Thursday, October 24, 2013

நேற்று ! இன்று ! நாளை ! - தொடர் -15

இப்போதெல்லாம் நாட்டில் பல்வேறு தேர்தல் சீர்திருத்தமுறைகள் முன்னெடுத்து வைக்கப் படுகின்றன. நாடு இவ்வளவு நாள் ஜனநாயகத்தைக் கண்டு விட்டது; அதன் விளைவாக அதிகார வர்கத்தினரின் கட்டுக்கு மீறிய ஊழலையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் ஒட்டு மொத்த சீரழிவையும் சந்தித்து விட்டது; ஆகவே சர்வாதிகாரிகளின் ஆட்சி வேண்டும் அப்போதுதான் நாடு உருப்படும்  என எண்ணம் கொண்டவர்களும், அமெரிக்க தேர்தல் முறைபோல் முழு அதிகாரம் படைத்த ஜனாதிபதி முறை வரவேண்டும் என்று கருத்து சொல்பவர்களும் இன்று அதிகரித்து வருகிறார்கள். இவர்களுள் வேறு சிலர் விகிதாச்சார அடிப்படையில் கட்சிகள் பெரும் வாக்குகளின் அளவுக்கு ஏற்றவாறு சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களை நியமிக்கும் முறை வரவேண்டுமென்றும் கேட்கிறார்கள். இவை பற்றி ஒவ்வொன்றாய் இனி வரும் அத்தியாயங்களில் விவாதிக்கலாம். இப்போது, இன்று நாட்டில் மிகவும் பரவலாக விவாதிக்கப் படுவது மூன்றாவது அணி என்பது பற்றியதாகும். இந்திய, தமிழ்நாட்டு அரசியலில் தேர்தல் சமயங்களில் எல்லாம் அடிபடும் ஒரு பேச்சிண் தலைப்பு – மூன்றாவது அணி !

முதல் இரண்டு அணிகள் எவை என்பதில் இன்று யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. மத்திய அரசியலென்றால், அவை காங்கிரஸ், பிஜேபி.  தமிழக அரசியலென்றால்,தி.மு.க, அ.இ.அ.தி.மு.க .  ஆனால் இவைதான் முதல் இரு அணிகள் என்ற நிலை ஏற்பட்டது எழுபதுகளுக்குப் பிறகுதான் என்பதை மறந்துவிடக் கூடாது. நேற்றைய இந்த வரலாற்றைப் புரிந்துகொண்டால்தான் இன்றைய  மூன்றாவது அணி உருவாகும் வாய்ப்பு உண்டா இல்லையா என்பதையே நாம் ஆராயமுடியும். 

இந்தியா சுதந்திரம் அடைந்ததும் நடந்த முதல் பொதுத் தேர்தலின்போது டெல்லியிலும் தமிழ்நாட்டிலும் இருந்த இரு பிரதான கட்சிகளில் ஒன்று காங்கிரஸ். மற்றது இரண்டு இடங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சிதான். அப்போது கம்யூனிஸ்ட் கட்சி இரண்டுபடவில்லை. டெல்லியில் நேருவின் காங்கிரஸ் 364 எம்பிகளைப் பெற்றது. கம்யூனிஸ்ட்டுகள் அடுத்த இடத்தில் 16 எம்பிகளுடன் இருந்தனர். ஹைதராபாதில் கம்யூனிஸ்ட்டுகளின் இயக்கமாக இருந்த மக்கள் ஜனநாயக முன்னணி தனிக் கட்சியாகப் போட்டியிட்டு 7 எம்பிகளைப் பெற்றது. ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சோஷலிஸ்ட் கட்சி 12 இடமும் ஆச்சார்யா கிருபளானியின் கிசான் மஸ்தூர் பிரஜா (உழவன் உழைப்பாளி குடிமக்கள்) கட்சி 9 இடங்களும் பெற்றன. பின்னர் சோஷலிஸ்ட் கட்சியும் கிசான் பிரஜாவும் இணைந்து பிரஜா சோஷலிஸ்ட் கட்சியாயிற்று. 

இன்றைய பிஜேபியின் கொள்ளுத்தாத்தாவான  ஜனசங்கம் அந்த முதல் தேர்தலில் பெற்றது வெறும் மூன்று எம்பி இடங்கள்தான். அதன் தோழமை அமைப்பான இந்து மகாசபா பெற்றது நான்கு. இன்னொரு இந்துத்துவ அமைப்பான ராமராஜ்ய பரீஷத் பெற்றது மூன்று. ஒரிசாவில் பழைய மகாராஜாக்களின் கட்சியான கணதந்திர பரீஷத் ஏழு எம்.பி இடங்களைப் பிடித்தது.

அதே தேர்தலில் தமிழ்நாட்டை உள்ளடக்கிய சென்னை ராஜதானியில், ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து பிரிந்து பெரியார் திராவிடர் கழகத்தை உருவாக்கி விலகியதும், தேய்ந்து போய்விட்ட ஜஸ்டிஸ் கட்சி பல இடங்களில் போட்டியிட்டும் ஒரு இடம் கூடப் பெறவில்லை. முதல் தேர்தலில் தி.மு.க பாராளுமன்றத்துக்கும்  போட்டியிடவில்லை; மாநில சட்டசபைக்கும் போட்டியிடவில்லை.

சென்னை ராஜதானியில் சட்டமன்றத் தேர்தலிலும் முதல் இடத்தில் காங்கிரசும் (164 எம்.எல்.ஏக்கள்) இரண்டாம் நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியுமே (62) இருந்தன. பெரியார் கம்யூனிஸ்ட்டுகளை ஆதரித்தார். தி.மு.க போட்டியிடாத போதும் (பா.ம.கவின் முன்னோடிகளான) வன்னியர் சாதிக் கட்சிகளை ஆதரித்தது. அவை 25 இடங்களைப் பெற்றன . பின்னர் காங்கிரஸ் அணிக்குப் போய் விட்டன. ஆச்சரியமான செய்தி என்னவென்றால் ஜெயப்பிரகாசரின் சோஷலிஸ்ட் கட்சி 35 எம்.எல்.ஏக்களையும் கிருபளானியின் கிசான் பிரஜா கட்சி 13 எம்.எல் ஏக்களையும் என்.ஜி. ரங்காவின் லோக் கட்சி 15 எம்.எல்.ஏக்களையும் அடைந்தன. இவையெல்லாம் சென்னை ராஜதானிக்குள் அப்போது இருந்த ஆந்திரம், ஒரிசா, கர்நாடகம், கேரளா பகுதிகளில் செல்வாக்குடன் இருந்தவை. தமிழ்நாட்டில் அல்ல.

இப்படி முதல் தேர்தல் நடந்த 1952ல் காங்கிரசுக்கு அடுத்த அணியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க வளர்ந்து 1957ல் அடுத்த தேர்தலில் போட்டியிட்டதுமே பலத்த அடி வாங்கி கட்டேரும்பாகி விட்டது. தி.மு.கவுக்கு 13. கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெறும் நான்கு சீட். இந்த சரிவுக்கு முக்கியமான இன்னொரு காரணம் இந்தத் தேர்தலின் போது சென்னை ராஜதானி மொழி வாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு விட்டதுமாகும். கம்யூனிஸ்ட்டுகளுக்கு தமிழ்நாட்டை விட ஆந்திர, கேரள, ஒரிசா பகுதிகளிலேயே அதிக செல்வாக்கு இருந்தது. அடுத்து வந்த 1962 தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டு சேர்ந்தும் கூட கம்யூனிஸ்ட்கட்சிக்கு கிடைத்தது இரண்டு எம்.எல்.ஏதான். தி.மு.கவுக்கோ  50. தி..மு.கவிலிருந்து பிரிந்து சென்ற ஈ.வி.கே சம்பத்தின் கட்சி போட்டியிட்ட 9 இடத்திலும் தோற்றது. காங்கிரஸ் 139 எம்.ல்.ஏக்களுடன் ஆளுங்கட்சியாயிற்று.

1967 தேர்தலின்போது கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டு இரு கட்சிகளாகியிருந்தது. அதில் முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட் கட்சி, வலது சாரியான ராஜாஜியின் சுதந்திரா கட்சி சகிதம் தி.மு.க கூட்டணியில் இருந்தது. சுதந்திராவுக்கு 20 இடங்களும் மார்க்சிஸ்ட்டுக்கு 11 இடங்களும் கிடைத்தன. மூன்று இடங்களில் போட்டியிட்டு மூன்று இடங்களிலும் முஸ்லிம் லீக் வென்றது. யாருடனும் கூட்டு சேராமல் தனித்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு எம்.எல்.ஏக்களை பெற்றது. பிரஜா சோஷலிஸ்ட் கட்சி நான்கு இடங்களைப் பெற்றது.  தமிழ்நாட்டில் அதிராம்பட்டினம் தொகுதி பிரஜா சோஷலிஸ்ட் கட்சியின் வேட்பாளர் காலம் சென்ற திரு ஏ.ஆர்.மாரிமுத்து அவர்களை தேர்ந்தெடுத்த வரலாறும் உண்டு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இப்படியாக 1952ல் இரண்டாம் நிலையில் இருந்த இடதுசாரிகள் 1967ல் தமிழகத்தில் அந்த இடத்தை இழந்து அடிமட்டத்துக்குப் போய் விட்டார்கள். பாராளுமன்றத்தில்  அவ்வளவு மோசமில்லை. மேற்கு வங்கம் மற்றும் கேரளாவின் கருணையால் தொடர்ந்து 20 முதல் 40 வரை இடங்களைப் பெற்றுப் பெரும்பாலும் இரண்டாம் இடத்திலேயே இருந்து வந்தனர். 1967 தேர்தலில் காங்கிரஸ் பலவீனமடைந்த போதும் கூட மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. கம்யூனிஸ்ட்டு கட்சி இரண்டாகப் பிளவு பட்டும் கூட இரு பிரிவுகளுமாகச் சேர்ந்து 42 இடங்களை வென்றன. ஜனசங்கம், சோஷலிஸ்ட்டுகள், சுதந்திரா போன்றோர் எல்லாம் அடுத்த நிலையிலேயே பலவீனமாக இருந்தனர்.

பலமான நிலையில் காங்கிரஸ், அடுத்து பல இடங்கள் தள்ளியிருந்தாலும் இரண்டாம் இடத்தில் இடதுசாரிகள் என்று 1967 வரை டெல்லியில் இருந்த நிலை எழுபதுகளில் மாறத் தொடங்கியது. முக்கியமான காரணம் இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சியை 1969ல் பிளவுபடுத்தியதுதான். பிளவுபட்ட காங்கிரசின் ஓர் அணி இந்திரா தலைமையில் சோஷலிசம் பேசிற்று. ராஜமான்ய ஒழிப்பு, வங்கி தேசியமயம் எல்லாம் செய்யப்பட்டன. இன்னொரு அணி வலதுசாரி பழமைவாதம் பேசிற்று.

சோஷலிஸ்ட்டுகளில் கொஞ்சம் பேர் இந்திராவுடன் சேர்ந்தார்கள். இடதுசாரிகள் அவ்வப்போது இந்திராவை ஆதரிப்பது, எதிர்ப்பது என்று மாறி மாறி நிலை எடுத்தார்கள். ஜனசங்கம் போன்ற வலதுசாரி மதவாத அமைப்பும், சுதந்திரா போன்ற வலதுசாரி மதசார்பற்ற அமைப்பும் சோஷலிஸ்ட்டுகளில் ஜனநாயகத்தை முக்கியமாகக் கருதியவர்களும் இந்திராவை எதிர்த்த காங்கிரசின் அணியுடன் கலக்க ஆரம்பித்தார்கள். 1970 முதல் 1980 வரை பத்தாண்டுகள் டெல்லி அரசியலில் இந்த மிக்சிங் ரீ - மிக்சிங்க் நடந்தபடி இருந்தது. இதில் கடைசியில் பயனடைந்தவர்கள் இந்துத்துவவாதிகளான ஜனசங்கிகள் / ஆர்.எஸ்.எஸ் தான். 

தமிழக அரசியல் இன்னும் விசித்திரமாயிற்று. 1967ல் தான் ஆட்சியிலிருந்து அகற்றிய காங்கிரசுடனே தி.மு.க 1971ல் நான்கே வருடங்களில் கூட்டு சேர்ந்தது. காரணம் இப்போது இரண்டு காங்கிரஸ் கட்சிகள் வந்துவிட்டன. ஒன்று இந்திரா. இன்னொன்று காமராஜ். தமிழ்நாட்டில் தன் தலைமைக்கு சவால் காமராஜிடமிருந்துதான் வரமுடியும் என்று தெளிவாக உணர்ந்திருந்த கலைஞர் கருணாநிதி, இந்திராவைப் பயன்படுத்தி காமராஜை பலவீனப் படுத்தினார். தி.மு.கவுக்கு எதிராக காமராஜர் உருவாக்கிய எதிர்ப்பலையெல்லாம், அனைத்திந்திய அளவில் அவர் சார்ந்திருந்த பிற்போக்கான சக்திகளினால் வீணாயிற்று.

அப்போது இந்திரா மட்டும் காமராஜரைத் தன்னுடன் இருக்கும்படி செய்திருந்தால், தமிழக அரசியல் மாறிப் போயிருந்திருக்கும். அனைத்திந்திய அரசியலும்தான். ஆனால் அது நிகழவில்லை. 1971 தேர்தல் வெற்றி , வங்க தேச உருவாக்க போர் வெற்றி எல்லாம் முடிந்ததும், இந்தியப் பொருளாதார வீழ்ச்சியை சரி செய்யவும், ஊழலை தடுக்கவும் இந்திராவிடம் எந்த திட்டமும் இல்லை. இதில் உண்டான அதிருப்தி வட மாநிலங்களில் மாணவர் இயக்கமாக உருவாகி, சோஷலிஸ்ட் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் மக்கள் இயக்கமாக மாறியது. ஜனசங்கம் முதல் பல உதிரிக் கட்சிகள்  வரை ஓரணியில் திரண்டனர்.

தமிழ்நாட்டில் காமராஜரை இந்திரா அலை மூலம் வீழ்த்திய கலைஞர், இந்திராவை தேர்தல் தொகுதி உடன்பாட்டின் முலம் வீழ்த்தியிருந்தார். 1971 சட்டமன்ற தேர்தலை விட மக்களவை தேர்தலையே தன் அதிகாரத்துக்கு முக்கியமென இந்திரா கருதியிருந்த பலவீனத்தை பயன்படுத்தி கலைஞர், தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரசுக்கு போட்டியிட ஒரு சீட் கூட தராமல் தொகுதி உடன்பாடு செய்தார். 1967ல் ஆட்சியை இழந்தபோது கூட 40 சத விகித வாக்கு பெற்றிருந்த காங்கிரஸ், சட்டசபைக்குள் நுழையவே முடியாமல் போயிற்று. இதைத் தான் என்னடா இது இந்த  மதுரைக்கு வந்த சோதனை  என்று சொல்லி காங்கிரஸ் தலையில் அடித்துக் கொள்ள வேண்டும். 

கலைஞரின் இந்த அரசியல் சூழ்ச்சியை காங்கிரசுக்குள் இருந்த சோஷலிஸ்ட்டுகளும் காங்கிரசை  வெளியிலிருந்து ஆதரித்த சில கம்யூனிஸ்ட்டுகளும் முன்னதாகவே புரிந்துகொண்டு விட்டனர். அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் கட்சிக்குள்ளும் வெளியிலும் தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் கலைஞர் கருணாநிதியையும் அவரது தி.மு.கவையும் பலவீனப்படுத்தாமல் காங்கிரஸோ இடதுசாரிகளோ திரும்ப மேலெழமுடியாது என்பது இவர்களுக்கு நன்றாக உறைத்தது. எனவே கட்சிக்குள் தனக்குப் போட்டியாளரான எம்.ஜி.ஆரை பலவீனப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்த கலைஞரை அதே எம்ஜிஆரைக் கொண்டே வீழ்த்துவது என்று எதிர் வியூகம் வகுக்கப்பட்டது.

ஆனால் காங்கிரஸ் சோஷலிஸ்ட்டுகள்- கம்யூனிஸ்ட்டுகளின் இந்த முயற்சி பிள்ளையார்  பிடிக்க  குரங்காக மாறிய  கதை மாதிரி ஆகிவிட்டது.  தி.மு.கவின் முதன்மை இடத்துக்குக் காங்கிரசும் வரமுடியவில்லை. தன் பழைய இரண்டாம் இடத்துக்கு இடதுசாரிகளும் வரமுடியவில்லை. முதல் இரண்டு இடங்களும் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க இரண்டிற்கும்தான் , இதில் யாரேனும் ஒருவரை நம்பித்தான் தாங்கள் இருக்க முடியும் என்ற நிலைக்கு காங்கிரசும் இடதுசாரிகளும் தள்ளப்பட்டுவிட்டார்கள். எழுபதுகளின் இறுதியிலிருந்து இதுதான் தமிழகச் சூழல், இதில் மூன்றாம் அணி என்றால், அது தி.மு.க, அ.இ.அ.தி.மு.க அல்லாத இன்னொன்றாகவே இருக்க முடியும். அதற்கான முயற்சிகள் என்ன ஆயின , இனி அதெல்லாம் சாத்தியமா என்பது இன்றளவும் ஒவ்வொருவரின் முதுகில் தொங்கும் கேள்விக்குறி. 

டெல்லி அரசியல் காங்கிரஸ்-இடதுசாரிகள் என்று அறுபதுகளில் இருந்த நிலையை ஜே.பி இயக்கமும் அதை சமாளிக்க இந்திரா கொண்டு வந்த நெருக்கடி நிலையும் மாற்றியமைத்தன. இந்துத்துவர்கள் முதல் வலதுசாரிகள், சோஷலிஸ்ட்டுகள் வரை சங்கமித்து உருவாக்கிய ஜனதாகட்சி காங்கிரசுக்கான மாற்று இரண்டாம் அணியாகத் தோற்றமளித்தது. ஆனால் அதை உருவாக்கி அதில் ஊடுருவி அதைப் பயன்படுத்தி தங்களையே முதன்மைப்படுத்திக் கொள்ள திட்டமிட்டிருந்த ஜனசங்கிகள், இரண்டே வருடங்களில் ஜனதாவை பலவீனமாக்கி, பாரதீய ஜனதா கட்சியாக இன்னொரு அவதாரம் எடுத்தனர்.

எண்பதுகளில் இருந்து டெல்லி அரசியலைப் பொறுத்த மட்டில் முதல் அணி காங்கிரஸ், இரண்டாம் அணி பி.ஜேபி என்ற நிலை இப்படித்தான் தொடங்கியது. இப்போது அங்கேயும் இவையல்லாத மூன்றாம் அணி சாத்தியமா, இதற்கு முன் இரண்டாம் நிலையில் இருந்த இடதுசாரிகளும் சோஷலிஸ்ட்டுகளும் புத்துயிர்ப்பு பெறுவார்களா என்பதும் பாரத நாட்டின் அளவுக்கு கேள்விக்குறி. 

தமிழகத்தில் மூன்றாம் அணி என்பது என்ன ? டெல்லியில் மூன்றாம் அணி என்பது   என்ன ? தொண்ணூறுகளில் உருவாகி பின்பு இப்போது இரண்டாயிரத்து பதிமூன்று வரை  பல கட்சிக் கூட்டணி அரசியலில் மூன்றாம் அணி என்பது சாத்தியம்தானா, இல்லவே இல்லையா? தொடர்ந்து அலசுவோம். அதற்கு முன் தகவலுக்காக, 

தேசிய அளவில், மூன்றாவது அணி அமைக்கும் திட்டத்துக்கு வித்திடும் நிகழ்ச்சியாக, இம்மாதம், 30ம் தேதி, டில்லியில், மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து, ஒரு கூட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்துகின்றன. அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி, ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. டில்லி கூட்டத்தில் கலந்து கொண்டு, மூன்றாவது அணிக்கு, ஜெயலலிதா தலைமை ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு, அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

மத்திய அரசு கடைபிடித்து வரும் புதிய பொருளாதார கொள்கைக்கு, மாற்று கொள்கையை முன்னிறுத்தி, கடந்த ஜூலை, 1ம் தேதி, டில்லியில் பேரணியை, இடதுசாரி கட்சிகள் நடத்தின. இதில், பல்வேறு அரசியல் கட்சிகள் பங்கேற்றன. இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் நடந்துள்ள மத மோதல்களைத் தொடர்ந்து, மதச்சார்ப்பற்ற கொள்கையை உறுதிப்படுத்த, டில்லியில் இம்மாதம், 30ம் தேதி, கூட்டம் ஒன்றை இடதுசாரிகள் நடத்துகின்றனர். இதற்கு, காங்கிரஸ் பா.ஜ.., மற்றும் இவ்விரு கட்சிகளின் கூட்டணிகளில் இல்லாத கட்சிகளுக்கு, அழைப்பு விடுத்துள்ளனர். தமிழகத்தில், அ.தி.மு.க.,வை மட்டும் அழைத்துள்ளனர். கடந்த மாதம், சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த, மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், டில்லியில் நடக்கும் கூட்டத்துக்கு வர வேண்டும் என, ஜெயலலிதாவை அழைத்ததாகவும் தெரிகிறது.லோக்சபா தேர்தலை முன்னிறுத்தி, மூன்றாவது அணி உருவாக்குவதற்கு, இக்கூட்டத்தில் அடித்தளம் அமைக்கப்படும் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்தது என, கருதப்படுகிறது. வட மாநிலங்களில் ஆட்சியில் உள்ள சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றுக்கும், இக்கூட்டத்தில் பங்கேற்க, இடதுசாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழகத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் எம்.பி., ஒருவர் கூறியதாவது: “மதவாதத்தை எதிர்த்தும், புதிய பொருளாதார கொள்கைகளினால் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிகள் குறித்தும், தொடர்ந்து பேசி வருகிறோம். இவற்றுக்கு, மாற்றுத் திட்டங்களையும் முன்வைத்துள்ளோம். காங்கிரஸ் பா.ஜ., ஆகியன மதவாதம் மற்றும் பொருளாதார கொள்கையில் ஒரே நிலையைப் பின்பற்றுகின்றன. இதனால், இக்கட்சிகள் அல்லாத கட்சிகளை ஒருங்கிணைத்து, மாற்று திட்டங்களைக் கொண்டு வர முயற்சிக்கிறோம். டில்லியில் இம்மாதம், 30ம் தேதி நடக்கும் கூட்டம், மதச்சார்பின்மையை முன்வைத்து நடக்கும் கூட்டம். இதில், பங்கேற்குமாறு, அ.தி.மு.க.,வுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இக்கூட்டத்தை, மூன்றாவது அணி அமைக்கும் முயற்சி என்கின்றனர். ஆனால், காங்கிரஸ், பா.ஜ.,வுக்கு மாற்று என்பதை தான் முன்வைக்கிறோம்” . இவ்வாறு, அவர் கூறினார்.

தமிழகத்தில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ., திராவிட கட்சிகளை நம்பித் தான், லோக்சபா தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆளும் கட்சியான அ.தி.மு.க., தனித்துப் போட்டி என, தனது நெற்குன்றம் பொதுக் குழுவில் அறிவித்துள்ளது. மேலும், பிரதமர் பதவியையும் குறி வைக்கிறது. எனவே, இடதுசாரிகளுடன் கைகோர்ப்பதன் மூலம், மூன்றாவது அணிக்கு தலைமை ஏற்க, முதல்வர் ஜெயலலிதா விரும்பலாம் என, கூறப்படுகிறது. அதனால், இம்மாதம், 30ம் தேதி, இடதுசாரிகள் நடத்தும் கூட்டத்தில், ஜெயலலிதா பங்கேற்பார் என, எதிர்பார்க்கப் படுகிறது.

இடதுசாரிகளின் மதசார்பற்ற மாநாடு அதில் பங்கேற்க ஜெயலலிதாவுக்கு அழைப்பு ஆகிய செய்திகள் அரசியல் நோக்கர்களை ஆலோசிக்க வைத்துள்ளது. காரணம் மத சார்பற்ற கட்சிகளின் மாநாட்டில் ஜெயலலிதா பங்கேற்பதைவிட அதில் பங்கேற்க கருணாநிதியை அழைத்து இருந்தாலாவது ஒரு சிறு நியாயம் இருந்து இருக்கலாம். பட்டவர்த்தனமான மத சார்பான  கட்சியான பாரதீய ஜனதாவுடன் கொல்லைப்புற உறவு வைத்து இருக்கும் சந்தேகத்துக்கு ஆளான ஜெயலலிதா – தனது பதவி ஏற்பு விழாவுக்கு நரேந்திர மோடியை அழைத்து வடை பாயசத்துடன் விருந்து வைத்த ஜெயலலிதா- அவருடைய அரசியல் ஆலோசகர் சோ வுடன் கலந்து பேசி மோடி பிரதமரானால் துணைப் பிரதமராகும் வாய்ப்பைக் கேட்பதாக பேரம் பேசுவதாக ஊடகங்கள் கணிக்கும்  ஜெயலலிதா   - மத மாற்ற தடை சட்டத்தைக் கொண்டுவந்த ஜெயலிதா-  அதை விட முக்கியமாக பிராமண சமுதாயத்தை சேர்ந்த ஜெயலலிதா  மத சார்பற்ற கட்சிகளின் மாநாட்டில் கலந்து கொள்ள – அதற்கு தலைமைதாங்க அழைப்பு விடுக்கப் பட்டிருப்பது ஒரு வியப்பின் சரித்திரக் குறியீடு இல்லாமல் வேறென்ன? எலியைக் கூப்பிட்டு பூனைக் கூப்பிட்டு எலிகளின் மாநாட்டுக்குத் தலைமை தாங்க வைப்பது போல இருக்கிறது. கருணாநிதியை தனிமைப் படுத்தும் அரசியல் சதியின் ஆரம்பமே இது.  

தொடர்ந்து இந்த அரசியல் அலங்கோலங்களைப் பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ். 

ஆக்கம்: P. முத்துப் பேட்டை  பகுருதீன் B.Sc;
உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி.

42 comments:

  1. பெங்களூர்,அக்டோபர் 3ம் தேதி

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது. இந்த வழக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி முடிகவுடா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, இந்த வழக்கில் சம்பந்தபட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருகிற 30-ந்தேதி பெங்களூர் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    ReplyDelete
  2. போட்டியாளர் யாரென்று இன்னும் விளங்காமலே... சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில்...

    நாங்களும் அரசியல் எழுதுவோம்ல !

    உள்ளூர் அரசியல் மட்டும்தான் தெரியும் என்று மல்லுக்கடுபவர்களுக்கு தெரியுமா ?

    ReplyDelete
  3. அரசியல் சாம்பார் கூட்டோடு ரொம்ப டேஸ்ட்!

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா,

    ஆஹா...

    தனிக்கட்சி துவங்க ஆகுமான அத்தனை அரசியல் அறிவும் ததும்பி நிற்கிறது தங்களுக்குள் காக்காமார்களே.

    எனக்கும் ஒரு பதவிக்கான உத்தரவாதம் தரும்பட்சத்தில் கட்சிக்கான வளர்ச்சி நிதி கோரிக்கையை அதிரை நிருபரில் வைத்து நமது செயற்குழுவின் முதல் அமர்வை புர்ஜ் கலிஃபாவில் ஏற்பாடு செய்துவிடலாம்.

    என்ன சொறீய?

    ReplyDelete
  5. சபீர் காக்கா சொன்னதிலிருந்து...

    //எனக்கும் ஒரு பதவிக்கான உத்தரவாதம்//

    தமிழ் மொழியில் கவிப்புலமை மிக்க சபீர் காக்காவுக்கு உங்களவையில் உயர் பதவி கொடுக்க "அகில உலக தமிழ் பாதுகாப்பு சபை" சார்பாக நானும் வேண்டுகிறேன்.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. //எனக்கும் ஒருபதவி தரும் பட்சத்தில்......//

    கட்சி ஆரம்பிக்கும் முன்னேயே மிரட்டல் ஆரம்பிக்குதே!

    ஆஹா! கட்சி படு ஜோரா ' ஓடு[ம்]'போலே தெரியுது !

    S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

    ReplyDelete
  8. தனிக் கட்சி தொடங்கவும் அதில் பதவி ஏற்றுப் பணியாற்றவும் அஜ்மான் தலைமைப் பிரதிநிதியும் லண்டன் பிரதிநிதியும் தயாரென்றால் பொதுக் குழுவைக் கூட்டி அதன்படி முடிவு செய்யலாம்.

    ஆனால் புர்ஜ் கலீபாவில் பொதுக்குழு வைக்குமளவுக்கு கட்சி இன்னும் கை நீட்டத்தொடங்கவில்லையே. ஓ ! முதல் போட்டுத் தொடங்கலாம் என்று என்று சொல்ல வருகிறீர்களா?

    ReplyDelete
  9. காக்கா,

    திர்ஹமில் வசூலித்து கட்சியின் கரங்களை வலிமைப் படுத்துவோம்ல?

    முதல் போட்டு ஆரம்பிக்க இதென்ன டி ஆரோட கட்சியா (கோஷம்: ஆ டண்டனக்கா)

    பதவியைப் பற்றி வாக்குத் தர மலுப்புவது ஏனோ?

    எம் ஹெச் ஜே, ஆதரவுக்கு நன்றியை சூட்கேஸில் அனுப்பி வைக்கட்டுமா?

    ReplyDelete
  10. THAMBI SABEER!

    பதவி பற்றி வாக்குத் தர மறுப்பா? இல்லை. உங்களுக்கு என்ன பதவி வேண்டும்?
    பொருளாளர் பதவி பொருத்தமாக இருக்குமெனக் கருதுகிறேன்.
    அமைச்சரவையில் உங்களுக்குத் கனரகத் தொழில் அமைச்சர் கூடுதலாக தேனீ வளர்ப்பு, - கவிதைத் தேனீ.

    உங்களுக்கு இந்த டீளிங்க் புடிச்சிருக்கா?

    ReplyDelete
  11. காய்தல் உவத்தலின்றி ஆய்தல் செய்திட்ட அரசியல் ஞானிகளாம் எம் புதிய கட்சியின் தலைவர், துணைத்தலைவர் இருவர்க்கும் பொன்னாடை போர்த்தி மகிழ்கிறேன்.

    ReplyDelete
  12. கவியன்பன் அவர்களே!

    வாருங்கள். கட்சியில் உங்களுக்கு இலக்கிய அணிச் செயலாளர் பதவியும் அமைச்சரவையில் வணிகவரித்துரையும் ஒதுக்கப் படுமென்று நீங்கள் கேட்குமுன்னே தலைவரிடம் ஆலோசித்து அதன்பின் அறியத்தருகிறேன்.

    ReplyDelete
  13. கட்சியின் பிரதான புலவர் கவியன்பன் அவர்களே,

    சபைக்குத் தாமதாக வந்தால் கவிதையோடுதான் வரவேண்டும் என்கிற சரத்து தங்களுக்கு சொல்லப்படவில்லையா?

    ReplyDelete
  14. //ஒதுக்கப் படுமென்று நீங்கள் கேட்குமுன்னே தலைவரிடம் ஆலோசித்து அதன்பின் அறியத்தருகிறேன்.//

    கவியன்பன்,

    இந்தத் தமிழைக் கவனித்தீர்களா? இதுதான் அரசியல் மரபுத்தமிழ். தெளிவாச் சொல்லச் சொல்லுங்கள் தலைவரை. பதவி தர்ராங்களாமா இல்லையா என்று.

    ReplyDelete
  15. //உங்களுக்கு இந்த டீளிங்க் புடிச்சிருக்கா?//

    ஓக்கேத்தான். ஆனா.... கணக்கு கேட்பியலோ? (கணக்கு தெரியாதே எனக்கு)

    ReplyDelete
  16. காக்கா,

    இப்படி தமிழ் சம்மந்தப்பட்ட பதவியையெல்லாம் எனக்கோ எம் ஹெச் ஜேக்கோ கவியன்பனுக்கோ தூக்கிக் கொடுத்துட்டா. இம்பூட்டுத் தமிழை வைத்துக்கொண்டு சர்வ சாதாரணமாக இலக்கியச் சுவை பொங்க வெளையாடும் கலிஃபோர்னிய க்ரவுன் வந்து கேட்டால் என்ன பதவி தருவீர்கள்?

    ReplyDelete
  17. அப்படியே என் தோழன் ஜாகிருக்கு என் பக்கத்திலேயே இருக்கிற மாதிரி ஏதாவது ஒரு பதவியை, ப்ளீஸ், போட்டுக் கொடுக்கவும்.

    ReplyDelete
  18. தமிழ் கவி இலக்கியத்தில் புகழ்பெற்ற நம்ம அபுல் கலாம் காக்கா அவர்களுக்கு ஆளுக்கு தகுந்த பதவி கிடைப்பதில் "அகில உலக தமிழ் பாதுகாப்பு சபை" பெருமை அடைகிறது. இவர்களால் தமிழ் தொடர்ந்து வாழும் என்பதில் ஐயமில்லை.

    சபீர் காக்காவுக்கு கொடுத்த பதவியால் இனி இந்தியா கிரேன்மயமாகும் என நம்பலாம்.

    நன்றிக்கடனாக சூட்கேஸ் அனுப்புவதாக சொன்னது இன்னும் கிடைக்க வில்லை. ஞாபகப்படுத்துங்கள் தலைவரே!

    ReplyDelete
  19. //ஓக்கேத்தான். ஆனா.... கணக்கு கேட்பியலோ? (கணக்கு தெரியாதே எனக்கு)//

    கணக்குத் தெரியாமல் இருப்பதே தலையாய தகுதி.

    தம்பி ஜாகீருக்கு பக்கத்து சீட்டில் பதவி. ?

    தேநீக்குப் பக்கத்தில் இந்தத்தம்பி ஒரு தும்பியாகட்டுமே.

    ReplyDelete
  20. //கலிஃபோர்னிய க்ரவுன் வந்து கேட்டால் என்ன பதவி தருவீர்கள்?//

    எதற்கு இருக்கிறது தமிழ்ப் பல்கலைக் கழகம்? அவருக்கு அங்கே துணைவேந்தர் பதவி. ஒரு கண்டிஷன் ; வார்த்தைப் பந்துகளால் விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும்.
    ஊதியம்? : அந்த தங்க விரல்களுக்கு தாங்க இயலாத அளவுக்கு முத்தம்.

    ReplyDelete
  21. "அகில உலக தமிழ் பாதுகாப்பு சபை"யில் எனக்கு ஒரு வட்டமோ முக்கோனமோ சதுரமோ எதாவது ஒரு நீல அகலத்துலே ஒரு பதவி கொடுங்க

    ReplyDelete
  22. ஹமீது,

    நீள அகலத்திலே கேட்கிறியலே சமீபத்தில் ஊருக்குப் போய்ட்டு வந்தீகளோ? மனக்கட்டு பீதி இன்னும் விடலயா?

    ReplyDelete
  23. அப்புறம்,

    ஈனா ஆனா காக்கா தலைமையிலான எங்கள் கட்சியின் சார்பாக உங்க சபைக்கு ஒரு அறிவிப்பு:

    பாதுகாக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு தமிழை அடைச்சி வச்சீங்க உங்க சபை பப்பரப்பா என்று போகுமளவுக்கு தமிழ் நமத்துப் போய்விடும். தமிழ அவுத்து விடுங்க அது பரவட்டும். அதுவரை, சங்கத்தின் பெயரை

    அகில உலக தமிழ் விரிவாக்க சங்கம் என்று மாற்றி யோசிங்க. பாதுகாக்க அது என்ன பதைக்கானா அல்கத்தா?

    ReplyDelete
  24. ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு யாரும் என்னிடமிருந்து தயவுசெய்து மைக்கை புடுங்கிடாதிய.

    காக்கா,

    இந்த மூன்றாம் அணிபற்றிய பேச்சு பரபரப்பாக ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் அடிபடுவதும் அதுவே தேர்தலுக்கு முன் நமத்துப் போய்விடுவதற்கும் பின்னணியில் சூட் கேஸ் இருப்பதாக ஒரு பேச்சு இருக்கிறதே, உண்மையா?

    வாங்கும் ஓட்டு விகிதாச்சாரத்திற்கேற்ப சட்டசபையில் பிரதிநிதிகள் என்பது கேட்க நல்லாத்தானே இருக்கிறது. இதில் அரசியல் உள்குத்து ஏதும் உள்ளதா? அத்துடன், இப்படி செய்வதால் தனிக்கட்சியின் சர்வாதிகாரம் ஓய்ந்துபோக வாய்ப்பில்லையா?

    அதிமுக திமுக ரெண்டும் திராவிட கட்சிகள் என்று பேசப்படும்போது அஇஅதிமுக வின தலைவி அவர்கள் திராவிடராக இல்லாதிருப்பது அக்கட்சியின் அடிவருடிகளுக்கு உருத்தாதா? பேசாம, அ.இ.ஐ.மு.க என்று மாற்றிக்கொள்ள வேண்டியதுதானே?

    சோடா ப்ளீஸ்

    ReplyDelete

  25. \\கட்சியின் பிரதான புலவர் கவியன்பன் அவர்களே,

    சபைக்குத் தாமதாக வந்தால் கவிதையோடுதான் வரவேண்டும் என்கிற சரத்து தங்களுக்கு சொல்லப்படவில்லையா?\\

    ஆஸ்தான கவிஞரின் அன்பான விருப்பத்திற்கிணங்கி ஈண்டுப் பதிவில் உடன் ஒரு பாடல் இடல் என் கடன் என்ற நம்பிக்கையில், கையில் ஒரு பாடலுடன் ஓடி வந்தேன், இந்த ஏழைப் புலவன் : இதோ என் பாடல்:




    கானம் பாடி கூவுங் குயிலாக
    ********காதல் ஜோடி காணுங் கனவாக
    வானம் பாடி தேடுந் .துணையாக
    ********வானந் தேடி வாடும் நிலவாக
    ஞானம் நாடி வாழும் உளமாக .
    *********நானுந் தேடி கூடுங் களமாக
    பானங் கூடி தாகம் நிறைவாக
    ********பாதம் ஓடி நானும் வருவேனே!

    ReplyDelete
  26. இனிமையும் அன்பும் நிறைந்த இ.அ. காக்கா என்று எங்களால் அழைக்கப்படும் தலைவர் அவர்களே!

    எனக்குப் பொருத்தமான பதவியைத் தரச் சொல்லித் தங்கள் காது வழியே தூது சொன்னது யார்? அல்லது அண்மையில் தான் உண்மையிலே துபாய்த் தமிழர்ச் சங்கமம் தலைவர் அவர்களின் ஆலோசனியின் படி, தமியேனுக்குக் கலை இலக்கியச் செயலாளர்ப் பதவிக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக அவர்கள் இல்லத்தில் சென்ற வாரம் ஈதுல் அல்ஹா விடுப்பில் விருந்தளித்து இவ்வறிவிப்பை என்னிடம் மட்டும் சொன்னதை தங்களிடம் சொன்னது யார்? அதனாற்றானோ, அதே பதவியைத் தங்களின் கட்சியின் இலக்கியச் செயலாளராக நியமித்தீர்க்ள்!

    அதுவேபோல், வணிகவரித் துறையுடன் நீண்ட நெடிய அனுபவங்களும் தமியேனுக்கு இருப்பதை அறிந்து அந்தத் துறையின் அமைச்சர்ப் பதவியும் அடியேனுக்கே வழங்க ஆணையிட்டுள்ளீர்கள் என்று நம்புகிறேன்.

    மகுடக்கவிஞர் அவர்கள் கல்வி அமைச்சர்ப் பதவிக்குப் பொருத்தமானவர் என்பதும் என் கணிப்பு.

    ReplyDelete
  27. அறிவின் இமயமே! அன்சாரி- இப்றாஹிம் காக்கா அவர்களே!

    தமிழ்ப்பல்கலைக் கழகத் துணைவேந்தர்ப் பதவிக்குத் தங்களால் நியமிக்கப்பட்ட எங்கள் கல்வி அமைச்சர்- மகுடக்கவிஞர் அவர்களிடம் சொல்லி, அந்தப் பல்கலைக்கழகத்தில் அடியேன், “புலவர்” பட்டயப் படிப்புக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பினேன்; அதற்கான மறுமொழி ஏதும் வராமல் தவிக்கின்றேன்; உடன் ஆவன செய்ய வேண்டுகின்றேன். அத்ற்கான சிறப்பு அன்பளிப்புத் தொகை விடுப்பில் வரும்பொழுது எல்சிடி தொலைக்காட்சிப் பெட்டியாகக் கொண்டு வந்து தருகிறேன். (ஆனால் சுங்கத்திலும் இலஞ்சம் ரூபாய் ஏழாயிரம் கட்ட வேண்டும்; கருத்து உபயம்: அண்மையில் விடுப்பில் சென்று வந்த என் சகப் பணியாளர்ப் பட்ட அனுபவம்)

    ReplyDelete
  28. FLASH NEWS...

    மேதகு கவிஞரின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களின் பெருத்த ஆதரவு கிடைப்பதை மகிழ்ந்து நேற்று உருவாக்கப்பட்ட அமைப்பின் பெயர் இன்று முதல் "அகில உலக தமிழ் விரிவாக்க சங்கம்" என பெயர் மாற்றம் செய்வதுடன், மிக நீளமும் பெரு வட்டமும் உடைய "ஜெ" க்கு நிகரான பொதுச்செயலாளர் பதவியை எங்கள் விஞ்ஞானியாக்காவுக்கு இந்த அரசியல் மேடையில் வழங்கி கெளரவிக்கிறோம்.

    இங்ஙனம்
    அகில உலக தமிழ் விரிவாக்க சங்கம்.

    ReplyDelete
  29. ஓயாமல் உழைக்காதவராய்; ஆனால் ஓயாமல் மேசையில் கைதட்டுபவராய் இருப்பவர்களுக்கு மட்டுமே வேட்பாளர் வாய்ப்பு அளிக்க வேண்டும்.

    ReplyDelete
  30. sabeer.abushahruk சொன்னது…

    காக்கா,

    இப்படி தமிழ் சம்மந்தப்பட்ட பதவியையெல்லாம் எனக்கோ எம் ஹெச் ஜேக்கோ கவியன்பனுக்கோ தூக்கிக் கொடுத்துட்டா. இம்பூட்டுத் தமிழை வைத்துக்கொண்டு சர்வ சாதாரணமாக இலக்கியச் சுவை பொங்க வெளையாடும் கலிஃபோர்னிய க்ரவுன் வந்து கேட்டால் என்ன பதவி தருவீர்கள்?
    Reply வியாழன், அக்டோபர் 24, 2013 8:58:00 PM
    ------------------------------------------------------------------------------------------------------------


    அஸ்ஸலாமுஅலைக்கும்.கவியரசே! லாவகமா உங்க பினாமியான என்னை இங்கே இழுத்து வந்திட்ங்க உங்கள் அரசியல் சாணக்கியத்தனம் யாருக்கு வரும்?

    ReplyDelete
  31. Ebrahim Ansari சொன்னது…

    //கலிஃபோர்னிய க்ரவுன் வந்து கேட்டால் என்ன பதவி தருவீர்கள்?//

    எதற்கு இருக்கிறது தமிழ்ப் பல்கலைக் கழகம்? அவருக்கு அங்கே துணைவேந்தர் பதவி. ஒரு கண்டிஷன் ; வார்த்தைப் பந்துகளால் விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும்.
    ஊதியம்? : அந்த தங்க விரல்களுக்கு தாங்க இயலாத அளவுக்கு முத்தம்.
    -------------------------------------------------------------------------------------------------------

    அஸ்ஸலாமுஅலைக்கும்.
    அவைத்தலைவரே! நலமா? முன்ட கூவியில் உரையாட முடியாத சூழலில் இங்கே பதில் சொல்லவந்தேன்.முதலில் எனக்கு அதிமுக்கிய பதவியை தர யோசனை செய்ததற்கு என்றும் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன்.( இந்த நன்றி அன்பை முறிக்காது).தகுதிக்கு மீறிய பதவிதான் அரசியலில் சகஜம் என்பதால் இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.மேலும் நீங்க ஆணையிட்டபடி வார்த்தை பந்துகளில் விளையாடினால் நீங்கள் என்னை "உதைக்காமல் "இருப்பீர்களா? மேலும் பந்துகளில் விளையாட என் "பந்து"க்களே(சொந்தங்களே)கேட்பதால் அதுக்கு என்னை தகுதியாக்கிகொள்ள முயல்வேன்!முத்தம் மொத்தமும் எனக்கா? எனக்கே எனக்கா?அப்படியென்றால் அந்த ஊதியத்தில் மேலும் நான் சந்தோசத்தில் முன்பைவிட ஊதிபோவேன்!

    ReplyDelete
  32. மகுடக்கவிஞர் அவர்கள் கல்வி அமைச்சர்ப் பதவிக்குப் பொருத்தமானவர் என்பதும் என் கணிப்பு
    --------------------------------------------------------------------------------------
    அஸ்ஸலாமுஅலைக்கும்.கவிதீபமே! கல்வியை பலர் இங்கே கழுவி குடித்திருக்க என்னை கல்விதுறைக்கு மந்திரியாக்க சொல்லும் உங்கயோசனைக்கு இவனுக்கு கல்வியா என எதிர்கட்சி கேள்வி கேட்க மாட்டார்களா?இதனால் மாணவர்கள் படிப்பில் தோல்வி அடையமாட்டார்களா?எனவே எனக்கு கல்வித்துறை என்பதை மறுபரிசீலனை பன்னவும்.

    ReplyDelete
  33. கவியன்பன் அவர்களே!

    இவ்வளவு பெரிய கட்சியை வைத்து நடத்தும் நாங்கள் உங்களுக்குப் பின்னால் உளவுத்துறையை உலவ விட்டிருக்க மாட்டோம் என்றா நினைத்தீர்கள்?

    ===

    அன்பான தோழர்களே! உடன் பிறப்பே! ரத்தத்தின் ரத்தங்களே! இனிய சொந்தங்களே!

    கிரவுன் அவர்களின் கருத்தை கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.

    பாண்டிச்சேரியில் ஒரு கல்யாண சுந்தரம் என்கிற நபர் கல்வி அமைச்சராக பணியாற்றினார். ஆனால் கொஞ்ச காலம் கழித்து த் தெரிந்தது அமைச்சரான அவர், தனது சொந்த பத்தாம் வகுப்புத் தேர்வில் தனக்காக ஆள் வைத்து எழுதிப் பாஸ் ஆனார் என்கிற இனிப்பான செய்தி.
    இதுதான் இன்றைய ஜனநாயகம்.
    ஆகவே
    // கல்வியை பலர் இங்கே கழுவி குடித்திருக்க என்னை கல்விதுறைக்கு மந்திரியாக்க சொல்லும் உங்கயோசனைக்கு இவனுக்கு கல்வியா என எதிர்கட்சி கேள்வி கேட்க மாட்டார்களா?இதனால் மாணவர்கள் படிப்பில் தோல்வி அடையமாட்டார்களா?எனவே எனக்கு கல்வித்துறை என்பதை மறுபரிசீலனை பன்னவும்.// என்கிற உங்களின் ஆட்ச்பனையை கடுமையாக எதிர்க்கிறேன். அப்படி ஆட்சேபனை வந்தால் அதைக் கட்சி எதிர் கொள்ளும் (கொல்லும்).

    மேலும் கவியன்பன் போன்றோரின் சிபாரிசை நாங்கள் தள்ள முடியாததால் நீங்கள்தான் கல்வியமைச்சர். அடுத்த சில தினங்களின் அமைச்சரவை பட்டியல் வெளியாகும்.

    ஆளுநர் அபூ இப்ராஹீம் இவ்வளவு கலவரத்திலும் வேடிக்கை பார்ப்பது சரியில்லை என்கிற எனது ஆட்சேபனையையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

    ReplyDelete
  34. மேலும் கவியன்பன் அவர்களே!

    நீங்கள் சொன்ன பதவிகள் தற்ப பட்டுவிட்டது. நீங்கள் செய்த சிபாரிசும் ஏற்கப் பட்டுவிட்டது. அதற்குப் பிறகும் இன்னும் எத்தனை நாளைக்கு இமயத்தையே சொல்லிக் கொண்டு இருப்பீர்கள்? அதைவிட உயரமான வேறு ஒன்றும் கிடைக்கவில்லையா? இமத்தின் மேல் ஒரு ஸ்டூல் போட்டாவது தேடி சொல்லுங்கள்.

    ===

    தம்பி சபீர் அவர்கள் மூன்று கேள்விகள் கேட்டு இருக்கிறார்கள்.
    எமது கட்சியில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை என்று எம்மை கேட்பவர்கள் இதைப் பார்த்து தங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.

    அந்தக் கேள்விகளுக்கு கட்சியின் மேல்மட்ட ஆலோசனைக் குழு விரைவில் பதில் அளிக்கும்.

    ReplyDelete
  35. விஞ்ஞானி காக்காவுக்கு பொது செயலாளர் பதவி வழங்கியதை நான் வழிமொலிஹிறேன். எங்கள் விஞ்ஞானி காக்காவுக்கு இந்த பதவியை வழங்கியதற்கு தலைவருக்கும் அருமை சகோதரர் எம் ஹெச் .ஜே விற்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .


    தற்போது தெரிகிறதா எம்.பி ஏ வையும் , எம் ஹெச் ஜேவையும் பின்னாளில் இருந்து இயக்குவது யாரென்று .....................




    மஹனாருக்கு மிக பெரிய பதவி கொடுத்து மகிழ்விக்க பட்டுள்ளது இந்த சந்தோசத்தை கொண்டாட இன்னும்மா தந்தையார் ஏர்வாடியில் இருந்து வரவில்லை

    ReplyDelete
  36. நமதூரில் ஒரு காலத்தில் இணைய அரசியல் என்று பேசப்பட்டது, விமர்சிக்கப்பட்டது ! அது இதுவா ?

    சகல தகுதியும் ஆட்சி செய்ய இருக்கும் கருத்தாடலில் ஈடும் சகோதரர்களுக்கு கட்சி அரசியல் செய்ய அனுபவம் குறைவே !

    அடிக்கடி மல்லுக் கட்டனும்... ஆனால், தேத்தணியில விழுந்த ஐஸ்கீரீம் மாதிரி சீக்கிரம் உருகிடுவோமே.. நாமதான் ! :)

    ReplyDelete
  37. நேற்று ஒரு செய்தியை இணையத்திலும் இமயம் தொலைக்காட்சியிலும் காண நேர்ந்தது !

    அதிக இட ஒதுக்கீடு கொடுத்தால் இடித்தவனோடும், இனத்தை அழித்தவனோடும் கை கோர்ப்போம் என்று (அவ்வாறு நடக்காது என்றொரு நம்பிக்கையில்) இயக்கச் சகோதரர் போட்டி கொடுக்க !

    அதற்கு போட்டியாக, எழுந்த விமர்சனங்களையும் ஆதரவுகளையும் கேட்டது, கண்டதும்...!

    அடச்சே !

    தமிழாக்கத்தில் வெளியிட்ட பத்வாக்களில் கூடும் / கூடாது என்பதை படித்தவர்களுக்கு மட்டும்தான் சுவர்க்கம் / நரகம் என்றும் மற்றவர்களுக்கு தமிழ் தெரியாமல் இருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்ற போக்கோடுதான் மேற்சொன்னதும் இருக்கிறது !

    அன்றைய அண்ணன் தான் எழுந்து வரம்னும் (அண்ணாவைச் சொன்னேன்) !

    ReplyDelete
  38. //மகனாருக்கு பெரிய பதவி கொடுக்கப்பட்டு ..இருக்கிறது.......//

    எங்கள் குடும்பத்தில் குடிமிப்பிடி சண்டை உண்டாக்க நீங்கள் எல்லாம் கூடி சூழ்சி செய்கிறீர்கள் என்பது எனக்கு தெரியாதா? அரசியலில் பழம் திண்டு கொட்டையும் முழுங்கியவன் நான் என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்ள ஆசைப்படுகிறேன்!

    நான் கேட்கிறேன் பெரியவனுக்கு பெரிய பதவி கொடுத்தீர்களே! என் மதுரை மைந்தனை மறந்தது ஏன்?

    என் மகள் மீன்விழியாளுக்கு என்ன 'நாற்காலி' கொடுத்தீர்கள்?. கட்சியே குடும்பம்; குடும்பமே கட்சி'என்று கஞ்சித் தண்ணி கூட குடிக்காமல் காஞ்சி விரல் நீட்டிய திக்கெல்லாம் காற்று போல் பறந்து பறந்து காரிய மாற்றி கட்சி வளர்த்தவன் நான் என்பதை நாடறியும்; நல்லோர் அறிவார்கள்.

    ''ராமன் இருக்கும் இடம் தான் எனக்கு அயோத்தி'' என்று சீதை சொன்னது.. போல அண்ணா இருக்கும் இடம் தான் எனக்கு காஞ்சி''! என்றவன் நான்.

    ''செக்கர்வான் தனையொத்த நமது ரத்தம் சிந்தட்டும் புரட்சிக்கே'' என்ற புரட்சி கவிஞர் பாரதிதாசனின் பாடலை பாடிப்பாடி ஊர்தோறும் ஊர்தோறும் ஓடி ஓடி உழைத்து மண்ணில் உதிரம் சிந்தி கட்சி வளர்த்தவன் நான்என்பதை நாடறியும் நாட்டு மக்கள் அறிவார்கள்.!

    உடன்பிறப்பே உனக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன் மரியாதையா கட்சியின் முக்கிய பதவிகளை எல்லாம் என் குடும்பத்தாருக்கே கொடுத்து விட்டு மற்ற சில்லறை பதவிகளை நீங்களே பிரித்துக் கொள்வதில் எனக்கு ஆட்சோபனை ஏதும் இல்லை.

    அதை விட்டு சற்றேனும் ஏறுக்கு மாறாக நடப்பீர்களே யானால் கூறாமல் ஏர்வாடி இப்ராஹிம் சாஹிவோ சமாதி முன் சாகும் வரை [எச்சரிக்கை: யார் சாகும் வரை என்றெல்லாம் குறுக்கு கேள்வி கேட்கப்படாது]
    உண்ணாவிரதம் தொடரும் நாடே பற்றி 'எரியும்' என்று தாழ்மையுடன் எச்சரிக்கிறேன்.

    S.முஹம்மது பாரூக்
    [அதிராம்பட்டனத்தார்].
    C/o.ஆதம்பாவாலெப்பை.
    ஏற்வாடி தர்கா.

    குறிப்பு : உண்ணாவிரதம், சமாதி (இதெல்லாம் அரசியல் சொல்லாடல்... இதில் ஏதும் குத்தம் கண்டு குத்த வந்துடாதிய மக்களே)

    ReplyDelete
  39. எங்கள் மூத்த காக்காவை பூ மாலையால் குத்த வருவோம் பாமாலையால் குத்த வருவோம் அன்பால் குத்த வருவோம் (நாட் அம்பு) பாசத்தால் குத்த வருவோம் . போதும் ஏர்வாடி கேம்ப் விரைவில் ஊர் திரும்புங்கள்

    ReplyDelete
  40. இங்கு பூ மாலை என்று குறிப்பிட்டதும் அரசியலுக்காகவே அதுக்காக என்னை யாரும் குத்த வந்தாடுதியா

    ReplyDelete
  41. \\இவ்வளவு பெரிய கட்சியை வைத்து நடத்தும் நாங்கள் உங்களுக்குப் பின்னால் உளவுத்துறையை உலவ விட்டிருக்க மாட்டோம் என்றா நினைத்தீர்கள்?//

    அரசியலுக்கே உரித்தான “உளவுத்துறை”யைத் தங்களின் கையில் வைத்திருப்பதும் அறிவேன். இன்று கவிவேந்தரின் கவிக்காற்று வீசும் அஜ்மான் சென்று விட்டு இப்பொழுதுதான் (இரவு ) அபுதபி வந்தேன். ஆயினும், உங்கள் உளவுத்துறையின் கண்காணிப்பை விட “மூன் டிவி” யின் கண்காணிப்புக்குள் பதிவாகி விட்டேன். அதனால், பின்னூட்டமிடத் தாமதமாகி விட்டது.

    ReplyDelete

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.