Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label loan. Show all posts
Showing posts with label loan. Show all posts

கடன் வாங்கலாம் வாங்க... 3

அதிரைநிருபர் பதிப்பகம் | December 26, 2014 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

மெகா தள்ளுபடி: இரண்டு சட்டை எடுத்தால் ஒரு சட்டை இலவசம். இரண்டு பேண்ட எடுத்தால் ஒரு பேண்ட இலவசம். தரமில்லாத சோப்புத்தூளாக இருந்தாலும் ஒரு வாளி இலவசம் என்றால் நம் மக்கள் வாங்க தயாரக இருக்கிறார்கள். இந்த வியாபார தந்திரம் பல வடிவங்களில் நம்மை சுற்றி சுற்றி வந்து வேடிக்கை காண்பித்துக்கொண்டு இருக்கிறது. 25%, 50%, 70% என்று தள்ளுபடிகளை நாம் பார்த்து வருகிறோம்.

மன்னிப்பு வேண்டுமா? கடனை தள்ளுபடி செய்யுங்கள்

நாம் இந்த உலகத்தில் வாங்கும் பொருட்களில் தள்ளுடி கிடைக்கிறது என்றால் சிரமம் எடுத்தாவது வாங்க முயற்சி செய்கிறோம். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமா? இதோ நம் தலைவர் நபி(ஸல்) அவர்கள் கூறுவதை பாருங்கள்: ஒரு மனிதர் மரணித்து விட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), ''நீ உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரது கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்'' என்று கூறினார். (அவரது இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. (அறிவிப்பவர்: ஹூதைஃபா(ரலி) நூல்: புகாரி எண் : 2391)

கடனைத் திருப்பி கேட்கும்போது நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: ''உங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் கைப்பற்றி அவரிடம் ''நீர் ஏதேனும் நல்லது செய்திருக்கிறீரா? ''எனக் கேட்டனர். அதற்கு அம்மனிதர், வசதியானவருக்கு அவகாசம் அளிக்கும்படியும் (அவர் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் செய்வதை) கண்டு கொள்ளாமல் விட்டுவிடும்படியும் நான் எனது வேலையாட்களுக்கு கட்டளையிட்டிருந்தேன்! '' என்று கூறினார். உடனே, ''அவரது தவறுகளைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள்! '' என்று அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டான்.'' (அறிவிப்பவர் : ஹூதைஃபா(ரலி) நூல்: புகாரி எண் : 2077).

நம்மிடம் கடன் வாங்கியவர் திருப்பி கொடுக்க முடியாத நிலையில் இருந்தால் இப்பொழுது நாம் என்ன செய்வது.  அவர் மனம் வேதனைப்படும் அளவுக்கு தொல்லை கொடுக்காமல் அவருக்கு வசதி ஏற்படும்வரை அவகாசம் கொடுக்கலாம் அல்லது கடனை தள்ளுபடி செய்து விடலாம். இப்படி நாம் செய்தால் நம்முடைய பாவங்களையும், தவறுகளையும் வல்ல அல்லாஹ் தள்ளுபடி செய்வான் என்பதை மேற்கண்ட நபிமொழிகள் மூலம் விளங்க முடிகிறது.

தர்மம் செய்த கூலி வேண்டுமா?

இந்த நபிமொழியை பாருங்கள்: அல்லாஹ்வின் தூதரே (கடன் வாங்கி) சிரமப்படுவோருக்கு ஒருவர் தவணை வழங்குகிறார் எனில், அவர் தவணை அளிக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர் கொடுத்த கடன் தொகையைப் போல் தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என்றும் நீங்கள் கூறியதாக நான் கேள்விப்பட்டேனே (அது சரிதானா) என புரைதா(ரலி) கேட்டபோது, கடனின் (தவணைக்)காலம் முடிவதற்கு முன்னால் ஒவ்வொரு நாளும் (ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு. கடன் தவணை முடிந்ததும் அவகாசம் அளித்தால் அவருக்கு ஒவ்வொரு நாளும் அவர் அளித்த தொகையைப் போல் இரு மடங்கு தர்மம் செய்த கூலி உண்டு என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பவர் : புரைதா(ரலி) நூல்: அஹ்மத்).

இதுவரை அல்லாஹ்வுக்காக அழகிய கடன் நாம் எவ்வாறு கொடுக்க வேண்டும்  என்பதை பார்த்தோம். இனி இதற்கான தீர்வில் பிறரிடம் கடன் வாங்கும் சகோதர சகோதரிகளின் நிலை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

கடன் வாங்குவோர் நிலை

நாம் எதற்கெல்லாம் கடன் வாங்குகிறோம் என்பதை முன் தொடர்களில் விரிவாக பார்த்து விட்டோம். நாம் வாங்கும் கடன் முக்கிய மூன்று காரியங்களுக்காக இருந்தால் நலமாக இருக்கும். வயிற்றுபசி, மருத்துவம், இருக்கும் வீட்டிற்காக வெயில், மழை உள்ளே படாமல் இருக்க ஆடம்பரம் இல்லாமல்  சீர்படுத்திக்கொள்ளவும் இதை தவிர ஆடம்பரம் இல்லாமல் பலபேருக்கு சில அத்தியாவசிய காரியங்களுக்கும் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.

கட்டாய கடன்

நமக்கு சிரமம் ஏற்படும்பொழுது கடன் வாங்க முடிவு செய்தால் திருப்பி கொடுக்க முடியாத நிலை நமக்கு ஏற்படும் என்று கருதினால் கடன் வாங்குவதை விட நம்மிடம் உள்ள நகைகள்  (உடனே விற்று பணமாக்க கூடியது நகைகள்தான்)அல்லது சொத்துக்களை விற்று தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். நகைகளும் இல்லை சொத்துக்களும் இல்லை என்ற நிலை வரும்பொழுது நாம் வாங்க போகும் கடன்  அவசியம்தானா? எப்படி இதை திரும்ப கொடுப்போம். நம்முடைய வருமானத்தில் மீதப்படுத்தி திருப்பி அடைத்து விட முடியுமா? என்றெல்லாம் நன்றாக யோசித்தபிறகுதான் கடன் வாங்க தயாராக வேண்டும்.

கடனை திரும்ப அடைப்பதில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்

தங்களின் அவசியத்திற்கு கடன் வாங்கி விட்டீர்கள். திருப்பி கொடுக்கும்பொழுது நமக்கு பெரிய பாரமாகவும், சிரமமாகவும் தோன்றும். இதில் சொன்ன நேரத்தில் திருப்பி கொடுக்க முடியாதவர்கள் கடன் தந்தவர்களிடம் நேராக சென்று தங்களின் நிலைமையை எடுத்துச் சொல்லி வருத்தத்தை தெரிவித்து விட்டு அவகாசம் கேட்கலாம்.

இதில் வசதியுள்ளவர்கள் எவ்வாறு நடக்க வேண்டும்: வசதியுள்ளவர் (தன் கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி) தள்ளிப்போடுவது அநியாயமாகும். என்று அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி), நூல் புகாரி, எண்:2400)

கடன் தொடர் ஆரம்பித்து 11வது தொடரில் இருக்கிறோம். இந்த தொடரை படித்த அத்தனை வாசக நெஞ்சங்களிடமும் சில கேள்விகளை வைக்கிறேன்.

1) கடன் வாங்காமல் வாழ முடியுமா? முடியும் என்றால் அதன் விளக்கத்தை தரவும்!
2) கடன் எதற்கெல்லாம் வாங்கலாம்?
3) கடன் எதற்கெல்லாம் வாங்கக்கூடாது?

அலாவுதீன் S.
அதிரைநிருபரில் இதுவரை பதிக்கப்பட்ட ஏராளமான தொடர்களில் ஒன்றான 'கடன் வாங்கலாம் வாங்க' தொடரின் இந்த அத்தியாயம் மிக அதிகமாக வாசிக்கப்பட்டது மட்டுமல்ல பகிரப்பட்டதுமாகும்

கடன் வாங்கலாம் வாங்க.... 0

அதிரைநிருபர் பதிப்பகம் | November 14, 2014 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! இதுவரை கடன் கொடுக்கல் வாங்கல், வருமானத்திட்டம், சேமிப்பு  வரை அனைத்தையும் பார்த்தோம். இனி நமக்கு நாமே என்ற திட்டத்தில் வட்டியில்லா கடன் திட்டத்தைப்பற்றி பார்ப்போம்.

வட்டியில்லா கடன் திட்டம்:

சீட்டு நடத்துவது போல்தான் இந்த திட்டம், எப்படி நடத்துவது ஏலச்சீட்டு நடத்துவதை பற்றி முன்பு ஒரு தொடரில் கூறியிருந்தேன். ஏலச்சீட்டு (ஏலச்சீட்டு வட்டியின் அடிப்படையில் உள்ளது) போல் இது கிடையாது. இந்த திட்டத்தில் குறைந்தது 10 பேர் வரை (அதிகமாகவும்) சேர்க்கலாம். குறைந்தது ஒரு நபருக்கு 3000ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். மொத்தம் 30ஆயிரம் வருகிறது. முதல் மாதத்தில் அனைவரின் பெயரையும் ஒவ்வொரு சீட்டில் எழுதி குலுக்கி ஒவ்வொன்றாக எடுத்து உதாரணத்திற்கு ஏப்ரல் மாதத்தில் ஒருவர் பெயர், மே மாதத்தில் ஒருவர் பெயர் என்று சீட்டை ஆரம்பிக்கும் தினத்திலேயே குறித்து வைத்துக்கொண்டு மாதாமாதம் யார் பெயர் குறித்து வைத்திருக்கிறீர்களோ  அதன்படி கொடுத்துவிடலாம். மாதா மாதம் பெயர் குலுக்கல் தேவையில்லை. முதல் மாதத்திலேயே பெயர் சீட்டை குலுக்கி வரிசைப்படி எடுத்து எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். (இதில் சீட்டை நடத்துபவரும் ஒரு உறுப்பினர். சீட்டை நடத்துபவர்  முதல் சீட்டை எடுத்துக்கொள்ளலாம், விட்டும் கொடுக்கலாம்).


இந்த முறையில் நடத்தும்பொழுது நடத்துபவரும், உறுப்பினர்களும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும். இருவரும் ஏமாற்றுப்பேர்வழிகளாக இருக்கக் கூடாது. இது கடன் வாங்குவதுபோல்தான். வட்டி என்ற பேச்சுக்கே இந்த திட்டத்தில் இடமில்லை.

வளைகுடா சகோதரர்கள் தங்கள் ரூமில் உள்ளவர்கள் தெரிந்தவர்கள் என்று சேர்த்து 500திர்ஹம் முதல் 1000திர்ஹம் வரை இதுபோல் சீட்டு சேர்த்து நடத்தலாம். இதன்மூலம் நமது தேவைகள் நிறைவேறும். இங்கு யாரிடமும் கடன் வாங்க வேண்டியதில்லை. 10பேரின் பணம் சுழற்சி முறையில் அவர் அவர் பணம் அவர்களுக்கே போய்ச்சேர்கிறது. குறைந்த கால அளவு 6 மாதம் அல்லது 12 மாதம் வைத்து நடத்தலாம். இதற்கு மேல் நீடிப்பது நல்லதில்லை. நடத்துபவரும், உறுப்பினர்களும் நம்பிக்கையானவர்களாக இருக்கவேண்டும். வல்ல அல்லாஹ்வை நம்பி இதனை செயல்படுத்தி பாருங்கள். அவசரத்தேவைகளுக்கு கடன் வாங்காமல் சமாளிக்கலாம்.

பைத்துல்மால்:

பைத்துல்மால்கள் மூலம் செல்வந்தர்களின் உதவியுடன் கஷ்டப்படும் நம் சமுதாயத்தவர்களுக்கு நம்பிக்கையின் அடிப்படையில் பொருள்கள் வாங்கிக் கொண்டும், பொருள்கள் எதுவும் இல்லாதவர்களுக்கு சாட்சிகள் வைத்துக்கொண்டும் கடன்கள் வழங்கலாம். நிறைய ஊர்களில் இத்திட்டம் நடந்து வருகிறது. இருந்தாலும் இன்னும் எதிர்பார்த்த இலக்கை அடையவில்லை. முழுக்க முழுக்க பைத்துல்மால்கள் செயல்படும் நேரத்தில் பிறமதக்காரர்களின் வட்டிக்கடைகள் முஸ்லிம்கள் பகுதியை விட்டு வெளியேறும்.

பொருளாதார சுனாமி

தற்பொழுது ஜப்பானில் சுனாமியும், நில நடுக்கமும் வந்து பலவிதமான இழப்புகளை ஏற்படுத்தியது. (வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் அவனின் கோபத்தால் உருவாகும் அனைத்துவிதமான ஆபத்துகளிலிருந்து நம் அனைவரையும் பாதுகாக்க தினமும் துஆச் செய்து வருவோம்). கடந்த வருடங்களில் ஒரு பொருளாதார சுனாமி வந்து உலகையே குலுக்கி எடுத்ததை மறந்து இருக்க மாட்டீர்கள். இதில் நமக்கும் படிப்பினைகள் இருக்கிறது. பல பேர் வேலை இழந்தனர். ஐடி துறையும், ரியல் எஸ்டேட்  என்ற துறையும் மேலோங்கி இருந்தது. இந்த துறையில் உள்ளவர்கள் வானத்திற்கும்  பூமிற்கும் குதித்து கொண்டு இருந்தார்கள்.

வல்ல அல்லாஹ் அனுப்பி வைத்த இந்த பொருளாதார சுனாமி பல பேர்களை தெருவுக்கு அனுப்பி பல சோதனைகளை ஏற்படுத்தியது. மன்னர்கள் கண்ட கனவு கனவாகவே போய்விட்டது. இதில் பெரிய பெரிய பண முதலைகளின் பேராசையினால்  மக்களையும் பேராசைப்பட வைத்து, அமெரிக்க மக்களில் பல பேரை தெருவுக்கு கொண்டு வந்து சேர்த்தது, பல வங்கிகளும் திவாலாகியது. வளைகுடா நாடுகளில் நிறைய பேருக்கு வேலைகள் பறிபோனது.

பொருளாதார சுனாமி வந்த நேரத்தில் ஒருவரின் பேட்டியை படித்தேன்: அவர் சொன்னது நான் வேலை இழந்து விட்டேன் என்னுடைய கவலையெல்லாம் இதுநாள்வரை மிக ஆடம்பரமாக என் பிள்ளைகளுக்கு பிட்சா போன்ற உணவுகளை வாங்கி கொடுத்தேன். இனி அவர்களுக்கு ரசம் சோறு கொடுக்க கூடிய நிலைக்கு வந்து விட்டேன் என்பதை நினைக்கும்பொழுது கண்ணீர் வடிக்கிறேன் என்றார். (ரசம் சோறு அவருக்கு கேவலமாக தெரிகிறது - இது கூட இல்லாமல் உலகில் நிறைய பேர் பட்டினி கிடக்கிறார்கள் என்பது தெரியவில்லை இந்த நவீன மனிதருக்கு).

வட்டியின் அடிப்படையில் கொண்ட பேராசை வியாபாரங்கள், எந்த தொழிலையும் வட்டியின் அடிப்படையில் தொடங்குவது, பங்கு சந்தை என்ற பெயரில் வெளிப்படையாக நடக்கும் மிகப்பெரிய சூதாட்டங்கள், எந்த தகுதியும், திருப்பி அடைக்க வழியும் இல்லாதவர்களுக்கு வங்கிகள் கடன்கள் கொடுத்தது, தன் நலம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு அப்பாவி மக்களின் செல்வங்களை சுரண்டி வாழும் கூட்டங்கள், இன்னும் இது போன்ற பல காரணங்களால் பொருளாதார சுனாமி மூலம் மக்களுக்கு சோதனைகள் வந்து சேர்ந்தது. ஏன் நல்லவர்களுக்கு வேலை போக வேண்டும் என்று நினைக்கலாம். நல்லவர்கள், தீயவர்கள் என்று எல்லோருக்கும் குறிப்பிட்ட காலம் நலம், குறிப்பிட்ட காலம் சோதனை என்று வல்ல அல்லாஹ்விடமிருந்து மாறி மாறி வந்து கொண்டே இருக்கும் நாம் உயிருடன் இருக்கும்வரை.

இந்தியாவில் உள்ள வங்கிகளும், வளைகுடாவில் உள்ள ஷரியத்தை கடைபிடித்த வங்கிகளும் தப்பித்துக்கொண்டன. இந்தியா பாதிப்படையாமல் இருந்தது பற்றி ஆய்வாளர்கள் கூறும்பொழுது இந்தியர்களின் சேமிக்கும் பழக்கமே காரணம் என்றார்கள். ஷரியத் வங்கிகள் திவாலாகமல் இருப்பதை பார்த்த மேலை நாட்டு வங்கிகள். தற்பொழுது ஷரியத்படி செயல்படுத்த முயற்சிகள் செய்து சில வங்கிகளும் செயல்பட்டு வருகிறது.

இந்த பொருளாதார நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு 50பேர் இருந்த கம்பெனியில் 25பேரை ஊருக்கு கேன்சலில் அனுப்பி விட்டு 50பேர் வேலையையும் 25பேர் தலையில் வைத்துவிட்டார்கள். நாமும் வேறு வழி இல்லாமல் வேலையில் தொடர்ந்து இருந்து வருகிறோம். கடலில் ஏற்பட்ட சுனாமி கடலோரத்தில் இருந்த நாடுகளில் நடந்த அநாச்சாரங்களை ஒட்டு மொத்தமாக துடைத்தெறிந்து விட்டுச் சென்றது. பொருளாதார சுனாமியும் பல படிப்பினைகளை விட்டுச்சென்றுள்ளது. நாம் நடந்து முடிந்த பொருளாதார சுனாமியால் பாடம் படித்தோமா?

இல்லை நாம் பாடம் படிக்கவில்லை. வட்டியின் அடிப்படையில் உள்ள எந்தவொரு வியாபாரமும், கொடுக்கல் வாங்கலும் வல்ல
அல்லாஹ்வின் பார்வையில் தண்டனைக்குரியதே. நாம் இந்த வட்டி என்ற கொடும் நெருப்பில் இருந்து தவிர்ந்து வாழ முயற்சி செய்தோமா? இல்லை. . . இல்லை. . . இல்லை . . . என்றுதான் கூறமுடியும்.

நாம் என்ன செய்கிறோம்:

வீடு கட்டுவதற்கு, கடைகள் கட்டுவதற்கு, வீடு கட்டி வாடகைக்கு விடுவதற்கு என்று   தைரியமாக வங்கியில் கடன் வாங்குகிறோம். நகைகளை கொண்டுபோய் வங்கியில் வைக்கிறோம். கடன் அட்டையில் கடன் வாங்குகிறோம். ஏன் இவ்வாறு மீண்டும் மீண்டும் வங்கியில் வட்டிக்கு பணம் வாங்குகிறீர்கள் என்று கேட்டால், தவிர்ந்து வாழ முடியவில்லை என்ற பதில்தான்  நம்மவர்களிடம் இருந்து வருகிறது.

