Showing posts with label சத்தியமார்க்கம்.com. Show all posts
Showing posts with label சத்தியமார்க்கம்.com. Show all posts

எதிரிகளிடமிருந்து இந்தியாவைக் காக்க ரூ.1600 கோடி வழங்கிய முஸ்லிம் வள்ளல்! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | August 01, 2016 | ,

கடந்த 1965 இல் பாகிஸ்தானுடன் நடந்த போரில் வெற்றி பெற்ற பிறகு, இந்தியாவுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்த நாடு சீனா.

சீனாவிடமிருந்து எழுந்த பெரும் அச்சுறுத்தலை சமாளிக்கப் போதுமான நிதி இந்திய ராணுவத்திடம் இல்லாததால் அதனை திரட்ட ஆரம்பித்தார், லால் பகதூர் சாஸ்திரி. அன்றைய இந்தியாவின் பிரதமர் அவர்.

இதற்காகவென்று தேசிய பாதுகாப்பு வைப்பு நிதி (National Defense Fund) ஒன்றை ஏற்படுத்திய இந்திய அரசு, அதன் மூலம் செல்வ செழிப்புள்ள இந்திய குறுநில மன்னர்களுக்கு வேண்டுகோள் விடுத்தது.

ஆனால், தேவையைப் பூர்த்தி செய்யும் படியான உதவிகள் எங்கிருந்தும் வரவில்லை.

ஆபத்தான நிலைமையைப் புரிந்து பதைபதைத்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி உடனடியாக ஹைதராபாத்திற்கு விரைந்தார். இந்தியாவின் வேண்டுகோளை மறுக்காமல் நிறைவேற்றக் கூடிய ஒரு நல்ல மனிதர் அங்கிருக்கிறார் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டிருந்தார் லால் பகதூர் சாஸ்திரி.

இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி வள்ளல் உஸ்மான் அலீயை சந்தித்தபோது...அவர் சென்று சந்தித்தவர் ஹைதராபாத் நிஜாம் மிர் உஸ்மான் அலீ கான் (Huzoor Nizam Mir Osman Ali Khan). நேரில் ஹைதராபாத் நிஜாமை சந்தித்த பிரதமர், நிலைமையை விளக்கினார்.

கூர்ந்து கேட்டுக் கொண்ட ஹைதராபாத் நிஜாம் மறுபேச்சு ஏதும் பேசாமல் எழுந்தார். தனது கருவூலத்திலிருந்து ஐந்து டன்கள் எடையுள்ள தங்கத்தை உடனடியாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்காக அளிக்க உத்தரவிட்டார். (வழங்கிய நிதி இன்றைய மதிப்பீட்டின்படி 1600 கோடிகளுக்கும் மேல்)

ஹைதராபாத் நிஜாமின் இந்த உத்தரவு இந்தியாவையே உலுக்கியது. இந்திய பாதுகாப்பு நிதிக்காக உதவி கேட்டால் தனது சொத்தின் ஒரு பகுதியையே கொடுத்து விட்டாரே இந்த மனிதர் என்ற பேச்சு எங்கும் பரவியது.

இன்றைய தேதிவரை இந்தியாவில் எந்த ஒரு பிரமுகரோ ஒரு நிறுவனமோ கொடுத்திராத தொகையை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கி, மிகப் பெரிய கொடை வள்ளலாய்த் திகழ்ந்த ஹைதராபாத் நிஜாம், கடந்த பெப்ரவரி 24, 1967 அன்று மறைந்தார்.

அன்று இந்தியாவை பலப்படுத்திய இந்த நிதி பலர் அறிந்திராத நிகழ்வு. முந்தைய ஆட்சிகள் மாறி காட்சிகள் மாறி புதிய ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் இந்திய வரலாற்று ஆவணங்களை எரித்து விடலாம். அழித்து விடலாம். ஆனால், நடந்த காலத்திற்குச் சென்று திருத்தி விட முடியாது என்பதே உண்மை.

அபூ ஸாலிஹா
நன்றி : 

சூது சூழ் உலகு 1

அதிரைநிருபர் பதிப்பகம் | July 18, 2016 | , ,

லகில் நடைபெறும் குற்ற நிகழ்வுகளுக்கு இரண்டு வகையான செய்திக் கோணங்களை ஊடகங்கள் உருவாக்கி வைத்துள்ளன. குற்றவாளி முஸ்லிம் எனில் அதற்கான சிறப்பு வாசகங்களை உள்ளடக்கிய அனல் கக்கும் யூகங்கள்; இல்லையெனில் கேழ்வரகில் நெய் வடியும் தகவல்கள். அண்மைக் காலமாக இந்தக் கோணங்களில் மூன்றாவதாக மேலும் ஒன்று இணைந்துள்ளது.

குற்றமிழைத்தவன் யார் என்று தெரியாவிட்டால், அவன் முஸ்லிம்தான் என்று வலிந்து திணிக்கும் நஞ்சு! உலகெங்கும் ஊடகங்களுக்கு இது பொது விதியாகி, அவரவர் நாட்டிற்கும் அரசியலுக்கும் ஏற்ப, ‘சக்கரை கொஞ்சம் தூக்கலா’ , ‘கொஞ்சம் லைட்டா’ என்பதுபோல் அதன் வீரியம் கூடி, குறைந்து தென்படுகிறது.

முஸ்லிம்கள் மட்டுமின்றி பிறப்பால், நிறத்தால் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று நிர்ணயித்துள்ளவர்கள்மீது ஊடகங்கள் நிகழ்த்தும் அராஜகம் ஒளிவு மறைவற்றது. சென்ஸேஷன், TRP ரேட்டிங் என அலையும் மீடியாக்கள், அரசியல்வாதிகள்தாம் இப்படி என்றால் மேடையிலும் திரையிலும் அட்டகாச காமெடியன்களாக வலம் வரும் இருவர், மனத்தளவில் அட்ராசிட்டி வில்லன்கள் என்று அண்மையில் வெளிவந்த, அரிதாரம் பூசப்படாத அவர்களது நிஜ முகங்கள் போனஸ் அதிர்ச்சி.

ஏன் இப்படி? பலவித உப தலைப்புகளில் ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன. விவரித்து பக்கம் பக்கமாக எழுதலாம்; எக்கச்சக்கம் உரையாடலாம். அவற்றுள் முக்கியமான ஒன்று உயர்சாதி / உயர் இன குணம். அது மட்டும் சுருக்கமாக இங்கு.

தான் பிறந்த இனத்தின் அடிப்படையில் ஒருவர் சக மனிதனைத் தாழ்வாக, இழிவாகக் கருதும் நொடியிலேயே அநீதிக்கான முதல் விதை நடப்பட்டுவிடுகிறது. அதன்பின் ஆளும் வளர, அறிவும் வளர, அதனுடன் சேர்ந்து வஞ்சனையே இல்லாமல் அந்த நஞ்சும் வளர அநீதியின் கட்டப்பஞ்சாயத்து ராஜாங்கத்திற்கு அங்கீகாரம் கிடைத்துவிடுகிறது. அப்படியானபின் அரசியல் சாசனமும் அடிப்படை விதிகளும் எதற்கு உதவும்? அவை வெறும் ஏட்டுச் சுரைக்காய்.

இந்தியா ஒருபுறம் இருக்கட்டும். அமெரிக்காவில் அதன் அரசியல் சாசனம் வழங்காத அடிப்படை உரிமைகளா? அவர்கள் காணாத நாகரிக வளர்ச்சியா? என்ன பயன்? இந்த இருபத்தோறாம் நூற்றாண்டின் பதினாறாம் ஆண்டிலும் அங்குள்ள கறுப்பினத்தவர்கள் ‘கறுப்பு உயிரும் பொருட்டே’ – Black Lives Matter – என்றல்லவா போராடிக் கொண்டிருக்கிறார்கள்; இறந்து கொண்டிருக்கிறார்கள்? இந்தியாவுக்கு வர்ணாஸ்ரமம் என்றால் மேலை நாடுகளில் வெள்ளைத் தோல் மேலாண்மை. பாதிப்பின் விகிதாசாரம்தான் கூடுதல், குறைவே தவிர உயர்சாதி அகங்காரம் நிகழ்த்தும் அநீதி இந்தியாவிலும் மேலை நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டு ஆரோக்கியமாகவே உள்ளது!

பிறப்பாலும் நிறத்தாலும் நான் உயர்ந்தவன் எனக் கருதுவது மன வியாதியின் உச்சம். அதை முற்றிலும் ஒழிக்காத வரை அனைவருக்கும் சமநீதி, ஊரெங்கும் சமத்துவம் என்பதெல்லாம் குருடனின் பகல் கனா. பேய்கள் நாடாளும்போது சட்டங்களும் சட்டத் திருத்தங்களும் என்ன சாதித்துவிடும்?

ஆனால் மன நோய்க்கு மருந்துண்டு. எது பூச்சாண்டி என்று பொய் சொல்லி மக்களை போதையில் ஆழ்த்தியிருக்கின்றார்களோ அந்த இஸ்லாமிய மார்க்கத்தில் அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி உண்டு.

“உலகிலேயே புனிதமான, உனக்குப் பிடித்தமான கட்டடத்தைக் காட்டு” என்று உலகின் எந்த மூலையில் வாழும் எந்த முஸ்லிமைக் கேட்டாலும் கண்ணை மூடிக்கொண்டு மக்காவிலுள்ள கஅபாவை நோக்கி அவனது சுட்டுவிரல் நீளும். இன்றைய முஸ்லிம்கள் என்றில்லை, இஸ்லாம் மீளெழுச்சி பெறுவதற்கு முன்னருங்கூட அஞ்ஞானக் குரைஷிகளுக்கு அது வெகு புனிதம்.

இஸ்லாமியச் செய்தி மக்காவில் பரவத் தொடங்கியதும் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரத்திற்கு இலக்கானவர்களுள் அடிமை பிலால் வெகு முக்கியமானவர். கறுப்பர். அவருக்கு நிகழ்த்தப்பட்ட சித்ரவதையெல்லாம் சகிக்க இயலாத கொடூரம். காலம் உருண்டோடி முஹம்மது நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் மக்காவை வெற்றி கொண்டதும் உலகிலேயே புனிதமிக்க அந்த ஆலயத்தின்மீது ஏறி தொழுகைக்கு அழைப்புவிடுவதற்கு அழைக்கப்பட்டவர் அந்தக் கறுப்பர் பிலால் (ரலி)தாம். ஊரே குழுமி நிற்க அந்த விந்தை நிகழ்ந்தது.

இஸ்லாத்தின் இரண்டாவது கலீஃபாவான உமர் இப்னுல் கத்தாப் (ரலி) இந்தக் கறுப்பர் பிலாலை (ரலி) ‘எங்கள் தலைவர்’ என்றுதான் அழைத்திருக்கிறார்! ஒருமுறை கலீஃபா உமரைச் சந்திக்கக் குரைஷிக் குலத்தின் மேட்டுக்குடியைச் சேர்ந்த ஸுஹைல் இப்னு அம்ருவும் (ரலி) அபூஸுஃப்யான் இப்னுல் ஹர்பும் (ரலி) வந்திருந்தனர். போலவே குரைஷிகளின் முன்னாள் அடிமைகளான சுஹைப், பிலால் போன்றவர்களும் காத்திருந்தனர். முன்னாள் அடிமைகளுக்குத்தான் கலீஃபாவைச் சந்திக்க முதலில் அனுமதி கிடைத்தது. ஏனெனில் இஸ்லாத்திற்குள் நுழைந்தபின் உயர்ந்தவர் – தாழ்ந்தவர் இல்லையே!

தொழுவதற்கு நிற்கும் அணிவகுப்பில் முன் வரிசையில் நிற்பவர் கறுப்பரோ, வறியவரோ யாராக இருப்பினும் பின் வரிசையில் நிற்பவர் அரசனே என்றாலும் தொழுகையில் சிரம் தரையில் பதியும்போது மன்னரின் உச்சந்தலை முன்னவர் பாதத்தின் கீழ் என்பதுதானே இஸ்லாத்தின் எளிய நிஜம்.

இன இழிவை நீக்குவதற்கான நன்மருந்து தயாராகத்தான் இருக்கிறது.  ஆனால் மக்கள் அதை அறிந்து விடாமலும் மக்களை அருந்த விடாமலும் ஆதிக்க வர்க்கமும் ஊடகங்களும்தான் அயராது வாது புரிகின்றன. வெற்று வாதமல்ல! தீவிரவாதம்!

நூருத்தீன்

வருமுன் 3

அதிரைநிருபர் பதிப்பகம் | September 23, 2015 | , , , ,

பழைய டைரிக் குறிப்பொன்றைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த வாக்கியம் கவனத்தைக் கவர்ந்தது. உறவினர் ஒருவர் ஹஜ்ஜுக்குச் சென்றிருக்கிறார். அரஃபாவிலிருந்து மினா செல்லும் வழியில் இறந்துவிட்டார். அங்கேயே நல்லடக்கம் செய்துவிட்டனர்.

அது, “வண்ணார் வாகனத்தின் மீதேறி பயணம் சென்றபோது அங்கேயே விழுந்து இறந்தார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது நடந்தது இருபதாம் நூற்றாண்டின் வெகு ஆரம்பக் காலங்களில். அப்பொழுதெல்லாம் பயண வாகனம் கால்நடைகள்! அவரவர் வசதிக்கேற்ப ஒட்டகம், குதிரை, சற்று சல்லிசாக என்றால் கழுதையாக இருந்திருக்கும் போலும்.

ஹஜ் பயணம் என்றாலே, அண்மைக் காலம்வரை, அது பெரும் பிரயத்தனமான விஷயம். பொருளாதார ஏற்பாடு. உடல் ஆரோக்கியம் என்பனவற்றை எல்லாம் தாண்டி, ஹஜ்ஜிற்கான பயணம் இருக்கிறதே அது மகா கடினம். ரயில் பிடித்து மதராஸ் வருவார்கள். பிறகு மற்றொரு ரயில் பிடித்து இரண்டு நாள் பயணமாக பம்பாய். அடுத்து அங்கிருந்து கப்பலில் ஒரு வாரமோ, பத்து நாளோ தண்ணீரில் மிதந்து ஜித்தா. அங்கிருந்து, மோட்டார் வாகனம் கொஞ்சம், மிருக சவாரி மிச்சம் என்று இருந்திருக்கிறது.

சென்ற இடத்தில் உணவு சமைக்க அதற்கான மளிகைகளையும் மூட்டையாகச் சுமந்து சென்றிருக்கிறார்கள். ஒரு மாதத்திற்கும்மேல் தங்கி, ஹஜ்ஜையும் ஜியாரத்தையும் முடித்துக்கொண்டு, மீண்டும் கப்பல், ரயில் மீண்டும் ரயில் என்று ஊர் வந்து சேர அனைத்தும் சொகுசுக்கு வாய்ப்பு அற்ற சிரமமான பயணம். தவிர சஊதியில் கழியும் பயண நாள்கள் கோடையானாலும் சரி, குளிர்காலமாக இருந்தாலும் சரி, நம் சீதோஷ்ணத்திற்கு மட்டுமே பழகிய உடலுக்கு ஏக அவஸ்தை.


காரணங்களான இவையெல்லாம் சேர்ந்து, அக்காலத்தில் ஹஜ் பயணி என்றாலே முதியவர்களும் முதுமையைச் சார்ந்தவர்களும்தான். வயது ஒருபுறம், சந்திக்கவிருக்கும் சிரமம் மறுபுறம் என எல்லாமாகச் சேர்ந்து, எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டுப் பயணிகள் பிரியா விடை பெற்றுக்கொண்டு பிரிய, வழியனுப்புபவர்களும் “அல்லாஹ்வினுடைய காவலாய் போய் வாருங்கள். ஆயுள் மிச்சமிருந்து திரும்பி வந்தால் பார்ப்போம்” என்று கையசைக்க மனம் ஒரு முன்னேற்பாடான முடிவிற்கு வந்திருக்கும். சுருக்கமாகச் சொன்னால் அக்காலத்தில் ஹஜ் பயணமானது மரண அச்சம், இறையச்சம் இரண்டையும் அதிகப்படுத்துவதற்கான விஷயமாக அமைந்து போயிருந்தது.

பிறகு ஆகாயப் பயணம் பரவலாகி, அது அனைவருக்கும் ஏதுவாகி, மோட்டார் வாகனங்களில் சொகுசு அதிமாகி, அடிப்படை வசதிகளுக்காக என்றிருந்த தங்குமிடங்கள் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்து, ஹரம் ஷரீஃபும் ஹஜ் கிரியைகளுக்கான இதர இடங்களும் உசத்தியாய் உருமாறிவிட, பணப் புழக்கம் அதிகரித்துவிட்ட சமகால முஸ்லிம்கள் மத்தியில் ஹஜ் கடமையை நிறைவேற்ற ஓய்வூதிய வயதிற்குக் காத்திருக்கும் மனோபாவம் மாறிவிட்டது. இவையாவும் நலமே.

ஆனால் இவை இலேசான பக்க விளைவொன்றை நாமறியாமல் உருவாக்கிவிட்டது. என்ன அது?

ஹஜ் பயணத்துடன் இணைந்திருக்க வேண்டிய இறையச்சமும் மரண எதிர்பார்ப்பும் பெரும்பாலானவர்களின் மனங்களில் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன; அல்லது மறக்கடிக்கப்பட்டு விட்டன. துரித பயணமும் நவீனத்தின் பளபளப்பும் ஆயுளின் தற்காலிகத் தன்மையை மக்களின் மனங்களில் மழுங்கடித்துவிட்டன. இப்படியான ஒரு நிலையில், ‘என்னுடைய சக்தியை வண்ணார் வாகனத்திலும் வெளிப்படுத்துவேன், கண்டுபிடித்து நட்டு வைத்திருக்கிறாயே இயந்திரங்கள், அதன் வாயிலாகவும் காட்டுவேன்’ என்று இறைவன் தன்னுடைய சக்தியை. தன்னுடைய நாட்டத்தை இலேசாக, வெகு இலேசாகக் கோடிட்டுக் காட்டும்போது திடுக்கிட்டு விழித்து அப்பொழுதுதான் அலறுகிறது மனம்.

யாத்திரை சென்றவர்கள் கவனித்திருப்பார்கள். மக்காவின் ஹரம் ஷரீஃபில் நடைபெறும் ஐவேளை தொழுகை ஒவ்வொன்றின் இறுதியிலும் ஜனாஸாத் தொழுகை இல்லாதிருக்காது. அதுவும் பலமுறை ஒன்றுக்கும் மேற்பட்ட மைய்யித்கள்தான். தாங்கள் தங்கியிருக்கும் நாற்பது நாள்களில் குறைந்தபட்சம் நானூறு மைய்யித்களுக்கான தொழுகையிலாவது அவர்கள் கலந்து கொண்டிருந்திருப்பார்கள். எதற்கு இந்தச் சங்கடமான புள்ளிவிபரம் எனில், மக்க மாநகரம் புனித எல்லைக்குள் அமைந்திருக்கிறதே தவிர, மரண மலக்குகளுக்குத் தடை விதிக்கப்பட்ட பகுதியிலன்று என்பதை நாம் உணரவே.

புனித யாத்திரையில் இருக்கும்போது மரணமானது இயற்கையாகவும் வரலாம்; விபத்து வடிவில் நேரலாம். ஒருவரது விதியின் முடிவு அங்குதான் என்று இறைவன் நிர்ணயித்திருந்தால் அதுதான். அவ்வளவுதான். உதிரியான மரணங்கள் நிகழும்போது அது நம் கவனத்தைப் பெரிதாக ஈர்ப்பதில்லை. பெரும் விபத்துகளில் ஒட்டுமொத்தமாகப் பலர் இறக்கும்போது நமது அடிவயிற்றில் பகீர் என்கிறது. இதற்கு முன்னர் 1990 ஆம் ஆண்டு குகைப்பாதை நெரிசலில் சிக்கி ஆயிரத்து நானூற்று சொச்ச யாத்ரீகர்கள், 1997 ஆம் ஆண்டு மினா பகுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் முந்நூறு என்று பெரும் எண்ணிக்கையிலான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அதன் வரிசையில் இந்த ஆண்டு நிகழ்ந்த கிரேன் விபத்து பெரும் சோக நிகழ்வு.

விபத்தில் மரணமடைந்த ஒவ்வொருவருக்கும் ஒன்றேமுக்கால் கோடி ரூபாய் மரண ஈட்டுத் தொகை, அக்குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு அடுத்த அண்டு அரசாங்க செலவில் ஹஜ் என்று நிவாரணங்களை அறிவித்துள்ள சஊதி அரசர் விபத்திற்கான காரணம், அலட்சியம், விதி மீறல் ஆகியனவற்றை ஆராய்ந்து உரிய நிறுவனத்தின்மீது தகுந்த தண்டனையும் அபராதமும் விதிப்பதிலும் தீவிரம் காட்டுவார் என நம்புவோம். இவ்விதமான இவ்வுலகுசார் நடவடிக்கைகள் முக்கியம். அதைவிட முக்கியம் இத்தகைய விபத்துகளில் ஒளிந்துள்ள நமக்கான பாடம்.

சூரா ஆலு இம்ரானில் 185ஆவது ஆயத்தில் அல்லாஹ் கூறுகிறான், ”ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்…” என்று.

வளத்தைக் கொடுக்க நினைத்தால் அதை அவன் கூரையைப் பிரித்தும் கொட்டுவான் என நம்புகிறோமோ இல்லையோ, சுவைக்க வேண்டிய மரண நேரம் நெருங்கிவிட்டால் அது மக்காவின் பள்ளிவாசலாகவே இருந்தாலும்கூட, கூரை இடிந்து வந்தடையும் என்பது மறுக்கப்படலாகாது. நவீன உலகில் மயங்கிப்போய் அதில் சிதறிவிடாத மரண கவனம் நமக்கு அதி முக்கியம். ஏனெனில்-

மரணம் வரும்முன் வாழ்க்கையில் நமக்கான முன்னுரிமைகளைச் சீரமைக்க அதுவே உதவும்.

நூருத்தீன்

நன்றி :
 Darul Islam Family

ஷபே பராஅத் (?) 1

அதிரைநிருபர் | May 26, 2015 | , , , , , ,

www.satyamargam.com

ரமலானை வரவேற்பதற்கான முன்னேற்பாடுகளில், ரமலானுக்கு முந்தைய மாதமான ஷஃ'பானில் செய்ய வேண்டிய அமல்கள் என்ன என்பதைப் பற்றி முஸ்லிம் சமுதாயத்தில் பெரும்பாலானோர், அறியாமையில் இருக்கிறார்கள்.

ஷஃ'பான் எனும் இந்த மாதத்தை, மரணித்துப்போன நம் பெற்றோர்கள் போன்ற நெருங்கிய உறவினர்கள் பெயரால் ஃபாத்திஹா ஓதி, விஷேச அமல்கள், துவாக்கள் செய்து அதன் மூலம் நன்மையை அவர்களுக்குச் சேர்க்கக்கூடிய(?) ஒரு மாதமாகவே இந்த மாதம் தவறாகக் கருதப்படுகிறது. இதன் 15ம் நாளை, 'ஷப்-ஏ-பராஅத்' எனும் பெயரில் சில முஸ்லிம்கள் பரவலாகக் கடைபிடித்து வருகிறார்கள்.

இஸ்லாத்தில் கூறப்படாத இத்தகைய அனாச்சாரங்கள் தற்போது ஓரளவு குறைந்துள்ளன என்றாலும், இன்றும் பலர் இதை ஒரு சிறந்த அமலாக, நன்மை தரும் காரியமாகக் கருதி, விதவிதமான சமையல்கள், இனிப்புவகைகள் என்று சமைத்து, பயபக்தியுடன் பரவசத்துடன் குழுமியிருந்து ஃபாத்திஹா ஓதி, மரணித்த தமது உறவினருக்கு நன்மைகளை நாடிப் பிரார்த்திப்பதாகச் செயல்படுத்தி வருகின்றனர்.

இந்த நூதனச் செய்முறைக்கு குர்ஆனிலோ ஹதீஸிலோ ஆதாரமில்லை. புனித குர்ஆனின் ஹதீஸ்களின் மூலமொழி அரபியாகும். 'ஷப்-ஏ-பராஅத்' இல் உள்ள  'ஷப்' என்பது அரபிச் சொல் கிடையாது; 'இரவு' என்ற பொருளில் வரும் பார்ஸிச் சொல்லாகும். 'ஏ'காரம் என்பது அரபு மொழியிலேயே இல்லாத ஓர் ஒலி. இப்படியிருக்கையில் தானாக உருவாக்கிக் கொண்ட ஒரு புதிய நடைமுறைக்கு 'ஷப்-ஏ-பராஅத்' என்ற பெயர் சூட்டி முஸ்லிம்களின் புனித ரமலான், ஹஜ்ஜுப் பெருநாள் போன்ற விஷேசமான இதர பண்டிகைகளின் பட்டியலில் காலங்காலமாக இதனையும் சேர்த்து விட்டனர். ஆனால் இது நபி (ஸல்) அவர்கள் மூலம் ஏவப்பட்ட ஒரு நபி வழியா? நல்ல அமலா? இதனைச் செய்தால் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா? இதற்கு நன்மை கிடைக்குமா கிடைக்காதா? அல்லது ஒருவேளை இது ஒரு பாவமான காரியமாகி தண்டனையைப் பெற்று தருமா? என்றெல்லாம் அவர்கள் சிந்திக்கத் தவறி விடுகின்றனர்.

எவர் ஒருவர் என்னால் ஏவப்படாத (மார்க்கக்) காரியத்தை நன்மையான காரியம் என்று கருதித் செயல்படுகிறாரோ அது அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்).

இந்த ஒரு ஹதீஸே நாம் மார்க்கம் என்றும் நன்மையென்றும் கருதி இப்படி நபி (ஸல்) காட்டித்தராத செயல்களைப் புதிதாக உருவாக்கவோ, சேர்க்கவோ அல்லது அதைப் பலரும் செய்கிறார்கள் என்பதால் செயல்படுத்தவோ கூடாது என்பதை மிகத் தெளிவாக அறிவுறுத்துகிறது. இதைப்போன்று பல ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்களால் காட்டித் தராத ஒன்றைச் செயல்படுத்த நேரடியான தடையுள்ளதையும் நாம் சேர்த்துப் பார்க்க வேண்டும்.

அல்லாஹ்விடம் நன்மையை நாடி, தமது உறவினர்களுக்கு நன்மையை வேண்டிப் பிரார்த்திக்கவும், தமக்கு நன்மைகளும் அபிவிருத்தியும் ஏற்படும் என்று கருதி, இப்படிப்பட்ட அமல்கள் செய்பவர்கள் நபி (ஸல்) அவர்கள் இதை நமக்கு காட்டித்தரவில்லை என்பதையும் சிந்திப்பதில்லை.

நிச்சயமாக ஒருவர் இறந்தபின் மூன்றைத் தவிர அவருடைய அமல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடுகின்றன. அம்மூன்றாவன:
  • அவர் விட்டுச்சென்ற நிலையான தர்மங்கள் (இறையில்லங்கள் கட்டுவது, மரங்கள் நடுவது, கிணறுகள் அமைப்பது, கல்விச்சாலைகள் நிறுவுவது போன்றவை) 
  • அவர் தந்த பயன் தரும் கல்வி (ஈருலக வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்டு அவர் கற்றுக் கொடுத்த கல்வி) 
  • ஸாலிஹான அவரின் பிள்ளைகள் செய்யும் பிரார்த்தனைகள்.

இம்மூன்றைத் தவிர வேறு எவ்வழியிலும் ஒருவர் இறந்தபின் அவருக்கு நன்மைகள் சேருவதில்லை. (ஆதார நூல்கள்: முஸ்லிம். அபூ தாவூத், திர்மிதி, நஸயீ)

நபியவர்கள் காட்டித் தந்த வழி இவ்வாறிருக்க, இறந்து போன உறவினருக்கு பராஅத் இரவில் பாத்திஹாக்கள் ஓதினால் எந்தப் புண்ணியமும் கிட்டப்போவதில்லை என்பதுதான் உண்மை. தவிர, நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத புதிய ஒரு வழிமுறையை மார்க்கமாகச் செய்யும் பாவத்தையும் சுமக்க வேண்டிவரும்.

நபி (ஸல்) அவர்கள் மற்ற எல்லா மாதங்களையும்விட - ரமலானுக்கு அடுத்தபடியாக - ஷஃ'பான் மாதத்தில்தான் அதிகமாக நோன்பு நோற்றுள்ளார்கள்.

ரமலான் மாதத்திற்கு முந்தைய மாதமான ஷஃ'பானில் நோன்பு வைப்பது நபியவர்களால் மிகவும் வலியுறுத்திக் கடைபிடிக்கப்பட்ட ஓர் அமல் ஆகும் என்பதைக் கீழ்வரும் ஹதீஸ்கள் நமக்கு பறைச்சாற்றுகின்றன:

"நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃ'பானும் அதைத் தொடர்ந்துள்ள ரமளானுமாகும்" என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூற, தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) குறிப்பிடுகிறார். (அபூதாவூத், நஸயி).

நபி (ஸல்) அவர்கள், 'நோன்பை விடவேமாட்டார்களோ' என்று நாம் நினைக்கும் அளவுக்கு (சிலபோது) நோன்பு நோற்பவர்களாகவும் 'நோன்பிருக்க மாட்டர்களோ' என்று நினைக்கும் அளவுக்கு நோன்பு நோற்காதவர்களாகவும் இருந்தார்கள். நபியவர்கள் ரமளானைத் தவிர முழமையாக நோன்பு நோற்ற வேறொரு மாதத்தை நான் அறியவில்லை. நபியவர்கள் அதிக நாட்கள் நோன்பு வைத்த மாதம் ஷஃ'பானாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்).

அமல்கள் உயர்த்தப்படும் மாதம்:
உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் நபியவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதரே! ஷஃ'பானைப் போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை' என்று கூறிய போது, நபியவர்கள், "மனிதர்கள் ரஜப், ரமளான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள (ஷஃ'பான் என்ற) ஒரு மாதத்தின் விஷயத்தில் அலட்சியமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதம் எனில், அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின்பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன்" என கூறினார்கள். (ஆதாரம்: நஸயி, அஹ்மத்).

இதற்கு மாற்றமாக ஷஃ'பான் மாதத்தில், பிறை 15ல் மட்டும் நோன்பு நோற்பதும், அதன் இரவில் மூன்று யாஸீன்கள் ஓதுவதும், ரொட்டி மற்றும் இனிப்புப் பண்டங்களை வைத்து சாம்பராணிப் புகையுடன் ஃபாத்திஹா ஓதிய பின்னர் அதையும் இதர உணவுகளையும் பரிமாறிக் கொள்வதும் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தராத ஒரு 'பித்அத்' தான காரியமாகும்.

நமக்கு இஸ்லாத்தையும் நன்மை தீமைகளையும் கற்றுத்தர அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட நபி(ஸல்) அவர்கள் நமக்கு இவற்றைக் கற்றுத் தரவில்லை. அவர்களுக்குப் பின்னர் யாரோ சிலர் உருவாக்கியவைதான் இவையும் இவை போன்றவையும் என்பதைப் பலரும் அறிவதில்லை. நமக்கு நன்மைகள் வேண்டுவது அல்லது நமது நெருங்கிய உறவினர்களுக்கு துஆச் செய்வது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றல்ல; துவாச் செய்வது தவறும் அல்ல. இதை, தினந்தோறும் தவறாமல் நாம் செய்து வர வேண்டும். அதிகமாகவும், ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும், தஹஜ்ஜுத் எனும் இரவுத் தொழுகைகளிலும் செய்ய வேண்டும். அதுவே நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியாகும்.

வருடத்தில் ஒரு நாள் அல்லது ஒருசில நாட்கள், அதுவும் அல்லாஹ்வோ நபி (ஸல்) அவர்களோ காட்டித் தராத ஒரு நாளில் இதுபோன்ற அமல்களைச் செய்வது எந்தப் பலனையும் விளைவிக்காது என்பதை நாம் உணர வேண்டும். பலகாலமாக நமது மூதாதையர் செய்வதாலோ நம்முடைய உறவினர்கள், நமது ஊரார்கள் எல்லாம் செய்கிறார்கள் என்பதற்காக நாமும் அவற்றைச் செய்யாமல், இவையெல்லாம் பொல்லாப் புதுமைகள் என்பதை அறிந்து கொண்டு, இதுபோன்றவற்றை விட்டு விலகி இருந்து, பிறருக்கும் உணர்த்தி விலக்கி அவர்களையும் நேர்வழிக்கு அழைக்க வேண்டும்.

இந்தியாவில் சிலபகுதிகளில் இரவு விழித்து விசேஷமான, தஸ்பீஹ்கள் தொழுகைகள் மற்றும் பொதுக் கல்லறைகளுக்கு இரவில் கூட்டம் கூட்டமாக ஆண்களும் பெண்களும் சென்று துவா செய்யும் வழக்கமும் இருக்கிறது, இந்த வழக்கம், நபி (ஸல்) அவர்கள் பெண்கள் கப்ரு ஜியாரத்தைக் கண்டித்ததற்கும் எச்சரித்ததற்கும் எதிரானதாகும் என்று உணர்த்தி இப்பழக்கத்தையும் கைவிடச்செய்ய நாம் முயலவேண்டும்.

ரமளானுக்கு ஒரிரு நாட்கள் இருக்கும் போது நோன்பு நோற்கலாகாது:
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாதத்திற்கு ஓரிரு நாட்கள் மீதி இருக்கும்போது (ஷஃபானின் இறுதியில்) நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். (திங்கள், வியாழனில்) வழமையாக நோன்பு நோற்பவர் தவிர, அவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) ஆதார நூல் :புகாரீ).

மேற்கண்ட ஹதீஸ் திங்கள், வியாழன் ஆகிய இருநாட்களில் தொடர்ந்து வழக்கமாக நோன்பு வைத்து வருபவர்களைக் குறிக்கின்றது என்பதுடன், இதுபோன்ற திங்கள்-வியாழன் நோன்புகள் வைப்பது நபி(ஸல்) அவர்கள் தாமும் கடைபிடித்து வந்ததுடன் பிறருக்கும் ஆர்வமூட்டிய அழகான தெளிவான வழிமுறையாகவுமுள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டு முறையாகப் பயனடைய முயல வேண்டும்.

அதேபோல்தான் குர்ஆன் ஓதுதலும் ஆகும். திருமறையின் எந்த அத்தியாயத்தை ஓதினாலும் அதற்கு ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள் உண்டு என்பதை உணர்ந்து நாம் தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதிகமாக ஓதிவரவேண்டும், மேலும் நபி (ஸல்) அவர்கள் காட்டியுள்ள திக்ருகள், துஆக்கள், தர்மங்கள் நஃபிலான வணக்கங்கள் மூலம் நன்மையையும் அல்லாஹ்வின் அருளையும் உதவியையும் பெற்றிடத் தொடர்ந்து முயன்று, இம்மை-மறுமை வெற்றியைப்பெற முயலவேண்டும்.

அற்புதமான இந்த ஷஃ'பான் மாதத்தை பித்அத்களில் வீணாக்காமல், இறைத்தூதர் காட்டித்தந்த வழியில் கடைப்பிடித்து ஈருலகிலும் வெற்றிபெற அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.

ஆக்கம்: அப்துல்லாஹ்

முனை மழுங்கிய சிந்தனைகள் 0

அதிரைநிருபர் பதிப்பகம் | December 16, 2014 | , ,

சமீபத்தில் மாணவர் சார்ந்த பிரச்சினைகள் சமூகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலைக்குரியது. அதிலும், அப்பிரச்சினைகளை மாணவர்களே ஏற்படுத்துவதுதான் மிகுந்த வேதனை.

கல்லூரி வளாகங்களுக்குள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் அடிதடிகள், கொலைகள் தமிழக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துக் கொண்டிருக்கின்றன. தாராளமாகக் கிடைக்கும் மதுவும், போதைப்பொருட்களும் மாணவர்களின் நிலையை இன்னும் மோசமாக்கிக் கொண்டிருக்கிறது.

குற்றம் இழைத்த மாணவர்களுக்குத் தண்டனை வழங்குவது பற்றி மேம்போக்காகப் பேசிவிட்டு எழுந்து சென்று விடுகிறோம். அதை விடுத்து, வலிமையான தேசம் உருவாக இந்தப் பிரச்சினைகளின் முழு பரிணாமங்களை ஆய்வு செய்ய வேண்டியிருக்கின்றது. இச்சம்பவங்கள் நிகழ்வதற்கான அடிப்படைக் காரணங்கள் என்னவென்று இச்சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் சிந்தித்து, அந்தக் காரணிகளைச் சீர்செய்ய வேண்டும். நான் முக்கியமாகக் கருதும் மூன்று முக்கிய காரணிகளை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

மூன்று காரணிகள்:

1.   குடும்பம்
2.   கல்வி
3.   ஊடகம்

மேற்கூறிய மூன்றும் தனிமனித வாழ்விலும் கூட்டு வாழ்விலும் நம்மீது ஆதிக்கம் செலுத்தக்கூடியவை. சிறந்ததொரு சமூகத்தைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவை. ஆனால் இன்றைய சூழ்நிலையில் இவற்றின் அமைப்பும் செயல்பாடும் திருப்தியளிக்கக் கூடிய வகையில் இல்லை.


குடும்பம்

"கூட்டு வாழ்க்கை முறை" என்ற சூழல் கிட்டத்தட்ட இன்று இல்லாமல் ஆகிவிட்டது. தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் பேரன்கள், பேத்திகள் வளர்ந்த காலம் போய் விட்டது. குழந்தைகளுக்கு நெறிகள் ஊட்டும் அழகிய கதைகள் சொல்வதற்கு ஆளில்லை. இன்றைய பெற்றோர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக கணவனும் மனைவியுமாக வேலைக்குச் செல்லக்கூடிய நிலை உருவாகி, பிள்ளைகளைச் சரிவர கவனிப்பதில்லை. அதிலும் பிள்ளைகளுக்குத் தந்தையுடனான உறவு முற்றிலும் அறுந்தே விட்டது. பிள்ளைகளுக்காக எத்தனை மணிநேரத்தை இன்றைய பெற்றோர்கள் செலவிடுகின்றார்கள்? தங்கள் பிள்ளைகளுக்கு எது பிடிக்கும், பிடிக்காது, அவர்களுடைய நண்பர்கள் யார், அவர்கள் எப்படி நேரத்தை செலவிடுகின்றார்கள், என்பதைப் பற்றிய விவரங்களெல்லாம் பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. பெற்றோர் நம்முடன் நேரத்தைச் செலவிட மாட்டார்களா எனப் பிள்ளைகள் ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்று சேர்ந்து உணவு உண்ணும் பழக்கம், கூடிப்பேசி உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் எதுவும் இல்லாமல் எப்படிப் பெற்றோர்களும் பிள்ளைகளும் ஒருவர் மற்றவரைப் புரிந்து கொள்ள முடியும்? பெற்றோர்கள்தான் பிள்ளைகளின் வளர்ச்சியில் முழுப்பங்கு உடையவர்கள். இதை உணர்ந்து பிள்ளைகளைச் சரியாக வழிநடத்தினால் நாட்டில் பிரச்சனைகள் உருவாவதைக் குறைக்க முடியும். சமூகத்தில் நல்லவை எவை தீயவை எவை எனும் பகுத்தறிவு ஒரு நல்ல குடும்பத்திலிருந்தே உருவாகிறது. சரியான முறையில் வழிநடத்தப்பட்ட சிறார்களே மது, போதை, ஆபாசம், வட்டி, வரதட்சணை போன்ற சமூகக் கொடுமைகளை சுட்டெரிக்கும் பழக்கத்துடன் வளர்வர்.

கல்வி

”ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” என்பதைப் போல் செயற்கையான இன்றைய கல்விமுறை தனிமனித ஆளுமையை உருவாக்கத் தவறிவிட்டது. கல்வி, மனிதனை மனிதனாக உருவாக்க வேண்டிய பணியைத்தான் செய்ய வேண்டுமே தவிர வியாபார நோக்கில் இயந்திரங்களை உருவாக்கக் கூடாது. மனிதத் தன்மையை வளர்க்காமல் வெறும் பணம் சம்பாதிப்பதற்கான உணர்வுகளை மட்டுமே இன்றைய கல்வி இளம்தலைமுறைக்கு போதித்துக் கொண்டிருக்கின்றது. மனித வாழ்வின் நோக்கத்தை, மனிதத் தன்மையை, சமூக அக்கறையை ஊட்டக்கூடிய கல்விமுறையை உருவாக்குவதன் மூலம் சமூகத்தில் மிகச் சிறந்த மாணவர், இளைஞர் பங்களிப்பை அறுவடை செய்ய முடியும்.

ஊடகம்

மக்களின் மனதில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமை இந்த ஊடகங்களுக்கு உண்டு என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். அதை ஊடகங்கள் உணர்ந்திருந்தும் தம்மைச் சரியான போக்கில் செயல்படுத்த முனையவில்லை. மக்களின் விருப்பத்திற்கேற்ப பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டாலும் அதிலும் மக்கள் நலன், நாட்டு நலன் சார்ந்த அம்சங்களைச் சேர்க்கலாம். ஆனால் ஆபாசத்தையும் வன்முறையையும் கக்கும் தீப்பிழம்புகளாகத்தான் அவை வலம் வருகின்றன. அன்று இந்திய விடுதலையில் ஊடகங்களுக்குப் பெரும் பங்கு இருந்தது என்பதை இன்றைய ஊடகவியலாளர்கள் மறந்து விட்டார்கள் போலும்! சமூகத்தில் இன்று இருக்கும் பிரச்சனைகளுக்கு எதிராய் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டிட இந்த ஊடகங்களால் முடியும். அதனைச் சரிவரச் செய்யாமல் மக்கள் ரசனை இதுதான் என்ற முன்முடிவுடன் பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டு மூன்றாம் தர நிகழ்ச்சிகளையும், மசாலா படங்களையும் தான் தயாரிக்கின்றார்கள். அப்படிப்பட்ட படைப்புக்களையும் முறையாகத் தணிக்கை செய்யாமல் அரசு அனுமதித்துவிடுவதுதான் மிகவும் வருத்தமளிக்கின்றது. நமது நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும், அதற்காக மாணவர்களை, இளைஞர்களை எப்படித் தயார்படுத்த வேண்டும் என்ற கோணத்தில் சிந்தித்து ஊடகங்கள் செயல்பட்டால் நமது நாட்டை உலக அரங்கில் முன்மாதிரியாகக் கொண்டு செல்ல முடியும்.

ஆனால் மேற்கூறிய மூன்று காரணிகளும் அவரவர் கடமைகளைச் சரிவர செய்யாததன் விளைவுகளைத்தான் நாம் இன்று அறுவடை செய்து கொண்டிருக்கிறோம். பள்ளி / கல்லூரி வளாகத்திற்குள் தொடர்ந்து அடிதடிகளும் கொலைகளும் நடைபெற்று வருவதை சமூகத்தின் மீது அக்கறை கொண்ட எவராலும் சகித்துக் கொள்ள முடியாது. இந்த நிலை இப்படியே தொடருமானால் இதைவிடப் பல கொடிய நிகழ்வுகளை அடுத்தடுத்துச் சந்திக்க வேண்டி வருமோ என்ற அச்சம் எழுகின்றது.

ஒவ்வொரு தரப்பும் தத்தமது கடமையைச் சரிவரச் செய்யவில்லை எனில் காட்டுமிராண்டித்தனமான, முனை மழுங்கிய சிந்தனைகளைக் கொண்ட சமுதாயம் உருவாகிவிடுமோ என அஞ்சுகின்றேன்.

நாம் ஒவ்வொருவரும் நமது ஆற்றலுக்கும் திறமைக்கும் உட்பட்ட வகையில் நம்மாலான மிகச் சிறந்த பங்களிப்பை சமூகத்திற்குச் செலுத்துவோம். சிறந்த சமுதாயத்தைக் கட்டமைப்போம்.

M.சையது அபுதாஹிர் M.Sc.,M.Phil.,
ஆராய்ச்சி மாணவர்

தியாகப் பெருநாள் சிந்தனை! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | October 06, 2014 | , ,



பாரான் பள்ளத்தாக்கில் கிடத்தப் பட்ட ஒரு பாலகன், அப்பாலகனின் பெற்றோர் ஆகிய மூவரது சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள், உலகம் முழுவதும் வாழ்ந்த / வாழும் / வாழப் போகிற முஸ்லிம்களுக்கு மாறாத படிப்பினையாகவும் அம்மூவரது செயல்பாடுகளில் சில முஸ்லிம்களின் கடமையான வழிபாடுகளாகவும் மாறிப் போயின.

ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் - எண்ணியெண்ணி வியக்கும் அந்த வரலாறு,

"எங்கள் இறைவா! விவசாயமற்ற இப்பள்ளத்தாக்கில், மாண்புமிகு உன் இல்லத்தை அடுத்து என் வழித்தோன்றலை (குடும்பத்தாரை) வசிக்க விட்டிருக்கிறேன். தொழுகையை நிலைபெறச் செய்வதற்காகக் குடியேற்றி இருக்கிறேன். எனவே, எங்கள் இறைவா! ஆதரவுள்ளம் கொண்ட மக்களை இவர்களுக்கு ஏற்படுத்துவாயாக! இவர்கள் உனக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, கனிகளைக் கொண்டு இவர்களுக்கு உணவளிப்பாயாக!" (அல்-குர்ஆன் 14:37) என்று தொடங்குகிறது.

தன் வாழ்க்கைத் துணைவியையும் வயோதிக காலத்தில் தனக்கு வாரிசாகப் பிறந்த பால்குடி மாறாப் பாலகனையும் பாலைவனத்தில் விட்டுச் செல்ல அண்ணல் இபுறாஹீம் நபி (அலை) எப்படித் துணிந்தார்கள்?

அதுதான் தியாகம்! அல்லாஹ்வின் கட்டளைக்காக அனைத்தையும் துறக்கத் துணிந்த தியாகம்!

"இறைவன்தான் இந்தப் பாலைவனத்தில் எங்களை விட்டுச் செல்லுமாறு உங்களுக்குக் கட்டளையிட்டான் எனில், அவனே எங்களைப் பாதுகாப்பான்" என்று உறுதியோடு உரைக்க அன்னை ஹாஜராவுக்கு எப்படி மனம் வந்தது?

அல்லாஹ்வின் மீதுள்ள அளவு கடந்த நம்பிக்கையில், வானமே கூரையாக சுட்டெரிக்கும் பாலையிலும் வாழ்ந்திடத் துணிந்த தியாகம்!

மகன் மட்டும் தியாகத்தில் சளைத்தவரா?

"... என்னருமை மகனே! நான் உன்னை அறுத்துப் பலியிடுவதாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உன் கருத்து என்ன என்பதை யோசித்துச் சொல்"

"என்னருமைத் தந்தையே! உங்களுக்கு என்ன கட்டளையிடப் பட்டதோ அதையே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால், (எதையும்) சகித்துக் கொள்ளக் கூடியவர்களுள் ஒருவனாக என்னை நீங்கள் காண்பீர்கள்" (அல்-குர்ஆன் 37:102).

இங்குக் கொடுத்திருக்கும் இஸ்லாத்துக்கே சொந்தமான தியாக வரலாற்றின் மிகச் சில வரிகள் வாசிப்பதற்கு மட்டுமா? என்ற கேள்வியை நாம் நம்மையே கேட்டுக் கொள்ள இந்நாளில் கடமைப் பட்டிருக்கிறோம்.

தியாகத்திருநாளை இரு ரக்அத் சிறப்புத் தொழுகையுடனும் நபி இபுறாஹீம் குடும்பத்தினரின் தியாகத்தை நினைவுபடுத்தும் ஒரு குத்பா கொண்டாடுவதோடு நம் தியாகங்களும் முடிந்து விட்டன என்ற தவறான எண்ணத்திலிருந்து விடுபட்டு... இத்தியாகத் திருநாளில் ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுப்போம்.

தியாகம் நினைவுபடுத்துவதற்கோ நினைவுகூர்வதற்கோ மட்டும் அல்ல; ஒவ்வொருவரின் வாழ்விலும் செயல்படுத்துவதற்கும் சேர்த்தேதான்!

உலகம் முழுதும் இஸ்லாத்துக்கு எதிரான திட்டமிட்ட, பல்முனைத் தாக்குதல்கள் பெருகி வரும் காலமிது. குறிப்பாக ஊடகத்துறையில் இஸ்லாத்தைப் பற்றிய பொய்களும் பூஞ்சைத் தனமான குற்றச்சாட்டுகளும் தற்போது தமிழ் இணையத்திலும் பெருகி வருகின்றன. தடுத்துச் சற்றே கையை உயர்த்தினாலே பொடியாகிப் பறந்து விடும் என்ற கருத்தில்தான் 'பூஞ்சைத் தனமான' குற்றச் சாட்டுகள் என்று இங்குக் குறிப்பிடப் படுகிறது.

கை உயர்த்துவதற்குத்தான் ஆட்கள் தேவை. வெறும் கையைன்று; எழுதுகோல் எனும் ஆயுதம் ஏந்திய கைகள்!

