Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எழுத்துப் பிழைகள்! - 05 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்] 0

அதிரைநிருபர் பதிப்பகம் | May 23, 2018 | ,

எழுத்துப் பிழைகள் – 5 ஒவ்வாத ஒற்றுப் பிழை

‘ஒற்று’ என்ற சொல், பிறரை வேவு பார்த்தலையும் குறிக்கும். சிலபோது, அது கூடும்; ி இயலாளர். சிலபோது, அது கூடாது அல்லவா? தமிழில் புள்ளி எழுத்துகளை ‘ஒற்று’ எழுத்துகள் என்று வகைப்படுத்துவர் மொழி வல்லார். க், ச், ட், த், ப், ர், ய், ல், போன்றவை ஒற்றெழுத்துகள் ஆம். சொற்களுக்கிடையே, அல்லது ஒரே சொல்லுக்குள்ளேயே இவை போன்ற ஒற்றெழுத்துகளைச் சேர்ப்பது கூடும்; சிலபோது, கூடாது. இதை, ‘ஒற்று மிகுதல்’ என்றும், ‘ஒற்று மிகாமை’ என்றும் பகுப்பர் மொழ

பெயரெச்சத்தின் பின் ஒற்று மிகாது: 

சிறிய, பெரிய, நடைபெற்ற, இன்றைய, அன்றைய, நாளைய போன்ற சொற்கள் பெயரெச்சங்களாகும். அதாவது, ‘சிறிய’ முதலான சொற்களால் சொற்றொடர் முற்றுப் பெறாமல், ஏதோ ஒன்றை எதிர்நோக்கி நிற்பதை உணர முடியும். அவ்வாறு எதிர்பார்க்கப்படும் சொல் வல்லின எழுத்தில் (க, ச, ட, த, ப, ற) தொடங்கினால், கண்டிப்பாக ஒற்று மிகாது. சிறிய பெட்டி என்பதே சரி. சிறியப் பெட்டி என்று எழுதுவது தவறு. இதைப் போன்றே, சிறிய கண் என்பது, சிறியக் கண் என்றாகாது. பெரிய சண்டை என்பதைப் பெரியச் சண்டை என்று எழுதக் கூடாது. நடைப்பெற்றது என்று எழுதக் கூடாது. நடைபெற்றது என்பதே சரி. இன்றையத் தேவை, அன்றையச் சொல், நாளையக் கூட்டம் என்றெல்லாம் எழுதுவது பிழையாகும்.


பண்புத் தொகையில் ஒற்றெழுத்து மிகாது:

ஒரு பண்பு முடியாமல் தொக்கி நிற்குமாயின், அதைப் பண்புத் தொகை எனத் தமிழிலக்கணம் பகுக்கும். ‘முதுபெரும் எழுத்தாளர்’ என்பதில், முதலில் உள்ள ‘முதுமை’ என்ற பண்பை உணர்த்தி, ‘பண்புத் தொகை’ எனும் இலக்கண விதியில் படும். இது போன்ற பண்புத் தொகையின் பின் வல்லெழுத்து – ஒற்று - (‘முதுப்பெரும்’ என்று) மிகாது. உயர்சேவை, நனிசிறந்த, நல்ல தமிழ் போன்றவை ஒப்பு நோக்கத் தக்கன.


ஒற்று மிகாத வேற்றுமைத் தொகை:

ஒரு சொல்லின் தன்மையினை வேறுபடுத்திக் காட்டும் தன்மையவை, ‘வேற்றுமைகள்’ என்றும், அவை மறைந்து நின்றால், ‘வேற்றுமைத் தொகைகள்’ என்றும் வகைப்படுத்துவர். இதுபற்றிப் பின்னர் விரிவாக எழுதுவோம். ‘ஐ’ என்பது இரண்டாம் வேற்றுமை உருபாகும். இது மறைந்து நின்றால், ‘இரண்டாம் வேற்றுமைத் தொகை’ எனப்படும். தொகை = தொக்கி நிற்றல். எடுத்துக்காட்டாக, ‘தமிழ் பேசுவோர்’ என்பதில், தமிழ்(ஐ) என்ற இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்துள்ளது. எனவே, இங்கு ஒற்றெழுத்து (தமிழ்ப் பேசுவோர் என்று) மிகாது. அவ்வுருபு வெளிப்படையாக (தமிழை-ஐ என்று) வந்தால், ‘ப்’ எனும் ஒற்றெழுத்து (தமிழைப் பேசுவோர் என்று) மிகும்.


ஒற்று மிகவேண்டா இடங்களில் நம் கவிஞர் ஒருவர் தனது ‘சொல்லடுக்கில்’, நெடியப் பயணம், தலைக்கேறியப் பெருமையை, கவலையோடுக் கண்டெடுக்க, சேர்த்தப் பொருட்கள் என்றெல்லாம் எழுதியுள்ளார்...! கொடுமை...! திருந்தட்டும்...!

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு