Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பேறு பெற்ற பெண்மணிகள் - தென்றலாய் வந்தது! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | July 12, 2016 | , ,

தொடர் : 20

அது ஒரு கோடை விடுமுறை நாளின் உச்சிப் பொழுது.  ஹாங்காங் நகரத்தின் விரைவு உணவு விடுதியொன்றின் (Fast Food Outlet) முன் நின்றாள் அந்த 21 வயது இளம்பெண், ‘ஷீ மெய்-•போங்’ என்ற சீனப் பெண்.

தனக்கு வேண்டிய உணவை, அங்கிருந்த பாக்கிஸ்தானி சிப்பந்தியிடம் ‘ஆடர்’ செய்தபோது, “No pork please!” என்றும் கூறி வைத்தாள்!

அந்தப் பாக்கிஸ்தானிக்கோ, வியப்பு!  எனினும், தன்னிடம் கொடுக்கப்பட்ட ஆடரை விரைந்து தயாரித்து அப்பெண்ணிடம் கொடுத்துக் காசைப் பெற்றபோது, ஒரு கேள்வியைக் கேட்டுவைத்தார் அச்சிப்பந்தி:  “Are you Muslim?”

‘இல்லை’ என்பதன் அடையாளமாகத் தலையை ஆட்டிவிட்டு அங்கிருந்து அகன்ற அவ்விளம்பெண், தனக்குள் கேட்டுக்கொண்டாள்:  “Muslim?  Am I Muslim?”

அதே சிந்தனை, அவள் வீடு போய்ச் சேரும்வரை நீடித்தது.

‘இஸ்லாம் கடுமையான மார்க்கம்;  அது வலுக்கட்டாயமாக மற்றவர்கள் மீது திணிக்கப்படுகிறது’ என்றல்லவா மக்களுக்கிடையே-குறிப்பாகப் பெண்களுக்கிடையே பேசப்படுகிறது எனும் சிந்தனை வயப்பட்ட அப்பெண், மறு தடவை அந்த உணவகத்திற்குச் சென்றபோது, அந்தப் பாக்கிஸ்தானிச் சிப்பந்தியிடம் சற்று நேரம் பேச்சுக் கொடுத்தாள்.  அந்த முதல் அறிமுகத்தில், தனது இயல்பான நடைமுறைகளுக்கும் சிந்தனைக்கும் ஏற்றவாறே இஸ்லாம் எனும் மார்க்கம் இருப்பதை உணர்ந்தாள் ஷீ மெய்-•போங் (Chi Mei-fong).

கடந்த ஓராண்டாகப் பன்றிக்கறி (pork) உண்பதைத் தவிர்த்துவிட்டிருந்தாள்.  மது என்பது, அவளது வாயில் படாத ஒன்றாயிருந்தது.  உடையணிவதிலும் ஒரு வரைமுறையைக் கடைப்பிடித்து வந்தாள்.  தன் வயதொத்த தோழிகளோடு வரம்பின்றித் திரிவதில்லை.  மிகச் சில நாட்களிலேயே - அக்கோடை விடுமுறையின்போதே - குளிர்ந்த தென்றலாக வந்து அவள் இதயத்தில் இடம் பிடித்துக்கொண்டது இஸ்லாம்!

அதனைத் தொடர்ந்து, ஹாங்காங்கின் முஸ்லிம் இளையோர் கூட்டமைப்பு (Muslim Youth Association) உடன் தொடர்பு கொண்டு, 1987 ஆம் ஆண்டில் தனது வாழ்வின் நடைமுறையாக இஸ்லாத்தைத் தெரிவு செய்துகொண்டார் அவ்விளம்பெண்.  அன்றிலிருந்து அவரது Identity Card எனும் அடையாள அட்டை, ‘ஷீ மெய்-•போங்’ என்ற சீனப் பெயருடன், ‘ஹவ்ரா கதீஜா’ எனும் இஸ்லாமியப் பெயரையும் சேர்த்துப் பதிவு பெற்றது.    

முஸ்லிம் பள்ளிவாசல்கள், மற்றும் மயானங்களை நிர்வகிக்கும் அமைப்பான Incorporated Trustees of the Islaamic Community Fund of Hong Kong தரும் தகவலின்படி, தற்போது அங்கு 65,000 பேருக்கு மேல் முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

ஹாங்காங் என்ற இந்தத் தூரக் கிழக்குப் பகுதியைப் பொறுத்தவரை, இஸ்லாத்தைத் தழுவும் பெண்களுக்கு, இஸ்லாமிய உணவும் உடையும் பெரும் தடைகளாக இருக்கின்றன.  ஆனால், நம் ஹவ்ரா கதீஜாவுக்கோ, அ•தொன்றும் தடையாயில்லை.  ஏனெனில், அவர் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு ஓராண்டுக்கு முன்பிருந்தே, அவரறியாத விதத்தில், இஸ்லாமிய நடைமுறைகள் அவரிடம் வந்து குடிகொண்டிருந்தன!

அதனால், நம் கதீஜா அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.  “மத மாற்றத்தின்போது எனக்குச் சிறியதோர் ‘அட்ஜஸ்ட்மெண்ட்’தான் தேவைப்பட்டது.  எனது நாட்டுப் பெண்களுள் மற்றவர்களைப் போன்றுதான் நானும் உடையணிந்தேன்.  ஆனால், ஒரேயொரு வித்தியாசம், ‘ஹிஜாப்’.  அதுவே என்னை மற்றவர்களிலிருந்து பிரித்துக் காட்டியது” என்று முக மலர்ச்சியுடன் கூறுகின்றார் ஹவ்ரா கதீஜா.

இஸ்லாத்தைத் தழுவியதன் பின், அங்குள்ள ‘இளையோர் இஸ்லாமிய இயக்கம்’ (Islaamic Youth Association) கதீஜாவைத் தனது அலுவலக நிர்வாகியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டது.  இதுவே அவரது இஸ்லாமிய வாழ்வுக்கும் உலகப் பிழைப்புக்கும் ஊக்கமூட்டுவதாக அமைந்துவிட்டது.

அண்மைக் காலங்களில், ஹாங்கங்கில் முஸ்லிம்களின் எண்ணிக்கை விரைவாகக் கூடிக்கொண்டே வந்துள்ளது.  ஆண்களைவிடப் பெண்களே அதிகம் பேர் என்கிறார், IYA வின் உயர் அதிகாரி ஒருவர்.

இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவை எட்டியிருந்தபோது, தன் குடும்பத்தின் எதிர்ப்பு, மற்றும் கடுமையான இஸ்லாமியச் சட்ட வரம்பு போன்றவை சிறு அச்சத்தை ஏற்படுத்தியிருந்தும், துணிச்சலாக முடிவெடுத்தார் கதீஜா.  அந்தத் துணிச்சலே, மிக விரைவில் பெற்றோரின் பரிவையும், இஸ்லாமியக் கொள்கைகளில் பிடிப்பையும் ஈட்டிக் கொடுத்தது என்கிறார். 

தனது பணிகளினூடே ஐவேளைத் தொழுகையைத் தவறாமல் நிறைவேற்றும் இச்சகோதரி, “நான் இஸ்லாமியச் சூழலில் இருப்பதால், மார்க்கக் கடமைகளைச் செய்வதற்கு வாய்ப்பு நிறைய உண்டு.  ஆனால், என்னைப் போன்று இஸ்லாத்தைத் தழுவியிருக்கும் என் இனிய தோழிகள் பலர் தனியார் நிறுவனங்களில் பணி செய்துகொண்டு, மார்க்கக் கடமைகளைச் செய்ய முடியாமல் இருக்கின்றார்கள்” என்று அங்கலாய்க்கிறார்.

இஸ்லாத்தை ஏற்றுச் செயல்படுத்துவதற்குப் பெற்றோர் மற்றும் உறவினரின் எதிர்ப்பில்லை என்பது மட்டுமன்றி, அவர்களின் ஒத்துழைப்பும் தனக்குண்டு என்று மகிழ்ந்து கூறும் கதீஜா, ‘அவர்களுக்கு இன்னும் ‘ஹிதாயத்’ வரவில்லையே’ என்று கவலைப்படுகின்றார்.                  

“மேலை நாடுகளில் உலா வரும் பித்துக்குளி இயக்கங்கள் (Cult) போன்று இஸ்லாம் இல்லை என்பது கொண்டு, என் தாய் கவலைப் படுவதில்லை.  ஆனால், ரமளானில் நான் நோன்பிருப்பதைக் காணும்போது, என் பட்டினி நிலையைக் கண்டு பரிதாபப்படுகிறார் கருணையுள்ளம் கொண்ட என் தாய்” என்கிறார் கதீஜா.  ஆனால், நோன்பின் நோக்கங்களுள் ஒன்றான, ‘ஏழைகளின் பசியை உணர்வது’ என்பதைப் பற்றிக் கூறியபோது, இரக்கமுள்ள தன் தாயின் இதயம் கனிந்தது என்று மகிழ்வுடன் கூறுகின்றார்.

