நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு நாளும் மார்க்க சொற்பொழிவு காணொளியை நம் அதிரைநிருபர் வலைத்தளத்தில் பல்வேறு தலைப்புகளில் கேட்டு பயன் பெறலாம் - மேலும் பயனுள்ள மார்க்க சொற்பொழிவுகளை கேட்டு பயன்பெற இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவுக்கான பிரத்யேக வலைத்தளம் தவ்ஹீத் TV சுட்டியை தட்டவும் http://thowheedtv.blogspot.com/

மனுநீதி மனித குலத்துக்கு நீதியா? - அலசல் தொடர் - 1 2

அதிரை-நிருபர்-குழு | Monday, May 28, 2012 | , , , ,

எனது முந்தைய ஆக்கமான ‘ இன ஒதுக்கீடும் ,இட ஒதுக்கீடும்- உரசும் உண்மைகள் “என்ற தலைப்பிட்ட பதிவைத் தொடர்ந்து, ஆண்டாண்டு காலமாக இந்திய சமூகத்தை ஆட்டிப்படைத்து வரும் ஆரியக் கொள்கைகளைப்ப்ற்றிய ஒரு விரிவான அலசல் தேவை என்று மனதில் பட்டது. அதனை முன்னிட்டு ஆரியக் கொள்கைகளின் அடிப்படையாகக் காட்டப்படும் மனு நீதி ( நீதியா அது? பேதி.) தர்மத்தை சற்று விரிவாகப் படிக்க ஆரம்பித்தேன். பல அதிர்ச்சிகளை சந்தித்தேன். நாம் படிக்கும் திருமறையிலும், நபி மொழிகளிலும் தென்றல் தவழ்கிறது- பகுத்தறிவு மணம் கமழ்கிறது. ஆனால் மனுநீதியைப் படிக்கும்போது மனிதகுல நாகரிகங்களுக்கு சற்றும் பொருந்தாத கருத்து நாற்றம் குடலைப்பிடுங்குகிறது. இவைகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள நினைத்தே இந்த ஆக்கம்.

யாரையும் புண்படுத்தவோ, எள்ளி நகையாடவோ அல்ல. துவேஷ மனப்பான்மையுடனும் அல்ல. இருப்பதை எடுத்துக்காட்டி இவை அறிவுக்கு ஏற்புடையதா? சரிதானா? என்ற கேள்விகளைக் கேட்கவே இந்த அலசல். இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் ஏன் இன்னும் பிற்பட்டே இருககிறார்கள் என்ற கேள்விக்கு ஒரு சிறு விடையை அல்லது சிந்தனையை இந்த ஆக்கம் தரலாம். உண்மைகளை வெளிக்கொண்டு வரும்போது விதண்டாவாதிகளுக்கும், பிற்போக்குவாதிகளுக்கும் கோபம வரலாம் என்று எதிர்பார்த்தே இதைப் பதிகிறேன். உண்மையைச் சொல்ல ஓடி ஒளிய வேண்டியதில்லை. இதில் தோலுரித்துக் காட்டப்படப்போகும் அததனைக்கும் அதிலேயே வரி வரியாக ஆதாரம் இருக்கிறது. நாமாக எதையும் கற்பனை செய்து எழுதவில்லை. மாற்று மத நண்பர்களும் இதை படிக்கும் வண்ணம் இதை பங்கீடு செய்வோம். அவர்கள் வினா எழுப்பினால் விடை தருவோம்.

முதலாவதாக

மனு நீதியின் அடிப்படையில் Chapter 1/31 வது சுலோகம் இப்படி சொல்கிறது.  

But for the sake of the prosperity of the worlds he caused the Brahmana, the Kshatriya, the Vaisya, and the Sudra to proceed from his mouth, his arms, his thighs, and his feet. .
இதன் பொருள்: உலக  மனிதர்களிடையே தொழில்களின்  அடிப்படையில்  பிராமணர், ஷத்ரியர், வைசியர், சூத்திரர்  ஆகிய இனங்களை முறையே கடவுள் தனது வாய், தோள், தொடை மற்றும் கால் பாதங்களில் இருந்து படைத்தார் என்பதாகும். அதாவது பிராமணரை வாயிலிருந்தும், ஷத்ரியரை தோள்களில் இருந்தும், வைசியரை தொடைகளிலிருந்தும் , சூத்திரரை காலடியிலிருந்தும் படைத்தாராம்.

முதலாவதாக நாம் கேட்க விரும்பும் கேள்வி : அறிவியல் ரீதியாக ஆணின் விந்து பெண்ணின் சினை முட்டையோடு சேர்ந்துதானே உயிர்கள் உருவாக முடியும். அது மனித இனப்பெருக்கமாக இருந்தாலும் சரி- விலங்குகளின் இனப்பெருக்கமாக இருந்தாலும் சரி- தாவர இனங்களாக இருந்தாலும் சரி – நியதி ஒன்றுதானே. அது எப்படி வாயிலிருந்தும், தோளில் இருந்தும், தொடையில் இருந்தும், காலடியில் இருந்தும் உயிர்கள் உருவாக முடியும்? போகட்டும் . அவர்கள் கூற்றுப்படி கடவுள் படைப்பதால்  அறிவியல் காரணங்களை ஆராயத்தேவை இல்லை என்றே வைத்துக்கொள்ளலாம். தான் படைத்து பிறக்கவைக்கும் உயிர்களை தனது மக்கள் என்று கடவுள் கருதமாட்டாரா? அந்த தனது மக்களில் ஒரு பெற்றவர் பாகுபாடுவைத்து படைக்கும்போதே படைப்பாரா? அப்படிப்படைத்தால்  அவர் கடவுளா? அட கடவுளே தனது பிள்ளைகளை இப்படி வித்தியாசம் வைத்துப்படைத்து இருக்கிறாரே நாமும் பார்த்தால் என்ன என்று படைப்பினங்கள் நினைக்காதா? விடைகளே சொல்லமுடியாத விந்தைகள். முத்துப்பேட்டை ஆலங்காட்டில் சட்டிபானை செய்பவன் கூட ஒரே மாதிரியாக செய்கிறானே – படைக்கிறானே. அந்த தகுதியைக்கூடவா இந்த ஆரியரின் கடவுள்கள் என்று கூறப்படுபவை இழந்துவிட்டன?

உலகில் உருவான மற்ற எந்த மதமுமே இப்படி மக்களில் பேதம் பார்த்து தரம் பிரிக்கவில்லை என்பது மத ஆராய்ச்சியாளர்களின் ஒருமித்த கருத்து. ஒரு சிறிய மலைசாதியினர், மிருகங்களைப் பச்சையாக கடித்து உண்ணும  காட்டுவாசிகள்  பின்பற்றும் மதங்களில்  கூட இப்படி பிறப்பிலேயே பாகுபாடுகள் இல்லை. இல்லை. இல்லவே இல்லை.

இத்தகைய பிறப்பின் தொழில்ரீதியான பாகுபாடுகளின் அடிப்படையில் பார்த்தால் பிராமணர்கள் என்பவர்கள்  அர்ச்சிக்க,  வேதங்களை உச்சரிக்க, சிலைகளைத்தொட, நகைகளை அணிவித்து அலங்காரம் செய்ய,  பிறருடைய பாவங்களை கழிக்க அருகதை உடையவர்கள். நேராக சொர்க்கம் செல்லும் தகுதி இவர்களுக்கு மட்டுமே உண்டு. மற்ற வர்ணங்களைச் சேர்ந்தவர்கள் இந்தப் பிறவியில் நன்மைகள் செய்து மறுபிறவியில் பிராமணராகப் பிறந்தால்தான் சொர்க்கம் போக முடியும்.

அடுத்து ஷத்ரியர்கள் என்பவர்கள் அரசர்கள், படைத்தளபதிகள், படை வீரர்கள் ஆகியோராவர். இவர்கள் போரில் செத்தால் நான் ஸ்டாப் பிளைட்டில் சுவர்க்கம் போய்விடுவார்களாம்.

வைசியர்கள் என்பவர்கள் வியாபாரிகள். சூத்திரர்கள் என்பவர்கள் அடிமைகள், இழிந்தவர்கள், தீண்டத்தகாதவர்கள். மனு நீதியின் சொந்த வார்த்தையில் இவர்கள் “பாக்யசாதியினர் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் ஒரு பிராமணன், பசு, சிசு, பெண் ஆகியோரின்  உயிரைக்காப்பாற்ற தங்கள் உயிரை விட்டால் டைரக்ட் சொர்க்கம் கிடைக்கும். அத்தியாயம் 10  சுலோகம் 62. (அடப்பாவிகளா? )
இதுதான் மனுநீதி தரும் சமுதாய அமைப்பு. இதில் கை கொட்டி சிரிக்கத் தகுதிபடைத்த வேடிக்கை என்னவென்றால் இந்த நான்கு வகை இனத்தில் முதல் மூன்றுவகையினர் இந்திய மக்கள் தொகையில் 10% மட்டுமே உள்ளவர்கள். இதில் பிராமணர்களின் அளவு வெறும் 3% தான். பாக்கி  90% மக்கள் இவர்களின் வேதத்தின்  கணக்குப்படி அடிமைகள் , இழிந்தவர்கள், கடையர்கள், தலித்துகள் ஆவார்கள்.   இந்த 3% ஒரு கை விரல்களைவிட குறைவான சதவீதத்தினர்தான் பல்லக்குகளில் ஏறி பவனி வருகிறார்கள். இவர்களை  “போற்றிப் பாடடி பொண்ணே ஐயர் காலடி மண்ணே! என்று மற்றவர்கள் துதி பாடுகிறார்கள்.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு ‘என்று பாடிப்புகழ்ந்தார் பாரதியார். ஆனாலும் என்ன பயன்? மனுநீதியின் அளவுகோளின்படி வள்ளுவர் சூத்திரர்-அதாவது இழிந்தவர்- தொடத்தகாதவர். உலகின் நாற்பது மொழிகளில் வள்ளுவரின் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டு இருக்கிறது. வெள்ளை மாளிகையிலும், கிரெம்ப்ளின் மாளிகையிலும், பக்கிங்க்ஹாம் அரண்மனையிலும் திருக்குறள் தமிழ் நூலாகவே வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் என்ன புண்ணியம் அவர் பிறப்பால் ஒரு தீண்டத்தகாதவரே.

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர்போல், இளங்கோ போல் யாங்கணுமே கண்டதில்லை.’’ என்று பாரதியார் போடுகிற லிஸ்டில் இளங்கோவைத்தவிர மற்றவர்கள் சூத்திரர்கள். தொடக்கூடாதவர்கள். கம்பன் எழுதிய இராமயணத்தை நம்புகிறவர்கள்- அந்தக்கதையில் வரும் கற்பனை இராமர் பாலத்தை வைத்து சேது சமுத்திரத்திட்டம் என்கிற ஒரு பெரிய பொருளாதாரத்திட்டத்தை முடக்கிப் போடுகிறவர்கள்-  கம்பனை தங்கள் இனத்தில் சேர்க்கத் தயாரில்லை. கம்பனை மட்டுமா ? கம்ப இராமாயணத்துக்கு மூலமான முதல் இராமாயணம் எழுதிய வால்மீகி முனிவர்கூட சூத்திரரே – தொடத்தகாதவரே. காரணம் அவர் ஒரு வேடர்.

திருமந்திரம் என்ற ஆக்கம் தந்து – சைவ சித்தாந்தம் என்கிற தத்துவத்தை வழங்கிய திருமூலர் , முதல் சைவ சித்தாந்த சாஸ்திரம் வழங்கிய திருவுந்தியார், வைணவ சித்தாந்தம் வழங்கிய திருப்பான் ஆழ்வார் என்கிற ஆழ்வார், கண்ணப்ப நாயனார், நந்தனார், திருநீலகண்டர், திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், பல்வேறு பதினெட்டு சித்தர்கள், பெரியபுராணத்தில் குறிப்பிடப்படும் 63 நாயன்மார்கள் என்று கூறப்படுபவர்களில் பிராமணராய்ப் பிறந்தவர்கள் தவிர மற்ற அனைவரும் உள்பட  மனு நீதியின் முன் தாழ்த்தப்பட்டோர்கள்- தீண்டத்தகாதவர்கள்- இழிந்தவர்கள்- அடிமைகள். (ஆதாரம்: DALITS &  UNTOUCHABLE SAINTS  OF HINDUS).

வீர சிவாஜி என்று கூறுகிறார்கள். சிவசேனை என்று படை அமைத்து மாற்று மாநிலத்தவரை சூறையாடுகிறார்கள்.  சிவாஜியின் பெயரில் கட்சிவைத்து மும்பையில் வாழும் இஸ்லாமியர்களை கொத்துக்கொத்தாகக் கொல்ல நினைக்கிறார்கள். பொருளாதார முதுகெலும்புகளை ஒடிக்கும்  விதத்தில் வர்த்தக நிலையங்களை தீ வைத்துக் கொளுத்துகிறார்கள். இந்த சிவாஜியின் வாழ்வில் என்ன நடந்தது? பல வெற்றிகளைப் பெற்று வந்தும் மராட்டியத்தின் மன்னனாக முடிசூடிக்கொள்ள சிவாஜியை அனுமதிக்கவில்லை இந்த மனுநீதி பாகுபாடு. சிவாஜி ஒரு சூத்திரன் - அவன் ஷத்ரியன் அல்ல ஆகவே மன்னன ஆகும் தகுதி அவனுக்கு இல்லை என்று மறுத்ததும் ஒரு பிராமணன் கூட அவனுக்கு முடிசூட்டுவிழா மந்திரம் சொல்ல முன் வராததும்தானே வரலாறு? முதலில் சிவாஜியை போற்றுபவர்கள் அவனை  சாதியின் பெயரால் இழிவு படுத்திவைத்து இருக்கும் சாஸ்திரத்தை மாற்றட்டும். அதன்பின் மும்பையிலிருந்து   தமிழ்நாடு, உ.பி. மற்றும் பீகார் மாநிலத்தோரை  விரட்டலாம்.

திருவள்ளுவரிலிருந்து வீர சிவாஜி வரை மட்டுமல்ல இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை வரைந்த டாக்டர் அம்பேத்கார்வரை இன்னும்  ஆயிரக்கணக்கான உதாரணங்களைத் தர இயலும். இவர்களைக்காணும்போது தினமும் டி வி யில் வரும் ஒரு விளம்பரம்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

“தினமும் ரெண்டு வேள பால் கொடுக்கிறே ஆனால் கால்சியத்துக்கு என்ன கொடுக்கிறே?

“ அதுதான் சொல்றேனே பால் கொடுக்கிறேன். “

“பால் கொடுக்கிறே ஆனால் கால்சியம் கிடைக்குதா?  “

அதேபோல் இந்த பட்டியலில் உள்ள தனிமனிதர்களுக்கு அவர்கள் செயலால் பால் கிடைக்கிறது ஆனால் பிறப்பால் அவர்களுக்கு கால்சியம் கிடைக்கவில்லை. வள்ளுவர் முதல் வால்மீகி வரை சாதி மறுக்கப்பட்ட சவளைப்பிள்ளைகளே.
சாட்டை சுழலும்.. . 
-இபுராஹீம் அன்சாரி

உங்களுக்குத் தெரியுமா?

புதுக்கோட்டை நகரத்தின் மையப் பகுதியில் உள்ள பல்லவன் குளக்கரையில், இக்குளத்தில் இஸ்லாமியர்களும், ஆதிதிராவிடர்களும் கால் நனைக்கக்கூடாது என்று செதுக்கி வைக்கப்பட்டிருந்த கல்வெட்டை தான் பதவியேற்ற முதல் பணியாக அகற்றியவர் திவான் கான் பகதூர் கலிபுல்லா என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா



நன்றி: உண்மை இதழ், மே மாதம் 2012

பதவிகள் இல்லாத நாற்காலிகள்... – அச்சம் ! 10

அதிரை-நிருபர்-குழு | Sunday, May 27, 2012 | , , ,


பாரம்பரியம் மிக்க அதிரைப்பட்டினம், நம் சமுதாய மக்களின் நன்னெறிகளாலும் அவர்களின் இயல்பான பண்பாலும் அதன் சுற்று வட்டாரத்திலும் கோலோச்சினார்கள், அதிமுக்கியமாக மார்க்க விஷயத்திலும், நல்ல விடயங்களை முன்னெடுத்து செல்வதிலும். காலச் சூழல், இளமையை தொலைத்திட வெளிநாடு/வெளியூர் சென்ற இரண்டு தலைமுறை சமுதாயம், அவரவர்களின் இருப்பிடம் திரும்பி நிம்மதியாக இருக்கலாம் என்று திரும்ப நினைத்தாலும் அச்சமே அவர்களை ஆட்கொள்வதாக பரவலாக இருக்கும் புலம்பல்கள்.

இளமையின் இரகசியம் அறியாதவர்கள் இவ்வுலகில் எவரும் இல்லை, ஆனாலும் இப்படித்தான் வாழவேண்டும் என்று சட்டமாக்கப்படாத சாபத்தின் சஞ்சலங்களை கட்டாய கடமை போன்று பின்பற்றி அதன் போக்கிலேயே கடந்த இரண்டு தலைமுறை தொலைத்தது தனது இளமையை என்று சொன்னால் மறுக்க யாரும் கொடிதூக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

அவ்வாறான சூழ்நிலைகள் இனியும் நிகழாவண்ணம், இனிவரும் தலைமுறை / இப்போது தலையெடுக்கும் தலைமுறை என் குடும்பம், என் வீடு, என் ஊர், என் நாடு என்று வட்டங்களிட்டு அவைகளுக்குள் சுழல கற்றவர்களாக எழுந்து வருவது ஆரோக்கியமே, இதனை அவ்வாறே நிலைத்திடவும் உறுதி கொள்ளவேண்டும் இன்ஷா அல்லாஹ் !

மேற்சொன்னவைகள் தலைப்பிற்கு எவ்வித சம்பந்தமில்லாதது போன்று தோன்றினாலும், அன்றைய அல்லது அவைகளை கடந்து வந்த தலைமுறைகள் அனுபவிக்கும் இன்றைய சூழலின் கஷ்ட நஷ்டங்களை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை....

15 வருடங்களுக்கு முன்னால் பள்ளிவாசல்களில் நாற்காலிகள் என்று இருக்கும் அவைகள் தொழுகை அல்லாத நேரங்களில் பயன்படுத்தவும் அல்லது அதில் ஏறி நின்று மோதினார் ஒட்டடை அடிக்கவும், அல்லது கடிகாரத்தின் முட்களை சரியாக நிமிரித்தி வைக்கவும் என்றுதான் இருந்தது. அவைகளில் வெளிப் பள்ளியில் ஒன்றோ இரண்டோ இருக்கும் அல்லது மோதினார் தங்கியிருக்கும் அரையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.

இன்றைய சூழலில், தொழுகைக்கான சஃப்பிலும் மற்றும் இதர காரியங்கள் பள்ளிவாசல்களில் நடைபெற்றால் அங்கேயும் சரி நாற்காலிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது. இதில் வயது பேதமில்லை, இளயவர்களும் முதியவர்களும் என்று அதிகரித்திருப்பது சொல்லாமல் எதனையும் சுட்டிக் காட்டவில்லை, தலையில் அடித்து சொல்வது ஆரோக்கியத்தினை பற்றிதான்.

தொழுகைக்காக பள்ளிக்குள் நாற்காலிகள் ஓரத்தில் வரிசையாக வைக்கப்ப்பட்டிருந்தது, அதன் அருகில் ஒரு நடுத்தர வயதுடையவர் தொழுது கொண்டிருந்தார் ஜமாத்தாக... அதன் பின்னர் இரண்டாவது ரக்காத்தில் இணைந்து கொள்ள மற்றொரு சகோதரர் அங்கே நெருங்கியபோது பின்னால் நின்ற அந்த சகோதரருக்கு முன் சஃப்பில் இருந்த நாற்காலியின் பாதிபாகம் பின் சஃப்பில் இருந்ததால் அதனை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு தக்பீர் கட்டிவிட்டார் அப்போது அது யாருக்கும் பெரிதாக தெரியவில்லை அனைவரும் தொழுகையில் ஈடுபட்டிருந்த்தால்...

தொழுகை முடிந்ததும், நாற்காலியில் முன்னே தொழுத நடுத்தர வயது சகோதரர் சற்றே கோபத்துடன் ‘யார்ரா இங்கிருந்த நாற்காலியை எடுத்தது’ என்று நாற்காலி(!!?) பறிபோன கோபத்தில் கேட்டார், பின்னால் நின்ற சகோதரர் தொடர்ந்து தொழுது கொண்டிருந்ததால் அவரின் தொழுகையை முடித்ததும், ‘நான் தான் செய்தேன், நீங்கள் நிலையாக நின்று தொழுது கொண்டிருந்தீர்கள் அதோடு பின்னால் இருந்த சஃப்பிற்கு இடமில்லாமல் இருந்தது அதனால்தான் மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்றார்... அவரும் பரவாயில்லை என்று அமைதியாக சென்று விட்டார்....

அதன் பின்னர் பள்ளியை விட்டு வெளியில் வரும்போது, நாற்காலியில் அமர்ந்து தொழுதவரோடு பேசிக் கொண்டிருந்தவர் அருகில் இருந்தவரிடம் "தரையில் அத்தஹ்யாத்தில் நீண்ட நேரம் உட்கார முடியவில்லை அதனால்தான் சேர் போட்டு தொழுகிறேன் என்றார் அதற்கு அவரின் நண்பர் "உனக்கு எந்த வியாதியும் இல்லையே, வெளிநாட்டிலும் இப்படித்தான் சேர் போட்டு தொழுவியா என்று... ?" அவரோ "அங்கேயெல்லாம் சஃப்பில் நின்றுதான் தொழுவேன் ஊருக்கு வந்ததும் மூட்டு வலி தொடர்ந்து இருக்கிறது....." என்றார்..

இவ்வாறான உரையாடல்களை கேட்டு விட்டு அங்கிருந்து நகரும்போது பழைய நினைவுகளை நோக்கி (MSM-n மற்றும் ஜஸீலா காலத்து அப்பாக்களை) அசைபோட்டேன்.... அதிகமான வயதுடைய மூத்தோர் எவரையும் அப்போது நாற்கலிகளில் அமர்ந்து தொழுகையை நிறைவேற்றியதாகவோ அல்லது, மார்க்க பயான்கள் கேட்டதாகவோ அதிகம் நினைவில் இல்லை... அது அவர்களின் ஆரோக்கியத்தையும் உழைப்பையும், காட்டியது.

எத்தனையோ பெரியவர்கள் தரையில் அமர்ந்தபடியே தொழுவதை கண்டிருக்கிறோம் அன்றும் இன்றும், நாற்காலி போட்டு அமர்வதற்கு ஒரே காரணம் தரையில் அமர்ந்தால் எழுந்திருக்க முடியாத சூழல், கால் மடக்கி உட்கார முடியாத நிலை, நீண்ட நேரம் கால் மடக்கி அமர்ந்தால் எழுந்து நடப்பதில் சிரமம்... ? இவைகள் எதனால் ?

ஏன் இப்படியான நிலை? அச்சமாக இருக்கிறது !

-அபுஇபுறாஹிம்

பழகு மொழி - 12 1

அதிரை-நிருபர்-குழு | Sunday, May 27, 2012 | , ,

(2) சொல்லியல்
சொல் எனப் படுவது யாதெனில், ஓரெழுத்தாக இருந்தாலும் பல எழுத்துகளாகச் சேர்ந்தாலும் தமிழில் பொருள் தருமானால் அது "சொல்" என வழங்கப் படும். சொல்லை வடமொழியில் "பதம்" எனக் குறிக்கின்றனர். பதம் எனும் வடசொல், தமிழ் இலக்கண நூல்களில் வெகுஇயல்பாக ஆளப் பட்டுள்ளது.

எழுத்தே தனித்துந் தொடர்ந்தும் பொருள்தரிற் பதமாம் அதுபகாப் பதம்பகு பதமென இருபா லாகி யியலு மென்ப - நன்னூல் 128.

(2) 1 ஓரெழுத்து ஒருமொழிச் சொற்கள்:
தமிழில் ஓரெழுத்து ஒருமொழிச் சொற்கள் நாற்பதுக்கும் அதிகமுண்டு எனக் கூறுவர். அவற்றுள் பல வழக்கொழிந்து போயின. நாம் தெரிந்து கொள்ளத் தக்க ஓரெழுத்து ஒருமொழிச் சொற்கள் சிலவற்றை இங்குக் காண்போம். "ஓரெழுத்து ஒருமொழி அனைத்தும் நெடிலாக அமையும்; குறிலோசை எழுத்துகள் ஓரெழுத்து ஒருமொழியாக வாரா" என்பது தொல்காப்பியரின் துணிபு : நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி; குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே - தொல்காப்பியம் - மொழிமரபு 10,11.

ஆனால், நாம் பாடம் (1):1:1:3இல் படித்த அகச்சுட்டு எழுத்துகளான அ,,உ ஆகிய மூன்றும் வினா எழுத்தான ''வும் குறில்களே. தனிச் சொல் எனும் தகுதி பெறாமல் இடைச் சொல் வகையைச் சேர்ந்திருப்பதால் அவை ஒதுக்கப் பட்டன போலும். எனினும், தனிச் சொல்லாகவே அமையும் இரு குறில் எழுத்துகளும் உள:

(2) 1:1 ஓரெழுத்து ஒருமொழிச் சொல் - குறில்:
து = சாப்பிடு எனும் பொருள் தரும் ஏவல் வினை

நொ = வருந்து (ஏவல்)

+சொல் = அச்சொல்(சுட்டு)
+பாடம் = இப்பாடம்(சுட்டு)
+பக்கம் = உப்பக்கம்(பின் பக்கம் - சுட்டு)
+நூல் = எந்நூல்? (வினா)


மேற்காணும் ஓரெழுத்து அகச்சுட்டு/வினா ஒருமொழியின் புறச்சுட்டுச் சொற்கள்: அந்த, இந்த, உந்த, எந்த ஆகியனவாகும்.

(2) 1:2 ஓரெழுத்து ஒருமொழிச் சொல் - நெடில்:
 = பசு

 = பறக்கும் பூச்சி; =வழங்கு (ஏவல் வினை)

 = ஊன்/இறைச்சி
 = அம்பு (கருவி)
 = ஐந்து (எண்: ஐ+பால்=ஐம்பால்)
 = மதகில்/அணையில் நீரைத் தடுத்து வைக்கப் போடும் பலகை
கா = காத்தல் (வினை); கா=தோட்டம்/சோலை: பூ+கா = பூங்கா (பெயர்)
கை = கரம் (சினை/உறுப்பு)
கோ = மன்னன்
கௌ = கவ்வு (ஏவல்)
சா = சாவு
சீ = அழி/விலகு/நீங்கு (ஏவல்)
சே = செம்மை (பண்பு)
தா = கொடு (ஏவல்)
தீ = நெருப்பு
தை = தை(காலம்); தை = தையல் செய் (ஏவல்)
நா = நாக்கு
நீ = நீ (முன்னிலைச் சுட்டு)
பா = பாடல்
பூ = மலர்; பூ = பூமி/உலகு
போ = செல் (ஏவல்)
பை = கைப்பை/பணப்பை
மா = மாம்பழம்; மா = பெரிய (பண்பு)
மீ = மேல்
மை = மசி
வா = அழைப்பு (ஏவல்)
வை = வை (ஏவல்)
வௌ = திருடு (ஏவல்)

மீக்கூறிய 28 ஓரெழுத்து ஒருமொழிச் சொற்களுள் கை, சீ, தா, தீ, தை, நீ, பூ, போ, பை, மை, வா, வை ஆகியன நாம் உரைநடைப் பேச்சிலும் எழுத்திலும் இயல்பாகப் பயன்படுத்துபவை. மற்றவை பா எழுதுவதற்குப் பயன் படுவனவாகும்.



இனி, இன்னொன்றும் வழக்கில் வரக்கூடும்: "ஆடி மாதம் ஆற்றில் வெள்ளம் வந்தால் ''ப் போடு!"

- தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.
-ஜமீல் M.சாலிஹ்

கந்தூரி ஊர்வலம் - தடைவிதிக்க கோரிக்கை... 8

அதிரை-நிருபர்-குழு | Saturday, May 26, 2012 | , , , ,


அதிரையில் கடந்த செவ்வாய் கிழமையன்று (22-05-2012) கந்தூரி போதைக் குண்டர்களால் தக்வா பள்ளி அருகில் சகோதரர் அஹமது ஹாஜா தாக்கப்பட்டார், இதனைத் தொடர்ந்து பெரும் கலவரம் ஏற்படும் பீதி ஏற்பட்டது அதன் பின்னர் காவல்துறை ஆய்வாளர் செங்கமலக் கண்ணன் தலையிட்டு சூழலை கட்டுக்குள் கொண்டு வந்தார்.

தக்வா பள்ளி நிர்வாகம் தொழுகைக்கு இடையூறு விளைவித்த கந்தூரி போதைக் குண்டர்களின் செயலைக் கண்டித்தும், கந்தூரி என்ற அனாச்சார ஊர்வலம் இனிமேல் தக்வா பள்ளி மற்றும் நடுத்தெரு வழியாக செல்லத் தடை விதிக்க கோரியும் காவல்துறை ஆய்வாளரிடம் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.



-அதிரைநிருபர் குழு

புதிய நினைவுகள் ...........!!!! 14

அதிரை-நிருபர்-குழு | Friday, May 25, 2012 | , ,


கடற்கரையின் காற்றில்
ஒரு வண்ண மயில்
தோகையை விரித்து
அற்புத எண்ணங்களை
ஓவியமாக இறகுகளில் வரைந்து
விரித்து ஆடியது ஒரு நிகழ்வு எனில்......

கடற்கரையின் காற்றுக்கு அருகிலுள்ள கருமேகமே நினைவுகளாகும்...


                  ***************
கார் மேகங்கள் குவிந்து ,
அங்குமிங்கு அலைமோதி ,
தப்படித்து ,குவியல் குவியலாய்
ஒரே இடத்தில் கூடுவது என்பது நிகழ்வு எனில்.....

தரையில்,மலையின் மேலே நீராவது மேகங்களின் நினைவாகும்...

                   ******************
மலையின் மேலே
அழகாய் தவழ்ந்து ,
மேற்படும் நினைவுகளாம்
இலைகளின் அசைவுகளும் ,பூச்சொரிவுகளும் ,
பறவை ,விலங்குகளின் விளையாட்டையும் ,
தன் மீது வீழும் சருகுகள் ,பூக்கள் என
யாவயும் படம்பிடித்து தவழும் நீரோடை என்பது நிகழ்வு எனில் .....


சற்று தொலைவில் மலையின் நுனியில் ஓரம் சென்று பிரம்மாண்ட அருவியாய் மாறுவது அதன் நினைவாகும் ...

                          ***********
ஆர்ப்பரிக்கும் அலப்பறையில்
நெஞ்சு புடைத்து ,
ஆனந்த திமிரில் சந்தோஷ சிதறல்களாய்
கொட்டும் அருவி என்பது நிகழ்வு எனில்....

எதார்த்தம் அறிந்து தரையில் ஆறாக மாறுவது அருவியின் நினைவுகளாகும்..


                          **************
திக்கு திசை தெரியாமல் ,
பின்புலத்தில் அருவியின் தைரியம் என
மார்தட்டி எதிர்படும் தடைகளை உடைத்து ,மிதித்து
செல்லும் ஆறு ஒரு நிகழ்வு எனில் ..............

சுடும் பிரதேசத்தின் வெயிலினால்
சுட்டு புடமெடுத்த மணல் பருக்கைகளை மின்னிடும்
வைரமாக்குவது ஆற்றின் நினைவுகளாகும் ...........

                   ******************

ஆற்று நீரின் உறவால்
மின்னிடும் மணல் பருக்கையின்
பிம்பங்கள் ஒரு நிகழ்வு எனில் ............
வளமொங்கும் பயிர்களை வளர்த்து
மீந்தும் நீரை வழியனுப்புவது மணல் பருக்கையின் நினைவாகும் ....

                     *************
கடத்தி வரப்பட்ட நீரின்
ஆற்றுப் படுகையில் காய்ந்து ,
பூக்கள் இழந்து நிற்கும் செடிகள் என்பது நிகழ்வு எனில் ......
பருவக்காற்றில் அசைந்தாடும் பூக்களின்
பிம்பங்களை தன மீது சுமந்து ,செடிகளின்
பார்வைக்கு விருந்தாக்க முனைவது ஆற்றின் நினைவுகளாகும் ..

                 ******************
இல்லாத எல்லைகளை தொட்டு
முடித்து,
ஆற்றின் அடைக்கலம் கடல் என்பது நிகழ்வு எனில் ...........
அதன் நினைவுகள் ..???
முதலிலிருந்து படியுங்கள்

---Harmys---

கந்தூரி போதை ::: நடந்தது என்ன !? - காணொளி 2

அதிரை-நிருபர்-குழு | Thursday, May 24, 2012 | , , ,

கந்தூரி போதை வெறியாட்டத்தில் தாக்குதலுக்கு ஆளான சகோதரர் அஹமது ஹாஜா அவர்களிடம் நடந்தது என்ன !? அவரே தான் சார்ந்திருந்த சூழலையும் கலவரக்கார்களின் வெறியாட்டத்தையும் விளக்கிடும் காணொளி நடுநிலையாளர்களின் பார்வைக்கு !

மீண்டும் வழியுறுத்துகிறோம் !

கந்தூரி எனும் இழிவிலிருந்து நமதூர் என்றைக்கு விடுபடுகிறதோ அன்றைக்குத்தான் அதிரை முஸ்லிம்களின் மானம் காக்கப்படும்.



கவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை – 19 4

அதிரை-நிருபர்-குழு | Wednesday, May 23, 2012 | ,


கவிதைகள் பற்றிய நபியவர்களின் நிலைபாட்டை அறியாத நிலையில் – தமது இஸ்லாத்தின் தொடக்க காலத்தில் –  நபித்தோழர் உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் கவிதைகள் இயற்றும் கவிஞர்களைச் சாடிவந்தார்கள்!  ஆனால், பிற்காலத்தில் அன்னார் இஸ்லாத்தின் இரண்டாவது மக்கள் பிரதிநிதியாக (கலீஃபா)ப் பொறுப்பேற்ற பின்னர், கவிதைகளை ஆதரித்ததுடன், கவிதைக் கலையைச் சிறார்களுக்குக் கற்றுக் கொடுக்குமாறு ஆர்வமூட்டியுள்ளார்கள் என்ற உண்மையை அன்னாரின் வரலாறு நமக்குக் கூறாநிற்கின்றது.  அதற்கான சான்றுகளை இப்பதிவில் காண்போம்.

நபியின் பாசறையில் வார்த்தெடுக்கப்பட்டவராதலால், உமர் இதில் மிகுந்த எச்சரிக்கையையும் கடைப்பிடித்தார்கள். ‘ஜாஹிலிய்யா’ எனும் அறியாமைக் காலம் முதல், அரபுகளிடம் கவி புனையும் பழக்கம் இருந்துவந்ததை முந்தையப் பதிவுகளில் நாம் கண்டோம். அப்பழக்கம் இஸ்லாத்திலும் தொடர்ந்ததால், ஓரிரு வரம்பு மீறல்கள் நடக்கவே செய்தன. அத்தகைய வரம்பு மீறல்களை உமரவர்கள் வன்மையான கட்டளைகளைக் கொண்டு தடுக்காமலும் இருக்கவில்லை. இத்தகைய கவிதைகளில் பாலியல் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகப் பெண்களின் பெயர்களுடன் சில கவிதைகள் வலம் வந்தபோது, உமரவர்கள் அவற்றிற்குத் தடை விதித்தார்கள்.  கலீஃபாவின் இக்கட்டளையை மீறிய கவிஞர்கள் மீது கடுமையான தண்டனை பாய்ந்தது!

ஆனால் அதே வேளை, உமரவர்கள் தமது ஆட்சியின் கீழ் இருந்த மாநிலங்களின் ஆளுநர்களுக்கு அவ்வப்போது கட்டளைகள் பிறப்பித்த நேரங்களில், பள்ளி மாணவர்களின் பாடத் திட்டத்தில் கவிதைக் கலையையும் ஒரு பாடமாகச் சேர்த்துப் பயிற்றுவிக்குமாறு அறிவித்தார்கள்!
(சான்று: அல்லாமா, அபுல்ஃபரஜ் இஸ்ஃபஹானியின்كتاب الاغاني)    

உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில், அவர்களால் அமர்த்தப்பட்ட மாநிலங்களின் ஆளுநர்களுள் சிலர் ஆடம்பர வாழ்க்கையை மேற்கொண்டுள்ளார்கள் என்ற தகவல் கலீஃபாவுக்குக் கிட்டியது. உடனே எச்சரிக்கை ஓலை பறந்தது!  அதன் பயனாக, திருந்தியவர்கள் அடங்கினார்கள்; இன்னும் சிலர் விளக்கமளித்தார்கள். அவர்களுள் காலித் இப்னு சஈத் (ரலி) என்ற நபித்தோழர் ஒருவர். கலீஃபாவின் கவிதை ஆர்வத்தைக் கருத்துள் கொண்டு, காலித் (ரலி) கவிதையிலேயே மறுமொழி வரைந்தனுப்பினார்கள்.
(சான்றுகள்:فتوح البلدان /كتاب الخراج  )  

கலீஃபா உமர் (ரலி) அவர்கள் நபியின் பள்ளிவாசல் எனப்படும் ‘மஸ்ஜிதுன் நபவி’யை விரிவு படுத்திக் கட்டியபோது, பள்ளியின் வளாகத்தினுள் மேடையொன்றை அமைத்து, அதை மக்களின் பொது மன்றமாகவும் கவிஞர்களின் கவியரங்கமாகவும் ஆக்கினார்கள்!
(சான்று: خلاصة الوفاء في أخبار دار المصطفى

தம் அருமைத் தோழர் உமரைப் பார்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,

يا ابن الخطاب، والذي نفسي بيده ما لقيك الشيطان سالكا فجا قط إلا سلك فجا غير فجك

(கத்தாபின் மகனே!  என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மீது ஆணையாக, ஒரு தெருவில் நீங்கள் நடந்து செல்வதை ஷைத்தான் கண்டால், அவன் உங்கள் தெருவை விட்டு வேறொரு தெருவில்தான் செல்வான்) என்று சொன்னார்கள்.
(சான்றுகள்: சஹீஹுல் புகாரீ – 3294/3683/6084, சஹீஹ் முஸ்லிம் - 4768)

மேலும் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

لو كان بعدى نبى لكان عمر بن الخطاب

“எனக்குப் பின்னர் நபி இருப்பாராயின், அவர் உமராகத்தான் இருப்பார்.  எனினும், எனக்குப் பின் நபியில்லை.”
(திர்மிதீ(3686), முஸ்னது அஹ்மத், ஹாக்கிம், தபரானி, இப்னு ஹிப்பான்)

இறைத்த தூதர் (ஸல்) அவர்கள் இன்னும் கூறினார்கள்:

إن الله جعل الحق على لسان عمر وقلبه

திண்ணமாக, அல்லாஹ் உமரின் நாவின் மூலமும் இதயத்தின் மூலமும் உண்மையை உறுதிப் படுத்திவிட்டான்.”    (சான்று: திர்மிதீ – 2682)  

மேற்கண்ட சிறப்புகளையும், ‘ஷஹீத்’ (புனிதப் போரில் உயிர் துறப்பவர்) என்ற பெருஞ்சிறப்பையும் பெற்ற கலீபா உமர் (ரலி) அவர்களின் கவிதைப் பற்றினைப் பற்றி அறியும்போது, நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

(ஆய்வு இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)
-அதிரை அஹ்மது
adiraiahmad@gmail.com

கந்தூரி போதையால் அதிரையில் வன்முறை ! 29

அதிரை-நிருபர்-குழு | Wednesday, May 23, 2012 | , ,


இன்று (22-05-2012) மாலை மேலத்தெரு கந்தூரியின்போது மேலத்தெருவைச் சேர்ந்த நால்வரால், நடுத்தெரு 19ஆம் வார்டு உறுப்பினர் சகோதரி சவ்தாவின் கணவரும் த.மு.மு.க. தொண்டருமான சகோதரர் அஹ்மது ஹாஜா தாக்கப்பட்டார்.

நமதூரில் கந்தூரிகள் களையிழக்கத் தொடங்கியுள்ள இக்காலகட்டத்தில், அல்லாஹ்வின் இல்லமான பள்ளிவாயில்களைக் கடக்கும்போது, தாரை தப்பட்டை டான்ஸு போன்றவை இருக்கக்கூடாது என்று மேலத்தெரு தவ்ஹீதுச் சகோதரர்களால் காவல்துறையிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டு, ஆர்.டி.ஓ. முன்னிலையில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி, அதிரையில் உள்ள பள்ளிகளுக்கு முன்னும் பின்னும் நூறு நூறு மீட்டர்களுக்குள் எவ்விதை ஓசையும் இருக்கக்கூடாது என்று ஆர்.டி.ஓ. உத்தரவிட்டிருந்தார்.

அந்த உத்தரவு மேலத்தெரு பாக்கியாத் ஸாலிஹாத் பள்ளியில் கடைபிடிக்கப்பட்டு, கந்தூரி ஊர்வலம் மௌன ஊர்வலமாகச் சென்றது. தக்வாப் பள்ளிக்கு ஊர்வலம் வரும்போது மக்ரிபுத் தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தது. பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளிவாயிலில் கடைபிடிக்கப்பட்ட அமைதியை கந்தூரி ஊர்வலத்தினர் தக்வாப் பள்ளி அருகில் கைவிட்டனர்.

மக்ரிபுத் தொழுகை முடிந்து ஸலாம் கொடுக்கும்போது வழக்கமான முழக்கங்களுடன் கந்தூரி ஊர்வலம் கடப்பதைக் கண்ட சகோதரர் அஹ்மது ஹாஜா, ஊர்வலத்தை மேற்பார்வையிட வந்து, தக்வாப்பள்ளிக்குப் பின்புறம் நின்றிருந்த நமதூர் இன்ஸ்பெக்டர் செங்கமலக் கண்ணனிடம் சென்று புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அங்கிருந்து அகன்று மேள-தாளக்காரர்களிடம் சென்று பாட்டு-தாளங்களை நிறுத்துமாறு சொல்வதற்காகச் சென்றுவிட்ட வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட கந்தூரி போதையினர், சகோதரர் அஹ்மது ஹாஜாவைத் தக்வாப் பள்ளிக்குப் பின்புறமுள்ளஅவரது வீட்டுச் சந்தை அடுத்த சந்துக்குள் தள்ளிச் சென்று கீழே தள்ளி, அவரது நெஞ்சிலும் இடுப்பிலும் மாறி, மாறி கால்களால் உதைத்தும் கைகளால் தாக்கியும் நையப் புடைத்துள்ளனர். ஒத்தைக்கு ஒத்தை என்றால் சமாளிக்கக்கூடிய சகோதரர் அஹ்மது ஹாஜா, கயவர்கள் நான்கு பேர் என்பதால் நிலைகுலைந்து போனார். பலத்தை காயமடைந்த அவர், தற்போது பட்டுக்கோட்டை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தனிப்பட்ட முன்விரோதம் ஏதுமில்லாத இந்தக் காட்டுமிராண்டித் தாக்குதல், கந்தூரிக் கமிட்டித் தலைவர் மற்றும் குழுவினரின் தூண்டுதலால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கும் என்பதே நடுநிலையாளர்களின் ஐயமாகும்.

சகோதரர் அஹ்மது ஹாஜாவைத் தாக்கிய நால்வரின் பெயர்களைக் குறிப்பிட்டு, நகர த.மு.மு.கவினர் திரளாகச் சென்று, அதிரை நகரக் காவல்துறையில் புகார் அளித்திருக்கின்றனர். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் அதற்கான சான்றிதழைத் த.மு.மு.கவினருக்கு வழங்கியுள்ளனர். அத்துடன், எஃப் ஐ ஆர் பதிவு செய்து, குற்றவாளிகளை நாளைக்குள் கைது செய்து விசாரிக்கப் போவதாக உறுதியளித்துள்ளனர். த.மு.மு.கவின் மாநிலச் செயலாளர் தமீமுன் அன்ஸாரி, டி எஸ் பியிடம் தொலைபேசி வாயிலாக புகார் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக நகர த.மு.மு.கவினர் நாளைக் காலை பத்து மணிக்கு அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளனர்.

குற்ற நிகழ்வு, நகர காவல்துறை ஆய்வாளர் செங்கமலக் கண்ணன் ஸ்பாட்டில் இருக்கும்போது நடந்தேறியது என்பதால் குற்றவாளிகள் நிச்சயம் தப்பித்துவிட முடியாது.

இச்சம்பவத்தில் நடுநிலை வகிக்க வேண்டிய பொறுப்பான பதவியில் இருப்பவர்களே, கந்தூரிக் கோஷ்டியினருக்கு வெளிப்படையான ஆதரவாளராகத் தன்னை இனங்காட்டிக் கொள்வதும் குற்றவாளிகளுக்குப் பரிந்து பேசுவதும் அவர்களது தூய சேவைகளுக்கு இழுக்கைத் தேடித் தருவனவாகும்.

கந்தூரி எனும் இழிவிலிருந்து நமதூர் என்றைக்கு விடுபடுகிறதோ அன்றைக்குத்தான் அதிரை முஸ்லிம்களின்  மானம் காக்கப்படும்.

-அதிரைநிருபர் குழு

தலைவர் யார் ? ! 9

அதிரை-நிருபர்-குழு | Tuesday, May 22, 2012 | , ,


1. நானே பெரியவன்..... நானே சிறந்தவன்......என்னைவிட உயர்ந்து வர ஒருவன் பிறந்து வரனும் என்று தன்னைத் தானே எப்போதும் உயர்த்தி பேசுவது

2. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாதது

3. எதிர்மறையாகச் சிந்திப்பது

4. பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது.

5. தோல்வியைக் கண்டு முடங்கிவிடுவது

6. அடுத்தவர் வேலைகளில் குறுக்கீடு அல்லது குறைகள் சொல்வது

7. தன்னை அடுத்தவர் புகழக்கேட்டு மனம் மகிழ்வது.

8. சிறியப் பிரச்சனைகளை ஊதிப் பெரிதாக்குவது. அடுத்தவர்கள் மீது பழிபோடுவது

9. மலிவான விளம்பரங்களைத் தேடிக்கொள்வது

10. பதவி...! பதவி...!! பதவி...!!! என்ற நினைவில் வாழ்வது 

போன்ற தீய எண்ணங்களைத் தூக்கி தூர வைத்துவிட்டு

நல்லப் பண்புகளாகிய.............

1. எளிமையாக வாழ்தல்

2. ஒழுக்கம், கட்டுப்பாடு, நல்ல நட்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொறுமை, அன்பு செலுத்துதல், கடமையை நிறைவேற்றுதல் ( இஸ்லாம் )

3. வேகமாகச் செயல்படுதல்

4. எப்பொழுதும் நேர்மையாக செயல்படுதல்

5. தொடர்ந்து கற்றுக்கொண்டே இருத்தல்

6. மூத்தோர்களின் நல்ல அனுபவங்களைப் பெறுதல்

7. ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுதல்

8. தீர்க்கமான முடிவு செய்தல்

9. வீண் விரயத்தைக் குறைத்தல்

10. தரத்தை மேம்படுத்துதல்

11. திட்டமிடுதல்

12. முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளை வழங்குதல்

13. எளியோருக்கு உதவுதல்

போன்றவற்றை வளர்த்துக்கொள்ளுங்கள். வாழ்வில் நிச்சயம் மேன்மை அடைவீர்கள். இதற்கு சிந்தனையைத் தூண்டும் ஒரு எடுத்துக்காட்டை தங்களுக்கு கூற விரும்பிகிறேன்.....

நூறு பேர் கூடியிருந்தக் கூட்டத்தில் ஒரு பேச்சாளார் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டைக் காட்டி “யாருக்கு இது பிடிக்கும் ? ” எனக் கேட்டார். கூடியிருந்த அனைவரும் தனக்கு பிடிக்குமென கையைத் தூக்கினர். பேச்சாளாரோ “உங்களில் ஒருவருக்குத்தான் இந்த ஆயிரம் ரூபாயைத் தருவேன் ஆனால் அதற்கு முன்” எனச் சொல்லியவாறு அந்த ஆயிரம் ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா ?” என்றார். “ஆம்“ என்று அனைவரும் கையைத் தூக்கினர். 

மீண்டும் அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா ?” என்றார் “ஆம் “ என்று அனைவரும் மீண்டும் கைகளை தூக்கினர். 

அவர் தொடர்ந்தார்.....கேவலம் ஒரு ஆயிரம் ரூபாய்த்தாள் பல முறை கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப்படும் போதும் , தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கின்றோம். நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருத் தனித் தன்மையை “அல்லாஹ்” நமக்கு வழங்கியுள்ளான். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. ஆகையால் நாம் ஒவ்வொருவரும் செய்யும் நல்ல செயல்களின் மூலம் சிறந்தவன், ஒழுக்கமானவன், தலைமை வகிக்க தகுதியானவன் போன்ற சிறப்பைப் பெறுகின்றோம்...... 

நீங்கள் ஒருவருக்கோ அல்லது நூறு பேருக்கோ சிறந்தவனாகவோ அல்லது தலைவனாகவோ இருந்தாலும் சரி அல்லது இல்லாவிட்டாலும் சரி தன்னம்பிக்கையை இழக்காமல் நல்ல பண்புகளைத் தேர்ந்தெடுத்துக் கடைப்பிடியுங்கள். சமூகத்தில் நல்லவர்கள் எண்ணிக்கை கூடுதலாக வருவதற்கு நீங்கள் ஒரு காரணமாக இருப்பீர்கள் ( இன்ஷா அல்லாஹ் ! )

-சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்....

பழகு மொழி - 11 2

அதிரை-நிருபர்-குழு | Monday, May 21, 2012 | ,


இலக்கணப் போலி என்றும் எழுத்துப் போலி என்றும் போலிகள் இருவகைப்படும்.

இப்போது எழுத்தியலை நாம் பயின்று கொண்டிருப்பதால் எழுத்துப் போலிகளை அறிந்து கொள்வோம்.

ஒரு சொல்லில் உள்ள ஓர் எழுத்தை மாற்றி எழுதினாலும் பொருள் வேறுபடாமல் அமைந்தால் அவ்வெழுத்து, போலி எனப்படும். போல வருவது போலி என்றானது.

இயல்பான சில எழுத்துகளுக்குப் பகரமாகப் போலி எழுத்துகள் இடம் பெறுவது வழக்கில் உள்ளது என்பதையும் அவ்வாறு எழுதுதல் குற்றமில்லை என்பதையும் தெரிந்து கொள்வதற்குப் போலிகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

(1):11 எழுத்துப் போலிகள்
எழுத்துப் போலிகள் மூவகைப் படும்.

(1):11:1 முதற்போலி
ஒரு சொல்லின் இயல்பான முதலெழுத்துக்குப் பகரமாய், வேறு எழுத்துகள் பயன்படுத்தப் பட்டிருந்தால் அது முதற்போலி எனப்படும்.

(1):11:1:1 ''காராத்துக்குப் பகரமாய், 'அய்' எனும் இரு எழுத்துகள் போலிகளாக எழுதப் படும். காட்டுகள் :யா=அய்யா; ஐயன்மீர்=அய்யன்மீர்

(1):11:1:2 ''காரத்துக்குப் பகரமாய், 'அவ்' எனும் இரு எழுத்துகள் போலிகளாக எழுதப் படும். காட்டுகள் : வையார் = அவ்வையார்; டதம் = அவ்டதம்

(1):11:1:3 ''கரத்துக்கு ''கரம் போலியாக எழுதப் படும்.காட்டுகள் : யம்பட = யம்பட; நாயிறு=ஞாயிறு

(1):11:2 இடைப்போலி
ஒரு சொல்லுக்கு இடையில் இயல்பான எழுத்தை விடுத்து வேறு எழுத்தைப் போட்டு எழுதுவது இடைப்போலி எனப்படும்.

''கரத்துக்கு ''காரம் போலியாக எழுதப் படும்.

காட்டுகள் : யன் = அரையன்; மை = பழைமை; மை = இளைமை

(1):11:3 கடைப்போலி
ஒரு சொல்லின் கடைசியில் உள்ள இயல்பான எழுத்துக்குப் பகரமாய் வேறோர் எழுத்து இடம் பெறுவது கடைப்போலி எனப்படும்.

(1):11:3:1 மகர ஒற்றுக்கு னகர ஒற்று, போலியாக வரும்.

காட்டுகள் : அறம்=அறன்; திறம்=திறன் (அறன் அறிந்து வெஃகா அறிவுடையோர்ச் சேரும் திறன் அறிந்து ஆங்கே திரு - குறள்) நயம்=நயன் (நயன் இல சொல்லினும் சொல்லுக சான்றோர் பயன் இல சொல்லாமை நன்று - குறள்) குலம்=குலன் (இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலன் உடையான் கண்ணே உள - குறள்) நலம் = நலன்; கலம்=கலன்; நிலம்=நிலன்

(1):11:3:2 லகர ஒற்றுக்கு ரகர ஒற்று, போலியாக வரும்.

காட்டுகள் : குடல்=குடர்; சுவல்=சுவர்; பந்தல்=பந்தர்; சாம்பல்=சாம்பர்

(1):11:3:3 லகர ஒற்றுக்கு ளகர ஒற்றும் போலியாக வரும்.

காட்டுகள் : மதில்=மதிள்; செதில்=செதிள்.

எழுத்தியல் இத்துடன் நிறைவடைகிறது.


சொல்லியலைத் தொடங்குவோம், இன்ஷா அல்லாஹ்.


- தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.
-ஜமீல் M.சாலிஹ்


அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துக்கள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துக்கள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசகர் நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துக்கள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

உமர் தமிழ் தட்டசுப் பலகை