Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தர்காக்கள் தகர்ப்பதற்கா? - வரலாறுகள் வாழ்வதற்கா ? 9

அதிரைநிருபர் பதிப்பகம் | September 13, 2016 | , , ,

ஒரு காலத்தில் தர்காக்களை நேரடி வழிபாட்டுத்தளங்கள் ரேன்ச்க்கு ஆக்கிக்கொண்ட தருணங்கள் என் சிறுவயது காலங்களில் ஓரு பகுதியாக இருந்தது. அதிலிருந்து மீண்ட பின், அதன் முட்டாள்தனங்கள் பற்றி சிந்தித்து, அவைகளை கேலிப்பொருளாக பார்க்கும்படியான நிலைக்கும் மனதும் மாறுபட்டது.

இப்போழுதெல்லாம், "இந்த இடத்தில் எப்படி தர்கா வந்திருக்கும் ? இந்த இடத்தில் இருப்பவர் யார்" என வரலாறுகளை தேடச் அதே மனது சொல்கிறது! இப்போதைய நம் அறியாமைக்குப் பின்னால், வேரின் ஏதோ ஒரு நுனியில், நியாயங்கள் ஆழமாய் புதைந்திருக்கும் என சிந்திக்க வைக்கிறது.

இதோ நிகழ்கால உதாரணம் ! இப்போது அப்துல் கலாம் அடுத்த அவுலியாவாக தயாராக்கி விடப்பட்டிருக்கிறார். அப்துல்கலாம் துணை- என விளம்பர பலகைகள் பரவலாகிவருகின்றன.  நம் மூன்றாவது தலைமுறையில் "இவர் விஞ்ஞானி" என அடையாளப்படுத்துதல் குறைந்து "இவர் மகா மகான். ஞானப்பேரொளி, இவரை வழிபட்டால் அறிவு லிட்டர் லிட்டராக பெருகி ஆறாக ஓடும் " எனச் சொல்லும் போக்கு மிகைத்திருந்தாலும் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.

துரதிஷ்டமாக, தர்காகொள்கைகளை தூக்கி பிடிப்பவர்கள் பலரிடத்திலும் வரலாறுகளே இல்லை !  பலர் ஒப்பிப்பதெல்லாம்  கட்டுக்கதைகளோடு பின்னிப்பிணைந்த மிதமிஞ்சிய கற்பனைக் காவியங்களாகவே உள்ளது.

இதில் அடங்கியிருப்பவர் யார் என கேட்டால்- ஒருகிலோமீட்டர் நீளத்துக்கு பேரை சொல்வதற்கும், இந்த மரத்தில்  துணிகட்டினா குழந்தை பிறக்கும், இந்த மண்ண தண்ணில கலக்கி சாப்பிட்டா கஷ்ட்டம் நீங்கும்னு கூமுட்டை தனமான பதில்களைச் சொல்வதற்குமான ஆட்கள் தான்  நிர்வாகிகளாகவும் வேலையாட்களாகவும் தர்காக்களில் இருக்கிறார்கள்.

இவ்வாறு இருக்கையில் நமது பார்வைக்கு ஓரு தகவல்  கண்ணில் பட்டது. தென்பாண்டிய நாட்டிற்கு வந்த செய்யிது இபுறாஹீம், மொரோக்கோவில் பிறந்து இஸ்லாத்தை பரப்புவதற்காக இந்தியா வந்தார். பாண்டிய மன்னர் குலசேகரன் சார்பாக மற்றுமொரு பாண்டிய மன்னர் விக்கிரமனுடன் போரில் ஈடுபட்டு இப்போரின் விளைவாக அரசாட்சி சையித் இப்ராஹிம் கையில் வந்தது. ஏர்வாடியில்  அடக்கம் செய்யப்பட்டவரின் வரலாறு இது. தமிழ் நாட்டின் ஒரு பகுதியை அரசாண்ட முதல் முஸ்லிம் மன்னர் இவர்.

இன்னொறு தகவலும் அறிய நேர்ந்தது! 

கடற்பகுதி வழியே கேரளாவில் போர்த்துகீசியர்கள் இந்தியாவுக்குள் நுழைய, கப்பல்படை தளபதியாகிய குஞ்சாலிமரைக்காயர் அவர்கள் துரத்தினார்கள். பின்னர் தென் தமிழகத்துக்கு அந்த அந்நியப்படை வருகிறது. அப்போது நாகூரை ஆட்சி செய்துகொண்டிருந்தவர்  (இன்றைய அவுலியா ) ஷாஹூல் ஹமீது. தன் நண்பர் குஞ்சாலி மரைக்காயரின் உதவியுடன் 51 கப்பல்கள்-8000 வீரர்கள் கொண்டு போர்ச்சுக்கீசியர்களை விரட்டியுள்ளார்கள். 

சமகாலத்தில் வாழ்ந்த குஞ்சாலி மரைக்காயர் இந்திய தபால் துறையில் ஸ்டாம்பாகி விட்டார். போர்க்கப்பல் ஒன்றுக்கு இவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது... கேரளாவில் வரலாற்று திரைப்படம் ஒன்றும் (மம்முட்டியோ / மோகன்லாலோ..) எடுக்கப்பட்டுள்ளது. அவரின் இருப்பிடம் நினைவுச்சின்னமாய் பராமரிக்கப்பட்டு வருகிறது... அவர் பயன்படுத்திய வாள், கேடயம் இன்னும் பலவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பெரும் போர் வீரராக சரித்திரத்தில் மங்காத இடம் பெற்றார். 

நாம்? 

புனைவுக்கதைகளில் கட்டிடத்துக்கு வண்ணமிட்டு உண்மை வரலாறுகளை மண்ணோடு மக்கிடச் செய்துள்ளோம். மண்ணறையை கல்லறையாக்கி, பச்சை போர்வை போர்த்தி, கமகம சாம்பிராணி போட்டு, மனநிலை சரியில்லாதவர்களை உலாவவிட்டு, உண்டியல் வைத்து பூஜித்துக் கொண்டிருக்கிறோம். 

அவர்களின் உடல் மண்ணோடு மட்கி எலும்புகளும் கரைந்துவிட்டதுபோல், உண்மைகளும் ஜீவசமாதிகளாக்கப்பட்டுவிட்டது! மிகைபடுத்தப்பட்ட புனைவுக்கதைகளால் வரலாறுகளை கேலிக்கூத்தாக்கியது மட்டுமே இப்போதைய தர்கா வழிபாடுகளின் மகத்தான சாதனை ! நம் சரித்திரங்கள் நமக்கே தெரிந்திடாத பொழுது, இருட்டடிப்பு செய்கிறார்கள் என வரலாற்றாசிரியர்களை மட்டும் குறை கூறிக்கொண்டிருப்பது வேதனை !

வழிபாட்டை வழக்கொழித்து வரலாற்றை வாழவைக்கும் சமூகம் தலையெடுக்கட்டும்.. 'அரபுநாட்டு அந்நியனே, என்ன செய்தாய்' என கேட்போர் முன் கூனிகுறுகுவதை விடுத்து, வஞ்சிப்போரையே தலைக்குனியச் செய்திடும் தகவல்களை விரல்நுனியில் அடக்குவோம் ! 

ஆமினா முஹம்மத்

9 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

இனி நாம் தர்காக்களை வெறுப்பதை விட வரலாற்று சின்னங்களாக காணும் முயற்ச்சியில் ஈடுபடுவோம்.

crown said...

நாம்?

புனைவுக்கதைகளில் கட்டிடத்துக்கு வண்ணமிட்டு உண்மை வரலாறுகளை மண்ணோடு மக்கிடச் செய்துள்ளோம். மண்ணறையை கல்லறையாக்கி, பச்சை போர்வை போர்த்தி, கமகம சாம்பிராணி போட்டு, மனநிலை சரியில்லாதவர்களை உலாவவிட்டு, உண்டியல் வைத்து பூஜித்துக் கொண்டிருக்கிறோம். வழிபாட்டை வழக்கொழித்து வரலாற்றை வாழவைக்கும் சமூகம் தலையெடுக்கட்டும்.. 'அரபுநாட்டு அந்நியனே, என்ன செய்தாய்' என கேட்போர் முன் கூனிகுறுகுவதை விடுத்து, வஞ்சிப்போரையே தலைக்குனியச் செய்திடும் தகவல்களை விரல்நுனியில் அடக்குவோம் !
------------------------------------------------
அருமையான தகவல்! அடக்கம் செய்யபட்டுள்ள வரலாறு எத்தனையோ?

முகவைத்தமிழன் said...

இக்கட்டுரையின் ஆசிரியர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கைக்கூலியாவார். இ.திய இஸ்லாமியர்களின் வரலாற்றை திரித்து கூற முற்பட்டுள்ளார். ஏர்வாடி செய்யது இபுறாஹிம் பாதுஷாவை மொரோக்காவில் பிறந்தவர் என பெரும் பொய்யை கட்டவிழ்துவிட்டுள்ளார். உண்மை அறிய இந்த கட்டுரையை வாசிக்கவும்.

https://m.facebook.com/story.php?story_fbid=10155218717168154&id=592838153

ஆமினா said...

//இக்கட்டுரையின் ஆசிரியர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கைக்கூலியாவார். ///

என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு... வியந்து வியந்து இன்னும் வியப்பிலிருந்து மீள முடியாமல் இருக்கிறேன் ! :)

தங்களின் சுய ஆய்வினை சமர்பிக்காமல் ஏதோ ஒரு கட்டுரையை பகிர்ந்தவரின் கட்டுரையை வாசிக்கவும் என சொல்லியதைப் போலே //இவ்வாறு இருக்கையில் நமது பார்வைக்கு ஓரு தகவல் கண்ணில் பட்டது.// என நான் குறிப்பிட்டிருப்பதை நீங்கள் கண்டீர்களா.. எனில் நீங்களும் அதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கைக்கூலியா????

மேலும் மொராக்கா என்ற தகவல் மட்டுமே மாறியிருக்கிறது. மதினாவில் பிறந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது கட்டுரையில். அது அன்னாரின் ஆய்வாக இருக்கலாம். அதைத்தவிர மற்ற தகவல்களில் எதுவும் மாற்றம் இருப்பதாக தெரியவில்லை.

தாய்திருநாட்டுக்காக உழைத்தவர்களை, அந்நிய சக்திகளை வெளியேற்றி மண்ணின் மைந்தர்களை பாதுகாத்தவர்களை வெறும் அவ்லியாவாக்கி, கட்டுக்கதைகளில் அவர்கள் மேல் இளம் தலைமுறையினருக்கு வெறுப்பை வளர்த்துவிட்டிருக்கிறோம். அதனை தவிர்க்க உண்மையான வரலாறுகளை எடுத்துரைக்க வேண்டும் என்பதே கட்டுரையின் நோக்கம். இதில் ஆர்.எஸ்.எஸின் சித்தாந்தம் கண்ட உங்கள் அறிவை மெச்சுவதை தவிர எனக்கு வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.

கட்டுரையை முழுமையாக வாசிக்காமல், முழுதாக உட்கருவை விளங்கிக்கொள்ளாமல் நுனிபுல் மேய்ச்சலில் கருத்திட்டது அப்பட்டமாக தெரிகிறது :)

இன்னொன்று !

நான் என் சொந்த பெயரில் எழுதுகிறேன் :) இதன் அடுத்த வரியை சொல்லித்தான் புரியவேண்டுமா :)

Ebrahim Ansari said...

சற்று தாமதமாகவே படிக்க நேரிட்டது.

ஒரு ஆய்வுக்குரிய அறிவார்ந்த கட்டுரையின் மீது சேற்றை வாரி இறைத்து இருப்பதை கண்டிக்கிறேன்.

சேரமான் பெருமாள் இஸ்லாத்தை ஏற்ற காலம் தொட்டே இந்த வரலாறு தொடங்கிவிட்டது.

தமிழகத்தின் தர்காக்களை பார்த்து வருவோம் என்று காயல் ஷேக் முகமது பட்டியல் இட்டு பாடி இருக்கும் பல ஊர்களிலும் அடங்கியுள்ள வர்களின் வரலாறுகளை கள ஆய்வு செய்தால் பல வரலாற்று உண்மைகள் விளங்கும்.

ஷிர்க் மற்றும் ஷியா பிரியர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிற-

மக்களின் மனங்களை மாசுபடுத்தி வைத்து இருக்கிற

பச்சைப் போர்வை, சந்தனம், நெய்விளக்கு, புறா , சக்கரை நார்சா , கனவு வைத்தியம் , காய்ந்து போன ரோஜா இதழ்கள் , பேயாட்டம், நாதா, எஜமான் போன்றவைகள் எல்லாம் அந்த வரலாற்று நாயகர்களோடு தொடர்பு அற்றவைகளாகும்.

இத்தகைய வரலாறு ஏர்வாடியில் மட்டுமல்ல- அஜ்மீரிலும் இன்னும் பல பகுதிகளிலும் நிகழ்ந்தன என்பதே ஆதாரபூர்வமான உண்மைகள்.

ஒரு வருத்தம் : கைக்கூலி என்று குற்றம் சாட்டப்பட்ட சகோதரிக்குப் பரிந்துகொண்டு பொறுப்பில் உள்ளவர்கள் கருத்துத் தெரிவிக்காததே தொடரும் துரதிஷ்டம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பு இ.அ.காக்கா அவர்களுக்கு...

தங்களின் வருத்தம் தொடரும் துரஷ்டம் ஆனது ஏனென்று புரியவில்லை...! :)

சகோதரி அவர்கள் பண்பட்ட செயலால் அவரின் பதிலுரையின் முதல் வரியிலேயே நகைத்து விட்டுத்தான் தனது அறிவார்ந்த பதிலுரையும் அளித்திருக்கிறார் அந்த கருத்திட்டவருக்கு...

//என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு... வியந்து வியந்து இன்னும் வியப்பிலிருந்து மீள முடியாமல் இருக்கிறேன் ! :)//

மேலும்,

////கட்டுரையை முழுமையாக வாசிக்காமல், முழுதாக உட்கருவை விளங்கிக்கொள்ளாமல் நுனிபுல் மேய்ச்சலில் கருத்திட்டது அப்பட்டமாக தெரிகிறது :)

இன்னொன்று !

நான் என் சொந்த பெயரில் எழுதுகிறேன் :) இதன் அடுத்த வரியை சொல்லித்தான் புரியவேண்டுமா :) //

இந்த தைரியமொன்றே பறைசாற்றுகிறதும் இன்னும் நம் சகோதரியின் அடுத்தடுத்த ஆய்வுகளின் சாட்டைகள் சுழலும் இன்ஷா அல்லாஹ் !

ஆமினா said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ Ebrahim Ansari.

உங்கள் ஆதங்கம் புரிகிறது. எனினும் இதுபோன்ற நிலையில் என்னை மட்டுமே பதிலுரைகள் வழங்கவிட்டு நிர்வாகத்தினர் மௌனித்தேயிருப்பதே சிறப்பு என கருதுகிறேன்.

போகிற போக்கில் சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் தொடர்ச்சியாக எதிர்வினையாற்றத் தேவையில்லை. ஒரு பதிலுரை கூட அதிகபட்சம் தான். அதுவே போதும் என நான் நினைத்ததைப் போல் பொறுப்பிலுள்ளவர்களும் உணர்ந்திருக்கிறார்கள்.

சகோதரபாசத்துடன் கூடிய உங்கள் அக்கறைக்கும் ஆதங்கத்திற்கும் உரியவளாகிவிட்டதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். அல்லாஹ் உங்களுக்கு நன்மைகளை வாரிவழங்குவானாக.

ஜஸக்கல்லாஹ் ஹைர் .

Ebrahim Ansari said...

அன்புள்ள சகோதரி அவர்களுக்கும், தம்பி அபு இபு அவர்களுக்கும்,

பதிவாளர்கள் மீது சிலர் உள்நோக்கத்துடன் இப்படிப்பட்ட வார்த்தைகளை கொட்டும்போது நிர்வாகத்தினரும் இணைந்து கண்டிக்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்கிறேன். இது எனது தனிப்பட்ட கருத்து.

கைக்கூலி என்று களங்கப் படுத்த முயற்சிப்பது போலவே , போலித் தொப்பி என்று பதிவிடுவது , விளக்கம் சொன்னால் லக்கும் தீனுக்கும் வலிய தீன் என்று ஊரைவிட்டுத் தள்ளிவைப்பது போன்ற கடந்தகால நிகழ்வுகளில் பட்ட அனுபவங்களே அந்த கருத்துக்குக் காரணம்.
இவ்விதமாக நானும் பலமுறை தேவையற்ற வகைகளில் விமர்சிக்கப்பட்டிருக்கிறேன். எனது விளக்கங்கள் நீக்கவும் பட்டன. அது நெஞ்சத்தில் ஒரு வடுவாக இருக்கிறது. அதையே குறிப்பிட்டேன்.

மற்றபடி ஒவ்வொருவருக்கும் இதில் தனிப்பட்ட கருத்துகள் இருக்கலாம். அதையும் வரவேற்கிறேன்.

சகோதரி அவர்களின் தொடர்ந்த பதிவுகளை படிக்கக் காத்து இருக்கிறோம். அர்த்தமற்ற விமர்சனங்கள் வந்தால், யார் வருகிறார்களோ இல்லையோ இன்ஷா அல்லாஹ் நான் வருவேன். ஹஹஹாஹ்.

Ebrahim Ansari said...

அன்புள்ள சகோதரி அவர்களுக்கு வ அலைக்குமுஸ் சலாம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு