இறையருட்கவிமணி
அவர்கள் தமது கவிதைத் திறனால் ஏற்படுத்திய சிந்தனைப் புரட்சிகள் ஏராளம். மழலைச் செல்வங்களுக்கான குழந்தைப் பாடல்களானாலும்
சரி, கவியரங்கப் பாக்களாயினும் சரி, அவற்றினூடே இழைந்தோடும் கருத்துக் கருவூலங்கள்
அன்னார் செய்த சிந்தனைப் புரட்சிகளுக்கான சான்றுகளாகத் திகழ்கின்றன.
கல்வியாளர்களும்
அறிஞர்களும் சமுதாயத்திற்காக ஆற்ற வேண்டிய பணிகளைப் பட்டியலிட விழந்த கவிமணியவர்கள்,
அறிஞர்கள் தாம் கற்ற கல்வியைச் சமுதாயத்திற்குப் பயன்படும் விதத்தில், ஆழிய
அறிவுக் கருவூலங்களையும் இறையருள் இலக்கியங்களையும் தமிழ் மொழியில் வார்த்தெடுத்துக்
கொடுக்க வேண்டிய தேவையைக் கீழ்க்காணும் கவியடிகளில் பாடுகின்றார்:
“வான்போற்றும்
கருத்துகளை வடித்தெடுத்துக் கொடுப்பதுதான்
தீன்போற்றும்
நமக்கெல்லாம் திகழ்கின்ற பணியாகும்
அறிவுப்
பசிஎடுத்தே அலமந்து நிற்போர்க்குச்
செறிவு
மிகைத்திருக்கும் சீர்மறையின் கருத்துகளைச்
சேர்த்தெடுத்துக்
கொடுத்திடுவோம்; செந்தமிழின் சுவைசேர்த்துப்
பார்த்தெடுத்து
வழங்கிடுவோம்; பாருலகில் ஓங்கிடுவோம்!”
இல்லாவிட்டால்,
‘கற்றதனால் ஆய பயனென்?’ என்று கேட்பது போல் தோன்றுகின்றதல்லவா?
கற்றோர்
செய்ய வேண்டிய அப்பணியை இன்னும் அழகாகப் பாடுவதைக் கேளுங்கள்:
“கண்ணைக்
கவர்கின்ற கண்ணாடிக் கிண்ணத்தில்
வண்ணப்
பழச்சாற்றை வார்த்துக் கொடுப்பதுபோல்
காதைப்
பிடித்திழுக்கும் காந்தத் தமிழ்நடையில்
ஓதப்
படைத்திடுவோம் ஓங்கும் நெறிக்கருத்தை!”
‘காதைப்
பிடித்திழுக்கும் காந்தத் தமிழ் நடையில்’ எழுதுவது எல்லாராலும் சாலுமோ? அறிவுப் பெருக்கமும் சிந்தனைச் சீர்மையும்
உள்ளவர்களால்தான் இயலும். அத்தகைய
முன்னேற்றத்தைத்தான் அறிஞர்களிடம் எதிர்பார்க்கின்றார் ‘இறையருட்கவிமணி’.
வையகத்தைக்
கவிஞன் நோக்குவதற்கும் பிறர் நோக்குவதற்கும் பெருத்த வேறுபாடுண்டு. நிறைகளைப் போற்றும் அதே வேளை, குறைகளைச் சாடும்
உணர்ச்சி மிக்க மனப்பாங்கு கவிஞர்களிடம் காணப்படும் ஒன்றாகும்.
“பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப்
பாலித்
திடவேணும்” என்று பாரதி பாடினான் அல்லவா?
இதுதான் கவிஞன் காணும் வையகப் பரிவு. அதே பாரதி, “தனியொருவனுக்கு உணவில்லையெனில்,
ஜகத்தினை அழித்திடுவோம்!” என்றும் சீற்றம் கொண்டு சீறிப் பாய்ந்தான். சமூகத்தில் குற்றம் காணின், கொதித்தெழுவான்
கவிஞன். இது போன்று கொதித்தெழுகின்றார்
நம் கவிஞர்:
“அறந்தேயும்
தீச்செயலும் அடுத்தாரைக் கெடுப்பதுவும்
புறம்பேசும்
தீக்குணமும் பொய்புரட்டும் வஞ்சனையும்
குணமொன்றும்
நாடாமல் குழிபறிக்கும் குறுமனமும்
பணமொன்றே
குறியாகும் பண்பில்லா உளப்பாங்கும்
உள்ளத்தில்
பிறக்காமல் உதட்டளவில் உறைகின்ற
கள்ளத்தின்
பொய்நகையும் கழுத்தறுக்கும் கொடுமைகளும்
மெய்யோட்டும்
பையூட்டும் மேதினியைப் பாழாக்கும்
கையூட்டும்
களியாட்டும் கள்ளூட்டும் பேயாட்டும் .....”
