நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அப்பா! பேரன் ஜாகிரு வந்திக்கிறான்..! 3

அதிரை-நிருபர்-குழு | Saturday, February 18, 2012 | , , , , ,


(அதிரை அப்பா, காலை ஸுபுஹு தொழுகைக்குப்பின் டீக்கடை வருவது வழக்கம்)

அப்பா: “அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்”

டீக்கடைக்காரர்: “அலைக்குமுஸ்ஸலாம், வாங்கப்பா......”

(சிறிது நேரத்திற்குப் பின் பேரனும், அனுடைய நண்பனுடன் அங்கே வந்து டீ சொல்கிறான்)

டீக்கடைக்காரர்:  “அப்பா.. உங்க பேரன் ஜாகிரு வந்திக்கிறான்… !”

அப்பா: “அப்படியா, ஜாகிருசேண்டு சொல்லு. இல்லாட்டி கோவச்சிகிடுவான் உள்ளே கூப்புடு. கேக்கரதக்கொடு.”

அப்பா:  “வாங்க, என்ன இங்கிட்டாலே…”

பேரன்: “டியூசனுக்குப் போறோம் அப்படியே ‘டீ’ குடிச்சிட்டுப் போவலாமுன்னுதான்......”

அப்பா: “ரெண்டு இடியாப்பந்தின்ட்டு ‘டீ’ குடிச்சா என்னா....?”

பேரன்: “வேணாம்ப்பா... ‘டீ’ போதும்..!”

அப்பா: “சரி அதுயாரு ஆமாத்துமா மொவனா.....?”

பேரன்:  “இல்லை, பத்தரூட்டு சேகரு. சுபுஹு தொளுவிட்டு இவஞ் சைக்கிள்ளே போவோம்.”

அப்பா: “அப்ப சரி, நா ஜாவியா திக்ருக்குப் போயிட்டு கடைத்தெருக்கு வந்துர்றேன். ஒன்கூட்டாளிட்டே சொல்லி ஒன்ன அங்கே விட்டுட்டுப் போச்சொள்ளு. திக்ரு முடிஞ்சு நா வந்து நிக்கேன்.. நீ வந்துடு, சரியா...?”

பேரன்:  “சரிப்பா நா வர்றேன்”


(குறிப்பிட்ட நேரம் கழிந்ததும் இருவரும் மார்க்கெட்டில் சந்தித்துக் கொள்கிறார்கள்)

அப்பா:  “என்ன இன்னும் மீனு ஒன்னும் வரல. இல்லாட்டி எறச்சி ஏதும் பாக்கலாம் வா !”

(இறைச்சி கடையிக்கு இருவரும் வருகிறார்கள்.)

கடைக்காரர்: “ வாங்கப்பா, யாரு உங்கப்பேரனா.....?”

அப்பா: “ஆமா ! கிலோ எவ்வளவு.. ?”

கடைக்காரர்: “நானூருப்பா !”

அப்பா: “சுபஹானல்லாஹ்’.. தலையே சுத்துது...”

பேரன்: “என்னப்பா ? சுகர், ரெத்தக்கொதிப்பு அளவைச் சொல்லிட்டாரா...? தலசுத்துதுறீங்க விலயத்தான் சொன்னாருப்பா !”

அப்பா: “இல்லடாப்பா, முன்னே ‘75 ரூபாக்கி’ வித்துக்கிட்டு இரிக்கிம்போது, திடீரிண்டு ‘100 ரூபாண்டவுடன்’ ஹொத்வா முடிஞ்சு மரைக்கா கூட்டம்ல்லாம் கூட்டுனாஹ. அதான் ஞாபகம் வந்துச்சு. இப்ப வுவ்ளோ நெருப்பாக்கீது”

பேரன்: “நெருப்பெல்லாம் வராது, அதான் எல்லாருஞ் சட்டி நெறைய பக்கத்திலேய தண்ணி வச்சிக்கிராங்களே !”

அப்பா: “சரி வா இப்ப மீனு வந்திருக்கும் பாக்கலாம்...”

தொடர்ந்து…

அப்பா: “இந்தா இந்த கொடுவாக்கண்ணுக்கு எவ்ளவு...?”

மீன்காரி: “320 ருவா கொடுங்க !”

அப்பா: “சரி, அந்த வவ்வாலோட அந்த பண்ணாவையும் போட்டு சொல்லு”

மீன்காரி::  “430.. வரும்... 400… ருவா கொடுத்துடுங்க”

அப்பா:  “என்ன மொம்மாப்துல்லா, வெல கேட்டா 4oo ,500 ங்கிராளுவ... ?

மொம்மாப்துல்லா: “அவ கழுத்தில போட்டிக்கிறதுக்கு வெல சொல்லியிருப்பா, மறுபடியும் போய் மீனுக்கு எவ்ளோவுண்டு கேளுங்க.!”

அப்பா: “நா வந்து ஒன்னட்டே கேட்டேனே..., அங்கென்னா கூட்டம் கொரலி வித்தையா....நடக்குது. ஆட்களெல்லாம் சுத்தி நிக்கிறாங்க...!”

மொம்மப்துல்லா: “க்கே......க்கே..க்கே.. இல்ல கொடுவா வாங்கி கூறு போடுறாங்க நீங்களும் போய் சேந்துக்கிடுங்க போங்க”

அப்பா: தம்பி வா... நா வாங்கித்தறேன் வூட்டுல போய் கொஞ்சம் பொறிக்கச் சொல்லிட்டு மீதிய ஆனம ஆக்கா சொல்லிடு, லுஹருக்கு நேரமாச்சு நா போறேன் நீனும் வந்துடு”

(அப்பா,பேரனிடம் கொடுவாபிஸ்கு வாங்கி கொடுத்து விட்டு லுஹர் தொளுவ நடைய கட்டிட்டாங்க.)

-ZAEISA

யூசுப் எஸ்டஸ் இஸ்லாத்தைத் தழுவிய சம்பவம் 6

அதிரைநிருபர் குழு | Friday, February 17, 2012 | , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சாமாதானமும் நிலவுவதாகஆமின்
யூசுப் எஸ்டஸ் (Yusuf Estes), நம் தலைமுறையின் மிகச் சிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர். மிக நகைச்சுவையாக பேசுபவர், அதே சமயம் கண்கலங்கவும் வைத்து விடுவார். மிக அழகிய முறையில் இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதில் வல்லவர். இவரால் இஸ்லாத்தை தழுவியோர் ஏராளமானோர். அல்ஹம்துலில்லாஹ்
இவர் இஸ்லாத்தை தழுவிய விதம் பற்றி இவர் சொல்ல நான் கேட்ட சில தகவல்களை இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்இன்ஷா அல்லாஹ்
யூசுப் எஸ்டஸ் அவர்கள் அமெரிக்காவின் டெக்சஸ் (Texas) மாகாணத்தை சேர்ந்தவர் (ஜார்ஜ் புஷ்சும் இந்த மாகாணத்தை சேர்ந்தவர் தான்). கிருத்துவ மத போதகராக இருந்தவர் (Preacher).
இவர் வாழ்வின் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்திய அந்த ஆண்டு 1991. யூசுப் எஸ்டஸ் அவர்கள் செல்வ செழிப்பான குடும்ப பின்னணியைக் கொண்டவர். இவரும் இவரது தந்தையும் பல தொழில்களை வெற்றிகரமாக நடத்திவந்தவர்கள். தொழிலை கவனித்துக்கொண்டே கிருத்துவத்தையும் போதித்து வந்தார். இறைபக்தி அதிகம் உடையவர்.
1991 ஆம் ஆண்டு, ஒரு வியாபார விஷயமாக எகிப்திலிருந்து வரும் முஹம்மது என்பரை சந்திக்க வேண்டிய நிர்பந்தம். அதுதான் அவர் வாழ்வை திருப்பிப்போட்ட சமயமும் கூட.
அப்போது வரை யூசுப் எஸ்டஸ் அவர்கள் இஸ்லாத்தை பற்றி எண்ணியிருந்தது 
முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், பாலைவனத்தில் இருக்கும் ஒரு கருப்பு வடிவத்தை வணங்குபவர்கள், தினமும் ஐந்து முறை தரையை முத்தமிடுபவர்கள்இது தான் இஸ்லாத்தை பற்றி நான் அறிந்திருந்தது
“1991 ஆம் ஆண்டின் முற்பகுதி, எகிப்திலிருந்து வரும் முஹம்மது என்பவருடன் தாம் வியாபார ஒப்பந்தம் செய்யப்  போவதாக என் தந்தை என்னிடம் கூறினார். என்ன முஸ்லிமுடனா?, நான் மறுத்து விட்டேன். ஆனால் என் தந்தை வேறு வழி இல்லையென்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இது வியாபாரம் என்பதால் என்னால் முஹம்மதை நிராகரிக்க முடியவில்லை. சரி அவருடன் சேர்ந்து பணியாற்றுவோம். உண்மையான என்னுடைய மார்க்கத்தையும் அவருக்கு போதிப்போம். இதுதான் நான் முதலில் நினைத்தது
நான் அவரை சந்திக்க தயாரானேன். ஏசு என் கடவுள் (Jesus is my Lord) என்று எழுதப்பட்டிருந்த ஒரு தொப்பியை அணிந்துக்கொண்டு, கழுத்தில் ஒரு பெரிய சிலுவையை அணிந்து கொண்டு, கையில் பைபிளை வைத்துக்கொண்டு அவரை வரவேற்க காத்திருந்தேன்.
முஹம்மதும் வந்தார். நான் அதிக நேரம் வீணாக்கவில்லை
உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?
ஆம்
ஆச்சர்யமான பதில். நான் தொடர்ந்தேன். இப்ராகிம்(அலை), இசாக்(அலை), இஸ்மாயில்(அலை) என்று பைபிளில் இருக்கும் நபிமார்களிடம் இருந்து ஆரம்பித்தேன். அதன் பிறகு நான் பலமுறை அவருடன் என் மார்க்கத்தை பற்றி பேசியிருக்கிறேன், விவாதித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் தான் வென்றதாக நினைப்பேன். ஆனால் இன்றோ, அதைப் பற்றியெல்லாம் நினைக்கும் போது, உண்மையில் முஹம்மது தான் வென்றார் என்பது புரிகிறது.
முஹம்மதின் பண்புகள் என்னை மிகவும் கவர்ந்தன. முஹம்மதை அவர் வழியில் விட்டுவிடுமாறு என் தந்தை என்னிடம் கூறினார். என்ன, இப்படி ஒரு பண்புள்ளவர் ஒரு  தவறான கொள்கையில் இருப்பதா? இல்லை.. இவரை எப்படியாவது என் மதத்திற்கு அழைத்து வருவேன்.
இதற்கு நான் முதலில் செய்தது, அவரை என் வீட்டிலேயே குறைந்த வாடகைக்கு தங்க வருமாறு அழைத்தது. பணம் முக்கியமல்ல, அவருக்கு நான் கொடுக்கக் கூடிய போதனை தான் முக்கியம். முஹம்மதும் எங்களுடன் தங்க ஒப்புக்கொண்டார்.
இது நடந்து கொண்டிருந்த அதே வேலையில், என்னுடைய நண்பரான மதகுரு ஒருவர்(Priest, father) மாரடைப்பு காரணமாக மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தினமும் சென்று சந்தித்து வருவேன். அப்போது அந்த அறையில் தங்கிருந்த பாதர் பீட்டர் ஜகோப்ஸ் (Father Peter Jacobs) அவர்கள் எனக்கு நன்கு பழக்கமானார். அவரும் மாரடைப்பு காரணமாக தான் அந்த மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நலமாகி வந்தவுடன் அவரை என்னுடன் வந்து வசிக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் எங்களுடன் வசிக்க சம்மதித்தார்.
இதுதான் நான் எதிர்பார்த்த நேரம். மாட்டினார் முஹம்மது. இப்போது ஒரே வீட்டில் நான், என் மனைவி, என் தந்தை மற்றும் பாதர் பீட்டர் ஜகோப்ஸ், எல்லோரும் கிருத்துவத்தை பற்றி நன்கு அறிந்தவர்கள். இனி முஹம்மதை எங்கள் வழிக்கு கொண்டு வந்து விடவேண்டியதுதான்.
ஒவ்வொரு நாளும், இரவு உணவின் போது நாங்கள் அனைவரும் முஹம்மதை சுற்றி அமர்ந்து கொள்வோம். கேள்விகளை தொடுப்போம்.
பல கேள்விகள்
நாங்கள் அனைவரும் ஒவ்வொரு விதமான பைபிளை வைத்திருப்போம், உதாரணத்துக்கு நான் RSV (Revised Standard version) பைபிள், என் தந்தை கிங் ஜேம்ஸ் பதிப்பு (King James version) பைபிள் என்று பல பைபிள்கள்
கிருத்துவத்தை பற்றி தெரியாதவர்களுக்கு இங்கு ஒரு தகவல். கத்தோலிக்க கிருத்துவர்களின் பைபிள் 73 புத்தகங்களை கொண்டது. protestant கிருத்துவர்களின் பைபிள் 66 புத்தகங்களை கொண்டது.
ஆனால் முஹம்மதோ ஒரே ஒரு புத்தகத்தை கொண்டு வந்து வைத்தார். அது கடவுளிடமிருந்து வந்தது என்றும், அன்றிலிருந்து இன்றுவரை மாற்றமடையாதது என்றும் கூறினார். இது எனக்கு ஆச்சர்யமான தகவல்.
பிறகு ஒருமுறை கிரித்துவத்தை (Trinity, it is nothing but a christian belief that teaches the unity of Father, Son, and Holy Spirit as three persons in one Godhead). பற்றி விவாதம் திரும்பியது. முஹம்மது, திரித்துவத்தை லாஜிக்காக நிரூபியுங்கள் என்று கேட்டார்
என்ன லாஜிக்கா? மதம் என்பது நம்பிக்கை சம்பந்தப்பட்டது, இங்கு லாஜிக்கெல்லாம் பார்க்ககூடாது
எங்கள் மார்க்கத்தில் இரண்டும் உண்டு….
இது போன்ற பதில்கள் தான் எங்களை திக்குமுக்காட செய்தனநான் வீம்புக்காக அவருடன் வாதம் செய்துகொண்டிருந்தேன், ஆனால் அவருடைய பதில்களில்தான் அதிகம் அர்த்தமிருந்ததுஇப்படியே சில நாட்கள் சென்றன..
ஒருமுறை பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள், முஹம்மதிடம், தன்னை மசூதிக்கு அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார். சென்று வந்த அவரிடம்
பாதர்அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? பலி கொடுத்து இறைவனை வணங்கி கொண்டிருந்தார்களா?
இல்லை..அப்படியெல்லாம் ஒன்றுமில்லைவந்தார்கள், தொழுதார்கள், சென்றுவிட்டார்கள்
என்ன அவ்வளவுதானா….எந்த மாதிரி பாடல்களை பாடினார்கள்? எந்த மாதிரி இசைக்கருவிகளை வைத்திருந்தார்கள்?
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை?
என்ன இசைக்கருவிகள் இல்லாமல் கடவுள் வழிப்பாடா?
இவையெல்லாம் எனக்கு வியப்பை தரும் தகவல்கள். முஸ்லிம்களின் கடவுள் வழிபாடு என்பது மிகவும் எளிதான, வலிமையான ஒன்று என்பதை புரிந்துக்கொண்டேன்.
இஸ்லாம் என்னை நெருங்கி வந்துக்கொண்டே இருந்தது. இப்போது என் மதத்தில் பல கேள்விகளை கேட்க ஆரம்பித்தேன்
சில தினங்களுக்கு பிறகு, பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் மறுபடியும் முகம்மதுடன் மசூதிக்கு சென்றார். அவருக்காக நான் காத்திருந்தேன். இந்த முறை என்ன புது செய்தி கொண்டுவருவார் என்று பார்ப்பதற்காக.
கார் வந்தது, இருவர் இறங்கினார்கள். ஒருவர் முஹம்மது, அது எனக்கு நன்றாகவே தெரிந்தது, யார் அந்த மற்றொருவர்?, நீண்ட ஆடையுடன், தலையில் குல்லா அணிந்துக்கொண்டு, யாரவர்?…
உற்று கவனித்தேன்….என்னால் நம்பமுடியவில்லைபாதர் பீட்டர் ஜகோப்ஸ்சா அது? ஆம் அவரேதான்என்ன, அவர் இப்போது முஸ்லிமா? அமெரிக்கா, மெக்ஸிகோ என்று நாடு நாடாக சென்று கிருத்துவத்தை போதித்தாரே, அவரா இவர்? அதிர்ச்சியில் உறைந்தேன். 
பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் என்னிடம் வந்தார்,
நிச்சயமாக இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதரென்றும் நான் சாட்சியம் கூறுகிறேன் 
நான் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. என்னிடத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது அது.
மாடியில் இருந்த என் மனைவியிடம் சென்றேன்.
கவனித்தாயா?, இப்போது பாதர் பீட்டர் ஜகோப்ஸ் ஒரு முஸ்லிம். இஸ்லாமிய மார்க்கம் நான் நினைத்தது போல் இல்லை, அது எனக்கு நல்ல மார்க்கமாகவே படுகிறது.
எனக்கு உங்களிடமிருந்து விவாகரத்து வேண்டும்
ஹேய்இரு………………இரு………………நான் சொன்னதை தவறாக எடுத்துக்கொண்டாயா? நான் முஸ்லிமாகவில்லை, அவர்தான் முஸ்லிம். நான் இன்னும் கிருத்துவன் தான். அப்படியே நான் முஸ்லிமாகினாலும் நீ என்னுடன் தாராளமாக வாழலாம், ஏனென்றால் ஒருமுறை முஹம்மது சொல்ல கேட்டிருக்கிறேன், இஸ்லாமில் ஒரு முஸ்லிம் ஆண் ஒரு கிருத்துவ பெண்ணை திருமணம் செய்யலாம். ஆனால் ஒரு முஸ்லிம் பெண்தான் கிருத்துவ ஆணை திருமணம் செய்யக்கூடாது
அதனால் தான் கேட்கிறேன் எனக்கு விவாகரத்து வேண்டுமென்று
என்ன?
ஆம், முஸ்லிம் பெண்ணாகிய என்னால் கிருத்துவ ஆணாகிய உங்களுடன் வாழ முடியாது
அதிர்ச்சி மேல் அதிர்ச்சிநான் நிதானத்திலேயே இல்லைசிறிது நேரத்தில் சுதாரித்துக்கொண்டேன்
இருஅவரசப்படாதே, உன்னிடம் ஒன்றை நான் சொல்ல வேண்டும். இஸ்லாம் எப்போதோ என் மனதில் வந்து விட்டது. நானும் முஸ்லிம்தான்..
என் மனைவி என்னை நம்பவில்லை.
ஏன் இப்படி மாற்றி மாற்றி பேசுகிறீர்கள், தயவு செய்து இங்கிருந்து வெளியேறிவிடுங்கள்
நான் வெளியே வந்து விட்டேன். ஒன்றும் புரியவில்லை. ஒரே குழப்பம். தூக்கம் சரிவர வரவில்லை. எழுந்து சென்று முஹம்மதை எழுப்பி வெளியே அழைத்து சென்றேன். ஏதேதோ பேசுகிறேன் அவரிடம், ஒன்றும் புரியாமல்இப்போதும் அவர் பொறுமையாகவே பேசினார், விளக்கினார்.
சுப்ஹு நேரம் நெருங்கி விட்டது, முகம்மதுடன் நானும் பள்ளிக்கு சென்றேன். அந்த பிளைவூட் தரையில் சஜிதா செய்தேன்.
இறைவா எனக்கு நல்வழி காட்டு….
இருவரும் வீட்டிற்கு வந்தோம். முஹம்மது மற்றும் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். நான் சஹாதா சொன்ன சிறிது நேரத்தில் என் மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். சுப்ஹானல்லாஹ்
என் தந்தையிடம் விஷயத்தை சொன்னேன்.
நான்தான் அப்போதே கூறினேனே இஸ்லாம் ஒரு அழகிய மார்க்கமென்று. எனக்கு நீ இஸ்லாத்தில் இணைந்தது மகிழ்ச்சிதான்.
dad,….. அப்போ நீங்கள்?
இந்த கேள்விக்கு அவரிடமிருந்து பதில் வரவில்லை. மாதங்கள் சென்றன. எப்போதும் என்னை மசூதியில் விட வரும் என் தந்தை சில நாட்களாக என்னுடன் சேர்ந்து தொழ ஆரம்பித்தார்.
பலரும் என்னிடம் வந்து கேட்க ஆரம்பித்தனர்
எப்பொழுது உங்கள் தந்தை இஸ்லாத்தை தழுவினார்?
நான் விளக்கமளித்தேன். ஒரு சமயத்தில் இந்த கேள்விகள் அதிகமாகவே, நான் அவர்களிடம்,
நீங்கள் ஏன் அவரிடமே இந்த கேள்வியை கேட்கக்கூடாது?
அவர்கள் அவரிடம் சென்று அந்த கேள்வியை கேட்டனர்
அவர் கூறினார் கடந்த ஒரு வருடமாக….”
சுப்ஹானல்லாஹ்நான் இப்போது, நடந்ததையெல்லாம் திரும்பி பார்க்கிறேன். ஆம் முஹம்மது வென்றுவிட்டார். ஆனால் நானும் வென்றுவிட்டேன். இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதினால்…”
யூசுப் எஸ்டஸ் அவர்களுடைய இந்த வரலாற்றை அவர் சொல்ல நீங்கள் கேட்க வேண்டும். மிகுந்த நகைச்சுவையுடனும், அதே சமயம் உணர்ச்சிபூர்வமாகவும் சொல்லுபவர்.
இப்போது யூசுப் எஸ்ட்ஸ் அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் சென்று பலரையும் இஸ்லாத்தில்பால் அழைத்து வருகிறார். சென்னைக்கும் ஒருமுறை வந்திருக்கிறார். பல இணையதளங்களை நடத்திவருகிறார்.
இறைவன் இவருக்கு தொடர்ந்து நல்ல உடல் நலத்தையும், மன நலத்தையும் கொடுப்பானாகஆமின்
இவருக்கு ஒரு செல்லப்பெயர் உண்டுஅது “ATHEIST KILLER” என்பதுஏன்? இவரது சில வீடியோக்களை பார்த்தால் தெரியும்
இறைவன் நம் எல்லோருக்கும் நல்வழி காட்டுவானாகஆமின்
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்… 
References:
1. Sheikh Yusuf Estes talk on “priests and Preachers Coming to Islam” – for Islam today.
2. Sheikh Yusuf Estes interview on “How he came to Islam” with eddie – for thedeenshow.
3. Sheikh Yusuf Estes “How Yusuf estes came to Islam” – Islamtomorrowdotcom/yusuf_story.htm
உங்கள் சகோதரன்

-ஆஷிக் அஹ்மது. அ

நன்றி: http://www.ethirkkural.com/2010/03/blog-post_09.html

அடிப்படை தேவைகளுக்கு ஆலாய்பறக்கும் அவலம்... 30

அதிரை-நிருபர்-குழு | Thursday, February 16, 2012 | , , , , ,


அதிராம்பட்டினம் பேரூராட்சி ( பேருக்கு ஊராட்சி?) அறிவிப்பு என்று ஒரு அறிவிப்பை வலைதளத்தில் படிக்கும் துர்பாக்கியம் ஏற்பட்டது. அதன்படி மின்சார வெட்டின் காரணமாக இனி ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் குடிநீர் விநியோகிக்கப்படும் என்றும் அதன்படி ஊரார் தங்களது தேவைகளை திட்டமிட்டுக்கொள்ளவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“ சொல்லத்துடிக்குதடா நெஞ்சம் –வெறும் சோத்துக்கும் வந்ததிந்த பஞ்சம் “ – என்று எங்கோ யாரோ பாடியதை கேட்டு இருக்கிறோம். இன்றோ “ கூறத்துடிக்குதடா நெஞ்சம் இந்த குடிநீருக்கும் வந்ததடா பஞ்சம்” என்றுதான் பாடவேண்டி இருக்கிறது.

என்ன குறை?

தண்ணீருக்கும்,மின்சாரத்துக்கும் அல்லாடவேண்டிய அவசியம் தமிழ்நாட்டுக்கு ஏன் வந்தது.?

"காவிரி தென்பெண்ணை பாலாறு –தமிழ்
கண்டதோர் வைகை பொதிகை நதி – என
மேவிய ஆறுகள் பல ஓட –திரு
மேனி செழித்த தமிழ்நாடு “

என்று திருவாளர்கள் சிங்காரம்பிள்ளையும், தாமஸ், இராமதாஸ் ஆகிய தமிழ் ஆசிரியர்களும் பாடம் நடத்தி படித்து இருக்கிறோமே அப்படி எல்லாம் வளங்கள் இருந்தும் அவைகள் வகையாய் நிர்வகிக்கப்படாமல்தானே  (RESOURCES MANAGEMENT) இப்படி அவலநிலைகள் ஏற்படுகின்றன என்று மனநிலை சரியில்லாதவர் கூட கேட்பார். 

ஏன் இந்த நிலை? இதுதான் கதை.

சமீபத்தில் தமிழக அரசு புதிய மின் உற்பத்தி திட்டங்களுக்காக 5995 கோடி ஒதுக்கி அறிவித்தது. அதன் பிறகு இதுவரை மின் உற்பத்தியில் இருந்த நான்கு தனியார் நிறுவனங்கள் தங்களது மின் உற்பத்தியை நிறுத்திவிட்டன. இதனால் இழப்பு 988 மெகாவாட் மின்சாரமாகும். சொல்லப்பட்ட காரணம் தங்களுக்கு தரவேண்டிய நிலுவைத்தொகையை தராமல் புதிய திட்டங்களுக்கு பணம் ஒதுக்கியதை கண்டித்து என்பதாகும். தனியார் ஒன்று கூடி அரசை நிர்ப்பந்தப்படுத்த எடுத்த ஆயுதம்.

இதன்படி ஜி. எம். ஆர் 196 மெகாவாட், பிள்ளைப்பெருமாள் நல்லூர் 330 மெகாவாட், மதுரை பவர் 106 மெகாவாட், சாமல்பட்டி 105  மெகாவாட் ஆகியவை உற்பத்தியை நிறுத்திவிட்டு பழைய மளிகை பாக்கியை தந்தால்தான் மீண்டும் உற்பத்தி தொடங்க முடியும் என்று அலியார் காக்கா கடை ஸ்டைலில் (இப்போதும் இருக்கிறதா?) அடம் பிடித்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்துமே அரசியல் செல்வாக்கு உடையவர்களுடையதுதான். கடந்த ஆண்டுகளில் இதன் மூலம் 250 கோடி ரூபாய் வரை இலாபம் பார்த்தவைகள்தான்.  நெய்வேலியில் இருந்து மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது. கூடங்குளம் குற்றுயிரும் குலை உயிருமாக கிடக்கிறது. அரசுகளின் திட்டமிடலுக்கு ஏற்பட்ட அண்மைக்கால அவமானம் தரும் உதாரணம்.

அதுமட்டுமல்ல,

தமிழ்நாட்டில் உள்ள 14 அணைகளில் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சரிவர தூர்வாரப்பட்டால் அதன்பின் அதிகரிக்கும் நீர் கொள்ளளவை வைத்து 2000  மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். இன்றோ வெறும் 800  மெகாவாட் மட்டுமே தயாரிக்க முடிகிறது. ஆகவே இருக்கிற மூலவளங்களை சரியாக பயன்படுத்திக்கொள்ளாமை (LACK OF PROPER UTILIZATION OF RESOURCES) யும் அரசுத்தரப்பை நோக்கி நம் விரலை நீட்டச்செய்கின்றது.

அத்துடன் மூலவளங்களை பயன்படுத்துவதில் முன்னுரிமை அளிப்பது. நம்மிடம் 100 ரூபாய் இருப்பதாக வைத்துக்கொள்வோம். நமது கடையில் சில சாமான்கள் வாங்கிப்போட வேண்டும், பசிக்கிறது-  சாப்பிடவேண்டும், தையல் கடையில் தைக்ககொடுத்த துணி தயாராக இருக்கிறது அதை வாங்க வேண்டும், ஒரு சர்கஸ் பார்க்க வேண்டும் என்று ரெம்ப நாளாக ஆசை இன்றுடன் அந்த சர்கஸ் கடைசி என்று வேறு போட்டிருக்கிறான். நாம் என்ன செய்வோம்? எந்த செலவுக்கு முக்கியத்துவம் தருவோம்? இருப்பதோ 100 ரூபாய்தான். இதைத்தான் நிர்வாகத்தில் PRIORITIZE  - முன்னுரிமைப்படுத்துதல் என்று சொல்வார்கள். இருக்கிற மின்சாரத்தை தொழில்சாலைகளுக்கு, விவசாயத்துக்கு, சமுதாய வாழ்வுக்கு, பொழுதுபோக்குக்கு என்று பயன்படுத்துவதில் முன்னுரிமைப்படுத்தி பயன்படுத்த வேண்டும். (PRIORITIZE THE UTILIZATION OF RESOURCES).

அப்படியானால் என்ன செய்யலாம் . பொழுதுபோக்கு தலையில் கைவைக்க வேண்டியதுதான்.

இன்று தமிழகம் முழுதும் ஏறக்குறைய 2 கோடி தொலைக்காட்சிப்பெட்டிகள் இருப்பதாக ஒரு கணக்கு. இந்த தொலைக்காட்சிப்பெட்டிகள் ஒன்றுக்கு 100 வாட் மின்சாரம் என்று வைத்துக்கொண்டாலும் 2000 மெகாவாட் செலவாகிறது. மின்சார நிலை சீர்பெறுகிறவரை தொலைக்காட்சிப்பெட்டிகளை குறிப்பிட்ட நேரங்களுக்காவது  பயன்படுத்தக்கூடாது என்று ஒரு கட்டுப்பாடு விதிப்பதைப்பற்றி அரசு பரிசீலிக்கலாம்.  குடிக்கவே தண்ணீர் இல்லை படுக்க பஞ்சு மெத்தை வேண்டுமா? அரசு அப்படி கட்டுப்பாடு விதிக்குமா ? ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, உதிரிக்கட்சி, உளுத்த கட்சி, பாசகட்சி, படுத்தகட்சி, தளர்ந்த கட்சி, தள்ளாடும் கட்சி இப்படி எல்லாகட்சிகளுமே தங்களுக்கென்று தனி தொலைக்காட்சிகளை (தொல்லைக்காட்சிகளை?) வைத்து விளம்பரத்தில் இலாபம் சம்பாதிக்கும் நிலையில் இது நடக்குமா? இதை அமுல்படுத்த யாருக்கும் தைரியம் உண்டா?

“அடிக்கிற தண்ணிக்கு அங்கங்கே கடை இருக்கு
குடிக்கிற தண்ணிக்கோ குடமெல்லாம் தவமிருக்கு”

என்று ஒரு கவிஞன் புலம்புகிறான். இன்று குடிநீரை முறை வைத்து விடவேண்டுமென்று திட்டம் தீட்டுபவர்கள், ஊர் முழுதும் பரவிக்கிடக்கும் மதுக்கடைகளையும், அத்துடன் இணைந்த பார்களையும், இரவு களியாட்டங்கள் நடத்தும் விடுதிகளையும், சூதாட்ட விடுதிகளையும் குறைந்தபட்சம் இரண்டாவது காட்சி திரைப்படத்தையும் மின்சாரநிலையை காரணம் காட்டி மூடுவார்களா?   

வளைகுடா நாடுகளில் காவிரியோ, தென்பெண்ணையோ, பாலாறோ, வைகையோ ஓடவில்லை. ஆனாலும் அடிப்படைதேவைகளான தண்ணீருக்கும் ,மின்சாரத்துக்கும் தட்டுப்பாடு என்பதே தெரியாமல் மூலவளங்களின் நிர்வாகம் கோலோச்சுகிறது. பாலைவனத்தில் இல்லாத பஞ்சம் பாலாறு ஓடும நாடுகளில், வற்றாத ஜீவனதிகள் பாயும் நாடுகளில் வரக்காரணம் மிக மிக மோசமான நிர்வாகம்தான். (LACK OF RESOURCES MANAGEMENT). என்பதை அரை வேக்காட்டு அரசியல்வாதிகள் கூட ஒப்புக்கொள்வார்கள்.

நாடு சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளாகிவிட்டன. இன்னும் மக்களின் அடிப்படை இன்றியமையா தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. இன்சாட்டுகளை ஏவிவிட்டு, இருக்கும் மூலவளங்களையும்  காலி செய்கிறோம். மண்ணில் இருக்கிறவன் குடிக்க தண்ணீர் இல்லாமலும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்க மின்சாரம் இல்லாமலும் சாகக்கிடக்கிறான் சந்திரனுக்கு ஆள் அனுப்புவது அவசியமா? “கும்பி உருகுது! குடல் கருகுது! குளு குளு ஊட்டி ஒரு கேடா?” என்று அறுபதுகளில் ஒரு ஆட்சித்தலைவரைப்பார்த்து ஒரு அரசியல் தலைவர் கேட்டார். இன்றுவரை இதற்கு மாற்றம் உண்டா? குறைந்தபட்ச தேவையான குடிதண்ணீர் கூட தரமுடியாத அரசுகள் வேறு என்ன தந்துவிடும்? விளக்கெரிக்க மின்சாரம் இல்லை வெறும் வார்த்தைகள் வல்லரசு ஆக்கிவிடுமா?

-இபுராஹீம் அன்சாரி

வாழ்க்கையின் வலக்கரம்.. ! 25

அதிரை-நிருபர்-குழு | Wednesday, February 15, 2012 | , , , ,

புன்னகைத்துக் கொண்டே
புலர்ந்தது பொன்நாள் - தன்னை
அலங்கரித்துத் தானே
அலர்ந்தது அந்நாள்!

கண்டு வந்த கனவுகளெல்லாம்
கைகூடிய சுபவேளை
கல்யாணச் சேலையில் நீ
கற்கண்டு ஆலை

துப்பட்டி முக்காட்டில்
தூயவள் உன்முகம்
மல்லிகைப் பூவுக்குள்
ரோஜாப்பூப் புதையல்

வலக்கரம் பிடித் தென்னோடு
வாழவந்த நாள் முதல்
வாழ்க்கையும் எனக்கு
வசப்பட்ட தென் னன்பே

கல்யாண நாள்முதல்
காதலித்து வாழும்நான்
காணாத பொழுதுகளில்
பேதலித்துப் போகின்றேன்

கணினி கருவறைபோல் என்
காதலைச் சேமித்தாய்
தந்தை எனும் மென்னுயிரைப்
பதிவிறக்கம் செய்து தந்தாய்

ஆணென்று என்னை
அறிவித்தது உன் தாய்மை
தேனென்று வாழ்வை
தெரிவித்தது உன் நேர்மை

விடிகின்ற நாட்களெல்லாம்
விழிக்கின்றேன் உன் முகத்தில்
விழிகளுக்குள் எனைவைத்து
வீடு விருத்தி செய்கின்றாய்

என் பெயரை அருமையாய்
யாராரோ அழைத்தாலும்
உன் மகளின் தந்தை என
நீ விளிக்க உளம் ரசிக்கும்

தடுமாறி விழநேர்ந்தால்
தாங்கிநீ தோள்தருவாய்
இடம் மாறி வாழும்போதும்
தொடராக உடன் வருவாய்

ஆலம் விழுதுகள் தொங்க
அகிலத்தில் விருட்சமானேன்
நீர் உரிஞ்சி நிரம்பத் தரும்
வேர் அன்றோ நீ எனக்கு

கவலைகள் எத்தனையோ
கனம்கொண்டு அழுத்தினாலும்
கவனமாய்க் கரை சேர்த்த
கப்பலன்றோ நீ எனக்கு

மேக மெனும் புனைபெயரில்
மிதக்கின்றது மழை
மின்னலில்லா இடியில்லா மென்
சாரலன்றோ நீ எனக்கு

வார்த்தைகளைக் கூர் சீவி
வீழ்த்துகின்ற உலகினிலே
உயிரெடுத்து உடுத்தி வைத்த
கவசமன்றோ நீ எனக்கு

உன்னைக் கைதுசெய்து
உளச்சிறையில் அடைத்து வைத்தேன்
கைதியின் ராஜ்ஜியம்தான்
காலமெல்லாம் நடக்கிறது

உலகைப் படைத்தவனே எனக்கு
உன்னையும் கொடுத்தான்
அன்னையைத் தவிர்த்த உலகில்
உன்னை யார் அன்பில் வெல்ல?

காலங்கள் கடந்து போகும்
கனவெல்லாம் காரியமாகும்
கண்மூடும் கனம் வரை-உன்
கைகோர்த்து நான் நடப்பேன்!

-சபீர்

படிக்கட்டுகள்... ஏற்றம் - 6 21

ZAKIR HUSSAIN | Tuesday, February 14, 2012 | , , ,


சிலருக்கு தமது இலக்கின் மீதான பிடிமானம் தமிழ்நாட்டு மின்சாரம் மாதிரி நிரந்தரமற்ற சூழ்நிலையில் இருக்கும். இதன் காரணம், அவர்கள் ஒரு குறிக்கோளை நிர்ணயித்தபோதே அது அவர்களுடைய ஒரிஜினல் வெர்ஷன் இல்லை.

# "என்னங்க.... உங்க கண்ணு காண பொறந்தவன்... தோப்பு,வயல், பில்டிங் நு வாங்கி கிட்டே போறான்...நீங்களுந்தான் வெளிநாட்டுக்குப் போனிய...அப்படி ஒன்னும் நீங்க சூட்டிகையா கிழிச்ச மாதிரி தெரியலையே.

# எல்லோரும் முன்னேரனும்னு சொல்றாங்க அதனாலெ நானும் முன்னேறனும். அப்படி முன்னேரலேனா என்னைய தப்பா நினைப்பானுங்களே.

ஒப்பீடுகளால் ஒரு விசயத்தை சாதிக்க முடியாது என நான் சொல்லவில்லை. ஆனால் அது நிரந்தரமில்லை. இன்னொருவனை நான் ஓவர்-டேக் செய்ய நினைக்கிறேன், செய்து விட்டேன், பிறகு...???.

ஆக ஈகோவுக்கு சாப்பாடு போட்டு வளர்க்கும் சம்பிரதாயங்கள் வெள்ளைக்காரர்களின் படிப்பு. அதனால் தான் “You can Do it, I can do it”  என்று கத்தும் எந்த பயிற்சியும் வெகுநாட்கள் நின்று பிடிப்பதில்லை. தனி மனித முன்னேற்றத்துக்கு யார் மனதையும் புண்படுத்தாத சூழல் எப்போதும் நிரந்தரம். சாதித்த பிறகும் அதில் நிம்மதியும் இருக்கும். ஆக ஒப்பீடு யாருடன் இருக்க வேண்டும்?

நிச்சயம், நம்மோடுதான் !

இரண்டு வருடத்துக்கு முன் நம் மாத வருமானம் எவ்வளவு?. இப்போது எவ்வளவு? அதேதானா? இல்லை குறைவா? முன்னேற்றமில்லாத வருமானம் கால ஓட்டத்தில் நிச்சயம் பிரச்சினைகளைத் தரும். அப்படியானால் என்ன செய்ய வேண்டும்.

பொறுப்பை நீங்கள் எடுத்துக்கொண்டால் உங்கள் குடும்பம், உங்களைச் சார்ந்தவர்களுக்கு நல்லது. If you born as a poor it could be a fate. But in this world opportunities are given to you to change the fate.

சில சமயங்களில் நாம் எப்படியிருக்கிறோம் என்று ஒரு சுய பரிசோதனை இல்லாமல் நிதர்சனத்தோடு மல்லுக்கு நிற்பதும் காரணமாகும்.

Passing Judgments

மனிதனின் 'மைன்ட்' தொடர்ந்து தீர்ப்புவழங்கிக் கொண்டிருக்கும் கருவி. இறைவன் உங்களுக்குக் கொடுத்தது BRAIN,  நீங்கள் உங்கள் சூழ்நிலைகளில் உருவாக்கி கொண்டது MIND. அந்த மைன்ட் தான் பெரும்பாலான விசயங்களில் காலை வாரி விடும் எதிரி.

எந்த சூழ்நிலை, எந்த மனிதர்கள் யாரைப்பார்த்தாலும் நமது மைன்ட் தன்னை ஓர் அறிந்த சூழலுக்குப் பழக்கிக்கொள்ளும். அதனால்தான் ஒருவரைப் பார்த்தவுடன் நீங்கள் இந்த ஊரா, எந்த பள்ளியில் படித்தீர்கள்? எனக்கு ஒருவரைத்தெரியும் [உங்கள் தெருவில்] அவர் உங்களுக்குச் சொந்தமா? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை நாம் தொடுக்கிறோம். இதற்கு காரணமும் ஒரு ஜட்ஜ்மென்ட்டுக்கு வருவதற்குத்தான்.

நமது ஜட்ஜ்மென்ட்டில் வாழ்வது உண்மையுடன் தொடர்பு அற்றவர்களாகப் போவதற்கு அதிக சான்ஸ் இருக்கிறது.

நிகழ்வு: ஒரு கண்ணாடி கிளாசை உங்கள் பிள்ளை போட்டு உடைத்து விட்டது உங்கள் வீட்டில்…..

ரியாக்சன் 1. "நல்ல வேளை காலில் விழவில்லை"
ரியாக்சன் 2. "ஒழுங்கா கையிலெ பிடிக்க தெரியாது?.."
ரியாகசன் 3. "உனக்கு எப்ப பார்த்தாலும் இதான் வேலை!!"

இதில் உண்மை நிலை என்ன?

"ஒரு கிளாஸ் விழுந்து உடைந்து விட்டது", அவ்வளவுதான்... இதற்குப் போய் ஏன் இஞ்சி, பூண்டு, வெங்காயம் எல்லாம் போட்டு தாளிக்க வேண்டும்?

இதை நான் எழுதக்காரணம் நம் தொழிலில் /  வேலையில் / குடும்பத்தில் இப்படித்தான் பிரச்சினை எது என்பது அறியாமல் பல முடிவுகளை நாம் எடுக்கிறோம். சென்டிமென்டையும் தொழிலையும் ஒன்றாய் போட்டு பின்னி பிணைப்பவர்கள் பிறகு வரும் பிரச்சினைகளால் மீள முடியாமல் கஷ்டப்படும்போது சொல்லும் வார்த்தை "நான் நல்லதைத்தான் நினைத்தேன்...எனக்கு போய் இப்படி" உண்மை அதுவல்ல.

உங்கள் தீர்க்கமான முடிவுகள் தவறாகவே இருந்து இருக்கிறது. எனவே உண்மையுடன் தொடர்பில் இருக்க பழகிக் கொள்ளுங்கள்.

இப்போதைய பிரச்சினை உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு, இன்னும் திருந்த மாட்டேன் என்றால்.... தயாராகி விடுங்கள் இன்னொரு புதிய பிரச்சினையை சமாளிக்க.

இது தொழிலில் மட்டுமல்ல நம் ஊரிலும் இந்த "ஜட்ஜ்மென்ட்" நோய் தாக்கி இருக்கிறது. இல்லாவிட்டால் சகோதர பாசம் முக்கியம் என்றும், சகோதரத்துவத்தை ஒவ்வொரு நாளும் 5 வேலை பாங்கு சொல்லும் 32 பள்ளிவாசல்களை வைத்துக்கொண்டு இந்த அளவுக்கு பிரிந்து இருப்போமா?. சின்ன சின்ன பிரச்சினைகளிலும், இயக்கங்களிலும் மனிதனை மனிதனாக பார்க்கும் குணம் எங்கு குறைந்து போனது?. 

இன்று எதிரியாக உள்ள அரசியல் கட்சிகள் நாளை தேர்தலில் கூட்டு சேரும்போது நாம் விமர்சிக்கிறோம். "வெட்கங்கெட்டவைங்க" என பெயர் வைக்கிறோம். நாம் இன்று எதிரியாக நினைக்கும் இன்னொரு இஸ்லாமிய இயக்கத்தை சார்ந்தவன் நாளை நம்முடன் சேரும்போது நம் நிலைப்பாடுதான் என்ன?...பிரிவுகள் கருத்தோடு இருந்து விட்டுபோகட்டும்..உறவில் வேண்டாம் என்னோடு ஒரு நாள் "எழுப்பப்படும்" சகோதரனே!!

Vacuum Prosperity

நாம் முன்னேற்றம் அடைய பழையது நம்மிடம் இருக்க கூடாது என்பது ஒரு விதி. நாம் உபயோகப்படுத்தாத சட்டை, துணிமணிகள் எல்லாம் பல வருடம் நம்மிடம் இருக்கும். தேவை இல்லாத சென்டிமென்ட் பார்த்து நாமும் வைத்துக்கொண்டு நம்மை விட வசதியில் குறைந்தவர்களுக்கும் கொடுக்காமல் இருப்பவர்களுக்கு Vacuum prosperity என்பது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

உங்களிடம் பயன்படாமல் இருக்கும் சில துணிமணிகளைத் தேவைப்படுபவர்களுக்கு கொடுத்துப் பாருங்கள், தானாகவே புதிய உடைகள் உங்களுக்கு வந்து சேரும்.

உங்கள் வேலை இடத்தில் வியாபாரத்தில் சில டிப்ஸ்.

1.1. மனிதன் சந்தோசப்படும் வார்த்தை "அவனது பெயர்" ,   பேசும்போது இடையிடையே உங்கள் கஸ்டமர் பெயர் உச்சரிக்க பழகிக் கொள்ளுங்கள் [மரியாதை சேர்த்துக்கொள்வது உங்கள் கஸ்டமரின் வயதைப்பொறுத்தது.  தொடர்ந்து பெயர் உச்சரிக்கப்படும்போது கஸ்டமர் ஒரு safety ஐ உணர்வது நிச்சயம்.

1.2. நோ ப்ராப்ளம் எனும் வார்த்தையை எல்லாவற்றிற்கும் உச்சரிப்பவர்கள் ஏதாவது பிரச்சினையைத் தன் வசம் கவர்ந்து கொண்டே இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கிறது.

1.3. உங்களுக்குத் தெரியாத விசயத்தை தெரிந்த மாதிரி சீன் போட்டு பிறகு வழிவதை விட்டு விட்டு, எனக்கு இப்போதைக்கு தெரியவில்லை விசாரித்து உடன் உங்களுக்குத் தெரிவிக்கிறேன் என சொல்வதுடன், உங்கள் கஸ்டமரின் டெலிபோன் நம்பரை அவர் முன்னாடியே குறித்து கொண்டு அல்லது verify செய்து மறவாமல் அவருக்கு நீங்கள் விசாரித்ததைத் தெரிவித்தால் அவரது சந்ததியே உங்களிடம் பெரும் மதிப்பு வைத்திருக்கும்.

எதையும் முழுமையாக கேட்ட பிறகு பேசுங்கள். உங்களின் நிறைய நேரம், பணம்,  எனர்ஜி வீணாவதைத் தடுக்க முடியும்.

We will see “image maker” in next episode, Insha Allah !

ஏற்றம் தொடரும்...
-ZAKIR HUSSAIN

மாண்புமிகு மந்திரிக்கு..! 12

அதிரை-நிருபர்-குழு | Tuesday, February 14, 2012 | , , ,

உயர் திரு.C .C . பாட்டில் அவர்கள். 
மாண்புமிகு மந்திரி
பெண்கள் மற்றும் குழந்தை நலவாழ்வுத்துறை
கர்நாடக அரசு

இன்று நம்நாட்டில் நடக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிலும் குறிப்பாக கற்பழிப்பு போன்ற குற்றங்களின் அதிகரிப்பிற்கும், காலத்தின் கட்டாயம் என்ற பெயரில் பெண்கள் அணியும் கவர்ச்சியான, உடலை உரித்துக்காட்டும் மெல்லிய ஆடைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாய், ஆந்திர மாநில காவல்துறை இயக்குனர் கூறியிருப்பதற்கு, நீங்கள் தெரிவித்து இருக்கும் பதிலை (02 - 01 - 2012 ) டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழல் வாயிலாக படிக்க நேர்ந்தது.

ஆம்! நீங்கள் சொல்வது உண்மைதான். இன்று, மருத்துவமனைகள் மாட மாளிகைகளாகி விட்டதாலும், கல்வி கடை வியாபாரம் ஆகிவிட்டதாலும், காலச்சக்கரத்தின் அச்சில் அமர்ந்து அதன் வேகத்தோடு சேர்ந்து சுழலவும், கணவன் மனைவி இருவரும் பணியிலமர்ந்து பொருளீட்டவேண்டும் என்பது அவசியமாகிவிட்டது.

இன்றைய சூழலில், மருத்துவம், கல்வியியல் போன்ற மதிப்பிற்குரிய சேவைத்துறைகளுக்குக் கிடைக்கும் இடங்களைக்கூட விட்டுவிட்டு, கணினி மற்றும் தொழில்நுட்பத் துறையினைத் தேர்ந்தெடுக்கும் மாணவியர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதன் விளைவாக, "ஏராளமான பெண்கள் தகவல் தொழில்நுட்பத்துறையிலும், கால் சென்டர் என்றழைக்கப்படும் அழைப்பு மைய்ய பணிகளிலும் பணிபுரிகின்றனர். அதிலும் இரவுநேர பணிக்கு வரும் பெண்கள் தங்கள் உடை விஷயத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும் எனவும், இது போன்ற பணிகளுக்கு அதாவது பெண்களும் ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் இடங்களில், பெண்கள் தங்கள் உடலினை எந்த அளவுக்கு மறைக்க வேண்டும் என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன்" என்று  நீங்கள் அறிவுறுத்தியிருக்கிறீர்கள். 

"இன்று,  ஒழுக்கம், கலாச்சாரம் போன்ற விழுமம் சார்ந்தவைகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருக்கிறது. விழுமம் பற்றி அக்கறையே இல்லாத சில ஆண்கள் மத்தியில் நாகரீகம் என்ற போர்வையில் ஆடைக்குறைப்பு, கவர்ச்சியான கவர்ந்திழுக்கும் ஆடைகளை அனிதலால் அனைத்து விழுமங்களையும் ஆழக்குழி தோண்டி புதைத்துவிட்டு அவர்கள் பெருங்குற்றம் புரிய காரணியாய் அமைந்துவிடுகிறது" என்றும் எச்சரித்துள்ளீர்கள்.

"பல நூற்றாண்டுகளாக நாம் பெண்களுக்கு மரியாதைக்கும் பெருமைக்குமுரிய உயர் பதவிகளை தந்திருக்கிறோம். அவர்களுக்கு கௌரவமான நிலைகளுக்கு உயர்த்தியிருக்கிறோம். போற்றுதலுக்குரியவர்கள் என்று பேணியும் வருகிறோம். ஏன், 'நீரின்றி அமையாது உலகு' என்ற வள்ளுவ வாக்குக்கேற்றார்போல நாட்டின் உயிர்ப்பிடிப்பான ஆறுகளுக்கும்,நதிகளுக்கும் பெண்களின் பெயரையல்லவா சூட்டி மகிழ்கிறோம்" என்று சூளுரைத்திருக்கிறீர்கள்.

ஆனால், திட்டவட்டமாய் சட்டங்கள் போடும் நிலையில் இருந்தும், " உடை விஷயத்தில் நான் யாரையும் வற்புறுத்தவில்லை; ஏனென்றால் பல்வேறு கலாச்சாராம், பண்பாடு,பாரம்பரியத்தின் அடிப்படையில் அடையாளங்களாய் பெண்களின் உடை இருந்து வருகிறது; வெகுவான பெண்கள் சேலைகளையும், வேறு சிலர் சல்வார் போன்ற உடைகளையும்,  இன்னும் சிலரோ மேற்கத்திய தொற்றினால் இடுப்பில் கூட நிற்காத 'ஜீன்ஸ்' அணிகிறார்கள். எந்த உடை பாதுகாப்பானது என்று உணர்கிறார்களோ / நினைக்கிறார்களோ அவைகளையே அணிந்துகொள்ள அவர்கள் முடிவு செய்யட்டும்" என்று ஏனோ நழுவுகிறீர்கள்?

இந்த நல்ல தருணத்தில் இஸ்லாத்தில் பெண்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் பற்றியும், நீங்கள் பெரிதும் கவலைப்படும், பெண்களின் கற்பொழுக்கத்திற்கும், அவளின் பாதுகாப்பிற்கு அரணாய் இருக்கும் ஆடை இலக்கணம் (ஹிஜாப்) பற்றியும் அகிலமனைத்திற்கும் அதிபதியாகிய எல்லாம் வல்ல இறைவன் இட்ட கட்டளைகள் என்ன?

அகிலத்திற்கு அருட்கொடையாய் வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இது சம்பந்தமாய் போதித்தவை என்ன? 

அவற்றில் சிலவற்றை உங்களுக்கு அறிமுகம் செய்வது கடமை என்று உணர்கிறேன்.

நம்நாடு பல மதங்களும், கலாச்சாரமும், பண்பாடும் கொண்டதுதான். நபி(ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.

"எந்தவொரு மதத்திற்கும் ஒரு விஷேச ஒழுக்கப்பண்பு உண்டு. இஸ்லாத்திற்குரிய ஒழுக்கப்பண்பு வெட்கமாகும்" என்று கூறியிருக்கிறார்கள்.

இறைவசனமோ, " மேலும் (நபியே) முஃமினான (நம்பிக்கைகொண்ட) பெண்களிடம் கூறும்; அவர்கள் தங்களுடைய பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்; தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக்கொள்ளட்டும்; தங்களது அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும்;..... (சூரா அந்நூர்:31) 

"நபியே! உங்களது மனைவிகள், உங்களது புதல்விகள் மற்றும் முஃமின்களின் மனைவியர் ஆகியோரிடம் கூறுவீராக! அவர்கள் தங்கள் முந்தானைகளை தம்மீது போட்டுக் கொள்ளட்டும். இது அவர்களை அறியப்படுத்துவதற்கும் அவர்கள் தொல்லைகளுக்கு உள்ளாகாமல் இருப்பதற்கும் மிகவும் ஏற்ற முறையாகும்." (அஹ்ஸாப் :59) 

இன்று நாம் கவலைகொள்ளும் விஷயத்திற்கு  மேற்சொன்ன இறைவசனமும் நபிமொழியும், பட்டுத்தெறித்தாற்போல விடையளிக்கிறது, எந்தவொரு பெண் தன் அழகை மறைத்து (கண்ணியமாக உடையணிந்து),  தீய எண்ணங்களோடு தன்னை நோக்கி வரும் பார்வைகளை விட்டு  தன் பார்வைகளை தாழ்த்திக்கொள்ளும் பொருட்டு, அவளின் கற்பு பாதுகாக்கப்படுகிறது.

இன்னும் மேற்சொன்ன இறைவசனத்தில் , "பெண்கள் தங்களின் மார்புகள் மீது முந்தானைகளைப் போட்டுக்கொள்ளட்டும்" என்று கட்டளையிடப்படுகிறது. எந்த ஒரு தொல்லைக்கும் ஆளாகாமல் இருக்கும் பொருட்டு ஒரு தீர்க்கமான உறுதியான தீர்வினையும் அந்த இறைவசனம் தெரிவிக்கிறது. பெண் என்பவள் மதிப்பிற்குரியவள். ஆகவே அவள் மறைப்பிற்குரியவள் என்ற உங்கள் வாதம், இங்கு அட்சரம் பிசகாமல் இறைவசனத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

"பெண்கள் தங்களின் மார்புகள் மீது முந்தானைகளைப் போட்டுக்கொள்ளட்டும்"  என்ற இறைக்கட்டளை அருளப்பட்டபோது, பெண்கள் தங்களின் மெல்லிய ஆடைகளை கைவிட்டுவிட்டு, கம்பளி போன்ற கனமான ஆடைகளைக் கொண்டு போர்த்திக்கொண்டனர் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் உறுதிசெய்கிறார்கள். (ஆதாரம் - அபூதாவுத்) 

மெல்லிய ஆடைகள் பெருங்குற்றத்திற்கு பேருதவி செய்கிறது என்கிறீர்கள், இஸ்லாமோ இதில் ஆச்சர்யப்படுவற்கு ஏதுமில்லை என்கிறது. உடலின் அமைப்பினை வெளிக்காட்டும் மெல்லிய துணியை ஆடை என்று சொல்லவே இல்லை; மாறாக இது நிர்வாணத்திற்கு சமம் என்று சாடுகின்றது.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள், " பிந்திய காலத்தில் சில பெண்கள் தோன்றுவார்கள். அவர்கள் ஆடை அணிந்த நிர்வாணிகளாக இருப்பார்கள். அவர்களின் தலைகளின் மேல் ஒட்டகங்களின் திமில் போன்றவை இருக்கும். அவர்களைச் சபியுங்கள். நிச்சயமாக அவர்கள் சபிக்கப்பட்டவர்களே." (ஆதாரம் - அத்தபரானி)

பல நூறாண்டுகளாக பெண்களைப் பேணி பாதுகாக்கும் நாம், அவர்களை சாபத்திற்குள்ளனவர்களாக ஆக்குவது முறையாகுமா? பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நலவாழ்வினை ஏற்படுத்திதரும் உன்னதமான பொறுப்பில் இருக்கும் நீங்கள், அவர்களின் உடை விஷயத்தில் இறைவனின் சட்டத்தையே அழகான தீர்வாக தருவது கடமையல்லவா? அதுவே அவர்களுக்குத்தரும் உண்மையான கௌரவம் அல்லவா?

அன்புடன்

புதுசுரபி

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 8 11

அதிரை-நிருபர்-குழு | Monday, February 13, 2012 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ். 

''என் அடியான் என்னிடம் ஒரு எட்டு நெருங்கினால், நான் அவனிடம் ஒரு முழம் நெருங்குவேன். என்னிடம் ஒரு முழம் நெருங்கினால், அவனிடம் நான் இரண்டு முழம் நெருங்குவேன். என்னிடம் அவன் நடந்து வந்தால் நான் அவனிடம் விரைந்து வருவேன்' என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) கூறினார்கள்.''    (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி)   (ரியாளுஸ்ஸாலிஹீன் : 96 )

"இரண்டு அருட்கொடைகள். இந்த இரண்டு விஷயத்திலும் மக்களில்  அதிகமானோர் நஷ்டப்பட்டு விடுகின்றனர்.   அவை (1) ஆரோக்கியம் (2) ஓய்வு என்று நபி(ஸல்) கூறினார்கள்". (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)  அவர்கள். (புகாரி). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 97)

''நபி(ஸல்) அவர்கள் இரவில் நின்று வணங்குவார்கள். அவர்களின் இரு பாதங்களிலும் வெடிப்பு ஏற்பட்டு விடும். 'இறைத்தூதர் அவர்களே! இவ்வாறு ஏன் செய்கிறீர்கள்? அல்லாஹ் உங்கள் முன் பின் பாங்களை மன்னித்து விட்டானே?' என்று கேட்டேன். 'நான் நன்றியுள்ள அடியான் ஆக வேண்டும் என நான் விரும்ப வேண்டாமா?' என்று நபி(ஸல்) கேட்டார்கள்.'' (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி)அவர்கள் (புகாரி,முஸ்லிம்).                                       (ரியாளுஸ்ஸாலிஹீன்: 98)

''சொர்க்கம் என்பது, உங்களில் ஒருவருக்கு அவரது செருப்பு வாரையும் விட மிக நெருக்கமாக உள்ளது. நரகமும் அதுபோல்தான் என்று நபி(ஸல்) கூறினார்கள்." (அறிவிப்பவர்: இப்னுமஸ்ஊத்(ரலி) அவர்கள் (புகாரி). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 105)

"அதிகம் ஸஜ்தா செய்வதை நீ கடைபிடிப்பீராக! நிச்சயமாக நீ அல்லாஹ்வுக்காக ஒரு ஸஜ்தா செய்வது என்பது; அதன் மூலம் அல்லாஹ் உனக்கு அந்தஸ்ததை உயர்த்தாமலும் அதன் மூலம் உம்மை விட்டும் ஒரு தவறை அழிக்காமலும் இருப்பதில்லை' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: (அபூஅப்துர்ரஹ்மான்) என்ற ஸவ்பான்(ரலி)  அவர்கள்  (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 107)

'என் அடியார்களே! நான் நேர்வழி காட்டியவரைத் தவிர நீங்கள் அனைவரும் வழி கேடர்களே! எனவே என்னிடம் நேர் வழியைக் கேளுங்கள். நான் நேர்வழி தருகிறேன்.

என் அடியார்களே! நான் உணவளித்தவரைத் தவிர நீங்கள் அனைவரும் பசியால் வாடுபவர்களே! எனவே என்னிடம் உணவு கேளுங்கள். உங்களுக்கு நான் உணவளிக்கிறேன்.

என் அடியார்களே! நான் ஆடை அளித்தவரைத் தவிர நீங்கள் அனைவரும் நிர்வாணிகளே! எனவே என்னிடம் ஆடை கேளுங்கள். நான் உங்களுக்கு ஆடை தருகிறேன்.

என் அடியார்களே! இரவிலும், பகலிலும் நீங்கள் தவறு செய்கிறீர்கள். நானே பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பேன். என்னிடம் மன்னிப்புக் கேளுங்கள். நான் உங்களை மன்னிக்கிறேன்.

என் அடியார்களே! நீங்கள் எனக்கு தீங்கை செய்துவிட முடியாது. நீங்கள் எனக்கு நன்மை செய்து விடவும் முடியாது. என் அடியார்களே! உங்களில் முதன்மையானவர், உங்களின் இறுதியானவர், உங்களில் மனிதர்கள், உங்களில் ஜின்கள் ஆகிய உங்களில் ஒரே ஒருவரின் இதயத்தில் இறையச்சம் இருந்தாலும்;, அது என் நிர்வாகத்தில் எதையும் அதிகப்படுத்தி விடாது.

என் அடியார்களே! உங்களில் முதன்மையானவரும், உங்களில் இறுதியானவரும், உங்களில் மனிதரும், உங்களில் ஜின்களும் ஆகிய உங்களில் ஒரே ஒருவரின் இதயம் அதிக குற்றம் நிறைந்ததாக இருந்தாலும், அது என் நிர்வாகத்தில் எதையும் குறைத்து விடாது.

என் அடியார்களே! உங்களின் முதன்மையானவரும், உங்களில் இறுதியானவரும், உங்களில் மனிதரும், உங்களில் ஜின்களும் என அனைவரும் ஒரே மைதானத்தில் நின்று, என்னிடம் அவர்கள் கேட்டால், ஒவ்வொரு மனிதருக்கும் அவர் கேட்டதைக் கொடுப்பேன். கடலில் நுழைக்கப்பட்ட ஊசி தண்ணீரை குறைப்பது போன்றே தவிர, என்னிடம் உள்ளதை இது குறைத்து விடாது.  

என் அடியார்களே! இவைதான் உங்களது செயல்கள்.அவற்றை நான் முழுமையாக அறிந்து வைத்துள்ளேன். பின்பு அவற்றை (அவற்றின் நற்கூலிகளை) உங்களுக்கு நிறைவேற்றுவேன். சிறந்ததை ஒருவன் பெற்றுக்கொண்டால் அல்லாஹ்வை புகழட்டும். இது அல்லாததைப் பெற்றுக் கொண்டால் அவர் தன்னையே தவிர (வேறு எவரையும்) பழித்திட வேண்டாம் என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) கூறினார்கள்.''  (அறிவிப்பவர்: (அபூதர் என்ற)ஜீன்துப் இப்னு ஜீனாதா(ரலி)  அவர்கள் (முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 111)

"ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபி(ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

-S.அலாவுதீன்


Live 17.02.2012 நேரலை அமீரகத்திலிருந்து மார்க்க சொற்பொழிவு- தலைப்பு - -அந்த நாள் வரும் முன் - சகோதரர் கோவை S அய்யூப் அவர்கள் , இந்திய நேரம்: இரவு 07:30 மணி முதல் LIVE from Dubai
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துக்கள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துக்கள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசகர் நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துக்கள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

கூகுல் தமிழ்