Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label உமர் தம்பி. Show all posts
Showing posts with label உமர் தம்பி. Show all posts

இன்று அக்டோபர் 2 1

தாஜுதீன் (THAJUDEEN ) | October 02, 2016 | , , ,

இன்று காந்தி பிறந்த நாள்.

தலைவர்கள் ஒவ்வொருவரும் வரிசையாக காந்தி சிலைக்கு மாலையணிவிப்பதும் மலர் வளையம் வைப்பதுமாக தொலைக் காட்சிகளில் காட்டப் பட்டனர். சிலரைப் பார்க்கும்போது உள்ளூர சிரிப்பு வந்தது. இவர்களுக்கும் காந்திக்கும் என்ன தொடர்பு? காலத்தின் கோலம் இவர்களை இப்படி ஆக்கி வைத்திருக்கிறது.

நிச்சமாக காந்திஜி ஒரு தீர்க்கதரிசிதான். அவருக்குப் பின்னால் வரப்போகும் தலைவர்களைப் பற்றி மக்களுக்கு அறிவுறுத்த எவ்வளவு எளிமையான வழியை குரங்கு பொம்மைகள் வழியாக நமக்கு சொல்லித்தந்திருக்கிறார். இன்றைய அரசியல்வாதிகள் எப்படி "நேர்த்தியாக" காந்தீய வழியைப் பின்பற்றிகின்றனர்? உண்மைகளைப் பேசுவதே இல்லை. எளியோருக்கு நடக்கும் கொடுமைகளை கண்டுகொள்வதே இல்லை. மக்கள் போடும் அவலக் கூச்சல்களை காதில் போட்டுக் கொள்வதே இல்லை.

இங்கு இரட்டைக் குவளை முடிந்தபாடில்லை. கீழவெண்மணிகள் ஓய்ந்தபாடில்லை.

அரசியல்வாதி என்ற ஜாதியில் எல்லாம் சர்வ சமம். இந்த ஜாதியில் தீண்டாமையில்லை. அரசியல் திருமணங்கள் ஜாதி பார்ப்பதில்லை. வேண்டியதெல்லாம் "ஓட்டு" என்ற சீதனம்தான். சீதனம் தகுமானதாக இருந்தால் ஜோடிப் பொருத்தம் தானாகவே அமைந்துவிடும்.

நல்லவேளை அக்டோபர் 2 காலண்டரில் இருக்கிறது. இல்லையென்றால் காந்தியின் நினைவுகள் எப்போதொ கரைந்து போயிருக்கும்.

காந்திக்கு போட்ட நாமம் வாழ்க!

உமர்தம்பி

சிலருக்குத் தெரிந்தது; பலருக்குத் தெரியாதது. 6

அதிரைநிருபர் பதிப்பகம் | July 20, 2015 | , ,

தமிழ்த் தட்டச்சு முறையில் ஒரு பெரும் புரட்சியை (Revolution) அல்லது புத்தாக்கத்தை (Renaissance) ஏற்படுத்தியது, என் தம்பி (மர்ஹூம்) உமர் தம்பியின் 'யூனிகோடு' முறை என்று சொல்வதில் மிகையில்லை! தான் உருவாக்கியதை - கண்டுபிடித்ததை, 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' எனும் தமிழிலக்கிய மரபையொட்டி, தமிழுலகம் முழுமைக்கும் தனது அருங்கொடையாக அளித்தார் இச்செம்மல்! இந்த நன்றியுணர்வுதான்,

                "நற்குலமாம் 'வாவன்னா' குடும்பத் தோன்றல்
                          நாற்புலமும் ஒருங்கிணைந்த அதிரைச் செல்வன்

                  பொற்குணமுன் மாதிரியைக் கடைப்பி டித்துப்
                          புகழ்விரும்பாத் தன்மையிலே சேவை செய்தே

                  அற்புதமாம் தேனீயாய் மலர்த்தே னுண்டான்
                          அகிலத்தார் பலன்பெறவே கணினிக் கூட்டில்

                  உற்பவமாய் இன்றமிழை இயங்கச் செய்த
                           உமர்த்தம்பி வல்லவனை மறக்க லாமோ?"


இன்று, இந்த 'யூனிகோடு' முறையைப் பின்பற்றாத தளமே இல்லை என்னுமளவுக்குப் பெரும்பாலான அனைத்துலகத் தமிழ் இணைய தளங்கள் இம்முறையைப் பின்பற்றிப் பயன்பெற்று வருகின்றன. அண்ணன் - தம்பி உறவு முறையில் இருந்தும், ஒரே ஊரில் பிறந்தும், ஒன்றாகவே வாழ்ந்தும், என் ஆக்கங்களை தட்டச்சாளர் உதவியின்றி நானே பதிவு செய்துகொள்ள முடியாமல் இருந்தேன். அப்போதுதான், என் தமிழ்ப் பேராசிரியர், 'இறையருட்கவிமணி' கா. அப்துல் கபூர் அவர்களின் திருமகனார் அன்புத் தம்பி ஜமால் அவர்கள் எனக்கு தம்பி உமர் தம்பியின் பங்களிப்பில் உருவான (தமிழா ஈ கலப்பை, AWC phonetic unicode writer) இந்த யூனிகோடு தமிழ் தட்டச்சு முறைகளை அறிமுகம் செய்து வைத்தார்.

அன்றிலிருந்து இன்றுவரை, ஏறத்தாழ ஆயிரம் பக்கங்கள் வரை, இம்முறையைப் பின்பற்றித் தட்டச்சு செய்து பயன் பெற்றுள்ளேன். இந்தப் பட்டறிவின் பயனாக, நம் நண்பர்கள் இம்முறையில் செய்யும் பிழைகளைச் சுட்டிக் காட்டவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இக்கட்டுரையை வரையத் தொடங்கினேன்.

'குர்ஆன்' என்று தட்டச்ச வேண்டுபவர்கள், kuraan அல்லது quran என்று பதிவார்கள். அப்போது அது 'குரான்' என்று பதியும்; அல்லது 'ஃஉரன்' என்று பதியும். இதனைச் சரியாகப் பதிய வேண்டுமாயின், kur என்பதற்குப் பிறகு ஓர் இடைவெளியை விட்டுப் பின்னர் aan எனப் பதிந்ததன் பின்னர், இரண்டிற்கும் இடையில் இருக்கும் இடைவெளியை back space செய்தால், அது 'குர்ஆன்' என்று அமைந்துவிடும். 'அப்பாடா! இதற்கு இவ்வளவு விளக்கம் தேவையா?' என்கிறீர்களா? சற்றுக் கூடுதலாகவே தோன்றினாலும், பழக்கத்தில் வரவேண்டும்; வந்துவிட்டால், பிறகு இலகுவாகிவிடும் என்பதே எனது எண்ணம்.

'அண்ணன்-தம்பி' என்று இடைவெளி இல்லாமல் பதியும்போது, 'அண்ணந்தம்பி' என்று பதிவாகும். இதனைப் போக்க இரண்டு சொற்களுக்கும் இடையில் ஒரு இடைவெளி விட்டுப் பதிந்து, பின்னர் back space செய்தால் சரியாகிவிடும். இதில் இன்னொரு பிரச்னை! அதாவது, சில சிஸ்டங்களில் அந்த இடைக்கோடு, 'எ' என்றாகிவிடும். அதை மீண்டும் இடைக்கோடாகத் தட்டச்சு செய்தால் சரியாகிவிடும்.

'தங்கம்' என்று எழுத thangam என்று தட்டச்சுவார்கள். அப்படிச் செய்தால், 'தங்அம்' என்று வரும். இதனைச் சரி செய்ய, thangkam என்று தட்டச்சினால், 'தங்கம்' என்று சரியாக அமைந்துவிடும்.

நண்டு, மண்டு, குண்டு என்றெல்லாம் தட்டச்சும்போது, அது தானாகவே சரியாக அமைந்துவிடும். அன்றி, அது 'ன்டு' என்று பதியாது. 'n' என்ற எழுத்துக்குப் பிறகு 'd' வந்தால், அது தானாகவே 'ண்' என்ற முச்சுழி எழுத்தாகிவிடும். இது, யூனிகோடின் இயல்பாய் அமைந்த தன்மையாகும்.

'ர'கர, 'ற'கர வேற்றுமைகளையும், 'ல'கர, 'ள'கர, 'ழ'கர வேறுபாடுகளையும் தெரியச் சற்றே மொழிப்புலமை வேண்டும். la என்று அடித்தால் 'ல'கரமாகும். Shift 'L' அடித்தால் 'ள்' ஆகும். za அடித்தால் 'ழ'வாகிவிடும்.

Shift 'S' அடித்தால் 'ஸ்' ஆகும். 'sh' அடித்தால் 'ஷ்' ஆகும்.

'கஃபன்' என்பதற்கு, kaqpan என்று அடிக்கவேண்டும். fa உச்சரிப்புக்கு இதுதான் முறை.

'ai' அடித்தால், 'ஐ' ஆகும். 'மை' என்பதற்கு, 'mai' என்று அடிக்கவேண்டும். 'y' என்ற எழுத்து, 'ய'கர ஒற்றாகும்.

ஷிஃப்ட் R அடித்தால் 'ற்' என்றும், ஷிஃப்ட் N அடித்தால் 'ண்' என்றும், ஷிஃப்ட் L அடித்தால் 'ள்' என்றும், ஷிஃப்ட் X அடித்தால் 'ஞ்' என்றும், ஷிஃப்ட் S அடித்தால் 'ஸ்' என்றும் விதிவிலக்குகளாகப் பதியும். இவையன்றி, பெரும்பாலான capital எழுத்துகளுக்கு அதனதன் நெடில்கள் அமையும்.

இப்படியாகப் பலவற்றைக் குறிப்பிட்டுக் காட்டிக்கொண்டே போகலாம். 'சித்திரமும் கைப் பழக்கம்' என்பது போல, தொடர்ந்து இதில் கவனம் செலுத்தினால், விரைவாகவும் நிறைவாகவும் இதில் முன்னேற்றம் அடையலாம். இவையெல்லாம் எனது பட்டறிவில் பட்டவையே. அதில் இடம்பெறாத இன்னும் பல நுணுக்கங்களும் இருக்கலாம். அவற்றை இத்துறை விற்பன்னர்கள் விளக்குவார்கள். சிலர் எழுதும் எழுத்தோவியங்களும் பின்னூட்டங்களும் சில பிழைகளுடன் காணப்படுவதால், இக்கட்டுரைக்கு, 'சிலருக்குத் தெரிந்தது; பலருக்குத் தெரியாதது' என்று தலைப்பிட்டேன். நானே இந்த மென்பொருளில் கற்கவேண்டிய விளக்கங்கள் இன்னும் நிறைய இருக்கக் கூடும். அவற்றை வாசகர்கள் தங்களின் பின்னூட்டங்களில் பகிர்ந்துகொள்வார்கள் என்று நம்புகின்றேன்.

அதிரை அஹ்மது
இது ஒரு மீள்பதிவு

தமிழ் தட்டச்சு செய்ய உமர்தம்பி அவர்களின்  AWC PHONETIC UNICODE WRITER,
 
தமிழ் தட்டச்சுக்கு tamil phonetic key board எழுத்துக்கள் உதவி

இனிப்பான கசப்பு - சர்க்கரை நோய் 4

அதிரைநிருபர் பதிப்பகம் | December 14, 2014 | , , ,

"என்ன சாப்பிடுகிறீர்கள்? 'டீ' அல்லது 'காபி'? - நண்பர்கள் சிலர் நம் இல்லத்திற்கு வரும்போது வழக்கம்போல் வினவினால், "ஏதேனும் ஒன்று... ஆனால் சர்க்கரை இல்லாமல்..." என்று சிலர் சொல்லக் கேட்பது வழக்கமாகிவிட்டது. 40 வயதிற்கு மேலுள்ளவர்களில் பத்துப்

பேரைச் சந்தித்தால் அதில் ஒருவருக்காவது இந்நோய் இருக்கிறது. இன்று அன்றாடம் எப்படி ஒருவருக்கொருவர் இரத்த அழுத்த அளவை விசாரித்துக் கொள்கிறோமோ அதே போல் சர்கரையின் அளவைப் பற்றியும் விசாரித்துக் கொள்வதைப் பார்க்கிறோம். கடந்த 40 ஆண்டுகளில் பத்து மடங்காக உயர்ந்து காணப்படும் இந்நோய், வேறு சில நோய்களின் தாயாக அமைந்து விடுகிறது. இந்த நோயைப் பற்றிய அறிவு நோயுற்றிருப்பவருக்கு இருப்பது மட்டுமல்லாமல் அவரை நெருங்கி இருப்பவருக்கும் தேவை. முதலில் இது ஒரு நோய்தானா என்ற வினா தொக்கி நிற்கிறது. இல்லை; இது ஒரு நோய் இல்லை - ஒரு குறைபாடு. எப்படி ஒருவருக்கு உடலுறுப்பு ஒன்றில் ஊனம் ஏற்படுகிறதோ

அதேபோல்தான் இதுவும். இது தொற்று அல்ல. உள்ளுறுப்பில் ஏற்படும் ஓர் ஊனம். Diabetes mellitus என்ற முழுப் பெயருடன் குறிக்கப் படும் இந்தக் குறைபாடு, பழங்காலம் தொட்டே அறியப் பட்டு வந்திருக்கிறது. 'இனிப்பு நீர்", "மதுர நோய்", "சர்கரை நோய்", "நீரிழிவு நோய்" என்ற பல பெயர்களில் வழங்கப்பட்டு வருகிறது. Diabetes mellitus என்ற பெயர் ஏற்படக் காரணமான ஒரு (ருசிகர?) தகவல்:

பழங்காலத்தில் வைத்தியர்கள் தன்னிடம் வரும் நோயாளியின் நோயின் தன்மையறிய அவர்களின் சிறு நீரைச் சுவைத்துப் பார்ப்பதுண்டாம். இந்த நோய் உள்ளவர்களின் சிறு நீர் இனிப்பாக இருக்கக் கண்டு "இனிப்பான சிறுநீர்" எனப் பொருள்படும் Diabetes mellitus என்ற பெயரை இட்டனராம்!

சர்க்கரை நோய் பொதுவாக இரண்டு வகைகளாகப் பிரிக்கப் படுகின்றன.

வகை I (Type - I):
Juvenile diabetes- இள வயது சர்க்கரை நோய் அல்லது Insulin dependant diabetes mellitus (IDDM) - இன்சுலின் (செலுத்தத்) தேவைப் படும் சர்க்கரை நோய்.

வகை - II (Type - II):
Adult onset diabetes - முது வயது சர்க்கரை நோய் அல்லது- Non insulin dependant diabetes mellitus (NIDDM) இன்சுலின் (செலுத்தத்) தேவையில்லாத சர்க்கரை நோய்

மூன்றாவது வகையாக கர்ப்ப கால சர்க்கரை நோய்(gestational diabetes) - இது ஒரு தற்காலிகமான நிலை. சில பெண்களுக்கு இது ஏற்படக் கூடும். பேறு காலம் முடிந்ததும் சரியாகிவிடும். இது கிட்டத் தட்ட இரண்டாம் வகை போன்றதுதான்.

மேற்க்கண்டவை ஒரு பொதுவான பகுப்பு. இரண்டாம் வகையைச் சார்ந்தவர்களும் இன்சுலின் எடுக்க வேண்டிய நிலை வரலாம். இன்சுலின் என்றால் என்ன, அதை ஏன் செலுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது என்பது பற்றி ஒவ்வொரு வகையை விரிவாகக் காணும்போது விளங்கிக் கொள்ளலாம்.

முதலில் இந்த நோய் எப்படி ஏற்படுகிறது? நம் உடல் உள்ளுறுப்புகளில் ஒன்றான கணையத்தில்(pancreas) ஏற்படும் செயல்பாட்டு மாற்றம்தான் இதற்குக் காரணம். இந்தச் சுரப்பி, உணவு செரிக்கத் தேவையான சில இரசங்களைச் சுரப்பதோடு "இன்சுலின்" என்ற ஹார்மோனையும் சுரக்கிறது. நாம் சாப்பிடும் உணவு மூலம் பிற சத்துக்களும் கார்போ ஹைட்ரேட்டுகள் மூலம் உடலுக்கு - அதிலும் குறிப்பாக மூளைக்குத் தேவையான எரிபொருளான சர்க்கரையும் கிட்டுகின்றன. உடலுறுப்புக்களுக்கும் மூளைக்கும் செலவானது போக மீந்து நிற்கும் சர்க்கரையை என்ன செய்வது? இங்குதான் கணையத்திலிருந்து சுரக்கும் "இன்சுலின்" என்ற 'ஹார்மோன்' உதவுகிறது. அது இரத்தில் மீந்திருக்கும் அதிகப் படியான சர்க்கரையை வேறு ஒரு பொருளாக(glycogen - கிளைக்கோஜன்) மாற்றி ஈரலில் சேமித்து வைக்க உதவுகிறது(பதார்த்தங்கள் மீந்துவிட்டால் 'வடாம்' போடுவதுமாதிரி!). அடுத்த உணவு கிட்டதபோதோ அல்லது உடலின் சக்தி செலவழிக்கப் படும்போதோ சேமித்து வைக்கப் பட்டிருக்கும் glycogen மீண்டும் சர்க்கரையாக மாற்றப் பட்டு உடலுறுப்புக்களுக்கு அளிக்கப் படுகிறது.

இப்படியான ஒரு செயல்பாட்டால் மீந்திருக்கும் சர்க்கரையை ஏதோ ஓர் காரணம் கொண்டு glycogen ஆக மாற்றி சேமித்து வைக்க வகையில்லதிருந்தால் இரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரை தங்கிவிடும். அப்படித் தங்கினால் வேண்டாத விளைவுகளை அது ஏற்படுத்தும். அது என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும்? அவைகளைக் விரிவாகக் காண்பதற்கு முன்னால்

இந்த நோய் ஏற்பட்டிருந்தால் என்னென்ன அறிகுறிகள் தென்படும் என்பதைக் காணலாம்.

குறிப்பு:

கீழ்க் காணும்வற்றில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு இருப்பதாக உணர்ந்தால் அச்சப் பட்டுவிடாதீர்கள். அது தற்காலிகமான ஒன்றாகக் கூட இருக்கலாம். அவை தொடர்ந்து இருந்தால் அருகிலுள்ள மருத்துவரை அனுகி ஆலோசனை பெற்று குறுதிச் சோதனை செய்து கொள்ளலாம்.

அறிகுறிகள்:

-அதிகப்படியான தாகம்

-அடிக்கடி சிறுநீர் போதல்

-அதிகமாப் பசித்தல்

-காரணமில்லாத எடை குறைவு

-உடம்பில் வலியெடுத்தல்

-சோர்வு

-காயங்கள் எளிதில் ஆறாமை

-அடிக்கடி சிறு சிறு நோய்கள் தொற்றுதல்

-சில நேரங்களில் பார்வை தெளிவின்மை.

மேற்கண்டவற்றில் சிலவோ அல்லது எல்லாமோ ஒருவருக்கு இருக்கலாம். இனி, இந்த குறைபாடு எப்படி வருகிறது என்பதையும் ஒவ்வொரு வகையின் தன்மையையும் காண்போம்.

வகை I

அதிகப்படியான சர்க்கரையை glycogen (கிளைக்கோஜன்) ஆக மாற்றி சேமித்து வைக்க கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலின் தேவையான ஒன்று என்று கண்டோமல்லவா? கணையம் இன்சுலினை சுரகத் தவறும்போது இந்நோய் வெளிப் படுகிறது. ஏன் இப்படி? இந்த இன்சுலின் சுரக்கக் காரணமாக இருக்கும் beta((பீட்டா) செல்கள் கணையத்தில் மிக மிகக் குறைந்தோ, அல்லது முழுவதுமாக இல்லாமலோ இருக்கலாம். இப்படி, பிறக்கும்போதே கூட சில இளம் நோயாளிகளுக்கு இருக்கலாம். அல்லது ஏதோ ஓர் காரணத்தால் அவை அழிக்கப் பட்டும் இருக்கலாம். இம்மதிரியான குறை, இளம் வயதில் (கிட்டத்தட்ட 20 வயதிற்குள்) தோன்றிவிடுவதால் இவ்வகையை Juvenile diabetes- இள வயது சர்க்கரை நோய் என்றழைக்கிறார்கள். இம்மதிரியான நோயாளிகளுக்கு இன்சுலினை வெளியிலிருந்து உடலுக்குள் செலுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை.

வகை II

இரண்டாவது வகை வயதானவர்களுக்கு(40 வயதிற்கு மேல்) வருவதாகும். கணையதில் இருக்கும் பீட்டா செல்கள் அளவு குறைந்தோ அல்லது இன்சுலின் போதுமான அளவு சுரந்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ள இயலாத ஓர் எதிர்ப்பு சக்தி உடலில் இருக்கலாம். இம்மாதிரியான குறைபாடுடையவர்கள் வாய் மூலம் உட்கொள்ளும் மருந்துகள் மூலம் சரி செய்து கொள்ளலாம்.

மேற்கண்ட விளக்கங்களிலிருந்து ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். சர்க்கரை நோய் ஒரு நோயல்ல - ஒரு குறைபாடு. அந்தக் குறைபாட்டை மருந்துகள் உண்டோ அல்லது இன்சுலின் எடுத்தோ எவ்வழியிலாவது சரிசெய்ய முடியுமானால் வாழ்க்கையைச் சிக்கலின்றிக் கழிக்கலாம்.

முதல் வகையானது 10 விழுக்காடே காணப் படுகிறது. இரண்டாவது வகைதான் வயதானவர்களிடையே அதிகம் காணப்படுகிறது. இது ஆளுக்கு ஆள் வேறுபடலாம். ஒருவரின் உடற்கூறு, வாழும் வகை, உண்ணும் உணவு, செய்யும் தொழில் இவை எல்லாமே சர்க்கரை நோயின் அளவை நிர்ணயிக்க கூடியவை.

ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒருமுறை சர்க்கரை நோய் என்று அறிய வந்துவிட்டால்(கர்ப்பகால சர்க்கரை நோய் போன்ற தற்காலிக வகை தவிர) அந்த 'வரத்தோடு' வாழ வேண்டியதுதான். ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து விட்டால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஒரு பொன்மொழியை மனதில் கொள்ளுங்கள்: சர்க்கரை நோய் நம்மை ஆளுவதற்கு முன்னால் அதை நாம் ஆளத் தொடங்கிவிட வேண்டும். அதனால்தான் சர்க்கரை நோயை treat செய்வதாகச் சொல்வதில்லை; manage செய்வதாகச் சொல்கிறோம். என்ன, முன் சொன்ன அறிகுறிகளில் சில உங்களுக்கு இருப்பதாக எண்ணிக் கொண்டு குறுதிச் சோதனை செய்து கொண்டுவிட்டீர்களா? எல்லாம் சரியாக இருக்கிறதா? வாழ்த்துக்கள்.

