Showing posts with label அபூசுஹைமா. Show all posts
Showing posts with label அபூசுஹைமா. Show all posts

சான்றோன் எனக்கேட்ட தந்தை! 33

அதிரைநிருபர் பதிப்பகம் | June 01, 2013 | , , , , , ,

"ஈன்ற பொழுதினும் பெரிது உவக்கும்-தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்."

என்ற குறள் வரியை நடைமுறையில் உணரும் பாக்கியத்தை அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ளான். அல்ஹம்துலில்லாஹ்!

நேற்று வெளியான SSLC தேர்வு முடிவுகள் வெளியானபிறகு எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற உந்துதலில் இதை எழுதுகிறேன்.

நமதூர் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவேண்டும் என்பதற்காகப் பலரும் பல வகையில் முயற்சி செய்து வருகின்றனர். Adirai Educational Trust கல்வி விழிப்புணர்வு மாநாடுகளை நடத்தியுள்ளது. அதுபோன்று அதிரை நிருபர் குழுவும் கல்வி விழிப்புணர்வு மாநாடுகளை நடத்தியுள்ளது.

மாநில அளவில் கல்வியில் சாதனை படைக்கும் மாணவர்களை அதிரையிலிருந்து உருவாக்க வேண்டுமெனில், தற்போது அதிக மதிப்பெண்களைப் பெறும் மாணாக்கர்களைப் பாராட்டி, விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று அதிரை எக்ஸ்பிரஸில் நானும் பொறுப்பேற்றிருந்தபோது மஷ்வரா செய்து, "அதிரை எக்ஸ்பிரஸ் கல்வி விருதுகள்" என்றொரு திட்டத்தை கடந்த ஆண்டு அறிவித்தோம்.

இதுபற்றிய அறிவிப்பு வெளிவந்தபோது மகள் சுஹைமாவிடம்,அடுத்த ஆண்டு உங்கள் பெயர் அதிரை எக்ஸ்பிரஸில் வருமா? என்று கேட்டேன். இன்ஷா அல்லாஹ் வரும் என்று பதில் அளித்தாள். அதன்பின்னர், என் வணிகச்சூழல் காரணமாக, மகளின் கல்வியில் அதிக அக்கரை காட்ட முடியவில்லை. மாறாக அவளது தாய்வழிப் பாட்டனார் மிகுந்த அக்கரை காட்டினார்.

இந்த ஆண்டு, தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு, மகளுக்குத் தொலைபேசினேன். "உங்க ஆசை நிறைவேறிடுச்சா வாப்பா? என்றாள். என் கண்கள் கலங்கின. அல்ஹம்துலில்லாஹ். முகநூல்,ட்விட்டர் போன்ற தளங்களிலும் இந்தத் தகவலைப் பகிர்ந்தபோது, முன்பின் தெரியாதவர்களும் வாழ்த்தி எனது மகிழ்ச்சியில் பங்கேற்றனர். ஜஸாகல்லாஹ்.

மாணவிகளில் என் மகள் முதலிடம் பெற்றது போன்று மாணவர்களில் என் காக்கா ஹாஃபிள் யஃகூப் ஹசன் அவர்களின் மகன் அப்துஷ் ஷகூர் முதலிடம் பெற்றது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பொதுவாக அதிக மதிப்பெண் பெறுவது மாணவிகளைவிட மாணவர்களுக்கு சற்றே கடினம்தான். மாணவிகளைவிட குறைவு என்றாலும் அதிரை வரலாற்றில் இல்லாத அளவாக அதிகபட்ச மதிப்பெண்களை மகன் அப்துஷ் ஷகூர் பெற்றுள்ளார்.

காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று முதலிடம் பெற்ற மாணவி யாஸ்மீன் என் அன்புச் சகோதரர் முபீன் அவர்களின் மகள் என்றறிந்து மிகவும் மகிழ்ந்தேன். யாஸ்மீனுக்கும் அவர்தம் பெற்றோருக்கும் வாழ்த்துகள்.

முதல் மதிப்பெண்களைப் பெற்றவர்கள் மட்டுமின்றி, முதலிடம் பெற வேண்டும் என்று மாணவ - மாணவிகளுக்கிடையே போட்டியை ஏற்படுத்திக் கொண்டு அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த என் மகளின் தோழிகளுக்கும் மகனின் தோழர்களுக்கும் வாழ்த்துகள்.

என் மக்கள் மட்டுமின்றி நமதூரின் கல்வி நிலையங்களில் பயின்று சாதிக்கும் அளவிலான மதிப்பெண்களைப் பெறுவதற்கு உந்துதலாக இருந்த அதிரை எக்ஸ்பிரஸ் நண்பர்களுக்கும் இத்திட்டத்தை செயல்படுத்தியபோது உற்சாகப்படுத்திய வாசகர்களுக்கும் பரிசுத் தொகையைப் பகிர்ந்தளிக்க முன்வந்தவர்களுக்கும் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்திய அதிரை நிருபர் குழுமத்ததாருக்கும் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் தொலைபேசி, மின்னஞ்சல் வழியாக வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டோருக்கும் நன்றியையும் துஆவையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அபூ சுஹைமா (என்ற) அப்துல் கரீம் 
S/o. முஹம்மது அலிய் ஆலிம்

மதச் சின்னங்களும் அரசு அலுவலகங்களும் 18

அதிரைநிருபர் | July 13, 2011 | , ,

அரசு என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானதாகச் செயல்பட வேண்டும். கட்சியின் கொள்கையை அரசின் செயல்பாடுகளோடு கலந்து குழப்பக்கூடாது. ஒரு அரசில் அனைத்துக் கட்சியினரும் அங்கம் வகிப்பதால், அது சார்பற்றதாக செயல்பட வேண்டும். குறிப்பாக மதம் சார்ந்த விசயங்களில் அரசு மிகக் கவனமாகச் செயல்பட வேண்டும்.


நமது அரசியல் சாசணம் அரசும் ஆட்சியாளர்களும் குறிப்பிட்ட சமயச் சார்புள்ளவராக செயல்படக்கூடாது என்று வலியுறுத்துகிறது. அதேபோல், அரசு நிறுவனங்களில் சமயக் குறியீடுகளை முன்னிருத்துவதையும் தடைசெய்து நீதிமன்றங்களும் உத்தரவிட்டுள்ளன. அரசு சமயச் சார்பற்றதாக இருந்தாலும் ஆட்சியாளர்கள் தனி வாழ்க்கையில் அவ்வாறு இருப்பதை சட்டம் தடுக்கவில்லை. மத நம்பிக்கைகள் தனி மனிதர் சார்ந்தவை என்பதால் நாமும் அதை குறை கூற முடியாது.


செய்திகளை இணையத்தில் வாசித்துக் கொண்டிருந்தபோது "அரசினர் தோட்டத்தில் உள்ள விநாயகர் கோயில் இடமாற்றம் இல்லை: அரசு அறிவிப்பு!"என்ற செய்தி கவனத்தைக் ஈர்த்தது. புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டு, தற்போது பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்த விநாயகர் கோயிலை இடமாற்றம் செய்ய முந்தைய அரசு முடிவு செய்திருந்ததாகவும் தற்போது அரசு அந்த முடிவை மாற்றிக் கொண்டு விட்டதாகவும் அங்கு குடமுழுக்கு செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளதன் மூலம் தமிழக அரசின் சமயச் சார்பின்மையை சந்தேகிக்க வேண்டியுள்ளது.

அரசு ஊழியர்களிலும் சட்டமன்ற உறுப்பினர்களிலும் தெய்வபக்தி உள்ளவர்கள் இருக்கவே செய்கின்றனர். இது தவறும் இல்லை. ஆனால் அரசு இடம் ஒன்றில் ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் வழிபாட்டுத்தலம் மட்டும் செயல்பட அனுமதிப்பது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

ஓமந்தூரார் அரசினர் தோட்டம் மட்டுமின்றி, பெரும்பாலான அரசு அலுவலகங்கள், சில காவல் நிலையங்கள் உள்ளிட்ட இடங்கள் மற்றும் அரசுப் பேருந்துகள் போன்றவற்றில் இந்து மதத்தினர் கடவுள் என்று கருதுபவர்களின் படங்களை மாட்டி வைத்துள்ளனர். பல அரசு அலுவலகங்களில் இந்துக்களின் வழிபாடான ஆயுதபூஜையும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆங்காங்கே சாலைகளை ஆக்கிரமித்து திடீர் கோயில்கள் முளைக்கின்றன. உயர் நீதிமன்ற வாசல், எழும்பூர் ரயில் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம் எனப் பொது இடங்கள் பலவற்றிலும் சட்டத்துக்குப் புறம்பான வகையில் குறிப்பிட்ட மதத்தின் சின்னங்கள் உருவாக்கப்படுகின்றன.

இவற்றைத் தடுக்க வேண்டிய சமயச் சார்பற்ற கட்சிகள் எனக் கூறிக் கொள்ளும் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், தேமுதிக, பாமக என எந்தவொரு கட்சியும் இதனைப் பிரச்சனை ஆக்குவதில்லை. மனிதநேய மக்கள் கட்சி இதுபோன்ற பிரச்சனைகளை சட்டமன்றத்தில் எழுப்பி சமயச் சின்னங்கள் அரசு அலுவலகங்களில் இடம் பெறுவதையும் அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட மதத்தின் வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதையும் நீக்கப் பாடுபட வேண்டும்.

அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் இத்தகைய சமயச் சார்பு நடவடிக்கைகளுக்கு எதிராகப் பொதுநல அமைப்புகளும் சமுதாய இயக்கங்களும் தடையாணை கோரி நீதிமன்றங்களில் வழக்குப்பதிவு செய்து, குறிப்பிட்ட மதத்தின் சின்னங்கள் அரசு அலுவலகங்களில் இடம் பெறுவதைக் களைய முயல வேண்டும்.

வாழ்க இந்தியா! வளர்க சமய நல்லிணக்கம்!

இதுதொடர்பான பதிவுகள்:


1. விடுதலை... http://viduthalaidaily.blogspot.com/2011/07/blog-post_12.html
2. சிந்திக்க உண்மைகள்: http://idhuthanunmai.blogspot.com/2008/06/blog-post_15.html

--அபூசுஹைமா