Showing posts with label MSM. Show all posts
Showing posts with label MSM. Show all posts

புகை(யில்லாத அதிரைப்)படங்கள் ! - MSM Clicks... 4

அதிரைநிருபர் பதிப்பகம் | October 04, 2016 | , , ,


நம் சுற்றுவட்டாரத்தை சுற்றிப்பார்ப்போம் (புகையில்லாப்படங்களுடன்)

ஊரில் கண்ட காட்சிகளும், அத்துடன் சேர்ந்து வந்த எண்ண வெளிப்பாடும் ஒன்றிணைந்து இங்கே ஒரு சிறு ஆக்கம் உங்களின் ஏக்கம் தீர:

அஃதொரு மழைக்கால காலை நேரம் புதுமனைத்தெருவின் யாரும் நடக்காத வேளை.


தனியே தன்னந்தனியே ஒரு பாக்கு மரம் மழைத்துளியை முத்தமிட எத்தனிக்கும் நேரம்.


பசுந்தரையும், குடை பிடிக்கும் புளியமரமும், மரத்தில் விளையாடப்பட்ட சதுரங்க கருப்பு வெள்ளைக்கட்டமும் காண்போருக்கு குதூகலமளிக்கும் (அதிரை, பட்டுக்கோட்டை வழியில்.)


வீட்டுக்கு முன்னே வேப்பமரம் அது கண்ணுக்கும், மனதிற்கும் குளிர்ச்சி தரும்.


அமைதியாய் காட்சி தரும் செக்கடிப்பள்ளியும் அதை அரவணைக்கும் இயற்கை சூழலும்.


தூய்மையான செக்கடிப்பள்ளி கீழ்த்தளம் படுக்க பாயின்றி உறங்கினாலும் நல்ல தூக்கம் வரும்.


பள்ளிக்கு வருவோரை பரவசமூட்டி வரவேற்கும் இளம்பச்சை செடிகள்.


நண்பனின் கையில் இருக்கும் முறுக்கும், ராஜாமட சாய்ங்காலத்தென்றலும் சந்திக்கும் ஒரு அந்தி மாலைப்பொழுது.


வான் மழை வந்திறங்கினால் மண் மட்டுமல்ல நம் மனமும் புன்முறுவல் பூத்து பூரித்து போகும். (மளவேனிற்காடு)


இரு பக்கம் மரங்கள் நட்டு நடுவிலே தார் சாலை இட்டு குளிர்க்காற்றை ஓட விட்டு கொண்டாடும் இயற்கையே இறைவனின் அத்தாட்சிகள். (மளவேனிற்காடு)


சாய்ங்கால தென்றல் காற்று சாமரம் வீசிச்செல்லும் செக்கடிக்குளக்கரை


அமைதியான இயற்கைச்சூழல் அமர்ந்திருக்கும் செக்கடிக்குளமும், அதில் தப்படித்த நினைவுகளும், இக்கரையிலிருந்து அக்கரைப்போய்ச்சேர்ந்த உள்ளமும் இனி திரும்ப வாய்ப்பேதும் உண்டோ?


கம்பீர ஒற்றைக்கோபுரமும், ஒலி எழுப்பும் ஒலி பெருக்கியும் ஒரு போதும் ஓரிறையை போதிக்காமல் இருந்ததில்லை. (இடம் முஹைதீன் ஜும்மாப்பள்ளி)


வான் மழையை வாஞ்சையுடன் வரவேற்கும் செக்கடிக்குளமும், அதன் சுற்றுவட்டார சொந்தபந்தங்களும்.


வானில் ஒன்று சேரும் கார் மேகக்கூட்டமும், நேர்த்தியாய் உருவாக்கப்பட்ட தரைச்சாலையும் ஒன்றோடொன்று மொளனமாய் பேசிக்கொள்ளும் வேளை. (இடம் திருச்சி, தஞ்சைக்கு இடைப்பட்ட சாலை)


பனைமரமும், தென்னைக்கூட்டமும், படுத்துறங்கும் பசும் நெல்கதிரும் காண்போருக்கு பரவசமூட்டும். அதில் வெள்ளைக்கொக்குகளும் வரிசையில் நின்று வரவேற்று காட்சிக்கு மெருகூட்டும்.


கரடுமுரடான காட்சிகளும் கண்கொள்ளாக்காட்சிகளாகும் கார் காலம் வந்து விட்டால் சுவிட்சர்லாந்தைக்கூட பார்வையில் பின்னுக்கு தள்ளும். (இடம் பட்டுக்கோட்டை, தஞ்சைக்கு இடைப்பட்ட சாலை)


தண்ணீர், தண்ணீர் என பரிதவிக்கும் மனிதர்களே! சலசலப்பின்றி மொளனமாய் கடந்து சொன்று கடலில் சங்கமிக்கும் முன் இந்த ஆற்று நீரை வேண்டிய இடத்திற்கு கொண்டு செல்ல மாட்டீரோ?


ஆத்தங்கரை ஓரம் ஒரு திண்ணை இருக்கும். அங்கு தான் இவ்விருவரின் சொத்து,சுகம் இருக்கும். (இடம் கலியாண ஓடை சப்தமின்றி நகர்ந்தாலும் சமீபத்தில் நமதூர் இளைஞனை பலிகொண்டு விட்டது.)


பச்சைக்கிளிகள் கூட இக்காட்சி கண்டு பொறாமை கொள்ளும் அப்படியொரு பசுமை போர்வையின்றி படுத்துறங்கும் இடம். (இடம் பட்டுக்கோடை, தஞ்சைக்கு நடுவே)


இன்னும் நன்கு வளர்ந்து மனிதர்களுக்கு பல பலன்களை அளிக்க போட்டியின்று வளர்ந்து வரும் சகோதர பனைமரங்கள்.


ரம்மியமான பசுமை கண்டு எல்லைக்கல் கூட எழில் பெரும். பசுமைக்கு பாடம் நடத்த கால் வலிக்காமல் காட்சி தரும் மின்கம்பம்.


உயர உயரவே பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது; உயர உயரவே பறக்கும் பருந்தானாலும் வயிற்று பசிக்கு தரை வந்திறங்கியே தீர வேண்டும். தனியே தன்னந்தனியே தன் ரிஜ்க்கைத்தேடி ஒரு பருந்து பறந்து செல்கிறது.


காண்பதற்கு ஏதோ ஐரோப்பாவில் எடுத்த புகைப்படம் போல் காணப்பட்டாலும் காலார நடந்தே இக்காட்சிகளை நம் கண்ணுக்கு விருந்தாக்கலாம். (இடம்: ரயில்வே கேட் தாண்டி ராஜாமடம் நோக்கி செல்லும் சாலையோரம்)


முட்டுக்கால்களை முத்தமிட்டு ஓட வேண்டிய நீர் வெறும் தரையில் தவழ்ந்து பாதங்களை முத்தமிட்டு ஓடுகிறதே என பேசிக்கொள்ளும் நமதூர் சிறுவர்கள்.


பள்ளிக்கு தொழ வருவோரை வரவேற்று நிற்கும் இருபக்க மாமரங்களும், நடுவே தொழுகை முடிந்து வெளியேறும் எத்தீம்கானா மாணவர்களும். (இடம் மரைக்காப்பள்ளி)


உலக உருண்டையில் என்ன தான் உருண்டு திரிந்தாலும் இறுதியில் பாஸ்ப்போர்ட்டின்றி வந்திறங்க வேண்டிய இடம் மையவாடியல்லவா? (இடம் மரைக்காப்பள்ளி மையவாடியின் நுழைவு)


சில்லென்ற காற்றுடன் சொட்டென சொட்டும் மழைத்தூரல். அதில் தலை மூழ்கிக்கொள்ளும் தரைப்புற்கள்.  (இடம் எங்கூட்டு வாச)


கை கழுவிய மின்சாரமும், கை கொடுக்கும் அரிக்களாம்பும். ஓட்டு கேட்டு நிற்கவில்லை. ஒளி கொடுத்து ஓரமாய் நிற்கிறது. பழமைக்குத்திரும்பும் புதுமை.


அழுது அடம் பிடிக்கும் குழந்தைகளை அமைதிபடுத்த காட்டப்படும் கிளுகிளுப்பை போல் எல்லாக்காட்சிகளையும் கண்டு ஆனந்தமடைந்த எனக்கு இறுதியில் நாட்கள் முடிந்து ஒரு இயந்திரப்பறவையினுள் சிறைப்பிடிக்கப்பட்டேன் (சீறீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திற்குள்) வேதனையில் என் தாய் மண்ணை ஒரு சன்னலோரம் கண்டு நின்றேன். கிளுகிளுப்பைப்போல் வேடிக்கை காட்டி நின்றது மேனியில் பல வண்ணம் பூசிய அந்தவிமானம்.


அடுத்த முறை ஊர் வந்து காட்சிகள் பல காண மூலப்பொருள் மண்ணும், மண்ணுக்கு மேல் இந்த கண்ணும் இருத்தல் வேண்டும்.

இறைவன் அதற்கு நமக்கெல்லாம் வாய்ப்பளிக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்.....

பயணங்கள் முடியவில்லை.......

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

அந்த திக் திக் நேரங்கள்... 25

அதிரைநிருபர் பதிப்பகம் | September 26, 2016 | , ,


இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் சந்தோசமான, சங்கடமான, பதட்டத்துடன் கூடிய இருதயம் படபடக்கும் திக், திக் நேரங்களை எப்படியேனும் சந்திக்காமல் இருப்பதில்லை. சிலருக்கு அவை ஆனந்தம் பொங்கக்கூடியதாகவும், சிலருக்கு அவை துக்கம் தொண்டையை அடைக்கக்கூடியதாக இருப்பதை காண முடியும். அவற்றுள் அறிந்த சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிரசவத்திலும் கணவன், மனைவிக்கு மட்டுமல்லாது ஒட்டு மொத்த குடும்பத்தினருக்கும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின் ஒவ்வொரு நிமிடமும் அது ஆப்பரேசனா? சுகப்பிரசவமா? ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? தாயும், சேயும் எப்படி இருக்கின்றனர்? என ஒவ்வொருவருக்கும் இதயத்தின் திக், திக் ஓசை அதிகரித்துக்கொண்டே செல்லும்.
ஆண் குழந்தையானால் அது வளர்ந்து சுன்னத் செய்யும் பருவம் வந்ததும் அதற்கு அதனால் வரும் பயம் கலந்த திக், திக் அந்த குடும்பத்தையே தொற்றிக்கொள்ளும்.

பெண் குழந்தையானால் அது பருவம் அடையும் தருவாயில் அதன் பெற்றோருக்கு வரும் ஏதேச்சையான திக், திக் அந்த குடும்பத்தில் கொஞ்சம், கொஞ்சமாக பரவ ஆரம்பிக்கும்.

ஆண், பெண் பிள்ளைகளை ஆரம்ப பள்ளி அனுப்பும் பொழுது பள்ளி செல்லும் முதல் நாள் வரும் பயம் கலந்த திக், திக் நாளடைவில் பள்ளிக்கட்டணம் செலுத்தும் நாளை எண்ணி பக், பக் வென மாறிப்போகும்.

அமைதியாய் இருக்கும் பரிட்சை அறையில் வினாத்தாள் வாங்கும் சமயம் படித்த கேள்விகளா? அல்லது படிக்காதது வந்து விட்டதா? என அதை பார்க்காமலேயே திக், திக் அங்கிருக்கும் மாணவர்களுக்கு பரவத்தொடங்கும்.

பரிட்சைகளெல்லாம் எழுதிய பின் தேர்வுத்தாள்கள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் அறிவிக்கப்படும் பொழுது அவரவருக்கு எதிர்பார்ப்பிற்கேற்ப திக், திக் ஓசை ஓயாமல் அடிக்கத்தொடங்கும்.

பள்ளி, கல்லூரி மாணவ பருவத்தில் ஏதேனும் தவறுகள் செய்திருப்பின் அதை செய்தது யார்? என ஆசிரியர்களால் விசாரணை துவங்கும் சமயம் திக், திக் தானாகவே சம்மந்தப்பட்டவர்களுக்கு இதயத்தில் ஆனாகிவிடும்.

அவரவர் வேலையுண்டு, வெட்டியுண்டு என அமைதியாய் இருந்து வரும் ஊரில் திடீரென ஒரு மூலையில் வெடிக்கும் கலவரம், குழப்பத்தால் ஒட்டு மொத்த ஊரினருக்கும் திக், திக் சூழ்நிலையை ஏற்படுத்தும்.

முதன் முதலில் அயல்நாடுகள் செல்வோருக்கு விசா, விமான டிக்கெட் ஏற்பாடுகள் ஆகி விமான நிலையத்திற்குள் நுழையும் பொழுதும், வரிசையில் ஒவ்வொருவராக குடியுரிமை அதிகாரிகளின் முன் சென்று நிற்கும் பொழுதும் நாம் குற்றமேதும் செய்யாமல் அப்பாவியாக இருந்தும் இதயத்தில் திக், திக் தீயாய் பற்றிக்கொள்ளும்.

வருடங்கள் சில கழித்து அயல்நாடுகளிலிருந்து தாய் நாட்டிற்கு திரும்பி சென்று தாய், தந்தையரை, உற்றார், உறவினரை, சொந்த, பந்தங்களை பார்க்க ஊர் திரும்பும் வேளையிலும், கொண்டு செல்லும் சாமான்களுக்கு கூடுதல் லக்கேஜ் ஏதேனும் வந்து விடாமல் இருப்பதற்காகவும் ஒவ்வொரு அசைவிலும் திக், திக் அடிக்காமல் யாரும் ஊர் திரும்புவதில்லை.

வீட்டினரால் திருமண ஏற்பாடாகி அந்த அரிய தருணம் நெருங்கும் வேளையில் நடந்தேறும் ஒவ்வொரு நிகழ்விற்கும், இறுதியாக மணமேடையில் சான்றோர்கள், மார்க்க அறிஞர்கள், பெரியவர்களின், குடும்பத்தினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இருகால்கள் மரத்து மண்டியிட்டு முக்கிய நிகழ்வான நிக்காஹ் செய்ய அமரவைக்கப்பட்டிருக்கும் அந்த வேளையிலும் பின்னர் மணப்பெண்ணை கை பிடிக்க இருக்கும் அந்த வேளையிலும் என்ன தான் நாம் உடல் பலசாலியாக இருந்து சிக்ஸ் பேக் வைத்திருந்தாலும் இதய பேஸ்மெண்ட் திக், திக் என கொஞ்சம் ஆட ஆரம்பித்து விடும்.  

நன்கு படித்து முடித்து உள்நாட்டிலோ அல்லது அயல்நாட்டிலோ ஒரு நல்ல வேலைவாய்ப்பு தேட நேர்முக தேர்விற்காக அழைக்கப்பட்டு உரிய இடம் சென்றடைந்து நேர்முக தேர்வு நடத்தும் அதிகாரியால் கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு தக்க பதில் அளித்து திரும்பும் வரை திக், திக் இதயத்தை ஆக்கிரமித்துக்கொள்கிறது.

அரசு பொதுத்தேர்வுகள் எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளில் பரபரப்புடன் கூடிய திக், திக் திசையெல்லாம் பரவிக்கிடக்கும்.

பணியிடங்களில் மேலதிகாரிகளால் ஏதேச்சையாக சந்திக்க அழைக்கப்படும் பொழுது எதற்கென்றே தெரியாமல் திக், திக்கும் கூடவே சேர்ந்து வரும்.

விலையுயர்ந்த பொருட்கள் காணாமல் போகும் பொழுது உள்ளத்தில் திக், திக் நிரம்பிக்கிடக்கும்.

நாம் நேசிக்கும் சிலர் திடீரென இவ்வுலகை விட்டுப்பிரியும் பொழுது அதைக்கேட்கும் சமயம் மனவேதனையுடன் செய்வதறியாது திகைக்கும் சமயம் உள்ளத்தில் திக், திக் குடிகொள்ளும்.

வீட்டினர்களுக்கு திடீரென சுகக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சமயமோ அல்லது அறுவை சிகிச்சை செய்யப்படும் சமயமோ பரிதவிக்கும் உள்ளத்தில் திக், திக் வந்து பாய் விரித்து படுத்துக்கொள்ளும்.

மரண தண்டணைக்கைதிகளின் மரண தண்டணை நிறைவேற்றப்படும் சில மணித்துளிகளுக்கு முன்னர் அவர்களின் இதயம் திக், திக்கால் எப்படி திண்டாடி இருக்கும் என அவர்களையும், நம்மை படைத்த அந்த இறைவனுக்கே நன்கு விளங்கும்.

உலகில் பெரும் குற்றங்களுக்கு தண்டணை இஸ்லாமிய ஷரியத் சட்டங்கள் மூலம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மனிதர்களால்  நிறைவேற்ற கட்டளையிடப்பட்டிருக்கும் இறைவன் அதே வேளையில் பாதிக்கப்பட்ட மனிதர்கள் மன்னித்தால் அந்த தண்டணையிலிருந்து குற்றவாளிக்கு விடுதலை அளித்து விடுவிக்கலாம் எனவும் தெளிவுர நமக்கு என்றோ தெரிவித்துவிட்டான் இறைவன். எனவே குற்றத்திற்காக தண்டிக்கும், மன்னிக்கும் இரு பெரும் பொறுப்புகளைப்பெற்றிருக்கும் மனிதர்களாகிய நாம் அந்த ஏழைப்பெண் ரிஸானா நஃபீக்கை அவள் குடும்ப ஏழ்மை கருதி அப்படியே அவள் தவறு செய்திருப்பினும் மன்னித்து விட்டு உலக இஸ்லாமிய எதிரிகளின் வாய்களை அடைத்திருக்கலாமே? அதனால் இறைப்பொருத்தத்தை நிரம்பப்பெற்றிருக்கலாமே? அரபு நாட்டவர்களெல்லாம் காட்டுமிராண்டிகள் என உண்மைநிலையறியாது உளரும் ஊடகங்களுக்கும் பாலைவனத்திலும் நறுமணம் வீசும் ரோஜாக்கள் அன்று முதல் இன்று வரை மலர்ந்து கொண்டு தான் இருக்கின்றன என  அந்த பாதிக்கப்பட்ட அரபுக்குடும்பம் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி உலகுக்கு எடுத்துரைத்திருக்கலாமே? என்ற துக்கம் கலந்த ஏக்கம் நம் எல்லோருக்கும் இல்லாமல் இல்லை.

திடீரென நேற்று நள்ளிரவு சுமார் 1:30 மணியளவில் சவுதியில் தண்டணை நிறைவேற்றப்பட்டு சமீபத்தில் மரணமடைந்த இலங்கைப்பெண் ரிஸானா நஃபீக்கின் ஞாபகமும், அவர் பெற்றோரின் துக்கம் தொண்டையை அடைக்கும் பேட்டியும் பார்த்தபின் மனசுக்கு ரொம்ப கஷ்டமா போயிரிச்சி. அதற்கு பின் எனக்கு தூக்கத்தை தொடர இயலாமல் போய் காலையில் எப்பொழுதும் போல் எழும்பி வழக்கம் போல் பணிக்கு வந்து விட்டேன். அதன் தாக்கமே இந்த ஆக்கம் எழுத வித்திட்டது.

இது எதோ ஒரு இஸ்லாமியப்பெண்ணுக்கு சவுதி அரேபியாவில் ஏற்பட்டுவிட்டதால் நமக்கு வந்த பச்சாதாபமும், இரக்கமும், பரிவும் அல்ல. உலகில் எந்த மூலையிலும் மனிதனாய் பிறந்த எவருக்கும் வேதனை தரும் நிகழ்வுகளும், அநீதியும் இழைக்கப்படக்கூடாது என்பதே மார்க்கம் போதிக்கும் நம் விருப்பமும், ஆசையுமாகும். அதை சரிவர உலக ஊடகங்கள் புரிந்து கொள்ளவில்லையெனில் அது அவர்களின் தவறேயன்றி அதற்கு நாம் பொறுப்பேற்க இயலாது.

சமீபத்தில் நம் வடக்கு எல்லையை பாதுகாத்து வந்த இந்திய ராணுவ வீரர்கள் இருவர் (பாக்கிஸ்தான் ராணுவத்தாலோ அல்லது இரு நாட்டு எல்லையின் சீர்கேட்டை என்றுமே விரும்பும் சில அயோக்கிய பிரிவினைவாதிகளாலோ) கொல்லப்பட்டு அதில் ஒரு வீரனுடைய தலை துண்டிக்கப்பட்டு வெறும் முண்டம் மட்டும் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொடூர சம்பவத்திற்கு யாரும் ஒரு போதும் வக்காலத்து வாங்க இயலாது. அந்த வீரனின் தலை கிடைக்காமல் அவர் முண்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு அவரின் பெற்றோர்கள் மேற்கொண்ட ஆக வேண்டிய சடங்குகள் அவர்கள் நம்பிக்கைப்படி செய்ய இயலாமல் வேதனையில் தவித்து வருவதால் வரும் வலியை வெளியிலிருந்து யாரும் அந்தளவுக்கு உணர்ந்து விட முடியாது. அவ்வளவு கொடுமையான வலி தன் மகனின் தலையை திருப்பித்தர கேட்டு நம் நாட்டு அரசிக்கு அவர்கள் கோரிக்கை வைத்து நிற்பது. கண்ணீருக்கு நிறமில்லை, வேதனைக்கு மதமில்லை, மார்க்கமில்லை. எனவே யாருடைய வேதனையையும் யாரும் கொச்சைப்படுத்த உலகில் யாருக்கும் அதிகாரம் அளிக்கப்படவில்லை.

அல்லாஹ் அந்த பெண்ணுக்கு மறுமையில் உயர்ந்த பதவியை தந்தருள்வானாக.... அவரின் பிரிவால் வாடும் அந்த ஏழைக்குடும்பத்திற்கு அவர் ஹயாத்தோடு இருக்கும் பொழுது என்ன வருமானம் கிடைத்ததோ அதை விட பன்மடங்கு அந்த குடும்பத்திற்கு நினையாப்புறத்திலிருந்து ஏற்படுத்திக்கொடுப்பாயாக....ஆமீன்.

இதுபோல் வாழ்வில் நாம் சந்திக்கும் எத்தனையோ திக், திக் நிகழ்வுகள் ஏதேனும் விடுபட்டிருப்பின் அதை பின்னூட்டம் மூலம் நீங்கள் தொடரலாம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது

அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம்... 5

அதிரைநிருபர் பதிப்பகம் | September 07, 2016 | ,


"காலமும், நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை" என்ற முதுமொழிக்கேற்ப நாம் இப்பொழுது யாராக, எங்கோ, எப்படியோ இருந்து வாழ்ந்து வந்தாலும் காலம் எவ்வித தங்குதடையுமின்றி நம்மை விட்டு கடந்து சென்று கொண்டே தான் இருக்கின்றது. கடலில் கலக்கும் காட்டாற்று வெள்ளம் அது ஓடும் வழியில் இலை,தழைகளையும்,குப்பை,கழிவுகளையும் அடித்துக்கொண்டு செல்வது போல் வாழ்வில் நம் கண் முன்னே வயோதிகத்தாலும், நோய்நொடிகளாலும், விபத்துக்களாலும், விபரீதங்களாலும், இன்ன பிற காரண,காரணிகளாலும் நம்மவர்களை அவர்கள் இளையவர், முதியவர் என்ற பாகுபாடின்றி மரணம் அதன் போக்கில் சேர வேண்டிய இடத்திற்கு இழுத்துச்சென்று விடுகிறது.

"காலஞ்சென்றவர்களை நினைத்துப்பார்க்க நேரமில்லை, நம்முடன் இருக்கும் மூத்தவர்களை மதித்துப்பணிவிடை செய்ய நேரமில்லை. பிறகு தான் உலகில் வாழ்வதே எதற்கென்று விளங்கவில்லை" இப்படித்தான் நம் வாழ்க்கை சக்கரம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

நாம் இன்று ஆயிரத்தெட்டு அலுவல்களுக்கிடையே நம்மை கடந்து சென்ற அந்தக்காலங்களையும், அதன் நல்நிகழ்வுகளையும் அவ்வப்பொழுது தனியாகவோ, கூட்டாகவோ அசைப்போட்டு நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில் சிலவற்றை இங்கு பட்டியலிட்டு சிலாகிப்போம் வாரீர்.

வருடம் முழுவதும் கண்டுகொள்ள யாருமில்லாத துணிக்கடை, டைலர் கடை டைலர்களெல்லாம் ரொம்ப மதிப்பும், மரியாதையுடன் பார்க்கப்படுவர் இந்த பெருநாள் நாட்களில். சொன்ன தேதியில் துணி தைத்து கொடுத்த சரித்திரம் படைத்த டைலர்களெல்லாம் எங்கோ ஆப்பிரிக்காவில் இருந்திருக்க வாய்ப்புண்டு.

ஊரில் ஆங்காங்கே எங்கோ பிறந்து வளர்ந்த,(தொட்டுக்கறி அரைக்கப்படும்) மொரட்டு மாசியை  கொம்பாய் முறுக்கியது போல் வளைந்த கொம்புகளுடைய ஆடுகள் மந்தையாய் ஊருக்குள் வந்து அந்த தியாகத்திருநாளை தானே முன்னின்று மே,மே என கோஷமிட்டு சிறப்பிக்கும். அதன் மேனியில் விலாசமிட்டு அடையாளப்படுத்தப்படும்.

ஊரின் தொப்பிக்கடைகளெல்லாம் தன் கடையை கடைக்கு வெளியே கடை விரிக்கும். அதை பெட்ரமாஸ் லைட்டு ஒன்று நின்று ஒளி வீசி கண்காணிக்கும்.

கறிக்கடைகளெல்லாம் வாங்க வருவோரை வரிசையில் வந்து நிற்க வைக்கும். ஆட்டின் உதிரி பாகங்களெல்லாம் சட்டைப்பாக்கெட்டில் பணங்காசுகள் எவ்வளவு இருந்தாலும் அதை விரும்பி வேண்டியவருக்கு உடனே கிடைத்து விடாது.சில சலசலப்புக்கு பின்னரே வந்த வேளை முடியும்.

கூடைக்குள் கூனிக்குறுகி நிற்கும் சூப்பு வைக்க உதவும் வெடக்கோழிகளின் விலை இரண்டு,மூன்று நாட்களில் அதன் விலையும் சரியாய் சரியும்.

சென்னை/வெளியூர் சிறுவர்களும், உள்ளூர் சிறுவர்களும் சந்தித்து ஒருவருக்கொருவர் சிலாகித்துக்கொள்ள பள்ளிகளும் சில நாட்கள் விடுமுறையளித்து அவர்களுக்கு நன்கு உறுதுணையாய் இருந்து உதவி செய்யும்.

வயோதிகம் முதல், வாலிபம் வரை மனசுக்குள் பூரிப்புகள் பனி மூட்டம் போல் ஊரில் எங்கும் பரந்து பரவிக்கிடக்கும்.

பள்ளிகளில் சுபுஹ் முதலே தக்பீர் சொல்ல ஆரம்பிக்கப்படும். பிறகு பெருநாள் தொழுகை சூரிய உதயம் ஆனதும் விரைந்து நடத்தப்படும். தொழுத கையோடு முதல் நாளே சிலர் குர்பானி கொடுக்க அவசர, அவசரமாக வீடு வந்து சேருவர். காத்திருக்கும் அந்த குர்பானிக்கான ஆட்டை அல்லாஹ் பெயர் சொல்லி அறுப்பர். அவர்களுக்காக பசியாறவும் வீட்டின் பெண்களால் பக்குவமாக ஆக்கி பரிமாறப்படும்.

அந்த மொறு,மொறு பொரிச்ச ரொட்டியின் மேனியில் கொஞ்சம் கறியானத்தை ஊத்தி, கையை அதன் மேல் அழுத்தினால் சுக்குநூறாகிப்போகும் அதன் மேனி. பிறகு ஆனத்துடன் சேர்ந்து அது தனக்கே உரித்தான அந்த ருசியை தாரை வார்க்கும் சாப்பிடும் அனைவருக்கும்.

பிறகு இடியப்பமும், ரவ்வாவும், வட்லப்பமும், கடப்பாசியும் அதற்கு நன்கு பக்கபலமாக இருந்து வரிசையில் வந்து அணிசேர்க்கும்.

சொந்த,பந்தங்களின் விசாரிப்புகளும் பெரிசுகள், சிறுசுகளுக்கு பெருநாள் காசு பரிவர்த்தனைகளும் மும்பை பங்கு சந்தையைவிட படு ஜோராக நடக்கும். இங்கு சென்செக்ஸ், காளை, கரடிகளெல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடும்.

பெருநாள் பகல் லுஹர் தொழுகைக்குப்பின் வயிறாற உண்ட பின் தூக்க கிரக்கத்துடன் மனசு ஏதோ ஒன்றை இழந்தது போல் பரிதவிக்கும். நம்மூர், மல்லிப்பட்டின மனோரா, பூனைக்கொல்லைகளெல்லாம் அதை ஆசுவாசபடுத்த முயற்சி செய்யும்.  

பெருநாள் முடிந்து மூன்றாவது நாள் அஸருக்குப்பின் எல்லாப்பள்ளிகளிலும் தக்பீர் சொல்லி நிறுத்தப்படும். இனி அடுத்த வருடம் வர இருக்கும் நோன்புப்பெருநாளுக்காக உள்ளம் ஏக்கப்பெருமூச்சு விட்டு அடுத்தடுத்து செய்ய வேண்டிய காரியங்களில் கவனம் செல்லும். வெளியூரிலிருந்து பெருநாள் கொண்டாட்டத்திற்காக ஊர் வந்த தாயபுல்லையலுவோ தன் இருப்பிடம் நோக்கி கூட்டம், குடும்பமாய் நகர ஆரம்பிப்பர். இப்படியே அல்லாஹ் நாட்டத்தில் நானும் இதுவரை நாற்பது முறை சூரியனை சுற்றி வந்து விட்டேன். நீங்கள் எத்தனை முறை சூரியனை சுற்றி வந்திருக்கிறீர்கள் இதுவரை?

அந்த ஒரு நாள், இபுறாஹீம் நபி (அலைஹி) அவர்கள் இறைவனிடம் தவங்கடந்து ஈன்றெடுத்த தன் அருமை மகனார் இஸ்மாயீலை (அலைஹி) அறுத்து இறைவனுக்காக பலியிட தான் கண்ட கனவை நனவாக்க அவர்களை அரபு நாட்டின் அந்த பரந்த பாலைவன வனாந்தரத்திற்கு அழைத்துச்சென்றார்களே அந்த நிகழ்வுகள் நம்மூர் வட்டார மொழியில் எப்படி இருந்திருக்கும் என கொஞ்சம் மனக்கண்ணில் இங்கு ஓட விட்டுப்பார்த்தேன்....(இதில் ஏதேனும் தவறுகள்,பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக....)

இபுறாஹீம் (அலைஹி) அவர்களிடம் அருமை மகனார் இஸ்மாயில் (அலைஹி) அவர்கள் "வாப்பா, என்னை எங்கே? இப்படி ஒத்தியா கூட்டிக்கிட்டு போறீங்க?"

அதற்கு தகப்பனார் "அதுவா தம்பீ, நேத்து ராத்திரி இந்த மாதிரி உன்னை அறுத்து அல்லாஹ்வுக்காக பலி கொடுக்க கனவு கண்டேன். அதை நிறைவேத்தனும் அதுக்காக தான் உன்னை கூட்டிக்கிட்டு போறேன் வா என்னோடு என்றார்கள்.

மகனார்: " அப்புடியா? அப்பொ அது நிச்சயம் படைத்த ரப்புவிடமிருந்து உங்களுக்கு கட்டளையாக தான் வந்திரிக்கும். தாராளமாக அதை நிறைவேத்துங்க வாப்பா, எதுக்கும் தயங்காதீங்க நான் அதுக்கு முழுசா  ஒத்துழைக்கிறேன்" என்றார்கள்.

சரி வா போவலாம் தம்பீ....கரடுமுரடாண பாறைகள் நிறைந்த அந்த வனாந்தர இடத்திற்கு வாப்பாவும், மகனும் வந்து சேர்ந்தார்கள்.

தம்பீ, கீழே படுக்கிறியா?. அவர்கள் சொல்படி மகனும் படுத்து விட்டார்கள். மகனார் அருமை வாப்பாவை பார்த்து "வாப்பா, உங்க வேட்டியெ நல்லா மேலே தூக்கி கட்டிக்கிடுங்க, இல்லாட்டி நீங்க என்னை அறுக்கும் பொழுது என் ரத்தம் உங்க வேட்டியில பட்டு விட்டால் அப்புறம் அதை பார்த்து,பார்த்து நீங்கள் என்னை நெனச்சி  மனசுக்கு ரொம்ப வருத்தப்படுவீங்க வாப்பா. அதனால தான் சொல்றேன்.

பிறகு வாப்பா தன் இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து மகனுடைய கழுத்தில் அல்லாஹ்வின் திருநாமம் கொண்டு அறுக்க முற்பட்டார்கள். ஆனால் வாப்பாவிற்கு கனவு மூலம் அறுக்க கட்டளையிட்ட அல்லாஹ் அதேநேரம் கத்திக்கு அறுக்கக்கூடாது என கட்டளையிட்டிருந்தது வாப்பாவுக்கு அந்நேரம் விளங்கவில்லை. பிறகு எப்படி அது கழுத்தை அறுக்கும்? கோபம் கொண்ட வாப்பா, ஓங்கி பாறையில் கத்தியை அடிக்கிறார்கள். பிறகு, எல்லாவற்றையும் மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அகிலத்தை படைத்த ரப்புல் ஆலமீன். ஓ, இபுறாஹீம் (அலைஹி...) உம்முடைய தியாகத்தை நாம் ஏற்றுக்கொண்டோம். உம்மை கஷ்டப்படுத்தி வறுத்துவது எம் நோக்கமல்ல. உம்மை சோதிக்கவே இந்த பரீட்ச்சையை நடாத்தினோம் என்று அவன் கூறி அதற்கு பிரதிபலனாக மெய்சிலிர்த்து ரத்தம் உறைய வைக்கும் இந்த நிகழ்வை நினைவுடன் யுக முடிவு காலம் வரும்வரை வரும் மக்கள் நினைத்து பின்பற்ற வேண்டும் என்பதற்காக வானிலிருந்து ஒரு ஆட்டை மண்ணிற்கு இறக்கி இதை அறுத்து பலியிடுவீராக! என இபுறாஹீம் அலைஹி...அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். நாமும் அதையே இன்றும் பின்பற்றி வருகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

தாயபுல்லையல்வோ எல்லோருக்கும் என் இனிய தியாகத்திருநாள் ஹஜ்ஜுப்பெருநாள் நல்வாழ்த்துக்கள் அது வருவதற்கு முன்பே.

கடந்த காலங்களில் எழுதி இங்கு வெளியிடப்பட்ட கட்டுரைகளை அவ்வப்பொழுது மீள்பதிவு செய்து வெளியிடும் அதிரை நிருபர் குழுமத்திற்கும், அதற்கு கருத்தெழுதும் சான்றோர்களுக்கும் நன்றிகளும், து'ஆவும் சென்றடையட்டுமாக.

மு.செ.மு. நெய்னா முஹம்மது

பயம்... பயம்... பயம்...! 23

அதிரைநிருபர் பதிப்பகம் | August 30, 2016 | , , , ,

நான் சிறு பிள்ளையாக இருக்கும் சமயம் என் வீட்டில் மட்டுமல்ல என்னைபோன்று சிறுவர்கள் இருக்கும் வீட்டிலெல்லாம் அவர்களுக்கு தாய்மார்கள் சோறூட்ட அன்புடன் அம்புலிமாவை (நிலாவை) காட்டி ஊட்டுவார்கள். அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு சற்று பயம் காட்டும் விதமாக மாக்காண்டி, பூச்சாண்டி,பேயி, சாக்குமஸ்தான், பிள்ளை பிடிப்பவன் என்று ஏதேதோ சொல்லி அச்சத்துடன் உணவை ஊட்டி விடுவார்கள். உணவுடன் பயத்தையும் உண்டு வளர்ந்தோம்.

அதனால் ஒரு அச்ச உணர்வுடனேயே சிறுவயதில் வளர்க்கப்பட்டோம் இருளைக்கண்டால் பயம், தனிமையில் செல்ல பயம், சமீபத்தில் மரணமடைந்தவர்கள் வீட்டருகே செல்ல பயம், உச்சி பொழுதில் பயம், சூரியன் மறைந்தால் பயம் உதயம் இப்படி பயம் அன்றாடம் நம் வாழ்வில் கலந்து விட்ட ஒன்றாகவே நாம் வளர்க்கப்பட்டோம்.

அந்த பக்கம் செல்லாதே, இந்தப்பக்கம் செல்லாதே, அந்த மரத்தடியில் உண்டு, இந்த குளக்கரையில் உண்டு, அது ஒரு பேய் வீடு என்று யாரும் அறியா, ஊர்ஜிதம் செய்யப்படாத மர்மக்கதைகள் பல சொல்லி நாம் சிறுவயதில் அச்சத்துடன் வளர்த்தெடுக்கப்பட்டோம்.

மீன் சாப்பிட்டு விட்டு கை, வாயை நன்கு கழுவி நறுமணம் பூசாமல் வெளியில் செல்வதனாலும் மற்றும் இரவில் மல்லிகைப்பூ நறுமண சென்ட் பூசி தனியே செல்வதனாலும் பேய் எளிதில் நம்மை பிடித்து விடும் என்று பயமுறுத்துவார்கள். அதனால் மீன் சாப்பிட்டு பின் வெளியில் கிழம்பும் சமயம் பாண்ட்ஸ் பவுடரை நன்றாக பூசி சென்றோம். என்ன செய்வது? யார்ட்லி பவுடர் எல்லாம் அப்பொழுது புழக்கத்தில் இல்லை.

ஆனால் இது வரை யாரும் பேய், பிசாசுகளை நேரில் கண்டிருக்கிறார்களா? என்றால் தெளிவான பதில் இதுவரை இல்லை. ஆனால் அது பற்றிய கதைகளும், மர்மங்களும், அச்சங்களும் மர்மப்புதையல் போல் இன்றும் பொதிந்து கிடக்கிறது நம்மிடையே கேரளாவைப்போல்.

சிலர் அதன் சப்தத்தை கேட்டிருக்கிறேன் அல்லது தூரத்தில் நெருப்பெறிய கண்டிருக்கிறேன் அல்லது ஒரு ஒளியைப்போல் கண்டிருக்கிறேன், நிழலைப்போல் கண்டிருக்கிறேன் என்று எதேதோ அச்சத்திற்கு தகுந்த வடிவம் கொடுத்து நம்மிடம் சொல்லி எல்லோரையும் உரைய வைத்து விடுவார்கள்.

இரவு ஒன்பது மணிக்கெல்லாம் ஊர் ஓசையின்றி அடங்கிப்போகும் நம்மூர் போன்ற சிற்றூர்களில், கிராமப்புறங்களில் வாழும் மக்களிடம் தான் இது போன்ற இனம்புரியாத அச்சம் நிலவி வருவது இயற்கை. ஒரு சில தைரியமான ஆண்களும், பெண்களும் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருக்கத்தான் செய்கிறார்கள். போக்குவரத்து இரவு பகலாய் ஓடிக்கொண்டிருக்கு மின்விளக்கு வெளிச்சம் அதிகம் உள்ள நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு இது போன்ற அச்ச உணர்வு இயற்கையில் இருப்பதில்லை. இரவு ஒரு மணிக்கு கூட தனியே வெளியில் சென்று வந்து விடுவார்கள்.

ரமளான் மாதத்தில் அல்லாஹ்வே குர்'ஆனில் அட்டூழியம் புரியும் சைத்தான்கள் கட்டப்பட்டுவிடும் என்று குறிப்பிட்டு சொல்வதால் நம் மக்கள் ரமளானில் மட்டும் ஆண்களும், பெண்களும் இரவு நேரங்களில் பயமின்றி வெளியில் சென்று வர அச்சப்படுவதில்லை. சிறுவயதில் ரமளான் அல்லாத காலங்களில் இஷா தொழுகை முடிந்து நண்பர்களுடன் தெரு முனையில் சிறிது உரையாடி விட்டு சந்தில் (முடுக்கு) உள்ள வீட்டிற்கு திரும்பி வர யாராவது பெரியவர்கள் சந்தில் செல்கிறார்களா என்று காத்துக்கிடந்து அல்லது தெரிந்த ஆயத்தை பயத்துடன் ஓதி வேகமாக வீடு திரும்பிய‌ அனுபவமும் உண்டு. அடுத்த சந்தில் வீடு உள்ள ஒரு நண்பன் தனிமையில் இரவில் வீடு செல்லும் பொழுது நாகூர் ஈ.எம். ஹனீஃபா பாடல்களை (இறைவனிடம் கையேந்துங்கள்....) சப்தமாக பாடிக்கொண்டு வேகமாக ஓடி செல்வான் என நண்பன் ஒருவன் சொல்ல அறிந்தேன். இப்பொழுது நினைத்தால் சிரிப்பு தான் வரும் அந்த நேரத்தில் வரவழைக்கப்படும் தைரியம் அலாதியானது தான்.என் சொந்தக்கார‌ வீட்டின் முன் நன்கு குலை,குலையாக காய்த்து நிழல் தந்து கொண்டிருந்த மாமரத்தில் பேய் இருப்பதாக பல பேர் சொல்லி அதை அவ்வீட்டினர் வெட்டிவிட்டனர். பிறகென்ன மாங்காய் ஊறுகாயாக இருந்தாலும், மாம்பழமாக இருந்தாலும் காசு கொடுத்து தான் இனி அவர்கள் வெளியில் வாங்க வேண்டும்.

என்ன தான் தைரியமாக பகலில் பேய்,பிசாசு சமாச்சாரத்தில் வியாக்கியானம் படித்தாலும் எவரேனும் இரவில் நான் மைத்தாங்கரையில் (மையவாடி) தனியே பாய் போட்டு படுத்து வருவேன். இரவில் குளக்கரையில் தனிமையில் படுத்துறங்குவேன் என்று வீராப்பு பேசி சவால் விட்டு அதில் வெற்றி கண்டவர்கள் யாரேனும் என் வாழ்நாளில் நான் கண்டதில்லை. நீங்கள் கண்ட யாரேனும் உண்டா?

நடு இரவில் நாய் ஊளையிட்டாலே பேய் வருவதற்கு அறிகுறி என்பார்கள். (பேய் வருவதற்கு முன்னரே நாயிக்கு எஸ்.எம்.எஸ். எப்படி கொடுக்கின்றது என்று தெரியவில்லை).

ஊரில் சில பெரியவர்கள் நம் கண்ணுக்கு புழப்படாத குர்'ஆனில் சொல்லப்பட்டுள்ள ஜின்களை தன் வசப்படுத்தி அதை தனக்கு பணிவிடைகள் செய்ய பணித்திருந்தார்கள் என சிலர் கூறக்கேட்டிருக்கிறேன். அதில் நல்ல ஜின்களும் உண்டு, பிறருக்கு கேடு விளைவிக்கும் கெட்ட ஜின்களும் உண்டு என்று சொல்வார்கள். இதில் உள்ள மர்மங்களையும், மாச்சரியங்களையும் இதையெல்லாம் படைத்து அதன் கட்டுப்பாட்டை தன் வசம் வைத்துள்ள வல்ல ரஹ்மானே நன்கறியக்கூடியவன்.

முப்பத்தாறு வருட உலக அனுபவத்தில் பல அச்சங்களையும், அதனால் வரும் பயங்களையும் சொல்லக்கேட்டிருக்கிறேன் அதனால் அஞ்சியும் இருக்கிறேன். ஆனால் அதன் உண்மைக்கருவை இதுவரை எங்கும் நான் கண்டதில்லை. அதைக்காண முயற்சி எடுக்க விரும்பவும் இல்லை அதற்கு போதிய தைரியமும் மனவசம் இல்லை.

இரவில் ஆவுசம் (பேயின் ஒரு வகை) கத்தியதை கேட்டிருக்கிறேன் என்று என் நண்பன் ஒருவன் சொல்லவும் கேட்டிருக்கிறேன். இந்த மர்ம முடிச்சுகளுக்கெல்லாம் தெளிவான தீர்வு நிச்சயம் இறைவேதத்தில் இல்லாமல் இல்லை என்பதை நாம் அறிவோம்.

கல்லூரி படிக்கும் சமயம் ஒரு நாள் சுபுஹ் பாங்கு சொல்லியதும் எழுந்து தொழுவதற்காக தனியே மரைக்காப்பள்ளி சென்று கொண்டிருந்தேன். செல்லும் வழியில் சில வீடுகளில் பெண்கள் அதிகாலையில் எழுந்து வீட்டின் முன் சுத்தம் செய்து பெருக்கி தெரு குழாயில் வரும் தண்ணீரையும் பிடித்துக்கொண்டிருப்பர். அவ்வாறு சற்று தூரத்தில் அவர்கள் இருக்கும் சமயம் நான் தனியே நடந்து சென்று கொண்டிருந்தேன். திடீரென என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. கால்கள் ஒன்றோடொன்று பிண்ணிப்பிணைந்து கயிறால் கட்டியது போல் என்னால் நகர முடியாமல் போனதை உணர்ந்தேன். தூரத்தில் உள்ள பெண்கள் என்னை பார்த்து எதுவும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக அப்படியே கைலியை கட்டுவது போல் அங்கேயே நின்று விட்டேன். சிறிது நேரத்திற்கு பின் என் நடையை தொடர்ந்தேன் பள்ளியை நோக்கி. அந்த நேரம் எனக்கு உடல் நலக்குறைவு எதுவும் இல்லை. நன்றாகத்தான் உறங்கினேன் பிறகு விழித்தெழுந்தேன். எனக்கறியாமல் வந்த உடல்நலக்குறைவா? இல்லை தீய (சைத்தான்) சக்தி ஏதும் என்னை குறிக்கிட்டதா? என்பதை இன்றும் என்னால் ஊர்ஜிதம் செய்ய இயலவில்லை. அல்லாஹ்வுக்கே எல்லாம் வெளிச்சம்.

என் நண்பன் ஒருவன் ஒருநாள் சுபுஹ் தொழுகைக்காக பாங்கொலி கேட்காமல் எப்பொழுதும் போல் எழுந்து செக்கடிப்பள்ளி சென்றிருக்கிறான். அவன் செல்லும் பொழுது வழியில் யாரும் இல்லை. பள்ளியும் வந்து விட்டது. ஆனால் பள்ளியின் வாயில்கள் பூட்டப்பட்டிருக்கின்றன. காரணம் ஒன்றும் அறியாதவனாய் கேட்பதற்கு யாரும் அங்கில்லாமல் வீடு திரும்பி விட்டான். கடைசியில் வீட்டில் கடிகாரத்தை எதார்த்தமாக பார்த்திருக்கிறான் மணி இரவு ஒன்று தான் ஆன‌து. அச்சத்தில் அப்படியே உறங்கி இருப்பான்.

இன்னொருவர் இரவில் வெளியூர் சென்று தனியே வீடு திரும்பும் பொழுது யாரோ அவர் பெயரை எங்கிருந்தோ கூப்பிட்டது போல் இருந்ததாக‌ ஒரு பிரம்மை அவருக்கு. உடனே அதிர்ச்சியில் மூன்று நாட்கள் கடும் காய்ச்சலில் அவதிப்பட்டதாக கேள்விப்பட்டேன்.

நான் கல்லூரி படிப்பு முடித்ததும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் திருப்பூரில் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்தேன். விடுமுறையில் ஊர் வரும் பொழுது பஸ்ஸில் இரவில் திருப்பூரிலிருந்து புறப்பட்டு தஞ்சாவூருக்கு அதிகாலை ஒன்றரை மணிக்கு வந்திறங்குவேன். பிறகு தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை, பிறகு பட்டுக்கோடையிலிருந்து அதிரைக்கு சுமார் அதிகாலை மூன்றரை மணிக்கு வந்திறங்குவேன். சேர்மன் வாடி வந்திறங்கியதும் சந்தோசத்துடன் பயமும் என்னை பற்றிக்கொள்ளும். எப்படி தனியே வீடு செல்வது? செக்கடி மோடு வழியே செல்வதாக இருந்தால் குளக்கரையில் ஒருவர் சமீபத்தில் அகால மரணமடைந்துள்ளார். சரி வேறு வழியை தேர்ந்தெடுத்து வாய்க்கால் தெரு பக்கம் செல்லலாம் என்றால் அங்கு ஒரு பெண்ணும் சமீபத்தில் அகால மரணமடைந்துள்ளார். பிறகு எப்படி வீடு செல்வது? சுபுஹ் பாங்கு சொல்லும் வரை சேர்மன் வாடியில் உள்ள ஹாஜியார் கடையில் உட்கார்ந்து இருந்து விட்டு பிறகு பாங்கு சொன்னதும் வீட்டு பெரியவர்கள் வீட்டை திறந்து பள்ளிக்கு செல்ல வெளியில் வரும் சமயம் அவர்களுடன் மெல்ல,மெல்ல எப்படியோ சிரமப்பட்டு வீடு வந்து சேர்வேன். திக், திக் என்று தான் இருக்கும். அந்த நேரம் இடையில் ஒரு பூனை குறிக்கிட்டாலும் எமக்கு ஒரு டைனோசரே குறிக்கிட்டு சென்றது போல் பகீரென்றிருக்கும். இதெல்லாம் என் வாழ்வில் மறக்க இயலா பயம் கலந்த மலரும் நினைவுகள்.

ஒரு முறை மரைக்காப்பள்ளியில் இயங்கி வரும் மத்ரஸத்துந்நூர் ஹிஃப்ள் மத்ரஸாவில் அக்கம் பக்கத்து ஊரில் உள்ள சில மாணவர்கள் ஓதிக்கொண்டிருந்தனர். மத்ரஸாவிற்கு பக்கத்திலேயே அவர்கள் தங்க அறைகளும் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒரு கோடை காலத்தின் இரவில் பழைய‌ மரைக்காப்பள்ளியின் வராண்டாவில் படுக்க மாணவர்கள் சென்றிருக்கிறார்கள். அதில் ஒரு மாணவன் பள்ளியின் உள் கதவின் குறுக்கே படுத்துறங்கி இருக்கிறான். ஒரு மூலையில் நம் ஊரைச்சார்ந்த ஒரு நபரும் படுத்துறங்கி இருக்கிறார். நடு இரவில் பள்ளியின் கதவறுகே படுத்துறங்கிய அந்த மாணவன் அவனறியாது "ஓ வென ஓலமிட்டவனாக" தண்ணீர் ததும்பிக்கொண்டிருக்கும் அருகில் உள்ள ஹவுதில் விழுந்து அதனுள் இருக்கும் பாசிக்குள் புதைந்து விட்டான். உடனே திடுக்கிட்டு எழுந்த அந்த நபர் ஓடிச்சென்று அல்லாஹ் அக்பர் என்று சொல்லி ஹவுதுக்குள் புதைந்திருப்பவனை தைரியத்தை வரவழைத்து உள்ளே இறங்கி வெளியே கொண்டு வந்திருக்கிறார். மறுநாள் காலையில் நானே அந்த மாணவனிடம் நடந்த சம்பவத்தை பற்றி கேட்டேன். அவன் என்ன நடந்தென்று அவனுக்கே தெரியாமல் போனதை அச்சத்துடன் சொன்னான். அல்லாஹ் பாதுகாத்தான் அந்த நேரம் யாரும் அவனை கவனிக்கவில்லை எனில் அவன் இறந்திருக்கக்கூடும். அந்த நாள் முதல் பள்ளியின் குறுக்கே படுத்துறங்குவதால் வரும் விபரீதங்களை அறிந்து கொண்டேன்.

இப்பதிவு யாரையும் அச்சமூட்டி தேவையற்ற பயத்தை ஊட்டுவதற்காக அல்ல. கண்டதற்கெல்லாம் பயந்து, பயந்து வாழ்வில் நல்ல பல வாய்ப்புகளையும், உரிமைகளையும், உடமைகளையும் மற்றும் பெற வேண்டியவைகளை அநியாயமாக நாம் இழந்திருக்கிறோம் என்று சொல்ல வந்தேன். இருளால் நமக்கு வரும் இரவு பயங்களால் சில சமூக விரோதிகளும், திருடர்களும், தவறான தொடர்புள்ளவர்களும் தங்கள் தீய செயல்களை அரங்கேற்றிக்கொள்ள வாய்ப்பாக‌ பயன்படுத்திக்கொள்ள‌ நாம் அனும‌திக்க‌ கூடாது.

இதுவ‌ரை வாழ்நாளில் பேய்பிடித்த‌ ம‌னித‌ர்க‌ளை பார்த்திருக்கிறேன். ஆனால் அவ‌ர்க‌ளை பிடித்த‌ பேயை ஒரு த‌ட‌வை கூட‌ பார்த்த‌தில்லை. அத‌னால் பிடிக்காத‌ பேயை நீங்க‌ள் பார்த்திருக்கிறீர்க‌ளா? என்று யாரும் கேட்டுவிடாதீர்க‌ள்.

இன்றைய சிறுவர்களுக்கு பயம் காட்ட பூச்சாண்டி போல் வேசமிட்டு திடீர் அச்சமூட்ட முயன்றாலும் "என்னா இது ஜெட்டிக்ஸ்லெ வர்ர மாதிரி இருக்கு, ஹாரி பாட்டர்லெ வர்ர மாதிரி இருக்கு" என்று அலட்சியமாக சொல்லி விடுவார்கள் பயமின்றி. வாழ்வில் என்ன தான் தைரியமான ஆளாக இருந்தாலும், சரியான பயந்தாங்கொல்லியாக இருந்தாலும் ஒரு நாள் எல்லாவற்றையும் தனியே தவிக்க விட்டு விட்டு இவ்வுலகை விட்டு இருண்ட கபுர் குழிக்குள் செல்லத்தான் போகிறோம். இறைவ‌ன‌ன்றி வேறு எவ‌ர் எம்மை பாதுகாத்திட‌ இய‌லும்?

நிச்சயம் இது போன்ற சம்பவங்கள் உங்கள் வாழ்நாட்களில் குறிக்கிட்டிருக்கலாம். இங்கு எழுதுங்கள் நாமும் தெரிந்து கொள்வோம்.

மலரும் நினைவுகள் ப‌ல‌ வித‌ம் ஒவ்வொன்றும் ஒரு வித‌ம்.

மு.செ.மு.நெய்னா முஹம்மது
இது MSM கைவண்ணத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு மீள்பதிவு !

அன்றைய நோன்பும், இன்றைய வீம்பும்... 34

அதிரைநிருபர் பதிப்பகம் | June 30, 2016 | , , , ,


ஒரு காலத்தில் புனித ரமளான் மாதத்தில் நோன்பு திறப்பதற்காக நோன்பு கஞ்சி காய்ச்ச தேவையான மளிகைக்கடை சாமான்கள் மற்றும் காய்கறி, இறைச்சி, அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் மிகவும் குறைவாகவே இருந்து வந்த போதிலும் (அப்பொழுது மாத சம்பளமும் குறைவாகவே இருந்து வந்தது. ஊரில் 1000 ரூபாயும், சவுதியில் 300 ரியால்கள் அல்லது 400 ரியால்கள் தான் மாத சம்பளம். இன்றைக்கு மாத டெலிபோன் செலவே இதையும் தாண்டி விடுகிறது சிலருக்கு) நமதூரில் எல்லோர் வீட்டிலும் ஒவ்வொரு நாளும் நோன்பு கஞ்சி காய்ச்ச போதிய பொருளாதார வசதி வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. அதனால் முஹல்லாப்பள்ளிகளில் ஒவ்வொரு நாளும் வசதிபடைத்தோரின் பங்களிப்பில் காய்ச்சப்படும் கஞ்சிகளையே ஒவ்வொரு வீட்டின் சிறுவர்களும் அதற்குரிய பாத்திரங்களை கையில் எடுத்துக்கொண்டு அஸர் தொழுகைக்குப்பின் பள்ளியில் வரிசையில் ஊற்றப்படும் கஞ்சிகளை வாங்கி வந்து அதன் மூலம் வீட்டினர் நோன்பை திறந்து கொண்டனர். குளக்கரையில் கொண்டு வந்த பாத்திரங்களை வைத்துக்கொண்டு சிறுவர்கள் போடும் சப்தம் எதோ அங்கு பெரும் கச்சேரியே நடப்பது போல் இருக்கும். பிறகு பெரியவர்களின் அடிகளும் விழும். கடைசியில் கஞ்சியுடன் கலந்த குளத்தின் மண்ணும் வீடு வந்து சேரும்.

நோன்பு திறக்க வீட்டில் சர்பத் கலக்க வேண்டுமென்றாலும் ஐஸ் பெட்டி வசதிகள் எல்லோர் வீட்டிலும் இல்லாமல் இருந்தது. தெருவில் ஏதேனும் கொஞ்சம் வசதி படைத்தவர்களின் வீடுகளில் மட்டும் குளிர்சாதனப்பெட்டி வைத்து தனக்கு வேண்டியவர்களுக்கு தங்கள் தேவை போக ஐஸ் கொடுத்துதவினர்.

ஊரில் நோன்பு கால மாலை நேரக்கடைகள் ஆங்காங்கே திறக்கப்படும். வாடா, சம்சா வியாபாரம் கொடி கட்டிப்பறக்கும் (அது என்னா கலர் கொடி என்று கேட்டு விடாதீர்கள்). நம் சொந்த பந்தங்கள் கூட கொஞ்சம் லாபம் சம்பாதிப்பதற்காக இரவு நேரங்களில் ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா, கடல்பாசி, கல்கண்டு பால், வாழைப்பழம் போன்றவற்றை தெருவில் தற்காலிக கடையமைத்து விற்று வந்தனர். இரவு நேர சேட்டைகள் அரங்கேறும். அது கேரம் போர்ட் விளையாட்டு மூலம் ஆரம்பமாகும். 

நோன்பு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே நமதூர் பள்ளிகளும், வீடுகளும் ஒட்டடை அடித்து, கழுவி சுத்தம் செய்யப்படும். சில பள்ளிகளில் சாந்தடித்து வர்ணம் பூசப்படும். (வீட்டுப்பெண்கள் அதற்கென ஒரு பிரத்யேக மாதங்கள் வைத்துள்ளனர். விராத்து, இடையத்து.......)

வீட்டினர் தன் சொந்த பந்தங்களின் உறவுகளை பலப்படுத்தவும், சம்மந்தி வீடுகளை மகிழ்விக்கவும் வாடா, சம்சா, முட்டை ரொட்டி, கடல்பாசி போன்றவற்றுடன் சில சிறப்புச்சாமான்கள் சேர்க்கப்பட்ட (ஆட்டுக்கறி, ஆட்டுத்தலை, நெஞ்செலும்பு) சுவை கூடிய நோன்பு கஞ்சி வீட்டில் சிரத்தை எடுத்து செலவுகள் பார்க்காது பெண்கள் காய்ச்சி அதை முறையே பங்கிட்டு ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்ந்தனர். விவாகரத்து, மவுத்துக்கும் ஹயாத்துக்கும் ஒன்னும் கிடையாது போன்ற பெரும் பிரச்சினைகள் குடும்பத்தில் தலைதூக்காது பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து உறவு முறை பேணி நல்லபடி பராமரித்து வந்தனர். எடுத்தேனா, கவிழ்த்தேனா என்பதெல்லாம் பெரும்பாலும் இல்லாமல் இருந்த நேரம் அது. 

தொன்று தொட்ட சில மூட நம்பிக்கைகள் தொற்றி இருந்த போதிலும் மார்க்க விசயங்களில் பரவலாக எல்லோரும் பெருங்குற்றங்கள் செய்யாது பேணுதலாகவே இருந்து வந்தனர். சுற்றுவட்டார மாற்றுமதத்தினர்களால் பெரிதும் மதிக்கப்பட்டனர். 

பாரதீய ஜனதா கட்சி மத்தியில் ஆளும் பொழுது கூட பாராளுமன்றத்தில் இயற்றப்படாத ஒரு சட்டத்தை பட்டுக்கோட்டையிலிருந்து ஒரு கட்சி இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருந்து மாற்றுமதத்தினர்களுடன் அமைதியாக வாழ்ந்து வரும் அதிரையில் மாடு இறைச்சிக்காக அறுக்கப்படக்கூடாது என ஒரு புது சட்டம் இயற்ற நினைப்பது சங்கடப்படுத்துவதற்காகவேயன்றி யாரையும் சகோதரத்துவத்துடன் வாழ வழிவகை செய்வதற்காக அல்ல.

ஓட்டு வீட்டில் இருந்து வந்தாலும் குடும்ப கண்ணியங்களும், மார்க்க வரைமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டன. எதுவும் எளிதில் எல்லை மீறி கண்டம் தாண்டி சென்று விடுவதில்லை. 

சிறுவர்கள் பெரியவர்களை மதித்து மரியாதை செலுத்தினர். பள்ளிக்கூட படிப்பிற்குப்பின் தெருதோறும் திருக்குர்'ஆன் பயிலும் பள்ளிகளுக்கு/வீடுகளுக்கு காலை, மாலை சென்று வந்தனர். 

உண்மையில் வருத்தப்பட்டு வேதனை பட வேண்டிய விசயமான வீட்டு ஆண்களின் வருடங்கள் பல ஆகும் வெளிநாட்டு பயண பெரும் பிரிவை அறியாது ஐந்து ரூபாய், பத்து ரூபாய் பயணக்காசிற்கு ஆசைப்பட்டு குதிரை வண்டியில் குதூகலமாய் ரயிலடி சென்று தன் பிரியமானவர்களை கையசைத்து கம்பனில் ஏற்றி தனிமையாய் வீடு திரும்புவர். கை பேசிகளும், இன்டர்நெட் தொடர்புகளும் இல்லாத அக்காலம் தராத வேதனைகளை எல்லா வசதி வாய்ப்புகள் இருக்கும் இக்காலம் ஏதேனும் வழியில் நமக்கு தந்து விடுகிறது. 

ஊரில் எப்பொழுதாவது யாரும் எதிர்பாராமல் எங்கேனும் சில விசமிகளால் சிறு சலசலப்பு/கலவரம் ஏற்பட்டால் அது உடனே சம்மந்தப்பட்டவர்களால் அமைதிக்குழு (பீஸ் கமிட்டி) ஏற்படுத்தப்பட்டு பரஸ்பரம் பேசி சுமூகமாக தீர்க்கப்பட்டு விடும். ஆனால் இன்றோ சின்னஞ்சிறு விசயங்களை கூட ஊதிப்பெரிதாக்கி உலகிற்கே ஊடகத்தின் மூலம் விருந்து வைக்க துடிக்கிறது சில துரு பிடித்த இதயங்கள். 

ஐங்கால தொழுகைக்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஒலிக்கப்படும் பாங்கின் ஒலியோ அல்லது மார்கழி மாதம் ஊரின் எல்லைக்கோவிலில் ஒலிக்கப்படும் அவர்களின் பக்திப்பாடல்களோ யாருக்கும் இடைஞ்சல் தருவதாக இருந்ததில்லை. அவரவர் மார்க்கம் அவரவருக்கு என வரம்புக்குள் இருந்து வந்தனர். இன்று உள்ளங்கள் குறிகிவிட்டதால் ஊரில் எங்கேனும் சைக்கிள் டயர் வெடித்து விட்டால் கூட ஏதேனும் வெடிகுண்டாக இருக்குமோ என பதறிப்போகும் சூழ்நிலை உள்ளது. 

இன்று போட்டி போடும் கணக்கிலடங்கா மொபைல் போன் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போல் சமுதாயத்தில் பல இயக்கங்களும் ஊரில் ஆங்காங்கே உருவாகி ஒருவருக்கொருவர் பல தயக்கங்களையும், தள்ளுமுள்ளுகளையும் ஏற்படுத்தி விட்டன. 

ஊரில் நோன்பு வெயில் காலத்தில் வந்தாலும் குளங்கள் கொஞ்சம் நீரை தன் மடியில் ஏந்தியே நின்றன. ஆனால் இன்றோ மழைக்காலங்களில் கூட கடும் தாகம் கொண்ட ஒரு வழிப்போக்கனைப்போல் ஊர்க்குளங்கள் மழை நீரை தானே குடித்து தீர்த்து விடுகின்றன ஆழ்துளை குழாய் கிணறுகளின் அத்துமீறல்களால். 

என்றோ வர இருக்கும் சமுதாயத்திற்காக பிளாஸ்டிக் பொருட்களின் தீங்கறிந்து அவர்களுக்காக இன்றே தடை விதித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு விட்டன. ஆனால் இன்றிருக்கும் மக்களின் ஒற்றுமைக்கும், அமைதியான வாழ்விற்கும் இன்னும் விழிப்புணர்வுகள் அந்தளவுக்கு ஏற்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. 

அன்றோ அழுக்கு சட்டைப்பைக்குள் ஐந்து ரூபாய் இருந்தாலே போதும். இன்றோ அழகிய வெள்ளைச்சட்டையில் ஆயிரம் ரூபாய் நோட்டு இருந்தாலும் அந்தளவுக்கு மதிப்பும், மரியாதையும் கிடைப்பதில்லை. எதுக்குமே பத்தமாட்டிக்கிது..... 

அன்று ஒரே ஊசியில் ஓடிப்போன ஓராயிரம் நோய்கள் இன்றோ ஓராயிரம் ரூபாய்க்கு மருந்து வாங்கி வந்து உண்டாலும் போகாமல் மல்லுக்கட்டி உடலுக்குள் பாய் விரித்து மல்லாக்கப்படுத்து கிடக்கிறது. 

சவுரு பக்கிர்சா அடித்து வந்த தப்ஸின் சப்தம், அவருடன் கையில் அரிக்களாம்பு கொண்டு வந்த சிறுவனுடன் அக்கால இன்பமும் சேர்ந்தே சென்று விட்டனவோ? என்னவ்வோ தெரியவில்லை. 

புது வேட்டி எடுத்து அதை தையல்காரர் ஒன்று சேர்த்து கூட்டி தைக்கப்படும் பொழுது அதில் எம் உற்சாகமும் இணைத்து வைத்தே தைக்கப்படும். ஆனால் இன்றோ என்ன தான் பணங்காசுகள் பெருகி இருந்த போதிலும் அன்று கிடைத்த இன்பம் இன்று வர மறுக்கிறது. மறைந்த நம் அப்பாக்களின் கைத்தடிகளை பிடித்துக்கொண்டு அதுவும் அவர்களுடன் கப்ருக்குழிக்குள் சென்று விட்டதோ? என்னவ்வோ? 

ஒரு காலத்தில் நம் ஊர் பள்ளி வாசல் தோறும் பெரியவர்களின் ஆட்சியும், கம்பீர நிர்வாகமும் எம்மை அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும். இன்றோ நாமும் மெல்ல, மெல்ல பெரியவர்களாகி விட்டதால் அந்த அப்பாக்கள் போல் இன்று வயதானவர்களின் ஆளுமையை காணுவது அரிதாகிவிட்டது. சின்னஞ்சிறு வயதிலேயே உலகை விட்டு மறையக்கூடிய சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம்.  

நம் இளமைக்கால நோன்பு நினைவுகளை பல கட்டுரைகளாக ஏற்கனவே எழுதி இருந்த போதிலும் அவற்றில் சிலவற்றை நினைவூட்டலுக்காகவும், கூடுதல் தகவலாகவும் மேற்கண்டவற்றை உங்களின் பார்வைக்கும் மேலான கருத்துரையாடலுக்காகவும் இங்கு சமர்ப்பிக்கின்றேன். 

இன்ஷா அல்லாஹ் இன்னுமிருப்பின் தொடருவோம்...... 

மு.செ.மு. நெய்னா முஹம்மது.