Tuesday, August 11, 2015

ஆடவரும் பெண்டிரும்!


எத்தனை வழிகளில்
இதயம் தந்தாலும்
ஒற்றை மெளனத்தில்
உள்ளம் உடைப்பர்
பெண்டிர்

மன அழுத்தம்
முடியுதிர்வு
நீரிழிவு
என
ஏதாவது
புறக்காரணங்களால்
புறக்கணிப்பர் அகவாழ்வை

வயதாகும் உடல்
ஏனோ
உள்ளத்தையும் உணர்வுகளையும்
தன்னோடு
இழுத்துச் செல்லாமல் விட்டுவிடுவதால்
இளமைப் பிரம்மையில்
இயல்பான
இழப்புகளைக் கண்டு
பயந்துபோய்
பின் தங்கிவிடுகிறது
ஆண்களின் ஆன்மா

பார்த்திருந்தால் மட்டுமே
பசிமறந்திருந்த பண்டு
அன்பென்ற அகத்திற்குள்
அனைத்தையும் அடக்கியோர்
சொற்ப வலிகள்
மற்றும்
சுய வேதனைக்காக
அன்பை அற்பமாக்குகின்றனர்

முதுமை நோக்கிய பயணத்தில்
இளமைச் சிதைவு
இயல்பானது
நிறுத்தி வைக்கப்பட்டு
மீண்டும் முடுக்க
காலம்
கடிகார முட்களல்ல,
கழட்டிவைத்து
பிறகு பொருத்த
இதயம்
மின்கலமும் அல்ல

காலம்
கரும் கேசத்தை
ஆங்காங்கே
வெள்ளை மையால்
அடிக்கோடிட்டு அறிவுறுத்துவது
யதார்த்தத்தைதான்

முடிவுதிர்வை
ஏற்க
மனமுதிர்வு வேண்டும்;
முழங்கால் வலியைத்
தள்ளி வைக்கலாம்
தவிர்க்க முடியாது

எல்லா இழைகளையும்
ஏதாவது ஒரு
முடிச்சில் இணைக்கப் பார்ப்பதுவே
எல்லா
ஆடவருக்கும் பெண்டிருக்கும்
இன்பம் பயக்கும் சீவிதம்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

17 comments:

  1. //முதுமை நோக்கிய பயணத்தில்
    இளமைச் சிதைவு
    இயல்பானது
    நிறுத்தி வைக்கப்பட்டு
    மீண்டும் முடுக்க
    காலம்
    கடிகார முட்களல்ல,
    கழட்டிவைத்து
    பிறகு பொருத்த
    இதயம்
    மின்கலமும் அல்ல

    காலம்
    கரும் கேசத்தை
    ஆங்காங்கே
    வெள்ளை மையால்
    அடிக்கோடிட்டு அறிவுறுத்துவது
    யதார்த்தத்தைதான்//

    கருஞ் சிலேட்டு பலகையில் போட்ட கோடுகள் (துளிரும் வெள்ளை முடி)... :)

    ReplyDelete
  2. ஆஹா மற்றுமொரு ரத்தினக்கல் கவிக்காக்காவின் கவிதை கீரிடத்தில்....

    //எத்தனை வழிகளில்
    இதயம் தந்தாலும்
    ஒற்றை மெளனத்தில்
    உள்ளம் உடைப்பர்
    பெண்டிர்//// 10000% கரெக்ட் காக்கா

    நயம் பொருந்திய வரிகளில் வாழ்வின் ஏதார்த்ததை சொல்லும் காவியம் இக்கவிதை

    ReplyDelete
  3. அபு இபுறாஹீம்,

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    அக்காலப் பெண்களைப் போலல்லாமல் இக்காலத்தில் உடலுழைப்பு குறைந்துவிட்டதால் பெண்களில் அதிகம்பேர் மன உலைச்சலுக்குள் சிக்கித் தவிக்கின்றனர்.

    வயதாகிப்போவதும் மரணம் எய்துவதும் யதார்த்தமானது என்பதை உணர மறுத்து உடற்கூரு மாற்றங்கள் கண்டு மிரண்டு விடுகின்றனர்.

    விளைவு: ஃபுளுவாக்ஸின் போன்ற மீட்சியில்லாத மருந்துகளில் தஞ்சமாகிவிடுகின்றனர்.

    சின்னஞ்சிறு உபாதைகளுடன் வாழப் பழகிக் கொள்வதே நல்லது.

    தங்கள் கருத்திற்கு நன்றி.

    ReplyDelete
  4. யாசிர்,

    அஸ்ஸலாமு அலைக்குன் வரஹ்...

    மெளனத்தைப்போல சப்தமான மொழி வேறு எதுவுமே கிடையாது.

    வேண்டாத போதான மெளனம் மண்டைக்குள் லட்சக்கணக்கான டெஸிபல்களில் கத்தும். விடியும் வரை உறங்கவிடாத ராப்போதுகள் இப்படிப்பட்ட மெளனங்களாலேயே வாய்க்கப்பெறுகின்றன.

    பல்லாயிரம் நாவுகளால் மெளனமாக கதறுவதைவிட ஒற்றை நாவால் உடைத்துரைத்தால் மன அழுத்தம் என்னும் பேச்சுக்கே இடமிருக்காது.

    தங்கள் கருத்திற்கு நன்றி, தம்பி!

    ReplyDelete
  5. ஈனா ஆனா காக்கா,

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    ஃபேமிலியை ஊருக்கு அனுப்பிட்டு தனியா இருந்தால் ஷார்ஜாவில் அடிக்கும் வெயிலுக்கு (47 டிகிரி செல்ஸியஸ்) இப்படித்தான் தலைக்கு பிராந்து பிடிக்கும் என்பதை ஸிம்ப்பாலிக்கா சொல்றியலா?

    (நாங்களும் இந்தா கெளம்பி வந்துருவோம்ல!)

    வாசித்து இட்ட வாவுக்கு நன்றி.

    ReplyDelete
  6. சபீர்,

    அனுபவமா ? அஞ்சற்க!
    அருமையான, அறிவான
    பிள்ளைகளைத் தந்த
    ஆண்டவனுக்கு
    'ஷுக்ர்' செய்க!

    ReplyDelete
  7. காக்கா,

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    நலம்தானே?

    ஹாஹா... கொஞ்சம் அனுபவம் நிறைய அக்கம்பக்கம் அவதானிப்பு. அனுபவத்தில் துவங்கி அவதானித்தவைகளில் தொடர்ந்து அறிவுக்கு எட்டிய தீர்வில் முடித்தேன்.

    பெரும்பாலோனார்க்கு அவர்தம் ஜன்னல்வழியாகப் பார்த்துப் பின் எழுதினானோ என்று எண்ணத் தோன்றுவது தவிர்க்க முடியாதது.

    சுட்டெறிக்கும் வெயில் வெளியில் குளிர்நிழல் குழந்தைகளே என்பது உண்மைதான்.

    ReplyDelete
  8. தம்பி இப்னு அப்துர்ரஸாக்

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    நன்றி

    தம்பி எங்கே?

    ReplyDelete
  9. தம்பி சபீர்

    உண்மையை சொல்லவா

    ஊரில் இணைய சேவை முடங்கி இருக்கிறது
    பணம்கொள்ளை போகிறது ஆனால் பயன் இல்லை

    அதனால் நீண்ட கருத்துக்களை கை பேசியில் பதிவிட இயலவில்லை

    அதனால் வகுப்புக்கு வந்துவிட்டேன என்று ஆஜர் போட்டு இருக்கிறேன்

    மற்றபடி இந்தக் கவிதை பலர் சொல்ல நினைப்பது நீங்கள் தைரியமாக சொன்னது

    தட்டிக்கேட்க ஆள் அருகில் இல்லாவிட்டால் இப்படி சகஜமாக வரும்

    ReplyDelete
  10. ஷார்ஜா வெயிலில் உன் மூளையை மேலும் சலவையாகியுள்ளது.

    தெளிவான ஓடையில்
    மிதந்து வந்த
    உன் வார்த்தை அலைகள்
    என் உள்ளத்தை
    உரசிப்பார்த்துச்
    சென்றது.

    ReplyDelete
  11. //தட்டிக்கேட்க ஆள் அருகில் இல்லாவிட்டால் இப்படி சகஜமாக வரும்//

    ஹாஹ்ஹாஹ்ஹா

    நன்றி காக்கா.

    ReplyDelete
  12. அன்பு மெய்சா

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    ஷார்ஜா வெயில் இந்த வாரம் மிகவும் கொடுமை. காற்றில்கூட அனல் அடிக்கிறது. பள்ளிகளில் ஒலூ செய்வதற்குள் கைகளும் முகமும் வெந்துவிடுமோ என்ற பயம் வருகிறது.

    சரியான சமயத்தில் இங்கிருந்து தப்பிவிட்டாய்.

    உன் கருத்திற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  13. Assalamu Alaikkum

    Dear brother Mr. AbuShahruk,

    Nice poem for encouraging committed married couple to focus on better and healthy sides of life.

    Jazakkallah khair

    B. Ahamed Ameen from Adirai.

    ReplyDelete

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.