நிஜாம்,
டேய்,
முத்திரைத் தோழனே
நித்திரை நிலை
நின்றன்
நிரந்தரமானதா
இத்தரைமீதினில்
இனியுன்
இன்முகம் காணாத
இதயங்களோடு
எத்துணை நாட்கள்தான்
நாங்களும்
இழுத்தடிப்பதடா
ஏனிந்த அவசரம்?
நட்பை
கற்பெனக் கண்டவனே
இன்னும் கொஞ்ச நாள்
எங்களோடு
இருந்துவிட்டுப் போனால் என்ன
வேதனையை உட்சுமந்து
எமக்கெல்லாம் பகிராமல்
புன்னகைப் போர்த்தியவனே
வலிகளோடு கணநாள்
வாழப்பழகியவனே
சக மனிதரின்
முகம் வாடினால்
அகம் கலங்கும் நண்பா
நீ
ஐந்து நிமிட உரையாடலில்
ஆறாத புண் ஆற்றுவாய்
தேனை யொத்த வார்த்தைகளால்
தீராத வலி நீக்குவாய்
வலியோடு உன்னை நாடியோருக்கு
வழி காட்டி மகிழ்வாய்
ஆண்டவன்
அருள் பெற்ற நீ...
நீட்டிய கைகளில்லாம்
பொருள் இட்டவன்
வாட்டிய வறுமையை
விலக்கிய தர்மஸ்தன்
உன்னை இழந்தது
எம்மில் எதையோ
இழந்தது போலவே இருக்கிறதேடா
இருமிக்கொண்டோ
செருமிக்கொண்டே
நீ இருந்திருந்தாலாவது
ஏக்கம் மீறுகையில்
நின்றன்
எழில்வதனம் கண்டேனும்
ஆறுதல் உய்வோம்
இனி
எங்கேடா
எப்போடா
எப்படியடா என் தோழா
என்
விழித்திரையில் இன்னும்
உயிர்த்திருக்கிறாய்
செவிகளுககுள் இன்னும்
ஒலித்திருக்கிறாய்
கண்டதும்
கைகுலுக்கும்
தற்கால நட்புலகில்
கண்டதும் கட்டியணைத்துத்
தோளில் முத்தமிடும்
கற்கால நட்பன்றோ நமது
மலேசிய மண்ணறை
மஹ்சர் வரை உனக்கு
மாளிகையென துலங்கட்டும்
உன்
இறுதி மூச்செனும்
ஈட்டி எய்து
எங்கள்
இதயம் குத்திய நண்பா
உன் பிரிவை ஏற்க
வலிமை
தரட்டும்
வல்ல
இறைவன்..
அவனிடமிருந்தே வந்தாய்
அவனிடமே மீண்டாய்
அவனிடமிருந்தே வந்தோம்
அவனிடமே மீள்வோம்
யா அல்லாஹ்
எங்கள் நிஜாமுக்கு
உயர்ந்த சொர்க்கத்தை
உரித்தாக்கு!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்