என்றெல்லாம்
பாடிச் சாடிவிட்டு,
“மனிதகுல
வரலாற்றின் மாண்பனைத்தும் போக்கிவிடும்
புனிதநபி
நெறியினிலே புழுதியினைச் சேர்த்துவிடும்”
என்று
பாடி எச்சரிக்கை செய்கின்றார்.
நேர்வழிக்கு ஒரே வழி,
“உளம்வாழும்
நிலைகாண உயர்மறையின் நெறிசெல்வோம்!”
என்று
முடிவுரை பாடுகின்றார் நம் முதுபெரும் கவிஞர்.
கல்வி
கற்றல் என்ற பெயரில், மேலை நாட்டு மேதைகள், கீழை நாட்டுக் கெழுதகையோர்
பற்றியெல்லாம் படிக்கின்றோம். ஆனால்,
எவருடைய வாழ்க்கை நமது முன்மாதிரியாக இருக்கவேண்டுமோ, அந்த அருள் தூதரின்
வாழ்க்கையினைப் படிப்பதில்லை என்று இடித்துரைக்கும் முகமாக,
“அறிவுலகப்
பேரொளியை அனைத்துலகப் பெருமகரை
முறையுடனே
நாமறியோம்; முகவரியும் நாமறியோம்.
ஆப்பிள்
திராட்சையுடன் ஆரஞ்சுப் பழமிருக்கத்
தோப்பில்
மாங்காயைத் துழாவிக் கடிப்பதுபோல்,
குற்றாலத்
தருவியிலே குளிக்காமல் பக்கத்துக்
கற்றாழைக்
குட்டையினைக் கலக்கிப் புரளுதல்போல்
விண்கவரும் விரிநூல்கள் வீட்டின்
அகத்திருக்கக்
கண்கவரும் நூல்படித்துக்
கால்வழுக்கிக் கிடக்கின்றோம்!”
அருமை! எத்துணை அழகிய உவமையுடன் கூடிய உணர்வூட்டல்?!
“வணக்கமிலாப்
பள்ளிகளும் வாஞ்சையிலா மன்றுகளும்
இணக்கமிலா
இல்லறமும் இறக்கமிலா நெஞ்சுகளும்
உறுதியிலா
அறிஞர்களும் ஒழுக்கமிலா இளைஞர்களும்
நாணமிலா
அரிவையரும் நலன்காணாத் தலைவர்களும்
நம்மிடையே
பெருகிவிட்டார்; நாடகமே ஆடுகின்றார்!”
குற்றம்
களையும் பணியில் கூடி நிற்குமாறு தம்மைப் போன்ற தரமான கவிஞர்களை அறைகூவல் விடுத்து
அழைக்கின்றார் அருட்கவிஞர்:
“வணிகத்தில்
கலப்படமும் வாழ்க்கையிலே பெறுகின்ற
அணிசிதைக்கும்
சூதுமது ஆகாத கொலைகளவும்
வஞ்சனைகள்
பொய்புரட்டு வன்முறைகள் தீச்செயல்கள்
மிஞ்சிவரும்
உலகுக்கு மெய்விளக்காம் கவிதேவை.
பணமென்றால்
வாய்பிளக்கும் பிணமாக மாறாதீர்!
செல்வர்க்கே
அடிவருடும் சிறுமையிலே சிக்காதீர்!
அனல்கக்கும்
கவிதைகளால் அநீதியினைச் சுட்டெரிப்பீர்!
புனல்வார்க்கும்
கவிதைகளால் புனிதத்தை வளர்த்திடுவீர்!
அறவாழ்வு
தழைப்பதற்காம் அரும்பணிகள் புரிந்திடுவீர்!”
இவ்வாறு,
சீர்திருத்தக்காரர்களாகக் கவிஞர்கள் ஆகும்போது எவர்தான் கவிதைகளை வெறுப்பார்?
“கலைகளுக்கே
அரசியெனக் கவினடையும் கவிதைகளில்
பலவகைகள்
பகர்ந்திடுவார் பாருலகின் ஆய்வாளர்
உள்ளத்தில்
கருவெடுத்தும் உணர்ச்சியிலே ஊற்றெடுத்தும்
தெள்ளமுதச்
சொற்களிலே தெவிட்டாத உருவெடுத்தும்
பள்ளத்துள்
பாய்கின்ற வெள்ளமென வெளியாகிக்
கள்ளமிலாக்
காதுகளைக் கவ்விப் பிடித்திழுத்து
நெஞ்சத்தில்
விளையாடி நாளெல்லாம் நம்முடனே
கொஞ்சுகின்ற
குழவிகளே குடியுயர்த்தும் கவிதைகளாம்.”
மாசற்ற
மனித வாழ்க்கைக்காகக் கவிதைகளின் தேவையை – இஸ்லாம் வகுத்த இனிய நெறியில்
இயங்கவேண்டிய கவிதைகளின் தேவையை – மேற்காணும் இறையருள் கவி மணிகளால் நாம் உணரலாம்.
كلام فحسنه حسن وقبيحه قبيح
(நற்கருத்துள்ளவை நல்ல கவிதைகளாகும்;
மோசமான கருத்துள்ளவை மோசமான கவிதைகளாகும்.)
என்று
இஸ்லாம் கூறும் இலக்கணத்தில் இணைவோம்! நம்
மறுமை இலக்கினை அடைவோம்!.
(சான்றுகள்
கணக்கின்றி உள. விரிவஞ்சி, இத்துடன்
நிறைவாக்குகின்றேன்.)
முடிவுரை
இக்கவிதை இலக்கிய மரபு மேலும் தொடரவேண்டும். இந்த ஆய்வுத் தொடரில் நான் குறிப்பிட்டதற்கொப்ப, கவிதை என்பது மானிட இயல்புத் தன்மையுடன் பின்னிப் பிணைந்ததாகும். மனிதனை மனிதனாக வாழ வழி வகுப்பது; வாழ்வின் உண்மை நிலைகளை உணர்த்துவது; காலத்தால் கறை படாத கருத்துகளைத் தன்னகத்தே கொண்டது; கற்பனை அழகை விரும்பும் மனித இயல்புக்குக் கருத்துணர்வைத் தர வல்லது; உண்மையும் அழகுணர்ச்சியும் நிறைந்த சொல் வளத்தால் வாழ்வைச் சொல்லோவியமாகத் தீட்டிக் காட்ட வல்லது; மனித வாழ்வின் ஆன்மிக இயல்பை உணர்த்த வல்லது; அதனை ஆர்வத்துடன் படிக்கும் / பாடும் மனிதனுக்குப் புதிய வாழ்வையும் புத்துணர்வையும் கொடுப்பது.
இந்த ஆய்வின் தொடக்கத்தில் மேற்கோள் காட்டிய இறைமறை குர்ஆன் வசனத்தில், இஸ்லாமிய அழைப்புப் பணி செய்ய ‘ஹிக்மத்’ (நுண்ணறிவு) எனும் சொல் இடம்பெற்றிருப்பதாலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவிதையைப் புகழ்ந்துரைத்தபோது ‘ஹிக்மத்’ எனும் அதே சொல்லைப் பயன்படுத்தியிருப்பதாலும், “கவிதை என்பது பொய்யால் நிறைந்தது; கவிஞன் பொய்யுரைப்பவன்” என்றெல்லாம் கருத்துக் கொள்ளாமல், கவிதைகள் மூலமும் உண்மைகளை உணர்த்தலாம்; மனித நேயத்தை மலரச் செய்யலாம்; மார்க்கத்தை எடுத்துரைக்கலாம் என்றே நம்பவேண்டும்.
இஸ்லாம் என்பது குர்ஆனும் நபிவழியும், அப்பழுக்கில்லாமல் இவ்விரண்டின் அடியொட்டி வாழ்ந்த முன்னோரின் வாழ்க்கை முன்மாதிரிகளும் மட்டுமே. இந்த அளவுகோள் (yardstick) கொண்டுதான் எதையும் – அது இலக்கியமாகட்டும், இசையாகட்டும், எதுவுமாகட்டும் – வரையறை செய்யவேண்டும். இந்த இலக்கணத்தில் அனைத்தும் அடங்கிவிட்டன.
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கு என்பதுவே எமது அழைப்பியல் நெறியின் துவக்கமும் முடிவுமாகும்!
இத்தனை நாட்கள் என்னுடன் பொறுமை காத்த அனைவருக்கும் நன்றி.