தவற்றால் "சரி"ந்ததோ?? 8

அதிரைநிருபர் பதிப்பகம் | July 02, 2014 | , , , , ,

நீர் நிரப்பிய
ஏரியை,
மண் கொண்டு
நீர் நிரப்பினீர்..
மனையென்று
பொய் பரப்பினீர்...

அழகான நீர்நிலை
தூர்த்து
அடுக்குமாடியா?
அடுக்குமா?
கட்டடம் சிதறியது
கண்ணாடியா....

பாதி கட்டிய
நிலையில்
ஆடியது மாடி.....
அம்-மாடி,
அப்பாவி தொழிலாளிகளின்
உயிரைக் களவாடியது..
அய்யகோ !! அம்மாடி!!

பலி எண்ணிக்கை
கூடியது,
படிப்பவர்
பார்ப்பவர் உள்ளங்கள்
வாடியது..

வீடு வாங்கும்-விற்கும்
மோகங்களில் ஒன்று
இன்று
சோகம் ஆகியிருக்கிறது..

வீட்டுப் பத்திரம்
பத்திரமாய்
இருக்கிறதா? இருக்கட்டும்..
வீடு பத்திரமாய்
இருக்கிறதா?
தெரியுமா நமக்கு?

கட்டி விற்கிறார்கள்
வீடு வட்டிக்கு ...
சென்னைக்கு அருகில்
ஒரு சிட்டி-க்கு..
தகுதிக்கு மீறிய
துட்டுக்கு..

கடனில் வீடுகள்
வாங்கப்படும் போது
வாங்கும் திறணும்
பார்க்கப்படுவதில்லை,
பூமி
தாங்கும் திறணும்
பார்க்கப்படுவதில்லை.

குண்டு வெடித்தபின்
பாதுகாப்பு,
குழந்தை இறந்தபின்
பள்ளி வண்டி
பரிசோதனை,
படகு மூழ்கிய பின்
உயிர்க்கவச உடை,

இந்த வரிசையில்
போரூர் விபத்தும்
சில தினங்களில்
நினைவை விட்டும்
போய்விடாது இருக்கட்டும்..

அரசு உடனே
உரிய செயலில் இறங்கட்டும்,
உரியவர்களின் உள்ளம்
இரங்கட்டும்!!

அதிரை என்.ஷஃபாத்

8 Responses So Far:

Shameed said...

சோகங்களை வார்த்தைகளில் வார்த்தேடுத்துள்ளார் சகோ சபீர் மன்னிக்கவும் அதிரை என்.ஷஃபாத்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தலைப்பே அத்தனை சோகத்தையும் ஒட்டுமொத்தமாகச் சொல்கிறது !

சல்லடையாகிப் போன அடுக்கு மாடிக் கட்டிடத்தின் சோகத்தை மீடியாக்கள் காட்டியதை விட சுருக்கென்று கவிதை வரிகளால் கலங்க வைத்திருக்கிறாய் தம்பி !

//கட்டி விற்கிறார்கள்
வீடு வட்டிக்கு ...
சென்னைக்கு அருகில்
ஒரு சிட்டி-க்கு..
தகுதிக்கு மீறிய
துட்டுக்கு..

கடனில் வீடுகள்
வாங்கப்படும் போது
வாங்கும் திறணும்
பார்க்கப்படுவதில்லை,
பூமி
தாங்கும் திறணும்
பார்க்கப்படுவதில்லை.//

சாட்டை !

கவிதையின் எந்த வரியை தொட்டாலும் குத்துகிறது ஊசியாக !

sabeer.abushahruk said...

//நீர் நிரப்பிய
ஏரியை,
மண் கொண்டு
நீர் நிரப்பினீர்..
மனையென்று
பொய் பரப்பினீர்...//

நீர் நிலைக்குமேல்
நட்டு வைத்தால் தழைக்கும்
கட்டி வைத்தால் குழையும்தானே!
வேர் பிடித்து உறுதிபெற
காங்க்ரீட் என்ன
காட்டு மரமா? - அதனால்தான்
இலையுதிர் காலமென
இடிந்து உதிர்ந்தது!



//கடனில் வீடுகள்
வாங்கப்படும் போது
வாங்கும் திறணும்
பார்க்கப்படுவதில்லை,
பூமி
தாங்கும் திறணும்
பார்க்கப்படுவதில்லை.//

பத்திரப் பதிவுகளின்போது
வாங்கும் லாவகமும்
கொடுக்கும் கைங்கர்யமும்தான்
பார்க்கப்படுகின்றன!
சாட்சியாக
கையெழுத்துக்குக்
காசு வாங்கும்
சுயம் விற்கும் மனிதர்கள்!

நறுக்கென்ற கவிதை ஷஃபாத், இழையோடும் சோகத்தோடு!

sheikdawoodmohamedfarook said...

சரிந்துவிழுந்ததுகட்டிடமல்லபலகுடும்பங்களின்வாழ்க்கை -பலமனிதஜீவன்கள்.அவர்கள்எல்லாம்என்னநேருகுடும்பத்தின் ராஜீவ்காந்தியா?கொன்றவரைபிடித்துதூக்கிலிட்டுகொல்ல.அந்தஉடல்கள் தீயில் சாம்பல்ஆகுமுன்னேநாளைவேறுநியூஸ்.

sheikdawoodmohamedfarook said...

//நீர்நிலைக்குமேலேநாட்டுவைத்தால்தழைக்கும் கட்டிவைத்தால்குழையும்தானே//இனிமேல்தாமரைஇழைமேலும் அடுக்குஅடுக்காய்மாடிஎழும்-அடுக்கடுக்காய்பணம்கொடுத்தால்.

Ebrahim Ansari said...

சுருக்கென்று குத்தும் ஊசியாக நறுக்கென்று ஒரு நல்ல கவிதை..

Unknown said...

தம்பியின் கண்(ணீ)ணீர் வரிகள்

sabeer.abushahruk said...

கட்டடம் சரிந்தது
கடந்தகால கமிஷன் வெட்டியா
கார்கால மின்னல் வெட்டியா?

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.