Showing posts with label சிறப்பு. Show all posts
Showing posts with label சிறப்பு. Show all posts

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 056 7

அதிரைநிருபர் பதிப்பகம் | September 30, 2016 | , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.
     
 பாங்கு கூறுதலின் சிறப்பு

''பாங்கு கூறுவதிலும், (தொழுகையின்) முதல் வரிசையிலும் உள்ள சிறப்பை மக்கள் அறிந்து, பின்பு அதற்கு சீட்டுக் குலுக்கிப் போடாமல் அவர்கள் அதை அடைந்து கொள்ள முடியாது என்று இருந்தால், அதற்காக சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். மேலும், (தொழுகைக்கு) விரைந்து செல்வதில் உள்ளதை அவர்கள் அறிந்து கொண்டால், அதன் பக்கம் முந்திச் செல்வார்கள். இஷாத் தொழுகையிலும், சுப்ஹுத் தொழுகையிலும் உள்ள சிறப்பை அவர்கள் அறிந்து கொண்டால், தவழ்ந்தாவது அவ்விரண்டு தொழுகைக்கும் அவர்கள் வருவார்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1033)

''பாங்கு கூறக்கூடியவர்கள், மறுமை நாளில் மக்களிலேயே கழுத்து நீண்டவர்களாக இருப்பார்கள் ''என நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: முஆவியா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1034)

''தொழுகைக்கு பாங்கு கூறப்பட்டால், பாங்கு கூறும் சப்தம் கேட்காத தூரம் வரை பின் துவாரத்தில் காற்றை வெளிப்படுத்தியவனாக ஷைத்தான் பின்னோக்கி ஓடுவான். பாங்கு கூறி முடித்து விட்டால் முன்னோக்கி வருவான். தொழுகைக்கு இகாமத் கூறி முடிக்கப்பட்டு விட்டால் முன்னோக்கி வருவான். இறுதியாக, ஒரு மனிதரின் உள்ளத்தில் இதற்கு முன் நினைத்திராதவற்றை, இதை நினை. அதை நினை எனக் கூறுவான். கடைசியில், அவர் எத்தனை தொழுதார் என்பதை அந்த மனிதர் அறியாதவராக ஆகிவிடுகிறார்'' என்று நபி (ஸல்)கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1036)

''பாங்கை நீங்கள் கேட்டால், பாங்கு கூறுபவர் போல் கூறுங்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸஈத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1038)

''பாங்கு கூறுவதைக் கேட்ட ஒருவர், அல்லாஹும்ம ரப்ப ஹாஃதிஹித் தாமத்தி, வஸ்ஸலாதில் காஇமத்தி, ஆதி முஹம்மதனில் வஸீலத்த, வல்ஃபழீலத்த, வப்அஸ்ஹுமகாமன் மஹ்மூதன் அல்லஃதீ வஅத்தஹு'' என்று கூறினால், மறுமை நாளில் என் பரிந்துரை அவருக்கு கடமையாகி விட்டது என்று நபி(ஸல்) கூறினார்கள்.

துஆவின் பொருள்:

இறைவா! முழுமையான இந்த அழைப்பிற்கும் நிலையான தொழுகைக்கும் உரிய  இறைவா ! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு ''வஸீலா தகுதியையும், சிறப்பையும் வழங்குவாயாக!  நீ வாக்குறுதி அளித்த '' மகாமன் மஹ்மூத்'' எனும் புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1039)

''பாங்கு கூறுபவரின் பாங்கை கேட்டவர், அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹுலாஷரீகலஹு வஅன்ன முஹம்மதன் அப்துஹுவரசூலுஹு, ரழீத்து பில்லாஹி ரப்பன், வபி முஹம்மதின் ரஸுலன், வபில் இஸ்லாமி தீனன்'' என்று கூறினால் அவரின் குற்றங்கள் அவருக்கு மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.

துஆவின் பொருள்:

அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையாளன் இல்லை என்று சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வை இறைவனாகவும், முஹம்மது(ஸல்) அவர்களை தூதராகவும், இஸ்லாமை மார்க்கமாகவும் நான் திருப்தியுடன் ஏற்றுக் கொண்டேன்.(அறிவிப்பவர்: ஸயீத் இப்னு அபீவகாஸ் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1040)

''பாங்கும், இகாமத்திற்குமிடையே கேட்கப்படும் பிரார்த்தனை மறுக்கப்படமாட்டாது'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (அபூதாவூது, திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1041)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் தெளிவான சான்று அவர்களிடம்  வரும் வரை தவறில் நீடித்துக் கொண்டே இருந்தனர். (98:1)

இவர் அல்லாஹ்வின் தூதரவார். தூய்மையான ஏடுகளைக் கூறுகிறார். (98:2)

அதில் நேரான சட்டங்கள் உள்ளன. (98:3)

வேதம் கொடுக்கப்பட்டோர் தமக்குத் தெளிவான சான்று வந்த பின்பே தவிர பிளவுபடவில்லை. (98:4)

வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை  நிலை நாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம். (98:5)

(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள்.அவர்களே படைப்புகளில்  மிகவும் கெட்டவர்கள். (98:6)

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள். (98:7)

அவர்கள் இறைவனிடம் அவர்களின் கூலி சொர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.  அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டனர். இது தனது இறைவனை அஞ்சுபவருக்கு உரியது. (98:1)
(அல்குர்ஆன்: 98:1 - 8 அல்பய்யினா -தெளிவான சான்று )

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...

அலாவுதீன் S.

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 055 6

அதிரைநிருபர் பதிப்பகம் | September 23, 2016 | , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

உளுச் செய்வதின் சிறப்பு
அல்லாஹ் கூறுகிறான் :

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள் அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான். (அல்குர்ஆன் :  அல்மாயிதா - 5:6)   

"உளுவின் காரணமாக (கை, கால், முகம் ஆகியவை) பிரகாசமானவர்களாக என் சமுதாயத்தினர் மறுமையில் கொண்டு வரப்படுவார்கள். அந்த பிரகாசத்தை தனக்கு அதிகமாக்கிக் கொள்ள உங்களில் ஒருவர் சக்தி பெற்றால், அவர் (அதை) செய்து கொள்ளட்டும்'' என்று நபி(ஸல்) கூறியதை  நான் கேட்டேன். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1024)
     
''மூஃமினின் ஆபரணங்கள், (மறுமையில்) உளுச் செய்த உறுப்புகள் முழுவதும் இருக்கும்'' என்று என் நேசர் நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1025)

''ஒருவர் அழகிய முறையில் உளுச் செய்தால், அவரின் உடலிருந்து அவரின் குற்றங்கள் வெளியேறி விடும். இறுதியாக அவரது நகக் கண்கள் கீழிலிருந்தும் வெளியேறும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: உஸ்மான் இப்னு அஃபான்(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1026)

''ஓரு முஸ்லிம் (அல்லது மூஃமின்) உளுச் செய்யும் போதும் தன் முகத்தைக் கழுவினால் அவரின் முகத்திலிருந்து. அவர் பார்த்த அனைத்து தவறுகளும் அவரின் கண்கள் வழியாக தண்ணீருடன் அல்லது தண்ணீரின் இறுதிச் சொட்டுடன் வெளியேறிவிடும். அவர் தன் கைகளைக் கழுவினால், தன் கைகளால் பிடித்த அனைத்து தவறுகளும் அவரின் கைகள் வழியாக தண்ணீருடன் அல்லது தண்ணீரின் இறுதிச் சொட்டுடன் வெளியேறி விடும். தன் கால்களை அவர் கழுவினால், அவரின் கால்கள் நடந்தது மூலம் ஏற்பட்ட அனைத்துத் தவறுகளும் தண்ணீருடன் அல்லது தண்ணீரின் இறுதிச் சொட்டுடன் வெளியேறி விடும். இறுதியாக அவர், பாவங்களை விட்டும் தூய்மையானவராக வெளியேறுவார் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1028)
     
''நபி(ஸல்) அவர்கள் மண்ணறைக்கு வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் தாரகவ்மின் மூஃமினீன் வஇன்னா இன்ஷாஅல்லாஹுபிகும் லாஹிகூன்'' என்று கூறிய நபி(ஸல்) அவர்கள் (இறை விசுவாசியான கூட்டத்தாரின் வீட்டில் உள்ளவர்களே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! நிச்சயமாக அல்லாஹ் நாடினால் உங்களை நாங்கள் வந்து சேருவோம்) ''எங்களின் சகோதரர்களை நாங்கள் பார்ப்போம்'' என விரும்புகிறேன்'' என்றும் கூறினார்கள்.

அப்போது நபித்தோழர்கள், ''இறைத்தூதர் அவர்களே! நாங்கள் உங்களின் சகோதரர்களாக இல்லையா?'' என்று கேட்டார்கள். ''நீங்கள் என் தோழர்கள். நம் சகோதரர்கள் இதுவரை வரவில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ''இறைத்தூதர் அவர்களே! உங்கள் சமுதாயத்தில் இதுவரை வராதவர்களை எப்படி அறிந்து கொள்வீர்கள்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள்,  ''கருப்பு நிறமுடைய குதிரைகளினூடே கை, கால், முகம் வெளுத்த குதிரை ஒன்று ஒருவருக்கு இருந்தால் அதை அவர் (எளிதாக) அறிந்து கொள்வார் என்பதை அறிவீர்களா?'' என்று நபி (ஸல்) கேட்டார்கள். ''இறைத்தூதர் அவர்களே! ஆம்'' என்று கூறினார்கள். ''நிச்சயமாக (நம் சகோதரர்கள்) உளுவின் காரணமாக கை, கால், முகம் வெளுத்தவர்களாக வருவார்கள். நான் அவர்களுக்காக  ''ஹவ்ழ்'' எனும் தடாகத்தின் அருகே காத்திருப்பேன்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1029)

''ஓன்றின் மூலம் அல்லாஹ் குற்றங்களை அழிப்பான். பதவிகளை அதன் மூலம் உயர்த்துவான். அதை உங்களுக்கு தெரிவிக்கட்டுமா?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ''இறைத்தூதர் அவர்களே! சரி '' என்று நபித்தோழர்கள் கூறினார்கள். ''சிரமமான (குளிர்) நேரத்திலும் உளுவை முழுமையாகச் செய்தல், மேலும் பள்ளிவாசல் பக்கம் நடப்பதை அதிகப்படுத்துதல், மற்றும் ஒரு தொழுகைக்குப் பின் மறு தொழுகைக்காக எதிர்பார்த்திருத்தல் ஆகியவைகளாகும். இதுவே உங்களுக்கு வெற்றியாகும். உங்களுக்கு வெற்றியாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1030)
     
''சுத்தமாக இருப்பது, ஈமானில் ஒரு பாதியாகும்' என்று நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1031)

''உங்களில் ஒருவர் முழுமையாக உளுச் செய்த பின்பு, ''அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு என்று கூறினால், அவருக்கு சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்பட்டு, அதில் தான் விரும்பிய வழியாக அவர் நுழையாமல் இருப்பதில்லை'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.

துஆவின் பொருள்:

''அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்; இல்லை. அவன் தனித்தவன் அவனுக்கு இணையானவன் இல்லை என்று சாட்சி கூறுகிறேன். மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாராகவும், அவனது தூதராகவும் உள்ளார்கள் என்றும் சாட்சி கூறுகின்றேன். (அறிவிப்பவர்: உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1032)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்.
(அல்குர்ஆன் : அல்பகரா - அந்த மாடு – 2:3)

தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்யுங்கள்! . ( அல்குர்ஆன் : அல்பகரா - அந்த மாடு – 2:43)

பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும். (அல்குர்ஆன் : அல்பகரா- அந்த மாடு-2:45)

அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது. பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நல்லுதவி புரிய வேண்டும்; மக்களிடம் அழகானதையே பேச வேண்டும்; ஸகாத்தையும் கொடுக்க வேண்டும்; என்று இஸ்ராயீலின் மக்களிடம் நாம் உறுதி மொழி எடுத்த பின்னர் உங்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்து அலட்சியப்படுத்தினீர்கள். (அல்குர்ஆன் :அல்பகரா - அந்த மாடு -2:83)

தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! உங்களுக்காக முன் கூட்டி அனுப்பும் எந்த நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.(அல்குர்ஆன் :அல்பகரா-அந்தமாடு- 2:110)

நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் : அல்பகரா - அந்த மாடு – 2:153)

நிச்சயமாகத் தொழுகை வெட்கக்கேடான கரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். (அல்குர்ஆன் : அல் அன்கபூத் – 29:45)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.