Tuesday, October 22, 2013

அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக!

ஹஜ்ஜை முடித்தநல் ஹாஜீரே
அச்சம் இறையுடன் கொண்டோரே
இச்சை துறந்திடும் பண்பீரே
பச்சைக் குழந்தையாய் ஆனீரே!

மஹ்ஷர் நினைவினில் கூட்டத்தில்
அஹ்மத் நபிகளும் காண்பித்த
இஹ்ராம் உடையுடன் ஓட்டத்தில்
இஹ்சான் உணர்வுடன்  சென்றீரே!

கண்ணீர் வடித்ததால் பாவங்கள்
தண்ணீர் கழுவிய தோற்றத்தில்
எண்ணம் முழுவதும் உள்ளத்தில்
வெண்மை மொழுகிடச் செய்தீரே!

வண்ணம், இனங்களும் வேறாகி
வெண்மை உடுத்திய தோற்றத்தில்
எண்ணம் , நினைவுகள் ஒன்றாகி
கண்ணில் நிறுத்திய  கஃபாவில்

சுற்றி வருவதும்  குர்பானி(யால்)
பற்றை அறுப்பதும் செய்தீரே
கற்றுத் தெளிந்ததும் ஈமானில்
சற்றும் விலகிடாச் சான்றோராய்!

கோபம் குறைகளை  மன்னித்து
பாபச் சுமைகளை நிந்தித்து
தீபச் சுடரெனத் தீன்ஏந்தி
சாபம் களைந்திடச் செய்தீரே!

பல்லா யிரமெனப் பாரோரும்
கல்லால் எறிந்ததேன் ஷைத்தானை
உல்லா  சமாகவே இல்லாமல்
அல்லாஹ் விதித்தநல் லாணைக்கே!

வற்றாக் கிணறென ஜம்ஜம்நீர்
முற்றும் குடித்தநல் ஹாஜீரே!
இற்றைப் பொழுதினில் இன்பம்தான்
சுற்றம் சுகம்பெறத் தந்தீரே!

மங்காச் சுடரென மக்காவில்
பொங்கும் அருளொளி   ஈமானை
எங்கள் இடத்தினில் ஏற்றீரே
தங்க மனத்துடன் வாரீரே!

”கவியன்பன்” கலாம்

17 comments:

  1. Assalamu Alaikkum

    Dear brother Mr. Kaviyanban Abul Kalam,

    Its spiritual and seasonal poem to invite the Hajis. Simply excellent!!!.

    May Allah give 'Annaseeb' to perform our Haj too. InshaAllah.

    Thanks and best regards,

    B. Ahamed Ameen from Dubai,
    www.dubaibuyer.blogspot.com

    ReplyDelete
  2. இனிமை!
    ஹஜ் செய்யும் நல்ல நஸீபை நம் அனைவருக்கும் அல்லாஹ் நாடிடுவானாக ஆமீன்.

    ReplyDelete
  3. //வற்றாக் கிணறென ஜம்ஜம்நீர்
    முற்றும் குடித்தநல் ஹாஜீரே!
    இற்றைப் பொழுதினில் இன்பம்தான்
    சுற்றம் சுகம்பெறத் தந்தீரே!//

    என் சென்ற ஏக்கத்தை இக்கவியில் ஜம் ஜம் நீர் ஊற்றி பெருமைப்படுத்தியதன்
    மூலம் , நிறைவு செய்த அன்பு நண்பர் கவியன்பன் அவர்களுக்கு
    ஜஜாக்கல்லாஹு ஹைர்.

    பாவக்கறைகள் படிந்தன எந்தன் பத்து விரல் கொண்ட கைகள்.
    தாவிக்குதித்து வெண்மை உடையில் தவறுகள் விலக லெப்பைக் .. அல்லாஹும்ம லெப்பைக் என்ற எண்ணத்தோடு
    சத்திரம் போன்ற உலக வாழ்வு இது வருவது போவது தானே என்ற நினைப்போடு ,

    புத்தியில் பட்டது புரிய வந்தது புகலிடம் தேடிவந்தேன் இறைவா !
    சரணடைந்தேன் உன்னிடம் இறைவா !

    அபு ஆசிப்.

    ReplyDelete
  4. அருமையான வரவேற்பு.

    கவியன்பனின் அணியில் நின்று வரவேற்கும் அதிரை நிருபர் குடும்பத்தில் நானும் ஒருவனாக நிற்கிறேன்.

    கொத்து மலர்போலவும் கொட்டும் மழைபோலவும் உங்கள் கவிதை புத்துணர்வோடு பொழிவாயைருக்கிறதுகவியன்பன்.

    ஹாஜிகள் தொடர்ந்து வாழ்நாள் முழுதும் ஹாஜிகளுக்கான லட்சணங்களோடே வாழ அல்லாஹ் அருள் புரிவானாக.

    வாழ்த்தி வரவேற்கும் தஙகளுக்கும் அருள் புரிவானாக, ஆமீன்.

    ReplyDelete
  5. Wa alaikkum Salaam, Brother Ahmed Ameen,

    Jazaakkumullah khairan wa aafiya.

    ReplyDelete
  6. இனிமையை இதமாய்க் கண்டுணர்ந்த இலண்டன் இளங்கவி அவர்களே!

    ஓசையின் நயத்தின் வார்ப்புக்குள் வார்த்தைத் தேந்துளிகள் இடப்பட்ட தேனடையாம் செய்யுள் இனிமையே செய்யும் என்பதை உணர்ந்த உங்களின் வாழ்த்தினுக்கும் ஹஜ்ஜை நசீபாக்க நாடிய துஆவிற்கும் என் உளம்நிறைவான நன்றிகள்= ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா.

    ReplyDelete
  7. அன்பின் இனிய நண்பர் தேனிசைக் குரலோன் அப்துல் காதிர் அவர்கள் பின்னூட்டத்தில் சென்ற என் கவிதையில் ஜம்ஜம் நீரைப் பற்றிய வரிகள் இல்லை என்ற குறையைச் சொன்னீர்கள். அதனை நிறைவுச் செய்யும் எண்ணம் வைத்தே எழுதி வந்த வேளையிலும் உங்களிடமிருந்து இப்படிப்பட்ட பின்னூட்டம் மறுமொழியாக வருவதும் திண்ணம் என்று எண்ணியது என் மனம். இந்தப் பாடல் உங்களின் இனிய குரலின் லயத்திற்குள் கட்டுப்படும் என்பதும் என் எண்ணம்; இதன் வடிவமும் வண்ணப்பாடலை ஒத்தது என்பதால், பாடிப் பாருங்கள்; பிடிபடும் உங்களின் குரலுக்குள் என்றன் கவிவரிகள், இன்ஷா அல்லாஹ்!

    உங்களின் வாழ்த்தினுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்= ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா.

    ReplyDelete
  8. அன்பின் கவிவேந்தரே!

    அணியின் வரிசையில் நின்று யான் அணிவிக்கும் இப்பாமாலைக்கு அணிந்துரை வழங்கி, உங்கட்கே உரித்தான நடையில் ஆய்வுரையும் எழுதி, தமியேனுக்கு மீண்டும் ஹஜ் செய்யும் பேறு கிட்டவேண்டும் என்றும் துஆ செய்து, ஹஜ்ஜை முடித்து அருளைச் சுமந்த ஹாஜிகள் என்றென்றும் அதே புத்துணர்வுடன் வாழ வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுதியமைக்கு என்றன் மனம்நிறைவான நன்றிகள்= ஜஸாக்குமுல்லாஹ் கைரன்.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. புனிதமிகு ஹஜ்ஜினை நிறைவு செய்துள்ள நம் சொந்தங்களான ஹாஜிகள் அனைவருடைய ஹஜ்ஜையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக.

    கவியன்பனின் கம்பீரமான வரிகள்...

    இஸ்லாத்தில் பின்னணி இசை ஹராமாக்கப் படாவிட்டால் இக்கவிக்கு மெட்டிட்டு பின்னணி அழகு சேர்த்து நானே என் குரலில் பாடி அரங்கேற்றியிருப்பேன்

    எனினும் இக்கவியை இசையின்றி மெட்டிட்டு அரங்கேற்ற முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  11. பொருத்தமான நேரத்தில் பொருத்தமான கவிமழை பொழிவது கவியன்பன் என்ற கவி மேகத்தின் வாடிக்கை.
    வான் மழை பொய்த்தாலும் இந்த வார்த்தை மழை பொய்க்காது.

    உங்களின் கவிதை மலர்களைக் கொடுத்து ஹாஜிகளை வரவேற்போம் இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
  12. அன்பின் தம்பி ஜாஃபர், அஸ்ஸலாமு அலைக்கும், இப்பாடலை இசையின்றியே பாடலாம், இஃது ஒரு வண்ணப்பாடலின் வாய்பாட்டின் அமைப்பில் ஓசை நயம் இட்டு யாத்துள்ளேன்; இதனை யாத்துக் கொண்டிருக்கும் பொழுதினில் யானே சப்தமிட்டுப் பாடிக் கொண்டே யாத்தேன். (மரபுப் பாவின் அடிப்படையும் அப்படித்தான்; சப்தமிட்டுச் சொல்லிக் கொண்டே அசைகளை அமைக்கும் தருணம், ஓசையின் நயம் விளங்கி விடும்). எனவே, இசையின்றியே பாடிப் பாருங்க்ள். மிக்க நன்றி.

    ReplyDelete
  13. அன்பின் இ.அ.காக்கா, அஸ்ஸலாமு அலைக்கும்,

    பொருத்தமான நேரத்தில் பொருத்தமான தலைப்பும், வார்த்தைகளும் எதிர்பார்த்துக் காத்திருப்பது தான் ஓர் இலக்கியப் படைப்பாளனின் எண்ண ஓட்டம் என்பதை , ஓர் எழுத்தாளாராகிய தாங்கள் அறிந்திருப்பதைக் காண்கின்றேன். வாய்ப்பும், வார்த்தைகளும் வந்ததும் “சட்”டென்று பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும்; விட்டு விட்டால் வாய்ப்பும், வார்த்தைகளும் வாரா. ஒரு வார்த்தைக் கிட்டியதும் அலுவலகக் கணியிலாவது அதனைப் பிடித்துப் போட்டு அங்கிருந்தே யாத்திடும் ஓர் அரிய பழக்கத்தை எனக்கு அறிவுறுத்திய முகநூல் தோழமையை எண்ணி நன்றி கூறுகிறேன்; அவர்கள் சொன்னது இப்படித்தான், “ கவிதையோ, கட்டுரையோ உங்கள் எண்ண ஓட்டத்தில் - இரத்த ஓட்ட அணுக்களைப் போல் ஓடிக் கொண்டிருக்கும் அவ்வார்த்தை அணுக்களை விட்டு விடாமல் அப்படியே பிடித்துப் பாதுகாப்பில் வைத்து விடுங்கள்; இல்லையெனில், பின்னர் நீங்கள் தேடினாலும் கிட்டாது உங்களின் எண்ண ஓட்டத்தில்- உதிப்பில் ஓடி வந்த அவ்வார்த்தைகள்” என்று எனக்கு அறிவுறுத்திய அந்த முகநூல் தோழமையின் அறிவுரையை யான் அப்படியே பின்பற்றுவதாற்றான், தாங்கள் கருத்துரையிலிட்டபடித் தமியேனால் உடனுக்குடன் - பொருத்தமான நேரத்தில் கவிமழை பொழிய முடிகின்றது; அல்ஹம்துலில்லாஹ்! காட்டு: நேற்றிரவு தான் (நாளை வியாழன் கவிதை நேரத்திற்கான தலைப்பை இலண்டன் வானொலியார்) தலைப்பைத் தந்தனர். யான் மேற்கூறிய வண்ணம் என் எண்ண ஓட்டத்தில் ஓடிக் கொண்டிருந்த வார்த்தைகளை வைத்து உடனுக்குடன் வார்தைகளைப் பிடித்துப் போட்டு இதோ இன்று அனுப்பி வைத்த என் கவிதையில் சில வரிகள்:

    \\படிக்கும் பருவத்தில் பண்பின் எதிர்பார்ப்பு
    அடிக்கும் தருவாயில் அன்பின் எதிர்பார்ப்பு
    துடிக்கும் உடலும்தோள் தொங்க எதிர்பார்ப்பு
    வடிக்கும் கவிதைக்கு வார்த்தை எதிர்பார்ப்பு\\

    இதனை ஈண்டுப் பதிவதன் நோக்கம்: என்னை முன்னிலைப்படுத்துவதற்கன்|று. மாறாக, தாங்களும் ஓர் எழுத்தாளர் என்பதால் , என்னை விட வயதிலும் அனுப்வத்திலும் மூத்த காக்காவாகவும் இருக்கின்றீர்கள்; என்னிடம் உள்ளவற்றைத் தங்களிடம் பகிரவதைக் கொண்டு தங்கட்கும் வார்த்தைகளை விட்டு விடாமல் சிந்தை என்னும் பாதுகாப்புப் பெட்டகத்தில் போட்டு வைக்க வேண்டும் என்பதை நினைவுறுத்தவே எனபதையும் சொல்லிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  14. பொருத்தமான நேரத்தில் பொருத்தமான கவிமழை

    ReplyDelete
  15. பதிவுகளுக்கு கருத்திட்டால்தான் அங்கீகாரம் என்று இல்லை ! வாசிக்கும் அனைத்துள்ளங்களுக்கும் ஏதேனும் சொல்லத்தான் ஆசை... வாய்ப்புகள் வலைக்குள் சிக்கமால் நழுவிக் கொண்டிருப்பதால் கருத்தாடலில் பங்கெடுக்க முடியவில்லை... வேலைப் பளுவும் அழுத்தியெடுக்கிறது...

    வரவேற்புக்கு முன்னாடி நிற்க வேண்டிய நானே லேட்டாக வருவதாக நினைக்க வேண்டாம் !

    என்னோட கருத்தை ஒரே வரியில் ஏற்கனவே தனி மின்னஞ்சலில் சொல்லியிருக்கிறேன் அதில் எவ்வித மாற்றமும் வராதபடி தங்களின் தமிழ் தரம் தூக்கியே நிற்கும் இன்ஷா அல்லாஹ் !

    ReplyDelete
  16. அன்பின் சுட்டும் விழிச்சுடரே!

    பொருத்தமான பாராட்டுகளும்; பதவிகளும் யான் தேடிச் செல்லாமலே, தமியேனைத் தேடி வருதற்கண்டு, அல்லாஹ் என்மீது காட்டும் அருட்பேற்றினை எண்ணி அவனுக்கே புகழனைத்தும் என்று “அல்ஹம்துலில்லாஹ்” கூறுவதுடன், உங்கட்கும் நன்றியை உரித்தாக்க “ஜஸாக்கல்லாஹ்” என்னும் துஆவைச் சொல்லுகின்றேன். மீண்டும் மீண்டும் என்னிலை உயரும், இன்ஷா அல்லாஹ்!

    ReplyDelete
  17. அன்பின் நெறியாளர் அபுஇபு அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்,

    உங்களின் ஆதரவுடனும், அனுமதியுடனும் என் கவிதைகள் பதிவு செய்யப்படுதல் ஒன்றே போதும் என்று எண்ணும் எனக்கு, உங்களால் பதிவுக்கு அனுமதிக்கப்பட்டு ஈண்டுப் பதிவுக்குள் வந்த பின்னர் இடப்படும் அத்தனை பின்னூட்டங்களும், உங்களின் பதிவினாற்றான் என்ற எண்ணத்தில் இருக்கும் போதில், அத்தனை பின்னூட்டங்களும் உங்களின் பின்னூட்டஙக்ளாகவே ஆகும்.

    கடைவிரித்தேன்; கொள்வாரில்லை என்பதன்று என் நோக்கம். நீங்கள் குறிப்பிட்டக் கருத்துகள் உண்மையிலும் உண்மையாகும். ஆம். பின்னூட்டங்களை மட்டும் வைத்துத் தரம் பிரிக்க இயலாது என்பதும், இன்ஷா அல்லாஹ் என் தமிழ் என்றும் தரம் உடையதாய் இருக்கும் என்ற உங்களின் தனிமடல் கருத்தும் நிலைபெற அல்லாஹ்வின் உதவியும், என் கடின உழைப்பும் இருக்கும் காலமெல்லாம் கைகூடும்,

    என் தமிழைச் சீர்படுத்தி, என்னைப் பட்டைத்தீட்டும் சிற்பிகளான ஆசான்கட்கே உங்களின் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் சமர்ப்பிக்கின்றேன். அல்லாஹ்வின் அருளால் மட்டுமே அப்படிப்பட்ட ஆசான்கள் எனக்குக் கிட்டினர்; அவர்களுல் முதன்மையானவர்கள் நம் மதிப்பிற்குரிய அதிரை அஹ்மத் காக்கா ஆவார்கள்,

    நீங்கள் உளம்போந்து எழுதிய வாழ்த்தினுக்கு என் உளம்நிறைவான நன்றிகள், ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா.

    ReplyDelete

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.