தொடர் : பதினாறு
இஸ்லாமிய பொருளாதாரத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள். (உழைப்புக்குக் கூலி ).
பொருளாதாரத்தை வடிவமைக்கும் முக்கிய காரணிகள் என்று பொதுவான பொருளியல் அறிஞர்கள் குறிப்பிடுவன நான்கு காரணிகளாகும். அவையாவன நிலம், உழைப்பு, முதலீடு, தொழில் முனைவர்கள் ஆகியவைகளாகும். ( LAND, LABOUR, CAPITAL & ENTREPRENEUR).
இந்த நான்கு காரணிகளின் கலவையால்தான் உற்பத்தி எனும் பொருளியலின் அடிப்படை இயக்கம் செய்யப்படுகிறது. இந்தக் காரணிகள் உற்பத்திக்கான தங்களின் பங்களிப்புகளின் அடிப்படையில் தங்களால் உற்பத்தி செய்யப்பட்டவைகளின் உபரிகளைப் பிரித்துக் கொள்கின்றன. நிலத்துக்கு வாடகை (RENT) உழைப்பவர்க்குக் கூலி அல்லது சம்பளம் (WAGES OR SALARY) முதலீட்டுக்கு வட்டி அல்லது இலாபப் பங்கு (INTEREST or DIVIDENT ) தொழில் முனைவோருக்கு இலாபம் (PROFIT) என்கிற அளவில் இவைகள் பங்கிடப்படுகின்றன. ( வட்டி என்றதும் இப்போதே யாரும் அடிப்பதற்கு கம்பைத் தூக்கி விடாதீர்கள்- இது பற்றி நிறைய எழுத இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்) இப்போது சில அடிப்படையான பொருளாதார இயல்புகளைக் குறிப்பிட வேண்டி இருப்பதால் இவற்றைப் பற்றி மட்டும் பேசுகிறோம்.
மேற்கண்ட நான்கு காரணிகளில் எதன் பங்களிப்பு அதிகம்? எதற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்? எந்தக் காரணிக்கு மூத்த பங்காளராக இருக்க முடியும் என்பதில்தான் முதலாளித்துவ மற்றும் பொதுவுடமைக் கோட்பாடுகள் போட்டிபோட்டுக் கொண்டு நிற்கின்றன. நிலத்துக்கு முதன்மை இடம் தரப்பட வேண்டுமா? உழைப்புக்கு முதலிடம் தரப்பட வேண்டுமா? இடும் முதலீட்டுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டுமா அல்லது இவைகளை எல்லாம் ஒருங்கிணைத்து நிர்வகிக்கிற தொழில் முனைவோனுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டுமா என்பதில் சர்ச்சைகள் நிலவுகின்றன. ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட்டால்தான் உருவாக்கம் என்பது நடைபெற முடியும் என்கிற அமைப்பில் யார் பெரியவன் என்கிற போட்டி நிலவி அதிகார வர்க்கங்கள் தங்களின் பங்கை சிறந்டிக் கொண்டால் எழுவதே உழைப்போர் போராட்டம்.
வங்கிகள் தரும் முதலீட்டுக்கு அதிக வட்டியை சுரண்டிக்கொள்கின்றன. பணம் பத்தும் செய்யும் என்கிற காரணத்தாலும் பணம் உள்ளோனே பலவான் என்பதாலும் பணம் படைத்தவர்களால் தாங்கள் விருப்பம்போல் எதையும் ஆட்டிப் படைக்க முடியும். இதனால்தான் முன்னறிவிப்பின்றி மத்திய வங்கிகளின் வட்டி வீதம் திடீரென்று கூட்டப் படுகிறது குறைக்கப் படுகிறது.
அதேபோல் தொழில் முனைவோர் நிர்வாகத்தில் இருப்பதால் அவர்கள் தடி எடுக்கும்போதெல்லாம் தண்டல்காரர்களாக மாற அவர்களாலும் முடியும். நிர்வாகத்தில் இருப்போர்கள் தங்களுக்கும் தங்களைச் சார்ந்தோருக்கும் தங்களின் அதிகாரத்தைக் கொண்டு கூடுதலான சம்பள விகிதங்களையும் சலுகைகளையும் அடைந்து கொண்டு இலாபத்தின் அளவைக் குறைத்துக் காட்டலாம்.
நிலவுடைமை அதிகார வர்க்கங்கள் போடும் ஆட்டமும் அளவற்றது.
எஞ்சி இருப்பது உழைப்போர் வர்க்கமே. இஸ்லாமியப் பொருளாதாரம் உழைப்போர் பக்கமே அதிகம் சார்ந்து இருக்கிறது என்பதை இங்கு நிலை நாட்டுவோம்.
பிழைப்பவரின் பேருழைப்பை முடிந்த மட்டும்
பிழிகின்ற கொடுமைக்குப் பெயர் சுரண்டல்!
உழைப்பவரின் குருதியினை உறிஞ்சுகின்றோர்
உலகினிலே கொழுக்கின்றி சுரண்டல்காரர்!
தழைக்கின்ற வளமனைத்தும் உழைக்காதார்க்கா?
தாழ்வுறுத்தும் வளமையெல்லாம் உழைப்போருக்கு?
உழைக்கின்ற மக்களெலாம் சிந்திக்கின்ற
உழைப்பேற்காக் காரணத்தால் தொடரும் துன்பம்!
அன்புணர்வு மாந்தர் நேயம் என்னும் சொற்கள்
அவற்றின்நற் பொருளிழந்த அலங்கோலத்தால்
முன்பிருந்த நல்லிணக்கம் அமைதி வாழ்க்கை
முற்றிலமாய் இன்றைக்கு எங்கும் இல்லை!
நின்றெண்ணிப் பார்த்திடவே ஒருவருக்கும்
நேரமில்லை; காலமில்லை; விரைவு, ஓட்டம்!
வென்றுயர வேண்டுமெனும் வேகப் போக்கில்
வீழ்த்துவதோ நல்லுணர்வை சிந்திப்பீரே! - என்று ஒரு கவிஞர் புலம்புகிறார்.
உழைப்போர் ஒருதலைப் பட்சமாக வஞ்சிக்கப் பட்டு சுரண்டபட்டதால் உலகில் நடந்த புரட்சிகள் வரலாற்றின் சுவடிகளில் இரத்தக்கறை படிந்தவைகளாகும். இன்னும் இவற்றின் வடுக்கள் உலகெங்கும் நினைவுச்சின்னங்களாய் நிற்கின்றன. தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டமும் புரட்சிகளும் நடைபெறாத நாடுகளே உலகில் இல்லை. இந்தப் புரட்சிகளுக்கும் சிந்தப் பட்ட இரத்தத் துளிகளுக்கும் காரணம் உழைப்போருக்கு உரிய கண்ணியத்தையும், அவர்களின் பங்கையும் அளிக்கத்தவறிய கோட்பாடுகளும் நடை முறைகளுமே.
வருடத்திற்கொரு முறை மே 1 அன்று உலகம் முழுவதும் உழைப்பாளிகள் தினம் கடைப்பிடிக்கப் படுகிறது. அன்றைய தினத்தில் உழைப்பாளிகளின் கோரிக்கைகள், மாத ஊதியம், அவர்களின் அடிப்படைப்பிரச்னைகள், அவர்கள் சந்திக்கும் அவலங்கள், இன்னும் இவை போன்ற உழைப்பாளிகளைப் பற்றிய பல விஷயங்கள் உலகம் முழுவதும் பேசப்படும் அல்லது அலசப்படும். ஆனால் அன்றைய தினத்திற்கு முன்போ அல்லது பின்போ உழைப்பாளிகளை எவரும் கண்டு கொள்வதேயில்லை.
உலகத்தொழிலாளர்கள் பட்ட துன்பங்களின் வரலாறு இப்படி சில சான்றுகளை நமக்குச் சொல்கிறது.
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலோ 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலோ பல வளர்ச்சி அடைந்த நாடுகளில் உழைப்பாளிகள், முதலாளிகளால் மிக மோசமான முறைகளில் நடத்தப்பட்டனர். எந்தளவிற்கெனில் நாளொன்றுக்கு 12முதல் 18 மணி நேரம் கட்டாயம் உழைத்தே ஆக வேண்டும் என்றொரு நிலை அன்றிருந்தது. இக்கொடுமைக்கெதிராக பல நாடுகளில் ஆங்காங்கே எதிர்ப்புக் குரல்களும் கண்டனக்கனைகளும் தோன்ற ஆரம்பித்தன.
இங்கிலாந்தில் வேலை நேராக குறைப்பை கோரிக்கையாக வைத்து
‘சாசன இயக்கம்’ என்றொரு இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.
ஃபிரான்ஸில் 1830 களில் நெசவுத்தொழிலாளிகள் 15 மணி நேரம் வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். இதை எதிர்த்து 1834 ஆம் ஆண்டு ‘ ஜனநாயகம்’ அல்லது மரணம் என்றொரு கோஷத்தை முன்வைத்து நெசவுத்தொழிலாளிகள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர் .
அமெரிக்காவில் 1832 ல் பாஸ்டனில் கப்பலில் பணியாற்றிக்கொண்டிருந்த தச்சுத்தொழிலாளிகள் 10 மணி நேர வேலை என்றொரு கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
1835ல் பிலடெல்பியாவிலும்,பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து உழைப்பாளிகளால் வேலை நிறுத்தம் செய்யப்பட்டது.
1877 ல் பென்சில்வேனியாவில் சுரங்கத்தொழிலாளிகளும், இரயில்வே தொழிலாளிகளும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
1886 ல் பல்வேறு மாநிலங்களில் தொழிலாளர் இயக்கங்களை ஒன்றினைத்து அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டதோடு 1886 மே 1 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறை கூவல் விடுத்தது. இதுவும் மே தினம் என்கிற உழைப்பாளர் நாள் உருவாக முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில்1856 ல் 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து மெல்போர்னில் கட்டிடத்தொழிலாளிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றனர்.
ரஷ்யாவில் 1895 க்கும் 1899க்கும் இடைப்பட்ட காலங்களில் பல நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் குறைவான நேரம் வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து நடைபெற்றன.
சிக்காக்கோவில்1886 மே 3அன்று ஒரு பிரபலமான நிறுவனத்தின் வாசலில் 3000க்கும் மேற்பட்ட உழைப்பாளிகள் கண்டனக்கூட்டம் நடத்திக்கொண்டிருக்கும்போது 4 தொழிலாளிகள் காவல் துறையினரால் சுடப்பட்டு பலியாயினர். இதைக் கண்டிக்கும் வகையில் மே 4 அன்று ஏமார்க்கெட் சதுக்கத்தில் 2500 தொழிலாளிகள் கலந்து கொண்டு மாபெரும் கண்டனக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும்போது திடீரென்று கூட்டத்திற்குள் வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டதில் காவல்துறையினரில் ஒருவர் பலியாகவே, உடனே காவல்துறை கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதோடு மட்டுமல்லாமல் தொழிலாளர் தலைவர்களை கைதுசெய்து வழக்கும் தொடுத்து 1886 மே21 அன்று 8 பேருக்கு தூக்குத்தண்டணையும் பெற்றுக்கொடுத்தனர்.
1887 ஆம் ஆண்டு அந்த 7பேரும் தூக்கிலிடப்பட்டனர் இவர்களின் இறுதி ஊர்வலத்தில் 5 இலட்சம் பேர் கலந்துகொண்டனர்.
8 மணி நேர வேலைக்கான போராட்டமும் சிக்காக்கோ தியாகிகளின் தியாகமும் தான் இன்று மே 1 அன்று உழைப்பவர் தினமாக வருடந்தோறும் அனுசரிக்கப்படுகிறது.
பாரீசில் 1889 ஜீலை 14 அன்று பாரீசில் 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் கலந்து கொண்டகூட்டத்தில் 8 மணி நேர வேலை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது எனவும் சிகாகோ சதியை இம்மாநாடு வன்மையாகக் கண்டிப்பதோடு 1890 மே 1 அன்றிலிருந்து அனைத்து நாடுகளிலும் தொழிலாளர் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது. இதுதான் ஆண்டுதோறும் மே 1 அன்று உலகம் முழுவதிலும் உழைப்பாளர் தினம் என்று கடைப்பிடிக்கப் படுகிறது.
இப்படி ஒரு நாளை உழைப்போர்க்கு அறிவித்ததால் மட்டும் உலகம் முழுவதும் தொழிலாளர்கள் படும் கஷ்டங்கள் முழுக்க முழுக்க தீர்ந்தபாடில்லை. மிகவும் பரிதாபத்துக்குரிய விஷயம் என்னவென்றால் இன்று வரை இன்னும் பல நாடுகளில் பல நிறுவனங்களிலும் தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் உழைப்பாளிகள் கொத்தடிமைகளாகவும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் மிகவும் பின்தங்கியவர்களாகவுமே நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் அடிப்படைப்பிரச்னைகள் இன்றுவரை தீர்க்கப்படவில்லை. அவர்கள் செல்லொணாத்துன்பங்களை சந்தித்து வருகின்றனர். சின்னஞ்சிறு அரும்புகள் குழந்தைத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக கொடுமைகளின் கூடாரத்தில் வாழ்ந்து வருகின்றனர். கல்வி மறுக்கப்பட்டு புத்தக சுமைகளை சுமக்கிற வயதில் கருங்கல் சுமைகளைத் தூக்குகின்ற அவல நிலை பல நாடுகளில் உள்ளன.
தாய்லாந்து போன்ற நாடுகளில் விபச்சாரம் போன்ற இழிவான செயலைக் கூட ஒரு தொழிலாக அரசே அங்கீகாரம் அளித்து இருக்கிறது. இந்தியாவின் சில மாநிலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
உழைப்பாளிகளுக்காக எப்படிப்பட்ட போராட்டங்கள் வேலை நிறுத்தங்கள் செய்யப்பட்டாலும் நடைமுறையில் உள்ள பொருளாதாரக் கோட்பாடுகளின் மூலம் முதலாளிகளாலும் ஆளும் வர்க்கத்தினராலும் உழைப்பாளிகளுக்கு தீர்வுகள் கிடைக்கப் போவதில்லை.
இவர்களெல்லாம் போராடுவதற்கு 1400 ஆண்டுகளுக்கு முன்னாலே உழைப்பாளிகள் எதற்காக பாடுபட்டார்களோ அவை அனைத்தையும் இஸ்லாம் வழங்கிவிட்டது. ஆகவே இஸ்லாத்தால் மட்டுமே அவர்களின் அடிப்படைப் பிரச்னைகளை தீர்க்க முடியும் இஸ்லாம் காட்டுகிற கொள்கைகளால் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரப் பொருளாதாரப் பிரச்னைகளைக் களைய முடியும்.
உழைப்பாளிகளை கண்ணியப்படுத்தி அவர்களை கௌரவப்படுத்தி அவர்களின் அடிப்படைப் பிரச்னைகளை முளையிலேயே கிள்ளி எறிந்து அவர் களின் உரிமைகளை 1400 ஆண்டுகளுக்கு முன்னாலேயே இஸ்லாம் வழங்கியிருக்கிறதென்றால் அது மிகைப்படுத்தப் பட்டதல்ல. இஸ்லாம் வழங்கும் மனிதாபிமானம் சார்ந்த பொருளாதார அடிப்படை உரிமைகளும் நபி(ஸல்)அவர்கள் வாழ்ந்து நடந்து கொண்ட விதமும் நடக்கச் சொல்லி போதித்த முறைகளும் உலகெங்கும் கடைப் பிடிக்கப் பட்டால் தொழிலாளர் பிரச்சனைகள் தடுக்கப்பட்டு வளர்ச்சிப் பாதையில் உலகம் நடைபோடும் வகையில் உற்பத்தி மேலோங்கும்.
இதோ இறைமறையும் நபி மொழிகள் நமக்குத்தரும் சான்றுகள் இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம்.
தொடரும் இன்ஷா அல்லாஹ்…
இபுராஹீம் அன்சாரி