தம் முன்னோர்களை வணங்கும் ‘ஸொராஸ்ட்ர’ மதத்தைப் பின்பற்றும் தாயோடு தனது அல்லாஹ்வை வணங்கும் தொழுகை முறை, தொடக்கத்தில் ஒத்து வரவில்லை என்றாலும், நாளடைவில் தனக்கெனத் தனியிடம் ஒதுக்கித் தொழுதுகொள்ளும் முறையைத் தானே வகுத்துக்கொண்டதாகக் கூறுகின்றார் ஹவ்ரா கதீஜா.

“ஹாங்காங் சைனீஸ் மக்கள் இஸ்லாம் பற்றி அதிகம் அறிமுகமற்றவர்கள்.  அதனால், அவர்கள் எனது இஸ்லாமியத் தோற்றத்தைக் கண்டு புதினப்படுகின்றனர்.  அதே நேரம், நான் ஓர் அரபு அல்லது மலாய்ப் பெண்ணாக இருந்தால், அவ்வளவு கவனம் என் பக்கம் திரும்பியிருக்காது.  உடல் முழுவதும் மறைப்பது, ஆண்களின் கழுகுப் பார்வையிலிருந்து தப்பிப்பதற்கு என்பது, சிலருக்குப் புதிராகவும் எதிராகவும் உள்ளது!” என்று கூறும் கதீஜா, இந்த உடைக் கட்டுப்பாடு தனது ஒழுக்கத்தின் அடையாளமாகவும் ஒரு பாதுகாப்பாகவும் இருப்பதாக நம்புகின்றார்.

“நான் முஸ்லிம் என்பதைத் தயக்கமின்றி உணர்த்துவதற்காகவே உடலை முழுமையாக மறைக்கும் ‘ஹிஜாபை’ அணிகிறேன்.  அது, நான் முஸ்லிம் பெண் என்பதன் சரியான அடையாளம் என்பதைத் தவிர வேறில்லை.  பல இடங்களில், எனது மார்க்கப் பின்னணியைப் பற்றி அறியும் மற்றவர்கள், என் மீது அன்பு கலந்த மரியாதை வைப்பதை உணர்கின்றேன்.  ஆண்கள் என்னை ‘ஈவ் ட்டீசிங்’ செய்யப் புகுமுன், எனது வினோதமான உடையைப் பார்த்தவுடன் இரு முறை சிந்திப்பார்கள்!  இக்கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இது எனக்கு இஸ்லாம் வழங்கிய பெருமையும் பேருபகாரமுமாகும்!”  

இஸ்லாத்திற்கு எதிராக வீசப்படும் ஏவுகணைகளுள் ஒன்றான ‘பலதார மணம்’ பற்றிக் கருத்துக் கூற விழைந்த இந்தச் சைனாக்காரப் பெண்மணி, “மக்கள் குர்ஆனிய வசனத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றார்கள்!  சமுதாயத் தேவைகள் சிலவற்றைக் கருத்துட் கொண்டு, பலதார மணம் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பெற்றுள்ளது.  அது ஆர்வமூட்டப்பட்ட ஒன்றன்று என்பதை 

எதிர்ப்பாளர்கள் கவனிக்கத் தவறிவிடுகின்றனர்” என்று கூறிச் சற்று நேரம் தாமதித்துத் தொடர்கின்றார்:

“குர்ஆனின் கூற்றைக் கூர்ந்து கவனியுங்கள்!  ‘ஒன்றுக்கு மேற்பட்ட உங்கள் மனைவியரைச் சரி சமமாக நடத்துவது மிகக் கடினம்’ என்பது, அதன் சொற்களிலிருந்து தெரியவில்லையா?”  

எத்துணை ஆணித்தரமான, அறிவார்ந்த வாதம் பாருங்கள்!
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
அதிரை அஹ்மது

8 Responses So Far:

Shameed said...

//நோன்பின் நோக்கங்களுள் ஒன்றான, ‘ஏழைகளின் பசியை உணர்வது’ என்பதைப் பற்றிக் கூறியபோது, இரக்கமுள்ள தன் தாயின் இதயம் கனிந்தது என்று மகிழ்வுடன் கூறுகின்றார்.//

நோன்பின் உண்மையான நோக்கத்தை புரிந்து கொண்டாள் கல் மனமும் கனிந்துவிடும்

Unknown said...

