ஒரு காலத்தில் புனித ரமளான் மாதத்தில் நோன்பு திறப்பதற்காக நோன்பு கஞ்சி காய்ச்ச தேவையான மளிகைக்கடை சாமான்கள் மற்றும் காய்கறி, இறைச்சி, அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் மிகவும் குறைவாகவே இருந்து வந்த போதிலும் (அப்பொழுது மாத சம்பளமும் குறைவாகவே இருந்து வந்தது. ஊரில் 1000 ரூபாயும், சவுதியில் 300 ரியால்கள் அல்லது 400 ரியால்கள் தான் மாத சம்பளம். இன்றைக்கு மாத டெலிபோன் செலவே இதையும் தாண்டி விடுகிறது சிலருக்கு) நமதூரில் எல்லோர் வீட்டிலும் ஒவ்வொரு நாளும் நோன்பு கஞ்சி காய்ச்ச போதிய பொருளாதார வசதி வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. அதனால் முஹல்லாப்பள்ளிகளில் ஒவ்வொரு நாளும் வசதிபடைத்தோரின் பங்களிப்பில் காய்ச்சப்படும் கஞ்சிகளையே ஒவ்வொரு வீட்டின் சிறுவர்களும் அதற்குரிய பாத்திரங்களை கையில் எடுத்துக்கொண்டு அஸர் தொழுகைக்குப்பின் பள்ளியில் வரிசையில் ஊற்றப்படும் கஞ்சிகளை வாங்கி வந்து அதன் மூலம் வீட்டினர் நோன்பை திறந்து கொண்டனர். குளக்கரையில் கொண்டு வந்த பாத்திரங்களை வைத்துக்கொண்டு சிறுவர்கள் போடும் சப்தம் எதோ அங்கு பெரும் கச்சேரியே நடப்பது போல் இருக்கும். பிறகு பெரியவர்களின் அடிகளும் விழும். கடைசியில் கஞ்சியுடன் கலந்த குளத்தின் மண்ணும் வீடு வந்து சேரும்.
நோன்பு திறக்க வீட்டில் சர்பத் கலக்க வேண்டுமென்றாலும் ஐஸ் பெட்டி வசதிகள் எல்லோர் வீட்டிலும் இல்லாமல் இருந்தது. தெருவில் ஏதேனும் கொஞ்சம் வசதி படைத்தவர்களின் வீடுகளில் மட்டும் குளிர்சாதனப்பெட்டி வைத்து தனக்கு வேண்டியவர்களுக்கு தங்கள் தேவை போக ஐஸ் கொடுத்துதவினர்.
ஊரில் நோன்பு கால மாலை நேரக்கடைகள் ஆங்காங்கே திறக்கப்படும். வாடா, சம்சா வியாபாரம் கொடி கட்டிப்பறக்கும் (அது என்னா கலர் கொடி என்று கேட்டு விடாதீர்கள்). நம் சொந்த பந்தங்கள் கூட கொஞ்சம் லாபம் சம்பாதிப்பதற்காக இரவு நேரங்களில் ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா, கடல்பாசி, கல்கண்டு பால், வாழைப்பழம் போன்றவற்றை தெருவில் தற்காலிக கடையமைத்து விற்று வந்தனர். இரவு நேர சேட்டைகள் அரங்கேறும். அது கேரம் போர்ட் விளையாட்டு மூலம் ஆரம்பமாகும்.
நோன்பு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே நமதூர் பள்ளிகளும், வீடுகளும் ஒட்டடை அடித்து, கழுவி சுத்தம் செய்யப்படும். சில பள்ளிகளில் சாந்தடித்து வர்ணம் பூசப்படும். (வீட்டுப்பெண்கள் அதற்கென ஒரு பிரத்யேக மாதங்கள் வைத்துள்ளனர். விராத்து, இடையத்து.......)
வீட்டினர் தன் சொந்த பந்தங்களின் உறவுகளை பலப்படுத்தவும், சம்மந்தி வீடுகளை மகிழ்விக்கவும் வாடா, சம்சா, முட்டை ரொட்டி, கடல்பாசி போன்றவற்றுடன் சில சிறப்புச்சாமான்கள் சேர்க்கப்பட்ட (ஆட்டுக்கறி, ஆட்டுத்தலை, நெஞ்செலும்பு) சுவை கூடிய நோன்பு கஞ்சி வீட்டில் சிரத்தை எடுத்து செலவுகள் பார்க்காது பெண்கள் காய்ச்சி அதை முறையே பங்கிட்டு ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்ந்தனர். விவாகரத்து, மவுத்துக்கும் ஹயாத்துக்கும் ஒன்னும் கிடையாது போன்ற பெரும் பிரச்சினைகள் குடும்பத்தில் தலைதூக்காது பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து உறவு முறை பேணி நல்லபடி பராமரித்து வந்தனர். எடுத்தேனா, கவிழ்த்தேனா என்பதெல்லாம் பெரும்பாலும் இல்லாமல் இருந்த நேரம் அது.
தொன்று தொட்ட சில மூட நம்பிக்கைகள் தொற்றி இருந்த போதிலும் மார்க்க விசயங்களில் பரவலாக எல்லோரும் பெருங்குற்றங்கள் செய்யாது பேணுதலாகவே இருந்து வந்தனர். சுற்றுவட்டார மாற்றுமதத்தினர்களால் பெரிதும் மதிக்கப்பட்டனர்.
பாரதீய ஜனதா கட்சி மத்தியில் ஆளும் பொழுது கூட பாராளுமன்றத்தில் இயற்றப்படாத ஒரு சட்டத்தை பட்டுக்கோட்டையிலிருந்து ஒரு கட்சி இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருந்து மாற்றுமதத்தினர்களுடன் அமைதியாக வாழ்ந்து வரும் அதிரையில் மாடு இறைச்சிக்காக அறுக்கப்படக்கூடாது என ஒரு புது சட்டம் இயற்ற நினைப்பது சங்கடப்படுத்துவதற்காகவேயன்றி யாரையும் சகோதரத்துவத்துடன் வாழ வழிவகை செய்வதற்காக அல்ல.
ஓட்டு வீட்டில் இருந்து வந்தாலும் குடும்ப கண்ணியங்களும், மார்க்க வரைமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டன. எதுவும் எளிதில் எல்லை மீறி கண்டம் தாண்டி சென்று விடுவதில்லை.
சிறுவர்கள் பெரியவர்களை மதித்து மரியாதை செலுத்தினர். பள்ளிக்கூட படிப்பிற்குப்பின் தெருதோறும் திருக்குர்'ஆன் பயிலும் பள்ளிகளுக்கு/வீடுகளுக்கு காலை, மாலை சென்று வந்தனர்.
உண்மையில் வருத்தப்பட்டு வேதனை பட வேண்டிய விசயமான வீட்டு ஆண்களின் வருடங்கள் பல ஆகும் வெளிநாட்டு பயண பெரும் பிரிவை அறியாது ஐந்து ரூபாய், பத்து ரூபாய் பயணக்காசிற்கு ஆசைப்பட்டு குதிரை வண்டியில் குதூகலமாய் ரயிலடி சென்று தன் பிரியமானவர்களை கையசைத்து கம்பனில் ஏற்றி தனிமையாய் வீடு திரும்புவர். கை பேசிகளும், இன்டர்நெட் தொடர்புகளும் இல்லாத அக்காலம் தராத வேதனைகளை எல்லா வசதி வாய்ப்புகள் இருக்கும் இக்காலம் ஏதேனும் வழியில் நமக்கு தந்து விடுகிறது.
ஊரில் எப்பொழுதாவது யாரும் எதிர்பாராமல் எங்கேனும் சில விசமிகளால் சிறு சலசலப்பு/கலவரம் ஏற்பட்டால் அது உடனே சம்மந்தப்பட்டவர்களால் அமைதிக்குழு (பீஸ் கமிட்டி) ஏற்படுத்தப்பட்டு பரஸ்பரம் பேசி சுமூகமாக தீர்க்கப்பட்டு விடும். ஆனால் இன்றோ சின்னஞ்சிறு விசயங்களை கூட ஊதிப்பெரிதாக்கி உலகிற்கே ஊடகத்தின் மூலம் விருந்து வைக்க துடிக்கிறது சில துரு பிடித்த இதயங்கள்.
ஐங்கால தொழுகைக்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஒலிக்கப்படும் பாங்கின் ஒலியோ அல்லது மார்கழி மாதம் ஊரின் எல்லைக்கோவிலில் ஒலிக்கப்படும் அவர்களின் பக்திப்பாடல்களோ யாருக்கும் இடைஞ்சல் தருவதாக இருந்ததில்லை. அவரவர் மார்க்கம் அவரவருக்கு என வரம்புக்குள் இருந்து வந்தனர். இன்று உள்ளங்கள் குறிகிவிட்டதால் ஊரில் எங்கேனும் சைக்கிள் டயர் வெடித்து விட்டால் கூட ஏதேனும் வெடிகுண்டாக இருக்குமோ என பதறிப்போகும் சூழ்நிலை உள்ளது.
இன்று போட்டி போடும் கணக்கிலடங்கா மொபைல் போன் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போல் சமுதாயத்தில் பல இயக்கங்களும் ஊரில் ஆங்காங்கே உருவாகி ஒருவருக்கொருவர் பல தயக்கங்களையும், தள்ளுமுள்ளுகளையும் ஏற்படுத்தி விட்டன.
ஊரில் நோன்பு வெயில் காலத்தில் வந்தாலும் குளங்கள் கொஞ்சம் நீரை தன் மடியில் ஏந்தியே நின்றன. ஆனால் இன்றோ மழைக்காலங்களில் கூட கடும் தாகம் கொண்ட ஒரு வழிப்போக்கனைப்போல் ஊர்க்குளங்கள் மழை நீரை தானே குடித்து தீர்த்து விடுகின்றன ஆழ்துளை குழாய் கிணறுகளின் அத்துமீறல்களால்.
என்றோ வர இருக்கும் சமுதாயத்திற்காக பிளாஸ்டிக் பொருட்களின் தீங்கறிந்து அவர்களுக்காக இன்றே தடை விதித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு விட்டன. ஆனால் இன்றிருக்கும் மக்களின் ஒற்றுமைக்கும், அமைதியான வாழ்விற்கும் இன்னும் விழிப்புணர்வுகள் அந்தளவுக்கு ஏற்படுத்தப்பட்டதாக தெரியவில்லை.
அன்றோ அழுக்கு சட்டைப்பைக்குள் ஐந்து ரூபாய் இருந்தாலே போதும். இன்றோ அழகிய வெள்ளைச்சட்டையில் ஆயிரம் ரூபாய் நோட்டு இருந்தாலும் அந்தளவுக்கு மதிப்பும், மரியாதையும் கிடைப்பதில்லை. எதுக்குமே பத்தமாட்டிக்கிது.....
அன்று ஒரே ஊசியில் ஓடிப்போன ஓராயிரம் நோய்கள் இன்றோ ஓராயிரம் ரூபாய்க்கு மருந்து வாங்கி வந்து உண்டாலும் போகாமல் மல்லுக்கட்டி உடலுக்குள் பாய் விரித்து மல்லாக்கப்படுத்து கிடக்கிறது.
சவுரு பக்கிர்சா அடித்து வந்த தப்ஸின் சப்தம், அவருடன் கையில் அரிக்களாம்பு கொண்டு வந்த சிறுவனுடன் அக்கால இன்பமும் சேர்ந்தே சென்று விட்டனவோ? என்னவ்வோ தெரியவில்லை.
புது வேட்டி எடுத்து அதை தையல்காரர் ஒன்று சேர்த்து கூட்டி தைக்கப்படும் பொழுது அதில் எம் உற்சாகமும் இணைத்து வைத்தே தைக்கப்படும். ஆனால் இன்றோ என்ன தான் பணங்காசுகள் பெருகி இருந்த போதிலும் அன்று கிடைத்த இன்பம் இன்று வர மறுக்கிறது. மறைந்த நம் அப்பாக்களின் கைத்தடிகளை பிடித்துக்கொண்டு அதுவும் அவர்களுடன் கப்ருக்குழிக்குள் சென்று விட்டதோ? என்னவ்வோ?
ஒரு காலத்தில் நம் ஊர் பள்ளி வாசல் தோறும் பெரியவர்களின் ஆட்சியும், கம்பீர நிர்வாகமும் எம்மை அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும். இன்றோ நாமும் மெல்ல, மெல்ல பெரியவர்களாகி விட்டதால் அந்த அப்பாக்கள் போல் இன்று வயதானவர்களின் ஆளுமையை காணுவது அரிதாகிவிட்டது. சின்னஞ்சிறு வயதிலேயே உலகை விட்டு மறையக்கூடிய சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம்.
நம் இளமைக்கால நோன்பு நினைவுகளை பல கட்டுரைகளாக ஏற்கனவே எழுதி இருந்த போதிலும் அவற்றில் சிலவற்றை நினைவூட்டலுக்காகவும், கூடுதல் தகவலாகவும் மேற்கண்டவற்றை உங்களின் பார்வைக்கும் மேலான கருத்துரையாடலுக்காகவும் இங்கு சமர்ப்பிக்கின்றேன்.
இன்ஷா அல்லாஹ் இன்னுமிருப்பின் தொடருவோம்......
மு.செ.மு. நெய்னா முஹம்மது.