அண்ணல் இபுறாஹீம் எதிர் கொண்ட சோதனைகள் இன்று நமக்கில்லை. அன்னை ஹாஜரா தாங்கிக் கொண்ட வேதனைகள் நமக்கில்லை. அண்ணல் இஸ்மாயீல் ஏற்றுக் கொண்ட 'சுயபலி'யும் நமக்கில்லை. நமக்குள்ள நேரத்தைக் கொஞ்சம்போல் தியாகம் செய்தால் போதும். எழுத்துலகுக்கு இன்னும் இன்னும் இன்னும் முஸ்லிம்கள் வேண்டும்.

கையை உயர்த்துங்கள் - எழுதுகோல் ஆயுதத்தோடு!

அதிரைநிருபர் பதிப்பகம்

பொய் வழக்கு... என்ன கொடுமை? 3

அதிரைநிருபர் பதிப்பகம் | May 27, 2014 | , , , ,

2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி மாலை மணி 4:30.

முஃப்தி அப்துல் கையூமின் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. திறந்தார். வந்தவர்கள் புலனாய்வுத் துறையிலிருந்து வந்திருப்பதாகக் கூறினர். "என்ன விஷயம்?" என்று முஃப்தி கேட்க, "ஸஹாப் உன்னைப் பார்க்க விரும்புகிறார்" என்றனர். குஜராத்தில் 'ஸஹாப்' என்றால் யாரைக் குறிக்கும் என்று அங்கு எல்லாருக்கும் தெரியும்.

"நான் போயிருக்கக் கூடாதுதான். ஆனால் வேறு வழியில்லை" என்று பதினொரு ஆண்டுகளைச் சிறைச்சாலையில் கழித்து, நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்ட பின்னர் 'தி ஸிட்டிஸன்' இணைய இதழுக்குப் பேட்டியளித்த முஃப்தி கூறுகிறார்.

வாகனத்தில் ஏறி உட்கார்ந்ததும் கண்கள் கட்டப்படுகின்றன. வாகனம் அஹ்மதாபாத்திலுள்ள புலனாய்வுத் துறையின் தலைமையகத்தில் போய் நிற்கிறது. விசாரணை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முஃப்திக்கு உடனேயே சித்திரவதை தொடங்குகிறது. "எவ்வளவு கொடூரமான, எத்தனை வகையான சித்திரவதைகளை வேண்டுமானாலும் நீங்கள் கற்பனை செய்துகொள்ளுங்கள். அவையெல்லாம் நான் அனுபவித்தவற்றுக்கு ஈடாகாது" என்கிறார் முஃப்தி.

"நினைவு தடுமாறி மயங்கி விழும்வரை அடித்தார்கள்; மின்சார அதிர்வுகளை உடலில் பாய்ச்சினார்கள். நினைவு திரும்பியதும் 'அக்'ஷர்தம் கலாச்சார மண்டபத்தில் நடந்த தாக்குதலில் உன்னுடைய பங்கு என்ன?' எனக் கேட்டனர். அதுவரை எதற்காக நான் இங்கு அழைத்து வரப்பட்டேன்; சித்திரவதை செய்யப்படுகின்றேன் என்றே எனக்குத் தெரியாது. நான் அலறினேன். 'எனக்கு வன்முறையிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. என்னுடைய மார்க்கம் வன்முறையைப் போதிப்பதல்ல. வன்முறைக்கு நான் எதிரானவன். நீங்கள் சொல்லுவதில் நான் ஈடுபடவில்லை' என்று வேண்டிய மட்டும் கதறினேன். கேட்கத்தான் ஆளில்லை. ஒருநாள் இரண்டுநாள் இல்லை. பதினொரு நாட்கள் (ஆகஸ்ட் 28 வரை) நான் தாங்கவியலாத சித்திரவதைக்கு ஆளானேன். அதுவரைக்கும் நான் சட்டத்துக்குப் புறம்பாகக் கைது செய்யப்பட்ட விஷயமே வெளி உலகுக்குத் தெரியாது"

"என்னுடைய மஹல்லாவைச் சேர்ந்த பெண்கள், எனக்காகவும் என்னைப் போலவே 'காணாமல் போன' மற்றவர்களுக்காகவும் ஒரு போராட்டத்தைத் தொடங்கியிருந்தனர். 2003செப்டம்பர் 23ஆம் தேதி என்னிடமும் மற்ற ஐவரிடமும் 'ஒப்புதல் வாக்குமூலம்' என்பதாக வெற்றுத் தாளில் அதிகாரிகள் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். கூடுதலாக, முர்த்தஸா என்பவருக்கும் அஷ்ரஃப் அலீ என்பவருக்கும் நான் எழுதுவதாகத் தனித் தனியாக இரண்டு கடிதங்களை அதிகாரிகள் சொல்லச் சொல்ல நான் எழுத, அக்கடிதங்களைப் பெற்றுக் கொண்டு, அந்த நரகத்திலிருந்து எங்களைச்  சிறைச்சாலைக்கு அனுப்பினர். 

சிறைச்சாலை அதிகாரிகளும் மனிதர்கள்தாமே! எங்களைப்போல் எத்தனையோ பேரைப் பார்த்தவர்கள். நாங்கள் குற்றம் செய்யாத அப்பாவிகள் என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. சிறை அதிகாரிகள் எங்களை நல்ல முறையில் நடத்தினர்"

முஃப்தி அப்துல் கையூம், விசாரணை என்ற பெயரில் சட்ட விரோதமாக அழைத்துச் செல்லப்பட்டபோது அவருக்கு வயது 31. அவருடைய ஐந்து வயது மற்றும் எட்டுமாதக் கைக்குழந்தை இருவரும் இப்போது பதின்ம வயதை அடைந்திருக்கின்றர். 'பயங்கரவாதி'யின் மனைவி எத்தனையோ துன்பங்களையும் அவப் பெயரையும் சுமந்துகொண்டு இரு பிள்ளைகளையும் வளர்த்தெடுத்தார்.

முஃப்தி சிறையிலிருந்த காலத்தில் அவருடைய தந்தை இறந்து போனார். முதிய தாய் விதவையானார். தந்தையின் ஜனாஸாத் தொழுகையில் கலந்துகொள்ளக்கூட முஃப்திக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

2002 செப்டம்பர் 24, மாலை மணி 4.45.

குஜராத் மாநிலம் காந்தி நகரில் 23 ஏக்கர் பரப்பளவில் எழுப்பப்பட்டுள்ள சுற்றுலா கேந்திரமான அக்'ஷர்தம் கலாச்சார ஆலயத்தின் புறவாசல் எண் மூன்றின் அருகில் ஒரு வெள்ளை நிற அம்பாஸ்டர் கார் வந்து நின்றது.

அதிலிருந்து இறங்கிய இருவர், தம் பொதிகளைச் சுமந்தவர்களாக உள்ளே நுழைய முயன்றனர். காவலாளி தடுக்கவே, புறவாசல் கதவின் மீதேறி உள்ளே சென்றனர்.

பின்னர் தம் பொதிகளிலிருந்து துப்பாக்கிகளை எடுத்து, இலக்கில்லாமல் சுட்டனர்; கையெறி குண்டுகளையும் வீசினர். (2008இல் மும்பையில் மாவீரர் கார்கரே கொல்லப்பட்டபோது நடந்த தாக்குதல் போலவே இதுவும் இலக்கற்றதாக இருந்தது. இதிலும் சுரேஷ் எனும் முக்கியமான ஒரு கமாண்டோ கொல்லப்பட்டார்).

கலாச்சார மையத்தின் உள்ளேயிருந்த காவலர்களுக்கு வயர்லெஸ் மூலமாகத் தாக்குதல் செய்தி அனுப்பப்பட்டது. உள் கதவுகள் மூடப்பட்டன. உள்ளூர் காவல்துறையினரும் தேசிய பாதுகாப்புப் படையினரும் 15 நிமிடங்களுக்குள் வந்து சேர்ந்தனர். அப்போதைய துணைப் பிரதமர் எல்.கே. அத்வானியின் உத்தரவின் பேரில் கருப்புப் பூனை கமாண்டோக்களும் பறந்து வந்தனர். அந்த நேர இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்ட பயங்கரவாதிகள் பொருட்காட்சியகத்தின் முதலாவது மண்டபத்துக்குள் நுழைந்து மறைந்து கொண்டனர்.

கமாண்டோக்கள் கலாச்சார மையத்தைச் சுற்றி வளைத்துக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்தபோது 32 அப்பாவிகள் உயிரிழந்திருந்தனர்; 80 பேர் படுகாயம் அடைந்திருந்தனர்.

பயங்கரவாதிகள் தம் பதுங்குமிடங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டனர். கமாண்டோக்கள் தொடர்ந்து போராடி மறுநாள் 24 செப்டம்பர் 2002 காலை 6.15 மணியளவில் இரு பயங்கரவாதிகளையும் சுட்டு வீழ்த்தினர்.

இவை அத்தனையும் குஜராத்தின் முதல்வராகவும் உள்துறை அமைச்சராகவும் மோடி பதவியேற்ற அடுத்த ஆண்டு நடைபெற்ற தாக்குதல் பற்றிய சுருக்கக் குறிப்புகளாகும்.

அக்'ஷர்தம் கலாச்சார மையத் தாக்குதல் தொடர்பான விசாரணை, குஜராத்தின் முன்னாள் காவல்துறை துணை இயக்குநரும் சொஹ்ராபுத்தீன் குழுவினர் உட்படப் பலரைப் போலி என்கவுண்டரில் கொலை செய்து தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருப்பவருமானவன்சாராவிடம் ஒப்படைக்கப்பட்டது.

கலாச்சார மையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளாக முர்தஸா ஹாஃபிஸ் யாசீன் மற்றும் அஷ்ரஃப் அலீ முஹம்மது ஃபாரூக் ஆகிய இருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லக்'ஷரே தொய்பா அமைப்பினர் என்றும் குஜராத் முதல்வர் மோடியைக் கொல்ல வந்தவர்கள் என்றும் பின்னர் இலக்கை மாற்றிக் கொண்டார்கள் என்றும் காவல்துறையினரால் கூறப்பட்டனர்.

பாகிஸ்தானிலிருந்து வந்த இரு பயங்கரவாதிகளுக்கும் உடந்தையாக உள்ளூர் ஆட்கள் வேண்டுமே! அதற்கு என்ன செய்வது?
முஸ்லிம்களின் பொருளாதார உதவியுடன் தொடக்கக் கல்வியிலிருந்து ஐப்பீஎஸ் வரை படித்த வன்சாரா, அப்பாவி முஸ்லிம்களை அள்ள ஆரம்பித்தார்.

(1) ஆதம் சுலைமான் அஜ்மீரி, (2) ஷான் மியான் (எ) ச்சாந்த் கான் (உ.பி), (3) முஃப்தி அப்துல் கையூம் மன்சூரி, (4) முஹம்மது சலீம் ஷேக், (5) மவ்லவீ அப்துல்லாஹ் மியான் காதிரி, (6)அல்த்தாஃப் ஹுஸைன் மாலிக்.

ஆகிய அறுவரைக் கைது செய்து ஒவ்வொருவருக்கும் தனித்தனி கதை வசனம் எழுதியது குஜராத் காவல் துறை. ஆதம் சுலைமான் அஜ்மீரி, பயங்கரவாதிகள் தங்குவதற்குத் தம் சகோதரரின் வீட்டைக் காலி செய்து கொடுத்தாராம். அல்த்தாஃப் ஹுஸைன் மாலிக், ஆயுதங்கள் வெடி மருந்துகள் சப்ளை செய்தாராம். எந்த இடத்தைத் தாக்குவது என்பதை இலக்கு நிர்ணயித்து வாகன வசதி செய்து கொடுத்தவர்கள் முஃப்தி அப்துல் கையூம் மன்சூரியும் மவ்லவீ அப்துல்லாஹ் மியான் காதிரியுமாம். இதில் முஃப்தி அப்துல் கையூம் மன்சூரி இரு கடிதங்களை உருது மொழியில் எழுதி பயங்கரவாதிகளின் பாக்கெட்டுகளில் ஆளுக்கு ஒன்று வைத்து அனுப்பினாராம். மேற்காணும் அறுவரைத் தவிர மேற்கொண்டு 28 பேரை காவல்துறை இதுவரை தேடி வருகிறதாம்.

மேற்காணும் கதை வசனம் குஜராத்தின் POTA சிறப்பு நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டு, கடந்த ஜூலை 1, 2006இல் (1) ஆதம் சுலைமான் அஜ்மீரி, (2) ஷான் மியான் (எ) ச்சாந்த் கான் (உ.பி), (3) முஃப்தி அப்துல் கையூம் மன்சூரி ஆகிய மூவருக்கு மரண தண்டனையும் முஹம்மது சலீம் ஷேக்குக்கு ஆயுள் தண்டனையும் மவ்லவீ அப்துல்லாஹ் மியான் காதிரிக்குப் பத்தாண்டு சிறையும் அல்த்தாஃப் ஹுஸைன் மாலிக்குக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும் விதித்து POTAசிறப்பு நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. குற்றத்துக்கான சான்றுகளாக, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் 'எழுதிக் கொடுத்த' ஒப்புதல் வாக்குமூலங்களும் பயங்கரவாதிகளின் பாக்கெட்டுகளில் 'கண்டெடுக்கப்பட்ட' முஃப்தி எழுதியதாகக் காவல்துறை கூறிய இரு கடிதங்களும். 

குற்றம் சாட்டப்பட்ட அறுவரும் தாங்கள் அனைவரும் நிரபராதிகள் என்பதாகக் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

"மூன்றும் மூன்றும் ஆறு; கணக்கு சரியாத்தானே வருது" என்பதாக மூவருக்குத் தூக்கையும் மூவருக்குச் சிறையையும் குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 30.5.2010 அன்று உறுதி செய்தது.

குற்றம் சாட்டப்பட்ட அறுவருக்காகத் தொடர் போராட்டம் நடத்திய ஜமாஅத்துல் உலமா ஹிந்தின் சட்டத்துறையில் பொறுப்பு வகிக்கும் மவ்லவீ அஷ்ரஃப் மதனீ, உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கை நகர்த்தினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.கே. பட்நாயக், நீதிபதி வி. கோபால கவ்டா ஆகிய இருவர் அடங்கிய பெஞ்ச், கடந்த 16.5.2014 வெள்ளிக்கிழமை, "குற்றம் சாட்டப்பட்ட அறுவரும் நிரபராதிகள்" எனத் தீர்ப்பு வழங்கியது. அத்துடன் நில்லாமல், "நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் சவாலான இந்த வழக்கில் புலன் விசாரணை அமைப்புகளின் கையாலாகாத் தனத்தை எண்ணி வேதனைப் படுகிறோம்" என்று நீதிபதிகள் இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.

கமாண்டோக்களின் துப்பாக்கிக் குண்டுகளினால் துளைக்கப்பட்ட பயங்கரவாதிகளின் குருதியில் குளித்த ப்பேண்ட் பாக்கெட்டுகளிலிருந்து 'எடுக்கப்பட்ட' முஃப்தி அப்துல் கையூம் மன்சூரியின் கடிதங்கள் மட்டும் இரத்தக் கறை இல்லாமல், தூசி படியாமல், மடிப்புக் கலையாமல் இருந்ததை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவனித்துவிட்டனர். பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது 25 செப்டம்பர் 2002; அவர்களின் ப்பேண்ட் பாக்கெட்டுகளில் இருந்து 'எடுக்கப்பட்ட' கடிதம் எழுதப்பட்டதோ 23 செப்டம்பர் 2003இல்.

மேலும், "விலை மதிப்பற்ற பல உயிர்களை பலி கொண்ட பயங்கரவாதத் தாக்குதலில், உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டிய காவல்துறை, அப்பாவிகளைக் கைது செய்ததோடு அவர்களுக்குக் கடுமையான தண்டனை வாங்கிக் கொடுப்பதில் முனைப்புக் காட்டியது. குற்றம் சுமத்தப் பட்டவர்களிடமிருந்து 'பெறப்படும்' ஒப்புதல் வாக்குமூலங்கள் செல்லாது எனும் அடிப்படையான சட்டக் கோட்பாட்டைக் கீழ்க் கோர்ட்டுகள் கவனத்தில் கொள்ளவில்லை" என்று நீதிபதி கோபால கவ்டா குஜராத் காவல்துறையையும் கீழ்க் கோர்ட்டுகளையும் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

POTA சட்டம் கடந்த 30.8.2003 காலாவதியானது. அதற்குள் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்களை POTA வழக்குக்குள் கொண்டுவந்து, அவர்களைத் தூக்கில் போட்டுவிடவேண்டும் என்பதே காவல்துறையின் கனவாக இருந்தது என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சான்றுகளின் மூலம் உறுதி செய்தனர்.

“எனவே, ஜுலை 1, 2006இல் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் ஆணையையும் புறந்தள்ளியும் ஜுன் 1, 2010இல் குஜராத் உயர்நீதி மன்றம் வழங்கிய பொதுத் தீர்ப்பை மறுத்துரைத்தும் அனைத்துக் குற்றவாளிகளையும் குற்றமற்றவர்கள் என விடுவிக்கிறோம்” என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

"கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் வலப்புற ப்பேண்ட் பாக்கெட்களிலிருந்து உருது மொழியில் எழுதப்பட்ட கடிதங்களை 'எடுத்ததாக'க் கூறிய பிரிகேடியர் சீத்தாபதியை POTA சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கவேயில்லை. மேலும் 46-60 தோட்டாக்களால் துளைக்கப்பட்ட பயங்கரவாதிகளின் உடைகள் 12 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. அவை புழுதியும் உறைந்துபோன இரத்தமும் படிந்தவையாயிருந்தன.

பயங்கரவாதிகளின் ப்பேண்ட் பாக்கெட்டுகளைத் துளைத்த தோட்டா, அவற்றிலிருந்து எடுக்கப்பட்ட உருதுக் கடிதங்களைத் துளையிடவில்லை என்பது நம்பும்படியாக இல்லை" என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தம் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அப்பாவிகளைக் குற்றவாளிகளாகக் காட்டுவதற்கு நாடகமாடிய குஜராத் காவல்துறையினரை யார் தண்டிப்பது?

காவல்துறையின் செல்லாத ஆவணங்களை ஏற்றுக்கொண்டு, அப்பாவிகளுக்குத் தூக்குத் தண்டனை வழங்கிய சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளையும் வழக்கு என்னவென்றே படித்துப் பார்க்காததோடு, அப்பாவிகளைக் கைது செய்த குஜராத் காவல்துறை துணை இயக்குநர் வன்சாராவை விசாரிக்காமலேயே தீர்ப்பெழுதிய குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதிகளை யார் தண்டிப்பது?

விசாரணை என்ற பெயரில் சட்ட விரோதமாக அடைத்து வைத்துச் சித்திரவதை செய்த புலனாய்வு அதிகாரிகளை யார் தண்டிப்பது?

எல்லாவற்றுக்கும் மேலாக, ஆறு நிரபராதிகள் இழந்த இளமைக் காலப் பதினொரு ஆண்டுகளை யாரால் திருப்பித் தர முடியும்?

அவர்தம் குடும்பங்கள் அடைந்த சொல்லொணாத் துயரங்களையும் துன்பங்களையும் அவப் பெயர்களையும் பொருளாதார இழப்புகளையும் எதைக் கொண்டு ஈடு செய்வது?

இந்தக் கொடுமைகளுக்கு யார் முற்றுப் புள்ளி வைப்பது?

இது போன்ற கொடுமைகள் இனி இந்தியாவில் தொடர்ந்து அல்லாஹ் நாடினால் நடைபெறலாம், இன்றைய கால சூழலில் இவைகளை எதிர்க்கொள்ள சமுதாய இயக்கங்கள் தயாராக வேண்டும். தங்களின் ஈகோக்களை நிரந்தரமாக தூக்கி எறியும் தருணம் இப்போதுதான் என்பதை ஒட்டுமொத்த முஸ்லீம் இயக்கங்கள் உணர்ந்தால் சரி. உணர்வார்களா?

நன்றி: சத்தியமார்க்கம் இணையதளம்

தொடர்புடைய சுட்டிகள்:-

உருவப்படம் வரைதல்... ஓர் ஆய்வு - பகுதி - 2 4

அதிரைநிருபர் பதிப்பகம் | December 27, 2013 | , ,


உருவ பொம்மைகள் வீட்டில் வைத்திருக்கலாமா?

உயிரினங்களின் உருவச் சிலைகளுக்கும் உருவ பொம்மைகளுக்கும் வித்தியாசமில்லை. வணங்கி வழிபாடு நடத்தினால் அது சிலை; வைத்து விளையாடினால் அது பொம்மை. இங்கு எண்ணம் - நோக்கம் வேறுபடுகின்றது. மரியாதை தரும் வகையில் இருந்தால் அது வணக்கத்தின் துவக்கமாக அமைந்துவிடும். விளையாட்டுப் பொருளாகவோ மிதிபடும் மதிப்பற்ற வகையில் இருந்தாலோ அவை வீட்டில் இருக்கத் தடையேதும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் காலத்தில், அன்னையர் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களைச் செய்து கொடுத்தனர். 

நபி(ஸல்) அவர்கள், ஆஷுரா தினத்தில் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, "யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!" என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டும் அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம். (அறிவிப்பாளர்: ருபய்யிவு பின்த் முஅவ்வித் (ரலி) நூல்கள்: புகாரி 1960, முஸ்லிம் 2091).

சிறுவர் சிறுமியருக்கு நோன்பு கடமையில்லை என்றாலும் நோன்புக்கான பயிற்சி அளிக்க நபித்தோழியர் சிறுவர், சிறுமியரை நோன்பு நோற்க ஆர்வமூட்டுவார்கள். குழந்தைகள் பசியில் அழுதால், விளையாட்டுப் பொருட்களைச் செய்து கொடுத்து அவர்களின் கவனத்தைத் திருப்புவார்கள் என மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்குகிறோம். விளையாட்டுப் பொருட்களில் பொம்மைகளும் இருந்தன என்பதற்குச் சான்றாக, முதல் பகுதியில் இரண்டாம் வகை ஹதீகளில் 5,6,7 ஆகிய அறிவிப்புகளை மீண்டும் பார்வையிடுவோம்.

(5) நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகளை வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 6130, முஸ்லிம் 4827, அபூதாவூத் 4931, இப்னுமாஜா 1982, அஹ்மத். (முஸ்லிம் நூல் (4827) அறிவிப்பில், ''நான் நபி (ஸல்) அவர்கள் இல்லத்தில் பொம்மைகள் வைத்து விளையாடுவேன்'' என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது).

(6) நான் ஏழு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். நான் (பருவமடைந்து)ஒன்பது வயதுடையவளாக இருந்தபோது, அவர்களிடம் அனுப்பிவைக்கப்பட்டேன். அப்போது விளையாட்டுப் பொம்மைகள் என்னுடன் இருந்தன. நான் பதினெட்டு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னை விட்டு இறந்தார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: முஸ்லிம் 2780, நஸயீ 3378).

விளையாட்டுப் பொம்மைகளில் உயிரினங்களின் உருவங்களும் இருந்தன,

7) நபி (ஸல்) அவர்கள் தபூக் அல்லது கைபர் இரண்டில் ஏதோ ஒரு போர்க்களத்திலிருந்து திரும்பி வந்தார்கள். அப்போது காற்று வீசி எனது விளையாட்டுப் பொம்மைகளுக்குப் போடப்பட்டிருந்த திரை விலகியது. அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் "யா ஆயிஷா! இவை என்ன?'' என்றார்கள். "என் பொம்மைகள்'' என்று  கூறினேன். அவற்றுக்கிடையே இரண்டு இறக்கைகளைக் கொண்ட குதிரை பொம்மை ஒன்றைக் கண்டு, "அதோ நடுவில் உள்ள அந்தப் பொம்மை என்ன?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். "குதிரை'' என்று கூறினேன். "குதிரையின் மேல் என்ன?" என்று கேட்டார்கள். "இறக்கைகள்'' என்று கூறினேன். "குதிரைக்கும் இரண்டு இறக்கைகளா?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, "ஏன் சுலைமான் நபியிடம் இறக்கைகள் உள்ள குதிரை இருந்ததாக நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ?'' என்று கேட்டேன், இதைக் கேட்டதும், அவர்களின் கடவாய்ப்பற்களை நான் காணும் அளவுக்கு சிரித்தார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: அபூதாவூத் 4932).

7ஆவது அறிவிப்பில், கைபர் அல்லது தபூக் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கைபர் போர் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு நடைபெற்றது. தபூக் போர் ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டு நடைபெற்றது. நபி (ஸல்) அவர்கள் கைபர் போர்க்களத்திலிருந்து திரும்பி வந்தபோது என்று வைத்துக் கொண்டாலும், கைபர் யுத்தம் முடிந்த ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு, ஆயிஷா (ரலி) அவர்களுக்கு பதினைந்து வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

6ஆவது அறிவிப்பில், ''ஒன்பதாம் வயதில் விளையாட்டுப் பொம்மைகள் என்னுடன் இருந்தன'' என்பதையும் 7ஆவது அறிவிப்பின்படி கைபர் போர் நடைபெற்ற காலத்தையும் கணக்கிட்டால்  உயிரினங்களின் உருவ பொம்மைகள் சுமார் ஆறு ஆண்டுகள் நபி (ஸல்) அவர்களின் வீட்டில் இருந்திருக்கின்றன என்பது தெளிவு.

ஒரு நாள் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வழக்கத்திற்கு மாறாகக்) கவலையோடு அமைதியாக இருந்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இன்றைய தினம் தங்களது தோற்றத்தில் ஏதோ மாற்றத்தை நான் காண்கிறேனே (ஏன்)?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(வானவர்) ஜிப்ரீல் இன்றிரவில் என்னை வந்து சந்திப்பதாக வாக்களித்திருந்தார். ஆனால், அவர் வரவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் என்னிடம் வாக்கு மாறி நடந்ததில்லை" என்று சொன்னார்கள். அந்நாள் முழுவதும் அதே நிலையிலேயே அவர்கள் காணப்பட்டார்கள். பிறகு அவர்களது மனதில், எங்கள் வீட்டிலிருந்த கூடாரமொன்றுக்குக் கீழே நாய்க்குட்டி இருக்கும் நினைவு வந்தது. உடனே அதை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அது அப்புறப்படுத்தப்பட்டவுடன் தமது கையில் தண்ணீர் அள்ளி அந்த இடத்தில் தெளித்து விட்டார்கள். அன்று மாலை நேரத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து நபியவர்களைச் சந்தித்தார்கள். அப்போது "நீங்கள் நேற்றிரவு என்னிடம் வருவதாக வாக்களித்திருந்தீர்களே?" என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் "ஆம். ஆயினும், (வானவர்களாகிய) நாங்கள் நாயும் உருவப்படமும் உள்ள வீட்டில் நுழையமாட்டோம்" என்று கூறினார்கள். அன்றைய பொழுது புலர்ந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாய்களைக் கொல்லுமாறு கட்டளையிட்டார்கள். சிறிய தோட்டங்களில் உள்ள நாய்களைக் கொல்லுமாறும் கட்டளையிட்டார்கள். பெரிய தோட்டங்களில் உள்ள நாய்களை விட்டுவிட்டார்கள் (அவற்றைக் கொல்லுமாறு உத்தரவிடவில்லை). (அறிவிப்பாளர்கள்: மைமூனா (ரலி) நூல்கள்: முஸ்லிம் 4273, நஸயீ 4283, அபூதாவூத் 4157, அஹ்மத். இதே கருத்தில் ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவிப்பு: முஸ்லிம் 4272).

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு உம்ரத்துல் களாவை முடித்துத் திரும்பும்போது, மைமூனா பின்த் ஹாரிஸ் (ரலி) அவர்களை மணமுடித்தார்கள் என வரலாற்றுக் குறிப்புகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட ஹதீஸை அறிவிக்கும் நபியவர்களின் துணைவியரில் ஒருவரான மைமூனா பின்த் ஹாரிஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பிலிருந்து நபி (ஸல்) அவர்களின் வீட்டில் நாய் நுழைந்திருந்து பிறகு அப்புறப்படுத்தப்பட்ட சம்பவம் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு அல்லது எட்டாம் ஆண்டு நடந்திருக்க வேண்டும் என்று விளங்க முடிகிறது. 

இறைச் செய்தியைக் கொண்டு வரும் வானவர் தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் எந்த நேரத்திலும் - எந்தப் பொழுதிலும் செய்திகளைச் சொல்ல வரக்கூடியவர். நபி (ஸல்) அவர்களின் வீட்டுக்கு ஜிப்ரீல் (அலை) வழக்கம்போல் வரும் தருணத்தில் வீட்டிலிருந்த நாயும், உயிரினங்களின் உருவங்கள் வரைந்த திரைச் சீலையும் தடையாக இருந்து, ஜிப்ரீல் (அலை) வீட்டிற்குள் செல்ல இயலாமல் ஆனது. ஆனால், ஆறு ஆண்டு காலம் ஆயிஷா (ரலி) அவர்களின் உயிரின உருவ பொம்மைகள் நபி (ஸல்) அவர்களின் வீட்டில் இருந்தும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வீட்டிற்குள் நுழைய அவை தடையாக இருக்கவில்லை! நபி (ஸல்) அவர்களும் உருவ பொம்மைகளை அப்புறப்படுத்தச் சொல்லவும் இல்லை! இதிலிருந்து உருவ பொம்மைகளை வணங்கி வழிபாடு நடத்தாமல், மதிப்பற்ற வகையில் விளையாட்டுப் பொருளாக வீட்டில் வைத்திருக்கலாம் என விளங்குகிறோம்! 

ஆயிஷா (ரலி) அவர்கள் உயிருள்ளவற்றின் உருவ பொம்மைகளை வைத்து விளையாடியிருப்பதால், பொம்மைகள் வீட்டிலிருக்கத் தடை இல்லை என்பது தெளிவு. இவை கார்ட்டூன், அனிமேஷன் போன்றவற்றுக்கு அனுமதியாகவுள்ளது. மேலும், கார்ட்டூனும் விளையாட்டுப் பொம்மைகளே. அவை தந்திர அமைப்பைக் கொண்டு தயாரிக்கப்பட்டு, கருவியின் மூலம் இயக்கப்படுகின்றன. கார்ட்டூன் மூலம் குழந்தைகளுக்கு நல்லவற்றைக் கற்றுத்தரலாம்!

குறிப்பு: நாய்கள் பற்றிய மேலதிகத் தகவல்.

இறைமறை 005:004 வசனக் கருத்தின்படி பயிற்சியளிக்கப்பட்ட வேட்டை நாய்கள், வேட்டைப் பறவைகளை வளர்க்க - வைத்திருக்க அனுமதியுண்டு.

"எந்த வீட்டார் (தமது இல்லத்தில்) நாய் வளர்க்கின்றனரோ அவர்களுடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு 'கீராத்'கள் (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்; கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும் வேட்டை நாயையும் தவிர". என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்கள்: அபூஹுரைரா (ரலி) இப்னு உமர் (ரலி) வழியாக புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ. அஹ்மத், முவத்தா மாலிக், தாரிமீ ஆகிய நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன).

வேட்டை நாய்களையும், காவல் நாய்களையும் வளர்க்கலாம். நாய் வாய்வைத்தப் பாத்திரத்தை ஏழு தடவை மண்ணிட்டுக் கழுவவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் நாய்களை வீட்டிற்குள் நுழையவிடாமல் வெளியில் வைத்து வேட்டை நாய்களை / காவல் நாய்களை வளர்க்க வேண்டும். நாய்களைச் செல்லப் பிராணிகள் என்று சிலர் வீட்டில் படுக்கையறையில் வைத்து வளர்க்கின்றனர். என்னதான் உயர்சாதியாக இருந்தாலும் நாய், நாய்தான். நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் நாய்களைக் கொல்லும்படி உத்தரவிட்டிருந்தார்கள். பின்னர் தளர்த்தப்பட்டு, வெறிநாய்களையும், ஷைத்தானைப் போன்று திடுக்கிடச் செய்து இடரளிக்கும் கன்னங்கரிய நாய்களையும் கொல்லும்படி கூறிய சட்டம் நீடிக்கின்றது.

அடுத்து,

முதல் வகை ஹதீஸ்களில் 3வது ஹதீஸில், "என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனைவிட அக்கிரமக்காரன் யார்?" என்று அல்லாஹ் கேட்கிறான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதைப் பார்ப்போம்.

3) நான் அபூ ஹுரைரா(ரலி) அவர்களுடன் மதீனாவில் ஒருவரது வீட்டினுள் நுழைந்தேன். அதன் மேல் தளத்தில் உருவப் படங்களை வரைபவர் உருவங்களை வரைந்து கொண்டிருந்தார். அப்போது அபூ ஹுரைரா(ரலி), 'என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனைவிட அக்கிரமக்காரன் வேறு யார் இருக்கமுடியும்? அவர்கள் ஒரு தானிய விதையையாவது படைத்துக் காட்டட்டும். ஓர் அணுவையாவது படைத்துக் காட்டட்டும் என்று (அல்லாஹ் கூறுவதாக) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல கேட்டேன்' என்றார்கள்... (நபிமொழிச் சுருக்கம், அறிவிப்பாளர்: அபூ ஸுர்ஆ பின் அம்ர் பின் ஜரீர் (ரஹ்) நூல்கள்: புகாரி 5953, 7559; முஸ்லிம் 4292, அஹ்மத்).

படைத்தல் என்பது இறைவனின் தனித் தகுதிக்கு மட்டுமே உரிய ஓர் ஆற்றல். இதில் யாருக்கும் எவ்விதப் பங்கும் இல்லை! இந்தக் கருத்தில் இறைமறையில் பல வசனங்கள் உள்ளன. இறைவனுக்கு இணைகற்பித்தோர் தன்னிச்சையாகப் பல தெய்வங்களை உருவாக்கி, அந்தச் சிலைகளிடம் தமது தேவையைக் கேட்டுப் பிரார்த்தனை செய்தனர். அப்போது அருளப்பட்ட வசனம் இது,

மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. அதற்கு நீங்கள் செவிசாயுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைத்துக் கொண்டிருப்போர் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் அவர்களால் ஓர் ஈயைக்கூடப் படைக்க இயலாது. ஈ, அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் ஈயிடமிருந்து அதை மீட்டெடுக்கவும் அவர்களால் இயலாது. (உதவி)தேடுபவனும், தேடப்படுபவனும் பலவீனர்களே! (அல்குர்ஆன் 022:073).

இறைத் தன்மையின் முதல் தகுதி, அவன் படைப்பாளனாக இருக்கவேண்டும். நீங்கள் அழைத்துக் கொண்டிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூட அல்லது ஒரு கொசுவைக்கூட படைக்க இயலாது என்று கூறி, ''மனிதர்களே! ஓரிறைவனைத் தவிர நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவையெல்லாம் பொய்க் கடவுள்களே'' என உரைத்து, தமக்குத் தாமே எவ்வித உதவியும் செய்ய இயலாத பொய்த் தெய்வங்களின் முன் நின்று உங்கள் தேவைகளை வேண்டுவது மூடநம்பிக்கை என்று மேற்கண்ட வசனம் இடித்துரைக்கின்றது.

இங்கு, தாம் வடிவமைத்தவற்றின் முன் தாம் அடிமையாக நின்று வணங்கி வேண்டுவது கண்டிக்கப்பட்டு, சிலைகளுக்கு இல்லாத ஆற்றலை இருப்பதாக உணரும் மூடநம்பிக்கை தகர்க்கப்படுகின்றது.

மற்றபடி, படம் பார்த்துப் பெயர் சொல் எனக் கொசுவத்தி விளம்பரத்திற்காக கொசுவை வரைந்தவர் கொசுவைப் படைத்துவிட்டார் என்று அர்த்தம் அல்ல. மேற்கண்ட ஹதீஸில் உள்ளது போல், கோதுமையை வரைபவர் கோதுமையைப் படைக்கிறேன் என்ற எண்ணத்தில் ஓவியம் தீட்டுவதில்லை / அதைப் புகைப்படம் எடுப்பதில்லை. மாறாக, தாம் வடிக்கும் சிலைக்கு அல்லது வரையும் உருவத்திற்கு ஆற்றல் இருப்பதாக எவர் நம்புகிறாரோ அவருக்குத்தான் ''ஒரு கொசுவைக்கூட படைக்க இயலாது'' என சவால் விடப்படுகின்றது!

ஓர் உயிரின உருவத்தை நகலெடுக்க, இறைவனின் அசல் படைப்பு முன்மாதிரியாக விளங்குகிறது. தொலைக்காட்சிப் பெட்டியில் ஒளிப்படம் ஓடிக்கொண்டிருக்க, அதில் பேசுபவர் எதிரில் அமர்ந்து தொலைக்காட்சிப் பெட்டியில் தான் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருப்பார். இதனால் ஒளிப்படத்தில் வருபவர் படைக்கப்பட்டார் என்று பொருள் கொள்வது பிற்போக்கு சிந்தனை! ஒளிப்படத்தில் பேசியவர் மரணித்து விட்டார் என்று அறிந்தபின், ஒளிப்படத்தில் உள்ளவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றும் நம்பமாட்டோம். ஆகவே, படைப்புக்கும், படைப்பின் நகலுக்கும் பெரும் வித்தியாசமுள்ளது.

இறுதியாக,

குர்ஆன், சுன்னா ஆதாரங்களின் அடிப்படையில் இதுவரை எடுத்துரைத்தக் கருத்துக்களிலிருந்து, உருவப்படங்கள் கட்டாயத் தேவை என்கிற காலச் சூழ்நிலையில் இருக்கிறோம். இஸ்லாமிய ஆட்சி இல்லாத நாடுகளில்தான் உருவப்படத்தின் தேவையுள்ளது எனச் சிலர் சொல்கின்றனர். ஆனாலும், இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும் குடிமக்களும் அன்னிய நாடு செல்ல வேண்டுமாயின் பாஸ்போர்ட் வேண்டும், பாஸ்போர்ட்டுக்கு உருவப்படம் கட்டாயத் தேவை என்பதையும் நாட்டின் குடியுரிமைக்கான உருவப்படம் பதிக்கப்பட்ட அடையாள அட்டையும் கட்டாயத் தேவை என்பதையும் மறந்து இவர்கள் கருத்துரைக்கின்றனர்.

இஸ்லாமிய நாடு என அறிவிக்கப்பட்ட நாடுகளிலும் உருவப்படங்கள் சர்வ சாதாரணமாகப் புழக்கத்தில் உள்ளன. அந்நாட்டு ரூபாய் நோட்டுக்களிலும் உருவப்படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. வேலை செய்வதற்காக அங்குத் தங்கும் அன்னிய நாட்டினருக்கு புகைப்படம் பதியப்பட்ட அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் அட்டையும் வழங்கப்படுகின்றன. இதை ஆதாரமாக இங்குச் சொல்லவில்லை. இவற்றை எதிர்ப்பதற்கு இஸ்லாத்தில் சான்றுகள் இல்லை என்பதுதான் நிதர்சனம்! 

மக்கள் தொகை அதிகரிக்க நிர்வாக வசதிக்காக பூமியில் நாடுகளின் எல்கைகள் போடப்பட்டன. ஒரு நாடு பல மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. ஒரு மாநிலம் பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, நகரங்கள் கிராமங்கள் என அடையாளப் படுத்தப்படுப்பட்டன. ஒருவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவரின் ஊர் எந்த மாநிலத்தில், எந்த மாவட்டத்தில் எந்த தாலுகாவில் உள்ளது என்கிற முகவரியுடன் அவரின் புகைப்படம் பதிக்கப்பட்ட அடையாள அட்டை கட்டாயமாக அவரிடம் இருந்தாக வேண்டும். இது காலத்தின் தேவை! இதற்கு இடையூறாக இஸ்லாம் சட்டம் எதையும் விதிக்கவில்லை என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.

காலத்துடன் கைகோர்த்து பயணிக்கும் விஷயமிது. உருவப்படம் கூடாது என்று இஸ்லாம் வலியுறுத்தாத ஒன்றை முஸ்லிம்களின் மீது திணித்தால், மக்களுடன் சேர்ந்து வாழ இயலாமல் முஸ்லிம்கள் நெருக்கடிக்கு உள்ளாகித் தனித்து விடப்படுவார்கள். 'அவை எதுவும் எங்களுக்குத் தேவை இல்லை' என்று குடும்பத்துடன் வனம் சென்று வசித்தாலும் அங்கும் ஆட்சியாளர்களின் கை நீண்டு ID CARD - அடையாள அட்டையைக் காட்டு என அதிகாரம் செலுத்தும். எனவே, உருவப்படங்கள் விஷயத்தில் இஸ்லாம் மீதான பிற்போக்குச் சிந்தையைக் களைந்து, இஸ்லாம் இம்மண்ணுக் கேற்ற மார்க்கம் என்கிற முற்போக்குச் சிந்தனையை வளர்ப்போம்!

முற்றாய் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!

உருவப்படம் வரைதல் - ஓர் ஆய்வு ! 15

அதிரைநிருபர் பதிப்பகம் | November 24, 2013 | , ,

றிவியல், நவீன கண்டுபிடிப்புகள், நவீன கருவிகள் இவற்றுக்கு இஸ்லாம் எதிரானதல்ல. ஒவ்வொரு நவீன கருவியும் அறிமுகமான தொடக்கத்தில் மார்க்கத்தின் மீதான அளவிலா பற்றின் காரணமாக அவற்றை இஸ்லாமிய அறிஞர்கள் எதிர்த்துத் தடை செய்து வந்தனர். பின்னர் படிப்படியாக அனுமதித்து நடைமுறைப் படுத்தலாம் என தீர்ப்பு வழங்கினார்கள்.

"குர்ஆன் மொழி பெயர்ப்பைத் தமிழில் தருவது ஹராம்" என்று தீர்ப்பு வழங்கினார்கள். இன்று குர்ஆனுக்குத் தமிழ் மொழி பெயர்ப்புகள் பல வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை மார்க்க அறிஞர்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஒலி பெருக்கி அறிமுகமான காலத்தில் அது "ஷைத்தானின் கருவி. ஷைத்தானின் கருவியைப் பயன்படுத்துவது ஹராம்" என்று அறிஞர்கள் தீர்ப்பு வழங்கினார்கள். அதனால் தொழுகைப் பள்ளிகளில் ஒலி பெருக்கி அமைப்பதற்குத் தடையாக இருந்தது. பின்னர் துணிச்சலுடன் சில அறிஞர்களும் பள்ளி நிர்வாகிகளும் முன்வந்து பள்ளிகளில் ஒலி பெருக்கி அமைத்தார்கள். இன்று ஒலிபெருக்கி வழியாக அறிஞர்கள் மார்க்கப் பிரச்சாரம் செய்கின்றனர்.

தொலைக்காட்சிப் பெட்டி - டிவி அறிமுகமான அந்தக் காலத்தில் "டிவியில் உருவங்கள் வருகின்றன. எனவே, ஷைத்தான் பொட்டியான டிவி ஹராமானது" என்று தீர்ப்பு வழங்கினார்கள். இந்தக் காலத்தில் அறிஞர்கள் டிவியில் தோன்றி மார்க்கப் பிரச்சாரம் செய்கின்றனர். இவ்வாறு நவீன கருவிகளுக்கெல்லாம் துவக்கத்தில் எதிர்ப்பும் அவை நடைமுறைக்கு வந்த பின்னர் அவற்றிலுள்ள நன்மைகளைக் கண்டு, படு உற்சாகத்துடன் அறிஞர்கள் அதில் பங்காற்றுவதைப் பார்க்கிறோம்.

அந்த வகையில், "உருவப்படம் வரைவது ஹராம்" என்று முன்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்று விளம்பர சுவரொட்டிகளில் தம் உருவப்படம் வரவில்லை என்றால் ஹராம் என்று சொல்லுமளவுக்கு பத்திரிக்கை, நோட்டீஸ், சுவரொட்டி, கம்ப்யூட்டர், டிவிடிக்கள், இணைய தளங்கள் என அறிஞர்களின் உருவங்கள் பதிவு செய்யப் படுகின்றன. கல்விப் பாடங்கள், அறிவியல் கல்வி, சமூக அவலங்கள் என பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்ட பயனுள்ளவைகளை தொலைக்காட்சியில் கண்டு மக்கள் அறிவை வளர்த்துக் கொள்கின்றனர். ஒரு டி.வி.டி யில் லட்சக் கணக்கான உருவப்படங்கள் பதிவு செய்யப் படுகின்றன என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

உருவப்படம் ஹராம் என்று சொல்பவர்களாலும் உருவப்படங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க இயலாது என்று சொல்லுமளவுக்கு இன்று உருவப்படங்கள் கட்டாயத் தேவை என்ற காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே, 'இஸ்லாம் உருவப்படம் வரைதலைத் தடைசெய்துள்ளது' என்பதை எவ்வாறு விளங்க வேண்டும் என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

ஓரிறைவனை வணங்குவது இஸ்லாமின் அடிப்படைக் கொள்கை. எல்லா இறைத்தூதர்களும் ஓரிறைக் கொள்கையின் அடிப்படையில் வாழ்க்கை நெறியினைப் போதித்தனர். ஒரு சமூகத்துக்கு அனுப்பப்பட்ட நபியின் மறைவுக்குப்பின், அச்சமுதாயத்தினர் மன ஆசைக்கு உட்பட்டு, தான்தோன்றித்தனமாக வாழ்க்கையை அமைத்து, "இதைத்தான் அல்லாஹ் எங்களுக்கு ஏவினான்" என்றும் வாய் கூசாமல் இறைவனின் மீது இட்டுக்கட்டிப் பொய்யுரைத்தனர்.

அவர்கள் ஏதேனும் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்துவிட்டால், "எங்கள் மூதாதையர்களை இதன் மீதிருக்கவே கண்டோம். அல்லாஹ்வும் இதையே எங்களுக்கு ஏவினான்" என்றும் கூறுகின்றனர். அல்லாஹ் மானக்கேடானவற்றை ஏவமாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (இட்டுக் கட்டிக்) கூறுகின்றீர்களா? என்று (நபியே) நீர் கேட்பீராக! (அல்குர்ஆன் 007:028)

மானக்கேடான காரியங்களைச் செய்வதற்கு மட்டுமல்லாமல், இறைவனுக்கு இணை தெய்வங்களை ஏற்படுத்தி அவற்றை வணங்குவதற்கும் முன்னோர்களை ஆதாரம் காட்டி நியாயப்படுத்தினர்.

"...எங்கள் மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களை விட்டுவிட்டு அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்க வேண்டும் என்பதற்காகவா நீர் எம்மிடம் வந்துள்ளீர்?..." என்று கூறினர். (அல்குர்ஆன் 007:070) "...எமது மூதாதையர்கள் வணங்கியதை நாங்கள் வணங்குவதை விட்டும் எங்களைத் தடுக்கின்றீரா?..." என்று கூறினர். (அல்குர்ஆன் 011:062)

இஸ்லாத்தின் மீளெழுச்சியின்போது ஓரிறைக் கொள்கையை எதிர்த்தவர்கள், 'எம் மூதாதையர்களை எந்த வழியில் கண்டோமோ அந்த வழியை நாங்களும் பின்பற்றுவோம்' என்று கொள்கையளவில் பல தெய்வக் கொள்கையை நம்பிக் கொண்டிருந்தனர். உருவச் சிலைகளை வணங்கி வழிபாடு நடத்தி, "எங்கள் முன்னோர்களை இப்படித்தான் கண்டோம், நாங்களும் அவர்களையேப் பின்பற்றுவோம்" என்றும் கூறிவந்தனர். இக்கருத்தைக் குர்ஆன் நெடுகிலும் பல வசனங்களில் காணலாம்.

உருவச் சிலைகள், உருவப் படங்கள் ஆகியவை இறைவனுக்கு இணைகற்பித்தல் எனும் மாபெரும் பாவத்தைச் செய்திடத் தூண்டுதலாக அமைந்துள்ளன. தந்தை தெய்வமாக வணங்கிய உருவத்தை மகன் வணங்கி வழிபடுவது இயல்பு. இவ்வாறு தலைமுறை தலைமுறையாக உருவச்சிலைகள், உருவப்படங்கள் தொடர்ந்து வணங்கி வழிபாடு நடத்தப்பட்டு வந்தன. இறைவனுக்கு இணைவைக்கும் கொடிய பாவத்திலிருந்து மக்களை மீட்டெடுக்க உருவச் சிலைகள் செய்வதும் விற்பதும்,  உருவப்படங்கள் வரைதலும் விற்பதும் குற்றமெனத் தடைவிதித்து கடுமையாக எச்சரித்துள்ளது இஸ்லாம்!

கப்ரு - மண்ணறையை வணங்குதல்

நபி(ஸல்) அவர்களுக்கு மரண வேளை நெருங்கியபோது தங்களின் போர்வையைத் தங்களின் முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சுத் திணறும்போது அதைத் தம் முகத்தைவிட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தனர். அந்த நிலையில் அவர்கள் இருக்கும்போது "தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிய யூத-கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்" எனக் கூறி யூத-கிறிஸ்தவர்களின் செய்கை பற்றி எச்சரித்தார்கள். (அறிவிப்பாளர்கள்: ஆயிஷா (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி 435-0437; முஸ்லிம் 826 , நஸயீ 2047, அபூதாவூத் 3227, அஹ்மத்).

ஓர் இறைவனை வணங்கும்படி ஓரிறைக் கொள்கையின் பக்கம் அழைத்த நபிமார்களையும் யூத, கிறிஸ்தவர்கள் விட்டு வைக்கவில்லை. இறைவனிடமிருந்து செய்திகளைப் பெற்று மக்களுக்கு அறவுரைகளைப் போதிக்க நியமிக்கப்பட்ட நபிமார்கள் மரணித்து விட்டால், அவர்களின் அடக்கத்தலத்தில் ஆலயம் எழுப்பி வணக்கத்தலமாக்கி நபிமார்களின் மண்ணறைகளை வணங்கி வழிபாடு செய்தனர்.

உம்மு ஹபீபா(ரலி)வும் உம்மு ஸலமா(ரலி)வும் தாங்கள் அபிசீனியாவில் கண்ட உருவங்கள் இடம் பெற்ற (கிறிஸ்தவ) கோவிலைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அவர்களுள் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கஸ்தலத்தின் மேல் வணக்கஸ்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள்தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவர்" என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 427, 434, 1341, 3873; முஸ்லிம் 822, நஸயீ 0704, அஹ்மத் 23731).

சமகாலத்தில் மக்களுடன் சேர்ந்து வாழ்ந்த நல்ல மனிதர் மரணமடைந்தால் அவரை அடக்கம் செய்து அவருடைய சமாதி மீது வணக்கத் தலத்தை நிறுவி, அதில் அவருடைய உருவப்படங்களைப் பொறித்துவிடுவார்கள். சமாதி, உருவ வழிபாடுகள் இப்படித் துவங்கி, பின்னாளில் சமாதிகளும் உருவங்களும் தெய்வங்களாக வழிபட்டுக் கொண்டாடப் படுகின்றன.

எடுத்துக் காட்டாக: கிறிஸ்தவ ஆலயங்களில் இறைத்தூதர் இயேசு அவர்களின் உருவச் சிலைகளும் உருவப்படங்களும் பதிக்கப்பட்டிருக்கும். அத்துடன் இயேசுவின் அன்னை மரியாவின் உருவச் சிலைகளும் உருவப்படங்களும் பதிக்கப்பட்டு, அன்னையும், மகனாரும் வணங்கப் படுவதைப் பார்க்கிறோம் - இயேசு, மரியா உருவ ஓவியங்கள் கிருஸ்தவர்களின் வீட்டில் வைத்து கடவுளாக வணங்கி ஆராதிக்கப் படுகின்றன - இச்செயலுக்கு முஸ்லிம்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல "தமிழகத்து தர்ஹாக்களைப் பார்த்து வருவோம்" என நல்லவர்கள் அடக்கம் செய்யப்பட்ட சமாதிகளின் மீது தர்ஹாக்களை எழுப்பி சமாதி வழிபாடு நடத்தி வருகின்றனர். - தர்ஹாக்களின் ஓவியங்கள் வீட்டில் வைத்து தீப ஆராதனையாக ஊதுவத்தி கொளுத்தி வைத்து வணங்கி ஆராதிக்கப்படுகின்றன - உருவ வழிபாடு கூடாது என இஸ்லாம் தடை விதித்திருப்பதால் தர்ஹாக்களில் உருவங்கள் பொறிக்கப்படவில்லை. மாறாக, சமாதியில் அடக்கம் செய்யப்பட்டவர் வணங்கப்படுகிறார். (தர்ஹாவின் சமாதி வழிபாடும், இறைவனுக்கு இணைகற்பிக்கும் செயலாகும் என்பது தனி விஷயம்)

உருவ வழிபாடுகளை ஒருபோதும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை! சமாதி வழிபாடு, உருவ வழிபாடு இவற்றை வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்திடவேண்டும் என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.

"மண்ணறை(கப்ரு)கள் மீது அமராதீர்கள், அவற்றை நோக்கித் தொழாதீர்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூமர்ஸத் கன்னாஸ் (ரலி) நூல்கள்: முஸ்லிம் 1768, திர்மிதீ 0971, நஸயீ 0760, அபூதாவூத் 3229, அஹ்மத்).

நாங்கள் ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களுடன் ரோம் நாட்டிலுள்ள ரோடிஸ் தீவில் இருந்தோம். அங்கு எங்கள் நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். அப்போது ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள், எங்கள் நண்பரின் கப்ரைத் தரை மட்டமாக அமைக்கும்படி உத்தரவிட்டார்கள். "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கப்ரைத் தரை மட்டமாக்கும்படி உத்தரவிட்டதை நான் கேட்டுள்ளேன்" என்று சொன்னார்கள். (அறிவிப்பாளர்: ஸுமாமா பின் ஷுஃபை (ரஹ்) நூல்கள்: முஸ்லிம் 1763, நஸயீ 2030, அபூதாவூத் 3219, அஹ்மத்).

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அதே அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர், (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!" என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்) நூல்கள்: முஸ்லிம் 1764, திர்மிதீ 0970, நஸயீ 2031, அபூதாவூத் 3218, அஹ்மத்).

இறைவனுக்கு இணைவைக்கும் செயற்பாடுகளை இறைவன் மன்னிக்கவே மாட்டான் (அல்குர்ஆன் 004:116) என அறுதியிட்டுக் கூறியிருப்பதால், உருவ வழிபாடு என்பது இணைவைக்கும் செயல், அதனால் இஸ்லாம் உருவங்கள் வரைவதை, செதுக்குவதைத் தடைசெய்திருக்கின்றது.

உயிரினங்களின் உருவப் படங்கள் வரைவதைத் தடைசெய்வது தொடர்பான நம் அறிவுக்கெட்டிய சில அறிவிப்புகளைப் பார்த்துவிடலாம்.

முதல் வகை ஹதீஸ்கள்:

1) நான் இப்னு அப்பாஸ் (ரலி) உடன் இருந்தபோது ஒருவர் வந்து, 'அப்பாஸின் தந்தையே! நான் கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்துபவன். நான் உருவங்களை வரைகிறேன்' எனக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), 'நபி(ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கிறேன். "யாரேனும் ஓர் உருவத்தை வரைந்தால் வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும்வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான், அவர் ஒருக்காலும் அதற்கு உயிர் கொடுக்க முடியாது" என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்' என்றார். கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சுவிட்டார். அவரின் முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), 'உமக்குக் கேடு உண்டாகட்டும்! நீர் உருவம் வரைந்துதான் தீர வேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவற்றை வரைவீராக!' என்றார். (அறிவிப்பாளர்: ஸயீது இப்னு அபில் ஹஸன் (ரஹ்) நூல்கள்: புகாரி 2225, 5963; முஸ்லிம் 4290, 4291, திர்மிதீ 1751, நஸயீ 5359, அபூதாவூத் 5024, அஹ்மத்).

2) நான் சிறியமெத்தை ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதில் உருவப் படங்கள் வரையப்பட்டிருந்தன. (வீட்டுக்கு வந்த) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கண்டதும் வாசற்படியிலேயே நின்றுவிட்டார்கள், உள்ளே வரவில்லை. அவர்களின் முகத்தில் அதிருப்தி(யின் அறிகுறி)யினை நான் அறிந்து கொண்டு, 'இறைத்தூதர் அவர்களே! நான் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். நான் என்ன குற்றம் செய்துவிட்டேன்?' என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இது என்ன மெத்தை?' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'தாங்கள் இதில் அமர்ந்துகொள்வதற்காகவும், தலை சாய்த்துக் கொள்வதற்காகவும் இதைத் தங்களுக்காகவே நான் விலைக்கு வாங்கினேன்'' என்றேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'இந்த உருவப் படங்களை வரைந்தவர்கள் மறுமைநாளில் வேதனை செய்யப்படுவார்கள். மேலும் அவர்களிடம் 'நீங்கள் படைத்தவற்றுக்கு (நீங்களே) உயிர் கொடுங்கள்' என (இறைவன் தரப்பிலிருந்து இடித்து)க் கூறப்படும்'' என்று சொல்லிவிட்டு, 'உருவப்படங்கள் உள்ள வீட்டில் நிச்சயமாக (இறைவனின் கருணையைக் கொண்டுவரும்) வானவர்கள் நுழைவதில்லை'' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 5181, 5937; முஸ்லிம் 4287, அஹ்மத், முவத்தா மாலிக்).

3) நான் அபூ ஹுரைரா(ரலி) அவர்களுடன் மதீனாவில் ஒருவரது வீட்டினுள் நுழைந்தேன். அதன் மேல் தளத்தில் உருவப் படங்களை வரைபவர் உருவங்களை வரைந்து கொண்டிருந்தார். அப்போது அபூ ஹுரைரா(ரலி), 'என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனைவிட அக்கிரமக்காரன் வேறு யார் இருக்கமுடியும்? அவர்கள் ஒரு தானிய விதையையாவது படைத்துக் காட்டட்டும். ஓர் அணுவையாவது படைத்துக் காட்டட்டும் என்று (அல்லாஹ் கூறுவதாக) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல கேட்டேன்' என்றார்கள்... (நபிமொழிச் சுருக்கம், அறிவிப்பாளர்: அபூ ஸுர்ஆ பின் அம்ர் பின் ஜரீர் (ரஹ்) நூல்கள்: புகாரி 5953, 7559; முஸ்லிம் 4292, அஹ்மத்).

முஸ்லிம் ஹதீஸ் 4292இல், "மதீனாவில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த மர்வான் அல்லது ஸயீத் பின் அல்ஆஸுக்கு உரிய புதுமனை ஒன்றுக்கு நானும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் சென்றோம். அந்த மனையில் ஓவியர் ஒருவர் உருவப் படங்களை வரைந்து கொண்டிருந்தார்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

4) ...வட்டி (வாங்கி) உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும், பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக் கொள்பவளையும், உருவப்படங்களை வரைகின்றவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். (அறிவிப்பாளர்: அபூஜுஹைஃபா (ரலி) நூல்கள்: புகாரி 5962, அஹ்மத் 18281).

5) நாயும் (உயிரினங்களின் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ தல்ஹா (ரலி) நூல்கள்: புகாரி 3225, முஸ்லிம் 4278, திர்மிதீ 2804, நஸயீ 4282, அபூதாவூத் 4153, இப்னுமாஜா 3649, அஹ்மத்).

6) "உருவச் சிலைகளோ உருவப் படங்களோ உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 4293).

மேற்காணும் ஆறு அறிவிப்புகளும் உயிரினங்களின் உருவ ஓவியம் தீட்டுவதை வன்மையாகக் கண்டித்து எச்சரிக்கின்றன. உருவச் சிலையும், உருவப்படமும், நாயும் உள்ள வீட்டில் நன்மையைக் கொண்டுவரும் வானவர்கள் நுழையமாட்டார்கள் எனக் கூறி வீடுகளில் இவற்றைத் தவிர்க்கும்படியும் அறிவிக்கின்றன. இந்த அறிவிப்புகளின் கருத்துகளில் ஏறத்தாழ சற்று வார்த்தைகள் வித்தியாசத்தில் இன்னும் அனேக அறிவிப்புகள் உள்ளன. இந்த ஆதாரங்களின் அடிப்படைப் படிப்பினையாக,

உருவப்படம் வரைந்தவர் அந்த உருவத்துக்கு உயிர் கொடுக்கும்படி மறுமையில் வேதனை செய்யப்படுவார். அவரால் உயிர் கொடுக்க இயலாது. அதனால் வேதனையும் நீங்காது.

அடக்கத் தலத்தில் ஆலயம் எழுப்பி அங்கு அடக்கம் செய்யப்பட்டவரின் உருவப்படத்தை வரைந்து வைப்பவர்கள், படைப்பினங்களில் மகா மட்டமானவர்கள்.

"என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனைவிட அக்கிரமக்காரன் யார்?" என்று அல்லாஹ் கேட்கிறான். 

உருவப் படங்கள் வரைபவர்களை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.

உருவப்படங்களும் நாயும் உள்ள வீட்டில் அருளைக் கொண்டுவரும் வானவர்கள் நுழைய மாட்டார்கள்.

ஆகியவற்றை எடுத்துச் சொல்லி "உருவப்படம் வரையக் கூடாது"' புகைப்படக் கருவியைக் கொண்டு உயிரினங்களின் உருவங்களைப் "புகைப்படம் எடுக்கக் கூடாது" ஒளிப்பதிவு செய்யும் கருவியைக் கொண்டு உயிரினங்களின் உருவங்களை "ஒளிப்பதிவு செய்யக் கூடாது" "வீடுகளில் உருவப்படங்களை வைத்திருக்கக் கூடாது" எனத் தீர்ப்பு வழங்குகின்றனர் சில அறிஞர்கள்.

முதல் வகையான மேற்கண்ட இவ்வறிவிப்புகளின் எச்சரிக்கை மட்டும் இருந்திருந்தால் மறுபேச்சுக்கே இடமில்லாமல், உயிரினங்களின் உருவப் படங்கள் வரைவதற்கும், உருவப் படங்களை பயன்படுத்துவதற்கும் தடையுள்ளது என்று சொல்லி முடித்து ஒதுங்கி விடலாம். ஆனாலும், விதிவிலக்காக வேறு சில அறிவிப்புகளும் உள்ளன அவற்றையும் இங்கு ஒப்பு நோக்க வேண்டும்.

இரண்டாம் வகை ஹதீஸ்கள்:

(1) எங்களிடம் திரைச் சீலையொன்று இருந்தது. அதில் பறவையின் உருவம் இருந்தது. ஒருவர் வீட்டுக்குள் நுழையும்போது அந்தத் திரையே அவரை வரவேற்கும். என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை அப்புறப்படுத்து. நான் வீட்டுக்குள் நுழையும் போதெல்லாம் இவ்வுலக(த்தின் ஆடம்பர)ம்தான் என் நினைவுக்கு வருகிறது" என்று கூறினார்கள்... (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: முஸ்லிம் 4279, திர்மிதீ 2468, நஸயீ 5353, அஹ்மத்).

(2) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தபோது, எனது வீட்டுவாசலில் நான் குஞ்சம் உள்ள திரைச் சீலையொன்றைத் தொங்கவிட்டிருந்தேன். அதில் இறக்கைகள் கொண்ட குதிரைகளின் உருவங்கள் இருந்தன. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை (அகற்றுமாறு) உத்தரவிட, அவ்வாறே அதை நான் அகற்றிவிட்டேன். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 4281).

(3) ஆயிஷா (ரலி) அவர்களிடம் உருவச் சித்திரங்கள் பொறித்த திரைச் சீலை ஒன்று இருந்தது. அதனால் வீட்டின் ஒரு பகுதி(யிலிருந்த அலமாரி)யை அவர்கள் மறைத்திருந்தார்கள். (அதை நோக்கித் தொழுத) நபி(ஸல்) அவர்கள், 'இதை அகற்றிவிடு. ஏனெனில், இதிலுள்ள உருவப்படங்கள் என் தொழுகையில் என்னிடம் குறுக்கிட்டுக் கொண்டேயிருக்கின்றன' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி 5959, முஸ்லிம் 4284, அஹ்மத் 12122. முஸ்லிம் நூல் அறிவிப்பில், ஆகவே "அதை நான் அப்புறப்படுத்தி அதைத் தலையணை(இருக்கை)களாக ஆக்கி விட்டேன்" என்று இடம்பெற்றுள்ளது).

(4) நான் என்னுடைய அலமாரி (நிலைப் பேழை) ஒன்றின் மீது (மிருகங்களின்)  உருவங்கள் (வரையப்பட்டு) இருந்த ஒரு திரைச் சிலையைத் தொங்க விட்டிருந்தேன். அதை நபி(ஸல்) அவர்கள் கிழித்துவிட்டார்கள். எனவே, அதிலிருந்து நான் இரண்டு மெத்தை இருக்கைகளைச் செய்து கொண்டேன். அவை வீட்டில் இருந்தன அவற்றின் மீது நபி (ஸல்) அவர்கள் அமர்வார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2479).

நபி (ஸல்) அவர்களின் வீட்டில் உருவ பொம்மைகள் இருந்தன.

(5) நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகளை வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 6130, முஸ்லிம் 4827, அபூதாவூத் 4931, இப்னுமாஜா 1982, அஹ்மத். முஸ்லிம் நூல் (4827) அறிவிப்பில், ''நான் நபி (ஸல்) அவர்கள் இல்லத்தில் பொம்மைகள் வைத்து விளையாடுவேன்'' என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது).

(6) நான் ஏழு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். நான் (பருவமடைந்து) ஒன்பது வயதுடையவளாக இருந்தபோது, அவர்களிடம் அனுப்பிவைக்கப்பட்டேன். அப்போது விளையாட்டுப் பொம்மைகள் என்னுடன் இருந்தன. நான் பதினெட்டு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னை விட்டு இறந்தார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: முஸ்லிம் 2780, நஸயீ 3378). 

விளையாட்டுப் பொம்மைகளில் உயிரினங்களின் உருவங்களும் இருந்தன.

(7) நபி (ஸல்) அவர்கள் தபூக் அல்லது கைபர் இரண்டில் ஏதோ ஒரு போர்க்களத்திலிருந்து திரும்பி வந்தார்கள். அப்போது காற்று வீசி ஆயிஷா (ரலி) அவர்களின் விளையாட்டுப் பொம்மைகளுக்குப் போடப்பட்டிருந்த திரை விலகியது. அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் "யா ஆயிஷா என்ன இது?'' என்றார்கள். "என் பொம்மைகள்'' என்று  கூறினேன். அவற்றுக்கிடையே இரண்டு இறக்கைகளைக் கொண்ட குதிரை பொம்மை ஒன்றைக் கண்டு, அதோ நடுவில் உள்ள அந்தப் பொம்மை என்ன? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். "குதிரை'' என்று கூறினேன். குதிரையின் மேல் என்ன? என்று கேட்டார்கள். "இறக்கைகள்'' என்று கூறினேன். குதிரைக்கும் இரண்டு இறக்கைகளா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, "ஏன் சுலைமான் நபியிடம் இறக்கைகள் உள்ள குதிரை இருந்ததாக நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ?'' என்று கேட்டேன், இதைக் கேட்டதும், அவர்களின் கடவாய்ப்பற்களை நான் காணும் அளவுக்கு சிரித்தார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: அபூதாவூத் 4932).

(7வது அறிவிப்பில், "கைபர் அல்லது தபூக்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கைபர் போர் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு நடைபெற்றது. தபூக் போர் ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டு நடைபெற்றது).

உருவப் படங்கள் தொடர்பாக மேற்கண்ட இரண்டாம் வகை ஹதீஸ்களின் கருத்துக்களையொட்டி, சற்று முன்-பின் வாசகங்கள் வித்தியாசத்தில் இன்னும் அனேக அறிவிப்புகள் உள்ளன. இரண்டாம் வகை ஹதீஸ்களிலிருந்து, எவ்வித மதிப்பும் அந்தஸ்தும் வழங்காமல் சில காரண காரியங்களுக்காக வீடுகளில் உருவப்படங்களை வைத்திருக்கலாம்; உருவப்படங்களைப் பயன்படுத்தலாம் என்று விளங்க முடிகிறது.

உருவப் படம் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்கிற அறிவிப்பிற்கு எதிராக இன்று உருவப் படங்கள் இல்லாத வீடு இல்லை எனும் அளவுக்கு, புகைப்படங்கள், குடும்ப அட்டை, காப்பீடு அட்டை, வாக்காளர் அட்டை, செய்தித் தாள்கள், புத்தகங்கள், கல்விப் புத்தகங்கள், ரூபாய் நோட்டுக்கள், சில்லரைக் காசுகள் என இப்படி எவ்வளவோ உருவப் படங்கள் பதிக்கப்பட்டவை வீடுகளில் உள்ளன. இவை தவிர்க்க முடியாதவை. தவிர்ப்பது நடைமுறை சாத்தியமற்றது.

எடுத்துக் காட்டாக: பாலர் கல்வியை எடுத்துக் கொள்வோம். துவக்கத்தில் குழந்தைகளுக்கு உயிர் எழுத்துகள் கற்றுத் தரப்படுகின்றன. அ, அம்மா அல்லது அணில். ஆ, ஆடு. இ, இலை. ஈ, ஈயின் உருவம். உ, உரல். ஊ, ஊஞ்சல். எ, எலி. ஏ, ஏணி. ஐ. ஐவர். ஒ, ஒட்டகம், ஓ, ஓடம். ஒள, ஒளவையார். என குழந்தைகள் மனத்தில் உயிர் எழுத்துகளைப் பதிய வைக்க பாடப் புத்தகத்தில் உயிரினங்களின் உருவப்படங்களும் வரைந்து காட்டி கல்வி போதிக்கப்படும். குழந்தைகள் வீட்டில் இருக்கும் போதும் பாடப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பார்கள். பாடப் புத்தகங்கள் வீட்டில்தான் இருக்கும். பாடப் புத்தகத்தில் உயிரினங்களின் உருவப்படங்கள் இருப்பதால் வானவர்கள் வீட்டில் நுழையமாட்டார்கள் என்று சொல்ல மாட்டோம்.

உருவப் படம் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்கிற அறிவிப்பிற்கு எதிராக இன்று உருவப் படங்கள் இல்லாத வீடு இல்லை எனும் அளவுக்கு, புகைப்படங்கள், குடும்ப அட்டை, காப்பீடு அட்டை, வாக்காளர் அட்டை, செய்தித் தாள்கள், புத்தகங்கள், கல்விப் புத்தகங்கள், ரூபாய் நோட்டுக்கள், சில்லரைக் காசுகள் என இப்படி எவ்வளவோ உருவப் படங்கள் பதிக்கப்பட்டவை வீடுகளில் உள்ளன. இவை தவிர்க்க முடியாதவை. தவிர்ப்பது நடைமுறை சாத்தியமற்றது. உருவப்படம் கூடாது என்று சொல்பவரின் சட்டைப் பையில் உருவப்படம் வரையப்பட்ட பணம் இருக்கும். உருவப்படம் உள்ள அடையாள அட்டையும் இருக்கும்.

இன்று தொலைதூரம் என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. பொருளாதார வசதி இருந்தால் நினைத்த நேரத்தில் விரும்பிய நாட்டிற்குச் சென்று வரலாம். இதற்குப் பாஸ்போர்ட் கட்டாயம் வேண்டும். பாஸ்போர்ட்டின் உரிமையாளரை அடையாளப்படுத்த புகைப்படம் தேவை. அயல் நாட்டினர் உம்ரா, ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டுமாயின் பாஸ்போர்ட் இல்லாமல் இறை ஆலயமான கஅபா இருக்கும் சவூதி அரேபியா நாட்டிற்குள் சட்டப்படி நுழைய இயலாது. 

தொலைந்து போனவர்களைத் தேடும் முயற்சியில் "காணவில்லை" என்று அறிவிப்புச் செய்வதற்கும் காணாமல் போனவரின் புகைப்படம் தேவை. காவல் துறையினர் திருடர்கள் பற்றிய எச்சரிக்கை செய்வதற்கும், அயல் நாட்டிற்குத் தப்பியோடிய குற்றவாளியை இன்டர் நெட் மூலம் அடையாளப்படுத்துவதற்கும் உளவுத் துறைக்குப் புகைப்படங்கள் பெரும் உதவியாக இருந்து வருகின்றன.

காவல் துறை, நீதித்துறை, அரசுத்துறை என பல துறைகளிலும் புகைப்படங்களும், ஒளிப்பதிவுகளும் ஆவணங்களாகப் பத்திரப்படுத்தப் படுகின்றன! இன்னும் சொல்வதென்றால், புகைப்படம், ஒளிப்படம் இவை முக்கிய சாட்சிகளாகவும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. மோசடியைத் தவிர்க்க, வீடு நிலம் என அசையாச் சொத்துக்கள் வாங்கும்போது விற்பவர், வாங்குபவரின் புகைப்படங்கள் முத்திரைப் பத்திரத் தாள்களில் ஒட்டிப் பதிவு செய்யப்படுகின்றன. உருவப் படங்களால் இவ்வளவு பயன் இருந்தாலும், இஸ்லாம் முற்றாகத் தடைவிதித்திருந்தால் முஸ்லிம்கள் மறு பேச்சின்றிக் கட்டுப்பட வேண்டும்; அதில் மாற்றுக் கருத்து இல்லை!

திரைச் சீலையில் உயிரினங்களின் உருவப் படங்கள் தேவையா?

மறைவுக்காக வீட்டின் நுழைவாயிலில் திரைச் சீலையைத் தொங்க விடுகின்றனர். வெளியில் நடமாடும் ஆட்களின் பார்வை வீட்டிற்குள் எட்டாமலிருக்க திரைச் சீலை ஒரு மறைவு அவ்வளவுதான். அதற்கு துணி மட்டும் போதும். அதில் உருவப்படங்களை வரைந்து அலங்கரிப்பது வீட்டின் நுழைவாயிலை மதிப்பு மிக்கதாகக் கருதுவதாகும். இது தேவையற்ற அலங்காரம் என்பதுடன் திரைத் துணியில் வரையப்படும் உயிரினங்களின் உருவங்கள் மதிக்கப்படுகின்றன.

உருவப்படங்களின் மீதான இந்த மதிப்பைத்தான் இஸ்லாம் இல்லாமல் ஆக்குகின்றது. அதேத் திரைத் துணியைக் கிழித்து தரையில் விரித்து அதன் மீது அமர்ந்து கொள்ளலாம். மிதியடியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது திரைத் துணியைச் சுருட்டி வீட்டில் ஒரு மூலையில் வைத்து விட்டாலும் வானவர்கள் நுழையத் தடையில்லை!

(8) ஜிப்ரீல் (அலை - ஒருமுறை) அல்லாஹ்வின் தூதரது (இல்ல வாயிலில் நின்று உள்ளே வர) அனுமதி கோரினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) "உள்ளே வரலாம்" என அனுமதி வழங்கினார்கள். (ஆனால்) "உங்கள் வீட்டுத் திரைச் சீலையில் (உருவப்) படங்கள் உள்ள நிலையில் நான் எப்படி உள்ளே வருவேன்?  அதன் தலைகளை வெட்டி விடுங்கள்; அல்லது உருவங்களைச் சிதைத்துவிடுங்கள். வானவர் கூட்டமாகிய நாங்கள் உருவங்கள் வரையப்பட்ட இல்லங்களில் நுழைய மாட்டோம்" என ஜிப்ரீல் பதிலுரைத்தார். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: நஸயீ 5395, திர்மிதீ 2806, அபூதாவூத் 4158, அஹ்மத் 8018).

நஸயீ நூல் தவிர திர்மிதீ, அபூதாவூத், அஹ்மத் ஆகிய நூல்களில் கூடுதலாக வரும் கீழ்க்காணும் செய்தி பதிவுசெய்யப்பட்டுள்ளது.

என்னிடம் ஜிப்ரீல் (அலை) வந்தார்கள், "நான் நேற்றிரவு உங்களிடம் வந்திருந்தேன். உங்கள் வீட்டு வாசலில் உருவப்படங்கள் இருந்ததன் காரணமாக வீட்டுக்குள் நுழையவில்லை" என்று ஜிப்ரீல் (அலை) கூறினார்கள். வீட்டுத் திரைச் சீலையில் உருவப்படங்கள் இருந்தன. வீட்டில் ஒரு நாயும் இருந்தது, உருவப்படத்தின் தலையை நீக்கி அதை மரத்தின் வடிவம் போல் ஆக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அந்தத் திரைச் சீலையைத் துண்டாக்கி மிதிபடும் வகையில் இரண்டு தலையணைகள் தயாரிக்குமாறும், நாயை வெளியேற்றுமாறும் கட்டளையிட்டார்கள். ஹஸன் அல்லது ஹுஸைனுக்கு சொந்தமான நாய்க் குட்டி, நபி (ஸல்) அவர்களின் கட்டிலுக்கடியில் இருந்தது. பின், அது வெளியேற்றப்பட்டது.

மிதிபடும் வகையில் மதிப்பற்ற உருவப்படங்கள் வீட்டில் இருக்கலாம். அதனால் வானவர்கள் நுழைய தடை இல்லை என்பதை மேற்கண்ட அறிவிப்பிலிருந்து விளங்குகிறோம்.

உலகப் பயன் பெறுவதற்காகப் பயன்படுத்தப்படும் உருவப் படங்கள் வீட்டில் வைத்திருக்க மார்க்க ரீதியாக எவ்விதத் தடையும் இல்லை! அப்படியானால் முதல் வகை ஹதீஸ்களின் நிலை என்ன? என்கிற வினா எழுகின்றது. இதற்கு வணங்கப்படும் உருவச் சிலைகளை வடிவமைக்கக் கூடாது, வணங்கப்படும் உருவப் படங்களை வரையக் கூடாது, வணங்கி வழிபாடு நடத்தும் சிலைகளும், உருவப் படங்களும் உள்ள வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள் எனப் பொருள் கொள்வதே பொருத்தமாகும்.

"நாய்கள், உருவப்படங்கள் இருக்கும் வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள் என்ற ஹதீஸில், 'வணங்கப்படும் உருவப்படங்கள்' என்று நாமாக விளக்கம் இணைத்துக் கொள்ள நமக்கு அதிகாரம் உண்டா?"

இல்லை!, மார்க்கத்தில் ஒன்றைக் கூட்டவோ குறைக்கவோ ஹலால், ஹராம் என்று விதிக்கவோ எவருக்கும் அதிகாரமில்லை. அதிகாரம் யாவும் அல்லாஹ்வுக்குரியது! ஹதீஸ்களிலிருந்து புரிந்து கொண்டதையே விளக்கமாக வைத்துள்ளோம். நாய்களைப் பற்றித் தடை விதிக்கும் ஹதீஸ்களைப் போலவே, விதிவிலக்காக வேட்டை நாய்களை வளர்த்துக் கொள்ளலாம் என்று அல்லாஹ்வின் தூதர் அனுமதியளித்திருக்கின்றார்கள் (புகாரி 2322). இந்த அனுமதி, கட்டாயத் தேவையைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்டதாகும்.

உருவச் சிலைகள் உருவப் படங்கள் மட்டும் வணங்கப்படுவதில்லை. சில மதச் சின்னங்களும் வணங்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. சிலுவை, திரிசூலம், வேல் ஆகியவற்றைக் கடவுள்களின் சின்னங்கள் எனப் பிற மதத்தவர் வணங்கி வழிபட்டு வருகின்றனர். சிலுவைச் சின்னம் இல்லாத கிறிஸ்தவ தேவாலங்களைக் காண இயலாது. சிலுவை ஒரு தெய்வச் சின்னம் எனக் கருதி கிறிஸ்தவ மக்கள் வணங்குவதால், தோற்றத்தில் சிலுவைக் குறி போன்றவற்றையும் நபி (ஸல்) அவர்கள் சிதைத்துள்ளார்கள். 

நபி (ஸல்) அவர்கள் தங்களின் வீட்டில் சிலுவை போன்ற உருவங்கள் உள்ள எந்தப் பொருளையும் சிதைக்காமல் விட்டுவைத்ததில்லை. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 5952, அபூதாவூத் 4151, அஹ்மத் 23740).

மதச் சின்னங்கள் வணங்கப்படுவதால் சிலுவை சின்னத்தைப் போல் தோற்றமளித்தவைகளை நபி (ஸல்) அவர்கள் சிதைத்துள்ளார்கள். வணங்கப்படும் உருவப் படங்களும் சிதைத்து அழிக்கப்பட வேண்டும் என்பது இதிலிருந்து விளங்க முடிகிறது. 

மரணமடைந்த முன்னோர்களின் உருவப்படங்கள் மரச் சட்டமடித்து கண்ணாடியிட்டு சுவற்றில் மாட்டி, அதற்கு நெற்றியில் குங்குமம் சந்தனம் பொட்டுவைத்து மாலையிட்டு அவை பூஜிக்கப்படுன்றன. பிறமதத்தினர் வீட்டின் பூஜையறையில் முன்னோர்களின் உருவப்படங்கள் தெய்வமாக வணங்கப்படுகின்றன.

அம்மி, குழவி, ஆட்டுக்கல், உரல், கல் தூண் என இவற்றை வடிவமைக்கும் சிற்பியிடம் வியாபார சிந்தனை மட்டுமே இருக்கும். வேறு உணர்வு அதிலிருக்காது. ஆனால் ஆண் தெய்வங்கள், பெண் தெய்வங்கள் என உருவச் சிலைகளை வடிவமைக்கும் சிற்பி, அதை உருவாக்கும் போதே அதற்கு தெய்வீக ஆற்றல் உள்ளதாகக் கருதி ஆச்சாரத்துடன் விரதமிருந்து சிலையை வடிக்கிறார். தெய்வப் படங்களை ஓவியம் தீட்டும் ஓவியரும் அதற்கு தெய்வீக ஆற்றல் இருப்பதாகக் கருதி பக்தியுடன் உருவங்களைத் தீட்டுகிறார்.

செல்வங்களை அள்ளித் தரும் பெண் தெய்வம் கையிலிருந்து பொற்காசுகள் கொட்டுவது போலவும், கல்விக்கான பெண் தெய்வம் கையில் வீணை வைத்திருப்பது போன்றும் ஓவியரின் கற்பனைக் கேற்ப, இணைகற்பிக்கும் இணை தெய்வங்களின் உருவங்களை வரைந்தவரிடம், அவர் வரைந்த உருவப் படத்திற்கு உயிர் கொடுக்கும்படி மறுமையில் வேதனை செய்யப்படுவார் என்று விளங்கினால் முரண்பாடு இல்லை.

முற்றும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!