ஒரு சகோதரர் இன்ஷூரன்ஸில் கடன் வாங்க முயற்சி செய்தார். இவர் ஏழை இல்லை வசதிகள் இருக்கிறது. வாடகைக்கு விடுவதற்கு வீடு கட்ட வேண்டுமாம். என்னிடம் கடன் பத்திரத்தை கொடுத்து சாட்சி கையெழுத்து போடுங்கள் என்றார். நான் அவரிடம் சொன்னது: நான் வாழ்நாள் இன்ஷூரன்ஸ் செய்திருந்தேன், உயிருக்கு அல்லாஹ்தான் பொறுப்பு இன்ஷூரன்ஸ் பொறுப்பாகாது. மேலும் இன்ஷூரன்ஸ் சில தவிர்க்க முடியாத காரணங்களுக்குத்தவிர ஹராம் என்று அறிந்த பிறகு அதிலிருந்து விலகி கொண்டேன், அதனால் உங்களுக்கு சாட்சி கையெழுத்து போட்டு வட்டிக்கு துணை செய்ய முடியாது என்று சொல்லி விட்டேன். அவருக்கு என்மேல் வருத்தம். அவர் என்னிடம் சொன்னது ஆச்சிரியப்பட வைத்தது. என்ன பாய் செய்வது ஷைத்தான் வலையிலிருந்து மீள முடியவில்லை என்று சொன்னார். என்னமோ ஷைத்தான் நீ வட்டிக்கு கடன் வாங்கவில்லை என்றால் உன்னை வாழவிடமாட்டேன் என்று அவரை மிரட்டி விட்டு போனான் என்பது போல் உள்ளது அவர் வார்த்தை.

சகோதர சகோதரிகளே! வட்டிக்கு கடன் வாங்கி வீடு கட்டுவதிலிருந்தும், கடன் அட்டையில் வட்டிக்கு கடன் வாங்குவதிருந்தும், நகைகளை கொண்டு போய் வட்டிக்கு அடகு வைப்பதிலிருந்தும் இன்னும் எத்தனை வகையான காரியங்களுக்கு வட்டிக்கு வாங்க நினைக்கிறோமோ அவை அனைத்திலிருந்தும் விலகி வாழ்வதோடு, உண்மையான இறை நம்பிக்கையாளர்களாக வாழ்வதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்து வாழ்ந்து வல்ல அல்லாஹ்வின் பொருத்தத்தை நாம் அனைவரும் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யவேண்டும்.

இன்றைய செல்வந்தர்களின் நிலை:

நம் சமுதாயத்தில் செல்வம் அதிகமாக உள்ளவர்கள், அவர்கள்  தெருவில் உள்ளவர்களின் கஷ்டங்களையும், உறவினர்களின் கஷ்டங்களையும் கண்டு கொள்வதில்லை, முன்பெல்லாம் 10,20 லட்சங்களில் வீடுகள் கட்டினார்கள். செல்வங்கள் அதிகமான இன்றைய நிலையில் 50 லட்சம், 80 லட்சம், கோடி என்ற செலவில் வீடுகள் கட்டப்படுகிறது.

ஏழைகள் நிறைந்த, கல்வி கற்பதற்கு வசதியில்லாத, பெண்களுக்கு திருமண வயது கடந்தும் விலை கொடுத்து மணமகனை விலைக்கு வாங்க பணமில்லாமல் தவிக்கும் முஸ்லிம் சமுதாயத்தில் நாமும் ஒரு முஸ்லிம் அல்லவா என்ற சிறு மன உறுத்தல் கூட இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் இன்றைய செல்வந்தர்கள்.

தம் முயற்சியால் வந்த செல்வம் தனக்கு மட்டும்தான் என்று ஆடம்பரமாக வீண் விரயம் செய்தும்,  செல்வம் வரும்பொழுது தலைகால் புரியாமல் நடந்து கொள்கிறார்கள். செல்வம் நிலையானது அல்ல நம்மை சுற்றி உள்ள மனிதர்கள்தான் நிரந்தரமானவர்கள். அவர்களுக்கு நம் சக்திக்கு உட்பட்டு உதவிகள் செய்து வாழ்வதுதான் நன்மைகளை பெற்றுத்தரும் சிறந்த வாழ்க்கை. நமக்கு செல்வம் இல்லாதபொழுதும், நம்மை செல்வம் வந்து சேரும்பொழுதும் நம்முடைய நடவடிக்கை ஒரே மாதிரி இருக்க வேண்டும். செல்வம் சுகமானதுதான், நன்மையானதுதான், ஆனால் அதோடு சோதனைகளும் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. (வல்ல அல்லாஹ் நமக்கு தாராளமாக செல்வத்தை தரும்பொழுது நமது தேவைகளுக்குப்போக வீண் விரயம் செய்யாமல் நாமும் தாராளமாக கஷ்டப்படும் ஏழைகளுக்கு கடனாக, தருமமாக (ஸதக்கா) கொடுக்க வேண்டும்).

கீழ்க்கண்ட நபிமொழிகள், நமது வாழ்வின் நிலை, செல்வத்தின் நிலை இரண்டையும் தெளிவாக விளக்குகிறது:

''ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனை உண்டு. என் சமுதாயத்திற்குச் சோதனை, செல்வம்(பெருகுவது)தான் என்று நபி(ஸல்)அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். '' (அறிவிப்பவர்: கஹ்பு இப்னு இயாழ்(ரலி). (நூல்: திர்மிதீ)

''இந்த (அவசியத்) தேவைகளைத் தவிர வேறு எதிலும் எந்த உரிமையும் ஆதமின் மகனுக்கு இல்லை. (அவை) அவன் குடியிருக்கும் வீடு, தன் மறைவுப்பகுதிகளை மறைக்கப்பயன்படும் ஆடை, கெட்டியான ரொட்டி(உணவு), மற்றும் தண்ணீர் (இவைதான் உரிமையாகும்) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' (அறிவிப்பவர்: அபூஅம்ரு என்ற உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) நூல்: திர்மிதீ).

''நபி(ஸல்) அவர்கள் என் தோள் பட்டையைப் பிடித்துக் கொண்டு,  ''ஒரு பயணியாகவோ அல்லது பாதையைக் கடந்து செல்பவராகவோ நீர் இந்த உலகில் இருந்து கொள்'' என்று கூறினார்கள். ''நீர் மாலை நேரத்தில் இருந்தால் காலை நேரத்தை எதிர் பார்க்காதே! நீ காலை நேரத்தில் இருந்தால் மாலை நேரத்தை எதிர் பார்க்காதே! உன் நோய் (நிலையை கருத்தில்) கொண்டு, உன் உடல் நிலையையும், நீ இறப்பதை (கருத்தில்) கொண்டு உன் உயிர் வாழும் காலத்தையும் பயன்படுத்திக் கொள்வீராக! என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுபவர்களாக இருந்தார்கள்.'' (அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி) நூல்: (புகாரி)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 471))

''நபி(ஸல்) அவர்கள் ஓர் ஓலைப்பாயின் மீது படுத்து உறங்கினார்கள். அவர்களின் விலாப்புறத்தில் அதன் தடயம் ஏற்பட்டது. 'இறைத்தூதர் அவர்களே! உங்களுக்காக நாங்கள் ஒரு மெத்தையை ஏற்படுத்தித் தரலாமா?' என்று கேட்டோம். ''எனக்கும் இந்த உலகத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? ஒரு பயணி ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து, பின்பு ஓய்வெடுத்து, அதை விட்டும் செல்வான் அல்லவா! அது போன்றே தவிர நான் இவ்வுலகில் இல்லை'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர் : அப்துல்லா இப்னு மஸ்ஊத் (ரலி)  நூல்: (திர்மிதீ),(ரியாளுஸ்ஸாலிஹீன்: 486) )

''பணக்காரர்களைவிட  ஐநூறு வருடங்களுக்கு முன் ஏழைகள் சொர்க்கத்தில் நுழைவார்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்:திர்மிதீ)   (ரியாளுஸ்ஸாலிஹீன்: 487)

"ஆதமின் மகனே! உன் தேவை போக நீ செலவு செய்வது உனக்கு சிறந்ததாகும். அதை நீ செலவு செய்யாமல் இருப்பது உனக்கு தீங்காகும். தேவையானவற்றை வைத்துக் கொள்வதற்காக நீ பழித்துரைக்கப்பட மாட்டாய். உன் நிர்வாகத்தின் கீழ் இருப்போருக்கு  (நீ உதவி செய்து) செலவைத் துவக்குவாயாக! என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி) நூல்:(திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 510)

இந்த நபிமொழிகளை நன்றாக மனதில் பதிய வைத்து நமது செல்வத்தின் நிலையையும், வாழ்வின் நிலையையும் சரி செய்து மறுமையில் வெற்றி அடைய முயற்சிகள் செய்யவேண்டும். வல்ல அல்லாஹ் நமக்கு எல்லா காரியங்களிலும் நன்மையை தந்து ஹலால், ஹராமை பேணி நடக்கும் நன்மக்களாக நாம் வாழ்வதற்கு நல்லருள் புரியட்டும்.

அலாவுதீன். S.

அதிரைநிருபரில் இதுவரை பதிக்கப்பட்ட ஏராளமான தொடர்களில் ஒன்றான 'கடன் வாங்கலாம் வாங்க' தொடரின் இந்த அத்தியாயம் மிக அதிகமாக வாசிக்கப்பட்டது மட்டுமல்ல பகிரப்பட்டதுமாகும்.

கடன் வாங்கலாம் வாங்க – (நிறைவுரை) 37

அதிரைநிருபர் | April 28, 2011 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் . . .


அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே!  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) - இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!


இந்த கட்டுரை இத்தொடரோடு முடிவதால் தொடர் 1 முதல் 15 வரை ஒரு முன்னோட்டம் பார்த்துவிடுவோம்.

நாடுகள் வாங்கும் கடன்கள். (மேலும் விபரமாக படிக்க)

வங்கி கடனும் மனிதர்களின் ஆசைகளும், கடன் அட்டை. (மேலும் விபரமாக படிக்க)

கடன் அட்டையில் வாங்கும் கடன் விபரங்கள், வளைகுடாவுக்கு வந்தவர்களின் கடன் வாங்கும் நிலைகள். (மேலும் விபரமாக படிக்க)

வளைகுடா சகோதரர்கள் மேலும் சகோதரிகள் கடன் கொடுத்து வாங்கிய விபரங்கள். (மேலும் விபரமாக படிக்க)

ஊரிலிருந்து வளைகுடா சகோதரர்களுக்கு கடன் கேட்பவர்களின் நிலைகள், ஆடம்பர கடன், சகோதரிகள் வாங்கும் கடன்கள், புதிய நகைகள் செய்வது, நகை கடன், வங்கியின் நிலைபாடு, இரவல் நகை கடன், ஆகியவைகள் பற்றிப்பார்த்தோம். (மேலும் விபரமாக படிக்க)

இஸ்லாம் என்றால் என்ன?, வட்டி கடைகள், ஏலச்சீட்டு கடன், தினச்சீட்டு கடன், வாரச்சீட்டு கடன். (மேலும் விபரமாக படிக்க)

குர்பானி கொடுப்பது பற்றி, வலீமா கடன்கள், திருமண கடன்கள். (மேலும் விபரமாக படிக்க)

கடன் எனும் கடலில் தள்ளிய சகோதரிகள், ஊதாரி கணவனுக்கு கொடுத்து ஏமாந்த சகோதரிகள், பாலைவனத்தில் பிடித்துவிடும் சகோதாரிகள், காலமெல்லாம் கணவனை பாலைவன வெயிலில் போராட வைத்த சகோதரிகள், கடன் எனும் நிழல் கூட தன்மீதும் கணவன் மீதும் விழாமல் காத்துக்கொண்ட பெண்மனி. (மேலும் விபரமாக படிக்க)

நாம் தொழுவது எதற்காக?,  நன்மை எதில் உள்ளது, பிறசமுதாயத்தவர்களின் உதவிகள், அழகிய மனிதநேயத்திற்கு சொந்தக்காரர்கள், யார் கவலைப்படமாட்டார்கள். (மேலும் விபரமாக படிக்க)

வெற்றி பெற்றோரின் நிலை, நமது ஜகாத்துகள் பயன் அளிக்கிறதா?, அல்லாஹ்வுக்காக அழகிய கடன் கொடுப்பவர் யாரும் உண்டா?. (மேலும் விபரமாக படிக்க)

மன்னிப்பு வேண்டுமா? கடனை தள்ளுபடி செய்யுங்கள், கடனைத் திருப்பி கேட்கும்போது நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்,தர்மம் செய்த கூலி வேண்டுமா? கடன் வாங்குவோர் நிலை,கட்டாய கடன்,கடனை திரும்ப அடைப்பதில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். (மேலும் விபரமாக படிக்க)

கடனிலிருந்து பாதுகாப்புத் தேடுதல்,கடன் வாங்கியவர்களின் திருப்பிச் செலுத்தும் எண்ணமும் ஏமாற்றும் எண்ணமும்,கடன் கொடுத்தவருக்குக் கடுமையாக பேச உரிமையுண்டு.(மேலும் விபரமாக படிக்க)

கடன் வாங்காமல் இருப்பதற்கு வருமானத்திட்டம்.(மேலும் விபரமாக படிக்க)

பிள்ளைகளின் சேமிப்பு, வாங்கும் பொருட்களில் சிக்கனம்,துணிமணிகள், வீண் விரயம்,தள்ளுபடி, வளைகுடா சகோதரர்களின் சிக்கனம், சிக்கனமா? கஞ்சத்தனமா?. (மேலும் விபரமாக படிக்க)

வட்டியில்லா கடன் திட்டம்,பைத்துல்மால்,பொருளாதார சுனாமி,இன்றைய செல்வந்தர்களின் நிலை என்று அனைத்துவிதமான தலைப்புகளிலும் தொடர் 1 முதல் 15வரை பார்த்தோம். (மேலும் விபரமாக படிக்க)


அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே ஒன்றுமில்லாத காரியங்கள், கதைகளுக்கெல்லாம் உருவான விதத்தை வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இந்த கடன் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று இந்த ஆக்கம் உருவான விதத்தை தெரிவிப்பதில் சில படிப்பினைகள் இருப்பதால் விளக்குகிறேன்.


கடன் கட்டுரை உருவான விதம்:

நான் வளைகுடா நாட்டில் வந்த நாள் முதல் வேலை, ரூம், தொழுகை என்று வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்தது. என்னை சுற்றி இருந்தவர்கள் பெயர் தாங்கி முஸ்லிமாக, வெள்ளிக்கிழமை மற்றும் தொழுபவர்களாக இருந்தார்கள். இந்த சகோதரர்களோடு சேர்ந்து இருந்த பொழுது உண்மையான மார்க்கத்தையும், இஸ்லாத்தில் அழைப்பு பணி இருப்பதையும் அறியாமல் இருந்தேன். பல ஆண்டுகள் இவர்களோடு சேர்ந்து இருந்தபொழுது மார்க்கத்தில் எந்த முன்னேற்றமும் என்னிடம் கிடையாது. (இன்றளவும் வளைகுடா நாடுகளில் இருக்கும் நமது சகோதரர்கள் மார்க்கத்தை அறிய முயற்சி செய்யாமல் சினிமா, சீரியல், பாடல்கள் என்று நேரங்களை வீண் விரயம் செய்து வருகிறார்கள். உலகம் முழுவதும் அழிவுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. மறுமை பயம் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு வல்ல அல்லாஹ் நேர்வழி காட்டட்டும்).

இந்த நேரத்தில் அழைப்பு பணி செய்யும் ஒரு சகோதரர் மூலம் தவ்ஹீது சகோதரர்கள் சேர்ந்து அழைப்பு பணி செய்வதை அறிந்தேன். அந்த சகோதரர் அங்கு அழைத்து சென்று அறிமுகம் செய்து வைத்தார். வல்ல அல்லாஹ்வின் மிகப்பெரிய கருணையால் தூய்மையான மார்க்கத்தை  அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. வார பயானுக்கு தொடர்ந்து செல்ல ஆரம்பித்தேன். இவர்கள் மூலம் யு.ஏ.இல் அனைத்து இடங்களிலும் நடந்த பயான்களுக்கு சென்று வந்தேன்.

மறுமை சிந்தனையுள்ள சகோதரர்களோடு பழகும் வாய்ப்புகள் அதிகம் கிடைத்தது. நான் பல ஆண்டுகள் பழகிய சகோதரர்கள் தொழக்கூட ஆர்வம் இல்லாமல் இருந்தார்கள். தவ்ஹீது சகோதரர்களின் அறிமுகம் எனக்கு வல்ல அல்லாஹ் கொடுத்த வாய்ப்பே. தவ்ஹீத் சகோதரர்கள் சேர்ந்து கையெழுத்து பிரதி நடத்தி வந்தார்கள். (கையால் எழுதி அல்ல, கம்யூட்டர் மூலம் டைப் செய்து) இதன் ஆசிரியர் கீழக்கரையைச் சேர்ந்த சகோதரர் அப்துல்லாஹ் செய்யது ஆபீதீன், ஃபுஜைராவில் இருந்தார். இதன் காப்பியை எனக்கு மெயில் மூலம் அனுப்பி சரிபார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஒரு தடவை ஃபுஜைராவில் நடந்த பயானுக்கு சென்றிருந்தோம் அங்கு தங்கி மறுநாள் காலை அங்கு கடலில் குளிக்க சென்றோம். கடலிலேயே மசூரா சகோ. அ.செய்யது ஆபீதீன் என்னை சத்தியப்பாதை கையெழுத்து பிரதியின் ஆலோசனைக்குழுவில் சேர்க்க வேண்டும் என்று மற்ற ஆலோசகர்களிடம் கூறினார். அந்த குழுவில் உள்ளவர்கள் ஆமோதிக்க நான் ஆலோசனைக்குழு உறுப்பினரானேன்.

இதன் பிறகு சில மாதங்கள் கழித்து இந்த கையெழுத்து பிரதியை மாத இதழாக வெளியிட வேண்டும் என்று எல்லோரும் ஆலோசனை செய்து தமிழ்நாட்டில் பதிவு செய்து ஆசிரியர் அவர்களின் தந்தை அப்துல்லாஹ் அவர்களின் உதவியுடன் சத்தியப்பாதை என்ற பெயரில் மாத இதழாக வெளி வந்தது. பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு மசூராவில் என்னை உதவி ஆசிரியராக சேர்க்க வேண்டும் என்று சகோ. அ.செய்யது ஆபீதீன் அறிவித்தார். ஆலோசனை குழுவிலிருந்து உதவி ஆசிரியர் ஆனேன். மீண்டும் ஒரு மசூராவில் என்னை இணை ஆசிரியராக அறிவித்தார். ஆலோசனைக்குழு உறுப்பினர் என்ற நிலையில் இருந்து உதவி ஆசிரியர், இணை ஆசிரியர் நிலைக்கு என்னை கொண்டு வந்தார். அல்ஹம்துலில்லாஹ்!. இந்த நேரத்தில் பத்திரிக்கையின் முழுப்பொறுப்பையும் இருவரும் கவனித்து வந்தோம்.

எனக்கு ஆசிரியர் பொறுப்பு கிடைத்தவுடன்தான் இந்த கடன் வாங்கலாம் வாங்க ஆக்கத்தை இதில் எழுத ஆரம்பித்தேன். பொருளாதார பற்றாக்குறையால் இந்த இதழை தொடர்ந்து நடத்த முடியாமல் நிறுத்தி விட்டோம்.

அதிரை நிருபரில் ஆக்கம்  வெளியானது:

ஒரு நாள் தற்செயலாக அதிரைநிருபரை பார்க்க நேர்ந்தது. சபீர் அதிரை நிருபரில் கவிதை வெளியிட்டது பற்றி என்னிடம் கூறியபோது நான் எழுதிய ஆக்கத்தை வெளியிட கேட்டு சொல்லும்படியும், அதிரை நிருபரில் கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது என்று வெளியிட்டிருந்தார்கள் என்றும் கூறினேன். என் மெயிலுக்கு அனுப்பி வை நான் அவர்களுக்கு அனுப்பி வெளியிட ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்ல நானும் அனுப்பி வைத்தேன்.

என்னிடம் சாப்ட் காப்பி இல்லை, சத்தியப்பாதை இதழ்தான் இருந்தது. முதல் ஆக்கத்தை ஸ்கேன் செய்து அனுப்பி வைத்தேன். இது சம்பந்தமாக சகோதரர் தாஜுதீனிடம் பேசினேன். ஆனால் தாஜுதீனிடம் இருந்து பதில் எதுவும் வராத காரணத்தால் வேறு ஒரு இணையதளத்துக்கும் இந்த ஆக்கத்தை அனுப்பி வைத்தேன். அந்த இணையதளத்திடம் இருந்து இரண்டு தடவை பதில் வந்தது. ஆக்கம்  முழுவதுமாக இருக்கிறதா? நாங்கள் ஆலோசனைக்குழுவில் வைத்து கலந்து கொண்டு தங்களுக்கு பதில் தருகிறோம் என்று பதில் மெயில் வந்தது. அதன்பிறகு இன்று வரை அவர்களிடம் இருந்து பதில் இல்லை. ஒரு வேளை பதில் அன்றே வந்திருந்தால் அந்த இணையதளத்தில் இந்த ஆக்கம் வெளியாகியிருக்கும்.

சபீரிடம் இருந்து போன்: என்ன ஆச்சு ஏன் உன் ஆக்கம் வரவில்லை என்று, நான் தாஜுதினிடம் இருந்து பதில் இல்லை என்றேன். சரி நான் பேசுகிறேன் என்று சொன்ன பிறகு தாஜுதீனிடம் இருந்து போன் வந்தது. காக்கா உடல் நலமில்லாத காரணத்தால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அதன் பிறகு நான் ஆக்கத்தை அனுப்பி வைத்து நிறைவுரைக்கு வந்து விட்டேன்.
 
சத்தியப்பாதை இதழில் வெளிவந்தது கரு என்றால் அதிரை நிருபரில் வெளியானது முழுக்குழந்தை என்று சொல்லலாம். ஏன் என்றால் மேலும் பல அனுபவங்கள் மூலமும், தற்பொழுது உள்ள நிகழ்வுகளையும் சேர்த்து எழுதும் வாய்ப்புகள் கிடைத்தது. அதிக அளவில் வாசகர்களின் வரவேற்பையும் பெற்றுக்கொண்டது இந்த ஆக்கம்.


நன்றியுரை :

உலகை படைத்து பரிபாலித்து வரும் வல்ல அல்லாஹ்வுக்கே என்னுடைய முதல் நன்றி! (அல்ஹம்துலில்லாஹ்!) இந்த ஆக்கத்தை எழுதக்கூடிய சூழலை கொடுத்து எழுத வைத்தவன் வல்ல அல்லாஹ்வே!

அப்துல்லாஹ் செய்யது ஆபிதீன்:
என்னை ஆசிரியராக நியமித்து பின் எனக்கு இந்த ஆக்கத்தை எழுத வாய்ப்பு அளித்ததற்கு என் நன்றியை சகோதரர் செய்யது ஆபிதீனுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். வல்ல அல்லாஹ் சகோதரருக்கு நல்லருள் புரியட்டும்.

சபீர்:
அதிரை நிருபருக்கு அறிமுகம் செய்து வைத்து, ஆக்கம் வெளிவருவதற்கு முயற்சியும் செய்து மேலும் எழுதுவதற்கும் ஊக்கத்தையும் கொடுத்த சபீருக்கு என்னுடைய நன்றி! வல்ல அல்லாஹ் சகோதரருக்கு நல்லருள் புரியட்டும்.

தாஜுதீன்:
நான் இரண்டு வாரம் தொடர்ந்து கட்டுரையை அனுப்பிய பிறகு காக்கா நீங்கள் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம் என்று சொன்னபொழுது நான் நேரடியாக பதிந்தால் ஏதாவது தவறுகள் வந்தால் திருத்த வாய்ப்பிருக்காது என்று கூறிய பிறகு எனது ஆக்கத்தை படித்து பிறகு அதற்கான அழகிய படங்களை தேடி எடுத்து வேலை பளுவுக்கு இடையிலும் சிறந்த முறையில் பதிவு செய்த சகோ.தாஜுதீனுக்கு எனது நன்றி! வல்ல அல்லாஹ் சகோதரருக்கு நல்லருள் புரியட்டும்.

அபுஇபுறாஹிம்:
ஆக்கம் வெளிவந்தவுடன் முதல் வாசகராக வந்து பின்னூட்டம் பதிந்ததற்கும் மற்றவர்களும் பின்னூட்டம் இடுவதற்கு ஊக்கமாக இருந்ததற்கும் எனது நன்றி! வல்ல அல்லாஹ் சகோதரருக்கு நல்லருள் புரியட்டும்.

வாசகர்கள்:

சகோதரர்கள்: அபுஇபுறாஹிம், தாஜுதீன், சபீர், யாசிர், தஸ்தகீர், ஹமீது, அப்துல்மாலிக், ஜாகிர், ஜலால், அஜீஸ், ஹாலித், நிஷாத் மீரா,  ஜமீல் காக்கா,அஹ்மது காக்கா, ரியாஷ் அஹமது, அப்துர்ரஹ்மான், நீடுர் அலி, மீராஷாஹ், அதிரை அபூபக்கர், ஹிதாயத்துல்லாஹ், அபு ஆதில், அஹமது இர்ஷாத், அபு இஸ்மாயில், அபு ஈசா, MSM நெய்னா முகம்மது, பின்னூட்டம் பதிந்த வாசகர்களுக்கும், படித்தும் பின்னூட்டமிட வசதி இல்லாத வாசகர்களுக்கும்,  படித்து பயன் பெற்ற சகோதரிகளுக்கும் எனது நன்றி!

ஒரு ஆக்கத்தை எழுதி பதிந்தால் மட்டும் போதாது அதை படித்து கருத்தை தெரிவிக்கும் வாசகர்கள் இருந்தால்தான் அந்த ஆக்கத்திற்கு வெற்றி! அந்த வகையில் கருத்திட்ட, கருத்திட முடியாத வாசகர்கள் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்.

நிறைவுரை:

வல்ல அல்லாஹ்வின் அருளால் இந்த ஆக்கம் தொடராக வெளிவந்து என்னால் முடிந்தளவு நமக்குள் நடைபெறும் அனைத்து விதமான கடன்களையும் குர்ஆன், மற்றும் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில் கடன் வாங்குபவர், கொடுப்பவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கடனற்ற வாழ்க்கை வாழ நாம் எப்படி சிக்கனமாக இருக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தி விட்டேன். இன்ஷாஅல்லாஹ் இதன்படி வாழ நாம் அனைவரும் நம்மை தயார்படுத்திக்கொள்வோம்.

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே இதில் நிறைகள் இருந்து அதனால் நீங்கள் பயன் அடைந்து இருந்தால் அது இவ்வுலகையும், மனிதர்களையும் மற்ற படைப்பினங்களையும் படைத்து பாதுகாத்து வரும் சர்வ சக்தி படைத்த வல்ல அல்லாஹ்வுக்கேச் சேரும் - அல்ஹம்துலில்லாஹ்! குறைகள் இருந்தால் பலகீனம் நிறைந்த படைப்பாகிய மனிதனான என்னேயேச் சேரும்.

உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று மாறாக அல்லாஹ், இறுதிநாள் வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போருக்கும், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள், அவர்களே உண்மை கூறியவர்கள், அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள். (அல்குர்ஆன் : 2: 177)

வாசகர்களுக்கு அன்பான கோரிக்கை:

அதிரை நிருபரில் வெளியான முக்கியமான ஆக்கங்களை வெளியிட வேண்டுமென்பது அனைவரின் விருப்பமாக இருக்கிறது. ஆக்கங்களை நோட்டீஸாக வெளியிட வேண்டுமெனில் பொருளாதாரம் வேண்டும் ஒருவரே பொறுப்பு எடுப்பது சிரமமான காரியம். பரிட்சைக்கு படிக்கலாமா? என்ற ஆக்கத்தை மிகுந்த பொருட் செலவில் செலவு செய்து அதிரை நிருபர் குழு மட்டும் பொறுப்பு எடுத்து வெளியிட்டார்கள் என்பதை நான் அறிவேன்.

வாசகர்கள் அனைவரிடமும் என்னுடைய சொந்த கருத்தாக தெரிவிப்பது: வெளிவந்த நோட்டீஸ் செலவிலும், இனி நோட்டீஸாக வெளியிடப்போகும் செலவிலும் தங்களின் பங்களிப்பை (நன்கொடை) செய்து நன்மையை அனைவரும் பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். (நன்மையை ஒருவரே எடுத்துக்கொள்ளாமல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தெரிவித்துள்ளேன்). எந்த ஆக்கங்களை நோட்டீஸாக, புத்தகமாக வெளியிட போகிறார்கள் அதற்கு என்ன செலவாகும் என்ற விபரங்களை அதிரை நிருபர் குழுதான் வெளியிட வேண்டும். வாசகர்களின் கருத்தை தெரிவியுங்கள்.

நம்பிக்கை கொண்டோரே! பேரமோ, நட்போ, பரிந்துரையோ இல்லாத நாள் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுங்கள்! (அல்குர்ஆன் : 2:254)

அவதூறு பரப்புபவர் - புறம் பேசுபவர்களுக்காக:

உனக்கு தெரியுமா? சேதி? அதிரை நிருபர் குழு நன்கொடை வசூலிக்க ஆரம்பித்து விட்டார்களாம் என்று புறம் பேச ஆரம்பிப்பவர்களின் கவனத்திற்கு வல்ல அல்லாஹ்வின் எச்சரிக்கை: 

நன்மையிலும். இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன் : 5:2)

--- நிறைவுற்றது ---

-- S. அலாவுதீன்



அன்பு நேசங்களே..

அஸ்ஸலாமு அலைக்கும்,

கடந்த 2010 அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் நம் அதிரைநிருபரில் மிகுந்த வரவேற்பை பெற்ற கடன் வாங்கலாம் வாங்க தொடர் விழிப்புணர்வு பதிவு இந்த பதிவுடன் நிறைவடைகிறது. முதலில் இறைவனுக்கே எல்லா புகழும். அல்ஹம்துலில்லாஹ்…

இந்த அற்புதமான விழிப்புணர்வு கட்டுரையை நம் அனைவருக்கும் பரிசாக தந்து பயனடைய செய்த  எங்கள் அன்பு பாசம் நிறைந்த சகோதரர் S. அலாவுதீன் அவர்களுக்கு மிக்க நன்றி. இது போன்ற தொடர் மூலமே அதிரைநிருபரின் தரம் உயர்ந்துள்ளது என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறோம்.

மக்கள் பயனடைய வேண்டும் என்ற எண்ணத்தில் நம் அனுமதியுடனும் மற்றும் நம் அனுமதியில்லாமலும் இந்த தொடர் ஆக்கத்தை வெளியிட்ட சகோதர வலைப்பூக்களுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து பின்னூட்டங்களுடன் சகோதரர் அலாவுதீன் அவர்களை ஊக்கமும் உற்சாகமும் அளித்துவந்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மிக்க நன்றி.

இந்த தொடர் நம் அதிரைநிருபரில் வெளிவர காரணமாக இருந்த சகோதரர் சபீர் அவர்களுக்கும் மிக்க நன்றி. உங்கள் இருவருக்காக நாங்கள் எல்லாம்வல்ல இறைவனிடம் துஆ செய்கிறோம். இந்த தொடர் ஆக்கத்தை படித்தவர்களும், படிக்கபோகிறவர்களும் இந்த இருவருக்காவும் துஆ செய்யுங்கள்.

அதிரைநிருபர் தேடல் பகுதியில் “கடன் வாங்கலாம் வாங்க” என்று தட்டினால் போதும் இந்த தொடர் ஆக்கத்தின் சுட்டிகள் அனைத்தும் கிடைக்கும். மேலும் கூகுல் தேடல் இணையத்திலும் “கடன் வாங்கலாம் வாங்க” என்று தேடினால் நம் அதிரைநிருபர் வலைத்தளமே முன்னனியில் வரும். இது மட்டுமல்ல கூகுல் தேடலில் அதிரை அலாவுதீன், சகோதரர் அலாவுதீன், அலாவுதீன் காக்கா என்று தேடிப்பருங்கள் சகோதரர் அலாவுதீன் அவர்களின் ஆக்கங்களே முதல் வரிசையில் கிடைக்கும்.

வல்ல அல்லாஹ் நம் சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.

இது போன்று நன்மை தரும் விழிப்புணர்வு ஆக்கங்கள் எழுத அல்லாஹ் நம் சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நல்ல செல்வ வளத்தையும் தந்தருள்வானாக என்று துஆ செய்கிறோம். வாசக நேசங்களே நீங்கள் அனைவரும் துஆ செய்யுங்கள்…

மீண்டும் எல்லா புகழும் இறைவனுக்கே..

தொடர்ந்து இணைந்திருங்கள்…

அதிரைநிருபர் குழு


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு