Showing posts with label அதிரை அஹமது. Show all posts
Showing posts with label அதிரை அஹமது. Show all posts

பயன் தரும் பன்மொழித் தொடர்பு - 1 22

அதிரைநிருபர் பதிப்பகம் | February 04, 2014 | ,

அது 1977 ஜூன் மாதம். நடு இரவு கழிந்து, சுமார் ஒரு மணி இருக்கும். பம்பாயிலிருந்து புறப்பட்டு, சஊதியின் ‘தஹ்ரான்’ விமான நிலையத்தில் வந்து சேர்ந்த எம்மை வரவேற்று, ‘அராம்கோ’ கேம்ப்புக்கு அழைத்துச் செல்ல, பம்பாய்க்காரர்கள் சிலர் வந்திருந்தார்கள். நாங்கள் வருவதற்குச் சில மாதங்களுக்கு முன் சஊதிக்கு வந்து, நல்ல நல்ல இடங்களைப் பிடித்திருந்த அவர்கள், இந்தியன் என்பதற்கான அடையாளமாக, இந்தியில் நலம் விசாரித்தார்கள். நான் அந்த உறக்க நேரத்திலும், இந்தியில் பதில் அளித்தேன்.

இந்தியின் முக்கியத்துவத்தை என் மூத்தவர்கள் என்னில் வித்திட்டிருந்ததால், SSLC வரை இந்தியைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்து, இந்தியில் இரண்டு அரசுத் தேர்வுகளையும் எழுதி, முழு ஆண்டுத் தேர்வில் மூன்று மணி நேரமும் இந்திப் பரீட்சை எழுதிய KMHS மாணவன் நான் ஒருவன் மட்டுமே! மற்றவர்களெல்லாரும் கேள்விகளை அப்படியே விடைத்தாளில் எழுதி வைத்துவிட்டு, அரை மணி நேரத்தில் தேர்வுக் கூடத்தை விட்டு வெளிவந்து, என்னை ஒரு UFO வைப் பார்ப்பது போல் பார்த்துக்கொண்டு நின்றதை நானும் கவனிக்கத் தவறவில்லை. அத்துணைத் தொடர்பு இந்தியுடன் எனக்கு! இனி, மீண்டும் சஊதிக்கு வருவோம். 

இரவு இரண்டு மணிக்கு ‘ஜுஅய்மா’ Aramco கேம்புக்கு வந்து சேர்ந்தோம். Camp House-keeping அலுவலகத்தில் பதிவு செய்து வந்து, எப்படியோ தூக்கம் வந்தது; தூங்கி விட்டேன். நான் கண் விழித்தபோது, எனக்குக் கீழிருந்த கட்டிலில் உறங்கியவர்கள் பணிக்குச் சென்றுவிட்டிருந்தார்கள். உறக்கத்திலிருந்து எழுந்து வெளியில் வந்தேன்; சூரியன் தன் வெம்மைக் கதிர்களை உச்ச கட்டத்தில் பாய்ச்சிக் கொண்டிருந்தான். பகல் பன்னிரண்டு மணியாயிருக்குமோ? என்னைத் தவிர வேறு யாருமே இல்லாதிருந்த அந்தத் தகிக்கும் வேளையில், எதிரில் ஒருவர் வந்தார். இந்திக்காரனாக இருக்குமோ?! “பாய் சாப் டைம் க்யா ஹய்?” என்று கேட்டேன். அவன், “சுபா சாடே சாத்” என்று பதில் தந்தான்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு, இயல்பாக உதிக்கும் ஆவல், என்னுள்ளும் உதித்தது. ‘யாராவது தமிழ்க்காரர்கள் வரமாட்டார்களா?’ இப்படி நினைத்துத் திரும்பிய என் காதில் சிலரின் தமிழ் உரையாடல் கேட்டது! அவ்வளவுதான். காதில் தேன் வந்து பாயும் என்பார்களே, அதற்கு மாறாக, தகிக்கும் அந்த வேளையில் தென்றல் வந்து பாய்ந்தது! அவர்கள் Saudi Catering என்ற இன்னொரு கம்பெனிப் பணியாளர்களாம். அந்தக் கேம்பின் துப்புரவு மற்றும் சாப்பாட்டின் ஒப்பந்தக் கம்பெனியின் பணியாளர்களாம். “என்னங்க இப்டி வெயிலடிக்குது?” என்று வியந்து கேட்ட எனக்கு, “இது ஏழு எட்டு மணி வெயில். உச்சிப் பொழுது எப்டி இருக்கும் பாருங்க” என்று கூறி, எனக்கு ஒரு shock treatment கொடுத்துச் சென்றனர்.

அன்றைய அதிகாலை ஐந்து மணிக்கே கேம்பில் தங்கியிருந்தவர்களை ஏற்றிக்கொண்டு job site க்குச் செல்லும் பஸ்கள் எல்லாம் சென்றுவிட்டதால், அன்றைய Aramco சவூதி அதிகாரிக்கு முன் interview கொடுக்கவேண்டிய என் தவணை பிந்திவிட்டது! என்ன செய்வது? இனி, அடுத்த நாள்தான் போய் நேர்முகத் தேர்வு கொடுக்கவேண்டும். அச்சத்துடன் தொடங்கிய அந்த முதல் நாள் ஒருவாறு கழிந்தது. அடுத்த நாள், நேரத்தோடு உறங்கச் சென்று, நேரத்தோடு விழித்து, ‘மெஸ்’ஸை விட்டுவிட்டு,பஸ்ஸைப் பிடிக்க ஓடினேன்!.

“நீ இந்தியாவில் என்ன செய்துகொண்டிருந்தாய்?” என்று கேட்ட அதிகாரியிடம், “ஆசிரியப் பணி செய்துகொண்டிருந்தேன்” என்றேன். எனது பள்ளிப் படிப்பு நாட்களில் ‘ரஹ்மானியா மதரசா’வில் இரண்டாண்டுகள் படித்த அரபி மொழியறிவும், கல்லூரிப் படிப்பு முடிந்த பின் அதைக் கூட்டிக்கொள்ள வேலூர் ‘பாகியாத்’ மத்ரசாவில் ஐந்தாண்டு தமிழ் / ஆங்கில ஆசிரியப் பணியோடு அரபி அறிவை வளர்க்க உதவிய சூழலும் நன்கு கை கொடுத்தன. இலக்கணச் செறிவுடன் நான் கொடுத்த பதிலும், அவரை அண்ணாந்து பார்க்க வைத்தது. இருப்பினும், அலுவலகப் பணியில் பம்பாய்க்காரர்கள் முதல் நாளே அமர்ந்துகொண்டதால், அடுத்த நாள் வந்த எனக்கு ஆபீஸ் வேலைக்கு வாய்ப்பில்லாது போயிற்று!

“ஆசிரியருக்கெல்லாம் இங்கு வேலையில்லை” என்ற மேனேஜர், “இந்த ஆளை open yard வலுத் தூக்கும் கிரேனில் லேபர் வேலை பார்க்கக் கொண்டுபோய் விட்டுவா” என்று yard superviser க்கு ஆணையிட்டார்! 

‘விதியோ? தலை எழுத்தோ?’ என்று எண்ணிக் கொண்டு, ஆயுள் தண்டனைக் கைதி போல், மிரட்சியுடன் பாம்பேக்கார சூப்பர்வைசரின் காரில் ஏறியமர்ந்து, இந்தியில் நலம் விசாரிக்கத் தொடங்கினேன். “அரே, மவ்லிசாப் மதராசி தும்கூ ஹிந்தி ஆத்தா ஹய்!” (தாடி, தொப்பி அணிந்தவர்களை ஈசியாக ‘மவ்லவி’யாக்கிவிடுவார்கள் பம்பாய்க்காரர்கள்.) வியந்து கேள்வி எழுப்பியவருக்கு, நான் கற்ற ஹிந்தி மொழியைப் பற்றி, சற்றுக் கூடுதலாகவே சொல்லிக்கொண்டு வந்தேன்.

தொப்பி வைத்து, தாடியுடன் இருந்த என் மேல் அந்த ஆளுக்கு இரக்கம் ஏற்பட்டு. பாம்பேக்கார ‘கிரேன் ஆப்பரேட்டர்’ ஷஃபி பாயிடம் கொண்டுபோய் விட்டார். தேநீர் ஒய்வு நேரம் அது. “அரே, ஆஜாவ் மோல்வி சாப்” என்று வரவேற்ற ஷஃபி பாய், குர்பானி கொடுக்கப் போகும் பிராணியைப்போல் மிரண்டிருந்த என் முகத் தோற்றத்தைக் கண்டு, அன்புடன் உபசரித்தார். ‘டீட்டைம்’ முடிந்தவுடன், எல்லோரும் எழுந்தனர். நானும் எழுந்தேன், ‘வேலை’ பார்க்க!
(இன்னும் உண்டு, இன்ஷா அல்லாஹ்)
அதிரை அஹ்மது

முதுமை என்பது, ஒரு குழந்தைப் பருவம்! 2

அதிரைநிருபர் | June 21, 2013 | , ,

என் பெற்றோர் என்னைச் சந்திக்க வந்துவிட்டு, ஒரு வியாழக்கிழமை அன்று ஊருக்குத் திரும்பிச் செல்ல ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களை விடைகொடுத்து அனுப்புவதற்காக நாங்கள் விமான நிலையத்திற்குச் செல்ல ஆயத்தமானோம். உண்மையில், அவர்கள் ஊருக்கு விமானத்தில் திரும்பிச் செல்ல இருக்கிறார்கள் என்பது, அவர்களுக்குத் தெரியாது. என் பெற்றோர், அதுவரையில் விமானப் பயணமே செய்ததில்லை! எனவே, இம்முறை விமானப் பயணத்தின் சுகானுபவத்தில் அவர்கள் திளைக்கட்டும் என்று முடிவெடுத்து, அவர்களுக்கான இருக்கையை உறுதிப்படுத்திவிட்டுத்தான், என் தந்தையாரிடம் விமானப் பயணச்சீட்டை நீட்டினேன்.

என் தந்தையின் முகத்தில் பளிச்சிட்ட வியப்பையும் ஆனந்தத்தையும் கண்டு மகிழ்ந்த நான், விமானம் பறக்கும் உயரமென்ன, அதைவிடப் பன்மடங்கு உயரப் பறந்தேன்! பள்ளிச் சிறுவன் ஒருவனைப்போல், அவர் தான் எடுத்துச் செல்லவேண்டிய பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக்கொண்டிருந்ததும், தனது சாமான்களை ஏற்றிக்கொண்டு உருட்டிச் செல்லும் 'ட்ராலி'யை நகர்த்திப் பார்த்ததும், நாங்கள் விமான நிலையத்தை அடைந்த பின்னர் பயணிகளின் பரிசோதனைக்காகக் காத்திருந்ததும், தனக்குச் சாளர இருக்கை (Window seat) கேட்டுப் பெற்றதும் ஆகிய அவருடைய ஒவ்வொரு அசைவும் என்னைக் குதூகலிக்கச் செய்தது.

இறுதியாக, எங்களுக்கு விடைகொடுத்துவிட்டு விமானத்தில் ஏறும் நேரத்தை அடைந்தபோது, என்னை நோக்கி வந்த அவருடைய முகத்தைப் பார்த்தேன்; அவர் கண்கள் பனித்தன! "Thanks my dear son" என்று அவர் கூறியபோது, அவருடைய அதரங்கள் துடித்தன! அவருடைய நன்றிக்கு ஆயிரம் பொருள்கள் கூறலாம்! நான் செய்ததோ, ஒரேயொரு உதவிதான். அதன் பயனை உணர்ந்த அந்தத் தந்தையின் உள்ளமோ, அதற்காக அயிரமாயிரம் நன்றிகளை அள்ளித் தந்துகொண்டிருந்தது!

அவர் எனக்கு நன்றி கூறியபோது, எனது அந்தச் சாதாரண உதவிக்காகத் தந்தையிடமிருந்து இத்துணை உணர்வுகளின் வெளிப்பாடா என்று வியந்து நின்றேன்! "எனக்கு ஏனப்பா இவ்வளவு நன்றிப் பெருக்கு?" எனக் கூறி எனது தாழ்மையை வெளிப்படுத்தினேன். அடுத்த வினாடியில், எனது கடந்த கால வாழ்க்கையின் எல்லா விதமான நிகழ்வுகளும் என் இதயத்தில் படங்களாக விரிந்தன:

நாம் குழந்தைகளாக இருந்தபோது, பெற்றோர் நம்முடைய எத்தனைக் கனவுகளை நனவுகளாக்கினர்! அவர்களின் பொருளாதார நிலைபற்றி அறியாமல், நாங்கள் கிரிக்கெட் மட்டை வாங்கிக் கேட்டோம்; வாங்கித் தந்தார்கள். விதவிதமான ஆடைகள், விளையாட்டுச் சாதனங்கள் எல்லாம் வாங்கித் தந்தார்கள். புதுப்புது இடங்களைக் கண்டு களிக்கச் செய்தார்கள். அவர்களின் பொருளாதார வசதியைப்பற்றி எங்களுக்கேது கவலை? எங்களுக்கு எங்கள் ஆசைகள் நிறைவேறவேண்டும்; அவ்வளவுதான். அவற்றை நிறைவேற்றித் தருவதற்காக அவர்கள் என்னவெல்லாம் தியாகங்கள், அர்ப்பணிப்புகள் செய்தார்கள் என்பது பற்றியெல்லாம் நாங்கள் சிந்தித்துப் பார்த்தோமா? அல்லது, அவர்கள் நிறைவேற்றித் தந்த எங்கள் விருப்பங்களுக்காக எப்பொழுதாவது அவர்களுக்கு நாங்கள் நன்றி சொன்னோமா?

இது போன்றே, இன்று நாங்கள் எம் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக, அவர்களைத் தரமான பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைக்கிறோம். அதற்கான செலவுகளைக் கணக்குப் பார்ப்பதில்லை. அவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து, நம்மைப்பற்றிப் பெரிதாக எண்ணிக்கொள்ளும் அதே வேளை, நம்மை உயர்நிலையில் ஆக்க நம்முடைய பெற்றோர்கள் என்னவெல்லாம் தியாகங்கள் செய்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கத் தவறிவிடுகின்றோம்!

என் சிறு வயதில் என் பெற்றோர் என்னிடம் கேட்ட பல கேள்விகளுக்குப் பொறுமையில்லாமல் பதில் சொல்லியிருக்கிறேன். அப்போதெல்லாம், அவர்கள் என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், இப்போது என் மகள் கேட்கும் கேள்விகளுக்கு நான் மிகவும் அடக்கமாகவும் அமைதியாகவும் பதில் கூறுகின்றேன். இப்போதுதான் நமக்கு உணர்வு வருகின்றது, முதுமை என்பது மற்றொரு குழந்தைப் பருவமாகும் என்று. எனவே, நாம் நம் குழந்தைகளைப் பாசத்துடன் பராமரிக்கும் விதத்திலேயே நம் பெற்றோர்களையும் முதியவர்களையும் நோக்கவேண்டும்.

நம் குழந்தைகள் வந்து நம்மிடம் கேள்விகள் கேட்கும்போது, செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருக்கலாம். அப்போது, அவர்களின் முகத்தை நோக்கிக் கனிவாக பதில் கூறுவதற்குப் பகரமாக, ஒரே வார்த்தையில் பதில் கூறி அவர்களை விரட்டிவிடக் கூடாது.

"Thanks!" என்ற சொல்லைக் கூறி, என்னை இவ்வளவு தூரம் சிந்திக்கச் செய்துவிட்ட என் தந்தையை, அவருக்கு இன்பத்தைத் தரும் இந்தப் பயணக் கனவை நனவாக்கிக் கொடுக்க இவ்வளவு நாட்கள் காத்திருக்க வைத்துவிட்டேனே என்ற குற்ற உணர்வால் கூனிக் குறுகி நின்றேன் நான். எனக்கு நன்றாகத் தெரியும், அவர்கள் என்னை உயர்த்தி வைத்துப் பார்ப்பதற்காக என்னவெல்லாம் தியாகங்கள் செய்திருப்பார்கள் என்று. எஞ்சியிருக்கும் நாட்களில் அவர்களின் எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பேன் என்று இவ்வேளை நான் எடுக்கும் உறுதிப்பாடு நிலைத்திருக்கவேண்டும், அவர்களின் மரணத்தின் பின்னரும்!

அவர்கள் முதுமையை அடைந்துவிட்டதால், அவர்களின் இதய வேட்கைகளைத் தியாகம் செய்துவிட வேண்டும்; அவர்களின் பேரப்பிள்ளைகளின் பராமரிப்பில் தங்கள் எஞ்சிய காலத்தைக் கழிக்கவேண்டும் என்பது கருத்தன்று. அவர்களுக்கும் ஆசைகள் இருக்கத்தான் செய்யும்! எனவே, உங்கள் பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுங்கள்! அவர்கள் விலைமதிப்பற்ற சொத்தாவர்!

'Human Relations' என்பது பற்றிய கருத்தாய்வு நிகழ்ச்சி ஒன்றில், Indian Institute of Technologyயில் பணி புரியும் திரு வி. பாலசுப்ரமணியன் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவிலிருந்து.

தகவல்: அதிரை அஹ்மது

இது ஓர் மீள்பதிவு : - அன்று இது அதிரைநிருபருக்கு கன்னிப் பதிவு !
20-Jun-2010

பேறு பெற்ற பெண்மணிகள் - முதலில் திருமறை; பிறகு அருள்நெறி! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | February 06, 2013 | , ,

நூல் பாகம் : இரண்டு
வெளியீடு : IFT - Chennai
தொடர் : 26
முதலில் திருமறை; பிறகு அருள்நெறி!

இதுவரை நாம் படித்தறிந்த பேறு பெற்ற பெண்மணிகள் எல்லாரும், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்னரே அதன் அருள் மறையாகிய அல்குர்ஆனைப் படிப்பதற்காக அதன் மூல மொழியாகிய அரபியைக் கற்கத் தொடங்கினர்.  ஆனால், இப்போது நாம் அறிமுகம் பெறப்போகும் பெண்மணியோ மிகவும் வேறுபட்டவர்!.  ஆம்; முதலில் அரபி மொழியைப் படித்தார்!  பின்னர், அதன் ஒப்புயர்வற்ற இலக்கியமான அல்குர்ஆன் வேதத்தைப் படித்தறிந்தார்!  அதன் மூலம், இஸ்லாத்தைத் தழுவிப்  பேறு பெற்ற பெண்மணியானார்! 

‏இன்றுங்கூட, சஊதி அரேபியாவி‎ன் ஜித்தா நகரத்துக் குறிப்பிட்ட ஒரு ‘தஅவா’ சென்டரில் வெளிநாட்டுப் பெண்கள் பிரிவுக்குள் நுழைபவர்களுக்குச் சில வேளைகளி‎ல் வியப்பான காட்சியொன்று தென்படும்.  அரபி மொழியைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர் என்‎று கருதப்படும் அமெரிக்கப் பெண்மணி ஒருவர் அழகிய - துல்லியமான அரபி மொழி உச்சரிப்புடன் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருப்பார்!  அருள்மறை குர்ஆனின் வசனங்கள், நபிமொழி மேற்கோள்கள் சரளமாக அவருடைய சொற்பொழிவினூடே வீறுநடை போட்டு வரும்!

இவருக்கு ‏இத்துணைப் பாண்டித்தியம் எவ்வாறு ஏற்பட்டது?  கல்வியில் ஆர்வமுடைய அனைவரும் அறிய வேண்டிய அற்புதமானது அவருடைய முயற்சி!

ஏன்?  எப்படி?  என்‎றெல்லாம் கேள்விகள் கேட்காமல், கடவுளை நம்பியவர் அவருடைய தாய்.  கடவுள் நம்பிக்கையின்றி, ஒவ்வொன்றையும் பற்றிக் கேள்விகள் கேட்பவர் அவருடைய தந்தை!  இந்த இரு துருவங்களுக்கும் மகளாகப் பிறந்தவர்தான் நம் கதாநாயகி!

தென் கலி•போர்னியாப் பல்கலைக் கழகத்தில் (University of Southern California) பட்டம் பெற்று முடித்திருந்த அவ்விள மங்கைக்கு, தன் எதிர் கால வாழ்வில் என்ன நடக்கும் என்பது தெரியாது!  ஏன், அவரது பெற்றோரும் வழி வகுத்துக் கொடுத்திருக்கவில்லை.  அது, மறைவானது!  மகத்தானது!  எதிர்பாராதது!  ஏனென்று கேட்க முடியாதது!

அவருடைய மாற்றத்திற்கு ஒரேயொரு சாதகமான வளர்ப்புச் சூழல் மட்டுமிருந்தது.  அதாவது, அவருடைய தந்தை அமெரிக்காவின் புகழ் பெற்ற புவியியல் விஞ்ஞானிகளுள் ஒருவர்.  எதையும் ஏன், எப்படி என்று ஆய்ந்தறியும் இயல்புடையவர்.  அத்தகையவருக்குப் பிறந்த மகள் எப்படியிருப்பார்?  எந்த முயற்சியிலும் இயல்பு முந்தித்தானே நிற்கும்?

“என் தந்தையுடன் பலபோது ஆய்வுக் கூடங்களுக்குச் சென்றபோது, நான் கண்ட அவருடைய சிந்தனைப் போக்கும் அணுகுமுறையும்தான் என்னை இன்றுவரை இயக்கிக்கொண்டிருக்கின்றது” என்று நினைவுகூர்கின்றார் அம்னா அல் அமெரிக்கிய்யா!

அம்மாவின் தூண்டுகோளால் திருச்சபைப் பிரார்த்தனைகளுக்குப் போய்வந்த அந்தப் பிஞ்சுப் பருவம் முதல், தந்தையின் இயல்பு மிகைப்பால், ஏன், எப்படி என்று அம்மாவிடம் கேட்பால் சிறுமி.  ஆனால், அம்மாவுக்கு விளக்கம் சொல்லத் தெரியாது!  பெற்றோரின் ஒரே மகள் என்ற பாசத்தால், அவளை அலட்டி மிரட்டி அச்சுறுத்த முடியாது.  அந்த உரிமையோடு, தனிமையில் இருந்து சிந்திக்கத் தொடங்கினாள் அந்தச் சிறுமி.  விளைவு, கிருஸ்தவத் திருச்சபை அவளுக்குத் தூரமாயிற்று! 

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவளாக இருந்ததால், அப்பெண் மதங்களெல்லாம் ஒன்றே; எல்லார்க்கும் கடவுள் ஒருவரே; எல்லாரும் போய்ச்சேரும் இடம் ஒன்றே என்ற மதப் பொதுவுடைமைக் கொள்கை இயல்புடையவளாக இருந்தாள்.  அதனால், கல்லூரி வாழ்க்கையின் பின் சந்தித்த அழகிய அரபு வாலிபர் ஒருவர் மீது காதல் வயப்பட்டாள்.  அவர் சிரியா நாட்டைச் சேர்ந்தவர்.  காதல் கனிந்து, விரைவில் திருமணமும் முடிந்தது.

அடுத்துக் கணவருடன் சிரியாவுக்குப் பயணமானார் இப்பெண்.  கணவர் அரபு முஸ்லிம். ஆனால், அவ்வளவாக இஸ்லாமிய வழிபாடுகளில் ஈடுபாடற்றவர்!  ஏட்டளவில், மனைவியைக் கிருஸ்தவப் பெண்ணாகவே வைத்திருக்க விரும்பினார்.  ஆனால், இறை நாட்டமோ வேறாக இருந்தது!

சிறுமியாக இருந்தபோது தாயிடமிருந்து பெற்ற கடவுள் நம்பிக்கையும், தந்தையிடமிருந்து பெற்ற உண்மையைக் கண்டறியும் (Reasoning) தன்மையும் ஒன்றாகி, அரபு நாட்டுப் புதிய வாழ்க்கையின்போது கிடைத்த நெடிய ஓய்வு நேரங்களில் அரபி மொழியின்மீது காதல் கொள்ளத் தொடங்கினார்.  மாமியார் வீட்டாரிடம் தன் ஆர்வத்தை வெளியிட்டபோது, அவர்களும் அமெரிக்க மருமகளுக்கு அரபியைக் கற்பிப்பதில் தீவிரமாயினர்.  மிகச் சில மாதங்களிலேயே அரபி மொழியைப் பழுதறக் கற்றார் இப்பெண்.

அடுத்து, முஸ்லிம்களின் வேதமாகிய குர்ஆனை அரபியிலேயே படித்து, அதன் பொருளை விளங்குவது இவருக்கு இலகுவாயிற்று.  முதலில் சிறு சிறு சூராக்களை ஓதத் தொடங்கினார்.  ‘அத்தக்வீர்’ என்ற அத்தியாயத்தை ஓதி அதன் முடிவை நெருங்கியபோது, அதன் 27 மற்றும் 28 ஆம் வசனங்கள் இவரின் கவனத்தை ஈர்த்தன!

“இது உலகமனைத்திற்கும் ஒரு நல்லுபதேசமேயன்றி வேறில்லை.  மேலும் நேரான வழியில் செல்ல விரும்புவோருக்கும் (நல்லுபதேசமாகும்).”         (81:27,28)

கண்ணுக்கெட்டிய தொலைவின் கடைக்கோடியில் சிறியதோர் ஒளி தென்பட்டது!  புதிய சூழலில் வந்த பிறகு கிடைத்த ஓய்வு நேரங்களை, இஸ்லாமிய நூல்களைப் படிப்பதில் ஆர்வம் கொண்டார் அமெரிக்கப் புதுப்பெண்.  போதுமான இஸ்லாமிய நூல்கள் ஆங்கிலத்தில் கிடைக்கவில்லை அப்போது.  ஆனால், ஆர்வம் கூடி வந்தபோது, ஆங்கில நூல்கள் தாமாகவே பல பக்கங்களிலிருந்தும் வந்து சேர்ந்தன.  தன் கணவரின் குடும்பத்தினர் தனக்கு ஏற்பட்ட அறிவுத் தாகத்தைத் தீர்த்து வைத்தது பற்றி இப்போதும் நன்றியுடன் நினைவுகூர்கின்றார் இப்பெண்.

இதற்கிடையில் இரண்டாண்டுகள் கழிந்தன.  அந்தக் கால இடைவெளியில், அவர் கற்ற அறிவோ ஏராளம்.  அப்போதுதான் அவருக்குத்  தெரிந்தது, ஆங்கில மொழியில் இஸ்லாமிய நூல்கள் ஏராளம் இருப்பது பற்றி.

சிரியாவுக்குக் கணவருடன் குடிபெயர்ந்து வந்த பிறகு, அங்கிருந்த அரபு மக்களின் அன்றாட வாழ்க்கை இவருக்குப் பழகிப்போய்விட்டதால், அவர்களின் வணக்க வழிபாடுகளில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டார்.  ஐவேளைத் தொழுகையைத் தொழுதார்; ரமளானில் நோன்பு நோற்றார்; ஜக்காத்துக் கொடுத்தார்.  ஆனால், தன்னை முஸ்லிமாகப் பிரகடனப் படுத்திக்கொள்ளவில்லை!  அப்படிச் செய்துவிட்டால், தன் மீது பெரும் பாரம் சுமந்துவிடுமோ என்று அஞ்சித் தயங்கினார்.  அதற்கு வேண்டிய தன்னடக்கமும் வரையறைக்குட்பட்ட வாழ்க்கையும் அமையுமா என ஐயங்கொண்டார்.

படிப்படியாக, ‘கிடைத்த அறிவைக் கொண்டு நம்மால் முடிந்ததைச் செய்வோம்’ என்ற உணர்வால் உந்தப்பெற்றபோது,

“இஸ்லாத்தையன்றி வேறொரு மார்க்கத்தை எவரேனும் விரும்பினால், அது அவரிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும், மறுமையில் அவர் இழப்படைந்தோருள் இருப்பார்.”                                        (3:85) 

என்ற இறைவசனம் அவருக்குக் கண்ணில் பட்டது. இப்போது தீர்க்கமான முடிவுக்கு வந்துவிட்டார்.  கணவரிடம் தான் முஸ்லிமாகத் தயாராயிருப்பதாகத் தெரிவித்தபோது, அவர் கூறினார்:  “பள்ளிவாசலின் இமாமிடம் சென்று, அவர் முன்னிலையில் ‘ஷஹாதா’ மொழியவேண்டும்.  அவர் சில கேள்விகளைக் கேட்பார்.  அதற்கெல்லாம் உன்னால் பதில் கூற முடியுமா?”

“ஏன் முடியாது?  என்னை யாரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தவில்லை; என் பெற்றோரும் இதற்குத் தடையாயிருக்கவில்லை; ஏற்கனவே நான் இஸ்லாமிய வணக்க வழிபாடுகளைச் செயல்படுத்தி வருகின்றேன்; இதற்கெல்லாம் மேலாக, அரபி மொழியை அழகாகப் பேசுவேன்; இறைமறை குர்ஆனை அதன் மூல மொழியிலேயே ஓதி விளங்குவேன்.  இதற்கு மேல் வேறு என்ன தகுதி வேண்டும் எனக்கு?” என்று பேசி முடித்த அருமைப் பெண் அம்னா, அதற்கு இரண்டே நாட்களின் பின்,  டமாஸ்கஸ் ஜுமுஆப் பள்ளியின் இமாமுக்கு முன் சென்று ‘ஷஹாதா’ மொழிந்து முஸ்லிமானார்!

இந்த உறுதிப்பாட்டைப் பெறுவதற்கு அம்னா கடந்து வந்த பாதை மிக நீண்டது.  பிறந்த மதத்தில் பிடிப்பற்றுப் போன பின்னர், உண்மையான மார்க்கத்தைத் தேடி அவர் பயணம் செந்தது ஒன்றிரண்டல்ல; பன்னிரண்டாண்டுகள்!  ‘நல்ல இறுதி முடிவு இறையச்சமுடையோர்க்கே’ (வல் ஆகிபத்து லில் முத்தகீன்) என்ற இறைவாக்கு இவர் வாழ்வில் முற்ற முற்ற உண்மையாயிற்றன்றோ!   

அருட்பேறாய்க் கிடைத்த அரபி மொழி அறிவையும் ‘முஸ்லிம்’ என்ற  பெரும் பேற்றையும் கொண்டு, இஸ்லாத்தைப் பற்றி ஆங்கிலத்திலும் அரபியிலும் சில நூல்கள் இயற்றியுள்ளார் அம்னா என்ற இந்த அற்புதப் பெண்மணி.  இவரது ஆங்கில நூலான ‘Transition from Doubt to Assurance’ (ஐயப்பாட்டிலிருந்து உறுதிப்பாட்டுக்குப் பயணம்)  என்ற நூல், அதனைப் படிப்போர்க்குத் தமது உயர்வையும் கண்ணியத்தையும் உணரச் செய்து, நேர் வழியில் செல்லத் தூண்டும் ஓர் அரிய எழுத்தோவியமாகும்.

இன்றும் இந்த அமெரிக்கப் பெண் அம்னா, ஜித்தா ‘தஅவா’ சென்டரில் தாய்மொழி ஆங்கிலத்திலும் தகைமொழி அரபியிலும் முன்மாதிரி ‘தாஇயா’(இஸ்லாமியப் பயிற்சியளிப்பவர்) ஆக இருந்து, இஸ்லாத்தை எடுத்துரைக்கும் அழகுக் காட்சி, அனைவரையும் வியப்பிலாழ்த்துகின்றது!

அதிரை அஹமது

பேறு பெற்ற பெண்மணிகள்..! - பைபிள் வாங்கப் போய், குர்ஆன் வாங்கி வந்தேன்! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | January 21, 2013 | , ,

நூல் பாகம் : இரண்டு
வெளியீடு : IFT - Chennai
தொடர் : 25
பைபிள் வாங்கப் போய், குர்ஆன் வாங்கி வந்தேன்!

ஒரு நாள் இரவு தன் நிலை கொள்ளாமல், அமைதியி‎ன்றித் தவித்தாள் ஜாக்குலி‎ன் ரூத்.  ‏இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அவள், சிறுமிப் பருவத்தில் தவறாமல் ஞாயிற்றுக் கிழமைகளில் சர்ச்சுக்குப் போய்க் கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தாள்.

“எப்பொழுதாவது, ஏதாவது தவறு நிகழ்ந்துவிட்டால், உடனே அருகிலிருந்த சர்ச்சுக்குப் போய், என் அப்பா இளமையில் படித்துத் தந்திருந்த ‘Lord’s Prayer’ எனும் சிறப்புப் பிரார்த்தனையைச் செய்து, ‘தேவனாகிய புனிதத் தந்தையே!  எனக்கு நேரிய பாதையைக் காட்டுவீராக!’ என்று அழுது மன்றாடுவதுண்டு.  அப்போதெல்லாம், பைபிளை முன் அட்டையிலிருந்து பின் அட்டைவரைப் படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதுண்டு” என்று நினைவுகூரும் ஜாக்குலின், அந்த இரவுப் பதற்றத்தின்போதும், அதே பிரார்த்தனையை மண்டியிட்டுச் செய்து முடித்தாள்.

அது அவளுடைய அறியாப் பருவமன்று.  அப்போது அவள் இரண்டு குழந்தைகளின் தாய்!  தான் தனது மதப் பற்றை இழந்து, மனம் போன போக்கிலே நெடுந்தொலைவுக்குச் சென்றுவிட்டதாக உணர்ந்தாள்.  தனது பாவங்கள் மன்னிக்கப்பட்டுத் தான் பிறருக்கு நன்மை செய்பவளாக மாறவேண்டும் என்று கெஞ்சிக் கதறினாள்.

மறு நாள் விடிந்தபோது அவளுக்கு நிலை கொள்ளவில்லை!  புத்தகக் கடையை நோக்கிப் புறப்பட்டுச் சென்றாள், புதிய பைபிள் பிரதியொன்றை வாங்குவதற்கு.

கடைக்குள் நுழைந்தவள், நேராக ‘Holy Books’ பகுதிக்குள் சென்று பைபிளின் பிரதியொன்றைக் கையிலெடுத்தாள்.  அடுத்து அவளுடைய பார்வை, அருகிலிருந்த இன்னொரு புத்தகத்தின் மீது விழுந்தது.  “The Holy Quran” என்று அதனை வாசித்தபோது, அவளுடைய உடல் சிலிர்த்தது!

‘எடுத்துத்தான் பார்ப்போமே’ என்று எண்ணியவளாகக் கையிலெடுத்துப் பக்கங்களைப் புரட்டினாள்.  அவளுடைய பார்வையில், Jesus, Abraham, Moses, Noah, Joseph என்ற பெயர்களெல்லாம் பட்டன!  ‘இந்தப் பெயர்கள்தாமே பைபிளிலும் உள்ளன!’  வியந்து நின்றவள், இன்னும் சில பக்கங்களைப் புரட்டினாள்.

ஒரு வசனம் அவள் கண்களில் பட்டது!  அது -
      
“இந்தத் தூதர் (முஹம்மது) தன் இறைவனிடமிருந்து தனக்கு அருளப்பட்டதை நம்புகின்றார்.  அவ்வாறே (அவரைப் பின்பற்றிய) நம்பிக்கையாளர்களும்.  அவர்கள் அனைவரும், அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும், புனித வேதங்களையும் இறைத் தூதர்களையும் நம்பிய நிலையில், ‘நாங்கள் அவர்களுள் எவரையும் வேறுபடுத்த மாட்டோம்; எனவே, எங்கள் இரட்சகனே!  (உன் வாக்கைச்) செவியுற்றோம்; உனக்குக் கட்டுப்பட்டோம்.  நாங்கள் உன்னிடமே மீண்டும் வரவேண்டியவர்களாயிருப்பதால், நாங்கள் உனது மன்னிப்பைக் கோருகின்றோம்’ என்று கூறுகின்றனர்.” ( 2:285 ) 

 ஜாக்குலினின் கண்கள் வியப்பால் விரிந்தன!  ‘இதுவன்றோ உண்மை வேதம்!  இதன் போதனையன்றோ நேர்வழி!’ என்று வியந்தவளாக, முன்பு கையிலெடுத்த பைபிளைக் கீழே வைத்துவிட்டு, குர்ஆனை மட்டும் எடுத்துக்கொண்டு, கேஷியரிடம் காசைக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

சென்ற இரவு தான் மானசீகமாகக் கெஞ்சிக் கேட்ட நேர்வழி, தற்போது தன் கையிலிருப்பதாக உணர்ந்தாள் ஜாக்குலின்.  ஆர்வம் பொங்கப் பொங்க, அருள்மறை அல்குர்ஆன் அறிவுச் செல்வத்தை அள்ளியள்ளிக் கொடுத்ததை உணர்ந்தாள்.

“திண்ணமாக இந்தக் குர்ஆன் மிக நேரான வழியை (மனிதர்களுக்கு) அறிவிக்கின்றது.  இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்வோருக்கு மாபெரும் கூலியுண்டு என்று நல்வாழ்த்தும் கூறுகின்றது.”   ( 17:9 )

இத்தகைய நேர்வழி நிறைவானதா?  நிலையானதா?  இதற்குப் பிறகும் இனியொரு மார்க்கம் உண்டா? என்றெல்லாம் சிந்தித்த ஜாக்குலினுக்கு, இன்னொரு வசனம் சரியான விடையை அளித்தது!

“இன்று நான் உங்களுக்கு உங்களுக்குரிய மார்க்கத்தை நிறைவாக்கி வைத்துவிட்டேன்.  ‘இஸ்லாம்’ எனும் நேர்வழியை மார்க்கமாக உங்களுக்காகத் தேர்ந்தெடுத்துப் பொருந்திக்கொண்டேன்.” ( 5:3 )

அல்குர்ஆனின் அருள்வாக்குகள் மனித இனம் முழுமைக்கும் பொதுவானவை; அதன் வழிகாட்டல்தான், தான் தேடிக்கொண்டிருந்த நேர்வழியாகும் என்பது, இப்போது ஜாக்குலினுக்கு நன்றாகப் புரிந்தது. 

இந்த ஞானோதயம் பிறந்தபோது, ஜாக்குலின் லண்டன் நகரத்துக் காவல் துறையில் சிறப்புக் காவலராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்.  அதற்கு முன் பொதுப்பணித் துறையிலும், தொலைபேசி இணைப்பாளராகவும் பணி புரிந்துள்ளார்.  

கிருஸ்தவர்கள் நம்பியிருந்த அதே இறைத் தூதர்கள் மீது முஸ்லிம்களும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்றறிந்தபோது, ஜாக்குலின் வியந்து நின்றார்!

குர்ஆனைப் புரட்டிப் புரட்டிப் படித்து ஆராய்ந்தபோது, ‘இஸ்லாம்’ மார்க்கம் மனித குலம் முழுமைக்கும் பொதுவானது என்பதை உணர்ந்தார். மறு நிமிடமே அவரது கால்கள் லண்டனின் ‘ரீஜென்ட் பார்க்’ பள்ளிவாசலை நோக்கி நடந்தன.  ஆங்கு நூற்றுக் கணக்கானோர் முன்னிலையில் ‘ஷஹாதா’ மொழிந்து முஸ்லிமாகி, ‘ஆயிஷா’ எனும் அருமைப் பெயரைப் பெற்றார்!

தற்போது ‘ஹஸன்’ என்பவரைத் தன் இல்லறத் துணைவராகப் பெற்ற ‘ஆயிஷா ஹஸன்’,  தனது முழு நேரப் பணியாக இஸ்லாமிய ‘தஅவா’வைத் தேர்ந்தெடுத்து, இஸ்லாத்தை இங்கிலாந்து மக்களுக்குப் போதிக்கும் ‘தாஇயா’வாக லண்டன் ‘ரீஜென்ட் பார்க்’ மஸ்ஜிதில் பணியாற்றி வருகின்றார்!

மூன்று குழந்தைகளின் தாயாக முழுமை பெற்றுள்ள ஆயிஷா, தனக்கு இளமைப் போதில் ஏற்பட்ட மத வெறுப்பை இப்போதும் நினைவுகூர்கின்றார்:

“சிறுமிப் பருவத்தின்போது சர்ச்சுகளில் நான் கண்ட புனிதத்துவத்தை எனது வாலிபத்தில் காண முடியவில்லை!  உடல் முழுதும் மறைத்துத் தலையையும் மறைத்துப் புனித உடையுடுத்திய ‘கன்னியாஸ்த்ரீகள்’ என்ற மத போதகப் பெண்கள்  திரை மறைவில் நடத்திய கள்ளக் காதல் நாடகங்கள், ஓரினச் சேர்க்கை முதலான ‘செக்ஸ்’ கதைகள் என் கண்களையும் காதுகளையும் தாக்கின!  மதத்தின் பெயரில் இப்படி ஒரு மாறுபாடா?  என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை!”

நாளடைவில், தனது திருச்சபைத் தொடர்பின் மூலம் தானும் அது போன்ற தீமைகளில் வீழ நேரிடலாம் என்ற நிலை வந்தபோதுதான், இஸ்லாம் அவருக்கு நேர்வழியாகிக் கை கொடுத்தது என நன்றியுடன் நினைவுகூர்கின்றார் ஆயிஷா ஹஸன்.

மாமறை குர்ஆன் மறக்க முடியாத முத்திரையைத் தன் மீது பதித்துவிட்டதாகப் பெருமையுடன் கூறுகின்றார், இப்பேறு பெற்ற பெண்மணி.   

தனது ஆழ்ந்த ஆய்வின் மூலம் கண்டுபிடித்த உண்மையை ஒளிவுமறைவின்றி, நம் கருத்துக்கு விருந்தாக்குகின்றார் ஆயிஷா ஹஸன் ஜாக்குலின் ரூத்:

“இயேசு மகான் இறந்து போய் அறுபத்து மூன்று ஆண்டுகள் சென்ற பின்னரே ‘பைபிள்’ எழுதப்பட்டது!  அதே பைபிள் பலரால், பல முறைகள் திருத்தி எழுதப்பட்டது!  இப்போது அது அதன் அசல் தன்மையை இழந்துவிட்டது!  இதனை நாம் அனைவரும் அறியவேண்டும் என்று வல்ல இறைவன் அல்லாஹ் விரும்புகின்றான்.  இந்த உண்மையைத் தனது அருள் மறையாம் அல்குர்ஆனில் பல இடங்களில் விவரிக்கின்றான்.”

யூதர்களும் கிருஸ்தவர்களும் இறைவனால் தமக்கு அனுப்பப் பெற்ற தூதர்களை முழுமையாக மதித்து வாழாமல், அவர்களிடம் கேள்விக்கு மேல் கேள்விகள் கேட்டுத் தமது மார்க்கத்திலும் பொது வாழ்விலும் தீமையை விலைக்கு வாங்கிக்கொண்டார்கள்.  அதனால், இறைவனின் மன்னிப்பையும் கருணையையும் இழந்தார்கள்!  எனவே, இறை வேதத்தையும் இறைத் தூதரையும் பிசகாமல் பின்பற்றுவது எத்துணை இன்றியமையாதது என்பதை விளக்க, சகோதரி ஆயிஷா ஹஸன் இறுதியாக நபிமொழி ஒன்றை நமக்கு மேற்கோள் காட்டுகின்றார்:

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:  “உங்களுக்கு நான் தடுத்ததைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்!  நான் செய்யும்படிக் கட்டளையிட்டவற்றில், உங்களால் முடிந்த அளவு செய்யுங்கள்!   உங்களுக்கு முன்னிருந்த சமுதாயத்தினர் அழிவைச் சந்தித்ததற்கான காரணம், அவர்கள் தம்முடைய தூதரிடம் அளவுக்கு மேற்பட்ட கேள்விகளைக் கேட்டதுவும், அவர்களின் கட்டளைகளுக்குக் கட்டுப்படாததும்தான்!” (ஆதாரம்: ‘நவவீயின் நாற்பது நபிமொழிகள்’ ).

அதிரை அஹமது

பேறு பெற்ற பெண்மணிகள் - தொடர்கிறது...13 5

அதிரைநிருபர் பதிப்பகம் | September 11, 2012 | , , ,

அவளைச் சுற்றி...!

அப்பெண்ணுக்கு நிகழ்ந்தது என்ன?  உலக இயல்பில் நிகழும் அன்றாட நிகழ்வுகளுள் ஒன்றுதான் அவளுக்கும் நிகழ்ந்தது.  இறையன்பு கொண்டோரைச் சோதிக்கும் நிகழ்வுகளுள் ஒன்று!

“ஒவ்வோர் ஆன்மாவும் மரணத்தைச் சுகித்தே தீரும்.  நன்மை-தீமை செய்யும் நிலையில் வைத்து உங்களை நாம் சோதிக்கிறோம்.  பின்னர் நீங்கள் நம்மிடமே மீளவேண்டியவர்களாவீர்கள்.” -அல்குர்ஆன் (அன்பியா) 21:35

இல்லற வாழ்வின் முதற்படியில் ஏறி நின்ற அவ்விளம் பெண்ணுக்கு இந்தச் சோதனைதான்!  அதனை நுகர்ந்தபோது, அவளுடைய உள்ளத்து உணர்ச்சிகள், எண்ண ஓட்டங்கள், சிந்தனைச் சிதறல்கள் எவ்வாறு இருந்தன?  அவற்றின் இறுதி இலக்கு யாது?  இவற்றை அப்பெண் வாயிலாகவே கேட்போமே:

வழக்கமாக தேவாலயம் செல்லும் (Church-going) கத்தோலிக்கக் குடும்பத்தில் வளர்ந்தவள் நான்.  அங்குச் சென்றபோதெல்லாம், என் மனம் எங்கோ அலைந்து திரிந்தது.  கல்வி கற்கப் பள்ளி சென்ற நாட்களிலும் இதே நிலைதான்.  சிலைகளுக்கு முன்னால் மண்டியிட்டேன்.  ஓங்கியொலித்த உபதேசங்களைக் கேட்டேன்.  பயன்?

கத்தோலிக்கத்தின் அடுத்த வீடாகிய புராட்டஸ்டாண்டுக்குள் நுழைந்து பார்த்தேன்.  அங்கும் நான் தேடியது கிடைக்கவில்லை.  ஓர் ஆன்மிகச் சூனியம்!  பாழ்பட்ட பாலை வெளி!  கடவுளைத் தேடினேன்; காண முடியவில்லை!  கடவுளை நோக்கிய தெளிவான பாட்டை எங்குமில்லை!  சில நாட்கள் தேவாலயத்தை விட்டு ஒதுங்கியும் இருந்ததுண்டு.  மன நிம்மதியில்லை.  துள்ளித் திரிந்த பள்ளிப் பருவத்திலிருந்து, பக்குவப்பட்ட பகலின் தொடக்கத்திற்கு வந்தேன். அப்போது, கடவுளைத் தேடுவதில் பயனில்லை என்ற முடிவுக்கு வந்தேன்!  காரணம், கடவுளின் வழியைக் காட்டுவோர் எவரையும் காண முடியவில்லை.

இந்த நிலையில்தான், என் மனம் கவர்ந்த ஒருவரைக் கணவராகக் கரம் பிடித்தேன்.  இல்வாழ்க்கை இனித்தது.  விளைவு?  சில மாதங்களில் கர்ப்பவதியானேன்.  தாய்மை என்ற உயர் பதவியை நினைத்தபோது, என் உள்ளமும் உடலும் சிலிர்த்தன.  அந்த இன்ப நினைவுடன் பின்னர் நான் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டேன்.  சில நேரங்களில் தனிமை கிடைத்தது.  அந்நிலையில், மீண்டும் முகிழ்த்தது, மதம் பற்றிய சிந்தனை.  கடவுளின் வழி எது?  எனக்கும் கடவுளுக்கும் இடையில் இன்னொருவர் ஏன்?  நான் யாரை வணங்குகிறேன்?  ‘அந்த மூவருள்’ கடவுள் யார்?  கடவுளின் சார்பில் இருந்து, மனிதர் ஒருவர் என் பாவங்களை எப்படி மன்னிப்பார்?  என் சிந்தனை இப்போது என் வயிற்றில் இருந்த குழந்தையின் பக்கம் சென்றது. ‘பிறக்கும் குழந்தைகள் எல்லாம் பாவத்தைச் சுமந்த நிலையில்தான் பிறக்கின்றன’ என்று கூறுகின்றது கிருஸ்தவம்!  எனக்குப் பிறக்கப் போகும் குழந்தையும் பாவத்தோடுதான் பிறக்கப் போகிறதா? முடியாது!

கலப்பற்ற காதலுக்கும், தூய்மையான உறவுக்கும் பிறகு பிறக்கப்போகும் என் அன்புக் குழந்தை, திருச்சபைக்கு வந்து, புனித நீராட்டம் நடத்தப்படவில்லை என்றால், அது இறக்கும்போது, அதற்குக் கிருஸ்தவ மயானத்தில் இடமில்லையாம்!  வேடிக்கை!  வேதனை!

1982 ஜனவரி 22.  நானும் என் கணவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அன்புக் குழந்தை அலெக்சான்ட்ரா பிறந்தாள்!  எங்களின் மகிழ்வுக்கு எல்லையில்லை.  அவள் பிறப்பதற்கு முன் இருந்த (மதம் பற்றிய) என் சிந்தனையை மறந்தேன்.  அன்பு!  பாசம்1  இன்பம்!  இரக்கம்!  எதிர்காலத்தைப் பற்றி ஏகப்பட்ட கனவுகள்!

என் செல்ல மகள் பிறந்து ஐந்து நாட்கள்.  ஐந்து நாட்கள் ஐந்தே நிமிடங்களாகக் கழிந்தன.  அப்போதுதான் அந்தச் செய்தியைக் கொண்டுவந்தார் அந்த மருத்துவ மனையில் பணியாற்றிய முஸ்லிம் டாக்டர் ஒருவர்.  அது செய்தியில்லை.  பேரிடி!  வழக்கமான பரிசோதனைக்கு (Routine check-up) எடுத்துச் செல்லப்பட்ட என் இதயக் கனி இறந்துவிட்டாளாம்!  நம்ப முடியவில்லை!  இல்லை!  இல்லை!  இல்லை!

டாக்டர் சொன்னார்:  “சகோதரியே!  வள்ளமையுள்ள இறைவன் அல்லாஹ் ஏற்படுத்தி வைத்த விதி இது.  பொறுமை செய்!  அல்லாஹ் அருள் புரிவான்!”

பிறந்து ஐந்தே நாட்களில் என் கண்மணி அலெக்சான்ட்ரா இறந்துவிட்டாள்!  நானும் என் கணவரும் மீளாத் துயரில் ஆழ்ந்தோம்.  அவளின்றி, வெற்றுக் கைகளுடன் மருத்துவ மனையைவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டபோது....... அம்மம்மா!  நான் பட்ட வேதனை!  அது சொல்லுந்தரத்தன்று!  இந்த இழப்பை எப்படி நான் ஏற்றுக்கொள்வேன்?  என் உலகு இருண்டுபோய்விட்டது!

அவளுடைய இறப்பு, முன்கூட்டியே இறைத் தீர்மாணம் (pre-destined)  ஆனது என்றல்லவா அந்த டாக்டர் சொன்னார்?  எங்களுக்கு ஏற்பட்ட இழப்பினால், இடிந்துபோன என்னையும் என் கணவரையும் இந்த ஒரு சொல்லால் ஆறுதல் படுத்த முடியுமா?  ஆனால், என் மனப் போராட்டத்தின் பின் ஏற்பட்ட சிந்தனையின் இறுதியில், அதுவே உண்மை என்பது உறுதியாயிற்று!

இறைத் தீர்மாண உண்மை என்ற கசப்பான மாத்திரையைத் துன்பத்துடன் விழுங்கினேன்!  ‘ஒருவேளை, அதுதான் நிகழவேண்டும் என்பது இறை விருப்பமோ?’  அன்புக் கனியான அலெக்சான்ட்ரா, அழகுச் சிலையான அலெக்சான்ட்ரா, பாவமற்ற நிலையில் தூய்மையாகப் பிறந்தாள்.  எப்பாவமும் அறியாத எங்கள் இதயக் கனியைக் கிருஸ்தவக் கொள்கைப்படி, பாவத்துடன் பிறந்தவளாக எப்படிக் கூற முடியும்?  ‘இல்லை!’ என்ற குரல் என் இதயத்தில் ஓங்கி ஒலித்தது! 

அவள் பிறந்து உயிர் வாழ்ந்த அந்த ஐந்து நாட்களில் என்னால் அவளை நன்கு பார்க்கக்கூட முடியவில்லை!  அந்த அளவுக்கு நான் பிள்ளைப்பேற்றினால் பலவீனப்பட்டிருந்தேன்!  இப்போது நினைத்தால்கூட, அது என் இதயத்தைக் கிள்ளுகின்றது!

தாய் தந்தையின் அன்பை மட்டுமே பெற்று ஐந்தே நாட்கள் வாழ்ந்த அந்தப் பச்சிளங்குழந்தை ‘இயற்கைப் பாவம்’ ( Original Sin ) உடையதாக என் பழைய மதம் கூறிற்று.  அது எப்படி இருக்க முடியும்?  இல்லை!  இல்லை!  இல்லவேயில்லை!  ஒரு நூறு தடவை அல்ல, ஓராயிரம் தடவை கூறுவேன், ‘இல்லை’ என்று!

பிறப்பு, இறப்பு, இழப்பு, ஏக்கம், தாக்கம் எல்லாம் சேர்ந்து என்னை வாட்டின!  என் நிலையை என்னால் உணர முடியவில்லை!  முயன்றேண்; முடியவில்லை!  அந்த நாட்கள்!  அம்மம்மா! எத்துணை வேதனை மிக்க, கடினமான நாட்கள்!  வெறுமை!  திக்கற்ற நிலை!  பயங்கர நினைவுகள்!  இவற்றையெல்லாம் களைய நான் பட்ட பாடு!  வெற்றி பெற்றேனா?  தோல்வியைத் தழுவினேனா?  எனக்குத் தெரியாது!

அவளை நினைக்குந்தோறெல்லாம், என் மார்பகங்களிலிருந்து சுரந்து பீரிட்டு வந்த தாய்ப் பாலின் குளுமை, எனது வெந்துபோன உணர்வுத் தணலில் கலந்து, சூடாக வடிந்தது! அவள் மறைந்த ஏக்கத்தில் என் கணவரும் நடைப் பிணமானார்!  நானும் வெறுமையில்!  இந்த இழப்பை நான் எப்படித் தாங்கினேன்?  எனக்கே தெரியாது!  நான் ஏன் உயிரோடிருந்தேன் என்றும் எனக்குத் தெரியாது!  

என் கண்மணி மகளைக் கையில் ஏந்தி, அதரங்களால் முத்தமிட்டு, மார்பைத் திறந்து மாந்தக் கொடுக்கப் பாலுண்டு!  ஆனால், அவள் இல்லையே உருவத்தில்!  இல்லையில்லை!  இருக்கின்றாள் என் இதயத்தில்!  அவள் வேறெங்கும் போய்விடவில்லை!  அவள் என்னோடே இருக்கின்றாள்! என் மடியில்!  என்னைச் சூழவுள்ள இயற்கை எழிலினூடே ஓடித் திரிகின்றாள்!  அவளைப் போன்ற மழலைச் செல்வங்களின் மகிழ்ச்சியான முகமலர்களில்!  நான் சுவாசிக்கும் மூச்சில்!  சிந்தையை வருடும் சிறுமழைத் துளியில்!  என் கணவரின் கண்களிலும்!

விதி!  ஆம்; விதி!  நான் என் இயல்பான உணர்வின் பக்கம் மீண்டு வர முயன்றேன், சிறிது சிறிதாக, அலெக்சான்ட்ராவின் நினைவுடன், அமைதியாக, அவளுடன் இரண்டறக் கலந்து, அவள் காட்டிய வழியில்! அவளைப் பிரிந்ததுதான் விதியா?  இறைவன் விதித்ததா?  அவனது திட்டமா?  அந்த இறைவனோடு முதல் முறையாக நெருக்கமானதை அப்போதுதான் உணர்ந்தேன்!

ஒரு நாள், படுக்கையில் சாய்ந்து, உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலையில் அயர்ந்து படுத்திருந்தேன்.  என் முன்னால் வெளிச்சமொன்று பரவிற்று!  அது கனவா?  வினோதமான, வெண்மையான பகுதியொன்றில் என்னைக் கண்டேன்.  என்னைச் சுற்றி அறிமுகமில்லாத மக்கள் கூட்டம்!  ஆண்களும் பெண்களும்!  எல்லாரும் வெண்மையான உடை அணிந்திருந்தனர்!  நானும்தான்!  என் சொந்தக்காரர்களுடன் எப்படி மகிழ்ந்தும் இணைந்தும் இருப்பேனோ, அப்படியே அவர்களுக்கிடையே நான்!  என் மீது அவர்கள் அன்பு பாராட்டினர்!  எல்லாரும் வட்ட வடிவமாக, நடுவில் ஏதோ ஒன்றின் மீது எங்கள் பார்வைகளைச் செலுத்தி நின்றோம்!

காட்சி மறைந்தது; கண் விழித்தேன்.  கண்ட காட்சியைத் திரும்பத் திரும்ப என் மனக் கண்முன் கொண்டுவந்து, எல்லையில்லா இன்பத்துடன் அசைபோட்டு, அசையாமல் படுத்துக் கிடந்தேன்.  இக்கனவு எனக்கு ஏன் தோன்றவேண்டும்?  அதுதான், மருத்துவ மனையில் அந்த முஸ்லிம் டாக்டர் சொன்ன ‘விதி’ என்பதோ?

நான் கண்ட கனவை என் கணவரிடம் கூறியபோது, அவரும் மகிழ்ந்தார்.  எங்கள் இருவரையும் ஏதோ ஓர் அற்புதமான வாழ்க்கையின் பக்கம் அக்கனவு இட்டுச் செல்லும் எதிர்பார்ப்பில் சில நாட்களைக் கடத்தினோம்.

ஒரு நாள், யாரோ முஸ்லிம்களின் வேதமான புனித குர்ஆனைத் தந்தார்கள். படிக்கத் தொடங்கினேன்.  படித்துக்கொண்டே இருந்தேன்.  தொடர்ந்து பல அத்தியாயங்களைப் படித்தேன்.  மிக விரைவில் நான் அதன் பக்கம் ஈர்க்கப்பட்டேன்.  எனது கேள்விகளுக்கு அது பதில் தந்துகொண்டிருந்தது.  எல்லாம் எனக்குப் பொருந்தி வந்தன.  இதுதான் ‘விதி’யின் விளைவா? 

அது 1982இன் கோடைக் காலம். வீட்டில் இருந்த  டெலிவிஷனைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.  சேனலை மாற்றியபோது, இடையில் அரபுச் சேனல் ஒன்று வந்தது.  அதில் முஸ்லிம்களின் புனிதத் தலமாகிய மக்காவும், அதிலிருக்கும் கஅபாவும் தோன்றின.  முஸ்லிம்கள் தமது ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றும் காட்சி அது.  அவர்களின் ஊடே நானும் கலந்திருப்பது போன்ற ஓர் உணர்ச்சி!  இறைவா! இது என்ன விந்தை?!  இறந்துபோன என் மகளைச் சுற்றி என் எண்ண ஓட்டங்கள் இருந்த நிலையில், இது என்ன தொடர்பு?  இதுதான் ‘விதி’யா?  எங்களை நேர்வழியிலாக்க நீ செய்து காட்டும் திட்டமா?  மறைந்த எங்கள் மகள் மூலம் நீ காட்டிய நேரிய பாட்டையா?

குர்ஆனைப் படித்துக்கொண்டிருந்த வேளையில், இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அருள் மொழியொன்றைப் படித்த நினைவு வந்தது.  “பிறக்கும் குழந்தைகளெல்லாம் (தூய்மையாக) இஸ்லாமிய இயற்கையில்தான் பிறக்கின்றன.”  ஆமாம்!  என் மகளும் தூயவள்தான்!  இந்த உண்மையை எனக்கு உணர்த்தத்தான் அவளைச் சுற்றி என் நினைவுகள் இத்தனை நாட்கள் வட்டமிட்டுக்கொண்டிருந்தனவோ?

இங்கிலாந்தின் மெர்சிசைடு(Merseyside) மாவட்டத்திலுள்ள வாலசி(Wallasey) என்ற ஊரின் பள்ளிவாயிலில் நானும் என் கணவரும் இஸ்லாத்தில் இணைந்தோம்!  நான் ‘சுமய்யா’ ஆனேன்; அவர் ‘ரஷீத்’ என்ற பெயர் பெற்றார்!  பின்னர், இஸ்லாமியச் சட்டத்தின்படி, எங்கள் திருமணத்தைப் புதுப்பித்துக் கொண்டோம்!  எங்களுக்குக் கிடைத்த பேற்றை எண்ணி மகிழ்ந்தோம்!

அதிரை அஹமது

பேறு பெற்ற பெண்மணிகள் - தொடர்கிறது... 12 5

அதிரைநிருபர் பதிப்பகம் | September 02, 2012 | , , , , , ,

கணினிக் கோளாறினால் கடைத்தேறினேன்!

“கம்ப்யூட்டரில் ஏற்பட்ட சிறு கோளாறு (Computer Glitch), என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது!  ஆம்; நான் வாழ்ந்த இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வந்தேன்!  இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறி என் இதயத் துடிப்பாயிற்று!  அது என் இரத்த நாளங்களினூடே புகுந்து, புத்துயிர் அளித்தது!  இப்போது என் வாழ்க்கை, இஸ்லாம் இல்லாமல் பயனற்றது என்ற நிலைக்கு வந்துவிட்டது!” என்று கூறி, நம்மை வியக்க வைக்கிறார் ‘சதர்ன் பேப்டிஸ்ட்’ ( Southern Baptist ) கிருஸ்தவப் பிரிவில் இருந்து, ‘ஆமினா’ எனும் அருள் மங்கையாக மாறிய அற்புதப் பெண்மணி.

இம்மாற்றம் நிகழ்ந்ததெப்படி?  இப்பெண்ணே கூறும் தன் வரலாற்றின் சாரம் இது:

நான் ஒரு பெண்ணுரிமை அடிப்படைவாதியாக இருந்தேன்.  அது பற்றிய செய்திகளையே தொகுத்து வானொலியில் ஒலிபரப்புச் செய்தவள்.  கல்வி கற்ற நாள் முதல், அசாத்தியமான திறமை பெற்றிருந்தேன்.  பள்ளிப் படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, கல்வி ஊக்கத் தொகை ( Scholarship ) வழங்கப் பெற்றிருந்தேன்.  கல்லூரிப் படிப்பின்போதே சொந்தமாக வியாபாரம் தொடங்கினேன்.  அதிலும் எனக்கு வெற்றிதான்.  அந்த நேரத்தில்தான் ஓர் அசம்பாவிதம் -இல்லையில்லை - ஓர் அற்புதம் நிகழ்ந்தது!

1975 ஆம் ஆண்டு அது.  அப்போதுதான் மனிதனின் அற்புதப் படைப்புகளுள் ஒன்றான ‘கம்ப்யூட்டர்’ அறிமுகமாயிருந்தது.  முதலாவதாகக் கல்லூரிகளில்தான் கணினிகள் பொருத்தப்பட்டிருந்தன.  அப்போது கல்லூரிப் பட்டப் படிப்புக்காகக் கணினியில் முன்பதிவு செய்யும் முறை வழக்கத்துக்கு வந்தது.  நான் தேர்ந்தெடுத்த ‘பொழுதுபோக்கு’ ( Recreation ) பற்றிய ஆய்வுக்காக என் பெயரை முன்பதிவு செய்துவிட்டு, எனது வியாபார நிறுவனம் இயங்கிய ஆக்லஹாமாசிட்டியை நோக்கி விரைந்தேன்.

திரும்பி வருவதற்குத் தாமதமாயிற்று.  இரண்டு வாரங்கள் தாமதமாக வகுப்பிற்குள் நுழைந்தேன்.  முற்றிலும் புதிய சூழல்!  என்ன நடந்தது?  நான் எதிர்பார்த்த பாடம் நடக்கவில்லை!  எனது பெயர்ப் பதிவு அலுவலகத்திற்குச் சென்றேன். என் பெயர், Recreation என்பதற்குப் பகரமாக, Theater Class ( அரங்குப்  படிப்பு ) என்பதில் பதிவாகியிருந்தது!  என்ன கொடுமையிது?  விளக்கம் கேட்டபோது, எனக்குக் கிடைத்த பதில், Computer Glitch ( கணினித் தவறு )!  அந்தப் பிரிவில், மாணவிகள் நடித்துக் காட்டவேண்டுமாம்!  ஆனால் நானோ, சங்கோஜி!  நடிப்பு பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை என்னால்.  என்ன செய்வது?  பதிவு செய்ததை மாற்றவும் முடியாது.  அதில் சேர்ந்து பயின்றால், தேர்வு பெறவும் முடியாது.  அவ்வாறு தேர்வு பெறாவிட்டால், எனக்குக் கிடைத்துவந்த கல்வி உதவித் தொகை நிறுத்தப்பட்டுவிடும்.

ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, வகுப்பாசிரியரிடம் சென்றேன்.  நடிப்புக்குப் பகரமாக, ஒப்பனைக் கலை ( Costume ) யைத் தரக் கோரி, அதற்கான அனுமதியையும் பெற்றேன்.  அந்த வகுப்பில் சென்று பார்த்தபோதுதான் உணர்ந்தேன், ‘எலிக் குகையை விட்டு புலிக் குகைக்கு வந்துவிட்டோமே’ என்று!  அங்கிருந்த வகுப்பு மேடையில் ஒட்டக ஓட்டி வேடமிட்ட அரபு நாட்டு மாணவர்கள்!  ‘பைபிலின் கடவுளாகிய இயேசுவை நம்பாத அசிங்கமான ( Dirty heathens! ) காட்டுமிராண்டிகள்!  இப்பிறவிகளுக்கு இடையில் நாம் நடமாடுவதா?  No way!  வகுப்பைப் புறக்கணித்தேன்.

என் கணவர் சொன்னார்:  “கடவுள் எதற்கும் ஒரு காரணத்தை வைத்துத்தான் இருப்பார்.  நீ முற்றிலுமாகப் பின்வாங்குவதற்கு முன் நன்றாகச் சிந்தித்துக்கொள்.  அது மட்டுமன்றி, உனக்கு வந்துகொண்டிருக்கும் கல்வி உதவித் தொகையும் நின்றுபோகும்.  நன்றாகச் சிந்தித்துப் பார்.”

அதன் பின்னர், தனிமையில் இருந்து இரண்டு நாட்களாகச் சிந்தித்தேன்.  முடிவு?  வகுப்பில் சேர்வது!  ‘இது அந்த அரபுகளைக் கிருஸ்தவர்களாக மாற்றுவதற்குக் கிடைத்த வாய்ப்பாகக் கூட இருக்கலாம்’ என்ற சிந்தனையுடன், எனக்கு முன்னால் குறிக்கோள் ஒன்றை அமைத்துக்கொண்டு, ( a mission to accomplish ) முனைப்புடன் செயலாற்றத் தொடங்கினேன்.

கம்ப்யூட்டர் கோளாறினால், கிருஸ்தவ மதம் பற்றிய ஆய்வில் தடுக்கி விழுந்தேன்.  ஆர்வம் கூடக் கூட, அறிவும் கூடி வந்தது.  அதனால், கிருஸ்தவ மதம் பற்றிய செய்திகளைப் பிறருக்கு எடுத்துக் கூறும் நிலைக்கு வந்தேன்.

வகுப்பில் இடையிடையே அந்த அரபு மாணவர்களுடன் கிருஸ்தவ மதம் பற்றிய செய்திகளை வலிந்து கூறிக்கொண்டிருந்தேன்.  “இயேசு கிருஸ்துவைப் பாதுகாப்பாளராக ஏற்காவிட்டால், நிரந்தர நரகம்தான்” என்று தொடங்கி, படிப்படியாக பைபிலின் செய்திகளை அவர்களுக்கு விளக்கத் தொடங்கினேன்.  ஆனால், அவர்கள் என் பேச்சைக் கேட்டார்களே தவிர, மனம் மாறியதாகத் தெரியவில்லை!

‘இவர்களை எப்படி மாற்றுவது?’  சிந்தித்த என் மனத்தில் ஒரு யோசனை உதித்தது.  ‘அவர்களின் வேதத்தைப் படித்து, அதிலிருந்தே மேற்கோள் காட்டலாமே!’  இது ஒரு புதுமையான ஐடியாவாகத் தோன்றியது.  அடுத்தடுத்த நாட்களில், அவர்களுள் ஒருவரிடமிருந்தே முஸ்லிம்களின் வேதமாகிய குர்ஆனைப் பெற்றேன்.  அத்துடன் இஸ்லாத்தைப் பற்றி விளக்கும் நூலொன்றும் எனக்குக் கிடைத்தது.  மகிழ்ச்சியுடன் அந்நூல்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கத் தொடங்கினேன்.  முதலில் குர்ஆனை முழுவதுமாகப் படித்து முடித்தேன்.  பின்னர், இஸ்லாத்தைப் பற்றி இன்னும் பதினைந்து நூல்களை வாங்கிப் படித்தேன்.  மீண்டும் குர்ஆனைக் கையில் எடுத்துப் படிக்கத் தொடங்கினேன்.  மீண்டும் மீண்டும் படித்தேன்.  என் வாதங்களுக்கு வலு சேர்க்கும் தகவல்களைக் குறிப்பெடுத்தேன்.  ஆனால், படிப்படியாக அந்த மிகையான ஈடுபாடு என்னை வேறொரு மாற்றமான கொள்கையின் பக்கம் இட்டுச் சென்றது!

இப்போது அந்த அரபு மாணவர்களைப் பற்றிய சிந்தனையே எழவில்லை.  என்னைப் பற்றியே சிந்திக்கத் தொடங்கினேன்.  பல மாதங்களாகத் தனிமையில் அந்த நூல்களைப் படிப்பதும், படித்ததைப் பற்றிச் சிந்திப்பதுமாக என் நேரங்கள் கழிந்தன.  இத்தனையும், என் கணவருக்குத் தெரியாமல்தான் நடந்தன.  இருப்பினும், என்னுடைய நடையுடை பாவனைகளில் தெரிந்த சிறு சிறு மாற்றங்களை என் கணவர் கவனிக்கத் தவறவில்லை.

முன்பு வெள்ளி, சனி நாட்களில் மதுபானக் கடை, பார்ட்டிகள் போன்றவற்றிற்கு ஒன்றாகக் கணவருடன் சென்றுவந்தேன்.  இப்போது அவற்றைத் தவிர்க்கத் தொடங்கினேன்.  வீட்டில்கூட மது குடிப்பதில்லை; பன்றிக் கறி உண்பதில்லை.  இவை எல்லாம், என்னை என் கணவரிடம் காட்டிக் கொடுத்துவிட்டன என்றே கூறவேண்டும்.  ஆனால், அவரோ, வேறு விதமாகச் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்!  எனக்கு வேறு யாருடனோ தொடர்பு இருப்பதாக எண்ணினார்!  ஏனெனில், அவரது கணிப்பின்படி, ஒரு ஆணுக்காகத்தான் பெண்ணொருத்தி மாறுவாள்.  இறுதியில், இருவரும் இணைந்திருப்பதில் பயனில்லை என்று முடிவு செய்து, என்னைத் தனியாகப் பிரிந்து போய்விடுமாறு கூறினார்!  அதன்படியே, நானும் மாறிச் சென்றுவிட்டேன்.

நான் இஸ்லாத்தைப் பற்றிப் படிக்கத் தொடங்கியபோது, எனது சொந்த வாழ்வில் மாற்றம் உண்டாகும் என்பதை நான் எதிர்பார்க்கவேயில்லை.  இஸ்லாம் என்னை மாற்றிவிடுமா?  நான் இஸ்லாத்தைக் கொண்டு அமைதியான வாழ்வையும் அகமகிழ்வையும் அடைந்துகொள்வேன் என்று ஒருவரும் எனக்கு உபதேசம் செய்யவில்லை.

குர்ஆனையும் மற்ற நூல்களையும் வாசிப்பதன் மூலம் என்னிடத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டது என்னவோ உண்மை.  ஆனால், நான் ஒரு கிருஸ்தவப் பெண்; என் மதத்தின் மேல் பற்றுடையவள் என்பதை எப்போதும் காட்டிக்கொள்வேன்.

அன்றொரு நாள் என் வீட்டுக் கதவை யாரோ தட்டினார்கள்.  திறந்து பார்த்துத் திடுக்கிட்டேன்!  வந்தவர்கள் நான்கு அரபுகள்!  அவர்களுள் தலைவர் போன்று தெரிந்தவர், தன் பெயர் அப்துல் அஜீஸ் ஆலு ஷைக் என்றும், மற்ற மூவரும் தன் நண்பர்கள் என்றும் அறிமுகம் செய்துகொண்டார்.  நான் இஸ்லாத்தைத் தழுவ ஆயத்தமாக இருப்பதாகத் தமக்குத் தகவல் கிடைத்ததாகவும், அதனால்தான் என் வீட்டுக்கு வந்ததாகவும் அவர் கூறினார்.  அவர்கள் வந்த நோக்கத்தை அறிந்தபோது நான் அதிர்ச்சியுற்றேன்!  “இல்லை; நான் ஒரு கிருஸ்தவப் பெண்.  எனினும், எனக்குச் சில ஐயங்கள் உள்ளன.  உங்களுக்கு நேரமிருந்தால், உங்களிடம் அவற்றைக் கேட்கலாமா?” எனக் கேட்டேன்.

எனது அழைப்பையும் அனுமதியையும் பெற்று, அவர்கள் என் வீட்டினுள் நுழைந்தனர்.  எனது பல மாத ஆய்வின் பின் எழுந்த ஐயப்பாடுகளை, ஒவ்வொன்றாகக் கேட்கத் தொடங்கினேன்.  அந்த இஸ்லாமிய அழைப்பாளர் குழுத் தலைவர் அப்துல் அஜீஸ் எனது கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் அழகாகவும்

அமைதியாகவும் பதில் கூறிக்கொண்டே வந்தார்.  அவருடைய பேச்சில் அழுத்தம் இருந்தது; ஆனால், ஆவேசமில்லை.  கேட்பவரை மட்டம் தட்டிப் பேசவில்லை; கேட்ட கேள்வி வேடிக்கையானது என்றோ, சிறுபிள்ளைத் தனமானது என்றோ அவர் வெட்டிப் பேசவில்லை!  நான் கேட்ட கேள்விகளுக்கு அமைதியாகவும் ஆணித்தரமாகவும், பொருத்தமான மேற்கோள்களுடனும் அவர் விளக்கிய விதம் என்னைக் கவர்ந்தது.

இஸ்லாம் கல்வியைத் தேடிக் கற்றுக்கொள்ளும்படி வலியுறுத்துகின்றது என்றும், கேள்விகள் கேட்டு விளக்கம் பெறுவது கல்வி கற்பதன் வழிகளுள் ஒன்றாகும் என்றும் அவர் விளக்கினார்.  ஏதேனும் ஒன்றை விளக்கும்போது, நிறுத்தி நிறுத்தி, அமைதியாக, அழகிய ரோஜா மலரின் இதழ்களை மெதுவாகப் பிரித்து, அதன் மணத்தை நுகர்வது போன்று இருந்தது அவர் பேசிய விதம்.

ஒருசில விளக்கங்களுக்கு என் கருத்து முரண்படுவதாக நான் கூறியபோது, அவர் உணர்ச்சி வயப்படாமல், நான் கூறியது ஓர் அளவு வரை சரியானதென்ற மறுமொழி கூறி, அதன் முழுமையான விளக்கத்தினைப் பெற எவ்வாறு வெவ்வேறு கோணங்களில் ஆழமாகச் சிந்திக்கவேண்டும் என்பதை அமைதியாக விளக்கினார்.

அந்த அமர்வின் பின், வெகு நாட்கள் செல்லவில்லை, உண்மையை உணர்வதற்கு!  ஒரு நாள் அதே குழுவினரைச் சந்தித்து, “லா இலாஹ இல்லல்லாஹ்; முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்ற இஸ்லாமிய தாரக மந்திரத்தை மொழிந்து, ‘ஆமினா’ என்னும் அழகிய பெயர்க்குச் சொந்தக்காரியானேன்!

அது 1977 மே மாதம் 21 ஆம் தேதி.  ஏறத் தாழ இன்றைக்கு முப்பதாண்டுகள் கடந்துவிட்டன.  எனது குடும்பத்தில் பெரும்பாலோரின் அதிருப்திக்கும் ஆச்சரியத்திற்கும் இடையில் நான் இஸ்லாத்தைத் தழுவினேன்.  எந்த அளவுக்கு அவர்களின் எதிர்வினை இருந்தது தெரியுமா?  அவர்களுள் ஒருவர் என்னைக் கொலை செய்துவிடவும் முயன்றார்!  அமைதியாகவும் உறுதியாகவும் இஸ்லாத்தைக் கடைப்பிடித்ததன் மூலம், இப்போது என் குடும்பத்தில் பெரும்பாலோர் முஸ்லிம்களாக இருக்கின்றனர்!

உண்மையான மத மாற்றத்தின் பின், குடும்பத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படலாம்; துரத்தப்படலாம்; பொருளாதாரத் தடை, சொத்தில் பங்கின்மை போன்ற விளைவுகள் நிகழலாம்!  அபூர்வமாக ஒரு சிலர் தமது குடும்பத்தினாலும் நண்பர்களாலும் மதிப்பு மரியாதையுடன் நடத்தப்படலாம்.  ஆனால், இஸ்லாத்தை ஏற்றவர்களுள் பெரும்பாலோர், கடுமையான சோதனைகளை-எதிர்விளைவுகளைக் குறைந்த பட்சம் ஒரு சில மாதங்களேனும் சந்திக்கத்தான் வேண்டியுள்ளது என்பதை உணர்ந்த ஆமினா அஸ்ஸில்மி, தனக்குக் கிடைத்த அருமையான வாழ்வில் அகமகிழ்ந்து நிலைத்துள்ளார்.

அதிரை அஹமது

கவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை – 27

தொடர் நிறைவுறுகிறது

17

அதிரைநிருபர் பதிப்பகம் | August 28, 2012 | , ,

இறையருட்கவிமணி அவர்கள் தமது கவிதைத் திறனால் ஏற்படுத்திய சிந்தனைப் புரட்சிகள் ஏராளம்.  மழலைச் செல்வங்களுக்கான குழந்தைப் பாடல்களானாலும் சரி, கவியரங்கப் பாக்களாயினும் சரி, அவற்றினூடே இழைந்தோடும் கருத்துக் கருவூலங்கள் அன்னார் செய்த சிந்தனைப் புரட்சிகளுக்கான சான்றுகளாகத் திகழ்கின்றன.

கல்வியாளர்களும் அறிஞர்களும் சமுதாயத்திற்காக ஆற்ற வேண்டிய பணிகளைப் பட்டியலிட விழந்த கவிமணியவர்கள், அறிஞர்கள் தாம் கற்ற கல்வியைச் சமுதாயத்திற்குப் பயன்படும் விதத்தில், ஆழிய அறிவுக் கருவூலங்களையும் இறையருள் இலக்கியங்களையும் தமிழ் மொழியில் வார்த்தெடுத்துக் கொடுக்க வேண்டிய தேவையைக் கீழ்க்காணும் கவியடிகளில் பாடுகின்றார்:

          “வான்போற்றும் கருத்துகளை வடித்தெடுத்துக் கொடுப்பதுதான்
           தீன்போற்றும் நமக்கெல்லாம் திகழ்கின்ற பணியாகும்
           அறிவுப் பசிஎடுத்தே அலமந்து நிற்போர்க்குச்
           செறிவு மிகைத்திருக்கும் சீர்மறையின் கருத்துகளைச்
           சேர்த்தெடுத்துக் கொடுத்திடுவோம்; செந்தமிழின் சுவைசேர்த்துப்
           பார்த்தெடுத்து வழங்கிடுவோம்; பாருலகில் ஓங்கிடுவோம்!”

இல்லாவிட்டால், ‘கற்றதனால் ஆய பயனென்?’ என்று கேட்பது போல் தோன்றுகின்றதல்லவா?

கற்றோர் செய்ய வேண்டிய அப்பணியை இன்னும் அழகாகப் பாடுவதைக் கேளுங்கள்:

                   “கண்ணைக் கவர்கின்ற கண்ணாடிக் கிண்ணத்தில்
                   வண்ணப் பழச்சாற்றை வார்த்துக் கொடுப்பதுபோல்
                   காதைப் பிடித்திழுக்கும் காந்தத் தமிழ்நடையில்
                   ஓதப் படைத்திடுவோம் ஓங்கும் நெறிக்கருத்தை!”

‘காதைப் பிடித்திழுக்கும் காந்தத் தமிழ் நடையில்’ எழுதுவது எல்லாராலும் சாலுமோ?  அறிவுப் பெருக்கமும் சிந்தனைச் சீர்மையும் உள்ளவர்களால்தான் இயலும்.  அத்தகைய முன்னேற்றத்தைத்தான் அறிஞர்களிடம் எதிர்பார்க்கின்றார் ‘இறையருட்கவிமணி’.

வையகத்தைக் கவிஞன் நோக்குவதற்கும் பிறர் நோக்குவதற்கும் பெருத்த வேறுபாடுண்டு.  நிறைகளைப் போற்றும் அதே வேளை, குறைகளைச் சாடும் உணர்ச்சி மிக்க மனப்பாங்கு கவிஞர்களிடம் காணப்படும் ஒன்றாகும்.

                             “பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப்
                                 பாலித் திடவேணும்” என்று பாரதி பாடினான் அல்லவா?

இதுதான் கவிஞன் காணும் வையகப் பரிவு.  அதே பாரதி, “தனியொருவனுக்கு உணவில்லையெனில், ஜகத்தினை அழித்திடுவோம்!” என்றும் சீற்றம் கொண்டு சீறிப் பாய்ந்தான்.  சமூகத்தில் குற்றம் காணின், கொதித்தெழுவான் கவிஞன்.  இது போன்று கொதித்தெழுகின்றார் நம் கவிஞர்:

                   “அறந்தேயும் தீச்செயலும் அடுத்தாரைக் கெடுப்பதுவும்
                   புறம்பேசும் தீக்குணமும் பொய்புரட்டும் வஞ்சனையும்
                   குணமொன்றும் நாடாமல் குழிபறிக்கும் குறுமனமும்
                   பணமொன்றே குறியாகும் பண்பில்லா உளப்பாங்கும்
                   உள்ளத்தில் பிறக்காமல் உதட்டளவில் உறைகின்ற
                   கள்ளத்தின் பொய்நகையும் கழுத்தறுக்கும் கொடுமைகளும்
                   மெய்யோட்டும் பையூட்டும் மேதினியைப் பாழாக்கும்
                   கையூட்டும் களியாட்டும் கள்ளூட்டும் பேயாட்டும் .....”

என்றெல்லாம் பாடிச் சாடிவிட்டு,

                   “மனிதகுல வரலாற்றின் மாண்பனைத்தும் போக்கிவிடும்
                   புனிதநபி நெறியினிலே புழுதியினைச் சேர்த்துவிடும்”

என்று பாடி எச்சரிக்கை செய்கின்றார்.   நேர்வழிக்கு ஒரே வழி,

                   “உளம்வாழும் நிலைகாண உயர்மறையின் நெறிசெல்வோம்!”

என்று முடிவுரை பாடுகின்றார் நம் முதுபெரும் கவிஞர். 

கல்வி கற்றல் என்ற பெயரில், மேலை நாட்டு மேதைகள், கீழை நாட்டுக் கெழுதகையோர் பற்றியெல்லாம் படிக்கின்றோம்.  ஆனால், எவருடைய வாழ்க்கை நமது முன்மாதிரியாக இருக்கவேண்டுமோ, அந்த அருள் தூதரின் வாழ்க்கையினைப் படிப்பதில்லை என்று இடித்துரைக்கும் முகமாக,

                   “அறிவுலகப் பேரொளியை அனைத்துலகப் பெருமகரை
                   முறையுடனே நாமறியோம்; முகவரியும் நாமறியோம்.
                   ஆப்பிள் திராட்சையுடன் ஆரஞ்சுப் பழமிருக்கத்
                   தோப்பில் மாங்காயைத் துழாவிக் கடிப்பதுபோல்,
                   குற்றாலத் தருவியிலே குளிக்காமல் பக்கத்துக்
                   கற்றாழைக் குட்டையினைக் கலக்கிப் புரளுதல்போல்
                   விண்கவரும் விரிநூல்கள் வீட்டின் அகத்திருக்கக்
                   கண்கவரும் நூல்படித்துக் கால்வழுக்கிக் கிடக்கின்றோம்!”

அருமை!  எத்துணை அழகிய உவமையுடன் கூடிய உணர்வூட்டல்?!

                   “வணக்கமிலாப் பள்ளிகளும் வாஞ்சையிலா மன்றுகளும்
                   இணக்கமிலா இல்லறமும் இறக்கமிலா நெஞ்சுகளும்
                   உறுதியிலா அறிஞர்களும் ஒழுக்கமிலா இளைஞர்களும்
                   நாணமிலா அரிவையரும் நலன்காணாத் தலைவர்களும்
                   நம்மிடையே பெருகிவிட்டார்; நாடகமே ஆடுகின்றார்!”

குற்றம் களையும் பணியில் கூடி நிற்குமாறு தம்மைப் போன்ற தரமான கவிஞர்களை அறைகூவல் விடுத்து அழைக்கின்றார் அருட்கவிஞர்:

                   “வணிகத்தில் கலப்படமும் வாழ்க்கையிலே பெறுகின்ற
                   அணிசிதைக்கும் சூதுமது ஆகாத கொலைகளவும்
                   வஞ்சனைகள் பொய்புரட்டு வன்முறைகள் தீச்செயல்கள்
                   மிஞ்சிவரும் உலகுக்கு மெய்விளக்காம் கவிதேவை.
                   பணமென்றால் வாய்பிளக்கும் பிணமாக மாறாதீர்!
                   செல்வர்க்கே அடிவருடும் சிறுமையிலே சிக்காதீர்!
                   அனல்கக்கும் கவிதைகளால் அநீதியினைச் சுட்டெரிப்பீர்!
                   புனல்வார்க்கும் கவிதைகளால் புனிதத்தை வளர்த்திடுவீர்!
                   அறவாழ்வு தழைப்பதற்காம் அரும்பணிகள் புரிந்திடுவீர்!”

இவ்வாறு, சீர்திருத்தக்காரர்களாகக் கவிஞர்கள் ஆகும்போது எவர்தான் கவிதைகளை வெறுப்பார்?

                   “கலைகளுக்கே அரசியெனக் கவினடையும் கவிதைகளில்
                   பலவகைகள் பகர்ந்திடுவார் பாருலகின் ஆய்வாளர்
                   உள்ளத்தில் கருவெடுத்தும் உணர்ச்சியிலே ஊற்றெடுத்தும்
                   தெள்ளமுதச் சொற்களிலே தெவிட்டாத உருவெடுத்தும்
                   பள்ளத்துள் பாய்கின்ற வெள்ளமென வெளியாகிக்
                   கள்ளமிலாக் காதுகளைக் கவ்விப் பிடித்திழுத்து
                   நெஞ்சத்தில் விளையாடி நாளெல்லாம் நம்முடனே
                   கொஞ்சுகின்ற குழவிகளே குடியுயர்த்தும் கவிதைகளாம்.

மாசற்ற மனித வாழ்க்கைக்காகக் கவிதைகளின் தேவையை – இஸ்லாம் வகுத்த இனிய நெறியில் இயங்கவேண்டிய கவிதைகளின் தேவையை – மேற்காணும் இறையருள் கவி மணிகளால் நாம் உணரலாம்.

كلام فحسنه حسن وقبيحه قبيح

(நற்கருத்துள்ளவை நல்ல கவிதைகளாகும்;  மோசமான கருத்துள்ளவை மோசமான கவிதைகளாகும்.)

என்று இஸ்லாம் கூறும் இலக்கணத்தில் இணைவோம்!  நம் மறுமை இலக்கினை அடைவோம்!.


(சான்றுகள் கணக்கின்றி உள.  விரிவஞ்சி, இத்துடன் நிறைவாக்குகின்றேன்.) 




முடிவுரை

இக்கவிதை இலக்கிய மரபு மேலும் தொடரவேண்டும்.  இந்த ஆய்வுத் தொடரில் நான் குறிப்பிட்டதற்கொப்ப, கவிதை என்பது மானிட இயல்புத் தன்மையுடன் பின்னிப் பிணைந்ததாகும்.  மனிதனை மனிதனாக வாழ வழி வகுப்பது;  வாழ்வின் உண்மை நிலைகளை உணர்த்துவது;  காலத்தால் கறை படாத கருத்துகளைத் தன்னகத்தே கொண்டது;  கற்பனை அழகை விரும்பும் மனித இயல்புக்குக் கருத்துணர்வைத் தர வல்லது;  உண்மையும் அழகுணர்ச்சியும் நிறைந்த சொல் வளத்தால் வாழ்வைச் சொல்லோவியமாகத் தீட்டிக் காட்ட வல்லது;  மனித வாழ்வின் ஆன்மிக இயல்பை உணர்த்த வல்லது;  அதனை ஆர்வத்துடன் படிக்கும் / பாடும் மனிதனுக்குப் புதிய வாழ்வையும் புத்துணர்வையும் கொடுப்பது.

இந்த ஆய்வின் தொடக்கத்தில் மேற்கோள் காட்டிய இறைமறை குர்ஆன் வசனத்தில், இஸ்லாமிய அழைப்புப் பணி செய்ய ‘ஹிக்மத்’ (நுண்ணறிவு) எனும் சொல் இடம்பெற்றிருப்பதாலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவிதையைப் புகழ்ந்துரைத்தபோது ‘ஹிக்மத்’ எனும் அதே சொல்லைப் பயன்படுத்தியிருப்பதாலும், “கவிதை என்பது பொய்யால் நிறைந்தது; கவிஞன் பொய்யுரைப்பவன்” என்றெல்லாம் கருத்துக் கொள்ளாமல், கவிதைகள் மூலமும் உண்மைகளை உணர்த்தலாம்;  மனித நேயத்தை மலரச் செய்யலாம்;  மார்க்கத்தை எடுத்துரைக்கலாம் என்றே நம்பவேண்டும்.

இஸ்லாம் என்பது குர்ஆனும் நபிவழியும், அப்பழுக்கில்லாமல் இவ்விரண்டின் அடியொட்டி வாழ்ந்த முன்னோரின் வாழ்க்கை முன்மாதிரிகளும் மட்டுமே.  இந்த அளவுகோள் (yardstick) கொண்டுதான் எதையும் – அது இலக்கியமாகட்டும், இசையாகட்டும், எதுவுமாகட்டும் – வரையறை செய்யவேண்டும்.  இந்த இலக்கணத்தில் அனைத்தும் அடங்கிவிட்டன.

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கு என்பதுவே எமது அழைப்பியல் நெறியின் துவக்கமும் முடிவுமாகும்!

இத்தனை நாட்கள் என்னுடன் பொறுமை காத்த அனைவருக்கும் நன்றி.
     
அதிரை அஹமது
adiraiahmed@gmail.com

பேறு பெற்ற பெண்மணிகள் - தொடர்கிறது... 11 10

அதிரைநிருபர் பதிப்பகம் | August 24, 2012 | , , ,


நான் முஸ்லிமாகிவிட்டேன்!
      
“எனக்கு இஸ்லாம் அறிமுகமானது இங்கிலாந்தில்!  ஆனால், அதனை நான் அனுபவப் பூர்வமாகக் கண்டது எகிப்தில்!  எப்படி என்கிறீர்களா?  கேளுங்கள்:

“நான் மருத்துவக் கல்லூரியில் படித்துத் தேர்வு பெற்று, மருத்துவத் தொழிலையும் தொடங்கியிருந்த நேரம் அது.  இஸ்லாத்தைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் எனக்குக் கிடைத்திருந்தது” என்று கூறும் ஆன் ராக்•பெல்லர் ( Ann Rockefeller ) என்ற ஆங்கிலேயப் பெண்ணின் புரட்சிகரமான சில மாற்றங்களைப் பற்றிப் படிக்கும்போது நமக்கு வியப்பு மேலிடுகின்றது.

அவருடன் மருத்துவக் கல்லூரியில் பயின்ற எகிப்தியர் ஒருவரைக் காதல் திருமணம் செய்துகொண்டார்.  எகிப்தியக் கணவர் முஸ்லிம்தான், பெயரளவில்!  அவருக்கும் இஸ்லாத்திற்கும் ஆயிரக் கணக்கான மைல்கள் தொலைவு!  திருமணத்திற்குப் பின்னர் கணவனும் மனைவியும் எகிப்துக்குக் குடிபெயர்ந்தனர்.  

அங்குதான் ‘அந்த’ அற்புதம் நிகழ்ந்தது!

“என் கணவர் முஸ்லிமாக இருந்தும், இஸ்லாத்தைப் பற்றி ஒரு வரிகூட எனக்குச் சொல்லித் தரவில்லை!  எகிப்திலிருந்த முஸ்லிம்களைச் சந்தித்தேன்.  அவர்களின் நற்குணமும் சகிப்புத் தன்மையும் என்னைக் கவர்ந்தன.  இஸ்லாத்தின் கடமைகளின்பால் எனக்கு ஓர் ஈர்ப்பு ஏற்படவே, அவற்றை ஒவ்வொன்றாகச் செய்து வந்தேன்.  இந்நிலை ஐந்தாண்டுகளாகத் தொடர்ந்தது.  இந்த உண்மை என் கணவருக்குத் தெரியாது!  நம்புவீர்களா?  நம்பத்தான் வேண்டும்!”

“நான் முஸ்லிமாகிவிட்டேன்!” என்று இப்பெண் அறிவித்தபோது, அவருடைய கணவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை!

இந்த நிகழ்வின் பின் என்னென்ன அற்புதங்கள் நடந்தன என்பதை அவருடைய சொந்த வாழ்க்கையைப் படிப்பதன் மூலம் அறியும்போது, நம் கண்கள் வியப்பால் விரிகின்றன.

கல்லூரிப் படிப்பை முடித்து, London Institute of Clinical Blood Research என்ற இரத்த ஆய்வுப் பயிற்சியகத்தில் பணியாற்றத் தொடங்கினார் ஆன்.  1970 களின் பிற்பகுதியில்தான் அவருக்கு இஸ்லாம் என்பது சகிப்புத் தன்மையுள்ள மார்க்கம்; நல்லொழுக்கங்கள் நிறைந்த வாழ்க்கை நெறி; அன்பும் அரவணைப்பும் உள்ள நேர்வழி என்ற அடிப்படைகளுடன் அறிமுகமாயிற்று.  அதனால் கவரப்பெற்ற ஆன், தன் பெற்றோர் மற்றும் உறவினருக்குத் தெரியாமல் இஸ்லாத்தில் ஐக்கியமானார்.

ஆர்வத்துடன் மணந்த அன்புக் கணவர் ஒரு Ultra-modern முஸ்லிம் என்றறிந்த இந்தப் பெண், அதிர்ச்சியடைந்துவிடவில்லை.  “நான் முஸ்லிமாகிவிட்டேன்” என்று அறிவித்து, தன் கணவருக்கே ஓர் அதிர்ச்சி வைத்தியம் செய்தார்!

உண்மையில், அவருடைய கணவருக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.  பெயரளவில் முஸ்லிமாக இருந்து, செயலளவில் முஸ்லிமாக இல்லாதவருக்கு அதிர்ச்சி தராதா இது?

“மேலை நாடுகளில் நிலவும் பொய்மையான மதிப்பு மரியாதைக்கும், அரபு நாடாகிய எகிப்தில் முஸ்லிம்களிடையே நிலவும் உண்மையான மதிப்பு மரியாதைக்கும் இடையில் இருந்த பெரும் வேறுபாட்டை நான் கண்கூடாகக் கண்டேன்.  அதற்குக் காரணம் என்னவென்று சிந்தித்தபோது, எனக்குச் சட்டென்று கிடைத்த பதில், ‘இந்த நாடுகளில் உள்ள இஸ்லாம்தான்’ என்பதுவே” என்கிறார் மிஸ் ராக்•பெல்லர்.

“ஆனால் என் கணவரோ?  இஸ்லாமியப் பெயர் பூண்டிருந்தும், இஸ்லாத்தைவிட்டு வெகு தொலைவில் சென்றுவிட்டிருந்தார்!  அவரை மீட்டிக் கொண்டு வருவது எனது முதற்கடமை என்று முடிவு செய்தேன்.  அதற்குரிய வழிகளைப்பற்றிச் சிந்தித்தபோது, ‘இதுதான் சிறந்த வழி’ என்று என் இதயத்தில் உதித்தது.  அது என்ன தெரியுமா?”

அப்போதுதான் அத்தம்பதியருடைய இல்லற வாழ்வின் முல்லைப் பூவாக மகள் ‘யாஸ்மீன்’ பிறந்திருந்தாள்.

“சொல்லிக் கொடுத்தாலும் விளங்க முடியாத மழலைப் பருவத்தில், என் கணவர் அருகிலிருக்க, ‘லா இலாஹ இல்லல்லாஹ்; முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்ற தாரக மந்திரத்தைக் கண்மணி யாஸ்மீனுக்குச் சொல்லிக்கொடுத்து, அதன் பொருளையும் சொல்லிக் கொடுத்தேன்.  மூல மொழி, குழந்தைக்கு; மொழிபெயர்ப்பு, அதன் தந்தைக்கு!”

யாஸ்மீன் ஓரளவு வளர்ந்து வந்தாள்.  அவள் தந்தை அருகிலிருந்த நேரங்களாகப் பார்த்து, இஸ்லாமியக் கடமைகளை ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார் தாய் ஆன் ராக்•பெல்லர்.  எப்படி!  ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்!

ஆங்கிலேய மனைவி; அதிலும், புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவள்.  தனக்கு எப்படிக் கூறுவாள்?  குழந்¨தெயைத்தான் பயிற்றுவிக்கிறாள் என்றெண்ணினார் பிறப்பிலேயே முஸ்லிமான அந்தத் தந்தை.

“நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்குமாங்கே பொசியுமாம்..” என்ற பழம்பாடல் நினைவுக்கு வருகின்றதா?  அதுதான் இங்கேயும் நடந்தது.  யாஸ்மீன் அந்தப் பிஞ்சுப் பருவத்தில் தாயின் போதனையைக் கிரகித்தாளோ என்னவோ, ஆன் கொடுத்த antidote நன்றாகவே வேலை செய்தது அந்த டாக்டருக்கு!

இறையில்லமாகிய பள்ளிவாயில் தன் வீட்டுக்கு மிக அருகில் வந்துவிட்டது போல் செயலாற்றத் தொடங்கினார் அந்த முஸ்லிம் டாக்டர்!

“நான் இஸ்லாத்தைத் தழுவிவிட்டதாக அறிவித்தபோது, அதனை எதிர்த்து ஏற்றுக்கொள்ளாத என் கணவர், இப்போது என்னைப் பாராட்டத் தொடங்கிவிட்டார்.  ‘ஆனி! எனக்குக் கிடைத்த தெய்வலோக தேவதை நீ!’ என்பார்.  அந்த நெகிழ்ச்சியில் என் கணவரின் கண்கள் பளிச்சிட்டதை நான் பார்த்து மகிழ்ந்தேன்” என்கிறார் இந்தப் பேறு பெற்ற பெண்மணி.

நந்தா விளக்குக்கு ஒரு நல்ல தூண்டுதல் போதுமல்லவா?  “என் கணவரின் மருத்துவ மனை இஸ்லாமிய ஒளியைப் பெறத் தொடங்கிற்று.  இப்போது என் மகள் ‘ஹிஜாபு’டன் தனக்கு முன்னால் நிற்பதைப் பார்த்துப் பூரித்துப் போய்விடுகிறார் அவர்.  அவள் இஸ்லாமியக் கடமைகளை ஆர்வத்துடன் செயல்படுத்துவதைக் கண்டு பெருமைப் படுகிறார்!” என்கிறார் அற்புதப் பெண்மணி ஆன்.

“நாமே நல்ல முஸ்லிம் முன்மாதிரி(rolemodel)களாக  நடந்துகொள்வதும், வளரும் தலைமுறையின் இதயங்களில் இஸ்லாத்தின் மதிப்பை விதைப்பதும்தான் இஸ்லாத்தைப் பரப்புவதற்கான சிறந்த வழிகளாகும்” என்பது முழுமையான முஸ்லிமாவான இவர் கூறும் முத்திரை வரிகள்.  

இந்த உறுதிப்பாட்டுடன்தான், இங்கிலாந்தில் உள்ள தன் உறவினர்களையும் இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்துக்கொண்டிருக்கிறார் ஆன் ராக்•பெல்லர்.

குடும்பப் பெண்கள் இஸ்லாமியச் சேவைக்காக என்ன செய்யவேண்டும் என்பது பற்றி விளக்கும் திருமதி ஆன் ராக்•பெல்லர், “அவர்கள்தாம், தம் ஆண்-பெண் பிள்ளைகளுக்கு அருமையான முன்மாதிரிகளாக விளங்கவேண்டும்; விளங்க முடியும்” என்கிறார்.

மேற்குலகில் இஸ்லாத்தின் நிலை யாது?  இது பற்றிக் கருத்துக் கூறும் திருமதி ராக்•பெல்லர், “மேலை நாட்டு மக்கள் இஸ்லாத்தைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள்.  அதற்குக் காரணம், ஆங்காங்குள்ள மீடியாக்கள்தாம்!  அந்தப் பிரச்சாரக் கருவிகளின் தவறான காட்டுகை(focus) இஸ்லாத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள விடாமல் தடையாக இருக்கின்றனர். இஸ்லாம் ஒரு பயங்கரவாத மதம் என்றும், பிற்போக்கானதென்றும், அறியாமை நிறைந்ததென்றும் அம்மக்கள் நம்புகின்றனர்” என்கிறார்.

முறையான, தெளிவான இஸ்லாமிய அறிவு வழங்கப்பெற்றால், அறிவார்ந்த-அழகான முறையில் இஸ்லாம் எடுத்துக் காட்டப்பெற்றால், மேலை நாட்டினர் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் இணையக் காத்திருக்கின்றனர் என்பது ஆனின் அசைக்க முடியாத கருத்தாகும்.  அதுவன்றி, வெறுமனே இஸ்லாத்தின் மீது வெறுப்பொன்றுமில்லை அவர்களுக்கு என்றும் கருத்தறிவிக்கின்றார்.

“இஸ்லாத்தைப் பற்றிய மேலை நாட்டினரின் எதிரான அணுகுமுறை(negative approach)க்குக் காரணம், அவர்களை ஆட்சி புரியும் தலைவர்களும், அவர்களுக்குக் கீழ் செயல்படும் மீடியாக்களும்தான்” என்கிறார் இப்பெண்மணி.

அதிரை அஹ்மது