ஆசிட் வீசி கொல்லப்பட்ட காரைக்கால் மாணவி வினோதினிக்காக மக்கள் சிந்திய கண்ணீரின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் ஆசிட் வீச்சுக்கு ஆளான சென்னை பெண் வித்யா பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வித்யா (வயது 21), ஆதம்பாக்கம் பரமேஸ்வரன் நகரில் தாய் சரஸ்வதியுடன் வசித்து வந்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்து விட்டார். பிளஸ்-2 முடித்து விட்டு அங்குள்ள கம்ப்யூட்டர் சென்டரில் 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த மாதம் 30-ந்தேதி மதியம் வித்யா கம்ப்யூட்டர் சென்டரில் இருந்தபோது விஜயபாஸ்கர் என்ற வாலிபர் அங்கு வந்து ஆசிட்டை எடுத்து வித்யா மீது ஊற்றினார். சட்டென்று வித்யா முகத்தை மூடிக் கொண்டு திரும்பிக் கொள்ளவே வித்யாவின் முதுகு, மார்பு, கால் ஆகிய இடங்களில் ஆசிட் பட்டு வெந்தது. வேதனை தாங்காமல் அலறி கீழே கொட்டிக் கிடந்த ஆசிட்டில் விழுந்தார். இதில் உடல் முழுவதும் வெந்துபோனது.
சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து விஜயபாஸ்கரை பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். மடிப்பாக்கம் உதவி கமிஷனர் ஆரோக்கியம், ஆதம்பாக்கம் இன்ஸ்பெக்டர் இளவரசு ஆகியோர் விரைந்து வந்து ஆசிட் வீசிய விஜயபாஸ்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் கிண்டி நரசிங்கபுரத்தை சேர்ந்தவர். என்ஜினீயரிங் படித்து விட்டு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
காயம் அடைந்த வித்யாவுக்கு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த வித்யாவின் உடல்நிலை கடந்த 20-ந்தேதி மோசம் அடைந்தது. எலும்புகள் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டு நோய் தொற்று ஏற்பட்டது. அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். என்றாலும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. 24 நாட்களாக உயிருக்கு போராடிய வித்யா இன்று 24.02.2013 அதிகாலை 4.15 மணிக்கு பரிதாபமாக உயிர் இழந்தார்.
இந்த தகவலை கேட்டதும் தாய் சரஸ்வதி, சகோதரர் விஜய் ஆகியோர் கதறி அழுதனர். காரைக்கால் மாணவி வினோதினி போல வித்யாவும் காதல் விவகாரத்தில் பலியாகி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. வாலிபர் விஜயபாஸ்கர் ஆதம்பாக்கம் கம்ப்யூட்டர் சென்டருக்கு அடிக்கடி வருவார். அப்போது அங்கு பணிபுரிந்த வித்யாவுடன் நட்பாக பழகி பின்னர் காதலித்து இருக்கிறார். திடீர் என்று வித்யாவை திருமணம் செய்ய விரும்புவதாக கூறினார். அதற்கு வித்யா எங்கள் வீட்டுக்கு முறைப்படி வந்து பெண் கேளுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.
இதையடுத்து விஜயபாஸ்கரின் தாய் டெலிபோனில் வித்யாவின் தாயுடன் பேசி, உங்க பெண்ணும், என் பையனும் காதலிக்கிறார்கள். நாம் சேர்த்து வைத்து விடலாம் என்று சொல்லி இருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி இதுபற்றி வித்யாவிடம் கேட்டார். அவர் நடந்த விவரங்களை சொன்னார். அதன்பிறகு தான் ஆசிட் வீச்சு சம்பவம் நடந்தது.
விஜயபாஸ்கர் மீது ஆதம்பாக்கம் போலீசார் முதலில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து இருந்தனர். வித்யா இறந்ததை தொடர்ந்து கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. வித்யாவின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்குப்பின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. வித்யா இறந்ததால் ஆதம்பாக்கம் பகுதி மட்டுமல்ல மனசாட்சியுள்ளவர்கள் அனைவரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது. ஆசிட் வீசிய விஜயபாஸ்கரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று ஆதம்பாக்கத்திலுள்ள பொதுமக்கள் ஆவேசத்துடன் கூறினார்கள்.
ஆசிட் வீச்சில் பலியான வித்யா கண்களை தானம் செய்து இருந்த உருக்கமான தகவலும் தெரியவந்தது. வித்யாவின் குடும்பம் ஏழ்மையானது. வித்யா முற்போக்கு எண்ணம் கொண்டவர். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர். கண்தானம் செய்வதின் அவசியத்தை உணர்ந்த அவர் தனது கண்களையும் தானம் செய்ய விரும்புவதாக கூறிவந்தார். அவர் விருப்பப்படியே வித்யா இறந்ததும் அவரது கண்கள் எழும்பூர் கண் மருத்துவ மனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
வித்யா தாய் சரஸ்வதி கூறும்போது, கணவரை இழந்த நான், மகன், மகள் என 3 பேரும் வேலைக்கு போய்தான் குடும்பம் நடத்தி வந்தோம். என் மகளை இழந்த வேதனையில் எங்களால் வேலைக்கு செல்ல இயல வில்லை. நாங்கள் பிழைப்புக்கு வழியின்றி தவிக்கிறோம். எங்களுக்கு அரசாங்கம்தான் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்றார்.
நன்றி: மாலை மலர் இணையதளம்