இல்லை, இரத்தத்தில் சர்க்கரை இருப்பதாகத் தெரிய வந்ததா? கவலையை விடுங்கள். அயர்ந்து போக வேண்டாம். இந்த உலகில் நீங்கள் தனித்தவரல்லர். உங்களோடு கோடிக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். அவர்களுள் இலட்சக் கணக்கான அறிவியலாளர்களும், பேராசிரியர்களும், பொறியிலாளர்களும், கணினி வல்லுனர்களும், மருத்துவர்களும், விளையட்டுத் துறையைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். இந்த நோய் கொண்டிருந்தும் அழகிகளாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட பெண்களும் உண்டு. அது ஏன் -

கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த வேகப் பந்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த வசீம் அக்ரம், இன்சுலின் எடுத்துக் கொள்ளும் ஒரு சர்க்கரை நோயாளிதானாம்!

சர்கரை நோயை முன்னறிய முடியுமா? அவற்றை தடுத்துக்கொள்ள முடியுமா? இக்கட்டுரையைப் படிக்கும்போது எல்லோர் மனதிலும் எழக்கூடிய முதல் கேள்வி. இதற்கு ஆம் என்றோ அல்லது இல்லை என்றோ பதில் சொல்ல இயலாது. காரணம், கணையத்தில் ஏற்படக்கூடிய கட்டி, கல்லடைப்பு, வீக்கம் போன்றவற்றால் இன்சுலின் சுரப்பு பாதிக்கப் படும் சூழ் நிலை தவிர இது உடம்பிற்குள்ளேயே முன் கணிக்கப்பட்ட(programmed) ஒன்றாக அமைந்து விடுகிறது. இதில் பாரம்பரியமும் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது. தாயோ அல்லது தந்தையோ சர்க்கரை நோயாளியாக இருந்தால் பிள்ளைகளுக்கும் வர அதிக வாய்ப்பிருக்கிறது. இப்படி முன் கணிக்கப் பட்டிருப்பதை நாம் அறிந்து கொள்ள இயலுமா? கடினம்தான். ஆனால் இந்த நோய் தலைகாட்டப் போகும் சற்று முன் அறிந்து கொள்ள இயலும். இதற்கு GTT - glucose tolerance test(சர்க்கரை அளவை தாங்கும் தன்மை) ஒன்றைச் செய்து கொள்ளலாம். ஓர் இரவுப் பட்டினிக்குப் பின், ஒரு குறிப்பிட்ட இடைவெளியில்(எடுத்துக்காட்டாக அரை மணிக்கொருமுறை) ஒரு குறிப்பிட்ட அளவு(50 - 100grams) கரைக்கப் பட்ட சர்க்கரையை(glucose)க் கொடுத்து அதே இடைவெளியில் இரத்ததை எடுத்து சோதனை செய்வர். ஒரு நோயில்லாத மனிதருக்கு சர்க்கரையின் அளவு அவ்வளவு ஒன்றும் கூடிவிடாது. ஆனால் நோய் இருக்கும் மனிதருக்கு அதன் அளவு கூடியே இருக்கும்.

பொதுவாக உடல் பருமனாக இருப்பவர்களுக்கு இந்நோய் வர வாய்ப்பிருக்கிறது. உடல் எடையை அளவாக வைத்துக் கொள்ளுதல், தொடர்ந்த உடற்பயிற்சி, மனச் சிக்கல்(stress) இல்லாமல் பார்த்துக் கொள்ள்ளுதல் ஆகியவை இந்த நோயைத் தூர வைப்பதற்குண்டான வழியாகும்.

சர்க்கரை நோயைப் பற்றிய விழிப்புணர்வு இப்போது அதிகமாகியிருக்கிறது. என்றாலும் பலருக்கு இந்தோய் இருப்பது தற்செயலாகவே தெரிய வருகிறது. வேறு ஏதாவது ஒரு நோய்க்காக குறுதிச் சோதனை செய்யும்போது குறுதியில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாகத் தெரிய வரும்போதுதான் பலர் இந்த நோய்க்கு ஆட்பட்டிருக்கிறார்கள் என்று அறிய வருகிறார்கள்.

நாம் முன்பு கண்டபடி இந்நோயின் சில அறிகுறிகளோடு(தாகம், அடிக்கடி சிறுநீர் போதல், சோர்வு போன்றவை) இதன் தாக்கம் நின்று விடுவதில்லை. அவ்வறிகுறிகள் இனி ஏற்படப் போகும் சிக்கல்களுக்கான முன்னோடிகள். சர்க்கரை நோய், வேறு பல நோய்களின் தாய் என்று சொன்னேனல்லவா? அவற்றுள் அச்சமுறுத்தும் நோய்கள் சில:

-கண்பார்வை பாதித்தல்

-சிறுநீரகங்கள் பழுதடைதல்

-இதய நோய்

-கால்களில் புரையோடிய புண்

அதிர்ந்து போய்விடாதீர்கள். சர்க்கரை நோய் ஆரம்பித்த ஓரிரு நாட்களில் இவை வந்துவிடுதில்லை. சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்காமல் ஆண்டுக் கணக்கில் தொடர விடுவோமானால் இவ்விளைவுகள் உண்டாகும். முதலில் தொடக்க கால அறிகுறிகளான தாகம், சிறுநீர் அடிக்கடி போதல் போன்றவை ஏன் ஏற்படுகிறது என்று பார்ப்போம்.

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சுதானே? இந்த சர்க்கரையும் அப்படித்தான். உடலுக்கு எரிபொருளாய் விளங்கினாலும் அளவுக்கு அதிகமாகும்போது தேவையற்ற ஒன்றாகிவிடுகிறது. நம் சிறுநீரகங்களின் பணி, இரத்தத்தில் இருக்கும் தேவையில்லாத பொருட்களை வெளியேற்றுவது. அவ்வகையில்தான் மீந்திருக்கும் சர்க்கரையும் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து இவ்வாறு செய்யவேண்டியிருப்பதால் சிறுநீரகங்கள் அதிகமாகப் பணியாற்றி சிறுநீரை அதிகமாக வெளியேற்றுகிறது. எனவே உடலில் நீர் அளவு குறைந்து தாகம் எடுக்கிறது. இன்சுலின் சுரக்காததாலோ அல்லது இருக்கும் இன்சுலினை உடம்பு பயன்படுக்கொள்ள வகையில்லாததாலோ சேமித்து வைக்கப்பட்ட புரதத்தையும் கொழுப்பையும் உடல் இழக்க நேரிடுகிறது. அதன் விளைவாக உடல் இளைக்கிறது. இப்படியே இரத்தத்தில் சேர்ந்துவிடும் பொருட்களால் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. விளைவு? உடலுறுப்புக்களுக்குப் போதிய இரத்தம் கிட்டாது. குறிப்பாக மிக நுண்ணிய இரத்த நாளங்களைக் கொண்ட கண்கள், சிறுநீரகங்கள் ஆகியவை வெகுவாகப் பாதிக்கப் படுகின்றன. சிறு நீரகங்கள் செயல் இழக்க ஏதுவாகிறது. இதில் மிகக் குறிப்பாகக் கவனிக்க வேண்டியவை கண்கள். கண்களின் விழித்திரையில்(retina) மிக, மிக நுண்ணிய இரத்த நாளங்கள் அமைந்திருக்கின்றன. அவைகளில் ஏற்படும் அடைப்புக்களால் அவை வெடித்து கண் உள்ளேயே இரத்தம் கசியலாம். இந்த அடைப்புக்களால் புதிய இரத்த நாளங்கள் விழித்திரையில் தோன்றி அவை தடித்து விழித்திரையின் சமமான பரப்பை மேடுகளாக மாற்றலாம். அதன் விளைவாக ஒழுங்கில்லா உருவங்கள்(distorted images) தெரியலாம். இவைகளின் பின் விளைவுகள் பார்வை இழப்பாகவும் அமையும்.

இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பே இருதய நோய்க்கு வழி வகுக்கிறது என்பதை நாம் அறிவோம். சர்க்கரை நோயாளிக்கு இரத்த நாள அடைப்பு ஏற்படுவதால் இதயநோய் வருவதற்கு எளிதாக வழி வகுத்து விடுகிறது. இதய நோயாளிகளில் ஒரு கணிசமான அளவு சர்க்கரை நோய் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

சர்க்கரை நோயாளிகளிடையே ஏற்படும் மற்றொரு சிக்கல், நரம்பு மண்டலம் பாதிக்கப் படுவதாகும். குறிப்பாக கால்களில் மெல்ல மெல்ல உணர்ச்சிகள் குறைந்து விடும். அதனால் ஏதேனும் அடித்தாலோ அல்லது புண் ஏற்பட்டாலோ கூட வலி தெரியாது. எனவே நோயாளி அதை கவனிக்காது அலட்சியம் செய்து விடுவார். மேலும் கால்களில் இரத்த ஓட்டம் வெகுவாகக் குறைந்திருப்பதால் புண் எளிதில் ஆறாமல் விரைவில் பரவும். அதன் விளைவாக அப்பகுதியை வெட்டியெடுக்கும்படியாகக் கூட நேரலாம். இவையன்றி வேறு உறுப்புக்களும் பாதிப்படையலாம்.

சர்க்கரை நோயாளிக்கு ஏற்படக் கூடிய மூன்று 'pathy' களைப் பற்றிச் சொல்வார்கள்:

Nephropathy (நெப்ரொபதி) - சிறு நீரகக் கொளாறுகள் - செய்லிழத்தல்

Neuropathy (நியுரொபதி) - நரம்புகள் பாதிக்கப் படுதல்

Retinopathy (ரெட்டினொபதி) - கண் விழித்திரை பாதிப்படைதல் - பார்வை இழத்தல்

இவையல்லாமல் அவ்வப்போது தொற்றும் சில்லரை நோய்கள். மற்றவரைவிட சாதாரணமாக நம்மிடையே புழங்கும் சிறு சிறு நோய்கள்கூட இவர்களை எளிதில் பற்றிக் கொள்ளும். இந்த "இனிப்பு" நோயின் கசப்பான விளைவுகள் இவை.

மேற்கண்ட விளைவுகளைப்பற்றித் தெரிந்து கொள்ள முறையான சோதனைகள் தேவை. ஒரு முறையான - குறிப்பாக நீரிழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவ மனைக்குச் சென்றால் தேவையான சோதனைகளைச் செய்வர். அவற்றுள் சில:

இரத்தம்:

- சர்க்கரை அளவு - ஓர் இரவு பட்டினிக்குப் பின்னும் உணவருந்திய பின்னும்.

- கொழுப்பின் அளவு

- யூரியா(உப்பு)வின் அளவு

- ஈரலின் செயல்பாட்டை அறிந்து கொள்ª உதவும் சில சோதனைகள்

சிறுநீர்:

- சிறுநீரில் சர்க்கரை அளவு - ஓர் இரவு பட்டினிக்குப் பின்னும் உணவருந்திய பின்னும்.

- சிறுநீரில் புரதம், அசிடோன்

- மேலும் சில சோதனைகள்

மேலும் ஒரு தேவையான சோதனை HbA1c எனப்படும் ஒரு குறுதிச் சோதனையாகும். இந்த சோதனை வசதி எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. சர்க்கரை நோய் சிறப்பு நிலையங்களிலோ அல்லது பெரிய இரத்தச் சோதனை நிலையங்களிலோ இருக்கும். இதன் சிறப்பு என்னவென்றால் கடந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களின் சர்க்கரை அளவின் சராசரியை இந்தச் சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். அவ்வப்போது செய்யப்படும் சர்க்கரைச் சோதனைகள் உணவிற்குத் தக்கவாறும் நேரத்திற்குத் தக்கவாறும் மாறுவதால் இந்த HbA1c சோதனை ஒரு சரியான அளவுகோலாகக் கருதப் படுகிறது.

என்ன. இந்த "இனிப்பு" நோயின் கசப்பான விளைவுகளை அறிந்து கொண்டதும் அச்சமாக இருக்கிறதா? இந்தக்கட்டுரையின் நோக்கம், சர்க்கரை நோயின் கொடிய விளைவுகளை அறியத்தருவதும் யாருக்கேனும் சர்க்கரை நோய் இருந்தால் அதைச் சாமர்த்தியமாகவும் எளிதாகவும் கையாண்டு மேற்சொன்ன சிக்கல்களை தவிர்க்கும் வழிகளை அறியத் தருவதுமாகும். அச்சம் தவிருங்கள்; இனி ஆக வேண்டியவைகளைக் காண்போம். இந்த சர்க்கரை நோய் வந்துவிட்டால் அதை எப்படி மேலாண்மை செய்வது? எவ்வாறு மேலும்

சிக்கல்கள் நேராமல் பார்த்துக் கொள்வது? கட்டுரையின் இந்த இரண்டாவது நோக்கத்தை இனிக் காண்போம்.

மூன்று தலையாய விடயங்கள் இந்த நோயை மேலாண்மை செய்வதிலே இருக்கின்றன.

1. உணவுக் கட்டுப்பாடு

2. தேவையான மருந்துகளைத் தவறாமல் எடுத்தல்

3. தெவையான அளவு உடற்பற்சி.

ஏன் உணவுக் கட்டுப்பாடு தேவை?

இந்தக் கட்டுரையின் துவக்கதில் கண்ட சில அடிப்படையான விடயங்களை மீண்டும் நினைவு கூர்ந்தால் உங்களுக்கு ஓர் உண்மை தெரியவரும். இரத்தத்தில் சேரும் அதிகப் படியான சர்க்கரையைச் சேமித்து வைத்துக் கொள்ள உடல் ஏதுவாக இருக்கவில்லை என்றும் அதனால்தால்தான் மேற்கண்ட சிக்கல்கள் தோன்றுகின்றன என்று கண்டோமல்லவா? ஏதாவது ஒரு வழியில் அதிகப்படியான சர்க்கரையைச் சேரவிடாமல் செய்துவிட்டால்? சிக்கல்களைத் தவிர்க்கலாமல்லவா? ஆம்; அதில் ஒன்றுதான் உணவுக் கட்டுப்பாடு. இந்த உணவுக் கட்டுப்பாட்டைக் கைக் கொள்ள வேண்டுமானால் முதலில்.உங்கள் உடலுக்கு எவ்வளவு கலோரி(சக்தி) தேவைப்படும் என்று அறிய வேண்டும்.

ஒவ்வொருவரூக்கும் தேவைப் படும் கலோரியின் அளவு வேறுபடும். ஒருவரின் உடல் வாகு, செய்யும் வேலை, அவர் உடல் சக்தியை எவ்வளவு பயன்படுத்துகிறார் என்பன போன்றவை இதில் அடங்கும். ஒரு நல்ல 'Dietitian"(சத்துணவு நிபுணர்) இதனை கணக்கிட்டு அறியத் தரக்கூடும்.

தேவையான மருந்துகளை எடுத்தல்:

மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளைத் தவறாமல் தகுந்த அளவுப்படி தகுந்த நேரங்களில் எடுக்கவேண்டும். சில மாத்திரைகள் கணையத்தைத் தூண்டி இன்சுலினை அதிகம் சுரக்கவைக்கும் வகையாக இருக்கலாம். சில, இன்சுலின் உடம்பில் தேவையான அளவு இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ள இயலாத நிலையிலிருக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பணியாற்றலாம்.

சிலருக்கு இன்சுலினை ஊசிமூலம் தேவைக்கேற்ற அளவு ஒரு நாளில் ஒருமுறை, இருமுறை அல்லது மும்முறை ஏற்ற வேண்டிய தேவை ஏற்படலாம். அவற்றிலும் விரைவாச் செயல்படக் கூடியது, மெல்லச் செயல் படக்கூடியது என இருக்கின்றன. அவை இரண்டும் கலந்த வகையும் கிடைக்கிறது. இதையும் சரியான நேரத்தில் சரியான அள்வு எடுக்க வெண்டும்.

உடற்பயிற்சி:

உடற்பயிற்சி மிக இன்றியமையாததாகும். வயதிற்கேற்ற, அவரவர் தேவைக்கேற்ற உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டியிருக்கும். எவ்வகையானது எவருக்கு உகந்தது என்பதையும் மருத்துவர் அறிவுறுத்துவார். உடற்பயிற்சிகளில் எல்லாம் சுலபமானது, எவ்வயதினரும் செய்யக் கூடியது நடையாகும். ஒரு நாளில் குறைந்த அளவு 40 நிமிடம் 5 கிலோ மீட்டர் அளவுக்கு நடப்பது மிகத் தேவையான ஒன்றாகும்.

மேற்சொன்ன மூன்றையும் முறையாகச் செய்வோர் அச்சத்தைத் தூர வைத்துவிட்டு தன் வழக்கமான வாழ்க்கையைத் தொடரலாம்.

இறுதியாக, இநோயாளிகள் செய்யக் கூடியன, கூடாதன பற்றியும் மேலும் சில தகவல்களையும் காண்போம்.

"உங்களுக்கு சர்க்கரை நோயா? அரிசிச் சோறு உண்ணாதீர்கள்;கோதுமை உண்ணுங்கள்" என்றும் "கேழ்வரகு இதற்கு நல்ல மருந்து" என்றும் பலர் உபதேசம் செய்யக் கேட்டிருக்கிறோம். சர்கரை நோயாளி, தான் ஏதோ ஒதுக்கி வைக்கப் பட்டவர்போல் உணரத் தொடங்கி விடுவார். சர்க்கரை நோயாளி எதைச் சாப்பிட வேண்டும் அல்லது கூடாது என்ற பத்தியமில்லை. அடிப்படையை விளங்கிக் கொண்டால் உங்கள் உணவு வகைகளை நீங்களே அமைத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் உண்ணும் உணவு மெதுவாகச் செறிக்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். விரைவாகச் செரிக்கும் உணவு, இரத்ததின் சர்க்கரையின் அளவை விரைவாக ஏற்றிவிடும். ஆகவே நார்ப்பொருட்கள் அடங்கிய உணவு ஏற்றதாகும். கேழ்வரகு சர்க்கரை நோய்க்கு ஒன்றும் மருந்தல்ல. ஆனால் அதில் நார்ப்பொருள்(உமி) கலந்திருப்பதால் மெல்லச் சீரணம் ஆகும். எனவே அதைச் சேர்த்துக் கோள்ளலாம். மற்றப்படி அரிசி, கோதுமை இவற்றில் சம அளவே(70%) மாவுப் பொருள் இருக்கிறது. மேலும். எந்த வகை உணவு உண்கிறோம் என்பது பொருட்டல்ல; எவ்வளவு உண்கிறோம் என்பதே பொருட்டாகும். பொதுவாக கிழங்கு வகைகளைத் தவிர்ப்பது நலம். கீரை வகைகள் மிக நல்லது. ஒரு நாளைய உணவை ஐந்து பாகங்களாகப் பிரித்துண்பது நல்லது. இதனால் சர்க்கரை அளவு உடனே கூடிவிடாமலும் அளவுக்குக் கீழே குறைந்து விடாமலும் பார்த்துக் கொள்ளலாம்.

மருந்துகள் முறையாக எடுப்பது அவசியம். நாம் முன்பு கண்டபடி மருத்துவர் பல வகையான மத்திரைகள் தரக்கூடும். அவற்றுள் உணவுக்கு முன், உணவுக்கு பின் என குறிப்பிடப் பட்ட வகைகள் இருக்கும். சிலர் இதைப் பொருட்படுத்துவதில்லை. எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் விழுங்குவர். இது தவறாகும். மருத்துவர் காரணமில்லாமல் அவ்வாறு எழுதித் தர மாட்டார். சில மாத்திரைகள் இன்சுலினை சுரக்கத் தூண்டுவதாக இருக்கலாம். சில உடலிலிருக்கும் இன்சுலினை பயன்படுத்திக் கொள்ள வகை செய்பவையாக இருக்கலாம். அதே போலவே, ஊசி மூலம் இன்சுலின் எடுத்துக் கொள்பவர்கள் உணவுக்கு எவ்வளவு நேரத்திற்கு முன் அதை எடுத்துக் கொள்ளவேண்டும் என பரிந்துரைத்தாரோ அவ்வண்ணமே செய்ய வேண்டும். மருந்தோ அல்லது ஊசியோ ஒரு குறிப்பிட்ட வேளையில் எடுத்துக்கொள்ள மறந்து விட்டால், அதை இருமடங்காக அடுத்து வேளை எடுத்துக் கொள்ளக்கூடாது. மறந்து விட்டால் போகட்டும் என விட்டுவிட வேண்டும். அவ்வறு மறந்து விட்ட வேளையின் மருந்தையும் சேர்த்து எடுத்தால் இரத்ததில் சர்க்கரையின் அளவு மிகக் குறைந்து மோசமான விளைவுகளை உண்டாக்ககூடும்.

அடுத்து உடற்பயிற்சி. பெரும்பாலும் நடையே பரிந்துரைக்கப் படுகிறது. உங்களுக்குள் ஒரு "வாக்" உறுதி(வாக்குறுதி) எடுத்துக்கொண்டு அதைத் தவறாமல் நிறைவேற்ற வேண்டும். இதுவும் மருத்துவர் குறிப்பிட்ட அளவோடுதான் இருக்க வேண்டும். தேவைக்கு அதிகமாகவும் உடற்பயிற்சி செய்யக் கூடாது. அவ்வாறு செயதால் சர்க்கரை அளவு குறைந்து போகக் கூடும். ஆக, எதுவாயினும் ஒரு வரையரைக்குட்பட்டே இருக்கவேண்டும்.

சிலருக்கு ஓர் ஐயம் எழலாம். சர்க்கரை குறைவதற்குத்தானே இவ்வளவும் செய்கிறோம். குறைவதற்காக ஏன் அச்சப் படவேண்டும்? உங்களுக்குத் தெரியுமா? சர்க்கரை கூடியிருப்பதைவிட வேண்டிய அளவில் மிகக் குறைந்திருப்பது அபாயகரமானதாகும். மயக்கம் வரலாம். இந்நிலை அதிக நேரம் தொடர்ந்தால் "கோமா"(Coma) நிலைக்குக் கூட போகலாம். சர்க்கரை நோயாளிகள் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

- உங்கள் சிறுநீரை அடிக்கடி(குறைந்தது வாரத்தில் மும்முறை) சோதித்துக் கொள்ளவேண்டும். இதற்காக Glucotest (strips) போன்ற உடனடியாகக் காட்டும் சோதனைக் குச்சிகளை உபயோகிக்கலாம்.

- வாரத்திற்கொருமுறை இரத்த சோதனை செய்து கொள்ள வேண்டும். இதற்க்கக "One touch", "Gluco meter" போன்ற கையடக்க உபகரணங்களை வாங்கி வீட்டிலேயே சோதனை செய்து கொள்ளலாம். சர்க்கரையின் அளவு காலை உணவு உண்டபின் 160 mg/dL அளவுக்குக் கீழே இருக்க வெண்டும்.

- HbA1c குறுதிச் சோதனையை மூன்று மாததிற்கொருமுறை செய்து கொள்ள வேண்டும். அது உங்களின் இரண்டு அல்லது மூன்று மாதங்களின் சரசரியைக் காட்டும். அதை கீழுள்ள அட்டவணையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்:

* 5.6% க்குக் கீழே - நோயில்லா ஒரு மனிதருக்கு இருப்பது

* 5.6% to 7% - சர்க்கரையின் அளவு நல்ல கட்டுப் பாட்டிற்குள் இருக்கிறதென்று பொருள்

* 7% to 8% - ஒரளவு கட்டுப்பாடு

* 8% to 10%- சரியான கட்டுப் பாட்டில் இல்லை

+ 10% க்கு மேல் - கட்டுப்பாடு மிக மோசம்

நீங்கள் பின்பற்ற வேண்டிய சில குறிப்புக்கள்:

- உங்களுடன் மிட்டாய் போன்ற சில இனிப்புப் பொருட்களை வைத்துக் கொள்ளுங்கள். திடீரெனெ உங்கள் சர்க்கரை அளவு குறையலாம். அப்போது அது கை கொடுக்கும்.

- உங்களுடன் இருப்பர்களிடம் (அலுவலகத்தில் நெருங்கிய நண்பரிடம்) உங்களுக்கு சர்க்கரை திடீரெனெக் குறைந்து மயக்கம்போல் வந்தால் உங்களுக்கு என்ன தரவேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லித் தாருங்கள்.

- உங்கள் பாதங்களை அடிக்கடி கவனித்து வாருங்கள். நீங்கள் அணியும் செருப்பை காலை நெருக்காத அளவுக்குத் தேர்ந்தெடுங்கள். கால் பகுதியில் தோல் கடினமாகி இருக்கிறதா என்று அவதானியுங்கள்.

- கையிலோ அல்லது காலிலோ சூடு தெரியாமலோ அல்லது வலிதெரியாமலோ இருந்தால் மருத்துவரை உடனே அணுகுங்கள்.

- இரத்த அழுத்தை அடிக்கடி சரி பார்த்து கொள்ளுங்கள்.

- வருடத்திற்கு ஒரு முறையாவது முழு உடற் சோதனை செய்து கொள்ளுங்கள்.

எல்லவற்றிற்கும் மேலாக மனம் துவண்டு போகாதீகள். உங்கள் உடம்பை நீங்கள் ஆள கற்றுக் கொள்ளுங்கள்; இனிமையான வாழ்வை எதிர் கொள்வீர்கள்!
 
A.உமர் தம்பி
கணினி தமிழ் எழுத்துரு கொடையாளி

தமிழ் வலை உலகில் புகழ் பெற்றவரும், தேனி, வைகை போன்ற கணினி ஒருங்குறி எழுத்துருக்களை இணைய பயன்பாட்டிற்கு கொடையாளித்த நம்மூரைச் (அதிராம்பட்டினம்) சேர்ந்த மர்ஹூம் உமர் தம்பி அவர்கள் தென்றல் என்ற தனது வலைத்தளத்தில் கடந்த 2003 ஆண்டு, நவம்பர் 14ம் தேதி அன்று பதிந்த அருமையான மருத்துவ ஆய்வுக் குறிப்பு ஆக்கத்தை இங்கே மீள்பதிவு செய்திருக்கிறோம்.

அதிரைநிருபர் பதிப்பகம்

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 14 7

அதிரைநிருபர் | October 12, 2011 | , , ,


சமுதாய அரசியலா, $UM ஆதாய அரசியலா?
ஒரு கணிஞனின் கணிப்புடன், ஒரு கலைஞனின் கருத்துரை!


உமர் பல இயல்களைக் கற்றிருக்கிறார். ஒவ்வொன்றிற்கும் துவக்க ஆசிரியன் நான்தான்! சில காலம் என்னிடம் கற்ற பிறகு, அவர் எனக்கு ஆசிரியராக மாறிவிடுவார். இயல்களிலேயே ஒரு ஒழுங்கு முறை இல்லாத இயல் அரசியல்தான்! மனிதன் படைக்கப்பட்டபோதே ஷைத்தானுக்கும் மனிதனுக்கும் இடையில் அரசியல் துவங்கிவிட்டது! உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரை அது நீடித்துக் கொண்டிருக்கிறது! ஆன்மீகவாத அரசியல்வாதிகள் அவனைத் துரத்தி, அடித்து, விரட்டிக் கொண்டிருந்தார்கள்! இந்தியாவில் காந்திஜி வரை அரசியல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது! காந்திஜியின் சீடர்களான லால் பகதூர் சாஸ்திரியும் கக்கன்ஜீயும் அரசியல் கற்பைக் காப்பாற்றினார்கள். சாஸ்திரி அரியலூர் இரயில் விபத்தின்போது தன் அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார்! மந்திரி ஆன பின்பும் கக்கன்ஜீ இரயிலில் மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார்! கண்ணியத்தின் சின்னமான இஸ்மாயில் சாகிப் தன் ஓட்டு வீட்டுக்குத் தாமே ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தார். கர்மவீரர் காமராஜர் தன் அமைச்சரவையில் எட்டு அமைச்சர்களை வைத்துக்கொண்டு தமிழகத்தை தன் முஷ்டியில் அடக்கினார்.


இந்தியாவின் விடுதலைக்காக காங்கிரசும், முஸ்லிம் லீகும் பாடுபட்டன. இரு கட்சிகளின் தேசியப் பற்றில் எந்தக் குறையும் சொல்ல முடியாது. காந்திஜி 1940-களில் காங்கிரசையும், முகம்மது அலி ஜின்னா முஸ்லிம் லீகையும் வழி நடத்திச் சென்றனர். முஸ்லிம் லீகில் மற்ற மதத்தவர்கள் இல்லாவிட்டாலும் காங்கிரசில் முஸ்லிம்கள் கணிசமான அளவில் இருந்தார்கள். உதாரணம் மவுலான அபுல் கலாம் ஆசாத்! காங்கிரசை எங்கள் மாமா, மற்றும் S.K.M.H. அவர்களின் தந்தை ஆகியோரும், முஸ்லிம் லீகை என் தந்தை போன்றோரும் தீவிரமாக ஆதரித்தார்கள். ஆனால் இரு சாராரிடமும் வெள்ளையனை வெளியேற்ற வேண்டும் என்ற பொதுவான கொள்கை இருந்தது. தமிழ் நாட்டில் பெரியார், இராஜாஜி போன்றவர்கள் காங்கிரசில் இருந்தனர். இஸ்மாயில் சாகிப் போன்றவர்கள் முஸ்லிம் லீகில் இருந்தார்கள். ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியால் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் வடக்கே பிரிவினைகள் ஏற்பட்டன. தென்னாட்டில் அப்படிப்பட்ட நிலை இல்லை!


1947-ல் இந்தியா விடுதலை பெற்ற பிறகு, காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விடும்படி காந்திஜி சொன்னார்! காந்திஜிக்கு அப்போதே தெரிந்துவிட்டது, அரசியல் வாதிகள் சுதந்திரத்தைத் தவறாகப் பயன் படுத்தி இந்தியாவை கடித்துக் குதறிவிடுவார்கள் என்று! காங்கிரசிலிருந்து முக்கிய தலைவர்கள் விலகினர். பெரியார், இராஜாஜி போன்றவர்கள் தனிக்கட்சி துவங்கினர். பெரியார் திராவிடக் கட்சியும் இராஜாஜி சுதந்திரா கட்சியும் ஆரம்பித்தனர். காயிதே மில்லத் முஸ்லிம் லீகின் தலைவரானார். இராமமூர்த்தி மற்றும் கல்யாண சுந்தரம் தலைமையில் கம்யூனிஸ்டு வலது இடது கட்சிகளும் தோன்றின. ஒவ்வொரு கட்சியும் உடைந்து, உடைந்து சிறு சிறு கட்சிகளாகப் பிரிந்து, பல்கிப் பெருகிவிட்டன! அண்ணாதுரை, திராவிடக் கட்சியிலிருந்தும், ஈ.வி.கே. சம்பத், அண்ணா தலைமையிலிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும், எம்.ஜி.ஆர்., கருணாநிதி தலைமையிலிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும் பிரிந்து, தனிக் கட்சிகள் ஆரம்பித்தனர்! அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் குட்டிகள் போட்டன. திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது. இதைத் தொடந்து ஜாதிக் கட்சிகளும் தோன்றின! தோன்றிக் கொண்டிருக்கின்றன! குப்பையை அள்ளி சாக்கடையில் போட்ட மாதிரி, சினிமாக்காரர்கள் அரசியலில் குதித்தார்கள். இதுவல்ல அதிசயம்! சினிமா நடிகர்கள் தங்கள் ஜாதிகளையும் இணைத்துக் கொண்டு அரசியலில் குதித்தார்கள்! இது பிளாஸ்டிக் பைகளையும் குப்பைகள் நிறைந்த சாக்கடையில் அள்ளிப் போட்ட மாதிரி! போதாததற்கு திராவிட பேனருடன் தேசிய திராவிட முன்னேற்றக் கழகம் வேறு தோன்றியது! விடுதலை தந்த காந்தியைப் பின் பற்றப் போவதாக அரசியலில் குதித்தவர்கள், விஜய சாந்தியைப் பின் பற்றும் அரசியல் வாதிகளாக மாறினார்கள்!


இந்த மாதிரியான அருவருக்கத்தக்க காரணங்களால் உமர் அரசியலை மேலும் வெறுத்தார். அரசியலை வெறுக்கும் பண்பு உமரிடம் எப்படி வந்தது? நான் உமருக்கு பெர்னார்ட்ஷா பற்றி சொல்லி இருக்கிறேன். அவரும் படித்திருக்கிறார். இங்கிலாந்து பாராளுமன்றம், பாராளுமன்றங்களின் தாய் என்று அழைக்கப்படுகிறது. அதன் உறுப்பினர்கள் உலகத்திலேயே தரம் வாய்ந்த அரசியல் வாதிகள்! நம் நாட்டின் சுதேசி மன்னர்களை ஏமாற்றி ,பிரிட்டிஷ் சமராஜியத்தை பெருக்கிக்கொண்டே போன வாரன் ஹேஸ்டிங்ஸ் போன்ற வைஸ்ராய் அல்லது கவர்னர் ஜெனரல்களுக்கு பாராளுமன்றத்தில் தண்டனை வாங்கிக் கொடுத்தவர்கள் அவர்கள்!அவர்களைப் போன்றவர்களைப் பார்த்து இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே பெர்னார்ட்ஷா சொன்னார் “அரசியல் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்” என்று! நம் அரசியல்வாதிகளைப் பற்றி என்ன சொல்வார்?

எங்கள் மாமா மர்ஹூம் S.M. அபூபக்கர் அவர்கள் முற்போக்கு சிந்தனைவாதி! சுதேச மித்திரன், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், மஞ்சரி போன்ற தரமான பத்திரிகைகளைப் படிப்பார்கள். நாங்கள் கல்கண்டு பத்திரிகையை படிப்போம்! உமர் 4, 5 வகுப்புகளில் படிக்கும்போதே கல்கண்டைப் படிக்கத் துவங்கிவிட்டார்! கல்கண்டின் ஆசிரியர், புரட்சி எழுத்தாளர் தமிழ்வாணன் அவர்கள், வாசகர் கேள்விகளுக்குத் திறமையாகவும் நகைச் சுவையாடும் பதில் சொல்வார்! வட நாட்டு பாபுராவ் படேலுக்கு இணையாக கேள்விகளுக்குப் பதில் சொல்வார். அதில் வரும் அரசியல் கருத்துக்களை உமர் விரும்பிப் படிப்பார். சில நாட்களுக்குப் பிறகு கல்கண்டில் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் வந்தன. தயவு தாட்சண்யமின்றி எல்லாரையும் விளாசுவார். அவருடைய விமரிசனத்துக்கு ஆளாகாதவர்கள் யாரும் இல்லை! அந்த வகைக் கட்டுரைகள் உமரை மிகவும் கவர்ந்தன.

இதே கொள்கையைத் தாங்கிக் கொண்டு துக்ளக் வெளி வந்தது. அவற்றில் ஆழ்ந்த கருத்துக்களோடு, வாய் விட்டுச் சிரிக்கக் கூடிய நகைச் சுவைகளும் வரும். மற்ற பத்திரிகைகள் தங்கள் அரசியல் தலையங்கத்தோடும், கார்ட்டூன்களோடும் நிறுத்திக் கொள்வார்கள். ஆனால் துக்ளக் முழுதும் அரசியல்தான், ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. துணிச்சலான அரசியல் விமர்சனங்களுக்காகவும் நகைச் சுவைகளுக்காகவும் உமர் துக்ளக்கை விரும்பிப்படிப்பார்.


இதே துணிச்சலோடும் நேர்மையோடும் ‘உணர்வு’ என்ற இஸ்லாமிய வாரப் பத்திரிகை வெளி வந்தது. இது தமிழ்நாடு முஸ்லிம் முன்னற்றக் கழகத்தின் பத்திரிகை. வாரம் தவறாமல் உணர்வை உமர் வாங்குவார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தங்கள் சமுதாயத்தார்க்கு இழைக்கப்படும் தீமைகளைப் பற்றியும், வழங்கப்பட வேண்டிய சலுகைகளைப் பற்றியும் மட்டுமே பேசுகின்ற அரசியல் சாரா இயக்கம்! அதனால் உமர் அதன் பத்திரிகைகளையும் ஆதரித்தார். உணர்வைத் தொடந்து வந்த ஒற்றுமை மாதமிரு முறை பத்திரிகையையும் உமர் வாங்கத் துவங்கினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தொடர்பான ஆடியோ வீடியோ கேசட்டுகளை வாங்கி வந்து போட்டுக் கேட்பார். “இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்?” என்ற ஒரு நிலை இருந்தது! எப்பொழுது அவர்கள் அரசியலில் குதித்தார்களோ, அப்பொழுதே உமர் அந்தக் கழகத்தைக் கை கழுவிவிட்டார்!


அரசியலில் சேராவிட்டால் என்ன நன்மை? நல்ல வேட்பாளர் கண்களுக்குத் தெரிவார்! மாற்றி யோசிக்கலாம்! ஆட்சி மாற்றம் கொண்டு வரலாம்! எங்களைப் போன்றவர்கள் ஓட்டுப் போட்டுத்தான் மொரார்ஜி தலைமையில் 64 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் 18 மாத கால ‘பொற்கால ஆட்சி’யைக் கொண்டு வந்தோம்! கடவுச் சீட்டு விரைவாக விநியோகிக்கப்பட்டது! ஹஜ் கோட்டா அதிகரிக்கப்பட்டது! உதவித் தொகை உயர்த்தப் பட்டது! விலைவாசி என்றுமில்லாத அளவுக்கு மிகக் குறைந்தது! இதைப் போன்ற நல்ல ஆட்சியைப் பெற, பல நல்ல காரியங்களைப் பெற முஸ்லிம் இயக்கங்கள் மக்களுக்கு வழி காட்டவேண்டும். த.மு.மு.க. அப்படி செய்ய இறங்கித்தான் சேற்றில் காலை விட்டுக் கொண்டது! அல்லாஹ்வின் ஒற்றுமைக் கயிற்றை விட்டு விட்டு அரசியல் களத்தில் குதித்தார்கள். ஒன்றாகக் கலந்திருந்தபோது பதநீராக இனித்தவர்கள், பிரிந்த பிறகு வெறும் பனை நீராகவும், சுண்ணாம்பாகவும் ஆகிவிட்டார்கள்!

சென்ற தேர்தலில் தி.மு.க. வுக்காக இவர்கள் பிடித்த கொடிகள், தி.மு.க. வின் கொடிகளைவிட உயரப் பறந்ததோடு, எண்ணிக்கையில் அவற்றைவிட அதிகம் இருந்தன! அந்தக் காட்சியைப் பார்த்து நகைத்தார் உமர்!. ‘ஒற்றுமையைக் காற்றில் பறக்க விட்டு விட்டு, ஓட்டுக்காக யாசிக்கும் வேட்டைக்காரர்கள் ஆகிவிட்டார்களே’ என்று நொந்தார். புகழ் பெற்ற ஜூலை 4 மாநாட்டை நடத்தி இன்றைய முதல்வருக்கு மேடை தந்து, அவரின் இரண்டாவது அரசியல் வாழ்வுக்கு துவக்கம் தந்தது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். நன்றி மறத்தலை, மறக்காமல் செய்தார் ஜெ! மீண்டும் மு.க.! முகத்தில் கரி! மீண்டும் ஜெ! ச்சே! இப்போது கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள்! இந்தியாவில் முஸ்லிம் இயக்கங்கள் பிற இயக்கங்களைச் சார்ந்து வாழும் (PARASITES) இயக்கங்களாகத்தான் இருக்கின்றன். இப்படிப்பட்ட போக்கு உமருக்குப் பிடிக்காது. இப்போது பேரூராட்சி தேர்தலில் எல்லாக் கட்சிகளும் போட்டியிடுகின்றன. கூட்டணி தர்மம் குப்பையோடு குப்பையாகப் போய்விட்டது!

வேட்பாளர்கள், தாங்கள் தேர்தலில் நிற்பதற்காகக் கட்சித் தலைமைக்குக் கப்பம் கட்டியிருப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறது! முன்பே மக்கள் பணத்தை விழுங்கி ஏப்பம் விட்டவர்களுக்குக் கப்பம் எதற்கு? அந்தப் பணத்தை எல்லாம் சேர்த்து ஊருக்கு ஒரு நல்ல காரியம் செய்திருக்கலாம் அல்லவா? அதைச் சொல்லி மக்களிடம் வாக்குச் சேகரித்திருக்கலாம் அல்லவா? சமுதாய நலனுக்காக விட்டுக் கொடுத்துப் போகலாம் அல்லவா?


சரி எல்லாம் நடந்துவிட்டது. இனி வெற்றி பெற்று வருபவர்கள், செலவு செய்த பணத்தை எடுக்கும் முயற்சியில் அவசர அவசரமாக இறங்காமல், செலவில்லாத சிறு சிறு பணிகளிலாவது இறங்கலாம். நானும் உமரும் நடைப் பயிற்சி செய்யும்போது காணும் காட்சிகள் அவரைக் குமுற வைக்கும். அவை: 1)தெருவுக்கு தெரு கறிக்கடை, 2) பிளாஸ்டிக் பைகளை சாலையில் கொளுத்துதல், 3)பொருத்தமில்லாத ஒலி எழுப்பிகளை வாகனங்களில் பொருத்திக்கொண்டு பொருத்தமில்லாத இடங்களில் அர்த்தமில்லாமல் ஒலி எழுப்புவது, 4)பெண்களும் குழந்தைகளும் நடமாடும் இடங்களில் இரு சக்கர வாகனங்களின் கண் மூடித்தனமான விரைவு 5) வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் உள்ள இடங்களில் இரு சக்கர வாகனங்களின் கண் மூடித்தனமான விரைவு 6) எல்லா நேரங்களிலும் சாலைகளின் சந்திப்பில் ஏற்படும் குழப்பங்கள்.

மேற்கண்டவற்றில் இரண்டை மட்டும் அடிக்கோடிட்டுக் குறிப்பிடுகிறேன். அவை பிளாஸ்டிக் கரியும் ஆட்டுக் கறியும் தொடர்பானவை. பிளாஸ்டிக் பைகளை சாலையில் கொளுத்துவதை உடனே நிறுத்தவேண்டும். அதனால் நுரையீரல் புற்று நோய் வரும் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவேண்டும். ஹஜ்ஜில் செய்வது மாதிரித் தெருவில் ஆடுகளை அறுத்து இரத்தத்தை ஓட விடுவது ஹஜ்ஜை நினைவூட்டுகிறது. இதனால்தான் அதிரையை ‘சின்ன மக்கா’ என்கிறார்களோ என்னவோ! இன்னும் நாம் பெரிய 'மக்காக' இருக்காமல், இவர்களின் அனுமதியை ரத்து செய்யவேண்டும். கடைத் தெருவில் கடை வைக்கச் செய்யவேண்டும். மேற்கண்ட காரியங்களை வெற்றி பெற்றவர் செய்தால் உமரின் எண்ணங்கள் போற்றப்பட்டவையாக இருக்கும்!

வெற்றி பெறுபவர் ஐந்து ஆண்டுகளில், புதிராய் விளங்கும் அதிரா அதிரையை சிரிக்கும் சிங்காரச் சிங்கையாக விரைவில் மாற்ற முடியுமா? முடியும்! அக்பரின் முன்னோடி என்றும், நவீன நாணய முறையின் தந்தை என்றும், நிர்வாகச் சிற்பி என்றும், நீதியின் ஊற்று என்றும் பேசப்படுகிற செர்ஷா, ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்து, வரலாற்று ஆசிரியர்களின் இதயாசனத்தில் வீற்றிருக்கவில்லையா?

தொடரும்...

- வாவன்னா, M.A.,B.Ed.(வரலாறு)

  (உமர்தம்பிஅண்ணன்)

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 13 6

அதிரைநிருபர் பதிப்பகம் | October 04, 2011 | , ,



ஊரின் தேவைகளும் உமரின் சேவைகளும்

உமர் படிக்கும் காலங்களில் பல பொழுது போக்குகளில் ஈடுபட்டிருந்தார். முதலில் அவரது கவனம் ரேடியோவின் பக்கம்தான் திரும்பியது. பத்திரிகைகளில் வரும் ‘ரேடியோ செய்வது எப்படி?’ என்ற கட்டுரையைப் படித்து, டிரான்சிஸ்டர் உதிரி பாகங்களை கடையிலிருந்து வாங்கி சிறிய சாக்பீஸ் பெட்டியில் ரேடியோ செய்தார். அதில் வெற்றியும் கண்டார். படிப்பில் கவனமில்லையே என்று நாங்கள் முனுமுனுத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் வாசலில் அவரது ரேடியோ முனுமுனுத்துக் கொண்டிருக்கும்.

எல்லா அலை வரிசைகளும் எடுக்கூடிய ஒரு பெரிய ரேடியோ செய்யவேண்டும் என்பதற்காக எங்கள் மாமா எல்லா உதிரி பாகங்களையும் உமருக்கு வாங்கிக் கொடுத்தார்கள். மாணவர் உமரின் ஆனந்தத்தைப் பார்க்க வேண்டுமே! அங்கீகாரம் தந்த மாமா, ரேடியோவின் அங்கங்களையும் வாங்கித் தந்ததும் உமரின் அங்கமெல்லாம் பூரித்தன! எதையும் செய்யத் துடிக்கும் இதயம் கொண்ட உமர், இதையும் செய்யத் துடித்தார் . ஒரே முனைப்பாக இணைப்புகள் கொடுத்தார். ரேடியோ இயங்கத் துவங்கியது. அதை அப்படியே மாமாவிடம் தந்துவிட்டார். எங்கள் மாமாவுக்கு உமரோடு பிணைப்பு அதிகமானது.

கல்லூரியில் பேராசிரியர் N.A. சாகுல் ஹமீது ஒலி, ஒளி காட்சிக்குப் பொறுப்பாளராக இருந்தார். அப்போது உமர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். N.A.S. உடன் சேர்ந்து கல்வி தொடர்பான படங்களையும், கலைப் படங்களையும் திரையிட உதவினார். கல்லூரியின் ஆண்டு விழாக்களிலும் இலக்கிய மன்றக் கூட்டங்களிலும் முக்கிய விருந்தாளிகள் மற்றும் பேச்சாளர்களின் பேச்சுக்களை ஒலிப்பதிவு செய்தார்.

உமருக்கு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் மிகுந்திருந்தது. ஒரு விலையுயர்ந்த புகைப் படக் கருவி வைத்திருந்தார். N.A. சாகுல் ஹமீது சாருடன் சேர்ந்து கல்லூரி விழாக்களில் புகைப்படம் எடுப்பார். இருவரும் எடுக்கும் படங்களில் தொழில் நுட்பம் இருக்கும். புகைப் படக் கருவி பழுதடைந்துவிட்டால் அதற்கு வைத்தியமும் பார்ப்பார் உமர்!. உமர் வீட்டிலேயே இருட்டறை தயார் செய்து பிலிம் டெவலப்பிங், ஃபோட்டோ பிரிண்டிங் ஆகிய பணிகளைச் செய்வார். இருட்டறையிலேயே டெவலப்பர், ஃபிக்சர் போன்றவைகளை வைத்திருப்பார். பிளிம்களை ‘டச்’ செய்து பிரிண்டும் போடுவார்.

ஸ்க்ரீன் ப்ரிண்டிங்கையும் இவர் விட்டு வைக்கவில்லை. வெள்ளை பிலிமில் எழுத்து அல்லது படங்களை அண்ணனை வைத்து வரைந்து, தாமே தயாரித்து வைத்திருந்த ரசாயனம் பூசப்பட்ட ஸ்க்ரீன் மேல், படம் வரையப்பட்ட பிலிமை வைத்து சூரிய ஒளியில் எக்ஸ்போஸ் செய்வார். இந்த ஸ்க்ரீனைப் பயன்படுத்தி பிரிண்ட் செய்து நகல் எடுப்பார்!

முன்பு டிரான்சிஸ்டர் ரேடியோவுக்குத்தான் மவுசு அதிகம். நிறையப் பேர் அதை கையில் வைத்துக் கொண்டுதான் செய்திகள், கிரிக்கட் வர்ணனைகள் கேட்ப்பார்கள். பேட்டரி செல்கள் பயன்படுத்துவதால் அது தீர்ந்தவுடன் மீண்டும் வாங்கியாகவேண்டும்; பணச்செலவு! இந்தச் செலவை மிச்சப் படுத்துவதற்காக உமர் எளிமிநேட்டர் என்ற எளிய சாதனத்தைத் தன் கைப்படச் செய்தார். காயில்களை அவரே சுற்றினார். கடையில் புதிதாக வாங்குகிற எளிமிநேட்டரோடு ஒப்பிடும்போது இது மலிவு. மின் தொடர்பு கொடுத்துவிட்டால் டிரான்சிஸ்டர் ரேடியோ தொடர்ந்து பாட ஆரம்பித்துவிடும். எளிமை மிகு உமர், எலிமிநேட்டர்களை ஏராளமானவர்களுக்குத் தாராளமாக செய்து வழங்கியிருக்கிறார். நன்றாகச் சம்பதித்தார் நல்ல பெயரை!

1980- களில் கையடக்கமாக ஒரு கணினி வந்திருந்தது. அதில் செய்தியை தட்டச்சு செய்து அச்செய்தியை ஒலியாக மாற்றி, அதை நாடாவில் பதிவு செய்து, கிரீச் ஒலி எழுப்பக் கூடிய இந்த செய்தியை மற்றொரு கணினியில் ஏற்றினால் இதில் முன்பு தட்டச்சு செய்யப்பட்ட செய்தி திரையில் அப்படியே வரும்! போட்டி மிகுந்த இந்த உலகில், முந்திக் கொள்வற்காக வியாபாரத் தொடர்பான செய்திகளை மற்றொரு ஊருக்கு அனுப்புவதற்கு தன் நண்பர்களுக்குக் கற்றுக் கொடுத்தார் உமர்!

உமர்தம்பியும் நானும் துபாயை விட்டு 2001-ல் ஊர் வந்தபின் அவர் ஓய்ந்துவிடவில்லை! தான் துபைக்குப் போகுமுன் செய்து கொண்டிருந்த பணிகளை மீண்டும் துவக்கினார்.

தனக்கு அமீரகத்தில் ஏற்பட்ட அனுபவங்களை இங்கும் பயன்படுத்த எண்ணினார். அதற்கான வரவேற்புகளும் வந்தன. பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு கார் விற்பனை மற்றும் சேவை நிறுவனத்துக்கு மென்பொருள் செய்ய அவருடைய மகன் மொய்னுதீனுக்கும், அவருடைய அன்பிற்குப் பாத்திரமான N.B.சாகுல் ஹமீதுக்கும் ஆலோசனைகள் சொல்வதில் உறுதுணையாக இருந்தார். உமரின் வழிகாட்டலில் அந்த இரு இளைஞர்களும் அந்தப்பணியை ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் செய்துமுடித்தனர். அந்த நிறுவனத்துக்கு ஆலோசனைகளும் உதவிகளும் தேவைப் படும்போதெல்லாம், தொலைபேசி மூலமாக அழைப்பார்கள். இருவரும் உடனே சென்று பணியை முடித்துக் கொடுத்துவிட்டு வருவார்கள்.

இதே போல சென்னையில் உள்ள ஒரு குடி நீர் சுத்திகரிப்பு சாதனம் (Water Purifier) விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்திற்கு உமரும் அவருடைய மகனும் ஒரு மென்பொருளை உருவாக்கிக் கொடுத்தார்கள். இருவரும் சென்னைக்குச் சென்று அதன் செயல் முறையை அவர்களுக்கு விளக்கிக் காட்டினார்கள். இந்த மென்பொருள் அந்த நிறுவனத்தில் இன்னும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

நானும் உமர்தம்பியும் ஊரில், காலையில் நடைப் பயிற்சிக்காகச் செல்லும்போது ஹாஜி M.S.தாஜுதீன் அவர்களைச் சந்திப்போம். தற்கால கல்வி தொடர்பாகப் பேசும்போது, இமாம் ஷாபி பள்ளியைப் பற்றியும் பேச்சு வரும். உமரின் பேச்சுக்களில் இருந்த கருத்துக்களின் முக்கிய பகுதியைப் புரிந்துகொண்டார் M.S.T. உமரை அவருக்குப் பிடித்துவிட்டது.

நம்மூரில் பெண்கள் கல்லூரி ஒன்று நிறுவ வேண்டும் என்பது M.S.T. அவர்களின் நீங்காத ஆசை. பெண்கள் கல்லூரி நிறுவ முயற்சி மேற் கொண்டிருந்தார். கற்றோர், பெற்றோர், மற்றோர் அனைவரயும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பல தரப்பிலும் கருத்துக்கள் கேட்கப்பட்டு, ‘கல்லூரி தேவை’ என்பது முடிவானது. இதைப்பற்றி நம்மூர்ப் பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய வேண்டியதாயிற்று. இதற்காகப் புள்ளி விவரம் எடுக்கவேண்டும். உமர்தம்பி மீது நம்பிக்கை வைத்திருந்த M.S.T. அவர்கள், அந்தப் பொறுப்பை உமரிடம் கொடுத்தார். ‘நம்மூரில் எத்தனை பேர், பெண்கள் கல்லூரியில் படிக்க விருப்பப்படுகிறார்கள்’ என்பதற்கான புள்ளி விவரம் தயரித்துத் தரும்படி கேட்டுக்கொண்டார். பைதுல்மால் புள்ளி விவரங்கள் தயாரிக்க உமர்தம்பிக்கு உதவ முன் வந்தது.

இந்தப் பணிக்காக பைத்துல்மால், படித்துவிட்டு வீட்டில் இருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளைப் பயன்படுத்தியது. இந்தப் பணிக்காகப் படிவங்கள் வடிவமைக்கப்பட்டு அச்சடிக்கப்பட்டன. மாணவிகள் வீடு வீடாகச் சென்று தாய்மார்களிடம் வினாக்கள் தொடுத்து, தகவல்களைப் பெற்றனர். பெறப்பட்ட தகவல் படிவங்கள் உமரிடம் வந்தன. உமர் அவற்றின் உதவியைக் கொண்டு பெண்கள் கல்லூரி தொடர்பான புள்ளி விவரம் தயாரித்தார்.

புள்ளி விவரங்கள் எடுப்பதில் அவருக்கு இருந்த அனுபவங்களைப் பார்த்து நான் அயர்ந்து போனேன்! உமர் என் உள்ளதில் உயர்ந்து போனார்! கல்வியில் உமர் காட்டிய ஆர்வத்தையும், சொன்ன யுக்திகளையும் உணர்ந்துகொண்ட M.S.T. அவர்கள் அவருக்கு இமாம் ஷாபி மேல் நிலைப் பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப்பினர் பதவியை வழங்கி, அவரைப் பெருமைப் படுத்தினார். உமர் அதை தனது கடமையாக நினைத்தாரே தவிர பெருமையாக நினைக்கவில்லை!

நூல்களின் மேல் இருந்த ஆர்வம் காரணமாக, தனது மகன் மொயனுதீன் மற்றும் N.B.சாகுல் ஹமீது ஆகியோருடன் இணைந்து, காதிர் முகைதீன் கல்லூரி நூலகத்திற்கு ஒரு மென்பொருள் உருவாக்க முனைந்தார். மாணவர்களுக்கு நூல்கள் கொடுத்தல், திரும்பப் பெறுதல், புதிய நூல்களைப் பதிதல் போன்ற தகவல்களை அறிவிக்கும் ஒரு மென்பொருளை வடிவமைக்க முயற்சி மேற்கொண்டார்.

தனக்கும் பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சியைத் தரக்ககூடிய ஒரு பொழுது போக்கு உமரிடம் இருந்தது. அதுதான் மீன் வளர்ப்பு!

தொடரும்..
-- உமர்தம்பி அண்ணன்

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 12 6

அதிரைநிருபர் | September 25, 2011 | , ,

... எனக்கும் உமருக்கும் அமீரகத்தில் இப்போது உறவும் இல்லை, வரவும் இல்லை; அதனால் எந்தப் பற்றும் இல்லை! எல்லாப் பணிகளையும் முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து ”எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று சொல்லிக் கொண்டு வரவேற்பறையில் அமர்கிறோம். அன்று தேதி செப்டம்பர் 11 2001. புறப்படுவதற்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்றன! அந்த நான்கு நாட்களில் உறவினர்களையும் நண்பர்களையும் நேரில் காணவேண்டும்; அல்லது தொலைபேசியில் அவர்களுடன் பேசவேண்டும். வீட்டுக்குத் தேவையான சில பொருள்கள் வாங்க வேண்டும். மீதி நாட்களில் உடலுக்கும் உணர்வுகளுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறோம்.


உமர் சோபாவில் அமர்ந்து தொலைக் காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறார். நான் என் சிந்தனையைப் பின்னோக்கி ஓடவிடுகிறேன்! பள்ளி, கல்லூரி அளவிலும் மாநில அளவிலும் சித்திரத்தின் சரித்திரத்தில் முதல் இடம் பிடித்து, அறுபது வயது வரை கவலை இல்லை என்று சொல்லக் கூடிய தூய ஆசிரியர் பணியில் இருந்துகொண்டு, ஷெர்ஷாவையும் ஷாஜஹானையும் நடத்திச் சென்ற நான், அன்று இருந்த அரபு நாட்டுப் பயண அலையால் உந்தப்பட்டு துபாய் வந்ததையும், அடுத்த ஆறு மாதத்தில் காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் எங்கள் குடும்பத்தின் தூணாக விளங்கிய, எங்கள் மரியாதைக்குரிய மச்சான் (சகோதரி கணவர்) S.M. முஹம்மது பாரூக் அவர்கள் திடீரென இறந்து போனதையும், அதனால் எங்கள் குடும்பம் தடுமாறியதையும், இப்போது அவர்களின் குடும்பத்தின் சுமை என் மீதும் உமர் மீதும் விழுந்ததையும், பட்டுக்கோட்டையில் சுதந்திரமாக இருந்த உமரை துபைக்கு வரவழைத்ததையும், கராமா கிளையில் உமர் தனி மனிதனாகப் பணி புரிந்ததையும், உமர் அஃல்பத்தைமுக்கு மாறும் வரை, நான் சத்வாவிலிருந்து மாலையில் கராமா வந்து உமரையும் கூட்டிக்கொண்டு டாக்சியிலும் படகிலும் சென்றதையும், உமர் அமீரகம் வந்து இரண்டு ஆண்டுகளுக்குள், வயதான எங்கள் தாய் தந்தையரை மீண்டும் பார்க்க முடியாமல் போனதையும், இந்தக் காலக் கட்டத்தில் பிரமச்சாரி அறையில் தங்கி இருந்ததையும், அதனால் உமர் அடைந்த கசப்பான அனுபவங்களையும் மன உளைச்சல்களையும் எண்ணிப்பார்க்கிறேன்.
 
 
உமர் அல்ஃபத்தைமில் பணியில் சேர்ந்து, குடும்ப விசா கிடைத்தும் அந்த நேரத்தில் இந்தியாவில் நிலவிய கெடுபிடி காரணமாக குடும்பம் வர ஓர் ஆண்டு தள்ளிப் போனதையும், திடீரென்று உமர் அபுதாபிக்கு மாற்றப் பட்டதையும், உமர் வாரம் ஒருமுறை என்னைப் பார்ப்பதற்காக துபாய் வந்து சென்றதையும், குடும்பம் வந்த பிறகு ஒவ்வொரு வியாழனும் நான் அபுதாபி சென்று விடுவதையும், எனக்குக் கதவு திறந்து விடுவதற்காக சிறுவர் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு ஓடி வருவதையும், சனிக்கிழமை காலை அபுதாபியிலிருந்து நான் என் துபாய் அலுவலகத்திற்குச் செல்லும்போது, உமரின் இரண்டாவது மகன் என்னை அண்ணாந்து பார்த்து, தன் இனிய மெல்லிய குரலில் ”பெரியப்பா! வரும் வியாழக்கிழமை வருவீர்களா?” என்று கேட்டு என்னை வழி அனுப்பி வைப்பதையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
 
 
உமர் துபாய்க்கு மாற்றப்பட்டதும் பையன்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியையும், துள்ளளையும், தனிமை நோயால் வாடிக் கொண்டிருந்த உமரின் மனைவிக்கு மனத் தெளிவும் மகிழ்ச்சியும் ஏற்பட்டதையும், எங்கள் சகோதரிகளின் மக்கள் வருகையால் உமர் குடும்பம் மேலும் குதூகலத்தை அடைந்ததையும், அமீரகத்திலிருந்து நானும் உமரும் குடும்பத்தோடு ஹஜ் கடமையை நிறைவேற்றியதையும் அசைபோட்டுபார்க்கிறேன்!
 
 
“அட! இது என்ன புகையும் நெருப்பும்? கட்டிடமல்லவா எரிந்துகொண்டிருகிறது!” – ஓர் அலறல்! நான் திடுக்கிட்டேன்! எனது எண்ண அலைகள் சிதறிவிட்டன! “இங்கே வந்து பாருங்கள்! அமெரிக்காவின் வணிக வளாகத்தை! இரட்டைக் கோபுரங்களில் ஒன்று சரிந்துவிட்டது!” என்று உமர் கத்தினார், தன்னை மறந்து! இப்போது உமரோடு சேர்ந்து நானும் தொலைக் காட்சியைப் பார்த்தேன். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு விமானம் மற்றொரு கோபுரத்தின்மீது மோதியது! புகையும் நெருப்பும் கறுப்பும் சிவப்புமாகத் தெரிந்தன! கறுப்பு-சிவப்பு என்றாலே கஷ்டமும் நஷ்டமும் தானா? நான்கு நாட்களுக்கு நிம்மதியாக, சுதந்திர மனிதர்களாக இருக்கலாம் என்று எண்ணி இருந்த எங்களுக்கு மேலும் சோதனைகள்! 15- ஆம் தேதிக்கு டிக்கட் முடிவாகவில்லை. உலகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு முன்னறிவிப்புகள் கொடுக்கப்பட்டன! எங்கள் பயணம் தள்ளிப் போடப்பட்டு விடுமோ என்று நாங்கள் அஞ்சினோம்!
 
 
நல்ல வேலை, டிக்கட் தேதி உறுதி செய்யப்பட்டது. குறிப்பிட்டபடி செப்டம்பர் 15-ல் புறப்பட்டோம். இந்த முறை எங்களிடம் பொருள்கள் அதிகம் இல்லை. விசாவை ரத்து செய்துவிட்டு வருவதால் விமான நிலையத்தில் குடியுரிமைப் பிரிவில் முத்திரை பெற்று எங்கள் நிறுன ஊழியரிடம் தர வேண்டும். நானும் உமரும் ஒரே ஜன்னல் வழியாகப் பாஸ்போர்டைக் கொடுத்தோம். தந்தை பெயர், ஊர் பெயர் எங்கள் இருவருக்கும் ஒரே மாதிரியாக இருந்ததால், அதிகாரி எங்களை ஏற, இறங்கப் பார்த்தார்! புத்திசாலி! புன்முறுவல் பூத்தார்! நாங்கள் முத்திரை பெற்ற தாள்களை எங்கள் நிறுவனங்களின் நபர்களிடம் கொடுத்து அவர்களிடமிருந்து விடை பெற்றோம்.
 
 
அனுமதிச் சீட்டு பெற்று விமானத்தில் ஏறினோம். எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். உமர்தம்பிக்கு சென்ற முறை ஏற்பட்ட அனுபவம் நினைவுக்கு வந்தது. அந்த நிகழ்ச்சி எப்படி நடந்து என்பதை எனக்கு மீண்டும் விளக்கினார். ஊரிலிருந்து அதே ஜம்போஜெட் ஏர்இந்தியா விமானத்தில் உமர் துபாய் வந்தபோது விமானப் பணிப் பெண்கள் அவரிடம் நலம் விசாரித்ததையும் சொன்னார். எதையும் விடாமல் ஒப்புவிக்கும் பழக்கம் உமரிடம் இருந்தது. சிறு வயதிலிருந்தே ஒரு செய்தியை என்னிடம் விளக்கி முடித்தால்தான் அவர் ஆறுதல் அடைவார். “நான் சொல்வதைக் கவனிக்கிறீர்களோ இல்லையோ, ‘ஊம்! அப்படியா!’ என்றாவது சொல்லிக் கொண்டிருங்கள்” என்பார்.
 
 
விமானம் தொடர்பான அத்துணை செய்திகளையும் உமர் அறிந்து வைத்திருந்தார். என்ன என்ன வகையான விமானங்கள் இருக்கின்றன்; அவைகளின் அமைப்பு எப்படி; எவை பாதுகாப்பானவை; எவை ஆபத்தானவை; என்றெல்லாம் அறிந்து வைத்திருந்தார். தான் ஏறி அமர்ந்திருக்கும் விமானம் பற்றி அறிந்துகொள்ள ஆர்வமாய் இருப்பார். விமானம், எப்படி வடிவமைக்க பட்டிருக்கிறது என்றெல்லாம் பார்ப்பார்! இரண்டு மூன்று முறை நான் அவரோடு பயணம் செய்திருக்கிறேன். ஒரு முறை அவருடன் பயணம் செய்து கொண்டிருக்கும்போது அவர் என்னிடம் கேட்டார், “நாம் இப்போது. பயணம் செய்துகொண்டிருப்பது என்ன வகை விமானம் தெரியுமா? DC10 !” DC10 விமானம் பற்றி உமர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது வெற்றிகரமான விமானம் அல்ல! எங்காவது விமான விபத்து நடந்தால், “அது DC10 ஆக இருக்கவேண்டுமே” என்பார் உமர். அவர் சொன்னது சரியாக இருக்கும்! எங்கள் விமானமும் இந்த வகைதான் என்று அறிந்ததும் நான் மனதிற்குள் சொல்லிக்கொண்டேன், ’தம்பி உள்ளான் இ(எ)தற்கும் அஞ்சான்’ என்று!
 
 
DC-10 என்ற விமானம் McDonnell Douglas என்ற அமெரிக்க நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இது மூன்று இயந்திரங்களுடன் அமைக்கப்பட்ட மிகப்பெரிய விமானமாகும். அதிகப்பட்சம் 380 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியது! 1968 முதல் 1988 வரை DC-10 வகையில் 446 விமானங்கள் தயாரிக்கப்பட்டு, விமானக் கம்பெனிகளுக்குக் கொடுக்கப்பட்டன. DC-10 அதிக அளவில் பயன்படுத்துவது FEDEX சரக்குகள் விமானப் பணிக்காகத்தான். இப்பொழுதெல்லாம் அநேகமாகப் பயணிகள் போக்குவரத்துக்கு DC-10 பயன்படுத்தப் படுவதில்லை. இவ்வகையான விமானம் 19 முறை விபத்திற்குள்ளாகி இருக்கின்றன!



ஒரு முறை உமர் சிங்கப்பூர் வழியாக ஊர் சென்றார். பயணம் செய்த விமானம் Dc 10 வகை! இந்த எண்ணம் அவர் உள்ளத்தில் பதிவாகிவிட்டது! தொழுகை நேரம் வந்ததும் விமானத்தின் பின் பகுதிக்குச் சென்று அங்கே தொழுதார். அப்போது விமானம் ஆடியது. உமர் ஏதோ ஒன்று ஆகிவிட்டது என்று பயந்துவிட்டார்! சற்று நேரத்தில் ஆட்டம் நின்றுவிட்டது. வேறு ஒரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் இருவரும் தொழுகை நேரம் வந்ததும் முன் பகுதிக்குச் சென்று தொழுது இருக்கிறோம். இறைவனை நினைக்கும் சரியான நேரமும் இடமும் அதுதானே! இறைவனிடமே தன்னை ஒப்படைத்துவிட்ட ஒருவருக்கு திடீர் விபத்து, உடனடி வெகுமதி! புவனம் கை விட்டுப்போனால், சுவனம் கை நீட்டி அழைக்கும்! இன்ஷா அல்லாஹ்!



இறைவனருளால் வானூர்தியில் சென்னை வந்து, புகைவண்டியில் ஊர்ந்து ஊர் வந்து சேர்ந்தோம் அல்ஹம்துலில்லாஹ்!

... தொடரும்
 
 
 
-- உமர்தம்பி அண்ணன்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு