Showing posts with label கிரவ்ன். Show all posts
Showing posts with label கிரவ்ன். Show all posts

முதற் குழந்தை ! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | December 15, 2015 | , , , ,

உயிரும் உயிரும்
ஒருங்கே உருகி
வார்த்த
உயர்  ஓவியம்!

அன்பை அன்பால் பிணைத்து
அழகாய் பிழிந்து  எடுத்த
சுவை ரசம்!

காத்திருப்பும் காதலும்
ஆசையும் கனவும்
ஒன்றாய் கோத்து
தொடுத்த மலர்!

ஏக்கமும் வேண்டுதலும்
ஆர்வமும் உடல் ஆற்றலும்
கைகோத்து கடந்த வாழ்க்கை
தவத்தின் உயர் வரம்!

அவனுக்கென அவளும்
அவளுக்கென அவனும்
அனுசரித்து அனுபவித்த
உணர்வின் ஓட்டம்!

குலம் தழைக்க
கோத்திரம் செழிக்க
துக்கம் துடைக்க
தாத்தா,  பாட்டிக்கு
வயோதிகத்தில் நண்பனாக
அமைந்த
வசந்தத்தின் வருகை!

CROWN

அடியேனின் அகரம் ! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | November 26, 2015 | , , , , , ,


அல்லாஹ் தந்த பொக்கிஷமே -இணை
இல்லா எந்தன் சொந்தமே!

என் தாயின் துணையே!
எந்தையே, என் தந்தையே!

நான்
தீராத அன்பு கொள்ளும் அன்பே!
நான்
என்றும் தங்கள் நாணின் அம்பே!

என்
மூச்சு காற்றின்
மூலக்காற்றே!

என்னை
அல்லாஹ்விடமிருந்து
பெற்றுத்தந்த வரமே!

அலிப் சொல்லித்தந்த
முதல் ஹஜ்ரத்தே!
அகரம் சொல்லித்தந்த
முதல் ஆசானே!

நபிவழி
நடக்கச் சொல்லித்தந்த
நஜாத்தே!
சமூகத்தின் பாதையில்
நடக்க சொன்ன - சுன்னத்துல்
ஜமாத்தே!

நான் வாழ
தேய்ந்த  நிலவே!
நான் இன்பம் கான
என்னில் வந்த கனவே!

உம்
முதுகு வளைத்து
எம் வாழ்வை நிமிர்த்தியே!
உம்
துன்பம் மறைத்து
இன்பம் மட்டும் தந்தீரே!

என் விந்தையே! தந்தையே!

உலகில் எம்முன்னே
மறைந் தாலும்
எனை ஆளும்
உம் அன்பு!பாசம்,தியாகம்!

நான் முன்னே இறந்தாலும் ,
கவலை வேண்டாம்
நீர்
என்னை என்றும்
மனதில் சுமக்கும் தாய்!

வாழ்க நீர் பல்லாண்டு
என் தந்தையே!
என் உயிரின் உந்தே!

அ.ர.முஹமது தஸ்தகீர்(கிரவுன்)

நாடு போகும் போக்கு! - தேடல் - 2 23

அதிரைநிருபர் பதிப்பகம் | March 11, 2014 | , , , , ,

நாடு போகும் போக்கு - சொல்ல
நடுங்கிப் போகும் நாக்கு
நேக்குப் போக்குப் பார்த்து
நிறைவில் சொல்வேன் வாக்கு

அரசியல்வாதிகளைத் தாக்கிய
அரசியல்வியாதி ஆக்கிய
நுண்கிருமியைக் கட்டுப்படுத்த
பெட்டிபெட்டியாய் மருந்தும்
சட்டி சட்டியாய் விருந்தும்
கொட்டிக் கொடுக்கிறது தேசம்

நாட்டுக்காக
விளையாடப் போகிறவர்கள்
நோட்டுக்காக
விலையாகிப் போகிறார்கள்

வணக்க வழிபாடுகளை
நவீனப் படுத்தி
காசு பார்க்கிறார்கள்
காவிச் சாமிகள்,
மேநாட்டு மோகம் ஊட்டி
மதம் வளர்க்கிறார்கள்
பாதிரி சாமிகள்,
மார்க்கம் பற்றி
தர்க்கம் செய்து
இயக்கம் என்னும்
மயக்கும் ஊட்டி
குளிர்காய்கிறார்கள் ஆசாமிகள்!

மின்வெட்டு
மின்னல் வெட்டென தொடர
கண்கெட்டுப் போகிறது
மின்னழுத்த ஏற்றத்தாழ்வால்
சுநாமி தாக்கிய பூமிவாசிகளாய்
சுருண்டு மடிகின்றன
மின் உபகரணங்கள்

பசு மடியைக்கூட
கொசு கடிக்க
பால் வழியாகவும்
பாக்டீரியா பரவுகிறது

ஊசி போட்டு காசு வாங்கும்
மருத்துவர்கள் அருகி
தொலைகாட்சியில்
பேசி விட்டு காசு வாங்கும்
வைத்தியர்கள் மிகைக்கின்றனர்

லஞ்சம் தவிர யாவற்றிற்கும்
பஞ்சம் - பதறுகிறது
நெஞ்சம்

முந்தைய மனிதர்களின்
சிந்தையை மாற்றிய
எந்தன் கோமான்
நபிவழி நடப்பதே
நாடு நிலைக்கவும்
நடுநிலை தழைக்கவும்
நல்லதோர் தீர்வு!

CROWN எழுதியதல்ல
(அடுத்தத் தாக்குதல்...? சஸ்பென்ஸ்!)

மடமை பாடும் ராகம் ! 14

அதிரைநிருபர் பதிப்பகம் | April 09, 2013 | , , , ,

அதிரை தக்வா பள்ளியில் சமீபத்தில் நடந்தேறிய மவ்லூது கச்சேரிக்கான போட்டியல்ல இது, மாறாக அதற்கு நேர் எதிரானது, அதுவும் கிரவ்னுடைய வரிகள் நிரம்ப சுடத்தான் செய்யும் அது நெருப்பென்று தெரிந்தும் அங்கே குளிர் காய்பவர்களுக்கு மட்டுமே.

இது
மடைமை பாடும் ராகம்!
கபுரில்
இருளை நாடும் சோகம்!
மார்க்க அறிவினை
அழித்திடும் கரையான்!
மெய்ஞானமில்லாத்
தேடல்!
------------------------------
சலவாத்துச் சொல்லும் வாயில்
ஷிர்க்கின் வாசனை!
வல்லவன் அல்லாஹ்வின் ஆற்றைலை
சந்தேகிக்கும் கேனை!
சிறப்பான இஸ்லாம் வழியில்
நடவாத ஊனம்!
உயிருக்கு மேலான நபி(ஸல்)க்கு வேண்டாமே
சாத்தான் கானம்!
------------------------------
வெற்று  கத்தலிலே
ஈமான் பூ மலருமா?
கட்டு கதை படித்தால்
கல்லறைப் பரிட்சையில் தேறமுடியுமா?
------------------------------
நடந்தவரை போகட்டும்
தவ்ஹீத் ஒளியில் நன்மைதேடு!
இப்படிதான் செல்வேன் என்றால்
இம்மையிலும் மறுமையிலும் தொடரும் கேடு!
உன் சகோதரன் என்பதால்
உரக்கச்சொல்கிறேன்!
இப்படித்தான் சாவேன் என்றால்
உன் வழி நாசம்!
------------------------------
உயிர் உள்ள போதே
தெளிந்து தேறு!
சந்தனம் என்று எண்ணி
பூசுவது சேறு!
கண்னை மூடிக்கொண்டு
வெளிச்சம் தேடுவதா?
------------------------------
சகோதரா!!
என் கடமை
நன்மையை ஏவி தீமையை தடுப்பது!
கேட்டுத் தெளிந்தால்
சுவர்கம்!
இல்லையேல்
நிரந்தர  நரகம்!

CROWN

உள்ளாட்சி ஊர்வலம் ! 28

அதிரைநிருபர் பதிப்பகம் | October 13, 2011 | , ,


தேர்தல் திருவிழா
தெருவில் பிறர்
காலில் விழாத தலைவரா?

வாக்குறுதி கொடுப்பது
பின்
வாக்கு உறுதி ஆகுமா?

உங்கள் வீட்டுப் பிள்ளை
நாளை
நம்மூருக்கேத் தொல்லை

போடுங்கம்மா ஓட்டு
பின்
என் ஓட்டுவீடு
மாடி வீடாக்கப் பார்த்து

ஏழையின் சிரிப்பினில்
இறைவனைக் காண்போம்
என
சொல்லி ஓட்டு கேட்டார்
இனி
ஏழை எங்கே சிரிக்க
தலைவருக்கு ஓட்டு போட்டால்?

ஜனநாயகக் கேள்வி:
தேர்தல் திருவிழா
முடிந்ததும்
மக்கள் தெருவிலா?

- Crown

கிரவ்னின் கவிதைகள் 31

அதிரைநிருபர் பதிப்பகம் | September 20, 2011 | , ,

தாய்மடி… தங்கமடி!

அம்மா !
என் தாயே!
ஏன் தாயே
எந்த தயை
இல்லாமல் இருந்தாயே!
இப்படி
நோயில் விழுந்தாயே!

உன்
வயிற்றில்
பிறந்தவனல்ல நான் !
ஆயினும்
அவ்வப்போது என்னையும்
ஊட்டி வளர்த்திருக்கிறாய்.
நான் அனாதை என்பதை
மாற்றி வைத்திருக்கிறாய்.

உன்னை நினைத்து
நான் அழவதா?
இறக்கம்
கொண்டு மெளனமாவதா?

இத்தனைக் காலம்
நீ கடந்து வந்ததை
நினைத்துப் பார்க்கிறேன்
இமை இரண்டையும்
நனைத்துப் பார்க்கிறேன்.

நீ
பிறந்த இடம்
வறுமையின் துயர்
வந்த இடமல்ல
மாட மாளிகையும் அல்ல!
அல்லாடும் அன்றாடங்
காட்சியுமல்ல!

நடுத்தர ஆசிரியருக்கு
பிறந்த மகவு நீ!
ஆசிரியனுக்கு பிறந்தாலும்
படிப்பில் பிடிப்பில்லாமல் போனதனால்
பாட்டி அரவனைத்தும்
கல்வியை புறக்கனித்தாய்!

வாலிபப் பருவத்தில்
ஒரு பருந்திடம் உனை ஒப்படைத்தாய்
பருந்து அன்றாடம்
அருந்தும் மதுவுக்கும்
சேர்த்து நீ உழைதாய்!

காலச் சூழ்நிலையில்
மூன்று
முத்தான பிள்ளைகள்
பெற்றெடுத்தாய்.

காலன்
உன் கணவனான
அந்த கயவனை
அள்ளிச் சென்றதும்,
முத்துக்களை வளர்க்கவே
நீ மூச்சு முட்டிப் போனாய்

உன் பனியிடத்தில்
அனாதையாய்
கிடந்த என்னையும்
எடுத்து வளர்த்தாய்.

இன்றோ
நீ நோயில்
ஆஸ்பத்திரியில் படுத்த போது
வீடே பட்டினி!



சொல்லால் அடித்தச் செல்லமே... !

மகளே!
என்னுயிரின் பிரதியே!
உன் தாயின் வயிற்றில்
பத்து மாதம் இருந்தாய்!

நானோ
பதினெட்டு வருடமாய்
உன்னை இதயத்திலும்
என் உயிரிலும் சுமக்கிறேன்

என்னுயிரைக் தந்து
உனை வளர்க்கிறேன் - ஆனால்
நீ சொல்கிறாய் உனக்கு உயிரென
அவனைக் காட்டி!

போகட்டும்!
உன் விருப்பம்
என ஒத்துக் கொண்டாலும்
அவன் இல்லையே அம்மா!
நல் குணத்தினனாய்!

நீ
கேட்ட பொம்மைகள் வாங்கித்தந்தேன்.
நீ
கேட்ட ஆடைகள் வாங்கித் தந்தேன்.
நீ
கேட்ட எல்லாமும் உனக்குத் தந்தேன்.
என்
பிரியத்தையும் உனக்குத் தந்தேன்
நீ கேட்காத சுதந்திரமும் உனக்குத் தந்தேன்

நீ இன்று கேட்பதுவோ
உனக்கு என்றும்
நான் தந்த
ஏதும் தராத காதலை!

அது பொய் காதல்!
மனப்புணர்ச்சி அல்ல
இனக்கவர்ச்சி!
என
புரிந்து கொள்ளாத - உன்
பிடிவாதம்...
பித்துப் பிடித்தவன் போல்
நான் செத்துச் செத்துப்
பிழைக்கிறேன்.

நீ
சிறுவயதில்
உணர்வற்று சடமாய்,
முக்கால் பினமாய் இருந்த போது
உனக்கு தாயாய், தந்தையாய்
என் உயிர் மேல் வைத்து
காத்து,
பின்
நீ நல்குணம் ஆகும் வரை
நான் நடைப்பினமாய்
வாழ்ந்து வந்தேன்.

குடம் குடமாய்
என் கண்ணீர் வடிகிறதே!
உதிரம் கொதிக்கிறதே!
இதயம் விட்டு ,விட்டு வெடிக்கிறதே!
இவையாவும்
உனக்கு
காதல் மயக்கத்தால்
புரியாமல் போனது
என் வாழ்வின் சாபமா?

என்னை ஜடமாக்கியது
இன்று நீ சொன்ன சொல்
“நான் உணர்வற்ற ஜடமல்ல!”




தீர்ப்பைத் திருத்து !?

நான் போகிறேன் மண்ணே!
என்னை விட்டு என்றும் அகலாத
உன்னை விட்டு!

நான் பிறந்து
பாதம் பதிந்த மண்ணே!
என்னைச் சுமந்த
அன்னையையும் சுமந்த அன்னையே!

உன்னை விட்டுப்
போகிறேன்.
உன் நினைவுகளை விட்டல்ல
என் பந்தங்களை விட்டு!
மண்ணின் மைந்தர்களை விட்டு

நாகரிகம் வளர்ந்த
இந்த காலத்தில்
ஏன் இம்மண்ணில்
அநாகரீக சமூகம் பிரசவித்தாய்?

பெண்பிள்ளை பிறந்தால்
கள்ளிப்பாலூற்றி கொல்லும்
உள்ளம் ஏன்தான்
உன் மைந்தருக்கு
மட்டும் வந்ததோ?

பெண்ணை மணம் முடிக்க
வரதட்சனை எனும் நோய்
சக மனிதனுக்குள் வந்ததெப்படி?
ஊட்ட சத்து இல்லாத
ஊட்டமா உன் மார்பின் பால்?

அடுத்தவன் கால் வாரி
கெடுத்தவன் தான்
இந்த மண்ணில் அதிகம்.

ஊர் என்றால்
ஒத்து வாழ் என்பது
தீமையையும் சகித்து வாழ்வதா?
நன்மை தீமை பிரித்து
பகுத்து வாழ்வதா?

கீழ் குணம் கொண்டு
வாழாமல் இருப்பதே,
மேல் என்ணம்
கொண்டவர்களின் கொள்கை

அவர்களைச் சுமந்த என் மண்னே
அதில்தானே என்னையும் சுமந்தாய்

நியாயம் கேட்ட என்னை
உன்னைவிட்டுத்
தள்ளி வைப்பதாய்
ஊர் பெரியவர்கள்
என அழைத்துகொள்ளும்
மமதை கூட்டம்
சொல்லி வைத்ததும்
கொள்ளி வைத்ததாய்
நான் உணர்ந்தேன்

துணிந்தேன்,
மண்ணா?
நேர்மையா?
வாய்மையா?

என்றாவது என் ஊரும்
வருந்தி திருந்தும் என்ற
நம்பிக்கையோடு
முடிவு செய்தேன்...
ஊரையே நான்
ஒதுக்கி வைப்பதென்று!

- CROWN