Showing posts with label நபிமணியும் நகைச்சுவையும். Show all posts
Showing posts with label நபிமணியும் நகைச்சுவையும். Show all posts

மழை 0

அதிரைநிருபர் பதிப்பகம் | September 27, 2016 | , ,


சுவனத்திலிருந்து இறங்கி வரும் ஷவர்!

கீழ்வானில் அதோ வெள்ளிக் கீற்றாகக் கண்ணைப் பறிக்கும் ஒரு மின்னல்!

அத்துடன் நீர்த் துளிகளைச் சுமக்கும் கருமேகங்கள் மெல்ல உரசுவதிலும் அதன் செல்ல உறுமல்களிலும் உதயமாகிப் பொழிவது மழை!

சரம்சரமாய்ப் பெய்தாலும் சொட்டச்சொட்டப் பெய்தாலும் அப்போதும் அதன் பெயர் மழைதான்!

அதற்கு அடை மழை. அந்தி மழை. அப்பு மழை. ஆலங்கட்டி மழை. கன மழை. காத்து மழை, குமுறும் மழை. கோடை மழை. திடீர் மழை. தொடர் மழை. தூறல் மழை. தூவும் மழை. சாரல் மழை. சுழி மழை. பனி மழை. பருவ மழை. பெய் மழை. பொடி மழை. வெக்கை மழை. வெள்ள மழை என்று என்ன பெயர் வைத்தாலும் மழை ஓர் அழகுதான்! பகலில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து அலுக்காமல் மனம் குளிர மழையைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்!

ஆனால், "இரவின் இருளில் மழை பெய்வதில்லை. அதன் பேச்சுச் சப்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கும்" என்றான் தற்காலக் கவிஞன் அபுஷாஹ்ருக்! அதுவும் சரிதான். இங்கே, நம்மூரில் மின்னல் வெட்டினால், மின்சாரம் போய்விடுமல்லவா!

எல்லாம் வல்லவன் அல்லாஹ் (ஜல்) சொல்கிறான்:

வறண்ட பூமியை நோக்கித் தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம் என்பதை அவர்கள் காணவில்லையா? அதன் மூலம் பயிர்களை வெளிப்படுத்துகின்றோம். அதிலிருந்து அவர்களும் அவர்களின் கால்நடைகளும் உண்ணுகின்றனர். இதை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க மாட்டார்களா? (1)

அன்பின் வடிவாய் ஆகி நின்ற அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அருள்மழை குறித்து அருளினார்கள்:

அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு(2) உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்று ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; தம் கால்நடைகளுக்கும் புகட்டினர்; விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது ஒன்றுக்கும் உதவாத வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைக்க விடவுமில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டுவந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டுவந்த அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும்' என்று உலகத் தூதர் (ஸல்) அவர்கள் உரைத்தார்கள்"
கடும் வெப்பத்தின்போது ஆறு, ஏறி, கடல், குளம் ஆகிய நீர்நிலைகளிலிருந்து உறிஞ்சப்படும் நீர், நீராவியாக மாறிக் காற்றுடன் கலந்து, ஆகாயம் சென்று பிறகு மழை மேகங்களாய் உருவாகின்றன! அது பின்னர், அல்லாஹ் (ஜல்) எங்கெங்கே எந்தெந்த அளவில் பொழியப்பட வேண்டுமென நாடுகின்றானோ, அங்கெல்லாம் மழை அருளப்படுகின்றது. மீண்டும் நிகழும் அதே நீர்சுழற்சி! அது ஏகன் இறைவனின் ஏற்பாடு!

“நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் தான் மேகங்களை மெதுவாக இழுத்து, பின்னர் அவைகளை ஒன்றாகச் சேர்த்து, ஒன்றின் மேல் ஒன்றாக இணையச் செய்கின்றான். அவற்றின் மத்தியிலிருந்து மழை வெளிப்படுவதை நீர் காண்கின்றீர்” (3)

மழை பொழிவதால் வறண்டுபோன நிலம், உயிர் பெறுகின்றது. 'நீரின்றி அமையாது உலகு' என்பதுபோல் நீர் சிலமாதம் இல்லையென்றாலும் இடர் தரும் ஏராளமான இன்னல்களும் உணவுப் பற்றாக்குறைகளும் உண்டாகி, மனிதன் உட்பட உயிரினங்கள் அனைத்தும் பல கஷ்டங்களுக்கு உள்ளாகின்றன!

பாலைவனப் பிரதேசங்களில் மழையின்றிப் போய்விட்டால், அதன் சிரமம் எத்தகையது என்பதைச்சொல்ல வேண்டியதேயில்லை! அந்த ஆண்டு கொடுமையான பஞ்சம் மதீனாவைச் சூழ்ந்துகொண்டது. வானம் பொய்த்துப் போனது!

மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "மழை பெய்யாமற் போனதால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது, யா ரசூலல்லாஹ்" என்று முறையிட்டனர். அப்போது பொற்குணம் வாய்ந்த பூமான் நபியவர்கள், மக்களை ஊருக்கு வெளியே தொழும் திடலுக்கு புறப்பட்டு வருமாறு அறிவுறுத்தினார்கள். அத்தொழுமிடத்தில் சொற்பொழிவு மேடை ஒன்றை தயார் செய்யுமாறும் உத்தரவிட்டார்கள். ஆகவே, தொழுமிடத்தில் சொற்பொழிவு மேடை ஒன்று தயார் செய்யப்பட்டு அவர்களுக்குப் போடப்பட்டது.

செங்கதிரோன் தன் பொன்னிறக் கதிர்களை, கீழ்வானத்தின் விளிம்பில் சிந்திநின்ற அன்று காலை, செம்மல் நபி நாயகம் (ஸல்) அவர்கள் தொழும் திடலுக்குப் புறப்பட்டு வந்தார்கள். பின்னர், சொற்பொழிவு மேடை மீது ஏறி நின்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து பெருமிதப்படுத்திவிட்டு,

"மக்களே, நீங்கள் உங்கள் நகரங்களில் மழைக் காலம் தொடங்குவது தாமதமாகவும் அதனால் வறட்சி நிலவுவதாகவும் முறையிட்டீர்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (ஜல்) இதுபோன்ற சூழ்நிலைகளில் அவனிடமே பிரார்த்தித்துக் கேட்க வேண்டும் என்று உங்களுக்குக் கட்டளை இட்டுள்ளான். மேலும், நீங்கள் இவ்வாறு அழைத்துப் பிரார்த்தித்தால் உங்களுக்கு மறுமொழி அளிப்பான் என்றும் உங்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளான்" என்று கூறினார்கள். பின்னர் அவர்கள்,

"அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர்ரஹீம். மலிக்கியவ்மித்தீன். லாஇலாஹ இல்லல்லாஹு, யஃபஅலு மாயுரீது, அல்லாஹும்ம அன்த்தல்லாஹு லாஇலாஹ இல்லா அன்த்தல் ஃகனிய்யு, வ நஹ்னுல் ஃபுகராஹு அன்ஸில் அலைனல் ஃகைஸ், வஜ்அல் மாஅன்ஸல்த்த லனா குவ்வத்தன் வ பலாஃகன் இலாஹீன்"

என்று கூறி தமது கைகளை அவர்களின் அக்குள்களின் வெண்மை தெரியும் அளவு உயர்த்திய வண்ணமாகவே தொடர்ந்து பிரார்த்தித்துக் கொண்டு இருந்தார்கள்.

(தமிழில்: அகில உலகங்களின் இரட்சகனும் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் கூலி கொடுக்கப்படும் மறுமை நாளின் அதிபதியும் ஆகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அல்லாஹ்வைத் தவிர வழிபடத் தகுதியானவன் வேறு எவனுமில்லை. அவனே, நினைத்ததைச் செய்து முடிப்பவன். யா அல்லாஹ்! நீயே எங்களின் இறைவன் ஆவாய். எந்தத் தேவையும் அற்றவனாகிய உன்னைத் தவிர வழிபடத் தகுதியானவன் வேறு எவனுமில்லை. நாங்கள் எல்லோரும் உன்னிடமே தேவை உடையவர்கள். ஆகவே, நீ எங்களுக்கு மழையைப் பொழியச் செய்வாயாக. எங்களுக்குப் பொழிந்ததைப் பயனுள்ளதாகவும் சேமிப்பாகவும் எங்களின் தேவைகள் நிறைவடையும் ஒரு தவணைவரை ஆக்குவாயாக!)

பின்னர், தம் முதுகை மக்கள் பக்கம் திருப்பி, தமது கைகளை உயர்த்தியவாறு, தாம் அணிந்திருந்த போர்வையைக் கீழும் மேலுமாக மாற்றிப் போட்டுக் கொண்டார்கள். பின்னர், மக்களை நோக்கியவாறு சொற்பொழிவு மேடையிலிருந்து இறங்கினார்கள். உடன், இரண்டு ரக்அத் 'மழைத் தொழுகை'யைத் தொழுவித்தார்கள்.

அப்போது வல்லமையும் உயர்வும் மிக்க அல்லாஹ் (ஜல்) மேகத்தைத் திரளச் செய்தான். மின்னல்வெட்டியது. தொடர்ந்து பெரும் இடி முழங்கியது. அல்லாஹ்வின் அனுமதி கொண்டு மழை கொட்டத் துவங்கியது. உலகம் செழிக்க வந்த உண்மைத் தூதர் (ஸல்) அவர்கள், இன்னும் திடலில் மழைத் தொழுகையை முடித்துக் கொண்டு மஸ்ஜித் நபவீக்கு வரவில்லை. அதற்குள், வீதியின் இரு மருங்கிலும் மழை ஆறாய் ஓடத் துவங்கியது!

மக்கள் தங்களின் இல்லங்களை நோக்கி ஓடுவதையும் மழையில் நனைய பயந்து ஓரமாய் ஒதுங்குவதையும் கண்ட மாண்பு நபியவர்கள் மடை திறந்த வெள்ளம் போல் மகிழ்ந்து சிரித்தார்கள். பிறகு பின்வருமாறு கூறினார்கள்:

"அல்லாஹ் (ஜல்) அனைத்தின் மீதும் ஆற்றல் கொண்டவனாக இருக்கின்றான். நான் அல்லாஹ்வின் அடிமையாகவும் அவனுடைய தூதராகவும் இருக்கின்றேன் என்று நான் சாட்சியம் அளிக்கின்றேன்" என்று உரைத்தார்கள். (4)

இதுபோல் மற்றொரு முறை மழை பெய்த சம்பவத்தில், மனிதகுலத்தின் மாணிக்கம் (ஸல்) அவர்கள், மற்ற மக்களைப் போல் மழை கண்டு மருளாமல், தமது தலை, தோள், மார்பு ஆகிவற்றைத் திறந்து விட்டவர்களாக, வெளியே சென்று சுவனத்திலிருந்து மண்ணகம் பெறும் அருட்கொடைகளைத் தமது உடம்பில் நேரடியாகப் பெற்று அம்மழைக்கான தம் பங்கை மிகவும் ரசித்து அனுபவித்தார்கள்! இவ்வாறு, ஏனைய மனிதர்களிடமிருந்து இது போன்ற விஷயங்களில் வித்தியாசப் பட்டவர்களாகவே விளங்கினர் வெற்றிகளின் நாயகர் வேந்தர் நபி (ஸல்) அவர்கள்.

அந்த வெற்றி வேந்தரின் வித்தியாசமான தோற்றம்தான் என்ன!

“அன்றொரு நாள், அது ஒரு பௌர்ணமி இரவு! எனக்கு முன்னால் மட்டும் இரண்டு நிலவுகள்! விழிகளை உயர்த்தி விண்ணில் தவழ்ந்து வரும் வானத்து நிலவைப் பார்க்கின்றேன். பேரொளி வீசும் நிலவொன்று என் முன்னால் நிற்பதையும் காண்கின்றேன். இன்னும் சற்று நெருங்கிப் பார்த்தால், நெஞ்சைச் சுண்டியிழுக்கும் ராஜ கம்பீர அழகு! அழகும் சௌந்தர்யமும் ஒன்றாய் வடிவெடுத்த ஒரு தோற்றம்! ஆற்றலும் வல்லமையும் சீராகக் கலந்த ஒரு வார்ப்பு! அவர் மனிதருள் ஒருவராய்ப் பிறந்தவர்தான்! எனினும், அவரது மாசு மறுவற்ற முகம் வெண்ணிலவைக் காட்டிலும் அதிகமாய் ஜொலித்து நின்றது! இறுதியாக, அந்தச் சிவப்பு ஆடைகளுக்குள் அழகுக்கு அழகாய் தோன்றி நின்ற இந்த மண்ணகத்தின் வண்ணஒளி அண்ணல் நபியே, அந்த விண்ணகத்து நிலவை விடவும் பேரழகு எனும் முடிவையே கடைசியில் நான் கண்டேன்!” என்றார், நபிமணி என்ற நந்தவனத்தில் பூத்த நற்குண மலர்களின் நறுமணத்தைச் சுவாசித்து மகிழும் பாக்கியம் பெற்ற நபித் தோழர்களுள் ஒருவரான ஜாபிர் இப்னு ஸும்ரா (ரலி).(5)

அதே ஆண்டு மீண்டும் மதீனாவைப் பஞ்சம் சூழ்ந்தது! அது ஒரு வெள்ளிக்கிழமை. கற்கண்டு மொழியில் சொற்கொண்டு வந்த காஸிமின் தந்தை (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளின் உரையாற்றிக் கொண்டிருந்த வேளை ஒரு கிராமவாசி எழுந்தார். 'யா ரசூலல்லாஹ்! பருவ மழை பொய்த்துவிட்டது! அள்ளித் தரும் அல்லாஹ்வைக் கொண்டு அவன் அருள் மழையைப் பொழியச் செய்யுமாறு வேண்டுங்கள்' என்றார்.

அப்போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்தார்கள். அதில் மழை மேகம் என்று ஏதும் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. அப்போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மண்ணகத்திற்குப் புத்துயிர் கொடுக்கும் அருள்மழையைப் பொழிந்து தங்களைக் கருணைக் கண் கொண்டு நோக்குமாறு பணிவுடன் இறைவனைப் பிரார்த்தித்தார்கள்.

உடனே மழை மேகங்கள் ஒன்றோடொன்று திரண்டு சூழ்ந்தன! மழைக் காற்று மாருதமாய் மக்களிடம் குளிர்ந்து வீசி வந்தது. அவர்கள் அந்த இடத்தை விட்டு நகர்வதற்குள் மழை பொழியத் துவங்கியது. இதையடுத்து மதீனாவின் நீர் வழிகள் எல்லாம் நிரம்பி வழிந்தன! மழை என்றால் மழை! வானமே பொத்துக் கொண்டது போல் இடைவிடாத மழை! அதுவும் இரவு பகலாக ஏழு நாட்கள் அடுத்த ஜும்ஆ தினம் வரை அம்மழை நீடித்தது. 

இந்த வார ஜும்ஆ உரையின்போது வேறொரு மனிதர் எழுந்து நின்றார். நாவலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் மக்களின் கவனத்தைக் குவித்துச் சொற்பொழிவை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்.

அந்த மனிதரோ குறுக்கிட்டவராக, 'அல்லாஹ்வின் தூதரே! இடைவிடாத தொடர் மழையினால் நாங்கள் மூழ்கிக் கொண்டிருக்கிறோம். எங்களின் பொருட்கள் கெட்டுப்போகத் துவங்கிவிட்டன! எங்களின் வீடுகளோ இம்மழையைத் தாங்காமல் இடிந்து விழுந்து விடும் நிலையில் இருக்கின்றன! எனவே, எங்களைவிட்டும் மழையை நிறுத்துமாறு உங்களுடைய இறைவனிடம் பிரார்த்தியுங்கள்' என்றார்.

இதைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் அத்தனைப் பற்களும் தெரியும்படி அழகாகச் சிரித்தார்கள். பிறகு அறிவின் தென்றலாம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! எங்களுக்காக மழையைப் பொழிந்தருள்! அது எங்களின் மீதல்ல! அது எங்களின் சுற்றுப்புறங்களில் உள்ள மலைகளின் மீதும் மானாவாரி நிலங்களின் மீதும் நிலத்தில் நிலைத்திருக்கும் மரங்கள் மீதும் இன்னும் நிறையக் காத்திருக்கும் நீர்நிலைகள் மீதும் மற்றும் நீர்நிலைகள் பாய்ந்தோடும் பள்ளத்தாக்குகள் மீதும் உன் அருள்மழையைப் பொழியச் செய்வாயாக! தயை கூர்ந்து எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே!' என்று மூன்று முறை பிரார்த்தித்தார்கள்.

அதன் விளைவாக, மழை நகருக்குள் பொழிவதை உடனே நிறுத்திக் கொண்டது! அந்தத் திரண்ட மேகங்கள் மதீனாவிலிருந்து விலகி, அதன் வலப் பக்கமாகவும் இடப்பக்கமாகவும் பிரிந்து சென்றன. மதீனாவைச் சுற்றி மழை பொழிகிறது. ஆனால் மதீனாவுக்குள் சிறிதும் பெய்யவில்லை. தான் தேர்ந்தெடுத்த தூதரின் உயர்ந்த மதிப்பையும் தன்னுடைய நேசத்திற்குரிய தூதரின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டதையும் இறைவன் மக்களுக்கு அன்று தெள்ளத் தெளிவாக நேரடியாகவே காட்டினான்! (6)

‘தங்களின் துஆ'வை அப்படியே, அந்தக் கணமே ஏற்றுக்கொண்டு பலனை நிறைவேற்றித்தந்த அல்லாஹ்வின் மகத்தான அருள் நிறைந்த செயல் இந்த புவனத்தின் பொன்மணியாம் நம் நபிமணியைப் புளகாங்கிதம் அடைய வைத்தது! எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் போற்றி "அல்ஹம்துலில்லாஹ்" என்றனர்.

சற்று நேரத்தில், தமக்கு மிக ஆதரவாய் இருந்த தம் பெரிய தந்தையை சட்டென்று நினைவு கூர்ந்தார்கள்:

'இன்று என் பெரிய தந்தை அபூதாலிப் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அவர் இயற்றிய கவிதையை அவரே உணர்வு பூர்வமாகப் பாடி மகிழ்ந்திருப்பார்’ என்றார்கள்.' அப்போது, அங்கிருந்த அபீதாலிபின் வீரத்திருமகன் அலீய் அபுல்ஹஸன் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அந்தக் கவிதை அதே பாணியில் இப்போது பாடப்பட வேண்டுமா?" என்று கேட்டுவிட்டு, தன் தந்தையின் அதே தொனியில் அதே இனிமையுடன் பாடத் தொடங்கினார்:

"அழகே அழகான வெண்மை நிறம் ஒளிர்பவர் எவரோ, 
அவரால் வான்மழைக்கே பெரும் கோரிக்கை எழுப்பப்படும்!
அதுமட்டுமின்றி,
அனாதைப் பிஞ்சுகளின் ஆதரவகம் அவர்தான்! அந்த 
ஆதரவற்ற விதவைகளின் காவலனும் அவரேதான்!" (7)

இதுபோன்று காத்தமுன் நபியவர்கள் கவிதையை ரசித்ததாக இன்னொரு நிகழ்ச்சியும் கூறப்படுகின்றது:

நான், அகிலத்தின் இருளை அகற்றிட வந்த அண்ணல் நபி (ஸல்) யின் அவையில் நூற்றுக்கு மேற்பட்ட தடவை அமர்ந்திருக்கின்றேன். அப்போது அவர்களின் தோழர்கள் சில நேரம் கவிதை பாடுவார்கள். அறியாமைக் காலத்தில் நிகழ்ந்த சில சம்பவங்கள் குறித்தும் நினவூட்டுவார்கள். ஈமான் கற்பித்த இனிய நபியவர்கள் அதை அமைதியுடன் கேட்டுக்கொண்டு இருப்பார்கள். சில சமயம் தம் தோழர்களுடன் சேர்ந்து சிரிக்கவும் செய்தார்கள். (8)

இவ்வாறு, மாண்பு நிறைந்த மங்காத அறிவுச் சுடரான அண்ணல் நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் அர்ரஹ்மானிடம் வேண்டிப்பெற்ற அருள் மழைத் தூறல்கள் இந்த அவனிக்கு வந்து மண்ணுறையும் பல்லுயிர்களும் புத்துணர்வுடன் நலம் பெற்று வாழப் பயன்பட்டன! இன்னும் அந்த அருள் மழைத் துளிகளில் எஞ்சிய நினைவலைகள் அதோ அந்த பசும்புல் வனங்களிலும் பாலை மணல் வெளிகளிலும் மலைச் சிகரங்களிலும் இதமாய் வீசும் தென்றலிலும் சலசலத்து ஓடும் நீரலைகளிலும் நீக்கமறவே நிறைந்திருக்கின்றன! அல்லாஹ்வின் அருளை அழகாய் அடைந்திருக்கின்றன!

o o o 0 o o o
ஆதாரங்கள் :
(1) அல்குர்ஆன் 32:27
(2) புஹாரி 79: அபூ மூஸா (ரலி)
(3) அல்குர்ஆன்: 24:43
(4) அபூதாவூத் 992: அன்னை ஆயிஷா (ரலி)
(5) திர்மிதீ 2811: ஜாபிர் இப்னு ஸும்ரா (ரலி)
(6) புஹாரி 6093: அனஸ் பின் மாலிக் (ரலி)
(7) புஹாரி 1009: இப்னு உமர் (ரலி)
(8) திர்மிதீ 3087: ஜாபிர் பின் சமுரா (ரலி)
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
இக்பால் M. ஸாலிஹ்

பட்டப் பெயர்கள் 8

அதிரைநிருபர் பதிப்பகம் | August 28, 2016 | ,

நபிமணியும் நகைச்சுவையும் - 13

வல்லமையும் மாண்பும் மிக்க ‘அல்லாஹுத்தஆலாவின் பெயர்’ கொண்டே நாம் அனைத்தையும் துவங்க வேண்டும் எனக் கட்டளையிடப் பட்டிருக்கின்றோம். அவனே, மனித இனத்தின் தந்தையை அழகிய உருவத்தில் படைத்து அவருக்கு “ஆதம்” (மனிதன்) எனப் ‘பெயர்’ வைத்து அழைத்தான்.(1) மற்றும், அவன்தான் ஆதம் நபியவர்களுக்கு  அனைத்துப் பொருட்களின் ‘பெயர்களையும்’ கற்றுக் கொடுத்தான். (2) 

பொதுவாக, பெயர் என்பது ஒருவரை ஒருவர் அடையாளப்படுத்திக் கொள்ள அவசியமாகிறது. அதில் சிலருக்கோ, இட்ட பெயரைவிட ‘பட்டப் பெயரே’ நிலைத்தும் போய்விடுகிறது.

அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடையான தன் அன்புத் தூதரை "நற்செய்தி சொல்பவர்" என்றும்  "மகத்தான நற்குணம் உடையவர்" என்றும் "அகிலத்தாருக்கெல்லாம் அழகிய முன்மாதிரி" என்றும்  தன் அருள்மறையிலே அளவற்ற அருளாளன் அல்லாஹ் (ஜல்) அழைக்கின்றான்.

உத்தமத் தூதரின் ஊர்க்காரர்கள், "அல்-அமீன்” (நன்நம்பிக்கையாளர்) என்ற பட்டமளித்தனர். முஃமீன்களின் அன்னை கதீஜா (ரலி), "யா அபல்காசிம்” (காசிமின் தந்தையே) என்று பிரியமுடன் அழைத்தார். "என் உயிரினும் மேலானவரே!" என்றும் "என் தாய் தந்தையைவிட மேலானவரே" என்றும் சத்திய ஸஹாபாக்கள் போற்றி அழைத்து மகிழ்ந்தனர்.
                              
எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் ‘முஹம்மது’ (புகழப்பட்டவர்) ஆவேன். நான் ‘அஹ்மது’ (அல்லாஹ்வை அதிகமாகப் புகழ்பவர்) ஆவேன். நான் ‘மாஹீ’ (அழிப்பவர்), என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கின்றான். நான் ‘ஹாஷிர்’ (ஒன்று திரட்டுபவர்), மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப் படுவார்கள். நான் ‘ஆகிப்’ (இறைத்தூதர்களில் இறுதியானவர்) ஆவேன் என்று ஏந்தல் நபியவர்கள் இனிதாய்  இயம்பினார்கள். (3) 

கெட்ட செயலால் கெட்ட பெயரும்  நற்செயலால் நற்பெயரும் பெற்றுக் கொண்ட இரு நபர்களை இப்போது காண்போம்:

ஹிமார்: காத்தமுன் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் 'அப்துல்லாஹ்' என்றொருவர் இருந்தார்.  அவர் நாயகம்  (ஸல்) அவர்களைத் தம் நகைச்சுவைப் பேச்சால் சிரிக்க வைப்பார். வஹீ மூலம் மது அருந்துவது முற்றிலும் தடை செய்யப் பட்ட பிறகும், தொடர்ந்து மது அருந்தியதால் அவர் 'ஹிமார்' (கழுதை) என்ற ‘புனைப்பெயரில்’ மக்களால் அழைக்கப்பட்டு வந்தார். பலமுறை, மது அருந்திய குற்றத்தை ஒப்புக் கொண்டு, அதற்கான தண்டனையும் பெற்றுள்ளார். ஒருநாள், போதையிலிருந்த அவர், நடுநிலை பேணும் நாயகம் (ஸல்) அவர்களின் சபைக்குக் கொண்டு வரப்பட்டார். திருந்தாத அவரை அடிக்கும்படி நீதி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர் அடிக்கப்பட்டார். அப்போது அங்கிருந்த மக்களில் ஒருவர், 'இறைவா! இவர் மீது உன் சாபம் உண்டாகட்டும்! மது குடித்த குற்றத்திற்காக, இவர் எத்தனை முறைதான்  இச்சபைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளார்!' என்று கூறினார். அப்போது, அருள்வடிவேயான அண்ணல் நபி (ஸல்) அவர்கள், 'இவரைச்  சபிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார் என்றே நான் அறிந்துள்ளேன்' என்று இரக்கத்துடன் இயம்பினார்கள்.(4)

தாத்துந் நிதாக்கைன்: உலக வரலாற்றில், பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டிய உன்னத நிகழ்வான ‘ஹிஜ்ரா’வின்போது, இம்மாநிலம் தனக்கொரு மணி விளக்காய் வந்த மாண்பு நபி (ஸல்) அவர்களும் அவர்தம் அணுக்கத் தோழர் அபூபக்ரு (ரலி) அவர்களும் மதீனா செல்ல முடிவெடுத்த சமயம், நான் அவர்கள் இருவருக்கும் பயண உணவை தயாரித்தேன். ஆனால், உணவுப் பாத்திரத்தைக் கட்டிக் கொடுப்பதற்குக் கயிறு எனக்குக் கிட்டவில்லை! என் தந்தை அபூபக்ரு  (ரலி) யிடம், 'இதைக் கட்டுவதற்கு என்னிடம் என் இடுப்புக் கச்சுத் தவிர வேறெதுவும் இல்லையே" என்றேன். அவர்கள், 'அப்படியென்றால் அதை இரண்டாகக் கிழி" என்றார்கள். அவ்வாறே, என் இடுப்புக் கச்சை இரண்டாகக் கிழித்துப் பயண உணவை நான் கட்டி முடித்தேன். இதனால் நான், 'இரண்டு கச்சுடையாள்’ (தாத்துந் நிதாக்கைன்) என்று ‘புனைப் பெயர்’  சூட்டப்பட்டேன் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதரி, அஸ்மா பின்த் அபூபக்ரு (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.(5)

சிந்தனைச் சிற்பி செம்மல் நபியவர்கள் ஒரு சில பெயர்களை மாற்றி அமைத்த சம்பவங்களைக் காண்போம்:

ஜமீலா: நபித் தோழர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவதாவது; என் தந்தை உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களுக்கு “ஆஸியா” (பாவி) என்ற பெயருடைய  ஒரு புதல்வி இருந்தார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஜமீலா” (அழகி) என்று ‘மாற்றுப் பெயர்’ சூட்டினார்கள். (6)

ஜைனப்: முதலில் எனக்கு “பர்ரா” (நல்லவள்) என்ற பெயரே  இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே எனக்கு “ஜைனப்” (அழகிய தோற்றமுள்ள நறுமணச் செடி) எனப் பெயர் மாற்றினார்கள்.

முஃமின்களின் அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுக்கும் “பர்ரா” என்ற பெயரே இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவருக்கும் ‘ஜைனப்’ என்றே பெயர் சூட்டினார்கள்.

(‘பர்ரா’ என்ற பெயர் பற்றிய பிறிதொரு அறிவிப்பாவது; ‘உங்களை நீங்களே பரிசுத்தப் படுத்திக் கொள்ளாதீர்கள். உங்களில் நல்லவர் யார் என அல்லாஹ்வே நன்கறிந்தவன்’ என்று நபிகள்  நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்).(7)  

தம்  அருமைத் தோழர்கள் சிலரை நபி (ஸல்) அவர்கள் சில செல்லப் பெயர்களிட்டு அழைத்தார்கள். அந்த செல்லப் பெயர்களால் அழைக்கப்படுவதால் பூரிப்பும் புளகாங்கிதமும் ஸஹாபாக்களுக்கு ஏற்பட்டதே தவிர, ஒருபோதும் அந்தப் பெயர்கள் தோழர்களுக்கு வருத்தமேற்படுத்தியதேயில்லை!

அபூ துராப்: ஒருமுறை உத்தமத் திருநபி (ஸல்) அவர்கள் தம் அருமை மகள் பாத்திமாவின் வீட்டுக்குக்கு வருகை தந்து, "உன் கணவர் எங்கே?" என்று வினவினார்கள். "தந்தையே! எனக்கும் அவருக்கும் ஒரு சிறிய விவாதம் நிகழ்ந்தது. எனவே, என் மீது கோபமாக அவர் வெளியேறி விட்டார்" என பதில் கிடைத்தது. ஆளை அனுப்பித் தேடியதில் மஸ்ஜித் நபவியில் கண்டதாகத் தகவல் கிடைத்தது. போய்ப் பார்த்தால், அலீய் (ரலி) அவர்கள் தங்களின் மேனியிலிருந்து மேல் துண்டு கீழே விழுந்து கிடக்க, உடம்பில் மண் படிந்த நிலையில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள்.  அதைப் பார்த்ததும் அண்ணலார் அவர்கள் மனம் நெகிழ்ந்து, அவர் மீது படிந்திருந்த மண்ணைத் தட்டித் துடைத்து விட்டவாறே,  "எழுந்திரும்!  அபூதுராப் (மண்ணின் தந்தையே). எழுந்திரும்!" என்றார்கள். அவர் உறக்கம் கலைந்தது. அழகிய அழைப்பால் வருத்தம் மறைந்தது. அன்றிலிருந்து அந்தச்  செல்லப்பெயர் நிலைத்துப்போனது. அவருக்கும் அது மிகப் பிடித்துப்போனது.(8)

ஒருவர் மிக விரும்பும் ஒன்றின் பெயரோடு 'அபூ' சேர்த்துச் செல்லப் பெயராக்கி விளிப்பது அரபியர் வழக்கம். ஆடுகளை அதிகம் நேசிப்பவர் 'அபுல்கனம்' என்றும் வல்லூறுகளை நேசிப்பவர் 'அபூஸகர்' என்றும் விளிக்கப்படுவது அரபுகளின்  மரபு. ஐக்கிய அமீரகங்களின் தலைநகர், மானின் தந்தை (அபூதபி) என்பவரின் பெயரால் விளங்குகிறது. தற்போது இணையத்தில் உலவும் தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் கூட 'அபூ' எனும் சொல்லோடு, தாம் அதிகம் நேசிக்கும் மகன்/மகளின் பெயரைப் புனைந்துகொண்டு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. (உதாரணமாக, அபுஇப்ராஹீம், அபுஷாஹ்ருக், அபுபிலால்).

அபூபக்ரு (ரலி): இவர்களுக்கு பெற்றோர் வைத்த பெயர் அப்துல் கஅபா.  அன்பு நபி  (ஸல்) அவர்கள், தம் அருமைத் தோழருக்கு ‘அப்துல்லாஹ்’ எனப் பெயரிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் இறைச் செய்தியை மக்களுக்கு எடுத்துச் சொல்லத் துவங்கியபோது, வேறு எவரும் உண்மைப்படுத்தாத அளவிற்கு சத்தியத் தூதர்  (ஸல்) அவர்களை அதிகம் உண்மைப்படுத்தியதால், அல்-சித்தீக் (அதிகம் உண்மைப்படுத்துபவர்) என்ற காரணப் பெயரும் அபூபக்ரு (ரலி) அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அபூபக்ரு என்பதும் அவர்களின் காரணப் பெயராகும். இல்லறத்தை நல்லறமாய்க் காட்டிய நபியவர்கள், முஃமின்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை மணந்த பின்னர், அபூபக்ரு (கன்னியின் தந்தை) என கண்ணியமாக அழைக்கப்பட்டார்கள்; அப்பெயரே நிலைத்துப் போனது.(9)

அபூஹுரைரா (ரலி): கைபர் யுத்தம் நிகழ்ந்த சமயத்தில் பனீ-தவ்ஸ் கிளையிலிருந்து வந்து நபிமணி (ஸல்) அவர்களைச்  சந்தித்து இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டதும், ‘அப்துஷ் ஷம்ஸு’ என்ற இயற்பெயரைப் பெற்றிருந்த அவர் ‘அப்துர்ரஹ்மான்’ என அழைக்கப்பட்டார். அபாரமான நினைவாற்றல் கொண்டிருந்த அவர், திண்ணைத் தோழர்களுள் ஒருவராகத் தம்மையும் இணைத்துக்கொண்டார். அல்லாஹ்வின் தூதரை அதிகம் அண்மியிருந்ததால், அண்ணலின் அங்க அசைவுகளையும் அவர்கள் உதிர்த்த பொன்மொழிகளையும் உள்வாங்கிக்கொண்டு, பிற்காலத்தில் இவர் அறிவித்த ஹதீஸ்கள் ஆயிரக் கணக்கானவை  என்று வரலாற்றுக் குறிப்பேடுகள் கூறுகின்றன.

பூனைகள் மீது அவர் அதிகம் விருப்பங்கொண்டிருந்ததால், புவி போற்றும் பெருமானார் (ஸல்), அவரைப் "பூனைத் தோழன்" (அபூஹிர்!) எனச் செல்லமாய் அழைத்தார்கள். அப்துஷ்ஷம்ஸு அத்தவ்ஸீ, அப்துர்ரஹ்மான் அத்தவ்ஸீ என்றெல்லாம் குறிப்பிட்டால் நாமெல்லாம் விளங்காமல் விழிப்போம். "அபூஹுரைரா" என்றாலோ... 'அட, நம்ம அபூஹுரைரா' என்று சட்டெனப் புரிந்துகொள்ளும் அளவுக்கு அண்ணலின் அழைப்பு, உலகப்புகழ் வாய்ந்ததாக அமைந்துபோனது. 

இருசெவிச் சிறுவன்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) சிறு பிராயத்திலிருந்தே நபி (ஸல்) அவர்களின் ஊழியத்தில் இருந்தார். ஓர் இனிய நாளில் அவரை “யா தல் உதுனைன்!” ("ஓ! இரண்டு காதுகள் கொண்டவரே!") என அண்ணலார் அவரை அன்புடன் அழைத்தார்கள் என நபி மொழிக் குறிப்புகள் கூறுகின்றன.(10)

அபூருகத்: அந்த அன்சார் சிறுவனுக்கு வெறும் பதினாறு வயது! பெயர் ‘ஸைத் இப்னு  ஸாபித்’. ஆர்வத்தில் அவரும் அறப்போரில் கலந்து கொண்டார். கடின வேலைகளுக்கு மத்தியில் போர்க் களத்திலேயே சிறிது கண்ணயர்ந்து போனார். அவர் நண்பரான ‘உமரா’ என்பவர் விளையாட்டாக ஸைத் உடைய மண்வெட்டியையும் கடப்பாரையையும் எடுத்து ஒரு மறைவான இடத்தில் ஒளித்து வைத்துவிட்டார். தூக்கம் கலைந்து எழுந்தபோது தன்  உபகரணங்கள் காணாதது அறிந்து சங்கடத்தில் நின்றார் ஸைத்! சஹாபாக்களில் சிலர் சற்று நேரம் அவரைத் தேடிஅலையவைத்து சிறிது நேரம் கழித்து, ஸைதின் பொருட்களை எடுத்துக் கொடுத்து அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி, அவருடன் விளையாட்டாகச் சிரித்து மகிழ்ந்தனர்!

அப்போது அங்கு வந்து, அவருக்கு நிகழ்ந்ததை  அறிந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள், அன்புடன் ஸைதை நோக்கி  "யா அபூருகத்" (தூக்கத்தின் தலைவனே!) என்று அழகாக அழைத்தார்கள்! இதே ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள்தாம், அருள்மறை ஏந்திவந்த அண்ணல் நபிக்கு அருளப்படும் 'வஹீ''யை உடனுக்குடன் பதிவு செய்துகொள்ளும் பெரும் பேற்றைப் பிற்காலத்தில் பெற்றவர்! அருள்மறை பற்றிய ஆழ்ந்த ஞானமும் அது அருளப்பட்ட காலமும் அறிந்திருப்பதில் முதலிடம் வகித்த முக்கியமானவர் என்பதால், அருள்மறையை ஒன்று திரட்டித்  தொகுத்து அளிக்கும் அரிய பொறுப்பை அமீருல் முஃமினீன் உதுமான் (ரலி) அவர்கள், இவர் வசமே ஒப்படைத்தார்கள்!

நிற்க, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன் அருள்மறையாம் குர்ஆனிலே பட்டப்பெயர் குறித்துக் கூறுவதைக் காண்போம்.
بسم الله الرحمن الرحيم

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَوْمٌ مِنْ قَوْمٍ عَسَىٰ أَنْ يَكُونُوا خَيْرًا مِنْهُمْ وَلَا نِسَاءٌ مِنْ نِسَاءٍ عَسَىٰ أَنْ يَكُنَّ خَيْرًا مِنْهُنَّ ۖ وَلَا تَلْمِزُوا أَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ ۖ بِئْسَ الِاسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ ۚ وَمَنْ لَمْ يَتُبْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَِ

முஃமின்களே! ஒரு சமூகத்தார்  இன்னொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில், (பரிகசிக்கப்படுவோர்) இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்.  (அவ்வாறே) எந்தப் பெண்களும் மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) ஏனெனில் அவர்கள் இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப் பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.(11)

அறிக; கெட்ட பெயர் வைத்து அதனைப்  ‘பட்டப் பெயர்’ என அழைக்கும் அசிங்கமும் அவலமும் குறிப்பாக, வாய் கிழிய மார்க்கம் பேசும் நம் சமூகத்தில்தான் அதிகம் என்பது  ஒரு வெட்கக் கேடான, வேதனை நிறைந்த விஷயமாகும். இந்த கணத்திலிருந்து ஒவ்வொரு முஸ்லிமும் சக மனிதனை அவன் விரும்பாத கெட்ட பெயர் வைத்து கூவி அழைக்கும் இந்த ஈனச்செயலை  உடனடியாக நிறுத்த வேண்டும். அவன்தான் உண்மையாகவே அல்லாஹ்வை அஞ்சிய அடிமை. நபிபெருமானை நேசிக்கும் நல்லதொரு முஸ்லிம். அடையாளம் சொன்னால்தான் விளங்குமென்றால் நபியவர்கள் சூட்டியது போல் நல்ல பெயர் சூட்டலாம் அல்லது ‘அவருடைய  தந்தையின் மகன் (தாஜுத்தீன் இப்னு மஹ்மூத்)’ அல்லது ‘அவருடைய மகனின் தந்தை (தாஜுத்தீன் அபுஅஹ்மத்)’ என்பவை போல எழுதலாம்.

oooooo 000 oooooo
ஆதாரங்கள்:
(1) அல்குர்ஆன் 95:4
(2) அல் குர்ஆன் 2:31
(3) புஹாரி 3532 : ஜுபைர் இப்னு முத்இம் (ரலி)
(4) புஹாரி 6780 : உமர் இப்னு அல்கத்தாப் (ரலி)
(5) புஹாரி 3907 : இப்னு அப்பாஸ் (ரலி)
(6) முஸ்லிம் 4333 : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
(7) முஸ்லிம் 4336 : ஜைனப் பின்த் உம்மு ஸலமா (ரலி)
(8) புஹாரி 6280 : ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி)
(9) அல்இஸாபாஹ் 2/188 
(10)அபுதாவூத் 4984 : அனஸ் இப்னு மாலிக் (ரலி)  
(11)அல்குர்ஆன் 49:11
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
இக்பால் M. ஸாலிஹ்

அன்புப் பெட்டகமும் ஆசை ஒட்டகமும் 4

அதிரைநிருபர் பதிப்பகம் | August 22, 2016 | ,

நபிமணியும் நகைச்சுவையும் - தொடர் : 11

வாஅக்ராஹ்! வாநாகத்தாஹ்! (ஓ, என் செல்லமே! என் ஆசை ஒட்டகமே!)

நாடோடிகளின் தூதுவர் அலறிப் புடைத்துக்கொண்டு வந்த வழியே திரும்பி ஓடினார்.

“ஓ, மதீனா வாசிகளே! அந்தோ! என் செல்லமான ஒட்டகம் பலியாக்கப்பட்டுவிட்டது. இனி நான் என்ன செய்வேன்?” என்று ஆவேசமாக அலறினார்.

இறையில்லத்தில் இருந்து இறங்கி வந்த வேகத்தில், அவரை இதமாய் அணைத்தது ஒரு கரம். அது அண்ணலின் திருக்கரம்! ஆறுதல் தரும் கரம்!

அந்த அருட்கரம் தொட்டதுமே அப்படியே அவர் அமைதியானார். அது எப்படிச்  சாத்தியம்? அந்தக்  கரத்தில் அப்படி என்னதான் இருந்தது?

அந்த இனிய கரம், சாதாரண கரமல்ல! மனித மனங்களையும் மனத்தின் உணர்வுகளையும் துல்லியமாக நாடி பிடித்துப் பார்க்கத் தெரிந்த உளவியல் மருத்துவரான உண்மைத் தூதரின் கரம்! 

அந்தக் கை, வெருங்கையல்ல! அருள் நிறைந்த கை. அறிவுப் பாதையிலிருந்து வெகுதூரம் விலகிப்போய்விட்ட, அறியாமை அந்தகாரம் எனும் அடிப்பாகமே இல்லாத, ஆழ்கிணற்றில் வீழ்ந்து கிடந்த விலங்குகளான அராபியர்களை, ஏகத்துவம் என்ற ஏணி மரம் கொண்டு கரை சேர்த்த கருணை மனிதரின் கை! இம்மையிலும் மறுமையிலும் அனைத்து முஃமின்களுக்கும் ஆதரவான ஒரே நம்பிக்கை!

இந்த இனிய கரங்களுக்குச் சொந்தமானவர் பற்றியே, தூயோன் அல்லாஹ் (ஜல்), இந்தத் தூதர் இடத்தில் உங்களுக்கு "உஸ்வத்துல் ஹஸனா" இருக்கிறது! என்கின்றான். 

ஒரு மனிதன் யாராக இருந்தாலும் சரியே! எத்தகைய சூழலில் அவன் இருந்தாலும் சரியே! எப்படிப்பட்ட தொல்லைகளால் தொடரப்பட்டவனாகவும் சோதனைகளால் சூழப்பட்டவனாகவும் வேதனைகளால் விரக்தியானவனாகவும் இருந்தாலும் சரியே! அந்தச்  சூழ்நிலைக் கேற்ற "அழகிய முன்மாதிரி"யும் அந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய பயிற்சி முறையும் அல்லாஹ்வின் அருட்சுடராம் அண்ணல் நபி (ஸல்) யிடம் இருக்கவே செய்தது. இன்றும் வரலாற்றில் அது வாழ்வு நெறியாக வாழ்கிறது!

இந்த மகோன்னதமான மாமனிதரின் வாழ்வு, எடுத்த எடுப்பிலேயே தாயும் தந்தையுமற்ற அனாதையாகவே ஆரம்பமாகியது!

பிறகு, ஆடு மேய்க்கும் இடையராக, கவனிப்பாரற்ற ஏழையாக, சின்னஞ்சிறு வியாபாரியாக, வணிகப்பயணியாக, குழுவின் தலைவராக, எல்லோருக்கும் நம்பிக்கையாளராக, நாணயம் மிகுந்தவராக, வாதி பிரதிவாதிகளுக்கு நடுநிலையானவராக, பேச்சில் வாய்மையானவராக, நடத்தையில் நேர்மையானவராக, நேசமான கணவராக, பாசமான தந்தையாக, ஜிப்ரீலின்  முன் சிறந்த மாணவராக, அருள்மறை ஏந்திய அல்லாஹ்வின் தூதராக, மார்க்கப் பிரச்சாரகராக, அயல்நாட்டில் தஞ்சமடைந்த அகதியாக, அரசியல் தலைவராக, தானைத் தளபதியாக, வேதத்தின் விரிவுரையாளராக, சட்டத்துறைச் சிற்பியாக, ராஜதந்திரியாக, பொறுமையின் சிகரமாக, குணமளிக்கும் மருத்துவராக, கவிஞனையும் இணங்கவைக்கும் நாவலராக, நகைச்சுவை விரும்பும் நல்ல நண்பராக, சமூக சீர்திருத்தவாதியாக, வான்வெளிப் பயணம் சென்றுவந்தவராக, வாரி வழங்கும் வள்ளலாக, வஞ்சகர்களை எதிர்த்துப் போராடிய போர்வீரராக, மதீனாவின் ஆட்சியாளராக, தலைசிறந்த நிர்வாகியாக, இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியாக, மேலும், தம் தோழர்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த தோழராக, எல்லாவற்றுக்கும் மேலாக, "தோழமை" என்ற சொல்லின் மொத்த வடிவமாகவே நின்றார்கள்!

அந்தி மயங்கும் சூரியன் அடிவானில் தஞ்சமடையும் நேரம். மெல்ல வருடிய கோடைக் காலத் தென்றல் காற்றால், சரசரவென ஒலித்தச் சருகுகளுடன் விளையாடிக் கொண்டிருந்த மாலைச் சூரியனின் பொன்னிறக் கதிர்கள் இருள் நெருங்கியதைத் தொடர்ந்து, அங்கு ஒளியேற்றி வைப்பது போல் விரைந்தேறி நகர்ந்து அருகேயிருந்த மலைக்குன்றின் உச்சியில் ஏறி நின்று வெளிச்சத்தைச்  சற்று  இதமாக வீசிக் கொண்டிருந்தன!

நாடோடிகளின் தூதுவர், தன் கொழுத்த இளம் ஒட்டகையிலிருந்து இறங்குவதையும் ஒட்டகையை மஸ்ஜிதுன் நபவீக்கு வெளியில் தனியே விட்டபின், அல்லாஹ்வின் தூதரிடம் அரசியல் உரையாட அவர் உள்ளே சென்றுவிட்டதையும் சில கண்கள் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தன. அவை பசியால் பஞ்சடைந்த கண்கள்!

தூக்கிவிட்டால் சுமப்பவர் எவரோ, தூண்டிவிட்டால் துள்ளி ஆடுபவர் எவரோ, அதே அந்-நுஐமான் இப்னு அம்ர் (ரலி) அப்போது சரியாக வந்து ஆஜரானார்!

“நண்பா! நாம் ஒட்டகக் கறி உண்டு எவ்வளவு காலமாகிவிட்டது கண்டாயா?” ஒருவர் அங்கலாய்த்தார்!

“அந்-நுஐமான் மனது வைத்தால், நாம் இப்போதே அறுத்துப் பொறித்துச்  சுவைத்து உண்ணலாமே” என்று உசுப்பேத்தினார் இன்னொருவர். “இதோ என்னை எடுத்துக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்லாமல், சொல்லி அழகாய் அமர்ந்திருக்கிறதே!” என்றார் பிரிதொருவர். “என்னையும் கொஞ்சம் சேர்த்துக்கொள் தோழா!” என்று கெஞ்சினார் மற்றொருவர்!

அர்த்தம் புரிந்துபோனது அந்-நுஐமானுக்கு. நகைச்சுவை நாயகருக்குக் கொஞ்சம் யோசனைதான். இலேசாகத் தயங்கினார்! எனினும் என்ன நினைத்தாரோ, உடனே செயல்பட்டார். கூட்டாளிகள் என்னால்தான் முடியும் என்று இவ்வளவு கெஞ்சுகிறார்கள். இதுகூடச்  செய்யாவிட்டால், நட்புக்கு என்னதான் அர்த்தம் இருக்கிறது! என்று அந்த ஒட்டகையை உடனே போட்டுத் தள்ளிவிட்டார்!

குர்பானி கொடுத்தாகி விட்டது!

நாடோடிகளின் தூதுவர், அரசியல் ஆலோசனை முடித்துக் கொண்டு வெளியே வந்தால், ஒட்டகை நின்ற இடத்தில், அதன் தும்புக் கயிறுதான் கிடந்தது. சற்று தூரத்தில் புத்தம் புது இறைச்சி பொறிக்கப்படும் சுவையான வாசனை மூக்கைத் துளைத்தது.

நாடோடி அரபிக்கு சட்டென்று புரிந்து போனது!

ஆத்திரம் பொங்க அரற்றி நின்ற அவர் மீது தம் அருட்கரத்தை வைத்த அண்ணலார், அவரை அமைதிப் படுத்திவிட்டு, கூட்டத்தைப் பார்த்துக்  கேட்ட கேள்வி:

“இதைச் செய்தது யார்?”

சப்தம் அடங்கிய சபையிலிருந்து ஒரு குரல் "அந்-நுஐமான்" என்றது. 

“எங்கே அந்-நுஐமான்?” 

அங்கே அந்-நுஐமான் (ரலி) உற்சாகமிகுதியால் ஒட்டகத்தை அறுத்துப் போட்டுவிட்டு, பிறகுதான் அந்தத் தகாத செயலை உணர்ந்தவராக, இந்தத்  தவற்றுக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என்ற உதறலில் எங்கு போய் ஒளிவது என்று யோசித்துப் பார்க்காமல், கண்ணுக்குக் கிடைத்த ஒரு வாகான தோட்டத்திற்கு ஓடிப்போய், அங்கிருந்த ஒரு சிறிய பொந்து போன்ற பள்ளத்தில்  புகுந்து ஒளிந்து கொண்டார்.

அந்நியரின் வாகனத்தை அனுமதியின்றி அறுத்துவிட்டோமே! இத்தகு செயலுக்கு என்ன தண்டனையோ என்று உள்ளுக்குள் உதறலெடுத்துக் கொண்டிருந்தது அவருக்கு!

அது அண்ணலாரின் பெரிய தந்தை ஜுபைர் இப்னு அப்துல் முத்தலிஃப் அவர்களின் மகளார் ளுபாஆ (ரலி) அவர்களுக்குச் சொந்தமான வீட்டைச் சுற்றியுள்ள ஒரு சிறிய தோட்டம்.

பள்ளத்தில் பதுங்கிக் கிடக்கும் அந்-நுஐமான் இப்னு அம்ர் (ரலி), சுதாரித்துக் கொண்டு எழுந்து ஓடிவிடக்கூடும் என்ற எச்சரிக்கையுடன், “நான் அந்-நுஐமானைப் பார்க்கவே இல்லையே! அல்லாஹ்வின் தூதரே” என்று நயமாக வாயால் சொல்லிக்கொண்டே, கையால் அவர் ஒளிந்துகொண்டிருக்கும் சாக்கடைப் புதரைச் சுட்டிக்காட்டினார் ளுபாஆ (ரலி) வின்  விவேகமான அண்டை வீட்டுக்காரர்.

தன் ஒன்றுவிட்ட சகோதரி ளுபாஆ பின்த் ஜுபைர் (ரலி) உடைய தோட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்ட இடத்துக்குச் சென்று, பேரீத்த ஓலை, இலை தழைகளையெல்லாம் பரபரவென்று அப்புறப்படுத்தித் தோண்டிப் பார்த்தால், கல்லறைப் பிணத்துக்கு உயிர்வந்துவிட்டதுபோல், பயத்தில் முகமெல்லாம் வெளிறிப்போய், அந்தக் குறுகிய பள்ளத்திலிருந்து வெளியானார் அந்-நுஐமான் இப்னு அம்ர் (ரலி). 

கண்ணின் மணி நேர் கருணைக் கடல் நபியவர்களுக்கு, அவரின் இக்கட்டான அந்நிலை கண்டு இரக்கம் சுரந்தது! மனித நெஞ்சங்களிலேயே, பரிவுடன் துடித்த கனிவு மிகு இதயங்களில் தலையாயது அல்லவா நமக்கெல்லாம் நேர்வழி காட்டிய, நானிலம் போற்றும் அந்த நாயகத்தின் உள்ளம்!

“உனக்கு ஏன் இந்தப் பரிதாப நிலை அந்-நுஐமான்?” அவர் முகத்தை மூடியிருந்த புழுதி, இலைதழை தூசுகளை எல்லாம் துடைத்து விட்டுக் கொண்டே பரிவுடன் கேட்டார்கள் அமைதியின் ஜோதி அண்ணல் நபி (ஸல்) அவர்கள். 

“எந்த மனிதர்கள் உங்களை என்னிடம் ஆள்காட்டி அனுப்பி வைத்தார்களோ, அதே ஆட்கள்தாம் என்னை, ஒட்டகையை ஒரு கை பார்க்கச் சொன்னார்கள் யா ரசூலல்லாஹ்” என்றார் வெகுளித் தனமாக!

காண்போரின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் அந்த மதி முகத்தின் மந்தகாசப் புன்னகை மாறாமல், அந்-நுஐமானை மன்னர் நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுன் நபவீக்கு அழைத்து வந்தார்கள். 

பாலைவன நாடோடிகளின் தூதுவருக்கு ஆறுதல் சொன்னது மட்டுமன்றி, அவர் இழந்ததைவிடச்  சிறந்த ஒட்டகம் ஒன்றைப் பகரமாக அளித்தார்கள் 'அன்புப்பெட்டகம்' அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.(1)

மனமகிழ்ச்சி கொண்டார் அந்த நாடோடிகளின் தூதுவர். இனிமை மிகு மொழியில், அழகுமிகு நடையில், பெருமானாரின் ஈகையை, இரக்கத்தை, ராஜரீகப் பெருந்தன்மையை, தயாள குணத்தை, வீரத்தை, விவேகத்தைப் புகழ்ந்து போற்றினார்!

அந்-நுஐமான் இப்னு அம்ர் (ரலி) யின் கை பிடித்து, அவரையும் நாடோடி அரபியையும் ஒட்டகைக் கறி விருந்துக்கு அழைத்துச் சென்றார்கள் ஓங்குபுகழ் நபியவர்கள். தோழர்களுடன் அனைவருக்கும் களிப்புடன் சேர்த்துக் கல்யாண விருந்துபோல் அமைந்தது அன்று! 

ஒட்டகத்தை இழந்தவரும் ஒட்டகத்தை அறுத்தவரும் ஒன்றாய் அமர்ந்து ஒரே மரவையில் உணவுண்ணுவதை ரசித்துப் பார்த்து நின்ற வெள்ளை மன வேந்தர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், அல்லாஹ் (ஜல்) வின் கருணையை  எண்ணி அர்த்தத்துடன் சிரித்தார்கள். அதைவிட ‘அதிஅழகு’ என்பது வேறு எங்கு நோக்கினும் இல்லவே இல்லை! (2)

ஆம்! 'அழகின் சிரிப்பு' என்றாலும் 'சிரிப்பின் அழகு' என்றாலும் இந்த இரண்டுமே அந்த ஒருவரையே சுட்டி நிற்கும்! அவர்தாம் 'அன்புப் பெட்டகம்' அண்ணல் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்!

o  o  o  o  0  o  o  o  o  
ஆதாரங்கள்:
(1) ஹயாத்துஸ் ஸஹாபாஹ் : 3/154
(2) அல்இஸாபாஹ் 3/570 : ரபீஆ இப்னு உஸ்மான் (ரலி) 
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
இக்பால் M. ஸாலிஹ்

ரோமாபுரியின் ரோஜா மலர்! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | July 27, 2016 | ,

நபிமணியும் நகைச்சுவையும் - தொடர் : 18

அவர் ஓடினார். தலை தெறிக்க ஓடினார். மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு ஓடினார். வெஞ்சினமும் வீராவேசமுமாகத் தன்னைக்  குதிரைகளில் துரத்தி வருபவர்களிடம் சிக்கினால், உயிர் தம்முடையதில்லை என்பதை முற்றிலும் உணர்ந்தே, அவர் காற்றைக் கிழித்துப் பறந்தோடினார்!

இதற்கு மேல் ஓட முடியாது என்ற நிலையில் ஒரு மலைக் குன்றின் மீது சடாரெனப் பாய்ந்து ஏறி நின்றுகொண்டு தன்னைத் துரத்தி வந்த மக்கத்து மடையர்களைப் பார்த்துக் கத்தினார்.

“எவனாவது இதற்கு மேல் என்னை நெருங்கினால், அல்லாஹ்வின் மீது ஆணையாக, என் அம்புகளால் அவனைக் கொன்று போடுவேன். அதையும் மீறி வேறு யாரும் நெருங்கினால், இருக்கவே இருக்கிறது என் போர்வாள்!” என்று  உயர்த்திக் காட்டி நின்றார் உருக்கு மனமும் உடையாத உறுதியுமாய்!

அவரைத் துரத்தி வந்தவர்கள், ஓரிறையை மறுத்து வந்தவர்கள்  அங்கே மலைத்து நின்றார்கள்!

ஒருவன் கூவினான். "எங்கள் ஊரில் நீ திரட்டிய பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு, யத்ரிபுக்கு நீ ஓடிவிட நாங்கள் அனுமதிக்க முடியாது"

"ப்பூ! இவ்வளவுதானா? நான் சேர்த்து வைத்த செல்வத்தை எல்லாம் தந்துவிட்டால்,  தடையில்லைதானே?"

"தடையில்லை!"

"அப்படியானால், இன்னின்ன இடத்தில், இவ்வளவு இவ்வளவு வைத்திருக்கிறேன். அத்தனையும் எடுத்துக் கொள்ளுங்கள். என்னை என் வழியில் விட்டு விடுங்கள்." உடன்படிக்கை உடனே முடிந்தது!

ரோமாபுரியிலிருந்து மக்கா வந்து சேர்ந்ததிலிருந்து அயராது உழைத்துத் திரட்டிய அத்தனைச்  செல்வங்களையும் ஒரு நொடியில் உதறித் தள்ளிவிட்டு, அல்லாஹ்வின் பாதையில் மதீனாவை நோக்கி நேர்மையோடும் நெஞ்சுரத்தோடும் வீறு நடை போட்டவரைப் பற்றி, அங்கே மதீனாவில் அல்லாஹ்வின் தூதருக்கு அழகிய வேத வசனம்  அருளப்பட்டுக் கொண்டிருந்தது!


அவர்தான் பாரசீகத்தில் ராஜகுமாரனாகப் பிறந்து, ரோமாபுரியில் அடிமையாக வளர்ந்து, மக்காவில் மிகப்பெரும் வணிகராகி, தற்போது தம் செல்வத்தையெல்லாம் அல்லாஹ்வுக்காகத்  துச்சமெனத் தூக்கி எறிந்து விட்டு, மதீனா முனவ்வராவை நோக்கி வீசிய கையும் வெறுங் கையுமாக, ஆனால், இதயமெல்லாம் இறைநேசத்துடன் பயணித்துக் கொண்டிருக்கும் சுஹைப் பின் ஸினான் அர்-ரூமி (ரலி).

"அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி, தம்மையே விற்று விடுவோரும் மனிதர்களில் உள்ளனர். அல்லாஹ் (அத்தகைய) அடியார்களிடம் மிகப் பெரும் கருணை கொண்டவன்!"(1)

இதுதான் எல்லைகளை எல்லாம் கடந்த பாக்கியம்!
தன்னுயிர் பிரியும் 'சகராத்' உடைய பெரும் வேதனையிலிருந்து விலக்கப்படுவதை விட, மண்ணறையின் கடுமையான நெருக்குதலிலிருந்து காக்கப்படுவதை விட, எரிதழல் நரகின் கொடிய தண்டனையில் இருந்து விடுதலை பெறுவதை விட, சுகந்தரும் சொர்ண பூமியாம் சுவர்க்கத்தின் சோலைகளில் மாளிகைகள் கிடைப்பதை விட,

ஆங்கே, கற்பனைக் கெட்டாத அத்தனை இன்பங்களையும் அனுபவித்து மகிழ்வதை விட,

மேலும் இவை அல்லாத எல்லாவற்றையும் விட,  தன்னை அணுவணுவாகப் படைத்தவனின் தன் நேசர்கள் மீது கொண்ட "திருப்தி" எனும் திருப் பொருத்தம் அருளப்படுவதே பாக்கியங்களில் எல்லாம் மிகப்பெரும் பாக்கியமாகும்!

அதுதான் அல்லாஹ்வின் 'ரிள்வான்!' அதுதான் பேறுகளில் எல்லாம் மிகப்பெரும் பேறாகும்!

அந்தப் பெறுதற்கரிய பெரும் பாக்கியத்தை, தம் தோழர்களுக்குப் பெற்றுத் தந்தவர் யார்?

எவர் வரவால் இந்த உலகம் எல்லாம் சிறந்ததோ,

எவர் வரவால் அந்த உள்ளம் எல்லாம் மகிழ்ந்ததோ, அவர்தாம்!

அவருக்கு எழுதவும் தெரியாது! படிக்கவும் தெரியாது!

எனினும், சூழலைச்  சுவர்க்கமாக்க, ஏற்றமிகு நபி எழுந்து வந்தார்!

அவர் நின்று பேசினார். எல்லா இலக்கியங்களையும் அது விஞ்சி நின்றது!

அவருக்கு அருளப்பட்டதை ஓதிக் காட்டினார். அதுபோன்ற ஒரு வரியை

எவராலும் இதுவரை எழுத முடியவில்லை!

அவர் பேசிய மொழியெல்லாம் வழியாகவும்

அவர் காட்டிய வழியெல்லாம் வாழ்வாகவும் ஆகிப்போனது!

மொத்தத்தில்,

எவ்வழி எல்லாம் நல்வழியோ இவ்வுலகில்,

அவ்வழி எல்லாம் நபிவழியாய் நிலைத்து நின்றது!

இனிய தோழர்கள் கடந்து சென்ற பாதையெல்லாம் இறைவழியாய் எழுந்து நின்றது!

அதன் பெயர்  அறவழி! அதுதான் அல்லாஹ்வின் வழி!

அண்ணலாரின் பயிற்சிப் பாசறை ஒரு சாதாரணமான பள்ளிக்கூடமல்ல; அது ஒரு பல்கலைக்கழகம் என்று பார்த்தோம். அந்த இறையருள் மிகுந்த இனிய தூதரின் தூதுத்துவப் பயிற்சிக்கூடம், சாதாரணப்  பல்கலைக் கழகமல்ல!

கண்ணியத்தூதர் போதிப்பதற்காக கம்பீரமாக நின்ற அது ஒரு "பன்னாட்டுப் பல்கலைக் கழகம்!"

அங்கே, அபூபக்ரு, உமர், உதுமான், அலீய், தல்ஹா, ஜுபைர் போன்ற மக்காவின் மைந்தர்களும்

அபூதர், அனஸ் ஆகிய கிஃபாரி கோத்திரத்தாரும்

அபூஹுரைரா, அபூதுஃபைல் போன்ற அவ்ஸ் குலத்தவரும்

அபூமூஸா அஷ்அரீ, முஆத் பின் ஜபல் போன்ற யமன் நாட்டினரும்

தம்மாத் இப்னு தஃலபா போன்ற அஸ்துக் குலத்தவரும்

கப்பாப் இப்னு அல்அரத் போன்ற பனூ தமீம் கோத்திரத்தாரும்

முன்கித் பின் ஹப்பான், முன்திர் இப்னு ஆயித் போன்ற பஹ்ரைன் தேசத்தவரும்

உபைத் மற்றும் ஜஃபர் போன்ற ஓமன் நாட்டவரும்

ஸல்மான் அல்ஃபார்ஸி போன்ற பாரசீக தேசத்தவரும்

பிலால் பின் ரபாஹ் போன்ற அபிசீனிய நாட்டினரும்

ஃபைரூஜ் போன்ற தைலமா பகுதியினரும்

சன்ஜித் போன்ற ஈரானியரும்

ஃபர்வா இப்னு அம்ர் போன்ற சிரியா தேசத்தவரும்

மேலும், சுஹைப் பின் ஸினான் என்ற  ரோம் தேசத்தவரும்

இப்படிப் பலதரப்பட்ட குலத்தவரும் பலதரப்பட்ட இனத்தவரும் பலதரப்பட்ட நாட்டினரும் அல்லாஹ்வின் தூதரின் பன்னாட்டுப் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்து பயிற்சி பெற்றார்கள். பாடம் கற்றார்கள்! இவர்களே, மார்க்கத்தை எத்திவைக்கும் மகிமையாளர்களாக, அநீதிகளை எதிர்த்துப் போராடும் அறப்போர் வீரர்களாக, ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் அறிஞர் பெருமக்களாக, சென்றவிடமெல்லாம் வாகை சூடும் வெற்றிப் படைத் தளபதிகளாக, அமைதிப் பணிபுரியும் அருங்குணம் கொண்டவர்களாக உருவெடுத்தார்கள். தங்கள் செயலின் அழகால் சிறந்து  மிளிர்ந்தார்கள்!

இப்படி அறிவும் ஆற்றலும் அமைந்தவர்கள் மட்டுமல்ல! உண்மையும் விசுவாசமும் உடையவர்கள் மட்டுமல்ல! ஏற்றுகொண்ட கொள்கைக்காக தங்கள் இன்னுயிரையும் தயங்காது எடுத்து வீசிய தியாக சீலர்கள் அவர்கள்! இந்த உத்தம சீலர்களின் உன்னத வரிசையில் ஒருவர்தாம் நம் சுஹைப் பின் ஸினான் அர்-ரூமி (ரலி) அவர்கள்.

சுஹைப் பின் ஸினான் (ரலி) மெசபடோமியாவில் பிறந்தவர். பாரசீகப் பேரரசின் ஆளுநரான ஸினானின் செல்லப் பிள்ளை!

தந்தை ஸினான் 'நுமைர்' எனும் அரபுக் கோத்திரத்தைச் சேர்ந்தவர். சுஹைப் (ரலி) அரபித் தந்தைக்கு பாரசீகத்தில் பிறந்த ராஜகுமாரன்!

எனினும், ரோமர்களின் ஒரு படையெடுப்பில் கைது செய்யப்பட்டு விதிவசத்தால்  ரோமாபுரியில் அடிமையாக வளர்ந்தவர்!

கிரேக்க மொழி பேசியதாலும் சிவந்த தலைமுடியும் வெளிர் நிறமும் அந்நியமான அரபி உச்சரிப்பும் அசல் வெள்ளைக்காரராகவே, மக்காவின் மக்களுக்கு அவரை அடையாளம் காட்டியதால் "சுஹைப் அர்-ரூமி (ரோமாபுரிக்காரன்)" என்றே அந்த மக்களால் அவர் அழைக்கப்பட்டார்!

கிரேக்கர்களிலேயே முதன்முதலாக, இஸ்லாத்தை வாழ்வு நெறியாக வலிந்து ஏற்றுக் கொண்டதால், 'கிரேக்க நாட்டின் முதற்கனி' என்று இவரை வர்ணித்தார்கள் எல்லோரும் போற்றுகின்ற இனிய நபியவர்கள்!

ஒரு வழியாகக் கொடுமையாளர்களிடமிருந்து தப்பித்து வந்து, புனித மதீனா நகருக்கு வெளியே குபா பள்ளியில் தங்கி இருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களை ஆரத்தழுவி, அவர் பேச வாய் திறக்குமுன் பெருமானார் (ஸல்) அவர்கள், 'நீர் நல்ல வெகுமதியான வாணிபம் செய்து வந்துள்ளீர் அபுயஹ்யாவே' என்று மூன்றுமுறை அழுத்தமாகச் சொல்லி பிறகு, அவர் குறித்து அருளப்பட்ட அல்லாஹ்வின் பாக்கியமிகு வசனங்களை அவருக்கு ஓதிக் காட்டினார்கள். அவர் பொருட்டு அருள்மறையில் ஒரு வசனமே அருளப்பட்டது குறித்து அவர் மெய்சிலிர்த்து நின்றார்! அல்லாஹ்வுக்கு இனிது நன்றி கூறினார்!

தன்னந்தனியாகப் பாலைவெளியை நடந்தே கடந்து வந்ததில் மிகவும் களைத்துப் போயிருந்தார் சுஹைப் பின் ஸினான் (ரலி). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சுஹைப் பின் ஸினான் (ரலி) யை உணவுண்டு ஓய்வெடுக்கச் சொன்னதால், அவர் ரொட்டியும் பேரீத்தையும் வைத்து உணவுண்ணத் தொடங்கினார்.

வாழ்வின் சோதனைகள் கவலை எனும் இருளை அள்ளி வீசும்போது நமக்கு ‘நகைச்சுவை’தானே சற்றே ஒளியேற்றி வைக்கிறது!

அதுவும், முத்திரைத் தூதர் முஹம்மது நபிக்கு முகத்தில் புன்னகையும் அகத்தில் நகைச்சுவை உணர்வும் மெல்லிய கீற்றாக எப்போதுமல்லவா இலங்கிக் கொண்டே இருக்கும்!

நண்பரைக் கண்ட மகிழ்ச்சியில் அவரிடம் நகைச்சுவையாக உரையாடத் தொடங்கினார்கள் நாயகம் (ஸல்) அவர்கள். சுஹைப் பின் ஸினான் (ரலி) யின் ஒரு கண் வெப்பத்தால் வீங்கி இருப்பதைக் கண்ட பெருமானார் (ஸல்), அவரிடம் சிரித்துக்கொண்டே "கண் வீங்கியிருக்கிறதே! எப்படி நீ சாப்பிடுகின்றாய் சுஹைப்?" என்றார்கள் வேடிக்கையாக!

நகைமுகம் கொண்ட நாயகம் அவர்கள், தன்னிடம் வேடிக்கையாகப் பேசுகிறார்கள் என்பதை விளங்கிக் கொண்ட சுஹைப் பின் ஸினான் (ரலி)யும் "அதனால் என்ன! நன்றாக இருக்கும் மற்றொரு கண்ணின் உதவி கொண்டு, நான் வாயால்தானே உண்ணுகிறேன் அல்லாஹ்வின் தூதரே!" என்றார் அவரும் வேடிக்கையாக!

சுஹைபின் இந்த சாமர்த்தியமான பதில் கேட்டு மனமகிழ்ந்து சிரித்தார்கள் சிரிப்பழகர் நம் செம்மல் நபி நாயகம் அவர்கள். (2)

அங்கு நான்கு நாட்கள் தங்கியிருந்து, மஸ்ஜித் தக்வா (இறை அச்சத்தால் உருவாக்கப்பட்ட பள்ளி) என்று குர்ஆன் கூறும் குபா பள்ளியை நிர்மாணிப்பதில் அல்லாஹ்வின் தூதருடன் சேர்ந்து சுஹைப் (ரலி) யும் பெரும் பங்கு எடுத்துகொண்டார்.(3)

அரபிகளில் முதல் முஸ்லிம் நான்!

அபிசீனியர்களில் முதல் முஸ்லிம் பிலால் பின் ரபாஹ்!

பாரசீகர்களில் முதல் முஸ்லிம் ஸல்மான் அல்ஃபார்ஸி!

ரோமர்களில் முதல் முஸ்லிம் சுஹைப் பின் ஸினான்! என்று அருளினார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

சுஹைப் பின் ஸினான் (ரலி) அவர்கள், வள்ளலாகி தமது செல்வமெல்லாம் வறியோர்க்கு வாரித் தருகிறார் என உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் அறிந்து, சுஹைப் (ரலி) உடைய தாராளத் தன்மையை மிகவும் பாராட்டுபவராக இருந்தார்கள்.

அதுமட்டுமின்றி, இறக்கும் தருவாயில், அடுத்த கலீஃபா தேர்ந்தெடுக்கப்படும்வரை மஸ்ஜித் நபவீயின் இமாமாக சுஹைப் பின் ஸினான் (ரலி) தான் பணியாற்ற வேண்டும் என்றும் தம்  ஜனாஸா தொழுகையையும் சுஹைப் பின் ஸினான் (ரலி) தான் முன்னின்று தொழவைக்க வேண்டும் என்றும் தம்  இறுதி நேரமதில் உறுதியுடன் நியமித்தார்கள்!
எத்தகைய  உன்னதமான உயர்ந்த தகுதி அது!

மரணம் தன் கொடுமையை இழந்து, மகிமை மிகும் நபித் தோழர்களின் மறுமை வெற்றிக்கான மகத்தான பாதையாக அதனை மாற்றிக் கொடுத்தது!

o o o 0 o o o
ஆதாரங்கள்:

  1. அல்குர்ஆன் 2:207
  2. இப்னு மாஜா 3569 : சுஹைப் பின் ஸினான்  அர்ரூமி
  3. அல்குர்ஆன் 09 :108
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
இக்பால் M. ஸாலிஹ்

கருமையும் வெண்மையும் 2

அதிரைநிருபர் பதிப்பகம் | June 20, 2016 | , ,

நபிமணியும் நகைச்சுவையும் - தொடர் - 
அது ஒரு ரமலான் மாதத்தின் பின்னிரவு நேரம்!

மதீனா நகரமே இரவுத் தொழுகைக்குப் பின்னர் அமைதியான உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது! ஆனால், அந்த ஒரே ஒருவருக்கு மட்டும் இருப்புக் கொள்ளவில்லை. பரபரப்பாக ஏதோ செய்துகொண்டிருந்த அவரை யார் பார்த்தாலும்,  'இந்த இரவில் இவர் தூங்கப் போவதில்லை' என்று முடிவுக்கு நிச்சயமாக வந்துவிடுவர்.


படுக்கையில் படுப்பதும் சில நிமிடங்களில் எழுந்து தலையணைக்கடியில் கையை விட்டு எதையோ துழாவி எடுப்பதும் அதை மேலும் கீழும் உற்றுப் பார்த்துவிட்டு, தனக்குள் 'இல்லை இல்லை' என்று தலையசைத்துவிட்டு மறுபடிப் படுப்பதுமாக மாறிமாறி செய்து கொண்டிருந்தார். சஹர் உணவின் நேரமும் வேக வேகமாக நழுவிக் கொண்டிருந்தது. ஆனால், அதிலெல்லாம் அவருக்குக் கவனமில்லை!

மறுபடியும் தலையணைக்கடியில் கைவிட்டு எடுத்துப் பார்க்கத் தொடங்கிவிட்டார். இப்படியே தொடர்ந்ததில் பொழுது புலரும் நேரமும் நெருங்கிவிட்டது!

இந்தப் பரபரப்புக்குத் தகுந்த காரணமும் இருந்தது! அந்த இரவில்தான் அந்தப் புனித மாதத்திற்கென்று எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான ‘வஹீ’ ஒன்றை அல்லாஹ் அருளியிருந்தான்!(1) அந்த வஹீயைப் பற்றித் தெரியுமுன்பு, நமக்கு இந்த நபித் தோழரின்  அறிமுகம் சற்று அவசியமாகிறது!

அவர் ஒன்றும் சாதாரணமான ஆளன்று! அந்தக் காலத்தில் மிகப் பெரும் பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரர்தான் அவர்! அரபுலகின் பிரபலமான “தய்யி” கோத்திரத்தின் தலைவனும்  அம்மக்களின் அரசனும் மிகப்பெரும் புகழ்பெற்ற கொடை வள்ளலுமாகிய ஹாதிம் அத்தாயீ என்பவரின்  செல்வப் புதல்வர்தான் நமது இந்த இளவரசர்! பெயர் அதீய் பின் ஹாதிம் அத்தாயீ. தந்தைக்குப் பிறகு, தன் மக்களின் மன்னனாகவும் முடி சூட்டப்பட்டார். 'உல்லாச உலகம் உனக்கே சொந்தம், அதை முடிந்தவரை அனுபவி ராஜா' என்று ராஜபோக சொகுசு வாழ்க்கையின் அனைத்து சுகங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தார்.

அதெல்லாம் ஒரு காலம்!

இருளும் இழிவும் நிறைந்த வழியை விட்டும் நீங்கி, அருளும் அறமும் நிறைந்த இயற்கை மார்க்கமாம் இஸ்லாத்தைத் தழுவியபின், ராஜபோகத்தில் திளைத்த அந்த மன்னரா  இவர்? என்று மூக்கில் மட்டுமல்ல, முகம் முழுக்க விரல் வைத்துப் பார்க்கும் அளவுக்கு ஆச்சர்யமாய் மாறிப்போனார் அதீய் (ரலி)!

ஆம்! அவரை மட்டுமல்ல! அந்த ஆறாம் அறிவைத் தட்டியெழுப்பி, ஆயிரம் பாடங்கள் பயிற்றுவித்த  அண்ணல் நபியவர்கள் கொண்டுவந்த அற்புத வேதம், அனைத்துத் தோழர்களின் வாழ்வையும் அடியோடு புரட்டிப் போட்டது. பழைய அத்தியாயங்களில் எந்த அளவுக்குப் படுமோசமாக இருந்தார்களோ, அதே மனிதர்கள் சங்கை மிகும் நபியைச் சந்தித்த பிறகு, இந்த மானுட சமூகத்திலேயே தலை சிறந்தவர்களாக, உள்ளத்தால் உயர்ந்தவர்களாக, அறிவால் ஆழமானவர்களாக, சடங்கு சம்பிரதாயங்களைத் தூக்கி எறிந்தவர்களாக, நேர்வழியில் நிலைத்தவர்களாக, சுயநலத்தை எடுத்துச் சுழற்றி வீசிவிட்டவர்களாக, வாழும் சூழலின் வகை தெரிந்தவர்களாக, எளிமையில் இனிமை கண்டவர்களாக, தாங்கள் பெற்ற மார்க்கத்தைத் தாங்கிப் பிடிக்கும் தூண்களாக, மொத்தத்தில் தங்கள் தலைவரின் நிழல்களாகவே மாறிப்போனார்கள். அப்படித்தான் அல்லாஹ் (ஜல்) அருளிய வேதம் அவர்களைப் பக்குவப் படுத்தியிருந்தது. 

சற்றே பின்னால் சென்று வருவோம்:

அதீய் பின் ஹாத்திம், கிறிஸ்தவ மக்களின் தலைவனாக இருந்தபோது, மக்களின் வருவாயில் 4ல் 1 பங்கு அவருக்குக் கப்பம் கட்ட வேண்டும் என்று சட்டமிருந்தது. அதைச் சன்மார்க்கம் இஸ்லாம் ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளாது என்பது அவருக்கு நன்றாகத் தெரியுமாதலால், இந்த உலகத்தில் வேறு எவரையும்விட அதிகமாகப் பெருமானார் (ஸல்) அவர்களை அவர் வெறுத்தார்! எனினும், அவர் பயந்தது போலவே, அல்லாஹ்வின் கட்டளைப்படி, அவர் தேசமும் சத்திய இஸ்லாமிய ஆட்சியின் நிழலில் வந்த அன்று, தப்பித்தோம் பிழைத்தோம் என்று கையில் கிடைத்த செல்வங்களை எல்லாம் அள்ளி 100 ஒட்டகைகளில் கட்டிக்கொண்டு சிரியாவுக்குத் தப்பி  ஓடினார்!

உயிருக்கு பயந்து ஓடிய வேகத்தில் உடன்பிறந்த தங்கையை அரண்மனையிலேயே தவறவிட்டு ஓடிவிட்டார்!

போர்க் கைதியாக பிடிபட்ட சகோதரி ஸஃப்பானாஹ், கனவிலும் நினையாத அளவுக்கு காருண்ய நபியால் கண்ணியமாகவும் கருணையாகவும் நடத்தப்பட்டதால், அண்ணனைக் கண்டு அழைத்துவர நினைத்து, அல்லாஹ்வின் தூதரிடம் அனுமதி பெற்றாள்.

முத்திரைத் தூதர் முஹம்மது நபியைப் பற்றித் தங்கையானவள் விவரிப்பாகச் சொல்லச் சொல்ல புருவங்கள் எல்லாம் உயர்ந்து நெற்றிக்கு மேலே போய், அரசர் அதீயின்  முகம் முழுவதையும் ஆச்சர்யக் குறி அடைத்துக் கொண்டது!

ஸஃப்பானாஹ் சொல்வதுபோல், அவர் ஒரு நபியாக இருந்தால் அவருடன் இணைவதை நாம் முந்திக் கொண்டால் நமக்குத்தான் சிறப்பு! ஒரு வேளை, அவர் மதீனாவின் மன்னராக மட்டும் இருந்தாலுங்கூட, இன்னோர் அரசனை அப்படிப்பட்ட மேன்மையாளர் அவமானப்படுத்த மாட்டார் என்று அதீய் தனக்குள் சொல்லிக்கொண்டு அண்ணலாரைக் காண ஆவலுடன் கிளம்பிவிட்டார்.

மதீனா நகர் சென்று மனிதருள் புனிதர் மாநபி (ஸல்) அவர்களின் கரம் தொட்டு ஸலாம் சொன்னதும் அவர் மனமெங்கும் மகிழ்ச்சியால் பிரளயமானது!

சமத்துவ மார்க்கம் தந்த சத்தியத் தூதர் (ஸல்), அங்கு வயோதிக மாது ஒருவருக்குத் தம் அவையில்  கொடுத்த சங்கைமிகு மரியாதையைக் கண் முன்னே கண்டார். இனிய நபியவர்கள் தம் எளிய வீட்டுக்கு அழைத்துச் சென்று, தம் விரிப்பில் அதீய் (ரலி) யை அமர வைத்து, அந்த மாந்தரில் மாணிக்கம், மாமனிதர் நாயகம் (ஸல்) வெறுந்தரையில் அமர்ந்ததைக் கண்டார். அவர் நபியேதான் என்று அத்தாட்சிகள் அவர் நெஞ்சில் அடித்துக் கூறின!

'அடச்சே! என்ன மனிதன் நான்! என்ன மன்னன் நான்! என்ன ஒரு பெரும் வள்ளலின் மகன் நான்!' என்றெல்லாம் மனதுக்குள் அவர் மாய்ந்து போனார்!

அத்தோடு கண்கண்ட ஆதாரங்களால், அவர் மனத்தோடு வைத்திருந்த தவறான எண்ணங்கள் எல்லாம் தவிடுபொடியாயின! அடியோடு மாறிப்போனார் அதீய் பின் ஹாத்திம் அத்தாயீ (ரலி)! தமக்கு எதிரே அமர்ந்திருப்பவர் சாதாரண மனிதரல்லர் என்பதை அதீய் (ரலி) அவர்களுக்கு இன்னும் உறுதிப் படுத்தும் விதமாக  எதிர்கால அத்தாட்சிகள் சிலவற்றை அப்போதே அவரிடம் எத்திவைத்தார்கள் ஏந்தல் நபியவர்கள்!

அதீயே! அறிந்து கொள்:

(1) வறுமையில் வாடும் இம்மக்களைப் பார்! ஒருகாலம் விரைவில் வரும். இவர்கள் மத்தியில் செல்வம் பெருகும். கொடுப்போர் இருப்பர்! ஆனால், பெற்றுக்கொள்ள ஆள் இல்லை என்ற நிலைக்குச் செல்வம் பெருகும்.

(2) இந்த சத்திய மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள் குறைவாகவும் இந்த சன்மார்க்கத்தை எதிர்ப்பவர்கள் அதிகமாகவும் இருப்பது உனக்கு ஆச்சர்யம் தருகின்றதா? அல்லாஹ்வின் மார்க்கம் அதிவிரைவில் பரவி, காதிஸ்ஸிய்யாவிலிருந்து ஒரு முஸ்லிம்  பெண் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் அஞ்சாமல் தனியாகப் புறப்பட்டு வந்து கஃபாவைத் தவாப் செய்துவிட்டுச் செல்லும் அச்சமற்ற சூழ்நிலை உண்டாகும்.

(3) அதீயே! உன்னைபோன்ற மன்னர்களும் சுல்தான்களும் முஸ்லிம்களுள் இல்லையே! ஆட்சியதிகாரம் இறை மறுப்பாளர்களான மடையர்கள் கையில்தானே இருக்கிறது என ஆதங்கப்படுகிறாயா? மிக விரைவில்  பாபிலோனில் உள்ள அரசமாளிகைகளையும் ரோமாபுரிச் சக்கரவர்த்தியின் கருவூலங்களையும் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் அருளால் கைப்பற்றுவார்கள்!  பாபிலோனின் கோட்டை மீது இஸ்லாமியக் கொடி ஆரோகணித்துப் பறக்கும். இவை அனைத்தையும் காண நீ உயிருடனே இருப்பாய்!!!

என்றறிவித்தார்கள், அல்லாஹ்வை மட்டுமே ஆசிரியனாகப் பெற்ற எழுதப் படிக்கத் தெரியாத ஏந்தல் நபியவர்கள்! (2) ஆற்றல் மிகும் சொல்லழகர் அண்ணல் நபியவர்கள் தீர்க்கமாகச் சொன்ன அனைத்தும் அச்சரம் பிசகாமல் அதீய் பின் ஹாத்திம் (ரலி)  வாழ்நாளிலேயே நிகழ்ந்தன! எஞ்சிய வாழ்நாளில் எல்லாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அன்று சொன்னது என்னவோ இன்றும் செவிகளில் கேட்பதுபோலவே அவர் தம் 120 வது வயதில் இறக்கும்வரை அவருக்கு ஒலித்துகொண்டே இருந்தது!

அது சரி? இரவெல்லாம் தூங்காமல் எடுப்பதும் வைப்பதுமாக என்னவோ செய்துகொண்டிருந்தாரே? அது என்னவென்றுதான் பார்ப்போமா?

அது வேறொன்றுமில்லை! ஒரு வெள்ளை நூலையும் ஒரு கருப்பு நூலையும் தலையணைக்கடியில் வைத்துக்கொண்டு, அவை இரண்டையும் பொழுது விடியும் நேரம்வரை வெள்ளை நூலும் கருப்பு நூலும் அவர் கண்களுக்குத் தனித்தனியாக, தெளிவாகத் தெரிகின்றதா என்பதைத்தான் நபித் தோழர்  அதீய் (ரலி) அடிக்கடி உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்பொழுதும் அவருக்குச் சரியாக விளங்கவில்லை! காரணம்? எந்த நேரம்வரை சஹர் உணவைச் சாப்பிடலாம், அதை எப்போது நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற இறைவசனம் அந்த இரவில் இறங்கியதை, நம் உள்ளத்தை ஆளவந்த உத்தம நபியிடமிருந்து அவசர அவசரமாக அப்படியே அவர் எடுத்துக் கொண்டதுதானே  தவிர வேறில்லை!
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

 وَكُلُوا وَاشْرَبُوا حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ۖ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ

இன்னும் ஃபஜ்ரு நேரம் என்ற வெள்ளை நூல், கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும்வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும்வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்” (3).

சுபுஹுடைய நேரம். அதீய் (ரலி) முதல் வேலையாகப் பெருமானார் (ஸல்) அவர்களைக் காணச் சென்றார். அன்றிரவில் அவர் செய்த ஆராய்ச்சியையும் சொன்னார். அவருடைய   செய்கையும் அவர் விவரித்த தோரணையும் அடக்கமுடியாத சிரிப்பை அண்ணலாருக்கு அளித்தது. வேந்தர் நபியின் சிரிப்பைக் கண்டு விண்ணகத்துத் தாரகையும் வெட்கம் கொண்டு மறைந்ததால், நபிகள் நாயகத்தின் நகைமுகத்தைக் காண அதிகாலைச்  சூரியன் அவசரமாய் எழுந்தது!

அதீயே, அல்லாஹ் சொல்லும் வெள்ளையும் கருப்பும் என்பதன் பொருள் நீர் நினைத்துக்கொண்டபடி மட்டும் இருந்திருந்தால், உமது தலையணையும் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு நீளமாகவல்லவா இருக்க வேண்டும்?  ஏனென்றால், கருப்பு நூல் என்பதன் அர்த்தம் இரவும், வெள்ளை நூல் என்பதன் பொருள் பகலும் ஆகும்" என்று இன்னும் சிரித்துக்கொண்டே ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் அவருக்கு விளக்கினார்கள். விளக்கம் பெற்றவராக அதீய் (ரலி) அவர்களும் இறைத் தூதரின் சிரிப்போடு இணைந்து சிரித்தார். நேர்வழி காட்டியவர் (ஸல்) அதீய் (ரலி) யின் நெஞ்சிலே நிறைந்து நின்றார்! (4)

ஆதாரங்கள்:
(1) புஹாரி 1915: பராஉ (ரலி)
(2) புஹாரி 3595: அதீய்  இப்னு ஹாத்திம் (ரலி)
(3) அல்குர்ஆன் 2: 187
(4) அபுதாவூத் 2349: அதீய்  இப்னு ஹாத்திம் (ரலி)
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
இக்பால் M. ஸாலிஹ்