Assalamu Alaikkum,

Thanks for sharing life experience of a chinese Muslimc sister's reverting to Islam and her Islamic life style with key details about muslims reach in China, Hong Kong.


//தனது பணிகளினூடே ஐவேளைத் தொழுகையைத் தவறாமல் நிறைவேற்றும் இச்சகோதரி, “நான் இஸ்லாமியச் சூழலில் இருப்பதால், மார்க்கக் கடமைகளைச் செய்வதற்கு வாய்ப்பு நிறைய உண்டு. ஆனால், என்னைப் போன்று இஸ்லாத்தைத் தழுவியிருக்கும் என் இனிய தோழிகள் பலர் தனியார் நிறுவனங்களில் பணி செய்துகொண்டு, மார்க்கக் கடமைகளைச் செய்ய முடியாமல் இருக்கின்றார்கள்” என்று அங்கலாய்க்கிறார்.//

As we are expatriates in different parts of the world, we need to consider this point of making our Islamic Practices a sincere and dedicated one, which would impress and inspire our colleagues and friends. InshaAllah it would trigger their thoughts towards Islam.

Actually it needs a lot of internalization of many positive impressions, inspirations about Islamic Concepts, through continuous observation and study make anyone get convinced and accept the Shahaadha. Its not sudden happening within few days or few weeks. To obtain the concepts of Islam and getting convinced and reverting with courage against their family and community, give the strength and valuing their sacrifices that distinguish them as one of the best muslims.

As we are muslims born for muslims parents, our mind had attempted nothing similar mentioned above. That could be one of the reasons our level and importance of valuing Islam.

இப்னு அப்துல் ரஜாக் said...

பேரு பெற்ற பெண்மணிகளின்
கடந்து வந்த பாதையும் அவர்களின் இஸ்லாத்தின் மீதான பிடிப்பும் மாஷா அல்லாஹ் மனம் குளிர்கிறது அல்லாஹ் அவர்களுக்கு அருள் செய்யட்டும்

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஆனந்த கண்ணீர் வரவழைக்கும் தொடர். அல்ஹம்துலில்லாஹ்!

Ebrahim Ansari said...

//ஹாங்காங் என்ற இந்தத் தூரக் கிழக்குப் பகுதியைப் பொறுத்தவரை, இஸ்லாத்தைத் தழுவும் பெண்களுக்கு, இஸ்லாமிய உணவும் உடையும் பெரும் தடைகளாக இருக்கின்றன. ஆனால், நம் ஹவ்ரா கதீஜாவுக்கோ, அ•தொன்றும் தடையாயில்லை. ஏனெனில், அவர் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு ஓராண்டுக்கு முன்பிருந்தே, அவரறியாத விதத்தில், இஸ்லாமிய நடைமுறைகள் அவரிடம் வந்து குடிகொண்டிருந்தன!//

அல்லாஹ் அவருக்கு நல்வழி காட்ட நாடிவிட்டதனால் இப்படித் தொடங்கி இருக்கும். அல்லாஹு அக்பர்.

sabeer.abushahruk said...

இந்தச் சீனச் சகோதரியைப் போலவே வேறுவேறு மதங்களைச் சேர்ந்த இன்னும் பலர் இஸ்லாத்தின் நோன்பு, ஸகாத் போன்ற செயல்களிலும் மேலும் இஸ்லாமிய வாழ்வியல் நடைமுறையிலும் ஒன்றிப்போய் வாழ நான் கண்டிருக்கிறேன்.

என்னுடன் வேலை செய்த ஒருவர் என்னுடனே நோன்பு வைப்பார், குரானின் மலையாள மொழிபெயர்ப்பை ஓதுவார், ஸகாத் ஃபிthரா கணக்கிட்டு வழங்குவார்.

மார்க்கத்திற்கு மிக அருகில் நிற்கும் இவர்போன்ற சகோ.க்கள் இலகுவாக இஸ்லாத்திற்குள் நுழைவர் இன்ஷா அல்லாஹ்.

அற்புதமான இத்தொடருக்காக, அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா காக்கா.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்ன்(னு) ! சரியாச் சொன்னே !

//அஸ்ஸலாமு அலைக்கும். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஆனந்த கண்ணீர் வரவழைக்கும் தொடர். அல்ஹம்துலில்லாஹ்!//

அனுபவம் ஆயிரமாயிரம் சொல்லும் !

Yasir said...

அஹ்மது காக்காவின் இத்தொடர் நம் அனைவருக்கும் பூரிப்பையும் பெருமையையும் தருகின்றது என்றால் அது மிகையல்ல

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு