்க்கத்தைத் தாங்கிப் பிடிக்கும் தூண்களாக, மொத்தத்தில் தங்கள் தலைவரின் நிழல்களாகவே மாறிப்போனார்கள். அப்படித்தான் அல்லாஹ் (ஜல்) அருளிய வேதம் அவர்களைப் பக்குவப் படுத்தியிருந்தது. 

சற்றே பின்னால் சென்று வருவோம்:

அதீய் பின் ஹாத்திம், கிறிஸ்தவ மக்களின் தலைவனாக இருந்தபோது, மக்களின் வருவாயில் 4ல் 1 பங்கு அவருக்குக் கப்பம் கட்ட வேண்டும் என்று சட்டமிருந்தது. அதைச் சன்மார்க்கம் இஸ்லாம் ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளாது என்பது அவருக்கு நன்றாகத் தெரியுமாதலால், இந்த உலகத்தில் வேறு எவரையும்விட அதிகமாகப் பெருமானார் (ஸல்) அவர்களை அவர் வெறுத்தார்! எனினும், அவர் பயந்தது போலவே, அல்லாஹ்வின் கட்டளைப்படி, அவர் தேசமும் சத்திய இஸ்லாமிய ஆட்சியின் நிழலில் வந்த அன்று, தப்பித்தோம் பிழைத்தோம் என்று கையில் கிடைத்த செல்வங்களை எல்லாம் அள்ளி 100 ஒட்டகைகளில் கட்டிக்கொண்டு சிரியாவுக்குத் தப்பி  ஓடினார்!

உயிருக்கு பயந்து ஓடிய வேகத்தில் உடன்பிறந்த தங்கையை அரண்மனையிலேயே தவறவிட்டு ஓடிவிட்டார்!

போர்க் கைதியாக பிடிபட்ட சகோதரி ஸஃப்பானாஹ், கனவிலும் நினையாத அளவுக்கு காருண்ய நபியால் கண்ணியமாகவும் கருணையாகவும் நடத்தப்பட்டதால், அண்ணனைக் கண்டு அழைத்துவர நினைத்து, அல்லாஹ்வின் தூதரிடம் அனுமதி பெற்றாள்.

முத்திரைத் தூதர் முஹம்மது நபியைப் பற்றித் தங்கையானவள் விவரிப்பாகச் சொல்லச் சொல்ல புருவங்கள் எல்லாம் உயர்ந்து நெற்றிக்கு மேலே போய், அரசர் அதீயின்  முகம் முழுவதையும் ஆச்சர்யக் குறி அடைத்துக் கொண்டது!

ஸஃப்பானாஹ் சொல்வதுபோல், அவர் ஒரு நபியாக இருந்தால் அவருடன் இணைவதை நாம் முந்திக் கொண்டால் நமக்குத்தான் சிறப்பு! ஒரு வேளை, அவர் மதீனாவின் மன்னராக மட்டும் இருந்தாலுங்கூட, இன்னோர் அரசனை அப்படிப்பட்ட மேன்மையாளர் அவமானப்படுத்த மாட்டார் என்று அதீய் தனக்குள் சொல்லிக்கொண்டு அண்ணலாரைக் காண ஆவலுடன் கிளம்பிவிட்டார்.

மதீனா நகர் சென்று மனிதருள் புனிதர் மாநபி (ஸல்) அவர்களின் கரம் தொட்டு ஸலாம் சொன்னதும் அவர் மனமெங்கும் மகிழ்ச்சியால் பிரளயமானது!

சமத்துவ மார்க்கம் தந்த சத்தியத் தூதர் (ஸல்), அங்கு வயோதிக மாது ஒருவருக்குத் தம் அவையில்  கொடுத்த சங்கைமிகு மரியாதையைக் கண் முன்னே கண்டார். இனிய நபியவர்கள் தம் எளிய வீட்டுக்கு அழைத்துச் சென்று, தம் விரிப்பில் அதீய் (ரலி) யை அமர வைத்து, அந்த மாந்தரில் மாணிக்கம், மாமனிதர் நாயகம் (ஸல்) வெறுந்தரையில் அமர்ந்ததைக் கண்டார். அவர் நபியேதான் என்று அத்தாட்சிகள் அவர் நெஞ்சில் அடித்துக் கூறின!

'அடச்சே! என்ன மனிதன் நான்! என்ன மன்னன் நான்! என்ன ஒரு பெரும் வள்ளலின் மகன் நான்!' என்றெல்லாம் மனதுக்குள் அவர் மாய்ந்து போனார்!

அத்தோடு கண்கண்ட ஆதாரங்களால், அவர் மனத்தோடு வைத்திருந்த தவறான எண்ணங்கள் எல்லாம் தவிடுபொடியாயின! அடியோடு மாறிப்போனார் அதீய் பின் ஹாத்திம் அத்தாயீ (ரலி)! தமக்கு எதிரே அமர்ந்திருப்பவர் சாதாரண மனிதரல்லர் என்பதை அதீய் (ரலி) அவர்களுக்கு இன்னும் உறுதிப் படுத்தும் விதமாக  எதிர்கால அத்தாட்சிகள் சிலவற்றை அப்போதே அவரிடம் எத்திவைத்தார்கள் ஏந்தல் நபியவர்கள்!

அதீயே! அறிந்து கொள்:

(1) வறுமையில் வாடும் இம்மக்களைப் பார்! ஒருகாலம் விரைவில் வரும். இவர்கள் மத்தியில் செல்வம் பெருகும். கொடுப்போர் இருப்பர்! ஆனால், பெற்றுக்கொள்ள ஆள் இல்லை என்ற நிலைக்குச் செல்வம் பெருகும்.

(2) இந்த சத்திய மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள் குறைவாகவும் இந்த சன்மார்க்கத்தை எதிர்ப்பவர்கள் அதிகமாகவும் இருப்பது உனக்கு ஆச்சர்யம் தருகின்றதா? அல்லாஹ்வின் மார்க்கம் அதிவிரைவில் பரவி, காதிஸ்ஸிய்யாவிலிருந்து ஒரு முஸ்லிம்  பெண் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் அஞ்சாமல் தனியாகப் புறப்பட்டு வந்து கஃபாவைத் தவாப் செய்துவிட்டுச் செல்லும் அச்சமற்ற சூழ்நிலை உண்டாகும்.

(3) அதீயே! உன்னைபோன்ற மன்னர்களும் சுல்தான்களும் முஸ்லிம்களுள் இல்லையே! ஆட்சியதிகாரம் இறை மறுப்பாளர்களான மடையர்கள் கையில்தானே இருக்கிறது என ஆதங்கப்படுகிறாயா? மிக விரைவில்  பாபிலோனில் உள்ள அரசமாளிகைகளையும் ரோமாபுரிச் சக்கரவர்த்தியின் கருவூலங்களையும் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் அருளால் கைப்பற்றுவார்கள்!  பாபிலோனின் கோட்டை மீது இஸ்லாமியக் கொடி ஆரோகணித்துப் பறக்கும். இவை அனைத்தையும் காண நீ உயிருடனே இருப்பாய்!!!

என்றறிவித்தார்கள், அல்லாஹ்வை மட்டுமே ஆசிரியனாகப் பெற்ற எழுதப் படிக்கத் தெரியாத ஏந்தல் நபியவர்கள்! (2) ஆற்றல் மிகும் சொல்லழகர் அண்ணல் நபியவர்கள் தீர்க்கமாகச் சொன்ன அனைத்தும் அச்சரம் பிசகாமல் அதீய் பின் ஹாத்திம் (ரலி)  வாழ்நாளிலேயே நிகழ்ந்தன! எஞ்சிய வாழ்நாளில் எல்லாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அன்று சொன்னது என்னவோ இன்றும் செவிகளில் கேட்பதுபோலவே அவர் தம் 120 வது வயதில் இறக்கும்வரை அவருக்கு ஒலித்துகொண்டே இருந்தது!

அது சரி? இரவெல்லாம் தூங்காமல் எடுப்பதும் வைப்பதுமாக என்னவோ செய்துகொண்டிருந்தாரே? அது என்னவென்றுதான் பார்ப்போமா?

அது வேறொன்றுமில்லை! ஒரு வெள்ளை நூலையும் ஒரு கருப்பு நூலையும் தலையணைக்கடியில் வைத்துக்கொண்டு, அவை இரண்டையும் பொழுது விடியும் நேரம்வரை வெள்ளை நூலும் கருப்பு நூலும் அவர் கண்களுக்குத் தனித்தனியாக, தெளிவாகத் தெரிகின்றதா என்பதைத்தான் நபித் தோழர்  அதீய் (ரலி) அடிக்கடி உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்பொழுதும் அவருக்குச் சரியாக விளங்கவில்லை! காரணம்? எந்த நேரம்வரை சஹர் உணவைச் சாப்பிடலாம், அதை எப்போது நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற இறைவசனம் அந்த இரவில் இறங்கியதை, நம் உள்ளத்தை ஆளவந்த உத்தம நபியிடமிருந்து அவசர அவசரமாக அப்படியே அவர் எடுத்துக் கொண்டதுதானே  தவிர வேறில்லை!
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

 وَكُلُوا وَاشْرَبُوا حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ۖ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ

இன்னும் ஃபஜ்ரு நேரம் என்ற வெள்ளை நூல், கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும்வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும்வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்” (3).

சுபுஹுடைய நேரம். அதீய் (ரலி) முதல் வேலையாகப் பெருமானார் (ஸல்) அவர்களைக் காணச் சென்றார். அன்றிரவில் அவர் செய்த ஆராய்ச்சியையும் சொன்னார். அவருடைய   செய்கையும் அவர் விவரித்த தோரணையும் அடக்கமுடியாத சிரிப்பை அண்ணலாருக்கு அளித்தது. வேந்தர் நபியின் சிரிப்பைக் கண்டு விண்ணகத்துத் தாரகையும் வெட்கம் கொண்டு மறைந்ததால், நபிகள் நாயகத்தின் நகைமுகத்தைக் காண அதிகாலைச்  சூரியன் அவசரமாய் எழுந்தது!

அதீயே, அல்லாஹ் சொல்லும் வெள்ளையும் கருப்பும் என்பதன் பொருள் நீர் நினைத்துக்கொண்டபடி மட்டும் இருந்திருந்தால், உமது தலையணையும் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு நீளமாகவல்லவா இருக்க வேண்டும்?  ஏனென்றால், கருப்பு நூல் என்பதன் அர்த்தம் இரவும், வெள்ளை நூல் என்பதன் பொருள் பகலும் ஆகும்" என்று இன்னும் சிரித்துக்கொண்டே ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் அவருக்கு விளக்கினார்கள். விளக்கம் பெற்றவராக அதீய் (ரலி) அவர்களும் இறைத் தூதரின் சிரிப்போடு இணைந்து சிரித்தார். நேர்வழி காட்டியவர் (ஸல்) அதீய் (ரலி) யின் நெஞ்சிலே நிறைந்து நின்றார்! (4)

ஆதாரங்கள்:
(1) புஹாரி 1915: பராஉ (ரலி)
(2) புஹாரி 3595: அதீய்  இப்னு ஹாத்திம் (ரலி)
(3) அல்குர்ஆன் 2: 187
(4) அபுதாவூத் 2349: அதீய்  இப்னு ஹாத்திம் (ரலி)
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
இக்பால் M. ஸாலிஹ்

2 Responses So Far:

Yasir said...

மாஷா அல்லாஹ்.. பெருமானாரின் வாழ்க்கையை விளக்கும் வரலாற்றை சலிப்பு தட்டாமல் வார்த்தைகளில் தேன் கலந்து கொடுக்க உங்களால் மட்டுமே முடியும்...
//வேந்தர் நபியின் சிரிப்பைக் கண்டு விண்ணகத்துத் தாரகையும் வெட்கம் கொண்டு மறைந்ததால், நபிகள் நாயகத்தின் நகைமுகத்தைக் காண அதிகாலைச் சூரியன் அவசரமாய் எழுந்தது!// அழகு அழகு அருமை அருமை

என்றும் உங்கள் நலனுக்கு துவாச்செய்தவனாக

Iqbal M. Salih said...

அஸ்ஸலாமு அலைக்கும் அபுஸாஜித்,

தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி!

தங்களுக்காக என் துஆ, மக்கா முகர்ரமாவில்... இன்ஷா அல்லாஹ்.


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு