என் சாச்சா சாச்சிக்கு,
இளைப்பாறுகிறீர்களா
இம்மையை - நல்ல
தன்மையாய் வென்ற
தம்பதியரே?
நீங்கள்
நடந்து கடந்த தூரத்தைவிட
சுமந்து கடந்த தூரமே அதிகம்
நடந்தபோது
செருப்பாய் உழைத்த மனைவி
கொடியெனப்
படர்ந்தபோது
கொம்பாய் நிலைத்த கணவர்
சினந்தபோது முழுதாய்ச்
சகித்த மனைவி - வெட்கிச்
சிவந்தபோது கொலுசாய்ச்
சிணுங்கிய கணவர்
பெற்றவர்கள் சுமைகளல்ல
காணக்
கற்றவர்க்கு இமைகள்
நீங்கள்
உடனிருந்தால் வாய்ப்பது
வடிகட்டிய சுவாசமும்
வாழ்வாதாரத்திற்கான
அமானுஷ்ய கவசமும்
இப்படியொரு
இருப்பிடம் வேண்டுமானால்
யாவர்க்கும் வாய்க்கலாம்
இப்படியொரு இணை
எத்தனை
இருப்பிடங்களுக்கு வாய்க்கும்?
தலைவர் முன்னோக்க
தாயோ
புகைப்படம் எடுக்கும் தன்
தனையனை நோக்க
வாழ்க்கையின்
வெற்றி ரகசியம்
மெல்ல விளங்குகிறது
காணும் என் கண்களில்
ஆனந்தம் கசிகின்றது.
கேசம் வருடும்
தந்தையின் விரல்களும்
பாசம் பொழியும்
தாயின் மடியும்
வாய்க்கப் பெற்றவரே
வாழ்க்கைப் பெற்றார்
இன்னும்
இந்த இறக்கைகளுக்கடியில்தான்
எங்குமே கிடைக்காத - நாம்
ஏங்கித் தவிக்கும்
இதமான நிம்மதி
நிறைவாக இருக்கின்றது
வாழ்த்த வயதில்லை
நீடுழி வாழ்க என்று
வேண்டி நிற்கிறேன் இறையை
மாஷா அல்லாஹ்!
அன்புடன் மகன் சபீர் அபு ஷாஹ்ருக்
தொடர்ச்சியாக...
ஒரு கோப்பை தேநீர்!
சற்றுமுன்
கடந்து சென்ற வாகனத்துள்
நானில்லாமல் போனாலும்
இனி வரயிருக்கும்
வண்டிக்குள் நானிருப்பின்
இந்த
ஒற்றைக்கடையில்
ஓரங்கட்டுவேன்
அந்தக் கடையின்
எந்தப் பலகாரமும்
எனக்கு வேண்டாம்
ஒரு கோப்பையில்
தீர்ந்துபோகாதளவு தேநீர்
வட்டமேசையைச் சுற்றி என் சிநேகிதர்கள்
மறதியில்லாத மதி
வீம்புக்காக ஒரே ஒரு சிகரெட்
போதும்
இன்னும்
இலைகளின் பச்சையோ
சாலையின் கருமையோ
குறிஞ்சிநிலக் குளிரோ
புதிதாய் ஒன்றும்
ஈர்த்துவிட இயலாது எனினும்
ஒரு
காமிக்ஸ் புத்தகத்தைப் போல
கடற்கரை சாலை நடையைப்போல
ஏழு மணி ரயிலைப்போல
குடை மறந்த நாளின் திடீர் மழையைப்போல
பெருநாள் சட்டைப்பையில் காசைப்போல
ரெண்டு விநாடிகள் கூடுதலாய் வாய்த்த
அவள் பார்வையைப்போல
சுகமானது
என் நண்பர்களோடான
உரையாடும் பொழுதுகள்
ஏனெனில்
அந்த
வளைவிலேயே முடிந்துவிடாத
நெடுஞ்சாலையைவிட
புதிரானதல்ல
வாழ்க்கைப் பயணம்!
சபீர் அஹமது அபூசாரூஹ்க்
~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~()~
எனக்கென்று சில நிமிடங்கள் வாழ்க்கையில் இல்லாமல் போன வெருப்பில் தனியாக காலை 10 மணிக்கு புறப்பட்டு என் வீட்டிலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் கெந்திங்மலைக்கு போகு வழியில் தனியாக பிரியும் ஒரு சாலையில் பயணித்து.....ஒரு பள்ளிவாசலை அடைந்து , கால் வைத்தால் குளிரும் டைல்ஸில் நடந்து பள்ளிவாசலுக்குல் நுழைந்து ஒருதாயின் அரவணைப்பைப்போல் இருந்த கார்பெட்டில் இமாமுடன் லுஹர் தொழுது, பகல் சாப்பாட்டை மறந்து கிடைத்த மங்குஷ்ட்டீன் பழத்தை சாப்பிட்டு , தெரு ஓரரக்கடையில் தேனீர் குடித்து , ஊர் முழுக்க ஓடும் ஓடையில் கால் நனைத்து, காட்டு மரங்களில் கத்தும் குருவி சத்தம் கேட்டு மனசு முழுக்க அமைதியையும் சந்தோசத்தையும் சேமித்து வந்தேன்.
சமயங்களில் இது போன்ற இடங்கள் தெரிவதற்குள் நாம் பல வருடங்கள் கடந்து விடுகிறோம்.
எனக்கு 30 வருடம் கடந்திருக்கிறது. பக்கத்திலேயே இது போன்ற இடத்தை வைத்துக்கொண்டு ரேட் ரேஸ் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்திருக்கிரேன்.
zakir hussain
30 January at 07:45



