Wednesday, December 14, 2016

பசுமை அதிரை 2020


நெஞ்சிலாடும் ஊஞ்சல் கட்ட
நிழல்மரங்கள் அறுகுமுன்பே
பிஞ்சுமரம் கொஞ்சமேனும்
பசுமைக்காக நடுதல் வேண்டும்

சருகெனவே கருகிவரும்
சுற்றுவட்டப் பச்சையெல்லாம்
சொந்தஊரின் செழிப்புக்கண்டு
சொர்க்கமென்று வியக்க வேண்டும்

காவியாலும் காக்கியாலும்
காணுமெங்கும் குறுதி நிறம்
கண்குளிர மண்மிளிர
களையெடுத்து மரம் வளர்ப்போம்

இணக்கமனம் வணக்கத்தளம்
இடித்துடைத்தல் வெறி போதை
இளங்கன்று இடங்கண்டு
இட்டு வளர்த்தல் கர சேவை

பசுமேய பசுமையாகப்
பச்சிலைகள் பதியம்போட்டு
புல்வெளியில் பொதுவழியை
பகுத்துப் பாதைப் பண்செய்வோம்

நஞ்சையென்றும் புஞ்சையென்றும்
நன்மை நட்டு நிலமெல்லாம்
நன்றியோடு இன்றியமையா
நன்னீர்ப் பாய்ச்ச வழிசெய்வோம்

முகிழ்கருக்க மழைமுகிழ்க்க
முடிந்தவரை மரம்வளர்ப்போம்
முகம்நகைக்க அகம்நிறைய
முழுமனதாய் முயன்றிடுவோம்

நாடுசெழிக்க காடுவளர்த்தல்
நல்லதொரு மதியாகும்
நாலுகன்றை நாளும்விதைத்தால்
நமக்குப் பசுமை விதியாகும்

பசியறிய ருசியறிய
பட்டினிதான் வழியாகும்
பசுமை அதிரை 2020 க்கு
பாடு பட்டாலே பலனாகும்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
theme painting: ஷாஹிபா சபீர் அஹ்மது


WE SUPPORT

19 comments:

  1. இணக்கமனம் வணக்கத்தளம்
    இடித்துடைத்தல் வெறி போதை
    இளங்கன்று இடங்கண்டு
    இட்டு வளர்த்தல் கர சேவை
    ---------------------------------------------
    அஸ்ஸலாமுஅலைக்கும். முதலில் வாழ்த்துக்கள்! இந்த வரிகளை மட்டும் பேசி விட்டு பிறகு அலசலாம்!
    - சூடான கார(ச்)சேவை கடித்ததுபோல் இருக்கனுமே காவி,பாவிகளுக்கு!இளம் தளிர் நடும் ,தளிர் செடி!

    ReplyDelete
  2. காலைத் தென்றல் கவிதை .
    ஊக்கப்படுத்தும் உண்மைகள்.
    கவிதை ஒரு ஓவியமென்றால் ,
    ஓவியம் ஒரு பேசும் கவிதை.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. நெஞ்சிலாடும் ஊஞ்சல் கட்ட
    நிழல்மரங்கள் அறுகுமுன்பே
    பிஞ்சுமரம் கொஞ்சமேனும்
    பசுமைக்காக நடுதல் வேண்டும்
    -----------------------------------------------------------
    அருமை!இளம் பசுமையாய் கவிதை தளிர்கள்!ஒன்று கொய்யும் முன் அதன் இடத்தில் ஒரு விதை விதைத்தால் தேவைகளும் பூர்த்தியாகும்,இல்லாதென்பது இல்லாததாய் போய்விடும்.முன்னெச்சரிக்கை! பசு"திண்ணும் பச்சிலையைகூட கவிதையில் சொல்லமுடியாது பசு எமக்குத்தாய் என ஒரு காவி கூட்டம் ஆர்பரிக்கும் அவலம் கானும் நிலை!

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. சருகெனவே கருகிவரும்
    சுற்றுவட்ட பச்சையெல்லாம்
    சொந்தஊரின் செழிப்புகண்டு
    சொர்க்கமென்று வியக்க வேண்டும்
    ------------------------------------------------------------------
    குறுக்குப்புத்தியின் காரணத்தில் விளை நிலமெல்லாம் விலை நிலமாக்கி சருக்கிவிழும் மாந்தரின் செருக்கு குறைக்கும் படி சுருக்'கெனவே சொன்ன கவிதை சொல் பதமும் அதன் பயனும் கன்டு(று) கண்டு ஒன்று நடும் போது அதை கண்டு கழிக்கும் காட்சியின் மாட்சியும் ,மேலும் குளிர வைக்கும் இதயம் தன்னை,அதுவே தூஆவாக நன்மை சேர்க்கும்.

    ReplyDelete
  6. காவியாலும் காக்கியாலும்
    காணுமெங்கும் குறுதி நிறம்
    கண்குளிர மண்மிளிர
    களையெடுத்து மரம் வளர்ப்போம்
    -------------------------------------------------------
    காவியாலும் காக்கியாலும்
    காணுமெங்கும் நிலமெல்லாம் குறுகிபோகும் படி கையகப்படுத்தி விவசாயத்தின் முதுகெலும்பை ஒடிக்கும் கையை நாம் உடைத்து
    கண்குளிர மண்மிளிர
    களையெடுத்து மரம் வளர்ப்போம்




    ---------------------------------------------------------

    ReplyDelete
  7. பசுமேய பசுமையாய்
    ----------------------------------------
    கண் மூடி ரசிக்கவைத்த வார்த்தை புல்லரிக்கவைக்கிறது!

    ReplyDelete
  8. பசுமேய பசுமையாய்
    பச்சிலைகள் பதியம்போட்டு
    புல்வெளியில் பொதுவழியை
    பகுத்துப் பாதை பண்செய்வோம்
    ------------------------------------------------------------------
    பொது நலம் காண போடப்பட்ட பதியம்!இது மனதில் பதியும் பொழுது பசுமையாய் வாழ்வின் பக்கமெல்லாம் நிறைந்திருக்கும். அன்டை வீட்டாரோடு சண்டை இல்லாமல் செய்திடும்.

    ReplyDelete
  9. கவிதை வயல் தோரும் நடக்கையில் குளிர்காற்றாய் வீசும் சுகானுபவம் விதைத்த கவிஞருக்கு நன்றி!காலைத் தென்றல் கவிதை .
    ஊக்கப்படுத்தும் உண்மைகள்.
    கவிதை ஒரு ஓவியமென்றால் ,
    ஓவியம் ஒரு பேசும் கவிதை.

    மனமார்ந்த பாராட்டுக்கள். கவிஞருக்கும்.கவியின் வாரிசுகளுக்கும்.

    ReplyDelete
  10. இந்தக்கவிதை பசுமை செழித்திடவிதைத்த [க]'விதை'!

    ReplyDelete
  11. //குறுக்குப்புத்தியின் காரணத்தில் விளை நிலமெல்லாம் விலை நிலமாக்கி //


    எங்கிருந்து வருகின்றது இந்த தமிழருவி???....கிரவுன் தான் பதில் சொல்ல வேண்டும். [ இந்த மாதிரி எழுத எனக்கு 4 நாள் தேவைப்படும்...யோசிக்க 2 நாள் தேவைப்படும் ]

    ReplyDelete
  12. Shahiba's painting is simply superb. Lot of skills she has. [ எனக்கு ஒரு கண்ணாடி கிளாஸ் வரைய தெரியவில்லை என்று சேக்நெய்னா [ ஓவியம் ] ரொம்ப உக்கிரமா திட்டினார். [ அப்போ தூர தூக்கிப்போட்டது என் தூரிகையை ]

    ReplyDelete
  13. Theme painting SHAHIBA SABEER AHAMED எனும் வார்த்தை கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் தேட வேண்டியிருக்கிறது.

    ReplyDelete
  14. //குறுக்குப்புத்தியின் காரணத்தில் விளை நிலமெல்லாம் விலை நிலமாக்கி //


    எங்கிருந்து வருகின்றது இந்த தமிழருவி???....கிரவுன் தான் பதில் சொல்ல வேண்டும். [ இந்த மாதிரி எழுத எனக்கு 4 நாள் தேவைப்படும்...யோசிக்க 2 நாள் தேவைப்படும் ]
    ---------------------------------------------------
    அஸ்ஸலாமுஅலைக்கும். நலமா காக்கா! தொடர்பில் இருக்க முடியாத துயரம் என்னை வாட்டும் பல நேரம் இன்சா அல்லாஹ் மீண்டு(ம்)வரும் அந்த சந்தர்பங்கள்! அல்லாஹ் நாடிவிட்டால் என்னை போல் சாமானியனுக்கும் சிந்திக்கும் ஆற்றல் தருவான் என்பதின் சாட்சியே சாட்சாத் தங்களுடைய ஆச்சரிய கேள்விக்கு பதில். மேலும் உங்களைப்போன்ற சான்றோரிடத்தில் கவர்ந்து வாங்கிய அனுபவம்!

    ReplyDelete
  15. //அப்போ தூர தூக்கிப்போட்டது என் தூரிகையை ] // ஏன் இப்போ எப்படி வசதி... திரும்ப தூக்கலாமே அந்த தூரிகையை...

    //Theme painting SHAHIBA SABEER AHAMED எனும் வார்த்தை கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் தேட வேண்டியிருக்கிறது. //

    இப்போ பாருங்க

    ReplyDelete
  16. அதிரைக்கு பசுமையையே அள்ளி தரும் அருமைக் கவிதை!

    ReplyDelete
  17. Thanx Abu Ibrahim for your immediate action.

    உங்களைப்போன்றவர்கள் இந்திய அரசாங்க பணிகளில் இருந்தால் நன்றாக இருக்கும்.[ நாட்டையும் யாரும் குறை சொல்ல மாட்டார்கள் ]
    ...................................................................................................................

    Brother Crown...நானும் உங்களைப்போல் சாமான்யன் தான்....எனக்கு கிடைத்த வாழ்க்கையின் அனுபவங்கள் வேண்டுமானால் அசாதாரணமாக இருக்களாம். [ அதுதான் நான் எழுதிய 'படிக்கட்டுகள்' தொடருக்கு உதவியாக இருந்தது. ]

    ReplyDelete
  18. அன்பிற்குரிய இப்றாகீம் அன்சாரி காக்கா, ஃபாரூக் மாமா, எம் ஹெச் ஜே ஆகியோருக்கு இப்பதிவை வாசித்து கருத்திட்டமைக்கு நன்றி.

    ஜாகிர் இருக்கும் ஊர் முழுதும் பசுமையாகவே இருப்பதால் "பசுமை அதிரை"க்கான ஆவலில் அவ்வளவு ஒன்றும் ஆர்வமில்லாமல் இருக்கலாம். மரம் நடுவதின் அவசியம் பற்றி ஒன்றுமே சொல்லாமல் துரியான் துன்ன போய்ட்டான்.

    ReplyDelete
  19. வ அலைக்குமுஸ்ஸலாம் க்ரவ்ன்,

    //பொது நலம் காண போடப்பட்ட பதியம்!இது மனதில் பதியும் பொழுது பசுமையாய் வாழ்வின் பக்கமெல்லாம் நிறைந்திருக்கும். அன்டை வீட்டாரோடு சண்டை இல்லாமல் செய்திடும்.//

    உண்மை. மனதில் பதியும் எனில் மண்ணின் விதியும் பசுமையென மாறும்.

    நன்றி க்ரவ்ன்.

    ReplyDelete

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.